search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை வெள்ளம்"

    • திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் வெள்ளம்.
    • தடுப்புச் சுவர் பகுதி சரிந்து விழுந்தது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக படி பாதையும், வாகனங்கள் மூலம் செல்ல மலைப்பாதையும் கோவில் நிர்வாக சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மிக்ஜம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த 4-ந்தேதி இரவு திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையின் ஒரு பகுதியில் திடீரென்று மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் 12 மீட்டர் நீளம், 8 மீட்டர் உயரத்துக்கு தடுப்பு சுவர் பகுதி சரிந்து விழுந்தது.

    இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சீரமைப்பு பணிகளை இன்னும் ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை யொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு மலை ப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று முதல் இன்னும் ஒரு வாரம் அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 462 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் 442 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டன.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து காணப்பட்டது. மிச்சாங் புயல் மற்றும் கனமழை காரணமாக 4 மாவட்ட ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் சென்னையில் 26 ஏரிகள் முழுமையாக நிரம்பின. மீதமுள்ள 2 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 462 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 68 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 442 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டன. 59 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 205 ஏரிகள் நிரம்பி உள்ளன. 104 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. 4 மாவட்டங்களிலும் மொத்தம் 1135 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

    • பல ஆண்டுகளாக கோவில் குளத்தில் நீரின்றி தரை மட்டம் தெரியும் அளவிற்கு இருந்தது.
    • பக்தர்கள் முன்னாள் கவுன்சிலர் வே.வாசுவுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

    வில்லிவாக்கம்,டிச.13-

    அயனாவரம் சயானி பஸ் நிறுத்தம் அருகே உள்ளது அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் கோவில் எதிர் திசையில் சுற்றிலும் குடி யிருப்புகளுக்கு மத்தியில் பரந்து விரிந்து உள்ளது. பல ஆண்டுகளாக கோவில் குளத்தில் நீரின்றி தரை மட்டம் தெரியும் அளவிற்கு இருந்து முற்றிலும் நீர்வரத் தும் குறைந்து இருந்தது. இது குறித்து அயனாவரம் பகுதியில் உள்ள பல்வேறு திருக்கோவில் குளங்களை பராமரித்து வரும் தி. மு.க. பகுதி செயலாளரும் மலர் டிரஸ்ட் நிறுவனரும் முன்னாள் கவுன்சிலருமான வே.வாசுவின் கவனத்துக்கு பக்தர்கள் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து தனது சொந்த நிதியிலிருந்து சென்னை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூபாய் 11, 45,970 (11லட்சத்து 45 ஆயிரத்து 970 ரூபாய்) மதிப்பில் சாலையின் மேற்குப் பகுதியில் இருந்து 150 மீட்டர் நீளத்திற்கு 3 அடி அகலம் 3 அடி ஆழத் திற்கு சொந்த பணத்தில் மழைநீர் கால்வாய் அமைத்து சாலையோரம் ஓடும் மழை நீரினை குளத்திற்கு பைப் மூலம் கொண்டு செல்லும் வகையில் பணியினை நடத்தி முடித்தார். இதன் காரணமாக கடந்த வாரம் மிக்ஜாம் புயலின் தாக்கத் தால் பெய்த கனமழையால் சாலை ஓரத்தில் இருந்த மழை நீர் அனைத்தும் குளத்திற்கு சென்றது. இதையடுத்து சுமார் 30 அடி ஆழத்திற்கு குளம் முழுவதும் மழை நீர் நிரம்பி சுற்றி மழை நீரால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதன் மூலம் அந்த பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் நிலத்தடி நீர் உயரும். இதனை தொடர்ந்து

    75 ஆண்டுகளுக்கு பிறகு காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் மழை நீரை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் முன்னாள் கவுன்சிலர் வே.வாசுவுக்கு பாராட்டுகளையும் நன்றி களையும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தி.மு.க. வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளரும் மலர் டிரஸ்ட் நிறுவனருமான வே.வாசு கூறியதாவது:-

    பல ஆண்டுகளாக நீர் இல்லாமல் இருந்த இந்த கோவில்குளத்தை நாங்கள் சரி செய்ததால் தற்சமயம் பெய்த பலத்த மழையால் 30 அடிக்கு மேல் மழை நீர் தேங்கி உள்ளது. இதனை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் குளத்தில் மழை நீர் தேங்கும் வகையில் கிழக்குப் பகுதியில் இருந்து 250 மீட்டர் அளவிற்கு மழைநீர் வடிகால் அமைத்து கிழக்குப் பகுதியில் தேங்கும் மழை நீரை குளத்திற்குள் விடும் பணிகள் விரைவில் தொடங்கும். காசி விசுவநாதர் கோவில் நிர்வாகத்தின் கீழ் வரும் இந்த குளத்தினை நாங்கள் சீர் செய்து விட்டோம். ஆனால் கோவில் நிர்வாகத்தினர் கோவில் குளத்தினை முறையாக பராமரிக்காத காரணத்தினால் சுற்றி உள்ள மரத்தில் உள்ள கழிவுகள் அனைத்தும் குளத்தில் மிதிக்கிறது. இதனை சீர் செய்ய எங்கள் பங்களிப்பை நாங்கள் தருவதற்கு தயாராக இருக்கி றோம். கோவில் நிர்வாகம் இந்த கோவில் குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது எனது தாழ்வான கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி வளாகத்தில் சேறும் சகதியுமாக உள்ளது.
    • ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் வடிந்து இருந்தாலும் சேறும்சகதியுமாக காணப்படுகிறது.

    பூந்தமல்லி:

    மிச்சாங் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் தேங்கியது. தற்போது மழை வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது.

    எனினும் நிலையில் பூந்தமல்லியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் செல்ல வழியில்லாததால் தொடர்ந்து தேங்கி நின்றது.

    இதனால் மழைவெள்ள விடுமுறைக்கு பின்னர் மற்ற பள்ளிகள் திறக்கப்பட்டாலும் இந்த பள்ளிகளுக்கு நேற்று விரைவிடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று முதல் அரையாண்டு தேர்வு தொடங்கி உள்ளதால் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளை இன்று திறக்க வளாகத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி வேகமாக நடைபெற்றது. எனினும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழை நீரை இன்னும் முழுமையாக அகற்றமுடியவில்லை. மேலும் பள்ளி வளாகத்தில் சேறும் சகதியுமாக உள்ளது.

    இதைத்தொடர்ந்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு நுழைவாயிலில் இருந்து வகுப்பறை வரை அவர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை பள்ளி திறந்ததும் அந்த பாலத்தில் மாணவிகள் புதிய அனுபவத்துடன் பயந்தபடி வகுப்பறைக்கு நடந்து சென்றனர்.

    இதேபோல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் வடிந்து இருந்தாலும் சேறும்சகதியுமாக காணப்படுகிறது. அதில் மாணவர்கள் சென்றனர்.

    வரும் காலங்களில் மழைகாலத்தில் பள்ளி பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படாத வகையில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • எல்லா இடங்களுக்கு உள்ளேயும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர்.
    • வெள்ளத்தில் சில இடங்களில் வலை வீசி மீன்களை பிடித்து வருகின்றனர்.

    சென்னையில் மிச்சாங் புயலின் தாக்கத்தால் கொட்டித் தீர்த்த பெரும் மழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    வீடுகள், கடைகள் என எல்லா இடங்களுக்கு உள்ளேயும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர்.

    சென்னை வெள்ளம் தொடர்பாக பல்வேறு காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி காண்போரை கலங்க வைத்து வருகின்றன.

    இது ஒரு புறம் இருக்க சென்னை வெள்ளத்தில் சில இடங்களில் வலை வீசி மீன்களை பிடித்து வருகின்றனர்.

    இது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    சென்னை அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மீனவர் ஒருவர் வலைவீசி மீன்களை பிடித்தார். அப்போது இதுவரை இல்லாத வகையில் 20 கிலோ எடை கொண்ட மீன் சிக்கியது. இதனை பிடித்த மகிழ்ச்சியில் அதனை படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.
    • புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    சென்னை சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரைத்துறையினர் பலர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு காசோலைகளை வழங்கி வருகின்றனர். சில நடிகர்கள் பாதிப்பு பகுதிகளில் நேரடியாக சென்று உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு நிவாரண பொருட்களை புயல் பாதித்த பகுதிக்கு அனுப்பி வைத்தார்.

    புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்.

    கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து லாரிகள் மூலம் மளிகை பொருட்கள், பெட்சீட் மற்றும் நிவாரண பொருட்கள் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள் தண்ணீரில் மிதந்தன.
    • பைக்குகள் போன்றவை ஆண்டுதோறும் பழுதடைந்து புதிய பொருட்களை வாங்கும் நிலை உள்ளது.

    தாம்பரம்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் அனைத்து இடங்களும் மழைவெள்ளத்தில் தத்தளித்தன. வழக்கம்போல் தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜ புரம் பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட இந்த ஆண்டு அதிக பாதிப்பை ஏற்படுத்தி சென்றது.

    முடிச்சூர் ஊராட்சி மற்றும் வரதராஜபுரம் பகுதிகள் அடையாறு ஆற்றை ஒட்டி உள்ளன. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது தண்ணீர் சூழ்ந்து தனி தீவாக மாறின. முடிச்சூரில் இருந்து தாம்பரம் செல்லும் சாலை, முடிச்சூரில் இருந்து மண்ணிவாக்கம் செல்லும் சாலை மற்றும் மணிமங்கலம் செல்லும் சாலைமுழுவதும் துண்டிக்கப்பட்டு மக்கள் வெளியேற முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    கடந்த 2015 -ம் ஆண்டு வெள்ளப்பெருக்கிற்கு பின்னர் பலமுறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதிகளை ஆய்வு செய்து அங்கு அடையார் ஆற்றை தூர்வாரி அகலப்படுத்தி கரைகளை பலப்படுத்தினர்.

    மேலும் அடையாறு ஆற்றுக்கு செல்லும், சிறு சிறு கால்வாய்களும் தூர்வாரப்பட்டு அடையாறு ஆற்றுக்கு செல்லும்படி வழி செய்யப்பட்டது. மேலும் முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட அமுதம் நகர், ராயப்பா நகரில் மக்கள் ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து சுமார் ரூ.4 கோடி செலவில் கால்வாய் அமைத்து அப்பகுதி தண்ணீர் அடையாறு ஆற்றில் சென்றடையும் வகையில் வழி ஏற்படுத்தினர்.

    ஆனால் தற்போது பெய்த மழையின்போது ரூ.4 கோடியில் அமைக்கப்பட்ட கால்வாயாலும் எந்தப் பயனும் இல்லாமல் அப்பகுதி மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது. எப்போதும் போல் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள் தண்ணீரில் மிதந்தன. சரியான திட்டமிடல் இல்லாதது, தண்ணீர் செல்வதற்கு அகலமான கால்வாய் மற்றும் ஏரிகள் நிரம்பும்போது வெளியேறும் உபரிநீர் அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்காததே இந்த மழை வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதியில் ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறோம். வீடுகளில் தண்ணீர் புகுவதால் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கார்கள், பைக்குகள் போன்றவை ஆண்டுதோறும் பழுதடைந்து புதிய பொருட்களை வாங்கும் நிலை உள்ளது. மழைவெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வாக அடையாறு ஆற்றை மேலும் அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும்.

    மேலும் முடிச்சூர் பகுதியில் உள்ள சீக்குனா ஏரி கால்வாயை கட்டன் கால்வாய் முறையில் அமைத்து அடையாறு ஆற்றில் விட வேண்டும். இதேபோல் முடிச்சூர் லட்சுமி நகர், நேதாஜி நகர் பகுதிகளில் கட்டன் கால்வாய் அமைத்து அடையாறு ஆற்றுக்கு தண்ணீர் செல்ல வழி செய்தால் மட்டுமே இப்பகுதியில் மழைநீர் தேங்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கே.பி.கே. சதீஷ்குமார் ஏற்பாட்டில் சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி. கந்தன் வழங்கினார்.
    • பகுதி கழக பொருளாளர் கே.குமார் மற்றும் கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொது செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி 182 - வது வார்டு கந்தன்சாவடிக்குட்பட்ட அம்பேத்கர் சாலை, வீரமணி சாலை, திரு.வி.க. தெரு, ஜீவானந்தம் தெரு மற்றும் பால்ராஜ் நகர் ஆகிய பகுதியில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. அரிசி, போர்வை, பருப்பு, ரவை, கோதுமை, சமையல் எண்ணெய், சேமியா, பிஸ்கட், மிளகாய் தூள், சர்க்கரை, தண்ணீர் பாட்டில் ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை மாவட்ட எம். ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளரும் 182 - வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி கழக குழு தலைவருமான கே.பி.கே. சதீஷ்குமார் ஏற்பாட்டில் சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி. கந்தன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் எம். ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளரும் 193- வது வார்டு மாமன்ற உறுப்பினருமான டி.சி. கோவிந்தசாமி, பகுதி செயலாளர் ஜி.எம். ஜானகிராமன், வட்ட செயலாளர் பி. ராஜேந்திரன், எம். வெங்கடேசன், பி.எல். செந்தில்வேல், பகுதி மகளிர் மகளிர் அணி செயலாளர் அமுதா வெங்கடேசன், பகுதி கழக பொருளாளர் கே.குமார் மற்றும் கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஏரியின் மதகு அருகே கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
    • ஏரி நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன.

    ஸ்ரீபெரும்புதூர்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏரி, குளங்கள் முழுவதும் நிரம்பி உள்ளன. சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள ஏரியும் முழு அளவில் நிரம்பி காணப்பட்டது.

    இந்த ஏரியின் மதகு பகுதி சேதம் அடைந்து இருந்ததால் பாதுகாப்புக்காக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏரியின் மதகு அருகே கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. இந்த தண்ணீர் நடுவீரப்பட்டு, திருவஞ்சேரி கிராமங்களுக்குள் பாய்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த பின்னரே வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். அப்போது கிராமம் முழுவதும் ஏரி தண்ணீர் புகுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து 2 கிராமங்களில் இருந்தவர்களும் பாதுகாப்பாக வெளியேறினர். அவர்கள் அங்குள்ள அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். திடீரென ஏரி நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். உடனடியாக ஏரியின் உடைந்த கரையில் மணல் மூட்டைகள் அடுக்கி சரிசெய்யப்பட்டது. எனினும் ஏரியில் இருந்த சுமார் 50 சதவீத தண்ணீர் வெளியேறி விட்டது. இந்த ஏரி சுமார் 175 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. சுற்றி உள்ள கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக நடுவீரப்பட்டு ஏரி இருந்தது. இந்த நிலையில் ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறியதால் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஏரிக்கரை தானாக உடைந்ததா? அல்லது வேறு யாரேனும் உடைத்து விட்டனரா?என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடுவீரப்பட்டு ஏரியில் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தண்ணீர்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். ஏரிக்கரை உடைந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • புதிய வரவாக மேலும் சில அரிய வகை பறவைகள் வரத் தொடங்கி இருக்கிறது.
    • வெளிநாடுகளில் இருந்து மேலும் பல பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிது.

    சோழிங்கநல்லூர்:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை துரைப்பாக்கம், பெருங்குடி, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது.

    துரைப்பாக்கம் 200 அடி சாலையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு ஏற்கனவே ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து இருந்தன. புயல், மழை காரணமாக அவை வேறு இடங்களுக்கு சென்று விட்டன. இந்த நிலையில் தற்போது மழை நின்றதும் மீண்டும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளது. புதிய வரவாக மேலும் சில அரிய வகை பறவைகள் வரத் தொடங்கி இருக்கிறது.

    ஏராளமான கூழைக்கடா பறவைகள் வந்திருப்பது சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமான கூழைக்கடா பறவைகள் தங்கும் இடங்களில் அதனுடன் சேர்ந்து கருப்பு நிற கூழைக்கடாக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது பள்ளிக்கரனில் வெள்ளை நிற கூழைக்கடாக்கள் மட்டுமே வழக்கமா வரும். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுப்பு நிற கூழைக்கடாக்கள் வந்திருந்தன. இப்போது புதிய வரவாக முன் எப்போதும் இல்லாத வகையில் கருப்பு நிற கூழைக்கடாக்கல் வந்துள்ளது. அவை பழுப்பு நிற கூழைக்கடாக்கள் போன்று இல்லாமல் வழக்கமான வெள்ளை கூழைக்கடாவுடன் இணைந்த உலா வருகின்றன.

    தற்போது பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதியல் அதிக தண்ணீர் உள்ளதால் வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து மேலும் பல பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பறவைகள் வரத் தொடங்கி உள்ளதால் அதை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.

    • சில இடங்களில் தண்ணீர் வடியாமல் வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது.
    • பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. எனினும் இன்னும் சில இடங்களில் வீடுகளை சூழ்ந்து வெள்ள நீர் வடியாமல் உள்ளது. வெள்ளவேடு அருகே உள்ள புதுச்சத்திரம் அடுத்த கொட்டம்பேடு, வேப்பம்பட்டு, பெருமாள் பட்டு, திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களில் சில இடங்களில் தண்ணீர் வடியாமல் வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கொட்டம்பேடு பகுதியில் மழை வெள்ள நீரை வெளியேற்ற புதுச்சத்திரம்- திருநின்றவூர் நெடுஞ்சாலையை துண்டித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் அருகில் உள்ள கூவம் ஆற்றில் கலக்கும் வகையில் வெளியேற்றப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக புதுச்சத்திரத்தில் இருந்து கொசவன்பாளையம், கொட்டம்பேடு, திருநின்றவூர், தாமரைப்பாக்கம் கூட்டுசாலை, புதுவாயல் கூட்டு சாலை வழியாக கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு உள்ளன.

    புதுச்சத்திரத்தில் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர். இதேபோல் திருநின்றவூரில் இருந்து புதுச்சத்திரம் வரும் வாகனங்கள் திருவள்ளுவர் வந்து செல்கின்றன. இதனால் வாகனங்கள் சுமார் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ×