search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷிய உக்ரைன் போர்"

    • வேராவை 3.5 மணி நேரம் கான்யுஸ் சித்திரவதை செய்துள்ளார்
    • ரஷிய ராணுவத்திற்கு இளைஞர்கள் அதிகளவு தேவைப்படுகிறார்கள்

    ரஷியாவில் வசித்து வந்தவர் வேரா பெக்டெலேவா (Vera Pekhteleva). இவர் விளாடிஸ்லாவ் கான்யுஸ் (Vladislav Kanyus) என்பவரை காதலித்து வந்தார். இருவரின் உறவில் திடீரென கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், வேரா, கான்யுஸை விட்டு பிரிந்தார்.

    இது குறித்து கான்யுஸ் அடிக்கடி வேராவுடன் வாக்குவாதம் செய்து வந்தார். ஒரு முறை இவர்கள் இருவரின் வாக்குவாதம் மோதலாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த கான்யுஸ், வேராவை பாலியல் ரீதியாக தாக்கினார்.

    அதன் பிறகு அவரை சுமார் 111 முறை கத்தியால் குத்தினார். அதிலும் ஆத்திரம் அடங்காத கான்யுஸ், வேராவை சுமார் 3.5 மணி நேரம் சித்திரவதை செய்தார். பின் இரும்பு வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    வேராவின் பரிதாப அலறலை கேட்ட அக்கம்பத்தினர், காவல்துறைக்கு 7 முறை தகவல் அளித்தனர். ஆனால், காவல்துறையினர் உடனடியாக வரவில்லை.

    இறுதியில் கான்யுஸின் இரக்கமற்ற தாக்குதலில் வேரா உயிரிழந்தார்.

    காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி கான்யுஸிற்கு, நீதிமன்றம் 17 வருட சிறைதண்டனை வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், வேராவின் தாயார் ஒக்ஸானா (Oksana), கான்யுஸ் துப்பாக்கி ஒன்றை ஏந்தியபடி ராணுவ உடையில் நிற்கும் புகைப்படம் ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறையில் இருந்தவர், ராணுவ உடையில் காட்சியளிப்பது குறித்து ஒக்ஸானா விசாரணை நடத்தி தகவல்களை திரட்டினார்.

    ரஷியா, கடந்த 2022 பிப்ரவரி மாதம், அண்டை நாடான உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு நடத்தியது. இதனை எதிர்த்து உக்ரைன் ரஷியாவுடன் போர் புரிந்து வருகிறது.

    போர் 1.5 வருடங்களாக நீள்வதால், ரஷியாவிற்கு ராணுவத்தில் பணியாற்ற பல இளைஞர்கள் தேவைப்படுகின்றனர். எனவே சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பல இள வயதினரை ராணுவத்தில் சேர்க்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி கான்யுஸ் செய்த குற்றங்கள், அதிபரின் "சிறப்பு அதிகாரம்" மூலம், புதினால் மன்னிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து மிகுந்த ஆத்திரத்துடனும், சோகத்துடனும் ஒக்ஸானா கருத்து தெரிவித்தார்.

    "நான் மிகுந்த மன உறுதி உள்ள பெண். ஆனால், இந்த செய்தி என்னை நிலைதடுமாற செய்து விட்டது. என் மகள் கல்லறையில் இனி நிம்மதியாக உறங்க முடியுமா? எல்லாமே என்னை விட்டு போய் விட்டது. ஒரு கொடூர கொலைகாரனை எப்படி வெளியே விட்டார்கள்? கொலகாரன் எதற்கு ரஷியாவை பாதுகாக்க வேண்டும்? அவன் மனிதனே அல்ல. பழி வாங்க எங்களை எப்போது வேண்டுமானாலும் அவன் மீண்டும் கொல்லலாம்" என ஒக்சானா கூறினார்.

    "ரஷிய சிறையில் உள்ள கைதிகள் தங்கள் குற்ற நடத்தைக்காக வருந்தும் விதமாகத்தான் போர்க்களத்திற்கு அனுப்பப்படுகின்றனர்" என அரசின் செயலை நியாயப்படுத்தும் விதமாக ரஷிய பாராளுமன்ற செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) தெரிவித்தார்.

    • சண்டையின் போது தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றியது.
    • பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த சண்டையின் போது தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றியது.

    இந்த நகரை மீட்க உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரஷிய ஆக்கிரமிப்பில் உள்ள கெர்சன் சாப்சின்கா வேலை வாய்ப்பு மையத்தில் உக்ரைன் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 6 பேர் உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • ரஷிய உக்ரைன் போர் 590 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது
    • மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவி அந்நாட்டை தூக்கி நிறுத்துகிறது என்றார் புதின்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் ஏராளமாக சேதங்களும் உயிரிழப்புகளும் நடைபெற்றும் போர் 590 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, அமெரிக்காவிற்கு உள்ள கடன் ரூ. 2,74,63,90,35,00,00,000 (33 டிரில்லியன் அமெரிக்க டாலர்) எனும் அளவை தொட்டு விட்டதால், அந்நாட்டில் செலவினங்களை குறைக்க கோரி பெரும் விவாதங்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்தது. இந்த விவாதங்களில் ரஷிய உக்ரைன் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா தற்போது வரை வழங்கிய பல கோடி நிதியுதவி ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது. தற்போதுள்ள சூழலில் முன்பு போல் இனியும் அமெரிக்காவால் தொடர்ந்து உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவி தடைபடும் சாத்தியம் அதிகம் உள்ளது என தெரிவித்தார்.

    இப்பின்னணியில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஒரு சந்திப்பில் பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இது குறித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    மேற்கத்திய நாடுகளின் ஆதரவு மட்டும் இல்லையென்றால் உக்ரைன், ரஷியாவிற்கு எதிராக ஒரு வாரத்திற்கு மேல் போரில் தாக்கு பிடிக்க முடியாது. மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவியினால் ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறது. உதவி நின்றால், ஒரு வாரத்தில் அனைத்தும் நின்று விடும். நிதியுதவி மட்டுமல்ல; ராணுவ தளவாட உதவிகளும் நிற்க தொடங்கினால், ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும். தற்போது வரை ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் போரிட்டதில், உக்ரைன் 90 ஆயிரம் வீரர்களுக்கு மேல் இழந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, "அமெரிக்காவை போன்று நிதியுதவியோ ராணுவ உதவியோ உக்ரைனுக்கு நிச்சயமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்க முடியாது," என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைக்கான தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்தார்.

    புதின் கூறியவாறு அமெரிக்க உதவி தடைபட்டு, போர் ரஷியாவிற்கு சாதகமாக சென்றால் அதனால் எற்பட கூடிய பாதிப்புகள் குறித்து அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    • ரஷியா வெற்றி பெற்றதாக கூறிய தேர்தலை உக்ரைன் புறக்கணித்தது
    • எந்த சர்வதேச சட்டங்களும் மீறப்படவில்லை என்றார் புதின்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் எண்ணிலடங்கா உயிர் பலிகளும், பெருமளவு கட்டிட சேதங்களும் ஏற்பட்டும் போர் முடிவுக்கு வராமல் 580 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.

    கடந்த ஆண்டு, உக்ரைனின் டோனெட்ஸ்க் (Donetsk), லுஹான்ஸ்க் (Luhansk), சப்போரிழியா (Zaporizhzhia) மற்றும் கெர்சன் (Kherson) ஆகிய பகுதிகளை ரஷியா தங்கள் நாட்டுடன் ஒவ்வொன்றாக இணைத்து கொண்டது. இணைக்கப்பட்ட இந்த 4 பகுதிகளில் சில நாட்களுக்கு முன் ரஷியாவின் மத்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தி, அத்தேர்தலில் ரஷிய பிரதிநிதிகள் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தது. ஆனால், உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் இந்த தேர்தலை ஒப்பு கொள்ளாமல் புறக்கணித்தன.

    இந்த தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக நாட்டு மக்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வீடியோ மூலமாக உரையாற்றினார். இந்த உரை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    ரஷியா தனது இறையாண்மையையும், ஆன்மிக மதிப்பையும் காத்து கொள்ளவே போராடி வருகிறது. இதனால்தான் இந்த ரஷிய உக்ரைன் போரே ஏற்பட்டது. நாம் நமது தாயகத்திற்காக போராடுகிறோம்; நமது ஒற்றுமைக்காகவும், வெற்றிக்காகவும் நாம் சண்டையிடுகிறோம். இதில் எந்த சர்வதேச சட்டங்களோ, வழிமுறைகளோ மீறப்படவில்லை. ரஷியாவுடன் தற்போது இணைக்கப்பட்ட உக்ரைனின் 4 பகுதியை சேர்ந்த மக்களும் ரஷியாவுடன் இணையவே விரும்பினார்கள்.

    இவ்வாறு புதின் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ள நேட்டோ (NATO) கூட்டமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் (Jens Stoltenberg), "ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைன் மெதுவாக முன்னேறி வருகிறது. உக்ரைன் மீண்டும் கையகப்படுத்தும் ஒவ்வொரு மீட்டர் இடமும் ரஷியா இழக்கும் இடமாக கருத வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    • கப்பலில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைன் படை வீசியது.
    • விக்டர் சோகோலோவ் மற்றும் 33 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் படை தெரிவித்து உள்ளது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும் இன்னும் இந்த சண்டை முடிவுக்கு வந்தபாடில்லை. உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகள் செய்து வருவதால் ரஷிய படையை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் ஆக்ரோஷத்துடன் போரிட்டு வருகின்றனர். உக்ரைனின் சில நகரங்களை ரஷியபடையினர் கைப்பற்றி உள்ளனர்.

    அவற்றை உக்ரைன் வீரர்கள் பேராடி மீட்டு வருகின்றனர். ரஷியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து உக்ரைன் வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா பகுதியில் உள்ள வெடிமருந்து குடோனில் ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்தில் கிரீமியா தலைநகர் செவஸ்டோ போல் துறைமுகத்தில் உள்ள கருங்கடல் ரஷியா கடற்படை தலைமையகத்தில் உக்ரைன் ஏவுகணை வீசி தாக்குதலை நடத்தியது. கப்பலில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைன் படை வீசியது.

    இந்த தாக்குதலில் கருங்கடல் கடற்படை தளபதியும், ரஷ்யாவின் மூத்த கடற்படை அதிகாரிகளுள் ஒருவரான விக்டர் சோகோலோவ் மற்றும் 33 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் படை தெரிவித்து உள்ளது. ஆனால் இந்த தகவலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை உறுதிபடுத்தவில்லை. இதனால் இந்த ஏவுகணை தாக்குதலில் கடற்படை தளபதி இறந்தாரா? என்பதில் மர்மம் நீடித்து வருகிறது.

    தாக்குதல் நடத்தப்பட்ட கிரீமியா பகுதியை உக்ரைனிடம் இருந்து ரஷியா கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் போர், தேசப்பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கிறது
    • மாணவர்கள் துப்பாக்கிகளை கையாளுவதற்கு நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்

    கடந்த பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    போரில் வெற்றி பெற இரு தரப்பும் பல்வேறு வழிகளை கடைபிடித்து வருகிறது. இதில் ஒன்றாக ரஷியா, தன் நாட்டு பள்ளிகளில் குழந்தைகளையும் மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ரஷியாவில் பரவலாக அனைத்து இடைநிலைக்கு மேற்பட்ட பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு பதுங்கு குழி தோண்டுவது, கையெறி குண்டு வீசுவது, துப்பாக்கியை கையாளுதல் உட்பட பல போர்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டிற்காக தியாகம் செய்வதை பாராட்டும் விதமாக பள்ளி கல்வியில் பாடதிட்டங்கள் மாற்றப்பட்டிருக்கிறது. பெரும் பொருட்செலவில் இதில் ரஷியா ஈடுபட்டு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி கூடங்களையும் அமைத்துள்ளது. உக்ரைன் போர், தேசப்பற்று மற்றும் ராணுவ பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. பயிற்சிகளுக்கு மாணவ மாணவியர் தாங்களாகவே வர மறுத்தாலும், அரசாங்கத்தால் வற்புறுத்தப்படுகிறார்கள்.

    உயர்நிலை பள்ளிகளில் மாணவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும், தானியங்கி துப்பாக்கிகளை கையாளுவதற்கும், பிரித்து கோர்ப்பதற்கும் கைதேர்ந்த நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

    மேலும், பள்ளி குழந்தைகள் போர் வீரர்கள் அணியும் உடை மற்றும் தொப்பி ஆகியவற்றை தைத்து தரவும் பயிற்சிகள் நடக்கிறது.

    இன்றைய குழந்தைகளை எதிர்கால ரஷிய போர் வீரர்களாக கட்டாயபடுத்தி மாற்ற முயல்வதற்கு சமூக வலைதளங்களில் பயனர்கள் அந்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • ரஷியா, கருங்கடல் பகுதி வழியாக உணவு தானிய கப்பல் போக்குவரத்தை தடுத்தது
    • 5 நாடுகளில் 3 நாடுகள், தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன

    2022 பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களாக தொடர்ந்து வருகிறது.

    மத்திய ஐரோப்பிய நாடான போலந்து உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கி உதவியது.

    போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்ரமித்த கருங்கடல் பகுதியை உணவு தானிய ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதை ரஷியா தடை செய்து விட்டது. இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்கள் உலகின் பல நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் வழியாக சென்றடைகின்றன.

    இந்நிலையில் ஐரோப்பியாவின் பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் உள்ளூர் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் அந்நாடுகளின் வழியாக தானியம் எடுத்து செல்ல அனுமதித்தாலும் அந்நாடுகளில் அவற்றை விற்பனை செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை விலக்குவதாக அறிவித்தது.

    இருப்பினும் அந்த 5 நாடுகளில் போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா ஆகிய 3 நாடுகள், தங்கள் நாட்டு உள்ளூர் விவசாயிகளை காக்கும் வகையில் இந்த தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன.

    இதனை எதிர்க்கும் விதமாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. கூட்டமைப்பின் பொது சபை கூட்டத்தில் உரையாற்றும் போது, "சில ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிற்கு மறைமுகமாக உதவுகின்றன" என குறிப்பிட்டார்.

    இதற்கு எதிர்வினையாக தற்போது போலந்து நாட்டு பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி (Mateusz Morawiecki), உள்நாட்டு ராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

    • தாக்குதல் காரணமாக உக்ரைனியர்கள் ரஷியாவிற்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்
    • அவர்கள் தவிப்பதை எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது என்றார் ஒரு ரஷிய பெண்மணி

    2022 பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது.

    ரஷியாவில் இப்போர் குறித்து ரஷியாவையோ, அதிபர் விளாடிமிர் புதினையோ விமர்சிப்பவர்கள் மீது ரஷிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    ஆனால் அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷியாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.

    ராணுவ தாக்குதல் காரணமாக ரஷியாவிற்கோ அல்லது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர். தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷிய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர்.

    "இந்த அகதிகளுக்காக இணையவழியாக நன்கொடை பெற்று உடைகள், மருந்துகள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை செய்து தருகிறேன். ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரெயிலில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். என்னை போல் ஆயிரக்கணக்கான ரஷியர்கள் உதவி செய்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் இது குறித்து நாங்கள் வெளியில் பேசுவதில்லை," என கலினா அர்ட்யோமென்கோ (58) எனும் ரஷிய பெண்மணி தெரிவித்தார்.

    "எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்" என ல்யுட்மில்லா (43) எனும் மற்றொரு ரஷிய பெண் கூறினார்.

    2022 டிசம்பர் மாதமே ரஷியாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 லட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இரு நாடுகளுக்கும் தேவைகள் உள்ளதால் பரஸ்பரம் உதவி கொள்ள முடியும்
    • ஐ.நா. சபை தீர்மானத்திற்கு இது எதிரானது என்கிறது தென் கொரியா

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியா சென்றுள்ளார். அங்கு இரு நாட்டு அதிபர்களுக்கிடையே அதிகாரிகள் யாரும் இன்றி தனிப்பட்ட சந்திப்பு சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.

    கடந்த 2022 பிப்ரவரியில் இருந்து உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் ரஷியாவிற்கு ஆயுதங்களின் தேவை அதிகரித்திருக்கிறது.

    அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிடம் வெளிப்படையான எதிர்ப்பை காட்டி வரும் வட கொரியாவிற்கு உணவு தானிய தேவையும், அந்நாட்டு ராணுவத்திற்கான அதி நவீன ஆயுதங்களுக்கான தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகிறது.

    எனவே, இரு நாடுகளும் பரஸ்பரம் உதவி கொள்ளும் நிலையில் உள்ளதால், ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்ற முடியும். இப்பின்னணியில் சந்தித்து கொண்ட தலைவர்கள் இருவரும் பரஸ்பரம் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், இரு நாட்டின் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பிற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்த நிலையில், வட கொரியாவிற்கு ரஷியா வழங்கப்போகும் அதிநவீன ஆயுத மற்றும் உளவு விண்கலத்திற்கான தொழில்நுட்ப உதவி, தென் கொரியாவில் போர் பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

    இது குறித்து தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் லிம் சூ-சுக், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்..,

    "உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி விண்கலன் மேம்பாடு மற்றும் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இரு நாட்டு அதிபர்களும் பரஸ்பரம் ஒத்துழைக்க முனைவது குறித்து தென் கொரியா கவலையும், வருத்தமும் தெரிவிக்கிறது. அணு ஆயுத மற்றும் ஏவுகணை மேம்பாடு சம்பந்தமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் ஈடுபடுவது ஐ.நா.சபையின் தீர்மானங்களுக்கு எதிரானது. வட கொரியாவிற்கு ராணுவ ஒத்துழைப்பு அளித்தால், தென் கொரியாவிற்கும் ரஷியாவிற்குமான உறவில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும் என்பதை ரஷியா உணர வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • காஸ்மோடிரோமில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து கிம் தெரிந்து கொண்டார்
    • அதிபர்கள் சந்திப்பிற்கு பிறகு தூதர்கள் சந்திப்பு நடந்தது

    அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் நடத்திய தனிப்பட்ட சந்திப்பு நிறைவடைந்தது.

    ரஷியாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு சென்றுள்ளார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்.

    பரஸ்பர நல்லுறவிற்காக சுமார் 4-லிருந்து 5 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை, நிறைவடைந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, ரஷியாவின் தென் கிழக்கில் உள்ள ரஷியாவின் முக்கிய விண்வெளி மையமான வோஸ்டோச்னி காஸ்மோடிரோம் தளத்தில் வட கொரிய அதிபரை வரவேற்ற புதின், அங்குள்ள பல முக்கிய அம்சங்களை வட கொரிய அதிபருக்கு சுற்றி காண்பித்தார். இதற்கு பிறகு தூதர்கள் அளவிலான சந்திப்புகள் நடைபெற்றது.

    இருவரின் இந்த தனிப்பட்ட சந்திப்பிற்கு முன்னதாக ரஷிய-உக்ரைன் போரை மறைமுகமாக குறிப்பிடும் விதமாக, "ரஷியா தனது பாதுகாப்புக்காக மேற்கொண்டு வரும் புனித போரில், அந்நாட்டிற்கு தேவைப்படும் முழுமையான, நிபந்தனையற்ற ஆதரவை வட கொரியா வழங்கும்" என கிம் ஜாங் உன் அறிவித்தார்.

    • பரஸ்பரம் கொடுக்கவும் பெறவும் இரு நாடுகளிடமும் பல விஷயங்கள் உள்ளன
    • உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட பிம்பத்தை உடைக்க வட கொரியா முயன்று வருகிறது

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபரை வரும் நாட்களில் அங்கு சென்று சந்திக்க போவதாக ரஷியாவின் அதிகாரபூர்வ செய்தி தளமான கிரெம்ளின் இணையதளமும், வட கொரியாவின் அதிகாரபூர்வ கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. தற்போது வரை இச்சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது உறுதியாகவில்லை.

    ஆனாலும், இரு நாட்டு எல்லைகளுக்கு இடையில் கிம் ஜாங் உன் பயணம் செய்யும் அவரது பிரத்யேக பச்சை நிற ரெயில் காணப்பட்டதாகவும், அவர் ரஷியா நோக்கி பயணிக்கிறார் என்றும் தென் கொரிய மற்றும் ஜப்பான் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

    இத்தகைய ஒரு சந்திப்பு ரஷியாவின் விலாடிவோஸ்டாக் நகரில் நிகழக்கூடும் என கடந்த வாரமே அமெரிக்காவின் உளவுப்பிரிவு, தகவல் ஒன்றை வெளியிட்டது. கடந்த 2019-ல் புதின் முதன்முறையாக இங்குதான் வட கொரிய அதிபரை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    உக்ரைன் உடனான போரில் ரஷியாவின் ராணுவ தளவாட மற்றும் ஆயுத கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. வட கொரியாவிடம் ரஷிய வடிவமைப்பை கொண்டு உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் உள்ளது. எனவே, அந்நாட்டிடம் இருந்து இவற்றை பெற புதின் ஆர்வமாக உள்ளார். இதன் மூலம் போர் ஒரு முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்லும் என்பதால் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்காவிற்கு அழுத்தம் தர முடியும் என அவர் நம்புவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கு பதிலாக எரிசக்தி, உணவு தானியம் மற்றும் அதி நவீன ஆயுத தொழில்நுட்பம் ஆகியவற்றை ரஷியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ள வட கொரிய அதிபர் கோரிக்கை விடுப்பார் என்று தெரிகிறது. ரஷியாவிற்கு உதவி செய்து, உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட தனது பிம்பத்தை மாற்றி, அமெரிக்காவிற்கு எதிரான வலிமையுள்ள ஒரு நாடாக காட்டி கொள்ளவும் வட கொரியா முயன்று வருகிறது.

    இத்தகைய ராணுவ தொழில்நுட்பத்தை பெறுவதால், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை தாக்கும் வல்லமை வட கொரியாவிற்கு அதிகரிக்கும் என்று அந்நாடுகள் அஞ்சுகின்றன.

    கடந்த ஜூலை மாதம், வட கொரியா ஏற்பாடு செய்திருந்த அமெரிக்காவை தாக்கும் சக்தி படைத்த ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் அடங்கிய கண்காட்சி ஒன்றினை காண ரஷிய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு வட கொரியா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போரில் ரஷியாவை சீனா ஆதரிக்கிறது, ஆனால் அமெரிக்கா எதிர்க்கிறது
    • போர் குறித்து ஜி20 நாடுகளுக்கிடையே தெளிவான கருத்தொற்றுமை ஏற்படவில்லை

    அமெரிக்கா, ரஷியா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்த ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் இன்று காலை தொடங்கியது. ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் போரின் தாக்கம் ஜி20 கூட்டறிக்கை வெளியிடுவதில் பெரிதாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மாநாட்டின் கடைசி நாளான நாளை, மாநாட்டின் முடிவில் அனைத்து உறுப்பினர் நாட்டு தலைவர்களின் ஒன்றிணைந்த கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்படுவது வழக்கம். உக்ரைன் போர் விவகாரத்தில் ஜி20 உறுப்பு நாடுகளில், ரஷியாவை சீனா ஆதரிக்கிறது. ஆனால் அமெரிக்கா, உக்ரைனை ஆதரித்து ரஷியாவிற்கு எதிரான நிலைபாட்டை எடுத்திருக்கிறது.

    இதனால் நாளை படிக்கப்பட வேண்டிய தலைவர்களின் மாநாட்டு பிரகடன கூட்டறிக்கையில் உக்ரைன் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கப்பட வேண்டியவை தெளிவில்லாமல் இருக்கிறது. ரஷிய உக்ரைன் போரை குறிப்பிடாமல் வெளியிடப்படும் எந்த பிரகடனத்திற்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் ஜி7 அமைப்பை சேர்ந்த நாடுகள் ஒப்புதல் அளிக்காது என தகவல்கள் வெளியாகி இருந்தது.

    இந்த கட்டாயத்தினால், தலைவர்களுக்கான இந்த இறுதி கூட்டறிக்கையில் புதியதாக சில வாக்கியங்களை இந்தியா சேர்த்து அந்நாட்டு அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்பு நடந்த எந்த முக்கிய சந்திப்புகளிலும், நிதி மற்றும் வெளியுறவுத்துறை உட்பட எந்த துறையிலும், உக்ரைன் போரினை குறிப்பிடும் எந்த சொற்றொடரையும் உள்ளடக்கிய ஆவணங்களுக்கும் சீனா மற்றும் ரஷியா ஒப்புதல் அளிக்க மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    ×