search icon
என் மலர்tooltip icon

    தென் கொரியா

    • விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்பட்டு செல்வதிலும் கால தாமதம்.
    • குப்பைகள் நிரம்பிய பலூன்களால் அந்த பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல்.

    வட கொரியா அனுப்பி வரும் குப்பைகள் நிரம்பிய பலூன்களால் தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையம் முடங்கும் சூழல் உருவானது. தொடர்ச்சியாக குப்பைகள் அடங்கிய பலூன்கள் விமான நிலையத்திற்குள் நுழைந்ததை அடுத்து, விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்பட்டு செல்வதிலும் கால தாமதம் ஏற்பட்டது.

    இதன் காரணமாக ஓடுபாதைகள் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் மட்டுமின்றி அதன் எல்லை பகுதிகளிலும் வட கொரியாவின் குப்பைகள் அடங்கிய பலூன்கள் ஏராளமாக குவிகின்றன. குப்பைகள் நிரம்பிய பலூன்களால் அந்த பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த மே மாதம் துவங்கி வட கொரியா தென் கொரியாவிற்குள் குப்பைகள் அடங்கிய பலூன்களை அனுப்பி வருகிறது. முன்னதாக வட கொரியாவின் பல்வேறு செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தென் கொரியா சார்பில் பலூன்கள் அனுப்பப்பட்டன.

    இவைகளில் வட கொரியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய காகிதங்கள் இடம்பெற்று இருந்தன. இதோடு எல்லை பகுதியில் வட கொரியாவுக்கு எதிரான இசையை தென் கொரியா ராட்சத ஒலிப்பெருக்கிகள் மூலம் இசைத்தது.

    தென் கொரியாவின் பலூன் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே வட கொரியா பலூன்களில் குப்பைகளை அனுப்ப துவங்கியது. அதன்படி தற்போது வட கொரியா அனுப்பிய பலூன்களால் தென் கொரிய விமான நிலைய செயல்பாடுகள் முடங்கியுள்ளன.  

    • அமெரிக்காவுடன் இணக்கமாக உள்ளதாகல் தென்கொரியா மீது வடகொரியா கோபத்தில் உள்ளது.
    • இரு நாட்டின் ராணுவ ஒத்திகைக்கு எதிராக ஏவுகணை சோதனை நடத்துவது வழக்கம்.

    கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது, இவ்வாறு ஏவுகணைகளை செலுத்தி தென்கொரியாவின் எச்சரிக்கை விடுத்து வருவது வழக்கம்.

    தற்போது ஏராளமான ராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளது. அதிலும் இரண்டு பலூன்களை ஒன்றாக இணைந்து அதில் குப்பைகளை கட்டி அனுப்பி வைத்துள்ளது.

    இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ள தென்கொரியா பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த பலூன்கள் சுமந்து கொண்டு வந்த பையில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், பேட்டரிகள், ஷூ பகுதிகள், சாணம் இருந்தாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளது.

    வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக தெளிவாக தெரிகிறது. மேலும், தென்கொரிய மக்களுக்கு எதிராக தீவிரமான பாதுகாப்பு மிரட்டல் எனவும் தென்கொரிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்த மனிதாபிமானமற்ற மற்றும் மிகவும் தரம்தாழ்ந்த செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கடுமையாக எச்சரிக்கிறோம் எனவும் தென்கொரியா தெரிவித்தள்ளது.

    எல்லை அருகில் அமைந்துள்ள ஜியோங்க்கி, கங்வோன் மாகாணத்தில் உள்ள உள்ளூர் அரசு நிர்வாகிகள், அடையாளம் தெரியாத பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    அந்த பொருட்கள் வீடுகள், விமான நிலையங்கள் மற்றும் சாலைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தற்போது தரையிறங்கியுள்ள பலூன்களால் சேதம் ஏதும் ஏற்பட்டது குறித்து தென்கொரியா தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

    • 2008-ம் ஆண்டில் இருந்து மூன்று நாடுகளுக்கு இடையிலான மாநாடு நடைபெற்று வருகிறது.
    • கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2019-க்குப் பிறகு நடைபெறவில்லை.

    தென்கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய மூன்று நாட்டு தலைவர்கள் வருகிற திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தென்கொரியா தெரிவித்துள்ளது. கடைசியாக இந்த மூன்று நாடுகள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை 2019-ம் ஆண்டு நடைபெற்றது. அதன்பின் நான்கு வருடங்கள் கழித்து தற்போது நடைபெற இருக்கிறது.

    இந்த முத்தரப்பு சந்திப்பில் அவர்களுடைய ஒத்துழைப்பு புதுப்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மூன்று நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாடு கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது. ஆண்டுதோறும் நடத்த முடிவு செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2019-ம் ஆண்டுக்குப்பின் நடத்தப்படவில்லை.

    இந்த முத்தரப்பு பேச்சுவார்தை தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், சீன பிரதமர் லி கியாங், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இடையில் நடைபெற இருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீன பிரதமர் லி கியாங், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தென்கொரியா செல்கிறார்கள். தனிப்பட்ட முறையில் தென்கொரிய அதிபரை சந்திக்கிறார்கள். அதன்பின் முத்தரப்பு மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

    சீனாவுடன் ஜப்பான் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படவில்லை என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வானிலை மாற்றம், வணிகம், சுகாதாரம், டெக்னாலாஜி மற்றும் பேரழிவுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சரியாக 1½ மணிநேரம் (90 நிமிடங்கள்) செல்போன் பார்க்காமலும், யாரிடமும் பேசாமலும் கண்களை விழித்தவாறு சும்மாவே உட்கார வேண்டும்.
    • போட்டியாளர்களில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவும் நிலையான இதயத்துடிப்புடன் உள்ளவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பரிசு கொடுக்கப்பட்டது.

    நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் ஒரு காமெடி காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்து இருப்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    இதேபோல் தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது.

    இந்த போட்டியில் அந்த நாட்டின் ஒலிம்பிக் வீரர், பிரபல யூ டியூபர் உள்பட 117 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். சரியாக 1½ மணிநேரம் (90 நிமிடங்கள்) செல்போன் பார்க்காமலும், யாரிடமும் பேசாமலும் கண்களை விழித்தவாறு சும்மாவே உட்கார வேண்டும். அவர்களின் இதய துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.


    பின்னர் போட்டியாளர்களில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவும் நிலையான இதயத்துடிப்புடன் உள்ளவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பரிசு கொடுக்கப்பட்டது.

    • வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.
    • சாலையில் நெருப்புக்கோழி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.

    வன விலங்குகள், பறவைகளை பூங்காக்களில் கூண்டுக்குள் பார்க்கும் பார்வையாளர்கள் பரவசப்படுவார்கள். அதே நேரம் அவை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் போது ஆபத்தாக மாறிவிடும்.

    அந்த வகையில் நெருப்புக்கோழி ஒன்று சாலைகளில் ஓடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தென்கொரியாவின் சியோங்னாம் நகரில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று காலை அந்த பகுதியில் சாலைகளில் அங்கும், இங்குமாக ஓடிய ராட்சத நெருப்புக்கோழி திடீரென சுரங்க பாதை பகுதிக்குள் புகுந்தது.

    தடோரி பகுதியில் சுற்றுச்சூழல் பூங்காவில் இருந்து தப்பிய இந்த நெருப்புக்கோழி சாலைகளில் ஓடியதோடு, சில வாகனங்கள் மீது மோதி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.

    சிலர் தங்களது செல்போன்களில் அதனை வீடியோ எடுத்தனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே சாலையில் நெருப்புக்கோழி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.

    ஒரு பயனர், நெருப்புக்கோழி அழகாக ஓடுகிறது எனவும், மற்றொரு பயனர் நெருப்புக்கோழிக்கு சுதந்திரம் கிடைத்தது எனவும் பதிவிட்டுள்ளார்.

    • வருகிற கல்வியாண்டு முதல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்தது.
    • அதிகமான டாக்டர்களை பணியமர்த்தும்போது தேவையற்ற சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் நிலவும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    சியோல்:

    தென்கொரியாவில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் டாக்டர்கள் பணிபுரிகின்றனர். அங்குள்ள மக்கள்தொகையின்படி 10 ஆயிரம் பேருக்கு 25 டாக்டர்கள் என்ற நிலை உள்ளது.

    எனவே டாக்டர்களின் பற்றாக்குறையை தீர்க்க அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி வருகிற கல்வியாண்டு முதல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்தது.

    அரசின் இந்த அறிவிப்பால் டாக்டர்களின் பணிச்சுமை குறையும். அதேபோல் நோயாளிகளுக்கும் சிகிச்சை எளிதில் கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக அரசின் இந்த மருத்துவ கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    அதாவது 2 ஆயிரம் பேரை கையாளக்கூடிய அளவுக்கு நம்மிடம் போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. மேலும் அளவுக்கு அதிகமான டாக்டர்களை பணியமர்த்தும்போது தேவையற்ற சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் நிலவும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    முக்கியமாக அதிகளவில் டாக்டர்கள் உருவாக்கினால் எதிர்காலத்தில் தங்களுக்கு சம்பளம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் அஞ்சுகின்றனர். எனவே அவர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தின் ஒருபகுதியாக ஒரே நாளில் 1,600-க்கும் அதிகமான பயிற்சி டாக்டர்கள் ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

    இதன் காரணமாக ஏராளமான ஆபரேசன்கள் ரத்து செய்யப்பட்டதால் நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே டாக்டர்கள் இந்த போராட்டத்தை உடனடியாக கைவிடும்படி தென்கொரிய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உதவியாளர், தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை அலுவலக பணிக்கு பயன்படுத்தினார்
    • இணையவழியாக கிரிப்டோகரன்சிகளை திருட வட கொரியா பலமுறை முயன்றுள்ளது

    கடந்த நவம்பர் மாதம், தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் யோல் (Yoon Suk Yeol), 3-நாள் சுற்று பயணமாக இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது அவர் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கையும் சந்தித்து பேசினார்.

    யூன், இங்கிலாந்து சென்ற காலகட்டத்தில் அவரின் முக்கிய உதவியாளரின் மின்னஞ்சல்களை வட கொரியா "ஹேக்கிங்" செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதிபரின் உதவியாளர், தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை அலுவலக பணிக்கு பயன்படுத்திய போது அதை வட கொரியா ஹேக் செய்தது. இந்த ஹேக்கிங் மூலம், அதிபர் யூனின் பயண அட்டவணையையும், அதிபர் அனுப்பிய செய்திகளையும் வட கொரியா களவாடியுள்ளது.

    ஆனால், ஹேக்கிங் மூலம் என்னென்ன தகவல்கள் களவு போனது எனும் விவரத்தை தென் கொரிய அரசு இதுவரை வெளியிடவில்லை.

    தென் கொரிய அதிபரின் உதவியாளர் குழுவை சேர்ந்த ஒருவரின் மின்னஞ்சல் கணக்குகளை வட கொரியா ஹேக்கிங் செய்திருப்பது இதுதான் முதல்முறை.

    வட கொரியா, தனது நாட்டின் ராணுவ மற்றும் அணு ஆயுத தேவைகளுக்கான பணத்திற்காகவும், தென் கொரியாவின் அரசாங்க ரகசியங்களை தெரிந்து கொள்ளவும், தென் கொரியா மீது நீண்ட காலமாக பல வழிமுறைகளை கையாண்டு சைபர் தாக்குதல் நடத்தி வருகிறது. அணு ஆயுத பரிசோதனைகளுக்கு தேவைப்படும் பணத்திற்கு, இணையவழியாக கிரிப்டோகரன்சிகளை திருடுவதை வட கொரியா பல முறை முயன்றுள்ளது.

    தென் கொரிய அதிபர் இங்கிலாந்து செல்லும் முன்னரே ஹேக்கிங் குறித்து கண்டறியப்பட்டு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இது குறித்து தென் கொரியா தெரிவித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தோழமைக்கு ஏற்ற உயிரினமாக நாய்களை கருதி பலர் அவற்றை வளர்க்கின்றனர்
    • தென் கொரிய அதிபரின் மனைவி இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்

    நாய்களை "மனிதனின் உற்ற நண்பன்" (Man's best friend) என அடைமொழியிட்டு கூறுவது வழக்கம். நாய்களை பாதுகாப்பிற்கு ஏற்ற காவலனாகவும், தோழமைக்கு ஏற்ற உயிரினமாகவும் கருதி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் அயல்நாடுகளில் அதிகம்.

    தென் கொரிய மக்களில் ஒரு சிலர் நாய் இறைச்சி உண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது உலகளவில் விலங்கின ஆர்வலர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்தது.

    தென் கொரியாவின் பல பகுதிகளில் நாய் இறைச்சி பிரியர்களுக்கென பல உணவகங்களில் அவை சமைக்கப்பட்டு, பரிமாறப்பட்டு வந்தது.

    இந்நிலையில், தென் கொரிய பாராளுமன்றம் நாய் இறைச்சியை தடை செய்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

    இத்தொழிலை சார்ந்துள்ள தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேறு தொழிலுக்கு மாறும் வகையில் 3-வருட-கால இடைவெளிக்கு பிறகே இச்சட்டம் 2027லிருந்து அமலுக்கு வரும்.

    அத்தொழிலாளர்கள் புதிய தொழிலில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் வகையில் மானியம் வழங்கி உதவவும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

    இச்சட்டத்தின்படி, இறைச்சிக்காக நாய்களை வளர்ப்பது, கொல்வது, இறைச்சியை பதப்படுத்தி விற்பனை செய்வது உள்ளிட்ட அனைத்தும் சட்டவிரோதம். இதனை மீறுவோருக்கு 2-வருட-கால சிறை தண்டனையும், பெரும் தொகை அபராதமும் விதிக்கப்படும்.

    தென் கொரிய அதிபரின் மனைவி இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். பிராணிகள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் உடைய அதிபரும் அவர் மனைவியும் தங்கள் இல்லத்தில் 4 நாய்களும் 3 பூனைகளும் வளர்த்து வருகின்றனர்.

    நாய்களை கொன்று உண்பதை தடை செய்யும் சட்டத்தை வரவேற்றுள்ள பிராணிகள் ஆர்வலர்கள், பல வருடங்களாகவே அந்நாட்டில் நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மர்மநபர் ஆட்டோகிராஃப் கேட்பது போன்று அருகில் வந்து கத்தியால் தாக்கியுள்ளார்.
    • துப்பாக்கி கையாள்வதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கத்தி போன்ற ஆயுதங்களால் வன்முறை.

    தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவரான லீ ஜே-மியுங்கை மர்ம நபர் திடீரென கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜனநாயக கட்சியின் தலைவரும், தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவருமான லீ ஜே-மியுங் தெற்கு துறைமுக நகரமான புசன் சென்றுள்ளார். அங்குள்ள விமான நிலையத்தை சுற்றி பார்க்கும்போது மர்ப நபரால் தாக்கப்பட்டுள்ளார்.

    மர்ப நபர் லீ ஜே-மியுங்கிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதுபோல் அருகில் வந்துள்ளார். அருகில் வந்ததும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லீயின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் லீ ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

    அருகில் இருந்தவர்கள் ரத்தம் வெளியாறாமல் இருக்க தங்களது கைக்குட்டைகளால் அழுத்தி பிடித்துள்ளனர். உடனடியாக சிகிச்சைக்கான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தென்கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட மர்ம நபர் சம்பவ இடத்திலேயே பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

    தென்கொரியால் துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலயைில், மற்றவகை ஆயுதங்களால் அரசியல் வன்முறை நிகழ்ந்து வருகின்றன.

    • தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
    • ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விண்வெளி படைத்தளத்தில் இருந்து செயற்கைக்கோளை ஏவியது.

    சியோல்:

    வடகொரியா சமீபத்தில் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவி நிலை நிறுத்தியது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதற்கிடையே உளவு செயற்கைக்கோள் மூலம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, ராணுவ தலைமையகமான பென்டகன், கடற்படை தளம் ஆகியவற்றை படம் பிடித்ததாக வடகொரியா தெரிவித்தது.

    மேலும் இவ்விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தைக்கு அழைத்த அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது.

    இந்த நிலையில் தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

    ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விண்வெளி படைத்தளத்தில் இருந்து செயற்கைக்கோளை ஏவியது.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் தென்கொரியா செய்துள்ள ஒப்பந்தத்தில் 2025-ம் ஆண்டுக்குள் 5 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. அதில் முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.

    வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திராட்சை பழம் முதல் சில பழங்களாலும் தனக்கு ஒவ்வாமை இருப்பதாக கூறியிருந்தார்.
    • வீடியோ வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    தென்கொரிய தலைநகர் ஜியோல் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஜோன்னே பேன். 21 வயதான இவர் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனக்கு சில உணவுகளால் ஒவ்வாமை இருப்பதாக ஒரு பட்டியலை பகிர்ந்துள்ளார்.

    இறப்பதற்கு 37 புதிய வழிகள் என்ற தலைப்பில் பதிவிட்ட அந்த பட்டியலில் ஏராளமான உணவு வகைகளால் அவருக்கு ஒவ்வாமை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், திராட்சை பழம் முதல் சில பழங்களாலும் தனக்கு ஒவ்வாமை இருப்பதாக கூறியிருந்தார்.

    அதாவது, சில உணவுகளை சாப்பிட்ட 10 நிமிடங்களுக்குள் அவர் தோல் அலர்ஜியால் பாதிக்கப்படுவதாகவும், உடலில் அரிப்பு மற்றும் அதிக வெப்பம் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாகவும் கூறியிருந்தார். அவர் 37 என்ற எண்ணை பயன்படுத்தினாலும் அதை விட அதிகமான எண்ணிக்கையில் அவருக்கு ஒவ்வாமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    அவரது இந்த வீடியோ வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    • இரு நாடுகளுக்கும் தேவைகள் உள்ளதால் பரஸ்பரம் உதவி கொள்ள முடியும்
    • ஐ.நா. சபை தீர்மானத்திற்கு இது எதிரானது என்கிறது தென் கொரியா

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியா சென்றுள்ளார். அங்கு இரு நாட்டு அதிபர்களுக்கிடையே அதிகாரிகள் யாரும் இன்றி தனிப்பட்ட சந்திப்பு சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.

    கடந்த 2022 பிப்ரவரியில் இருந்து உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் ரஷியாவிற்கு ஆயுதங்களின் தேவை அதிகரித்திருக்கிறது.

    அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிடம் வெளிப்படையான எதிர்ப்பை காட்டி வரும் வட கொரியாவிற்கு உணவு தானிய தேவையும், அந்நாட்டு ராணுவத்திற்கான அதி நவீன ஆயுதங்களுக்கான தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகிறது.

    எனவே, இரு நாடுகளும் பரஸ்பரம் உதவி கொள்ளும் நிலையில் உள்ளதால், ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்ற முடியும். இப்பின்னணியில் சந்தித்து கொண்ட தலைவர்கள் இருவரும் பரஸ்பரம் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், இரு நாட்டின் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பிற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்த நிலையில், வட கொரியாவிற்கு ரஷியா வழங்கப்போகும் அதிநவீன ஆயுத மற்றும் உளவு விண்கலத்திற்கான தொழில்நுட்ப உதவி, தென் கொரியாவில் போர் பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

    இது குறித்து தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் லிம் சூ-சுக், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்..,

    "உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி விண்கலன் மேம்பாடு மற்றும் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இரு நாட்டு அதிபர்களும் பரஸ்பரம் ஒத்துழைக்க முனைவது குறித்து தென் கொரியா கவலையும், வருத்தமும் தெரிவிக்கிறது. அணு ஆயுத மற்றும் ஏவுகணை மேம்பாடு சம்பந்தமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் ஈடுபடுவது ஐ.நா.சபையின் தீர்மானங்களுக்கு எதிரானது. வட கொரியாவிற்கு ராணுவ ஒத்துழைப்பு அளித்தால், தென் கொரியாவிற்கும் ரஷியாவிற்குமான உறவில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும் என்பதை ரஷியா உணர வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ×