search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட் கம்மின்ஸ்"

    • உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.
    • 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டிலும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் போட்டிகள், அரையிறுதி என விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று (நவம்பர் 19) நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டுள்ளது.

    முன்னதாக 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து நடத்திய இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி சாம்பயன் பட்டத்தை வென்று அசத்தியது.

    2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இறுதிப் போட்டி நடைபெற்ற தினம், மைதானத்தை சுற்றி மேகமூட்டமாக காணப்பட்டதால், முதலில் பந்துவீசி எதிரணியை குறைந்த ரன்களில் சுருட்டி, போட்டியில் வெற்றி பெறலாம் என்று அப்போதைய இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி திட்டமிட்டிருந்தார்.

    எனினும், மைதானத்தின் சூழல் யாரும் எதிர்பாராத வகையில் மாறிப் போக முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 350-க்கும் அதிக ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 250-க்கும் குறைந்த ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து கோப்பையை வெல்லும் கனவை பறிக்கொடுத்தது.

    கடந்தமுறை போன்றே, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் மாலை பொழுதில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீசினால் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிடலாம் என கணித்திருக்கிறார்.

    20 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சூழலில் சவுரவ் கங்குலியின் கணிப்பு தவறியதை போன்றே, பேட் கம்மின்ஸ்-இன் இன்றைய கணிப்பும் தவறி, இந்திய அணி கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • இறுதிப் போட்டியில் எந்த இந்திய வீரர் அச்சுறுத்தலாக இருப்பார்.
    • இந்திய அணி அனைத்து தரப்பிலும் பலம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நாளை (நவம்பர் 19) மதியம் நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில், போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார். அதன் படி, இறுதிப் போட்டியில் எந்த இந்திய வீரர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார், இறுதிப் போட்டியில் பிட்ச் எப்படி இருக்கும் என்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "இந்திய அணி அனைத்து தரப்பிலும் பலம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், தொடரின் சில போட்டிகளில் களமிறங்காமல் அதன் பிறகு சிறப்பாக செயல்பட்ட வீரர் முகமது ஷமி. வலது மற்றும் இடதுகை பேட்ஸ்மன்களுக்கு அவர் சவாலாக விளங்குகிறார். இதே நிலையை இறுதிப் போட்டியிலும் அவர் தொடர்வார், ஆனால் எங்களது வீரர்கள் இந்த களத்தில் அதிகம் விளையாடி உள்ளனர். இதனால் பந்துவீச்சாளர்களை எங்களது பேட்டர்களும் தக்க போட்டியை வழங்கலாம்."

    "அவர்களிடம் ஒவ்வொரு போட்டியிலும் பத்து ஓவர்கள் வரை பந்துவீசக்கூடிய ஐந்து பேர் உள்ளனர். அவர்களது சுழற்பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா எங்களுக்கு கடுமையான சவாலாக இருப்பர். ஆனால், அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று இருப்பதால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர்"

    "பிட்ச்-ஐ பொருத்தவரை அது இரு அணிகளுக்கும் ஒரே மாதிரியே இருக்கும். சொந்த நாட்டில், உங்களின் விக்கெட்டில் விளையாடுவதில் சில சாதகமான விஷயங்கள் உள்ளன. ஆனால், நாங்கள் இங்கு அதிக கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

    • இறுதிப் போட்டியில் மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள்.
    • நிச்சயம், ஒரு சார்பாக இந்திய அணிக்கு மட்டுமே ஆதரவாக இருக்கும்.

    கொல்கத்தா:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. நேற்று முன்தினம் நடந்த முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போடடிக்கு தகுதி பெற்றது.

    நேற்று கொல்கத்தாவில் நடந்த 2-வது அரை இறுதியில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்த ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 212 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 47.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது:-

    இந்த போட்டியில் வெளியே அமர்ந்திருந்ததை விட மைதானத்தில் பேட்டிங் செய்தது எளிதாக இருந்தது என நினைக்கிறேன். தொடக்கத்தில் 2 மணி நேரம் கடினமாக இருந்தது. ஆனால் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கை நோக்கி சிறப்பாக சென்றோம். ஆடுகளம் நிச்சயம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணித்து இருந்தோம்.

    ஆனால் கொஞ்சம் மேக மூட்டம் இருந்ததால் முதலில் பந்து வீசுவதில் ஏமாற்றம் அடையவில்லை. எங்கள் பீல்டிங்கை பற்றி அதிகம் பேசினோம். இந்த தொடரில் ஆரம்பத்தில் எங்களது பீல்டிங் தரமானதாக இல்லை. ஆனால் இந்த போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்தோம். குறிப்பாக 37 வயதான டேவிட் வார்னர் சிறப்பாக செயல்பட்டார்.

    டிராவிஸ் ஹெட், மிடில் ஓவர்களில் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார். ஜாஸ் இங்கிலீஷ் சிறப்பாக பேட்டிங் செய்தார். இரண்டு தரமான சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கட்டுப்பாட்டுடன் விளையாடினார்.

    இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோத இருக்கிறோம். எங்களில் சிலர் இதற்கு முன்பு இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறோம். சில வீரர்கள் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறார்கள்.

    இறுதிப் போட்டியில் மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள். நிச்சயம், ஒரு சார்பாக இந்திய அணிக்கு மட்டுமே ஆதரவாக இருக்கும். ஆனால் அதை சந்தித்து தான் ஆக வேண்டும். அது சவாலாக இருக்கும்.

    2015-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் நான் விளையாடியது என் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான ஒன்று. இந்தியாவில் மற்றொரு இறுதிப் போட்டியில் விளையாடுவதில் ஒரு குழுவாக மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவுடன் மோதுவதில் காத்திருக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த வருட ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • சமீப காலத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி இதுதான் என சேவாக் கூறினார்.

    இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் அவ்வப்போது நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் குறித்த தனது கருத்துக்களை சமூக வலைகள் மூலமாக பகிர்வது வழக்கம். அந்த வகையில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி குறித்து டுவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

    இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது அங்கு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த 16-ம் தேதி துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.



    இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 393 ரன்களை குவிக்க அதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 386 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக ஏழு ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 223 ரன்களை குறித்தது.

    பின்னர் 281 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது எட்டு விக்கெட்டை இழந்து 282 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருந்தது.


    இந்த போட்டி குறித்து சேவாக் கூறியதாவது:-

    என்ன ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. சமீப காலத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி இதுதான். குறிப்பாக வானிலையை கருத்தில் கொண்டு முதல் நாள் முடிவடைவதற்கு சற்று முன்னதாக இங்கிலாந்து டிக்ளேர் அறிவித்தது துணிச்சலான முடிவாகும். ஆனால் கவாஜா இரண்டு இன்னிங்ஸ்களில் அற்புதமாக விளையாடினார். பேட் கம்மின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மிஸ்டர் கூல். அவர் போட்டியை முடித்துக் கொடுத்ததும், அழுத்தமான சூழலில் லயன் உடனான சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தது என இந்த போட்டி நீண்ட நாட்களுக்கு எனக்கு ஞாபகத்தில் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் சரியாக இருக்கும் என்று ரோகித் தெரிவித்து இருந்தார்.
    • ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கம் வெல்வதற்கு ஒரு பந்தயமோ, ஒரு இறுதி ஆட்டமோ மட்டுமே உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் சரியாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

    இதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தொடர் என்று வரும்போது அதில் எத்தனை ஆட்டங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சாம்பியன்ஷிப் என்றால் அதில் ஒரே ஒரு இறுதி ஆட்டம் இருந்தால் தான் சரியாக இருக்கும்.

    ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கம் வெல்வதற்கு ஒரு பந்தயமோ, ஒரு இறுதி ஆட்டமோ மட்டுமே உள்ளது. இந்த ஒரு வெற்றிக்காக பல்வேறு நாடுகளில் சென்று டெஸ்ட் ஆட்டங்களில் வெல்ல வேண்டியிருந்தது. சில ஆட்டங்களில் தோற்று இருந்தாலும் அதில் இருந்து மீண்டும் வந்து இருக்கிறோம்.

    இவ்வாறு கம்மின்ஸ் கூறினார்.

    • நடுவருக்கு எதிராக சுப்மன் கில் சமூக வலைத்தளத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
    • 3-வது நடுவர் முடிவுக்கு முன்னால் வீரர்கள் மற்றும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

    இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் சுப்மான் கில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கேமரூன் க்ரீன் அவரது கேட்சை பிடித்தபோது பந்து தரையில் பட்டதுபோல் இருந்தது. இதனால் 3-வது நடுவர் முடிவுக்கு முன்னால் வீரர்கள் மற்றும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர். சுப்மன் கில்லும் சமூக வலைத்தளத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் உலகின் சிறந்த நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அது சரியான கேட்ச் என்று நினைத்தேன். கிரீன் கேட்ச் பிடித்ததும் அதிகமாக கத்துவார். நாங்கள் வீரர்கள் மட்டுமே. நாங்கள் களத்தில் இருக்கிறோம். எங்களால் அதை சரியாக கூறமுடியாது. எனவே நாங்கள் அதை நடுவரின் கைகளில் விட்டுவிட்டோம். அவர் உலகின் சிறந்த நடுவர் என்பது என்னோட தனிப்பட்ட கருத்து. அது அவுட்டா இல்லையா என்பது அவருக்கு தெரியும்.

    அவருக்கு விதி புத்தகங்கள் தெரியும். அவர் ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் பார்த்திருப்பார். 100 மீட்டர் தொலைவில் இருந்து பெரிய திரையில் பார்க்கும் உணர்ச்சிமிக்க ரசிகர்களை விட அவரது முடிவை நான் ஆதரிக்கிறேன்.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் கூறினார்.

    • பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் கால தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளும் மோதும் 3-வது டெஸ்ட் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே, பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொரில் கடந்த 2 டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்பட்டு வந்தார். ஆனால், குடும்ப விவகாரம் தொடர்பாக பேட் கம்மின்ஸ் திடீரென ஆஸ்திரேலியா சென்றார். 3-வது டெஸ்ட் தொடங்குவதற்குள் கம்மின்ஸ் இந்தியா திரும்பிவிடுவார் என்று முதலில் தகவல் வெளியானது.

    இந்நிலையில் பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் கால தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 3-வது டெஸ்ட்டில் கம்மின்ஸ் களமிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வரும் 1-ம் தேதி நடைபெறும் 3-வது டெஸ்ட்டில் களமிறங்க உள்ளது.

    • மார்ச் 1-ந்தேதி இந்தூரில் தொடங்கும் 3-வது டெஸ்டில் அவர் அணியோடு இணைந்து கொள்வார்.
    • ஒருவேளை அவர் வரவில்லையென்றால் ஸ்டீவ்சுமித் கேப்டனாக பணியாற்றுவார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணி முதல் 2 டெஸ்டிலும் தோற்று பரிதாப நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் நாடு திரும்பியுள்ளார். தனிப்பட்ட காரணமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ளார்.

    மார்ச் 1-ந்தேதி இந்தூரில் தொடங்கும் 3-வது டெஸ்டில் அவர் அணியோடு இணைந்து கொள்வார். ஒருவேளை அவர் வரவில்லையென்றால் ஸ்டீவ்சுமித் கேப்டனாக பணியாற்றுவார்.

    • நான் அவுட்டாகும்போது மட்டும்தான் கோபப்படுவேன்.
    • ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக புஜாரா தீவிரமாக தயாராகிவருகிறார்.

    இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. 2010-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான புஜாரா, இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 சதங்கள் மற்றும் 34 அரைசதங்களுடன் 7014 ரன்களை குவித்துள்ளார்.

    இந்திய டெஸ்ட் அணி பேட்டிங் ஆர்டரில் ராகுல் டிராவிட் ஆடிய முக்கியமான 3-ம் வரிசையில் ராகுல் டிராவிட்டின் இடத்தை நிரப்பியவர் புஜாரா. அப்பேர்ப்பட்ட இடத்தை தனது நேர்த்தியான பேட்டிங் மற்றும் மிகச்சிறந்த பொறுமையாலும் நிரப்பியவர் புஜாரா.

    ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக தீவிரமாக தயாராகிவரும் புஜாரா, பாட் கம்மின்ஸ் பவுலிங்கை எதிர்கொள்வது மிகக்கடினம் என்று கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் அவுட்டாகும்போது மட்டும்தான் கோபப்படுவேன். அவுட்டாகும்போது நான் உச்சபட்ச கோபமடைவேன். ஒவ்வொரு முறை அவுட்டாகும்போதும் எனக்கு கோபம் வரும். ஆஸ்திரேலியாவில் பாட் கம்மின்ஸ் பவுலிங்கை எதிர்கொள்வது மிகக்கடினமாக இருக்கும்.

    என்று புஜாரா கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ், சமகாலத்தின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான பாட் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணிக்காக 47 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 214 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • இந்தியாவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் அத்தொடரில் நிச்சயமாக இடது கை ஸ்பின்னர் ஆஸ்டன் அகர் இருப்பார்.
    • கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருப்பது இந்தியாவுக்கு நல்ல சவாலை கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்ற ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை 2 - 0 (3) என்ற கணக்கில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சொல்லப்போனால் வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெறும் வாய்ப்பை ஆஸ்திரேலியா 90% உறுதி செய்துள்ளது.

    இந்நிலையில் தென்னாபிரிக்காவை தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் உள்ள ஆஸ்திரேலியா இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முயற்சிக்கவுள்ளது.

    சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் இந்தியா 2012-க்குப்பின் கடந்த 10 வருடங்களாக எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை.

    இந்நிலையில் கடந்த வருடம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் விளையாடிய அனுபவம் தற்போதுள்ள ஃபார்ம் ஆகியவற்றை பயன்படுத்தி இம்முறை நிச்சயமாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

    இது பற்றி அத்தொடரில் வென்ற பின் அவர் பேசியது பின்வருமாறு:-

    நாம் எப்போதும் இருக்கப் போவதைப் போலவே எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். இந்த கோடைகாலம் நமக்கு அற்புதமாகவே அமைந்தது. மேலும் இந்த வெற்றியால் நாங்கள் சூழ்நிலைக்கு உட்படுத்திக் கொள்ளும் திறமையை பெற்றுள்ளோம் என்று உணர்கிறேன்.

    அத்துடன் கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருப்பது உண்மையிலேயே இந்தியாவுக்கு நல்ல சவாலை கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அங்கு நாங்கள் ஒண்ணும் கண்ணை மூடிக்கொண்டு போகப் போவதில்லை. குறிப்பாக அடுத்த 12 மாதங்களில் எப்படி விளையாட பார்க்கிறோம் என்பதை பிரதிபலிக்க அடுத்த சில வாரங்களில் தேவையான முடிவுகளையும் புத்துணர்ச்சிகளையும் எடுக்க உள்ளோம்.

    மேலும் இந்தியாவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் அத்தொடரில் நிச்சயமாக இடது கை ஸ்பின்னர் ஆஸ்டன் அகர் இருப்பார். அவரை மேற்கொண்டும் சோதித்து பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் இத்தொடரில் 800 ரன்கள் அடித்த போதும் அவர் சிறப்பாக பந்து வீசினார்.

    அவரைப் போன்றவருக்கு அது எளிதல்ல என்றாலும் அவர் தன்னுடைய வேலையில் சிறப்பாக செயல்பட்டார். மேலும் அங்கு (இந்தியாவில்) மைதானங்கள் சற்று வெடிப்பாகவும் மற்றும் அதிகமாக சுழலும் என்று நம்புகிறேன். அதே சமயம் இந்தியாவில் எப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்காத பிட்ச்களும் இருக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆஸ்திரேலியாவின் ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக உள்ளார் கம்மின்ஸ்
    • அடுத்த 12 மாதங்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதால் இந்த முடிவு எடுத்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ். இவர் டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டனாக உள்ளார். தற்போது பிஞ்ச் ஓய்வு கேட்டுள்ளதால் வரவிருக்கும் தொடர்களில் ஒயிட் பால் அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

    டி20 உலகக் கோப்பை முடிந்துள்ள நிலையில், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் கவனம் செலுத்த முன்னணி அணிகள் தொடங்கிவிட்டன.

    இதற்கிடையில் அடுத்த வருடம் ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன் இன்றுடன் 10 அணிகளும், தாங்கள் தக்கவைத்துக் கொள்ளும், ரிலீஸ் செய்யும் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்.

    இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பேட் கம்மின்ஸ், 2023 ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ''அடுத்த வருட ஐ.பி.எல். தொடரை தவற விடுகிறேன் என்ற கடினமான முடிவை அறிவிக்கிறேன். அடுத்த வருடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வர இருக்கிறது. ஆஷஸ் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட இருப்பதால் அதற்கு போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டியுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், ''கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எனது சுமை குறித்து புரிந்து கொண்டதற்கு நன்றி. திறமையான வீரர்கள், ஸ்டாஃப்களை கொண்ட அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்று நம்புகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    1. ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக வருகிற 17-ந்தேதி முதல் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    2. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    3. பிப்ரவரி- மார்ச்சில் இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில விளையாடுகிறது.

    4. மார்ச்சில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    5. ஜூன்-ஜூலையில் இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது.

    6. அதன்பின் தென்ஆப்பிரிக்கா சென்று ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    7. அதன்பின் இந்தியாவில் மூன்று ஒருநாள், ஐந்து டி20 களில் விளையாடுகிறது.

    8. அதனைத் தொடர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

    • கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
    • சக ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டார்க், ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், நாதன் லயன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    29 வயதான அவர் பிரிட்டிஷ் நாட்டில் பிறந்த 31 வயதான பெக்கி பாஸ்டன் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2020-ல் நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தற்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

    நியூ சவுத் வேல்ஸில் உள்ள பைரான் பே எனும் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் திருமண விழா நடைபெற்றுள்ளது. இதில் கம்மின்ஸ் உடன் கிரிக்கெட் விளையாடி வரும் சக ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டார்க், ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், நாதன் லயன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    கம்மின்ஸ், தனது திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ×