search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணம்
    X

    திருமணம் நடந்ததையும், பக்தர்கள் சீர்வரிசை சுமந்தபடி பெரிய கோவில் வளாகத்தை சுற்றி வந்த காட்சி.

    தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணம்

    • திருமணம் நடக்க வேண்டி பதிவு செய்தவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    உலகம் போற்றும் தஞ்சை மாநகரின் சிறப்புக்கு தனிப்பெரும் காரணமாக பெரியகோவில் திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழனால் வானளாவிய உயர்ந்த விமானத்துடன் எழுப்பப்பட்ட பெரியகோவிலில் பெரியநாயகி சமேத பெருவுடையார் எழுந்தருளியுள்ளார். தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் பெரியகோவிலில் நேற்று இரவு நடந்தது.

    முன்னதாக பழங்கள், குங்குமம், மஞ்சள்கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமசிமிழ், கண்ணாடி, ரிப்பன், இனிப்பு வகைகள், பூக்கள், வெற்றிலைபாக்கு, சீவல் போன்ற சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் தாம்பூலத்திலும், மூங்கில் கூடையிலும் வைத்து பெரியகோவில் வளாகத்தில் உள்ள சொக்கநாதர் சன்னதியில் இருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும் நடராஜர் மண்டபம் அருகே போடப்பட்டிருந்த பந்தலை சென்றடைந்தனர்.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் உள்பட சம்பிரதாய சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க பெருவுடையாரிடம் இருந்து திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார் எடுத்து பெரியநாயகி அம்மனுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த திருக்கல்யாணத்தில் பங்கேற்றால் திருமண பாக்கியம், தம்பதியர் ஒற்றுமை, குழந்தை பாக்கியம், மாங்கல்யபலம் ஆகியவை நடைபெறும் என்பது பக்தர்களின் ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் நடக்க வேண்டி பதிவு செய்தவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தான ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×