என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WTC"

    • ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.
    • இதில் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

    துபாய்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், பெர்த் டெஸ்ட் போட்டி முடிந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 4-லும் வெற்றி பெற்ற நிலையில் 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    நடப்பு சாம்பியன் தென் ஆப்பிரிக்க அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்கிறது.

    இலங்கை அணி 3-வது இடத்திலும், இந்திய அணி 4-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 5-வது இடத்தில் உள்ளது.

    முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து 6-வது இடத்தில் உள்ளது.

    கடைசி 3 இடங்களில் முறையே வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.

    • இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

    கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 28 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியது.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மெதுவாக பந்துவீசியதற்காக இங்கிலாந்து அணிக்கு 2 புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் 26 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 4வது இடத்தில உள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 36 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • லார்ட்சில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது.
    • அடுத்த 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து நடத்துகிறது.

    ஐ.சி.சி.யின் வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    இந்நிலையில், வரும் 2027, 2029 மற்றும் 2031-ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்பட்டது.

    சமீபத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் திறனை அங்கீகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்தது.

    லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தகது.

    • பவுமா 2023-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்றார்.
    • டெஸ்ட் போட்டியில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

    லண்டன்:

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் பெற்றது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னும், தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 207 ரன் எடுத்தது.

    இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன் இலக்காக இருந்தது. தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டை இழந்து இந்த ரன்னை எடுத்தது. தொடக்க வீரர் மர்க்ராம் 136 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். 27 ஆண்டுகளுக்க பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு ஐ.சி.சி. கோப்பை கிடைத்துள்ளது. கடைசியாக 1998-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்று இருந்தது. அதற்கு பிறகு தற்போது தான் அந்த அணி ஐ.சி.சி. பட்டத்தை வென்றுள்ளது.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா புதிய வரலாறு படைத்தார். அதோடு அவர் கேப்டன் பதவியிலும் புதிய சாதனை நிகழ்த்தினார்.

    பவுமா 2023-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்றார். அவர் தலைமையில் 10 டெஸ்டில் விளையாடி 9-ல் வெற்றி கிடைத்தது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. ஒரு டெஸ்டில் கூட தோற்கவில்லை. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

    அவர் 104 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். 1920-21 ஆண்டுகளில் தோல்வியை தழுவாமல் 8 டெஸ்டில் வெற்றி பெற்றார். பவுமா தோல்வியை சந்திக்காமல் 9 டெஸ்டில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.

    • 11 பேரை தேர்ந்தெடுக்க மிகவும் கடினமாக இருந்தது.
    • என்ன பொறுத்தவரைக்கும் பேட் கம்மின்ஸ் டாப் கிளாஸ் ஆபரேட்டர்.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

    இரண்டு ஆண்டுகள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறாத நிலையில், இன்று விராட் கோலி சிராஜ் உள்ளிட்ட ஏழு பேர் இங்கிலாந்து புறப்பட்டு விட்டனர்.

    இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை இணைத்து ஒரு லெவன் அணியை ரவி சாஸ்திரி அறிவித்து உள்ளார். அந்த அணியில் அஸ்வின், புஜாராவுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை.

    அந்த அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேன், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜடேஜா, அலேக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், முகமது ஷமி.

    11 பேரை தேர்ந்தெடுக்க மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால், அஸ்வின் தலைசிறந்த உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர். அதேபோல் ஹசில்வுட், புஜாராவும் மிரட்டக் கூடியவர்கள். ஆகவே, அது எளிதானது அல்ல.

    என்ன பொறுத்தவரைக்கும் பேட் கம்மின்ஸ் டாப் கிளாஸ் ஆபரேட்டர். முகமது ஷமி வின்டேஜே் போன்றவர். அவர் மேலும் மேலும் சிறந்த ஆட்டத்தை பெற்று வருகிறார். நாம் ஐ.பி.எல். போட்டியில் அதை பார்த்திருப்போம். இதனால் அவருக்கு அணியில் இடம் என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

    • ஆஸ்திரேலியாவை விட இந்திய ரசிகர்களே அதிகமாக இருப்பார்கள்.
    • இது சிறப்புமிக்க ஜாலியான ஒரு போட்டியாக இருக்கப்போகிறது.

    லண்டன்:

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க உள்ள லண்டன் ஓவலில் குறிப்பிட்ட பகுதியில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார்.

    2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் வருகிற 7-ந்தேதி (மாலை 3மணி) தொடங்குகிறது. இதில் புள்ளிப் பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையொட்டி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணி பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆயத்தமாகி வருகிறது.

    இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவன்சுமித் நேற்று அளித்த ஒரு பேட்டியில், 'டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க உள்ள ஓவலில் போக போக ஆடுகளத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு கொஞ்சம் சுழற்பந்து வீச்சு எடுபட வாய்ப்புள்ளது. இந்தியாவில் நாங்கள் எந்த மாதிரி சவாலை எதிர்கொண்டோமோ அதே போன்று இங்கும் சந்திக்க நேரிடலாம். ஒட்டுமொத்தத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு அற்புதமான ஒரு இடம் ஓவல். நிலைத்து நின்று விட்டால் பேட்டிங் செய்வதற்கு அருமையான இடம். இதே போல் வேகத்துடன் கூடிய பவுன்சும் ஓரளவு இருக்கும்' என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், 'இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதுவது உற்சாகம் அளிக்கிறது. நிச்சயம் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் திரள்வார்கள். அனேகமாக ஆஸ்திரேலியாவை விட இந்திய ரசிகர்களே அதிகமாக இருப்பார்கள். இது சிறப்புமிக்க ஜாலியான ஒரு போட்டியாக இருக்கப்போகிறது. அதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்' என்றார்.

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். கணுக்கால் காயத்தால் பாதியில் ஒதுங்கிய அவர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகிக்கிறார். அவர் கூறுகையில், 'எனது உடல்தகுதி இப்போது நன்றாக இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் முழு உடல்தகுதியை அடைவதற்கான பயிற்சியை மேற்கொள்வேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவேன் என்று நம்புகிறேன்' என்றார்.

    • இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வர்ணனையாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
    • ஆங்கில வர்ணனைக்கு ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் மற்றும் நாசர் ஹுசைன் நியமிக்கப்பட்டனர்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

    தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வர்ணனையாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

    இதில் ஆங்கில வர்ணனைக்கு ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோரும், ஹிந்தி வர்ணனைக்கு ஹர்பஜன் சிங், சவுரவ் கங்குலி, தீப் தாஸ்குப்தா மற்றும் எஸ். ஸ்ரீசாந்த் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ் மொழி வர்ணனைக்கு யோ மகேஷ், எஸ்.ரமேஷ், எல்.பாலாஜி மற்றும் எஸ்.ஸ்ரீராம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • நாங்கள் இந்திய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடினோம்.
    • அவர்கள் எப்படி விளையாடுவர்கள் எப்படி பந்து வீசுவார்கள் என்பது குறித்த நுணுக்கங்களை கற்று வைத்துள்ளோம்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 7-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் லாபுசேன் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதில் மும்முரமாக இருந்தபோதும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கு தயாராகி வந்தார். கடந்த சில மாதங்களாக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி சிறப்பான பார்மில் உள்ளார்.

    இந்நிலையில் இந்திய பந்து வீச்சாளர்கள் சவாலாக இருப்பார்கள் எனவும், கவுண்டி கிரிக்கெட் உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுசேன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இயற்கையாகவே, ஆஸ்திரேலியாவுக்காக நம்பர் 3 பேட்டிங் செய்யும் எவருக்கும் பொறுப்பு இருக்கும். 2019-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய போதும் எனக்கு இந்த பொறுப்பு இருந்தது. ரன்கள் எடுப்பது எனது வேலை. நான் ரன்கள் எடுக்கவில்லை என்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் என் வேலையைச் செய்ய வேறொருவரைக் தேர்வு செய்து விடும். இந்த நிலை எப்போதுமே மாறாது.

    என்னால் முடிந்த அளவு அதிக ஆட்டங்களில் ரன்களை குவிப்பதற்கும் பங்களிப்பதற்கும் பல வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

    இங்கிலாந்து மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் முகமது சமி, சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ளது. ஓவல் மைதானத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் சவாலாக இருப்பார்கள். நாங்கள் இந்திய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடினோம். அவர்கள் எப்படி விளையாடுவர்கள் எப்படி பந்து வீசுவார்கள் என்பது குறித்த நுணுக்கங்களை கற்று வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கவுண்டி கிரிக்கெட்டில் 28 வயதான அவர் எட்டு இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் மற்றும் மொத்தம் 504 ரன்கள் எடுத்தார்.

    • சுப்மான் கில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்ப்பு
    • ஆஸ்திரேலியாவில் ஸ்டார்க், ஹேசில்வுட் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர்

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா முடிந்த கையோடு இந்திய அணியில இடம் பிடித்துள்ள வீரர்கள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளனர். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் சாம்பியனுக்காக பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த ஆட்டம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த முறை இந்தியா நியூசிலாந்திடம் தோல்வியடைந்து சாம்பியன் வாய்ப்பை இழந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்த முறை இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் சமீபகாலமாக அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் அசத்தினார்.

    ஆனால், அவர் இந்த விசயத்தில் ஆட்டம் கண்டுவிடுவார் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் கிரேக் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிரேக் சேப்பல் கூறியதாவது:-

    நான் சுப்மான் கில்லை ஆஸ்திரேலியாவில் வைத்து பார்த்து இருக்கிறேன். இந்தியாவில் உலக கிரிக்கெட்டில் மற்ற அணிகளை விட சிறப்பாக இருக்க காரணம், அவர்கள் ஏராளமான ஆட்டங்களில் விளையாடி முன்னேற்றம் அடைகிறார்கள். அவர்கள் அதிக அளவில் வெளிநாட்டு தொடரில் விளையாடுவதை உறுதி செய்கிறார்கள். ஆகவே, சுப்மான் கில் வெளிநாட்டில் ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    அவர் இதற்கு முன் இங்கிலாந்து மண்ணில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியா சிறப்பாக பந்து வீசினால், இங்கிலாந்து சூழ்நிலையில் எந்தவொரு பேட்ஸ்மேனும் திணறுவதுபோல் அவரும் திணறுவார். மிட்செல் ஸ்டார்க் போன்று கூடுதல் வேகம் மூலம் சுப்மான் கில்லை திணறடிக்க முடியும். கூடுதல் வேகம் சிறந்த பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்யும். அதேபோல் எக்ஸ்ட்ரா பவுன்சரும் சிறந்த வீரர்களை ஆட்டமிழக்கச் செய்யும்.

    ஹேசில்வுட் உடற்தகுதி பெற்று விளையாடினால், அது சுப்மான் கில்லுக்கு தொந்தரவு கொடுப்பார். ஹேசில்வுட் விளையாடவில்லை என்றால், போலந்து விளையாட வாய்ப்புள்ளது. அவரும் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. அவர் சரியான லைனில் பந்து வீசுகிறார். இங்கிலாந்து சூழ்நிலையில் அவரது பந்து வீச்சு சிறந்த லெந்த் ஆகவும் இருக்கும்.

    சுப்மான் கில் தொடக்கத்தில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் செல்லும் பந்து மீது கவனம் செலுத்துவார். பந்து சற்று பவுன்சரானால், க்ரீஸ் உள் நின்று விளையாடுவார். நான் பார்த்த இந்த சிறிய விசயத்தை ஆஸ்திரேலியாவை அறிந்திருக்க வேண்டும் என்றார்.

    • ஆல் ரவுண்டர் பணியில் கேமரூன் க்ரீன் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு
    • ஆஸ்திரேலியாவின் முதல் இலக்கு விராட் கோலியாகத்தான் இருப்பார்

    கிரிக்கெட்டில் உலகில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை பற்றிதான் பேசப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலம் வாய்ந்த அணி என்பதால் போட்டி விறுவிறுப்பில் பஞ்சம் இருக்காது. ஸ்லெட்ஜிங், மோதல், முறைத்தல் போன்றவைகளை பார்க்கலாம்.

    மைதானத்தில் எலியும் பூனையாக மோதிக்கொண்டாலும் வெளியில் நண்பர்களாக ஒருவரை ஒருவர் பாராட்டுவது நடைபெற்றுதான் வருகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடிய கேமரூன் க்ரீன் ஆஸ்திரேலியா அணியில் உள்ளார். சிறந்த ஆல்ரவுண்டர் என்பதால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுப்பார் என்பது உறுதி.

    இந்த நிலையில் விராட் கோலி குறித்து கேமரூன் க்ரீன் கூறுகையில் ''விராட் கோலி, மிகப்பெரிய தருணம், அதாவது மிகப்பெரிய போட்டியில் முன்னணி வீரராக உயர்ந்து நிற்க எப்போதுமே முயற்சி மேற்கொள்வார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உண்மையிலேயே மிகப்பெரிய தருணம். ஆகவே, நான் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    களத்தில் இறங்கும் போது டெஸ்ட் கிரிக்கெட் போன்று ஏதும் இல்லை. பதற்றமான நிலையுடன் அதிக டென்சன் உண்டாகும். அதை கையாளத் தெரிந்த சிறந்த வீரர் சிறந்த வீரராக திகழ்வார்.

    ஆஸ்திரேலியாவுக்கு விராட் கோலி, சுப்மான் கில் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுதினம் லண்டனில் நடைபெற உள்ளது.
    • இந்தப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுதினம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.

    இந்திய அணியில் ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    இந்திய அணியின் பேட்டிங்கில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோரை தான் நம்பி உள்ளது. பந்துவீச்சில் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக அணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் மைக்கேல் நெசர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    • அஸ்வினை எடுக்காமல் விட்டுள்ளது ஆச்சரியமாக இருப்பதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
    • சூழ்நிலையை பார்த்து இந்த முடிவை எடுத்ததாக பந்து வீச்சு பயிற்சியாளர் தெரிவித்தார்.

    லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டியில் இந்திய அணியில் அனுபவ வீரரும், நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை. அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அணியின் தேர்வு குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து விமர்சனங்களையும் கண்டனத்தையும் பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.

    அஸ்வினை எடுக்காமல் விட்டுள்ளது ஆச்சரியமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, "இந்த போட்டியில் முதல் இன்னிங்சுக்கு தகுந்தாற்போன்ற பவுலிங் அட்டாக்கை மட்டும் தேர்வுசெய்து இந்திய அணி தவறு செய்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் நிறைய இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்களுக்கு ஜடேஜாவை விட அஸ்வின் சவாலாக இருந்திருப்பார். இருந்தும் இந்திய அணி அவரை அணியில் எடுக்காமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது" என்றார்.

    இந்நிலையில், அஸ்வினை அணியில் சேர்க்காதது ஏன்? என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் ஹம்ப்ரே விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், 'அஸ்வின் போன்ற சாம்பியன் பந்துவீச்சாளரை அணியில் இருந்து நீக்குவது மிகவும் கடுமையான முடிவு. காலையில் ஆடுகளத்தின் தன்மை, சூழ்நிலையை பார்க்கும்போது கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். கடந்த காலங்களில் இந்த முடிவு எங்களுக்கு சாதகமாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆனால், கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தால் பலன் அளித்திருக்கும் என நீங்கள் நினைக்கலாம் ஆனால், ஆடுகள சூழ்நிலையை பார்த்து நாங்கள் இந்த முடிவு எடுத்தோம்' என்றார்.

    ×