search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம்"

    • மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது.
    • 21-ந்தேதி கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை பெருவிழா அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதன் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அடுத்த மாதம் 20ந்தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் (21ந்தேதி) தேரோட்டம் நடக்கிறது.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அதன்படி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை), மறுநாள் (20-ந்தேதி) மாலை 6.00 மணிக்கு மேல் கள்ளழகர் கோவிலில் உள்ள தோளுக்கினியானின் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். 21-ந்தேதி மாலை 6.10 மணிக்கு மேல் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    அப்பன் திருப்பதி, பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி என வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மறுநாள் 22-ந்தேதி மதுரை மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கிறார்கள்.

    மறுநாள் (23-ந்தேதி) காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதனைத் தொடர்ந்து மதியம் ராம ராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் நடக்கிறது. தொடர்ந்து அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளுகிறார்.

    24-ந்தேதி காலை அங்கிருந்து புறப்பாடாகி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு முதல் விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    25-ந்தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார். இரவு பூப்பல்லக்கில் சுவாமி காட்சியளிக்கிறார்.

    மறுநாள் (26-ந்தேதி) அழகர்மலைக்கு புறப்பாடாகும் அழகர் 27-ந்தேதி காலை 11 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார். 28-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் சித்திரை பெருவிழா முடிவடைகிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் செயல் அலுவலர் கலைவாணன் தெரிவித்துள்ளார்.

    • நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
    • தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் புகழ்பெற்றதும், பழமைவாய்ந்ததுமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மாசிப்பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சக்தி கரக ஊர்வலமும், மறுநாள் மயானக்கொள்ளை நிகழ்ச்சியும், 12-ந்தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் இரவில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலாவாக வந்து அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அங்காளம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ அம்மன், சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதனைத்தொடர்ந்து பனை, புளி, காட்டுவாகை, சவுக்கு உள்ளிட்ட மரங்களைக்கொண்டு புதிதாக கோவிலின் மேற்கு வாசலில் தேர் வடிவமைக்கப்பட்டது. அந்த தேருக்கு பலவித பூக்களால் ஆன மாலைகள், பனங்குலை, தென்னங்குலை, ஈச்சங்குலை, வாழை மரங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேற்கு வாசலில் இருந்த தேரை வடக்கு வாசலுக்கு இழுத்து வந்து நிறுத்தினர்.

    பின்னர் கோவிலின் உட்பிரகாரத்தில் இருந்த உற்சவ அம்மனை பூசாரிகள் பம்பை, மேள, தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தினர். அதன் பிறகு ஊரின் முக்கிய பிரமுகர்களுக்கு கோவில் சார்பில் மரியாதை செய்தவுடன் அம்மனுக்கும், தேருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கோவிந்தா... அங்காளம்மா... ஈஸ்வரி தாயே என்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேர், பக்தர்களின் வெள்ளத்தில் கோவிலைச்சுற்றி அசைந்தாடியபடி நிலைக்கு வந்தது.

    தேர் சென்ற வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள், தங்கள் வயல்களில் விளைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றையும், சுண்டல், கொழுக்கட்டை, சில்லறை நாணயங்கள் ஆகியவற்றையும் தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

     அதுமட்டுமின்றி சில பக்தர்கள், திருநங்கைகள் பலவித அம்மன் மற்றும் சித்தாங்கு வேடமணிந்தும், கையில் தீச்சட்டி ஏந்தியும், நாக்கு, தாடைகளில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் அம்மன், வெள்ளை யானை வாகனத்தில் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி, அம்பாள் வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    திருவிழாவின் 8-வது நாள் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு காலை 9 மணிக்கு நடராஜர் கேடயத்தில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரவு 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி தேரில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மேலும் சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து, இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் எழுந்த ருளினர். கிழக்கு ராஜ கோபுரம் பகுதியில் இருந்து தேரோட்டம் நடந்தது. சிவ கோஷத்துடன் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை முன்னி ட்டு கோவில் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. நான்கு ரத வீதிகளிலும் இன்று காலை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.
    • இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.

    திருமலை:

    பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் உற்சவர்கள் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை தேரோட்டம் நடந்தது.

    அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், `கல்கி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர் களுக்கு அருள் பாலித்தார்.

    சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

    பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை உற்சவர்களான சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. அதன் பிறகு காலை 9.45 மணியளவில் கோவில் முன்னால் உள்ள புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    • கபிலேஸ்வரா் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • இரவு 10 மணி வரை சிறப்பு நந்தி வாகன சேவை நடக்கிறது.

    திருமலை:

    திருப்பதி கபிலேஸ்வரா் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை (வெள்ளிக்கிழமை) மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு சிறப்பு வரிசைகள், சாமியானா பந்தல்கள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    நாளை அதிகாலை 2.30 மணியில் இருந்து 4.30 மணி வரை மகான்யாச ஏகாதச ருத்ராபிஷேகம், காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை தேரோட்டம் (போகித்தேர்) காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சிறப்பு நந்தி வாகன சேவை நடக்கிறது.

    நாளை காலை 6 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை லிங்கோத்பவ அபிஷேகம் நடக்கிறது.

    அதையொட்டி திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்மபிரசார பரிஷத், எஸ்.வி.சங்கீத், நிருத்ய கலாசாலா ஆகியவை ஏற்பாட்டில் பக்தி இசை மற்றும் கலா சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    மகாசிவராத்திரிக்கு மறுநாள் (சனிக்கிழமை) சிவன்-பார்வதி திருக்கல்யாண மகோற்சவம் நடக்கிறது. இந்தத் திருக்கல்யாண மகோற்சவம் அன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஆர்ஜித சேவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • ஆண்டுதோறும் மாசி 20-ந்தேதி அய்யா வைகுண்டரின் அவதார தினம்.
    • உருவ வழிபாடு கிடையாது. கண்ணாடியில் நாம் உருவத்தை காண வேண்டும்.

    அய்யா வைகுண்டரின் அவதார தினம் ஆண்டுதோறும் மாசி 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் மாசி 19-ந்தேதி அய்யா விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள பதியில் இருந்தும், சிறையில் அடைக்கப்பட்ட திருவனந்தபுரத்தில் இருந்தும் வாகன பேரணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் ஊர்வலம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அய்யாவின் தாரக மந்திரமான `அய்யா சிவ சிவ சிவசிவ அரகரா அரகரா' என்ற மந்திரத்தை சொல்லியவரே வருவார்கள்.

    நிலைக்கண்ணாடி

    அய்யா வழியில் உருவ வழிபாடு கிடையாது. கண்ணாடியில் நாம் உருவத்தை காண வேண்டும். அதுதான் உனக்கு தெய்வம் என்கின்ற அய்யாவின் சீரிய கோட்பாட்டின்படி தலைமை பதி உள்ளிட்ட அனைத்து பதிகள் மற்றும் நிழல் தாங்கல்களிலும் நிலைக்கண்ணாடி நிலை நிறுத்தப்பட்டிருக்கும்.

    அகிலத்திரட்டு அம்மானை

    அகிலத்திரட்டு அம்மானை நூல் அய்யா வைகுண்டரின் அருள் நூல்களில் ஒன்றாகும். அகிலம் என்றால் உலகம். உலகத்தில் உள்ள அத்தனை யையும் திரட்டி உருவாக்கி தொகுக்கப்பட்டிருப்பதே அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.

    மறு அவதாரம் எடுத்த அய்யா வைகுண்டர்

    அய்யா வைகுண்டருக்கு 22 வயதாக இருக்கும் போது திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. எந்த வைத்தியராலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அய்யா வைகுண்டரின் பெற்றோர் கனவில் 'விஷ்ணு' தோன்றினார். மகனை திருச்செந்தூருக்கு அழைத்து வருமாறு கூறி மறைந்தார். இதையடுத்து அய்யா வைகுண்டரை திருச்செந்தூருக்கு அழைத்து சென்றனர்.

    1833-ம் ஆண்டு மார்ச் மாதம் (கொல்லம் ஆண்டு 18 மாசி மாதம்) அப்படியே கடலுக்குள் சென்று மாயமாக மறைந்து போனார். பெற்றோர் மகனை தேடி கரையில் காத்திருந்தனர். 3-வது நாள் திடீரென கடலின் ஒரு பகுதி இரண்டாக பிரிந்து வழிவிட உள்ளிருந்து மகாவிஷ்ணுவின் 10-வது அவதாரமாக அய்யா வைகுண்டர் வெளிப்பட்டார்.

     முத்திரி கிணறு

    அய்யா வைகுண்டர் சாமி தோப்பின் வடக்கு வாசல் பக்கம் இருந்தபடியே நிறைய அற்புதங்களையும், சமூக மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தலானார். தீண்டாமை சிக்கலில் தவித்த மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தில் கிணறு ஒன்றை உருவாக்கி அதற்கு முத்திரி கிணறு என்று பெயரிட்டு அனைத்து சமுதாயத்தினரும் ஒரே கிணற்றில் நீர் எடுத்து பருக ஆரம்பித்தனர்.

    ஒரு வீட்டு கிணற்று தண்ணீரை மற்றொரு வீட்டுக்காரர் எடுத்து பழகினாலே தீட்டு என்று கருதிய மேற்குடியினர், பல சாதியினரும் ஒரே கிணற்று தண்ணீரை பருகியதை கண்டு ஆச்சரியப்பட்டு தான் போனார்கள்.

    • வருடத்திற்கு 3 முறை திருவிழா நடைபெறுகிறது.
    • 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    இங்கு தினமுமே திருவிழா போன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வருடத்திற்கு 3 முறை திருவிழா நடைபெறுகிறது. வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறும். ஆவணி, தை திருவிழாக்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளிலும், வைகாசி திருவிழா தமிழ் மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையும் கொடி ஏறி 11 நாட்கள் நடைபெறும். இதில் 6-ம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்று மாலை சர்ப்ப வாகனம் எடுக்கப்படும். நாகதோஷம் உள்ளவர்கள் தோஷம் நீங்க வந்து வழிபட்டு செல்வார்கள். அய்யாவிற்கு பால், சுருள் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    இதேபோல் 8-ம் திருவிழா அன்று கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் காட்சி யளித்து வருகிறார். 11-ம் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறும். நான்கு ரத வீதிகளிலும் அய்யா வழி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருவார்கள்.

    தேர்த் திருவிழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டு செல்வார்கள்.

    அய்யா வைகுண்டருக்கு வெற்றிலை, பாக்கு, தேங்காய், பன்னீர், பழம், எலுமிச்சம் பழம் ஆகியவற்றை சுருளாக வைத்து வழிபடுவார்கள். உப்பும், மிளகும் வாங்கியும் காணிக்கையாக செலுத்துவார்கள்.

    கார்த்திகை மாதம் 17 நாட்கள் திருஏடு வாசிப்பு நடைபெறும். தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் அய்யா வைகுண்டசாமி பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    தினமும் அதிகாலை 3 மணிக்கு முத்திரி கிணற்றில் குளித்த பின்பு பணிவிடை செய்து வருகிறார்கள். கருவறை திறக்கப்பட்டு வாகன பவனி நடைபெறும். காலை, மாலை இருவேளையும் நான்கு ரத வீதிகளிலும் வாகன பவனி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனப்பால் வழங்கப்படும். காலை 11 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு நடைபெறும். மாலை 5 மணிக்கு உகப்படிப்பும், அதைத் தொடர்ந்து வாகன பவனியும் நடைபெறும்.

     தலைமை பதிக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் முத்திரி கிணற்றில் பதமிட்டு அங்கிருந்து அய்யா வைகுண்ட சாமி பதிக்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். முத்திரி கிணற்றில் பதமிட்டு வழிபட்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். அய்யாவை நினைத்து பக்தர்கள் பதமிட்டு வருகிறார்கள்.

    அன்பில் எல்லோரையும் அரவணைத்து ஆள வேண்டும் என்று அய்யா விரும்பினார். எவருக்கு எவரும் குறைந்தவர் இல்லை, எல்லோரும் இந்த நாட்டின் மன்னர்கள் என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்த்துவதற்கு அய்யாவழி பக்தர்கள் தலைப்பாகை அணிந்துவர சொன்னார். எனவே தற்போதும் கோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் யாராக இருந்தாலும் தலையில் தலைப்பாகை அணிந்தே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    வடக்கு வாசலில் பக்தர்களுக்கு நாமம் கொடுப்பதில்லை. மாறாக திருமண்எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புனித மண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடிபட்ட மண் தான். இந்த மண்ணுக்கு அரிய மருத்துவ குணங்கள் உண்டு.அந்த திருமண் வடக்கு வாசலில் வைக்கப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் திருநாமமாக பூசி வழிபட்டு வருகிறார்கள். மேலும் பதிக்குள் நுழைந்ததும் குருமார்கள் நெற்றியில் நாமம் விட்டு வருகிறார்கள்.

    முந்தைய காலத்தில் கீழ்ஜாதியை சேர்ந்தவர்களுக்கு ஆலயங்களில் நுழைய தடை இருந்தது. ஆனால் அய்யா காலத்தில் அது மாறுதல் அடைந்தது. ஆகவே அடுத்த சீர்திருத்தம் 'தொட்டு நாமம் சாற்றுதல்'என்ற பெயரில் வந்தது. பக்தர்கள் நெற்றியில் ஒருவர் நாமம் இடுவதே அது. பூசாரிகள் ஆலயங்கள் தரப்படும் விபூதியை பிரசாதத்தை தொடாமல் மேலிருந்து தூக்கி போடுவார்கள். ஆகவே நிழல் தாங்கல் அனைத்திலும் நாமம் இடும் வழக்கம் தொடங்கப்பட்டது.

    அங்கிருந்து குருமார்கள் 2 விரல்களை கொண்டு பக்தர்கள் நெற்றியில் ஜோதி போன்ற நாமம் இடுமாறு கட்டளை இட்டார். பக்தர்கள் நாமமிட்ட பிறகு கருவறைக்குள் சென்று வழிபடுவார்கள்.

    அய்யாவை நினைத்து வழிபடுபவர்களுக்கு நினைத்தது கை கூடி வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளார். இதனால்தான் அய்யா வைகுண்டசாமி பதிக்கு பக்தர்கள் அதிக அளவு வருகை தருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    சாமிதோப்பு தலைமை பகுதியில் வைகுண்டருக்கு கை குத்தல் அரிசி மூலம் காய்கறிகளை சேர்த்து சமைக்கப்பட்ட உணவே பணிவிடை செய்யப்படுகிறது. அந்த உணவு மண்பானை கொண்டே சமைக்கப்படுகிறது. சமையலில் பூசணிக்காய், மிளகாய், கத்தரிக்காய், இளவக்காய், வாழைக்காய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அய்யாவிற்கு பக்தர்கள் தென்னங்கன்று மற்றும் கோமாதாவை காணிக்கையாக வழங்கி வருகிறார்கள். மேலும் நினைத்தது நடக்க வேண்டி பக்தர்கள் சந்தனக்குடம் எடுத்தும் வழிபடுகிறார்கள்.

     சந்தன குடம் எடுக்கும் பக்தர்கள் பதியை சுற்றியுள்ள 4 ரத வீதிகளை சுற்றி வருவார்கள். குழந்தை வரம் வேண்டியும் பலரும் அய்யாவை வழிபட்டு செல்கிறார்கள். அவர்களுக்கு குழந்தை கிடைத்த பிறகு அந்த குழந்தையோடு வந்து அய்யாவை வழிபட்டு செல்கின்றனர். அப்போது அந்த குழந்தைக்கு முடி இறக்கி காணிக்கை செலுத்துகிறார்கள்.

    பெண் குழந்தையாக இருந்தால் காதுகுத்தியும் செல்கின்றனர்.அய்யா வைகுண்ட சாமி தலைமை பதியில் தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் தேங்காய் எண்ணையையும் காணிக்கையாக வழங்கி வருகிறார்கள்.

    மேலும் பதியில் தங்கி இருப்பவர்களுக்கு வஸ்திரங்கள் வாங்கி கொடுத்து வருகிறார்கள். அன்னதர்மம், கருப்புகட்டி தர்மம், பழ தர்மங்கள் மிகச்சிறந்ததாக விளங்கி வருகிறது. நினைத்தது நிறைவேறியதும் தர்மம் வழங்குவதே இங்கு பிரதான ஒன்றாக உள்ளது.

    நோய்கள் குணமாக சிலர் சாமித்தோப்பு பதிவில் தங்கியிருந்து தினமும் காலை மற்றும் மாலையில் முத்திரி கிணற்றில் பதம் இட்டு வழிபாடு செய்து வருகிறார்கள். நோய் குணமாகிய பிறகு இங்கிருந்து வீடுகளுக்கு திரும்பி செல்கிறார்கள். இதன்மூலம் அய்யாவை நம்பி வந்தவர்களை வாழவைக்கும் புண்ணிய பூமியாக சாமிதோப்பு விளங்கி வருகிறது.

    புண்ணிய பூமியாக விளங்கும் சாமிதோப்பு. நினைத்த காரியத்தை நிறைவேற்றி கொடுக்கும் அய்யா வைகுண்டர்.

    • ஆண்டுதோறும் மாசி தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக நடக்கும்.
    • தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.

    கோவை:

    கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசித் தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும் வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.

    8-ம் நாளான நேற்று காலை 5 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், மாலை 4.30 மணிக்கு உற்சவர் அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் அம்மன் திருவீதி உலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று பிற்பகலில் நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 4 மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேர்நிலை திடலான ராஜவீதியில் இன்று காலை முதலே பக்தர்கள் திரண்டனர். அவர்கள் தேரில் எழுந்தருளிய கோனியம்மனை வழிபட்டுச் சென்றனர். மதியத்துக்கு பிறகு ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் திரண்டது.

    லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரோட்டத்தை கண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு முன் எச்சரிக்கையாக ரத வீதிகளில் மின் தடை செய்யப்பட்டிருந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானங்கள் வழங்கப்பட்டது. மேலும் தண்ணீர், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.

    • 10-ம் திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
    • 11-ம் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருவிழா வில் குடவருவாயில் தீபாரா தனையும், 7-ம்திருவிழாவில் காலையில் வெட்டி வேர் சப்பர பவனியும், மதியம் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.

    8-ம்திருவிழா அன்று அதிகாலையில் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதி உலாவும், மதியம் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    11-ம் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 12-ம் திருவிழாவான இன்று இரவு 7மணியளவில் சுவாமி அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெரு விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
    • கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது.

    தென்காசி:

    தென்காசியில் பழமையான காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெரு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான மாசி மகப்பெருவிழா கடந்த 15-ந்தேதி சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

    கோவிலின் நடை திறக்கப்பட்டு கொடிப் பட்ட ரத வீதி உலாவும், பின்னர் கொடி மரத்திற்கு 11 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்க ப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது.

    விழாவின் 9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் காசி விஸ்வநாதர் மற்றும் உலக அம்மன் பக்தர்களுக்கு கட்சி அளித்தனர். தேரை திரளான பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பொதுமக்கள் பலர் அன்னதானம் மற்றும் மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர். மாசி மக பெருந்திரு விழாவில் வருகிற 28-ந்தேதி பச்சை சாத்தியுடன் கூடிய தாண்டவ தீபாராதனை நடைபெற உள்ளது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப் படிதாரர்கள் செய்துள்ளனர்.

    • அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • நாளை இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

    மேலும் 7-ம் திருவிழாவான 20-ந்தேதி சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி எழுந்தருளல், 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலையில் வெள்ளை சாத்தி கோலத்திலும், அதனை தொடர்ந்து சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

     காலை 6.30 மணிக்கு விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து 7.15 மணிக்கு நிலையம் சேர்ந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

     தேரோட்டத்தை மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    தேரோட்டத்தில் மாலைமுரசு இயக்குனர் கதிரேசன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித் குமார், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில பொது செயலாளர் டாக்டர் அரசு ராஜா, ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன், தி.மு.க. மாநில விவசாய அணி கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் குமர குருபரஆதித்தன், வரதராஜ ஆதித்தன், ஹெட் கேவார் ஆதித்தன், சபேஷ் ஆதித்தன், அசோக்குமார் ஆதித்தன், தனிகேசவ ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகநாதன் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேரானது நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தொடர்ந்து அம்பாள் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    11-ம் திருவிழாவான நாளை இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. சுவாமியும், அம்பாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    நாளை மறுநாள் 12-ம் திருவிழா அன்று மாலை 7 மணி அளவில் சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    • சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.
    • பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    8-ம் திருநாளான நேற்று அதிகாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    தொடர்ந்து மேலக்கோவிலில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சைநிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சைநிற கடைசல் சப்பரத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    9-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு நடக்கிறது. 11-ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவில் தெப்பத் திருவிழா நடைபெறும்.

    ×