search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை பெரிய கோவில்"

    • யானை மீது திருமுறை நூல் வைக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க, திருமுறை வீதி உலா பெரிய கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் 4 ராஜவீதிகளில் வலம் வந்தது.
    • தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சதய விழாவில் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் மாமன்னர் ராஜராஜசோழன். இவர் கட்டிய தஞ்சை பெரிய கோவில் சிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டாகவும், உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தனது ஆட்சி காலத்தில் கட்டிடக்கலை மட்டுமின்றி நீர் மேலாண்மை உள்பட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

    இந்நிலையில் மாமன்னர் ராஜராஜசோழன் முடி சூட்டிய நாளை அவர் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 1038-வது சதய விழா அரசு விழாவாக தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சதய விழா ஆண்டை குறிக்கும் வகையில் மாலையில் 1038 பரத நாட்டிய கலைஞர்களின் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    ராஜராஜ சோழன் பிறந்த சதய நட்சத்திரமான இன்று 2-ம் நாள் விழா தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்றது. முதலில் காலை 6.30 மணிக்கு அரண்மனை தேவஸ்தானம் நிஷாந்தி மற்றும் ஆறுமுகம் குழுவினரின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    இதையடுத்து கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார்.

    இதையடுத்து பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    யானை மீது திருமுறைகள் வைத்து வீதி உலா நடைபெற்றது.

    யானை மீது திருமுறைகள் வைத்து வீதி உலா நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து யானை மீது திருமுறை நூல் வைக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க, திருமுறை வீதி உலா பெரிய கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் 4 ராஜவீதிகளில் வலம் வந்தது.

    அடியார்கள், ஓதுவார்கள் திருமுறை பாராயணம் பாடியப்படி திருவீதி உலா வந்தனர். அப்போது பழங்கால கொம்பு உள்ளிட்ட பல்வேறு அரிய இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. இதில் பெரியகோவில் உருவம் பொறித்த பிரமாண்ட மாதிரி அரங்கம் வாகனத்தில் வைக்கப்பட்டு வீதி உலாவில் பின்தொடர்ந்து வந்தது.

    தொடர்ந்து பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பால், மஞ்சள், தயிர், தேன், எலுமிச்சை சாறு, இளநீர், சந்தனம் உள்ளிட்ட 48 வகையான பொருட்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீனம் தலைமையில் நடந்த இந்த பேரபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மதியம் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது.

    இதையடுத்து மங்கள இசை, நடனம், தேவார இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.

    சதய விழாவையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சதய விழாவில் கலந்து கொண்டனர். இதனால் மாநகர் விழாக்கோலம் பூண்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • அன்று முதல் இன்று வரை பெரிய கோவிலின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • தஞ்சை பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில் சேர்க்கப்பட வேண்டியது தான்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் அம்மன்பேட்டையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் இன்று காலை தஞ்சைக்கு வந்தார்.

    பின்னர் அவர் பெரிய கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    நான் தஞ்சாவூர் நகரை சேர்ந்தவன். இளம் வயதில் இருந்தே நான் பெரிய கோவிலுக்கு பலமுறை சென்று தரிசனம் செய்துள்ளேன். அன்று முதல் இன்று வரை பெரிய கோவிலின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நான் ஆன்மீகத்தையும், தேசியத்தையும் நம்ப கூடியவன்.

    தஞ்சை பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில் சேர்க்கப்பட வேண்டியது தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இது குறித்து அரசாங்கம் எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்து வருகிறது என கேட்டு பார்ப்பேன். இது தொடர்பாக எனது தரப்பில் இருந்து கருத்துக்கள் கேட்டால் அதற்கும் பதில் கூறுவேன்.

    மாமன்னர் ராஜராஜசோழன் சிலையை கோவிலுக்குள் கொண்டு வந்து வைப்பது குறித்து தொல்லியல் துறை தான் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகத்து அதிசயங்களில் ஒன்று தஞ்சை பெரிய கோவில்.
    • சமய பெரியவர்கள் திருவதியை, தஞ்சை பெரிய கோவிலின் தந்தை என்று வர்ணிப்பதுண்டு.

    தஞ்சை பெரிய கோவிலை நாம் உலகத்து அதிசயங்களில் ஒன்று என்கிறோம். ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் தஞ்சை கோவில் கோபுரம் கம்பிரமாக நிற்பதை கண்டு நாம் பெருமையும், ஆச்சரியமும் கொள்கிறோம்.

    ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் கருவறை விமானம் மிகப் பிரமாண்டமாக, உலக அதிசய சின்னங்களில் ஒன்றாக இருப்பதற்கு அடிப்படையாக இருந்தது திருவதிகை கோவில்தான் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. திருவதிகை கோவில் கருவறை விமான அமைப்பைப் பார்த்து ஆச்சரியம் கொண்ட ராஜராஜசோழன், சோழ மண்டலத்தில் இப்படியரு ஆலயத்தை கட்ட வேண்டும் என்ற நோக்கில் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டினார்.

    எனவேதான் சமயப் பெரியவர்கள் திருவதியை திருத்தலத்தை தஞ்சை பெரிய கோவிலின் தந்தை கோவில் என்று வர்ணிப்பது உண்டு.

    ஆலய அமைப்பு, கருவறை அமைப்பு, லிங்கம் அமைப்பு உள்பட பல விஷயங்களில் திருவதிகை திருத்தலம் போலவே தஞ்சை பெரிய கோவிலும் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    திருவதிகை கோவிலின் கருவறை ராசசிம்மன் காலத்தைச் சேர்ந்ததாகும். இது ஒரு தேர் போன்று இருக்கிறது. கருவறையின் மூன்று பக்கங்களிலும் மாடகோவில்கள் இருக்கின்றன.

    இந்த மாடகோவில்களில் நான்கு கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. மூன்று மேற்கு நோக்கி அமைந்துள்ளன. இது ஐந்து நிலைகளை உடையது.

    மேல் நிலையில் விமானம் பண்டியல் எண் கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எட்டு பக்கங்களிலும் அட்ட திக்கு பாலகர்களின் சுதை உருவம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த நான்கு நிலைகளிலும் நான்கு புறமும் சிவனின் வடிவங்களும், விஷ்ணுவின் வடிவங்களும், பிரம்மாவின் வடிவங்களும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன.

    கல்காரம் எனப்படும் கீழ்பகுதி முழுவதும் மூன்று பக்கங்களிலும் சுதை உருவங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

    மாடக்கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கடவுளின் உருவம் சுதையாக செய்யப்பட்டுள்ளன. தெற்கு பக்கம் உள்ள மாடகோவிலில் நந்திதேவன், ஊர்மிளா, சுதை உருவமும், மற்றொன்றில் பஞ்சமூக சிவனும், பார்வதியும் சுதை உருவங்களாக உள்ளன. இவை இரண்டும் கிழக்கு நோக்கி உள்ளன.

    இவற்றின் வெளிப்பக்கத்தில் திரிபுர சம்கார மூர்த்தியும், மீனாட்சி கல்யாணமும், சந்திரசேகரர் உருவமும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன. மேலும் சிவன், யானையைத் தோலுரித்ததும், பிச்சாண்டவர் திருவுருவமும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன. தெற்கு பக்கத்தில் தட்சிணாமூர்த்தி திருக்கோவிலும் இணைக்கப்பட்டுள்ளது.

    மாடக்கோவில்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மகாவிஷ்ணுவும், மையத்தில் லிங்கோர்ப்பவரும் பக்கத்தில் மகாவிஷ்ணுவும், பிரம்மாவும், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியரும் சுதைகளாக செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வெளிப்புறத்தில் மகாவிஷ்ணுவின் வடிவங்கள் சுதைகளாக உள்ளன.

    வடக்கு பக்கம் மாடக்கோவில்களில் கிழக்கு நோக்கி பிரம்மாவின் உருவமும், சிவன், பார்வதி உருவமும் அமைந்துள்ளன. இவற்றின் வெளிப்புறத்தில் ராவணன் கைலாய மலையைத் தூக்கி யாழ்மீட்டிய நிகழ்ச்சியும், உமாமகேஷ்வரர் உருவமும் சுதையாக அமைந்துள்ளன.

    இந்த மாடகோவில்களின் வெளிபக்க மூலைகளில் அரிமாக்கள் நின்றவாறு முன்னங்கால்கள் தூக்கிய நிலையில் நின்றுள்ளன.

    முதல் நிலையில் நான்கு புறமும் ஒற்றை திருவாட்சிகள் இருக்கின்றன. மூலவருக்குப் பின்னால் உமா மகேஸ்வரரின் சுதை உருவமும் நின்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

    கருவறையின் உள்ளே சுற்றி வரும் சாலகார வழி இருந்துள்ளது. தற்போது இது அடைக்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பு போன்று காஞ்சி கைலாசநாதர் திருக்கோவில், தஞ்சை பெருவுடையார் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய கோவில்களில் காணலாம். திருவதிகைக்குப் பின்னரே இந்த கோவில்கள் கட்டப்பட்டன.

    • அனைத்து பரிவார தெய்வங்கள் என 456 சாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.
    • பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    தஞ்சை பெரியகோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி ஆண்டுதோறும் எல்லா சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். அதன்படி நேற்று ஆடிப்பூர விழாவையொட்டி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு தண்ணீர், எண்ணெய், இளநீர், எலுமிச்சை, கரும்புச்சாறு, பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவில் நுழைவுவாயில் உள்ள விநாயகர், ராகு, நால்வர், சொக்கநாதர், சப்தலிங்கங்கள், சப்தகன்னிமார்கள், நடராஜர், 108 சிவலிங்கங்கள், நந்தி, முருகன், வருணபகவான், சண்டீகேஸ்வரர், அய்யனார் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்கள் என 456 சாமிகளுக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    பெரியகோவில் வளாகத்தில் உள்ள வராகிஅம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தஞ்சை வடக்குஅலங்கத்தில் உள்ள வடபத்ர காளியம்மன், தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ர காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள கோடியம்மன்கோவில், வல்லம் ஏகவுரியம்மன்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    • திருமணம் நடக்க வேண்டி பதிவு செய்தவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    உலகம் போற்றும் தஞ்சை மாநகரின் சிறப்புக்கு தனிப்பெரும் காரணமாக பெரியகோவில் திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழனால் வானளாவிய உயர்ந்த விமானத்துடன் எழுப்பப்பட்ட பெரியகோவிலில் பெரியநாயகி சமேத பெருவுடையார் எழுந்தருளியுள்ளார். தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் பெரியகோவிலில் நேற்று இரவு நடந்தது.

    முன்னதாக பழங்கள், குங்குமம், மஞ்சள்கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமசிமிழ், கண்ணாடி, ரிப்பன், இனிப்பு வகைகள், பூக்கள், வெற்றிலைபாக்கு, சீவல் போன்ற சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் தாம்பூலத்திலும், மூங்கில் கூடையிலும் வைத்து பெரியகோவில் வளாகத்தில் உள்ள சொக்கநாதர் சன்னதியில் இருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும் நடராஜர் மண்டபம் அருகே போடப்பட்டிருந்த பந்தலை சென்றடைந்தனர்.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் உள்பட சம்பிரதாய சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க பெருவுடையாரிடம் இருந்து திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார் எடுத்து பெரியநாயகி அம்மனுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த திருக்கல்யாணத்தில் பங்கேற்றால் திருமண பாக்கியம், தம்பதியர் ஒற்றுமை, குழந்தை பாக்கியம், மாங்கல்யபலம் ஆகியவை நடைபெறும் என்பது பக்தர்களின் ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் நடக்க வேண்டி பதிவு செய்தவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தான ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    • நாளை மாலை 6.30 மணி முதல் இரவு 6 மணி வரை கோவில் வளாகத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
    • திருக்கல்யாணத்தில் கலந்துக்கொண்டால், திருமண தோஷங்கள் நீங்கும்.

    தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் கட்டிட வடிவமைப்பில் தலைச்சிறந்து விளங்குகிறது. உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றான இக்கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார்.அதேபோல வேறு எங்கும் காண முடியாத பிரம்மாண்டமான தோற்றத்தில் நந்தியெம்பெருமான் அருள்பாலிக்கிறார். மேலும் வராகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

    உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பெருவுடையாருக்கும், பெரியநாயகியம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் வளாகத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தில் கலந்துக்கொண்டால், திருமண தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    • வராகி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.
    • இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

    தஞ்சை பெரியகோவிலில் வராகிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராகி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து வராகிஅம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெறுகிறது.

    வராகி அம்மனுக்கு 18-ந்தேதி மாலையில் இனிப்பு அலங்காரமும், 19-ந் தேதி மஞ்சள் அலங்காரமும், 20 -ந் தேதி குங்குமம் அலங்காரமும், 21--ந் தேதி சந்தன அலங்காரமும், 22-ந் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும், 23-ந் தேதி மாதுளை அலங்காரமும், 24-ந் தேதி நவதானிய அலங்காரமும், 25-ந் தேதி வெண்ணெய் அலங்காரமும், 26-ந்தேதி கனி அலங்காரமும், 27-ந்தேதி காய்கறி அலங்காரமும் 28-ந் தேதி புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

    • தஞ்சாவூர் பெரியகோவிலில் வியக்க வைக்கும் சிலைகள் நிறைய இருக்கின்றன.
    • ஒரு சிற்பம் கற்பனையின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது.

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டம் கோவில்கள் நிறைந்த பகுதியாகவும் திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றவையாகும். மேலும் தமிழர் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் இந்த கோவில் அற்புதமான கட்டிட கலை அம்சத்தை கொண்ட இந்திய கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

    இன்று உலகமே வியக்கும் வகையில் தமிழர்களின் கட்டிட கலைநுட்பத்துக்கு சான்றாக யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரத்துடன் தலை நிமிர்ந்து நிற்கிறது.

    இத்தகைய தமிழ் கலாசாரத்தின் கவுரவ சின்னமாக திகழும் தஞ்சை பெரியகோவில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இதனால் பெரியகோவிலுக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

    தஞ்சாவூர் பெரியகோவிலில் வியக்க வைக்கும் சிலைகள் நிறைய இருக்கின்றன. இதில், சிற்பங்கள் ஒவ்வொன்றும் அக்கால நிகழ்வுகளை எடுத்துக் காட்டுவது மட்டுமல்லாமல், கருத்தையும் உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு சிற்பம் கற்பனையின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது.இக்கோவிலின் இரண்டாம் நுழைவு ராஜராஜன் வாயிலில் மிகப் பிரமாண்டமான இரு துவாரபாலகர் சிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தலா 18 அடி உயரம் உடையவை. இச்சிலைகளில் ஒன்றான இடதுபுறம் உள்ள சிலைதான் வியப்பை அளிக்கிறது.

    இதில், துவாரபாலகரின் வலது கால், அவரது காலடிக்குக் கீழ், ஒரு பொந்தில் இருந்து வரும் மலைப்பாம்பு, எலியைக் கவ்வுவது போல ஒரு பெரிய யானையைத் தனது வாயில் கவ்விக்கொண்டு இருக்கிறது.யானையின் பின் பகுதி முழுவதும் அந்த மலைப்பாம்பின் வாய்க்குள் இருக்கும் நிலையில், அதன் தலையும், முன் கால்கள் மட்டுமே வெளியே தெரிகின்றன.

    அதாவது ஒரு யானையை விழுங்கும் அளவுக்கு அந்த மலைப்பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்? அந்த மலைப்பாம்பு மிகப்பிரம்மாண்டம் என்றால், அது சுற்றிக் கொண்டு இருக்கும் காலுக்குச் சொந்தக்காரரான துவாரபாலகர் இன்னும் எவ்வளவு பெரியவராக இருக்க வேண்டும்? அவர் மிகப் பெரியவர் என்றால், அவருடைய காவலில் உள்ளே இருக்கும் அவருடைய எஜமானரான சிவன் இன்னும் எவ்வளவு பெரியவராக இருக்க வேண்டும் என்பதை நம் கற்பனையின் உச்சிக்குக் கொண்டு போன அச்சிற்பியின் பின்னணியில் இருக்கும் மாமன்னன் ராஜராஜனின் திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

    இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் பெரியவர் என்று மமதையில் செல்ல கூடாது என்றும் நம்மை விட பெரியவர் உள்ளே இருக்கிறார் என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்து சொல்லும் விதமாக உள்ளது. வியக்கத்தக்க உள்ள இந்த சிலைகளை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

    • தேரில் 245 மணிகள் பொருத்தப்பட்டுள்ளன.
    • தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் தலா 1 டன் எடை கொண்டது.

    தஞ்சை பெரியகோவில் தேர் 19 அடி உயரத்துடன் 3 அடுக்குகள் கொண்டது. மேல்மட்டத்தில் தேவாசனம், சிம்மாசனம் அமைக்கப்பட்டது. முதல் அடுக்கில் 1½ அடியில் 40 பொம்மைகளும், 2-ம் அடுக்கில் 2½ அடியில் 56 பொம்மைகளும், 3-ம் அடுக்கில் 1½ அடியில் 56 பொம்மைகள் உள்பட மொத்தம் 231 பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.

    முதல் நிலையில் பெருவுடையார், பெரியநாயகி, விநாயகர், முருகன், துவாரபாலகர், பூமாதேவி, கல்யாணசுந்தரமூர்த்தி, அகத்தியர், சரபமூர்த்தி, மன்மதன், கண்ணப்பநாயனார் கதை, சிவராத்திரி தோன்றிய வரலாறு, அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர், வீரபத்ரன், பிச்சாடனமூர்த்தி, விருஷ்பரூடர், ஏகபாதமூர்த்தி போன்ற பொம்மைகள் 4 திசைகளிலும், குதிரை மற்றும் யாழி உருவங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த பொம்மைகள் சிவன் கோவிலுக்கு ஏற்ற ஐதீக அடிப்படையிலும், தஞ்சையில் புகழ்பெற்ற சிற்பங்களையும் அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை தேரின் பின்புறம் நந்தி மண்டப தோற்றம் ஒரே பலகையில் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது.

    தேரில் 245 மணிகள் பொருத்தப்பட்டுள்ளன. தேரின் 2 அச்சும் 2 டன் எடையும், சக்கரங்கள் ஒவ்வொன்றும் தலா 1 டன் எடையும் கொண்டது. தேரின் மொத்த எடை சாதாரணமாக 40 டன் ஆகும். தேர் அலங்காரத்திற்கு பின் 43 டன் எடையாகும்.

    தஞ்சை பெரியகோவில் தேர் 14 இடங்களில் நின்று செல்லும்

    தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த பெரியகோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தொடங்குகிறது. தேரோட்டத்தின்போது முதலில் விநாயகர், சுப்பிரமணியர் ஆகிய சுவாமிகள் அலங்கார சப்பரத்திலும், தியாகராஜருடன் அம்மன் திருத்தேரிலும், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கார சப்பரத்திலும் ஒன்றன் பின் ஒன்றாக 4 ராஜவீதிகளான மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதியில் வலம் வருகிறது.

    4 ராஜவீதிகளிலும் பக்தர்களின் வசதிக்காகவும், சாமி தரிசனத்திற்காகவும், தேங்காய், பழம் படைப்பதற்காகவும் 14 இடங்களில் தேர் நிறுத்தப்படுகிறது. மேலராஜவீதியில் சந்துமாரியம்மன் கோவில், கொங்கணேஸ்வரர் கோவில், மூலை ஆஞ்சநேயர் கோவில் முன்பும், வடக்கு ராஜவீதியில் பிள்ளையார் கோவில் (ராணி-வாய்க்கால் சந்து எதிரில்), ரத்தினபுரீஸ்வரர் கோவில் (காந்திசிலை அருகில்), குருகுலசஞ்சீவி கோவில் ஆகிய இடங்களில் நிறுத்தப்படுகிறது. கீழராஜவீதியில் கொடிமரத்து மூலை (மாரியம்மன் கோவில் அருகில்), விட்டோபா கோவில் அருகில் (அரண்மனை எதிரில்), மணிகர்ணிகேஸ்வரர் கோவில் (தமிழ்ப்பல்கலைக்கழக பதிப்புத்துறை அருகில்), வரதராஜ பெருமாள் கோவில் (நிக்கல்சன் கூட்டுறவு வங்கி எதிரில்), தெற்கு ராஜவீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், கமலரத்ன விநாயகர் கோவில் (கனரா வங்கி அருகில்), காசி விஸ்வநாதர் கோவில் (இந்தியன் வங்கி அருகில்), காளியம்மன் கோவில் ஆகிய இடங்களில் தேர் நிறுத்தப்படுகிறது. பின்னர் தேர் நிலை மண்டபத்தை வந்தடைகிறது.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி சென்ற காட்சி பிரமிக்க வைத்தது.
    • பெண்கள் முளைப்பாரி எடுத்தும் சென்றனர்.

    உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரைத் பெருவிழா ஆண்டுதோறும் 18 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து கோவிலில் காலை, மாலை என இரு வேளைகளில் சுவாமி புறப்பாடுகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு பெரிய கோவில் நடராஜர் மண்டபத்தில் இருந்து மேள, தாளங்களுடன் தியாகராஜருடன் கமலாம்பாள், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு, கோவில் வெளியே வந்து மேலவீதியில் உள்ள தேர்மண்டபம் வந்தடைந்தனர்.

    அங்கு 3 அடுக்குகள் கொண்ட 19 அடி உயரம், 18 அடி அகலம், 40 டன் எடை கொண்ட தேரில் தியாகராஜர்-கமலாம்பாள் எழுந்தருளினர். காலை 6.50 மணிக்கு தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார், பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    பின்னர் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'தியாகேசா, ஆரூரா' என்ற பக்தி கோஷங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். அலங்கரிக்கப்பட்ட கோவில் யானை முன்னே நடந்து செல்ல விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்கள் முன்னே சென்றது. பின்தொடர்ந்து தியாகராஜர்-கமலாம்பாள் எழுந்தருளிய தேர் சென்றது. நீலோத்பலாம்பாள், சண்டிகேசுவரர் சப்பரங்கள் தேரை பின் தொடர்ந்தன. கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி சென்ற காட்சி பிரமிக்க வைத்தது.

    தேர் செல்லும் வழியில் நாதஸ்வரம், மேளதாளம் முழங்க கலைஞர்கள் கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடியபடியே சென்றனர். பெண்கள் முளைப்பாரி எடுத்தும் சென்றனர். மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 ராஜவீதிகள் வழியாக சென்ற தேர் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை வழங்கி சாமி தரிசனம் செய்தனர். மதியம் தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டதால் தேர் சிரமம் இன்றி நிறுத்தப்பட்டது.

    இன்று நடந்த தேரோட்டத்தை தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது வெளிமாவட்டம், வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

    தேரோட்டத்தையொட்டி 1000-க்கு மேற்ப்பட்ட போலீசார் ஈடுப்பட்டிருந்தனர்.

    • காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தேர் வடம்பிடிக்கப்படுகிறது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்க உள்ளனர்.

    தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் கட்டிட வடிவமைப்பில் தலைச்சிறந்து விளங்குகிறது. உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றான இக்கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார்.

    அதேபோல வேறு எங்கும் காண முடியாத பிரம்மாண்டமான தோற்றத்தில் நந்தியெம்பெருமான் அருள்பாலிக்கிறார். நந்தியெம்பெருமானுக்கு பிரதோஷம் ேதாறும் அபிஷேகத்தை காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். வராகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன.

    உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாள்தோறும் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இதில் விநாயகர், ராஜராஜசோழன், பெருவுடையார்-பெரியநாயகி, அம்பாள், முருகன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தேர் வடம்பிடிக்கப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்க உள்ளனர்.

    • தேரின் சாதாரண எடை 40 டன் ஆகும்.
    • அலங்கரிக்கப்பட்டவுடன் 50 டன் எடை இருக்கும்.

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சதய விழா, சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடக்கிறது.

    தேர் தஞ்சை மேலவீதியில் உள்ள தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து புறப்படுகிறது. தேரை 1-ந்தேதி காலை 6 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கிறார்கள். இந்த தேரின் சாதாரண உயரம் 19 அடி ஆகும். அகலம் 18 அடியாகும். தேரின் சாதாரண எடை 40 டன் ஆகும். அலங்கரிக்கப்பட்டவுடன் 50 டன் எடை இருக்கும்.

    இந்த தேரில் 165 மணிகள் மற்றும் 252 தெய்வங்களின் சிற்பங்களும் உள்ளன. 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேரின் மேல் பகுதியில் சவுக்கு கட்டைகள் கொண்டு கட்டப்பட்டு வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேரின் முன்பகுதியில் குதிரை பொம்மைகள் வைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன.

    தேர் சுத்தப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. தேரில் உள்ள மணிகளுக்கு வர்ணம் பூசும் பணியும் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடந்து வருகிறது. நாளைக்குள்(ஞாயிற்றுக்கிழமை) அனைத்து பணிகளும் முடிந்து தேரோட்டத்துக்கு தேர் தயாராகி விடும்.

    தஞ்சை மேலவீதியில் இருந்து புறப்படும் தேர் வடக்கு வீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடையும். பக்தர்களின் தரிசனத்துக்காகவும், தேங்காய், பழம் உடைத்து வழிபட ஏதுவாகவும் 14 இடங்களில் தேரை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்துக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    தேரோட்டம் நடைபெறுவதற்காக சாலை சீர் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.

    ×