search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Small grain"

    • கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.
    • விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் ருத்ராட்சங்கள் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே ராதாநல்லூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 ஆயிரத்து எட்டு ருத்ராட்சங்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்காக பிரத்தியேகமாக அயோத்தியில் இருந்து மொத்தமாக 5 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு அரசின் விதிமுறைகளை பின்பற்றி 10 அடி உயர உத்திர விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் புறத்தில் நூலை கொண்டு ருத்ராட்சங்களை கோர்த்து விநாயகர் முழுமையாக அலங்கரிக்கப்படுகிறார்.

    இந்து மகா சபா வைச் சேர்ந்த தொண்டர்கள் கடந்த 15 நாட்களாக இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு தயார் செய்யப்படும் விநாயகர் சிலை கும்பகோணத்தில் வைக்கப்படும் என்றும் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் ருத்ராட்சங்கள் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்றும் இந்து மகாசபையினர் தெரிவித்துள்ளனர்.

    • பயிர் சாகுபடி சார்ந்த விவசாயிகளுக்கான காரீப் பருவத்திற்கான முதல் கட்ட தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது
    • உரச் செலவை குறைத்து இயற்கை முறையில் உரங்கள் பெற திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துதல், மகசூலை அதிகரிக்க தானிய நுண்ணூட்டம் இடுதல் பற்றியும் விரிவாக கூறினார்.

    திருப்பூர்:

    உடுமலையை அடுத்த எலையமுத்தூர் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி சார்ந்த விவசாயிகளுக்கான காரீப் பருவத்திற்கான முதல் கட்ட தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி வரவேற்புரை ஆற்றியதுடன் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து உரைத்தார்.

    பயிற்சியில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன் கலந்து கொண்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.  

    அப்போது அவர் கூறுகையில், தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து விவரங்களையும், அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும், கோடை உழவு செய்யும் முறை மற்றும் பயன்கள் பற்றி கூறினார். மேலும் குறுகிய கால தானியம் மற்றும் தட்டு மகசூல் தரவல்ல கோ (எஸ்) -32 ரக சோளத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றியும் விதை, வேர் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் விதை நேர்த்தி, உரச் செலவை குறைத்து இயற்கை முறையில் உரங்கள் பெற திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துதல், மகசூலை அதிகரிக்க தானிய நுண்ணூட்டம் இடுதல் பற்றியும் விரிவாக கூறினார்.

    • மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் சிறுதானியத்தின் பயன்பாடுகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விழாவில் கல்லூரி நிறுவனத் தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் கலந்து கொண்டு சிறுதானிய வகைகள் பற்றியும், அவற்றின் நன்மைகள் குறித்தும் மாணவிகளோடு பகிர்ந்தனர். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் சிறுதானியத்தின் பயன்பாடுகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

    கல்லூரி மாணவிகள் சிறுதானியங்களில் பலவகையான உணவுகள் தயாரித்து அவற்றின் பயன்பாடு குறித்து விளக்கி கூறினர். மேலும், சிறுதானிய வகைகளைக் கொண்டு ரங்கோலி அமைத்தும் மகிழ்ந்தனர்.

    • கோடை உழவு செய்தால் மண் வளம் பெருகுவதோடு மழை நீரை சேமிக்க முடியும்.
    • முகாமிற்கான ஏற்பாடுகளை உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலர்கள் செய்திருந்தனர்.

    உடுமலை :

    உலக சிறுதானியங்கள் ஆண்டை கொண்டாடும் வகையில், உடுமலை வேளாண் துறை சார்பில், ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது.உடுமலையிலுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் அபிவிருத்திக்கான கருத்து கண்காட்சி அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் தேவி தலைமை வகித்தார்.

    உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட, மாவட்ட ஆலோசகர் அரசப்பன் பேசியதாவது:- நாம் அன்றாடம் நமது உணவில் அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்கிறோம். இதிலிருந்து கார்போஹைட்ரேட் சத்து மட்டுமே அதிகமாக கிடைக்கிறது. ஆனால் மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், விட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களான சோளம், கம்பு, ராகி, சாமை, திைன, வரகு மற்றும் குதிரைவாலி ஆகியவற்றில் மிகவும் அதிகமாக உள்ளது.

    எனவே ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்களை நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ரகங்களான, சோளம் கோ-32, கம்பு தன் சக்தி ரகங்களை பயிரிட்டால், அதிக மகசூல் மற்றும் வருவாய் கிடைக்கும். இதில், அதிக அளவு ஊட்டசத்துக்கள், விட்டமின்கள் உள்ளன. கோடை உழவு செய்தால் மண் வளம் பெருகுவதோடு மழை நீரை சேமிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் சிறுதானியபயிர்கள் சாகுபடிக்கு விதைநேர்த்தி, ஊட்டமேற்றிய தொழுவுரம், உயிர் உரம், நுண்ணூட்டச்சத்து மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லிகள் குறித்தும், அவற்றை பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கினார்.இம்முகாமில் ஊட்டச்சத்து மிக்க தானியங்களான சோளம், கம்பு பயிர்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து, விரிவாக எழுதப்பட்டுள்ள விவசாயிகளுக்கான கையேட்டினை வெளியிட்டார்.

    உடுமலை வட்டாரத்தில் செயல்படுத்தப்படும், மானிய திட்டங்கள் குறித்து துணை வேளாண் அலுவலர் கோவிந்தராஜன் விளக்கினார். முகாமிற்கான ஏற்பாடுகளை உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலர்கள் செய்திருந்தனர். 

    • இடுபொருட்கள் கிடைக்காததால் சில சிறு தானிய சாகுபடியை மலைவாழ் மக்கள் கைவிட்டனர்.
    • ரசாயன உரங்கள் இல்லாமல் முழுவதும் இயற்கை முறையில், சிறுதானியங்கள் விளைவித்து வருகின்றனர்.

    உடுமலை : 

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், இரு மலைத்தொடர்களுக்கு இடையிலுள்ள சமவெளிப்பகுதியில் அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் உணவிற்காக பல்வேறு சாகுபடிகளை மேற்கொள்கின்றனர்.குறிப்பாக நெல், சிறு தானியங்கள் மற்றும் மொச்சை ஆகிய சாகுபடி மலைவாழ் மக்களால் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. விளைபொருட்களை பிற பகுதிகளுக்கு கொண்டு வந்தும் விற்பனை செய்து வந்தனர்.தொழில்நுட்ப விழிப்புணர்வு இல்லாதது மற்றும் விதை உட்பட இடுபொருட்கள் கிடைக்காததால் சில சிறு தானிய சாகுபடியை மலைவாழ் மக்கள் கைவிட்டனர்.

    குறிப்பாக குழிப்பட்டி, மாவடப்பு, கோடந்தூர்போன்ற மலைவாழ் குடியிருப்புகளில் சாமை, ராகி போன்ற சிறு தானிய சாகுபடிகள் முற்றிலுமாக காணாமல் போனது.

    இது குறித்து கடந்த 2018ல் மலைவாழ் மக்கள், விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் அளித்த மனுக்கள் அடிப்படையில் வேளாண்துறை நடவடிக்கை எடுத்தது.சிறப்பு திட்டத்தின் கீழ் குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிக்கொட்டான்பாறை, ஆட்டுமலை, கோடந்தூர் ஆகிய மலைவாழ் குடியிருப்புகள் தேர்வு செய்யப்பட்டன.அங்குள்ள மக்களுக்கு, ராகி, சாமை ஆகிய விதைகள் மானியத்தில் வேளாண்துறையால் வழங்கப்பட்டன.

    பின்னர், நுண்ணுாட்டச்சத்து உட்பட இடுபொருட்களும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வேளாண்துறையினர் வழங்கினர்.இத்திட்டம் ஓராண்டு மட்டும் செயல்படுத்தப்பட்டு கைவிடப்பட்டது. இதே போல் தேனீ வளர்ப்பு திட்டமும் சில மலைவாழ் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது.தற்போது உடுமலை பகுதிகளிலுள்ள 15 மலைவாழ் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், விவசாய சாகுபடி மேற்கொள்ளும் வகையில் விவசாய நிலத்திற்கான தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டுள்ளது.

    விடுபட்டவர்களுக்கு ஆவணம் வழங்கும் பணி தீவிரமடைந்துள்ளது. எனவே தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளுக்கு பிறகு தங்கள் குடியிருப்பை ஒட்டிய விளைநிலங்களில் பல்வேறு சாகுபடி மேற்கொள்ள மலைவாழ் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.அங்குள்ள சிற்றாறுகளிலும் நிலையான நீர்வரத்து உள்ளது. எனவே சிறப்பு திட்டத்தை அனைத்து மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் செயல்படுத்தவும், இந்த சீசனில் சிறு தானிய சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருட்களை மானியத்தில் வழங்க வேண்டும்.

    மேலும் அரசு வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் செயல்படுத்தும் திட்டங்களில் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த மானியத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ஆவணங்கள் இல்லாததால் மலைவாழ் கிராமங்களை இத்திட்டங்கள் எட்டவில்லை. தற்போது விளைநிலங்களுக்கான ஆவணம் வழங்கப்பட்டுள்ளதால், மானிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜல்லிபட்டி அருகே, ஈசல்திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பில் ராகி, மொச்சை என பல்வேறு சிறுதானிய சாகுபடியில் அம்மக்கள் ஈடுபட்டுள்ளனர். ரசாயன உரங்கள் இல்லாமல் முழுவதும் இயற்கை முறையில், சிறுதானியங்கள் விளைவித்து வருகின்றனர்.அவர்களுக்கு தேவையான விதை, இயற்கை வழி இடுபொருட்கள் மற்றும் ஸ்பிரேயர் உட்பட வேளாண்எந்திரங்கள் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.இதுகுறித்து கடந்த வாரம் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும், மனு அளித்துள்ளனர்.மலைப்பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப விளையும் சாகுபடிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை வாயிலாக ஆய்வு செய்து, பரிந்துரைகள் வழங்க வேண்டும்.மலைவாழ் மக்கள், சிறுதானிய பயிர் உற்பத்திக்கு ஊக்குவித்தால் இயற்கை வழியில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்கள் மக்களுக்கு கிடைக்கும் என்பதால் அரசுத்துறைகள் கவனம் செலுத்த வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • தீபாவளி பண்டிகையையொட்டி சிறுதானிய இனிப்பு வகைகளுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
    • இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி தரணி முருகேசன் 15 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு சொந்தமான நிலத்தில் இயற்கை முறையில் நெல், மிளகாய், பாசிப்பயறு, உளுந்து, திணை, குதிரைவாலி, கேப்பை உள்ளிட்ட சிறுதானிய பயிர்களையும், காய்கறிகள் உள்ளிட்டவற்றையும் பயிரிட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் முன்னோர்கள் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்டு வாழ்ந்து வந்ததன் காரணமாக அவர்கள் 100 வயதை கடந்தும் ஆரோக்கியமாக இருந்து வந்தனர் ஆனால் தற்போது விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் பலவிதமான நஞ்சு கலந்த உணவுகளை உட்கொண்டு வருவதனால் ஆயுள் காலங்கள் குறைந்து 50 முதல் 60 வயதிலே சொற்ப காலகட்டத்திலேயே மரணங்கள் அதிகரித்து வருகிறது

    விவசாயி முருகேசன் தனது பண்ணைகளில் விளைவிக்கும் பொருட்களைக் கொண்டு இயற்கை முறையில் நஞ்சு கலக்காத சிறு தானியங்களை வைத்து இனிப்பு வகைகளை தயார் செய்து தற்போது உள்ள சந்ததிகளை பாதுகாக்க வேண்டுமென முடிவெடுத்துள்ளார்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் இயற்கை அங்காடி நடத்தி விவசாய பண்ணைகளில விளையும் வைக்கும் பொருட்களைக் கொண்டு பல விதமான இனிப்பு வகைகளை பண்டிகை காலங்களில் தயார் செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த அங்காடியில் கம்பு, கேழ்வரகு, சோளம், எள்ளு, திணை, ராகி, வேர்கடலை, எள்ளு, ரவா உள்ளிட்ட சிறு தானியங்களை வைத்து செயற்கைக்கு மாற்றாக இயற்கை முறையில் 7 வகையான லட்டுகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி பாரம்பரிய முறைப்படி எந்த ஒரு கலப்படமும் செய்யாமல் இயற்கை முறையில் பண்ணையில் விளைந்த மாப்பிள்ளை சம்பா அரிசி, ஆத்தூர் கிச்சடி சம்பா அரிசி ஆகியவற்றை வைத்து முறுக்கு, அதிரசம் தயார் செய்து வருகின்றனர்.

    இவைகள் அனைத்தும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களில் இருந்து கலப்படமில்லாமல் உற்பத்தி செய்யப்படுவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் சுவையானதாக இருப்பதால் ராமநாதபுரத்தில் பல்வேறு அரசு அதிகாரிகளும், பொது மக்களும் தீபாவளிக்காக அதிகளவு நண்பர்களுக்கு கொடுப்பதற்காகவும், குடும்பத்திற்கு பயன்படுத்துவதாகவும் ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    மேலும் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களுக்கு என்றே இந்த அங்காடியில் இயற்கை முறையில் தயார் செய்யப்படும் இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடுவதற்கு என்றே ஒரு கூட்டமே இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

    இதற்காக அங்காடியில் முறுக்கு, அதிரசம், லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளை தயார் செய்யும் பணியில் மும்முரமாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி என்றாலே புத்தாடைக்கு அடுத்த படியாக இனிப்புகளை இறைவனுக்கு படையல் செய்து பின்னர் உறவினர்களுக்கும் வழங்கி பரிமாறிக்கொள்வது தொன்று தொட்டு இருக்கும் பழக்கமாக உள்ளதால் அதனை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அதிலும் தற்போதுள்ள காலகட்டத்தில் ரசாயன கலப்படமில்லாமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இனிப்பு வகைகள் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. ராமநாதபுரம் பகுதி பொதுமக்களிடம் இந்த புதிய முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.


    ×