search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைவாழ் மக்கள்"

    • விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
    • விலங்குகளால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், ஆட்டுமலை, பொறுப்பாரு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், மஞ்சம்பட்டி, ஈசல்திட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, கருமுட்டி உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

    அதற்குத் தேவையான இடுபொருட்களை வாங்கவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் அடிவாரப் பகுதிக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. வனப்பகுதியில் பாதை இல்லாததால் சில சமயத்தில் விலங்குகளால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஈசல்திட்டை சேர்ந்த சின்னக்கா என்பவர் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மலை அடிவாரப் பகுதிக்கு வந்தார். பின்னர் பொருட்கள் வாங்கிக்கொண்டு குடியிருப்பை நோக்கி சென்று கொண்டிருந்தார். இத்திபாழி என்ற இடத்தில் சென்றபோது புதரில் மறைந்து இருந்த யானை ஒன்று திடீரென வெளிப்பட்டது. இதனால் அச்சமடைந்த சின்னக்கா தப்பி ஓட முயற்சித்த போது எதிர்பாரத விதமாக கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் யானை அங்கிருந்து சென்று விட்டது.

    அதைத் தொடர்ந்து உடன் வந்த மலைவாழ் மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜல்லிபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. இது குறித்து உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரக அலுவலர் சிவக்குமார் உத்தரவின் பேரில் வனவர் தங்கப்பிரகாஷ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று சின்னக்காவிடம் விசாரணை மேற்கொண்டனர். அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்வதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் மலைவாழ் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாமல் அச்சத்தில் தவித்து வருகின்றனர். எனவே மலைவாழ் மக்கள் சென்று வரும் பகுதியில் யானைகள் நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன், யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது என்றுவனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் மின்கம்பங்களினால் யானைகள் இறப்பதை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனைமலை தாலுகாவில், வேட்டைக்காரன்புதுார், அர்த்தநாரிபாளையம், ஜல்லிப்பட்டி, காளியாபுரம், கோட்டூர், பெரியபோது ஆகிய கிராமங்களுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுக்களில் வட்ட நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலர், வனவர் அல்லது வனக்காப்பாளர், போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுக்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. இதில் அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட வன பகுதிகளாக அறிவிக்கப்பட்ட வனங்களில் இருந்து, ஐந்து கி.மீ., வரையுள்ள பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு கண்டறியப்படும் மின்கம்பங்களின் அச்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை கண்டறியப்பட வேண்டும்.

    பழுதடைந்த மின்கம்பங்கள், உயரம் குறைவாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் வனங்களுக்குள் செல்லும் மின்கம்பங்கள் என வகைப்பாடு செய்து சம்பந்தப்பட்ட புலப்படத்தில் குறிப்பிடப்பட வேண்டும். கண்டறியப்பட்ட மின்கம்பங்களை மின்வாரியத்தின் வாயிலாக அவற்றின் தன்மைக்கேற்ப அகற்ற அல்லது மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வனப்பகுதிக்குள் செல்லும் மின்கம்பிகளை உயர் மின் கோபுரங்கள் அமைத்து கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.மின்கம்பங்களை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்தல், முள்வேலி அமைத்தல் போன்ற பணிகள் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மின்சாரம் கொண்டு செல்வதற்கு மின்கம்பிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக உயர்ரக காப்பு கம்பிகள் மற்றும் உரையிடப்பட்ட கம்பிகளை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், மின்கம்பங்களினால் மின்சாரம் கொண்டு செல்வதற்கு பதிலாக மாற்று வழிமுறை அல்லது மாற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.கிராமங்களில் வட்ட அளவில் தாசில்தார்களும், குறு வட்ட அளவில் உள்வட்ட வருவாய் ஆய்வாளர்கள் தலைமையிலும் பணிகளை ஒருவாரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். பணிகளை ஒரு வார காலத்துக்குள் முடித்ததை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் உறுதி செய்து கோவை மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தற்போது வனப்பகுதியில் நிலவும் வறட்சியின் காரணமாக மரம், செடிகள் பசுமை இழந்து காணப்படுகிறது.
    • ஒரு நாள் முழுவதும் மூங்கில் நெல்லை சேகரிக்க வனப்பகுதிக்கு செல்வோம்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான மூலிகை செடிகள், கொடிகள், விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. மேலும் இந்த வனப்பகுதியில் ஏராளமான மலை கிராமங்களும் உள்ளன.

    இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்களது தோட்டத்தில் சிறுதானியங்கள் மற்றும் மலை காய்கறிகளை அதிக அளவில் பயிரிட்டு சமவெளி பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    இதேபோல் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்காக அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்து சென்று வருகின்றனர். வனப்பகுதி மற்றும் விவசாய தோட்டத்தை நம்பியே இவர்களது வாழ்க்கை நடந்து வருகிறது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான மூங்கில் மரங்கள் நிரம்பி காணப்படுகிறது. தற்போது வனப்பகுதியில் நிலவும் வறட்சியின் காரணமாக மரம், செடிகள் பசுமை இழந்து காணப்படுகிறது.

    மேலும் வனப்பகுதியில் கடுமையான காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாக மூங்கில் அரிசி சேகரிக்கும் பணியில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டுள்ளனர். 60 வயதான மூங்கில் மரத்தில் இருந்து காற்றின் காரணமாக தற்போது மூங்கில் நெல் கீழே விழத்தொடங்கி உள்ளது. இதை சேகரிக்க ஏராளமான மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

    சர்க்கரை நோய், புற்று நோய், மஞ்சள் காமாலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவ குணம் நிறைந்த இந்த மூங்கில் அரிசியை மலைவாழ் மக்கள் பதப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

    வனப்பகுதியை நம்பியே எங்கள் வாழ்க்கை உள்ளது. தற்போது கடுமையான காற்று வீசி வருவதால் 60 வயதான மூங்கில் மரத்தில் இருந்து மூங்கில் நெல் விழத் தொடங்கி உள்ளது. நாங்கள் இதை சேகரித்து மூங்கில் அரிசியாக பதப்படுத்தி விற்பனை செய்து வருகிறோம். தினமும் சுமார் 3 கிலோ வரை மூங்கில் நெல் சேகரித்து வருகிறோம்.

    பின்னர் நெல்லில் இருந்து மூங்கில் அரிசி எடுத்து பதப்படுத்தி சாலை ஓரங்களில் விற்பனை செய்து வருகிறோம். வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். வெளி இடங்களில் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நாங்கள் கிலோ ரூ.120-க்கு மட்டுமே விற்பனை செய்து வருகிறோம்.

    இதனால் தினமும் ரூ.300 வரை வருமானம் கிடைக்கிறது. ஒரு நாள் முழுவதும் மூங்கில் நெல்லை சேகரிக்க வனப்பகுதிக்கு செல்வோம். மறுநாள் நெல்லை பிரித்தெடுத்து அரிசியாக மாற்றி விற்பனை செய்வோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வத்திராயிருப்பு அருகே மலைவாழ் மக்களுக்கான 12 பசுமை வீடுகளை கலெக்டர் திறந்து வைத்தார்.
    • தற்போதுள்ள சூழ்நிலையில் கல்விக் கற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அத்திக்கோவில் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்காக ரூ.48 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 பசுமை வீடுகள் (பசுமை வீடு திட்டத்தின் நிதி தலா ரூ.3 லட்சம், ராம்கோ நிறுவன நிதி தலா ரூ.1 லட்சம்) வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கலெக்டர் மேகநாதரெட்டி பங்கேற்று பசுைம வீடுகளை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது கல்வியும் சுகாதாரமும் தான். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு தவறாமல் அனுப்ப வேண்டும். அவர்களை நன்றாக கல்வி பயில செய்ய வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் கல்விக் கற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    பெற்றோர்களாகிய நீங்கள் தற்போதுள்ள சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்றால் உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். கல்வி ஒன்றே செல்வமாகும். கல்வியின் மூலம் அனைத்தும் பெறலாம். தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து இந்த பகுதியில் இருந்து எதிர்காலத்தில் கலெக்டராகவோ, காவல் துறையில் சிறந்த அதிகாரியா கவோ, மருத்துவராகவோ, பொறியாளராகவோ உருவாக்க வேண்டும்.

    தங்கள் வாழ்வா தாரத்திற்கு பசு மாடுகள் வழங்கவும், மீதமுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்வில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிந்து முருகன், ஜெய்ந்த் உண்டு உறைவிடப் பள்ளி ராம்கோ மேலாளர் முருகேசன், ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வித்யா, வட்டாட்சியர் உமாமகேசுவரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இடுபொருட்கள் கிடைக்காததால் சில சிறு தானிய சாகுபடியை மலைவாழ் மக்கள் கைவிட்டனர்.
    • ரசாயன உரங்கள் இல்லாமல் முழுவதும் இயற்கை முறையில், சிறுதானியங்கள் விளைவித்து வருகின்றனர்.

    உடுமலை : 

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், இரு மலைத்தொடர்களுக்கு இடையிலுள்ள சமவெளிப்பகுதியில் அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் உணவிற்காக பல்வேறு சாகுபடிகளை மேற்கொள்கின்றனர்.குறிப்பாக நெல், சிறு தானியங்கள் மற்றும் மொச்சை ஆகிய சாகுபடி மலைவாழ் மக்களால் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. விளைபொருட்களை பிற பகுதிகளுக்கு கொண்டு வந்தும் விற்பனை செய்து வந்தனர்.தொழில்நுட்ப விழிப்புணர்வு இல்லாதது மற்றும் விதை உட்பட இடுபொருட்கள் கிடைக்காததால் சில சிறு தானிய சாகுபடியை மலைவாழ் மக்கள் கைவிட்டனர்.

    குறிப்பாக குழிப்பட்டி, மாவடப்பு, கோடந்தூர்போன்ற மலைவாழ் குடியிருப்புகளில் சாமை, ராகி போன்ற சிறு தானிய சாகுபடிகள் முற்றிலுமாக காணாமல் போனது.

    இது குறித்து கடந்த 2018ல் மலைவாழ் மக்கள், விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் அளித்த மனுக்கள் அடிப்படையில் வேளாண்துறை நடவடிக்கை எடுத்தது.சிறப்பு திட்டத்தின் கீழ் குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிக்கொட்டான்பாறை, ஆட்டுமலை, கோடந்தூர் ஆகிய மலைவாழ் குடியிருப்புகள் தேர்வு செய்யப்பட்டன.அங்குள்ள மக்களுக்கு, ராகி, சாமை ஆகிய விதைகள் மானியத்தில் வேளாண்துறையால் வழங்கப்பட்டன.

    பின்னர், நுண்ணுாட்டச்சத்து உட்பட இடுபொருட்களும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வேளாண்துறையினர் வழங்கினர்.இத்திட்டம் ஓராண்டு மட்டும் செயல்படுத்தப்பட்டு கைவிடப்பட்டது. இதே போல் தேனீ வளர்ப்பு திட்டமும் சில மலைவாழ் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது.தற்போது உடுமலை பகுதிகளிலுள்ள 15 மலைவாழ் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், விவசாய சாகுபடி மேற்கொள்ளும் வகையில் விவசாய நிலத்திற்கான தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டுள்ளது.

    விடுபட்டவர்களுக்கு ஆவணம் வழங்கும் பணி தீவிரமடைந்துள்ளது. எனவே தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளுக்கு பிறகு தங்கள் குடியிருப்பை ஒட்டிய விளைநிலங்களில் பல்வேறு சாகுபடி மேற்கொள்ள மலைவாழ் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.அங்குள்ள சிற்றாறுகளிலும் நிலையான நீர்வரத்து உள்ளது. எனவே சிறப்பு திட்டத்தை அனைத்து மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் செயல்படுத்தவும், இந்த சீசனில் சிறு தானிய சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருட்களை மானியத்தில் வழங்க வேண்டும்.

    மேலும் அரசு வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் செயல்படுத்தும் திட்டங்களில் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த மானியத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ஆவணங்கள் இல்லாததால் மலைவாழ் கிராமங்களை இத்திட்டங்கள் எட்டவில்லை. தற்போது விளைநிலங்களுக்கான ஆவணம் வழங்கப்பட்டுள்ளதால், மானிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜல்லிபட்டி அருகே, ஈசல்திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பில் ராகி, மொச்சை என பல்வேறு சிறுதானிய சாகுபடியில் அம்மக்கள் ஈடுபட்டுள்ளனர். ரசாயன உரங்கள் இல்லாமல் முழுவதும் இயற்கை முறையில், சிறுதானியங்கள் விளைவித்து வருகின்றனர்.அவர்களுக்கு தேவையான விதை, இயற்கை வழி இடுபொருட்கள் மற்றும் ஸ்பிரேயர் உட்பட வேளாண்எந்திரங்கள் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.இதுகுறித்து கடந்த வாரம் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும், மனு அளித்துள்ளனர்.மலைப்பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப விளையும் சாகுபடிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை வாயிலாக ஆய்வு செய்து, பரிந்துரைகள் வழங்க வேண்டும்.மலைவாழ் மக்கள், சிறுதானிய பயிர் உற்பத்திக்கு ஊக்குவித்தால் இயற்கை வழியில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்கள் மக்களுக்கு கிடைக்கும் என்பதால் அரசுத்துறைகள் கவனம் செலுத்த வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மலைவாழ் கிராமங்களில் பல துறைகள் மூலம் மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டு வருகிறது என்றாா்.
    • மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.

    உடுமலை :

    மலைவாழ் மக்களுக்கு நில உரிமை ஆவணம் வழங்கும் நிகழ்ச்சி உடுமலை அருகே உள்ள குழிப்பட்டி செட்டில்மெண்டில் நடைபெற்றது. 389 மலைவாழ் மக்களின் விவசாய நிலங்களுக்கு நில உரிமை ஆவணங்களை (பட்டா) தமிழக செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

    நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக மலைவாழ் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவ முகாம், நியாய விலைக்கடைகள், கல்வித்துறை உள்ளிட்ட பல துறைகள் மூலம் மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டு வருகிறது என்றாா்.

    நிகழ்ச்சியில் ஆதி திராவிட நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது :- ஆதி திராவிடா்கள், பழங்குடியினரின் பொருளாதார நிலையை மேம்படுத்த தாட்கோ மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2005 வன உரிமை சட்டத்தின்படி விவசாய நிலங்களுக்கு வன உரிமை ஆவணம் வழங்கப்படுகிறது என்றாா்.விழாவில் மலைவாழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் வழங்கினா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத், பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் அண்ணாதுரை, மாவட்ட அலுவலா் ரவிசந்திரன், மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ., இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், தி.மு.க. நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

    • தீ விபத்துக்களை தடுத்தல் மற்றும் மீட்பு குறித்து, தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை சார்பில், செயல்விளக்க பயிற்சி நடந்தது.
    • மரத்தின் கிளைகள், இலைகளை கொண்டு அணைப்பது மற்றும் மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட கரட்டுபதி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு, வனத்தீ ஏற்படுவதை தடுத்தல், தீ விபத்துக்களை தடுத்தல் மற்றும் மீட்பு குறித்து, தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை சார்பில், செயல்விளக்க பயிற்சி நடந்தது.

    அமராவதி வனச்சரக அலுவலர் சுரேஷ், உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் மூர்த்தி தலைமையிலா தீயணைப்புத்துறை வீரர்கள், தீத்தடுப்பு குறித்தும், வனத்தீ ஏற்படுவது மற்றும் அதனை தடுப்பது குறித்தும் வனப்பகுதிகளில் தீத்தடுப்புக்கோடு அமைப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும் வனத்தில் அடிபட்ட நபர்களை மீட்கும் முறைகள் குறித்தும், செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.பின்னர் தீயணைப்புத்துறையினரால், வனத்தில் செயற்கையான தீ விபத்து உருவாக்கப்பட்டு, வனப்பாதுகாவலர்களைக்கொண்டு, மரத்தின் கிளைகள், இலைகளை கொண்டு அணைப்பது மற்றும் மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.

    • குடியிருப்பு வீடுகள் அனைத்தும், தகரத்தினால் ஆன கூரையை கொண்டவை ஆகும்.
    • மாதம் ஒரு முறையாவது பொதுமருத்துவ முகாம் நடத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை அமராவதி, வந்தரவு, கொழுமம் வனச்சரகங்களில் 13க்கும் மேற்பட்ட செட்டில்மென்ட் பகுதிகள் உள்ளன. அவற்றில்தளிஞ்சி, தளிஞ்சிவயல், மஞ்சம்பட்டி, கோடந்தூர், ஆட்டுமலை, குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, திருமூர்த்திநகர், கரட்டுபதி, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.

    இவர்களின் குடியிருப்பு வீடுகள் அனைத்தும், தகரத்தினால் ஆன கூரையை கொண்டவை ஆகும். இதனால் மழையின்போது பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தற்போது மழையின்தாக்கம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள், சளி இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.இதனால், சிகிச்சைக்காக தொலை தூரத்தில் உள்ள உடுமலை அரசு மருத்துவமனையை நாடி வர வேண்டியுள்ளது.பொருளாதாரம் மற்றும் வாகன வசதி இல்லாதவர்கள், சிகிச்சை பெறுவதற்கு முனைப்பும் காட்டுவதில்லை. எனவே ஒவ்வொரு செட்டில்மென்ட் பகுதியிலும், மாதம் ஒரு முறையாவது பொதுமருத்துவ முகாம் நடத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் மலைவாழ் மக்களைுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
    • 20 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது.

    உடுமலை

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இயங்கி வரும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்குட்பட்ட உடுமலை வனசரகம் பொறுப்பார் குடில் மலைவாழ் மக்களை சந்தித்து,கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    மாவட்ட நக்சல் சிறப்பு பிரிவு ஆய்வாளர் ரவி தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் சார்பாக அப்பகுதியில் உள்ள 20 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களும்,மரக்கன்றுகளை நிறுவனர் உடுமலைடாக்டர் எஸ்.ஏ.ஐ. நெல்சன் வழங்கினார் .உறுப்பினர்கள் சிவலிங்கம்,ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.  

    • ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
    • மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் திருப்பூர் மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளி கண்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    மலைவாழ் மக்களிடம், குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததோடு மலைவாழ் மக்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும், தொடர்பு ஏற்படுத்தும் வகையிலும், மலைவாழ் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, தொலைத்தொடர்பு டவர் லைன் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    மேலும் குருமலை, குழிப்பட்டி, மேல் குருமலை, மாவடப்பு உள்ளிட்ட அனைத்து மலைவாழ் மக்கள் குடியிருப்புகளிலும் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தனர்.திருமூர்த்திமலை செட்டில்மென்ட் பகுதியில் ஆய்வு செய்த போது 17வது வார்டு உறுப்பினர் வாணிஸ்வரி, குடியிருப்பு தலைவர் கோபால், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • வெளியாட்களை கொண்டு தூய்மை பணி செய்ய எதிர்ப்பு
    • விடுமுறை நாட்கனில் வெளியாட்களை வேலைக்கு அமர்த்தி விடுகின்றனர்.

    கோவை:

    கோவை மருதமலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் சிலர் மருதமலை கோவில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.

    இவர்கள் வனத்துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க மருதமலை கோவிலில் பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர். அவர்கள் தற்போது வரை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒரு பிரிவினரும், 1 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு பிரிவினரும் தூய்மைப் பணியை செய்து வந்தனர்.

    அதற்கு நாளொனறுக்கு ரூ.300 சம்பளம் வழக்கப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து ஊழியர்களும் வேலையில் இருக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கூறியதாக தெரிகிறது.

    ஒரு சில நேரங்களில் இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை தூய்மைப் பணியில் ஈடுபட வைப்பதாக மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ஊழியர்கள் விடுமுறை நாட்கனில் வெளியாட்களை வேலைக்கு அமர்த்தி விடுகின்றனர். ஷிப்ட் அடிப்படையில் பழைய முறைப்படி எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். என மலைவாழ் மக்கள் பணிக்கு செல்லவில்லை. அவ்வாறு செல்லாததால் வெளி ஆட்களை பணியில் அமர்த்தி உள்ளனர். இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறும்போது:-

    இந்த தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் எங்களை விடுத்து வெளியூர் நபர்களை வேலையில் அமர்த்தி உள்ளனர். இரவு நேரம் என்றும் பாராமல் வேலை செய்து வந்தோம். யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.

    பல ஆண்டுகாலம் கோவிலில் உள்ள வேலை களை செய்து வாழ்ந்து விட்டோம். எங்களுக்கு வேலை மறுக்கும் பட்சத்தில் மரம் வெட்டும் தொழிலுக்கு செல்ல நினைக்கிறோம். மரம் வெட்டும் தொழில் செய்தால் மழை அழிந்துவிடும் என்று அரசு எடுத்த முடிவினால் இன்று வரை கோவில் பணி செய்து வருகிறோம்.

    கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சுத்தம் செய்யவில்லை. இதனால் மருதமலை கோவில் பகுதியில் குப்பைகள் அதிகளவில் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தபடி செல்கிறார்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×