search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்றம்"

    • நாட்டின் மொத்த வேட்பாளர்களில் 26 சதவீத வேட்பாளர்கள் காங்கிரஸ் வேட்பாளர்களாக இருந்தனர்.
    • கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 421 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது.

    காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று இப்போதே பலரும் ஆய்வு செய்ய தொடங்கி விட்டனர். மாநிலம் வாரியாக இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் அடிப்படையில் ஆய்வு நடந்து வருகிறது.

    இதில் காங்கிரஸ் கட்சி மிக குறைவான இடங்களில் போட்டியிடுவதை அரசியல் ஆய்வாளர்கள் அனைவரும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுத்து காங்கிரஸ் குறைவான தொகுதிகளில் போட்டியிடுவது காங்கிரஸ் தலைவர்களின் தேர்தல் வியூகமாக இருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது.

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி மிக மிக குறைவான தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதால் அதுவே விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது. மிக குறைவான இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி விட்டு மத்தியில் எப்படி ஆட்சியை பிடிக்க முடியும் என்ற கேள்வியை பல்வேறு தரப்பினரும் எழுப்பி வருகிறார்கள்.

    1951-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 479 இடங்களிலும் போட்டியிட்டது. நாட்டின் மொத்த வேட்பாளர்களில் 26 சதவீத வேட்பாளர்கள் காங்கிரஸ் வேட்பாளர்களாக இருந்தனர். 1957-ல் 490 இடங்களில், 1962-ல் 488 இடங்களிலும், 1967-ல் 516 இடங்களிலும், 1971-ல் 441 இடங்களிலும், 1977-ல் 492 இடங்களிலும், 1980-ல் 492 இடங்களிலும், 1984-ல் 517 இடங்களிலும் காங்கிரஸ் போட்டியிட்டது.

    1989-ம் ஆண்டு தேர்தலில் 510 இடங்களிலும், 1991-ல் 500 இடங்களிலும், 1996-ல் 529 இடங்களிலும், 1998-ல் 477 இடங்களிலும், 1999-ல் 453 இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை களம் இறக்கியது. 2004-ம் ஆண்டு தேர்தலில் 417 வேட்பாளர்களும், 2009-ம் ஆண்டு தேர்தலில் 440 வேட்பாளர்களும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டனர்.

    மோடி தேசிய அரசியலுக்கு பாரதிய ஜனதாவை எழுச்சியுற செய்த 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 464 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 421 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது.

    ஆனால் இந்த தடவை காங்கிரஸ் கட்சி 328 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. மீதமுள்ள அனைத்து இடங்களிலும் தோழமைக் கட்சிகளுக்கு விட்டு கொடுத்து விட்டது. பாரதிய ஜனதாவை ஒன்று சேர்ந்து வீழ்த்த வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் மாநில கட்சிகளுக்கு அதிக இடங்களை விட்டுக் கொடுத்து இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சொல்கிறார்கள்.

    பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற லட்சியத்தின் காரணமாகவே காங்கிரஸ் வரலாறு காணாத அளவுக்கு வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைத்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த தேர்தலை விட இந்த தடவை 93 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி குறைவாக போட்டியிடுகிறது.

    நாடு முழுவதும் 7 கட்ட தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கையுடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் எண்ணிக்கையை ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்த்த போது காங்கிரஸ் மிக மிக பரிதாப நிலையில் இருப்பது போல தோற்றம் அளிக்கிறது. அதாவது மொத்த வேட்பாளர்களில் 5 சதவீத அளவுக்கு கூட காங்கிரஸ் வேட்பாளர்கள் இல்லை.

    ஆனால் இதை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒரு குறையாக கருதவில்லை. மாறாக தேர்தல் வியூகமாக சொல்கிறார்கள். பாரதிய ஜனதாவை வீழ்த்த தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர்.

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாமல் இருந்தால் சரி.

    • அரியானா சட்டசபையின் பதவிக் காலம் வருகிற அக்டோபர் மாதம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
    • இந்திய தேசிய லோக் தளம், அரியானா ஹோகித் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினா் உள்ளனா்.

    சண்டிகர்:

    அரியானாவில் முதல்-மந்திரி நாயப் சிங் சைனி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கடந்த 8-ந்தேதி வாபஸ் பெற்றனா். அத்துடன், முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

    90 உறுப்பினா்களைக் கொண்ட அரியானா பேரவையில் தற்போது 88 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா். பா.ஜ.க.வுக்கு 40, காங்கிரசுக்கு 30, ஜே.ஜே.பி. கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா். இந்திய தேசிய லோக் தளம், அரியானா ஹோகித் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினா் உள்ளனா். இதுதவிர 6 சுயேச்சைகள் உள்ளனா்.

    அரியானாவில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜே.ஜே.பி. கடந்த மாா்ச் மாதம் விலகிய நிலையில், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்தது. அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி நாயப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் பா.ஜ.க. அரசுக்கான ஆதரவை 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் திரும்பப் பெற்றதால், அக்கட்சிக்கு 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையில் 2 இடங்கள் அக்கட்சிக்கு குறைவாக உள்ளன.

    பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வரப்பட்டால், அதை ஆதரிக்க தயாா் என்று ஜே.ஜே.பி. தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில், ஜே.ஜே.பி. தலைவரும் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான துஷ்யந்த் சவுதாலா, மாநில கவனர்னருக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    அரியானா பா.ஜ.க. அரசு பெரும்பான்மையை இழந்திருப்பது தெளிவாகியுள்ளது. தற்போதைய அரசியல் குழப்பத்தை கருத்தில் கொண்டு, அரசமைப்புச் சட்டப் பிரிவு 174-ன்கீழ் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    பா.ஜ.க. அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத பட்சத்தில், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பெரும்பான்மையை இழந்துவிட்ட பா.ஜ.க. அரசு, தாா்மீக அடிப்படையில் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான பூபிந்தா் சிங் ஹூடா வலியுறுத்தி உள்ளாா்.

    மேலும், மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

    இதற்கிடையே முதல்-மந்திரி நாயப் சிங் சைனி கா்னாலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. கடந்த மாா்ச் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றோம். நேரம் வரும்போது, மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் முதல்-மந்திரி மனோகா் லால் கட்டார் கூறுகையில், "பா.ஜ.க.வுடன் பல எம்.எல்.ஏ.க்கள் தொடா்பில் இருப்பதால் கவலைப்பட எதுவுமில்லை" என்றாா்.

    ஜே.ஜே.பி. கட்சி எம்.எல்.ஏ.க்களில் 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவளிப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த 4 எம்.எல்.ஏ.க்களும் நேற்று ரகசியமாக முன்னாள் முதல்-மந்திரி கட்டாரை சந்தித்துப் பேசினார்கள். எனவே அரியானா பா.ஜ.க. அரசுக்கு ஆபத்து ஏற்படாது என்று கூறப்படுகிறது.

    அரியானா சட்டசபையின் பதவிக் காலம் வருகிற அக்டோபர் மாதம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகிலேஷ் யாதவ் களம் இறங்கி உள்ளதால் போட்டி கடுமையாகி உள்ளது.
    • பாரதிய ஜனதா மீண்டும் தனது பலத்தை நிரூபிக்குமா? என்பது ஜூன் மாதம் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையில் தெரிந்து விடும்.

    லக்னோ:

    பாரதிய ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்து வரும் உத்தரபிரதேசத்தில் அம்மாநில முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான அகிலேஷ்யாதவ் பாராளுமன்ற தேர்தலில் நேரடியாக களம் இறங்கியது அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது. அங்குள்ள கண்ணூஜ் தொகுதியில் அவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    முதலில் இத்தொகுதியில் அகிலேஷ் யாதவ்வின் சகோதரி மகன் தேஜ் பிரதாப் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது மாமாவுக்காக ( அகிலேஷ்யாதவ்) தொகுதியை விட்டு கொடுத்தார். இதனால் கண்ணூஜ் நட்சத்திர தொகுதியாக மாறியது. இத்தொகுதியில் அவர் ஏற்கனவே 2000, 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்தார். கண்ணூஜ் தொகுதியை பொறுத்த

    வரை அகிலேஷ் யாதவின் குடும்ப தொகுதியாக இருந்து வருகிறது.

    இத்தொகுதியில் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் ஒருமுறையும், அகிலேஷ் 3 முறையும், அவரது மனைவி டிம்பிள் யாதவ் ஒரு முறையும் வெற்றி வாகை சூடி உள்ளனர். இந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்ரத் பதக் உள்ளார். இம்முறையும் இவர் மீண்டும் போட்டியிடுகிறார். 2014-ம் ஆண்டு தேர்தலில் இவரை டிம்பிள் யாதவ் 19,907 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதற்கு பழி வாங்கும் வகையில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிம்பிள் யாதவைவிட 12,353 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று சுப்ரத் பதக் வெற்றி பெற்றார்.

    இம்முறை டிம்பிள் யாதவ் தொகுதி மாறி போட்டியிடுகிறார். அவரது இடத்தை நிரப்பும் வகையில் அவரது கணவர் களத்தில் குதித்துள்ளார்.

    இந்த முறை சமாஜ்வாடி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து இந்தியா கூட்டணி சார்பில் அகிலேஷ் நிற்பதால் கண்டிப்பாக எங்களுக்கு தான் வெற்றி என அக்கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அதே சமயம் பாரதிய ஜனதாவை பொறுத்தவரை இது ஒரு கவுரவ பிரச்சனை. எப்படியும் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அகிலேஷ் யாதவை வீழ்த்துவோம் என பாரதிய ஜனதாவினர் கூறி உள்ளனர். தனது ஆஸ்தான தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகிலேஷ் யாதவ் களம் இறங்கி உள்ளதால் போட்டி கடுமையாகி உள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவது போன்ற சூழ்நிலை கண்ணூஜ் தொகுதியில் நிலவுவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இத்தொகுதியில் சுமார் 19 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 லட்சம் பேர் முஸ்லீம்கள், யாதவர்கள், பிராமணர்கள் தலா 2.5 லட்சம் பேர் உள்ளனர். கண்ணூஜ்ஜில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் தலித் வாக்குகள் மிக முக்கியமாக உள்ளது. தலித்துகள் சுமார் 4 லட்சம் பேர் உள்ளனர். இவர்களை தவிர ராஜபுத்திரர்கள், வைசியர்கள், மற்றும் குர்மி சமூகத்தினர் கணிசமானவர்கள் வசித்து வருகின்றனர்.

    இத்தொகுதியில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி தனது கட்சி சார்பில் இம்ரான் பின் ஜாபரை நிறுத்தி உள்ளார்.

    இவர் தலித் ஓட்டுகள் மட்டுமல்லாது முஸ்லீம் ஓட்டுகளையும் பிரிப்பார் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. வாக்காளர்கள் மத்தியில் போதிய அளவு வேலை வாய்ப்பு இல்லை என்ற எண்ணம் உள்ளது. ஏராளமானவர்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். இது இத்தேர்தலில் பெரும் சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. கண்ணூஜ் தொகுதியில் இம்முறை பாரதீயஜனதா- சமாஜ்வாடி, கட்சிகளுடன் ஓட்டு வங்கி வைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியும் பலப்பரீட்சையில் இறங்கி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியை பொறுத்த வரை இத்தொகுதியில் இதுவரை வென்றதாக வரலாறு இல்லை. இதனால் பதக்-யாதவ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி 4-வது முறையாக அகிலேஷ் யாதவ் சாதிப்பாரா? அல்லது பாரதிய ஜனதா மீண்டும் தனது பலத்தை நிரூபிக்குமா? என்பது ஜூன் மாதம் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையில் தெரிந்து விடும்.

    • கடந்த 10 ஆண்டுகளில் 22 பெரிய தொழிலதிபர்களுக்காக மோடி உழைத்தார்.
    • அங்கன்வாடி பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம் நர்சாபூர் மற்றும் ஐதராபாத் சரூர் நகர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது :-

    இந்திய அரசியலமைப்பு ஒரு புத்தகம் மட்டும் அல்ல. ஏழைகளின் இதய துடிப்பு. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டத்தை அதிரடியாக மாற்றுவோம்.

    இட ஒதுக்கீட்டை ஒழிப்போம் என்று பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் கூறி வருகிறது. அம்பேத்கர், மகாத்மா காந்தி, நேரு ஆகியோர் அரசியல் சட்டத்திற்காக போராடினார்கள்.

    அவர்கள் உருவாக்கிய அரசியல் சட்டத்தை மாற்றி அவர்களின் தியாகத்தை வீணாக்குவது தான் பா.ஜ.க.வின் யோசனையாக தற்போது இருக்கிறது. அரசியல் சாசனத்தை காங்கிரஸ் முன் நின்று பாதுகாக்கும்.

    தற்போது இதற்காகத்தான் தேர்தல் போர் நடந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் 22 பெரிய தொழிலதிபர்களுக்காக மோடி உழைத்தார். அவர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். இந்த நிதி மூலம் நாடு முழுவதும் 24 ஆண்டுகளுக்கு தேவையான வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்திருக்கலாம்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம். நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் சட்டப்படி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஊதியம் ரூ. 250-ல் இருந்து 400 ஆக உயர்த்தப்படும்.

    அங்கன்வாடி பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படும். கோடீஸ்வரர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி அரசு கோடீஸ்வரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றியது.

    நாங்கள் ஏழைகளை கோடீஸ்வரர்களாக மாற்றுவோம். தொழிலதிபர்களின் லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் தள்ளுபடிக்கு பதில் சொல்லாதவர்கள் ஏழைகளுக்கு நல்லது செய்வீர்களா என எங்களை பார்த்து கேள்வி கேட்கின்றனர். நாங்கள் எப்போதும் ஏழைகளின் பக்கம் தான் நிற்கிறோம். ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் இந்தியா முழுவதும் 30 லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இருவரும் அரசு பஸ்சில் பயணம் செய்தனர்.

    ராகுல் காந்தி நின்றபடியே அரசு பஸ்சில் பயணம் செய்தார். அவர் பெண்களுக்கான இலவச பஸ் பயண வசதி குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். ராகுல் காந்தி பஸ் பயணத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாக்குப்பதிவு அன்று வாக்களித்துவிட்டு வரும் நபர்களுக்கு தனது கடையில் இலவசமாக முடி வெட்டுவேன்.
    • சலூன் கடைக்காரரின் இந்த வினோத அறிவிப்பு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் ஒருவர் ஓட்டு போடுபவர்களுக்கு இலவசமாக முடி வெட்டப்படும் என அறிவித்துள்ளார்.

    விசாகப்பட்டினம் நகரில் உள்ள ஆர்.கே. சலூன் உரிமையாளர் ராதாகிருஷ்ணன். வாக்குப்பதிவு அன்று வாக்களித்துவிட்டு வரும் நபர்களுக்கு தனது கடையில் இலவசமாக முடி வெட்டுவேன்.

    பொதுமக்கள் ஓட்டு போட்டதும் எனது கடைக்கு வந்து இலவசமாக முடி வெட்டிக் கொள்ளலாம். மேலும் விசாகப்பட்டினத்தில் முத்தியாலம்மா கோவில் அருகிலுயும் எனக்கு மற்றொரு கடை உள்ளது. அங்கு சென்று பொது மக்கள் இலவசமாக முடி வெட்டிக் கொள்ளலாம்.

    இந்த சலுகையை பெற வாக்கு அளித்ததற்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும். பொதுமக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    சலூன் கடைக்காரரின் இந்த வினோத அறிவிப்பு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கேரள மாநில மக்களவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது.
    • கட்சி தலைவர்களின் இந்த கணக்கீடு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினரின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடது சாரி ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

    இதனால் கேரள மாநில மக்களவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் நேரடியாக களம் கண்ட தொகுதிகளில் அந்த கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.

    ஏற்கனவே 19 தொகுதிகள் தங்களது கூட்டணியின் வசம் உள்ள செல்வாக்குடன் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் களம் கண்டது. பாரதிய ஜனதாவோ முதன்முறையாக வெற்றி பெற்று கேரளாவில் கால்பதித்து விட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது.

    மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி, தேசிய அளவில் கூட்டணியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து களம் கண்டது. பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் இந்த 3 கட்சிகளும் போட்டியிட்டன.

    ஏற்கனவே 19 தொகுதிகளை தன் வசம் வைத்துள்ள காங்கிரஸ் மற்றும் மாநிலத்தின் ஆளும் கட்சி கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை எதிர்த்து களம் கண்ட பாரதிய ஜனதா, அந்த கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெறும் வகையில் பிரபலங்களை வேட்பாளர்களாக களமிறக்கியது.

    இதன் காரணமாக கேரள மாநில மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் கேரளாவில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம்? கடந்த தேர்தலை விட தற்போது எத்தனை வாக்குகள் அதிகமாக கிடைக்கும்? வாக்கு சதவீதம் எவ்வளவு உயரும்? உள்ளிட்ட விவரங்களை பாரதிய ஜனதா கணக்கிட்டு உள்ளது.

    அந்த விவரங்கள் தேர்தல ஆய்வு கூட்டத்தில் கணக்கிடப்பட்டு இருக்கிறது. மேலும் தங்களின் கணக்கீடு விவரங்களை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கேரளா மாநிலத்தில் இதற்கு முன்பு நடந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 31.80 வாக்குகள் கிடைத்தன. இந்த முறை 41.44 லட்சம் வாக்குகள் கிடைக்கும். கேரளாவில் பாரதிய ஜனதாவின் வாக்கு சதவீதம் 22 சதவீதமாக அதிகரிக்கும்

    திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் 4 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார்கள். மத்திய மந்திரி முரளீதரன் போட்டியிட்ட அட்டிங்கல் தொகுதியிலும், ஏ.கே அந்தோணியின் மகன் அனில் ஆன்டனி போட்டியிட்ட பத்தினம்திட்டா தொகுதியிலும் பாரதிய ஜனதா வெற்றிபெறும்.

    அதேபோல் ஆலப்புழா தொகுதியில் போட்டியிடும் ஷோபா சுரேந்திரனும் வெற்றி பெறுவார். கேரளாவில் மொத்தம் 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறும். திருவனந்தபுரத்தில் கடந்த முறை 3,16,000 வாக்குகள் பெற்றிருந்தோம். இந்த முறை 4 லட்சம் வாக்குகளை பெறுவோம். நெய்யாற்றின்கரை தொகுதியில் பாரதிய ஜனதா இரண்டாவது இடத்தை பிடிக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    கட்சி தலைவர்களின் இந்த கணக்கீடு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினரின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கட்சி பிரமுகர்கள், இந்த ஸ்ட்ராங் ரூமை தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.
    • விழுப்புரத்தில் இடி மின்னலுடன் பெய்த திடீர் மழையால், கேமராவில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பாராளுமன்ற தனி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரில் வைக்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இது தவிர அந்த வளாகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு விழுப்புரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பழனி தினமும் சென்று கண்காணித்து, கையொப்பமிட்டு வருகிறார். இது தவிர அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முக்கிய கட்சி பிரமுகர்கள், இந்த ஸ்ட்ராங் ரூமை தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் இயங்கி வந்த சி.சி.டி.வி. கேமராக்கள் இன்று காலை 7.30 மணிக்கு பழுதானது. இதனால் அங்கு அமைக்கப்பட்ட டி.வி.க்களில் சி.சி.டி.வி. கேமரா பதிவு ஒளிபரப்பாகவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடங்கள் போராடி, சி.சி.டி.வி. கேமராக்களை சரி செய்தனர்.

    விழுப்புரத்தில் இடி மின்னலுடன் பெய்த திடீர் மழையால், சி.சி.டி.வி. கேமராவில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இத்தகவல் அறிந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் ஸ்ட்ராங் ரூம் வளாகத்திற்குள் குவிந்தனர். இதனால் இப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.

    கடந்த 3-ந் தேதியன்று இதே இடத்தில் சி.சி.டி.வி. கேமராவில் பழுது ஏற்பட்டு சுமார் ஒரு மணிநேரம் கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதற்கு மின் கோளாறு மட்டுமே காரணம் என்றும், வாக்குப் பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதெனவும், கலெக்டர் தெரிவித்தார். மேலும், இது போன்ற பிரச்சனைகள் இனி ஏற்படாதெனும், அதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஆனால், இன்று காலையில் ஸ்ட்ராங் ரூமில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் திடீரென இயங்காததால் அரசியல் கட்சியினரிடையே பல்வேறு கேள்வி களையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற இதுவே பெரிய ஆதாரமாக அமையும் என நம்புகிறேன்.
    • வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கள ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

    இந்த கட்சியின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் திருமாவளவன் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளார்.

    சித்தூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்த திருமாவளவன் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாநிலத் தலைவர் சர்மிளாவை சந்தித்தோம் ஆனால் கூட்டணி அமையவில்லை.

    விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவை தெரிவித்துள்ளோம்.

    தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளது.

    ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டும் ஆதரவு தெரிவித்து வருகிறோம்.

    வருகிற 9-ந் தேதி நெல்லூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராஜுவை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறேன். 11-ந் தேதி மும்பை சென்று சிவசேனா கட்சி வேட்பாளர் அணில் தயா சாயை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

    மோடியை 3-வது முறையாக பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதால் இந்திய அளவில் பா.ஜ.க. மீது அதிருப்தி மேலோங்கி உள்ளது.

    இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற இதுவே பெரிய ஆதாரமாக அமையும் என நம்புகிறேன்.வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கள ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க.வும் ஜனநாயக ஜனதா கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன.
    • 3 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்ததாக தகவல்.

    சண்டிகர்:

    அரியானாவில் ரந்திர் கோலன், தரம்பால் கோந்தர், சோம்பிர் சிங் சவான் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு வழங்கி வந்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்று, காங்கிரசுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான பூபேந்திர சிங் ஹூடா முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் இதை தெரிவித்தனர்.

    2019 சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 40 இடங்களிலும், மாநிலக் கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. 90 தொகுதிகள் உள்ள அரியானாவில், ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க.வும் ஜனநாயக ஜனதா கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன.

    மனோகர்லால் கட்டார் முதல்வராகவும், துஷ்யந் சவுதாலா துணைமுதல்வராகவும் பதவியேற்றனர் கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜனநாயக ஜனதா கட்சி விலகுவதாக துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்தார். இதையடுத்து மனோகர்லால் கட்டார் மாற்றப்பட்டு, நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார்.

    இந்தச்சூழலில் தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்ததாக தகவல் வெளியானதால் சூழப்பம் ஏற்பட்டது. ஆனால் தங்களுக்கு முழு ஆதரவு இருப்பதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் மாயாவதியை விடவும் ஆகாஷ் ஆனந்தின் பங்கே அதிகம்.
    • ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை மாயாவதி தெரிவிக்கவில்லை.

    லக்னோ:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடந்த ஆண்டு இறுதியில் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் அறிவித்து இருந்தார் .

    அதன்படி கடந்த ஒரு வருடமாக தீவிரமாக செயல்பட்டு வந்தார் ஆகாஷ் ஆனந்த். பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் மாயாவதியை விடவும் ஆகாஷ் ஆனந்தின் பங்கே அதிகம்.

    இந்த நிலையில் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக் கொள்வதாக மாயாவதி அறிவித்து உள்ளார். அவர் 'அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை' கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

    என்ன காரணத்துக்காக ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை மாயாவதி தெரிவிக்கவில்லை.

    கடந்த மாத இறுதியில், தேர்தல் கூட்டத்தில் ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி, நடத்தை விதிகளை மீறியதாக ஆகாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீதாபூர் பேரணியில் பேசிய ஆகாஷ் ஆனந்த், "இந்த அரசாங்கம் ஒரு புல்டோசர் அரசு, துரோகிகளின் அரசு. ஆப்கானிஸ்தானில் தலிபான் போன்று பா.ஜ.க. அரசாங்கத்தை நடத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.16,000 கோடி எடுத்த திருடர்களின் கட்சி பா.ஜ.க." என்று கடுமையாக விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் காந்தி பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது.
    • காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என்பது இப்போது அம்பலமாகிவிட்டது.

    புதுடெல்லி:

    அமேதி தொகுதியில் பா.ஜ.க.வேட்பாளராக போட்டியிடும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி நேற்று நடைபெற்ற பேரணியின்போது பேசியதாவது:-

    இதுவரை நான் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். ஆனால் இப்போது பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் நான் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். உங்களால் பாகிஸ்தானையே கவனிக்க முடியவில்லை.

    அமேதியை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள். பாகிஸ்தானுக்கும் ராகுல் காந்திக்கும் இடையே என்ன உறவு? இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது பாகிஸ்தான் மீது பாசம் காட்டுவது ஏன்? ராகுல்காந்தி பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது.

    காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என்பது இப்போது அம்பலமாகிவிட்டது. எனது வார்த்தைகள் பாகிஸ்தான் தலைவர்களை சென்றடைகிறது என்றால், எல்லையில் பயங்கரவாதிகளை கொல்ல பயன்படும் ஏகே 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் மோடி நிறுவிய அமேதி இது என்பதை நான் அவர்களுக்கு கூற விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானா மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
    • தெலுங்கானா காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி ஆரம்பத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்தார்.

    திருப்பதி:

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெலுங்கானா மாநிலத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் தெலுங்கானா பா.ஜ.க முன்னாள் தலைவர் பண்டி சஞ்சயை ஆதரித்து கரீம் நகரில் பிரசாரம் செய்தார்.

    பண்டி சஞ்சய் மற்றும் தெலுங்கானா மாநில தலைவர்களின் பாத யாத்திரைகள் இந்த மாநிலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. இதனை பார்த்து தான் நான் தமிழகத்தில் நடை பயணம் மேற்கொண்டேன். மக்களுக்காக நடப்பது எளிதல்ல.

    கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பொய்யான உத்தரவாதங்களை அழித்து தெலுங்கானா மாநிலத்தில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் வஞ்சகத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

    இதனால் பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானா மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


    இன்னும் 5 நாட்கள் தான் தேர்தல் பிரசாரம் நடைபெற உள்ளது. பா.ஜ.க. தொண்டர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று 100 வாக்குகளை பெறுங்கள். தெலுங்கானா காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி ஆரம்பத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்தார்.

    சோனியா காந்தியின் அழைப்பிற்கு பிறகு அவர் பிரதமருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அமித்ஷா குறித்த போலி வீடியோக்களை உருவாக்குவதில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் பாஜக தலைவர்கள் சட்ட விரோத முஸ்லிம் இட ஒதுக்கீடுகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியின் விமர்சனங்களுக்கு எதிராகவும் அண்ணாமலை பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் அவருடைய பிரசாரம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ×