search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கம் கடத்தல்"

    • பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகள் ஒவ்வொருவராக பரிசோதனை செய்யப்பட்டனர்.
    • தங்கம் கடத்தி வந்த 4 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை தீவிர சோதனை செய்தனர். அப்போது துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகள் ஒவ்வொருவராக பரிசோதனை செய்யப்பட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக 4 பயணிகள் இருந்தனர். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தொப்பி, முழங்கால் மற்றும் உடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் 4 பேரிடம் இருந்து 3 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.77 கோடி ஆகும். தங்கம் கடத்தி வந்த 4 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பெயர், விவரம் வெளியிடப்படவில்லை.

    • கரிப்பூர் விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 6 பயணிகளும் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது கரிப்பூர் விமான நிலையம். சர்வதேச விமான நிலையமான இது, கோழிக்கோட்டுக்கு அருகே இருக்கிறது. சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகிறது.

    இதனால் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பரபரப்பான விமான நிலையமாக திகழ்ந்து வருகிறது. அரபு நாடுகளில் இருந்து விமானம் வருவதால் அங்கிருந்து தங்கத்தை கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    அதனை கண்காணிக்கும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரிப்பூர் விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதனடிப்படையில் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 6 பயணிகள் சிக்கினர்.

    துபாயில் இருந்து பயணம் செய்து வந்த கோழிக்கோடு கொடுவள்ளி பகுதியை சேர்ந்த முகம்மது மித்லாஜ் (வயது21) என்பவர் தனது பையில் தாள் வடிவில் 985 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தார். அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதேபோன்று கொடு வள்ளி பகுதியை சேர்ந்த பஷீர்(40), கோழிக்கோடு சவுர்காடு பகுதியை சேர்ந்த அஜீஸ் (45), மலப்புரத்தை சேர்ந்த சமீர்(34), அப்துல் சக்கீர்(34), லிகீஷ்(40) ஆகிய 5 பேர் கேப்சூலுக்குள் தங்கத்தை வைத்து விழுங்கி வயிற்றுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தனர்.

    ஸ்கேன் செய்தபோது, அவர்களது குடலுக்குள் கேப்சூல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை வெளியே எடுத்து சோதனை செய்தபோது கேப்சூலுக்குள் தங்கம் இருந்தது தெரியவந்தது. பஷீரிடம் 619 கிராம், அஜீசிடம் 970 கிராம், சமீரிடம் 1,277 கிராம், சக்கீரிடம் 1,066 கிராம், லிகீசிடம் 543 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 6 பயணிகளும் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 5.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அவற்றின் மதிப்பு ரூ.3கோடி ஆகும்.

    • ஒரு பெண் பயணி, கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்றார்.
    • பெண் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    துபாயில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கொச்சி நெடும்பச்சேரி விமான நிலையத்தில் துபாய் விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு பெண் பயணி, கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்றார். அவர் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது உடலில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண், சானிட்டரி நாப்கினுக்குள் வைத்திருந்த 679 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.29 லட்சம் ஆகும். சானிட்டரி நாப்கினுக்குள் மறைத்துவைத்து தங்கத்தை கடத்தி வந்த அந்த பெண் திருப்பூரை சேர்ந்தவர் ஆவார். அவரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுங்கத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டுமே சொல்லக்கூடிய பகுதிக்கு சுங்கத்துறை ஓட்டுனர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்.
    • பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 56 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட் , ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமானங்களை இண்டிகோ, ஸ்கூட்டர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மலிந்தோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகிறது.

    இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது விமான நிலையத்தில் சுங்கத்துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த குமார் என்பவர் வேகமாக வெளியேறுவதை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரை பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை வெளியே எடுத்து செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த அறந்தாங்கி சேர்ந்த நடராஜன் (வயது 43) பயணி கொண்டு வந்த ஒரு கிலோ தங்கத்தை வெளியே கொண்டு வருவதற்கு உதவி செய்ததாக தெரிய வருகிறது.

    மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல முடியாத சோதனை மையத்தை சுங்கத்துறையின் ஓட்டுநர் தாண்டிச் சென்று பயணியிடமிருந்து தங்கத்தை பெற்று வெளியே கொண்டு செல்ல முயன்றபோது பிடிபட்டுள்ளார்.

    இந்த தங்கத்தை விமான நிலையத்தில் வெளியே பார்க்கிங் பகுதியில் காத்திருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த டேனியல் மைக்கேல் என்பரிடம் கொடுப்பதற்கு முற்பட்டதாக தெரிய வருகிறது.

    இதனைத் தொடர்ந்து தங்கத்தை பெறுவதற்காக காத்திருந்த டேனியல் மைக்கையும் சுங்கத்துறையினர் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வெளிநாடுகளில் இருந்து பலமுறை தங்கத்தை கொண்டு வந்து ஓட்டுநரின் உதவியுடன் வெளியே கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்ததாக தெரிய வருகிறது.

    மேலும் சுங்கத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டுமே சொல்லக்கூடிய பகுதிக்கு சுங்கத்துறை ஓட்டுனர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் எனவும்,

    இந்த கடத்தலுக்கு அதிகாரிகள் யாரேனும் உடந்தையாக இருந்தார்களா? எனவும் சுங்கத்துறையின் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த கடத்தலில் பங்கு பெற்ற மூவரையும் கைது செய்ய சுங்கதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் சுங்கத்துறை ஓட்டுனர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் தெரிய வருகிறது.

    நேற்று இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 56 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த இரண்டு வாரத்திற்கு முன் 2.92 கோடி ரூபாய் மிதிப்பிலான தங்கம் பறிமுதல்
    • தற்போது 2.06 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

    வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு, லக்கேஜ் வைக்கும் டிராலியில் மறைத்து தங்கம் கடத்த முயன்றதாக உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 5,319 கிராம் எடையுள்ள 50 தங்க செயின்கள் பறிமுதல் செய்திருந்தனர். இதன் மதிப்பு 2.92 கோடி ரூபாய் ஆகும்.

    இந்த நிலையில் இன்று குவைத் நாட்டைச் சேர்ந்த மூன்று பயணிகள் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களின் உடைமைகளை பரிசோதித்தனர். அப்போது 4 கிலோ தங்கத்தை வெள்ளி முலாம் பூசி மறைத்து கொண்டு வந்ததை கண்டு பிடித்தனர்.

    அதனைத் தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்து, மூன்று பேரையும் கைது செய்தனர். இதன் மதிப்பு 2.06 கோடி ரூபாய் ஆகும். கைது செய்யப்பட்ட அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • தங்கக்கடத்தலில் ஈடுபடும் நபருக்கு கடத்தும் தங்கத்தின் அளவைப் பொறுத்து டிரிப் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் கூலி கொடுப்பதாக சொல்கிறார்கள்.
    • விமான நிலையங்களில் பல கட்ட கண்காணிப்பு, சோதனைகள் இருந்த போதிலும் கடத்தல் தங்கம் தொடர்ச்சியாக பிடிபடுவது ஆச்சரியத்தையும் வியப்பையும் அளிக்கிறது.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணி மறைத்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 300 கிராம் தங்கம் பிடிபட்டது. சென்னை விமான நிலையத்தில் ஸ்க்ரூ, கம்பி, பேட்டரியில் மறைத்து கடத்தி வரப்பட்ட சுமார் 1 கிலோ 200 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இது போன்ற செய்திகள் நாளும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிறது. கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலைமுடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்சம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவி என நூதன முறையில் கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வருவது சுவாரசியம் தரக்கூடிய செய்தியாக மாறி உள்ளது.

    இவர்கள் "ரூம் போட்டு யோசிப்பாங்களோ?"னு வடிவேலு பாணியில்தான் கேட்கத் தோன்றுகிறது.

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை 5 ஆயிரத்து 264 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ. 3 கோடியே 16 லட்சத்து 12 ஆயிரமாகும்.

    கடந்த 2020 முதல் 2023 பிப்ரவரி வரையிலான மூன்றாண்டு காலத்தில் மட்டும் நாடு முழுவதும் தங்கம் கடத்தல் தொடர்பாக சுமார் 9, 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளில் 8, 956.49 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு விமான நிலையங்கள் வழியே தங்கம் கடத்தப்படுவதில் கேரளம் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் இருக்கிறது.

    3-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இவை மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சௌத்ரி வழங்கிய அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள். நமது பாரத தேசத்தின் தங்க தேவை ஆண்டொன்றுக்கு 800 டன் என்கிறார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கு தங்கம் விமானம் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வருவதாக கவலையுடன் குறிப்பிடுகிறது உலக தங்க கவுன்சில்.

    தங்கம் இறக்குமதி தொடர்பான அரசின் கட்டுப்பாடுகள், விதிக்கப்படும் அளவுக்கு அதிகமான வரிகள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. தற்போது இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி. என 18.45 சதவீதம் வரை தங்கத்திற்கு வரி விதிக்கப்படுகிறது.

    கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு ஆண்டில் தங்க கடத்தலின் அளவு அதிகரித்திருப்பதையடுத்து, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 12.5% லிருந்து 7.5% ஆக குறைக்க மத்திய அரசு தற்போது பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

    திருச்சி, சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு அதிகம் விமானங்கள் இயக்கப்படுகிறது.

    மேற்கண்ட நாடுகளில் தங்கத்தின் மச்சம் (தரம்) சரியாக இருக்கும் என்பதாலேயே அதிகளவில் தங்கம் வளைகுடா நாடுகளிலிருந்து கடத்தி வரப்படுகிறது.

    முழுக்க முழுக்க இத்தகைய தங்கக்கடத்தல் என்பது உள்ளூர் மார்க்கெட்டை சார்ந்து தான் நடைபெறுகிறது.

    இதற்கென்று பாரம்பரியமான வலை பின்னலை மிகக்கச்சிதமாக கட்டமைத்து வைத்திருக்கிறார்கள்.

    ஒரு முறை தங்கக்கடத்தலுக்காக பயணிக்க குருவி (கடத்தல்காரர்) ஒருவருக்கு மிகக்குறைந்தபட்சம் 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் வரை செலவு செய்கிறார்கள்.

    தங்கக்கடத்தலில் ஈடுபடும் நபருக்கு கடத்தும் தங்கத்தின் அளவைப் பொறுத்து டிரிப் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் கூலி கொடுப்பதாக சொல்கிறார்கள்.

    இதில் தினமும் சிக்குவது சிறிய வியாபாரிகள். பெரிய திமிங்கலங்கள் சத்தம் இல்லாமல் தப்பி சென்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பொதுவாக இருக்கிறது.

    கல்லூரி மாணவர்கள் தங்களின் ஆடம்பர செலவுகளுக்காக குருவிகளாக மாறி கடத்தலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கடத்தலில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டால் அதன் உரிமையாளர்கள் கடத்தல் தங்கத்திற்கான முழு வரியையும் செலுத்தி தங்கத்தையும் மாணவனையும் மீட்டு விடுகிறார்கள்.

    இதனை சாதாரணமாக சில மாணவர்கள் பகுதி நேர வேலையாக தொடர்ச்சியாக பார்த்து வருகிறார்கள்.

    விமான நிலையங்களில் பல கட்ட கண்காணிப்பு, சோதனைகள் இருந்த போதிலும் கடத்தல் தங்கம் தொடர்ச்சியாக பிடிபடுவது ஆச்சரியத்தையும் வியப்பையும் அளிக்கிறது. விமான நிலையங்களில் பிடிபடும் தங்கத்தை விட கடத்தப்படும் தங்கத்தின் அளவு பல மடங்கு அதிகம் என சொல்கிறார்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு சப்தமில்லாமல் நடக்கிறது. அதிகாரிகள் நேர்மையாக இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விமானத்தில் 2 பயணிகள் தங்களது உடைமைகளை 5 அட்டை பெட்டிகளில் பிரித்து அதனை கார்கோ பிரிவில் அனுப்பியிருந்தனர்.
    • விசாரணையில் அந்த பயணிகள் இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் துபாயிலிருந்து திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    இந்த விமானத்தில் 2 பயணிகள் தங்களது உடைமைகளை 5 அட்டை பெட்டிகளில் பிரித்து அதனை கார்கோ பிரிவில் அனுப்பியிருந்தனர்.

    பின்னர் அந்த பொருட்களை திருச்சி விமான நிலையத்தில் பெற்று கொள்ள வந்த போது அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது அவர்களது உடமைகளின் மீது துகள் வடிவில் தங்கம் பூசப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக முற்பட்ட போது அந்த இரு நபர்களில் ஒருவர் முனைய வளாகத்தில் இருந்து தப்பி ஓடினார்.

    அதிர்ச்சியடைந்த சுங்கத்திரை அதிகாரிகள் அவரை 2 கி.மீ. தூரம் சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்து மீண்டும் விசாரணைக்காக அழைத்து வந்தனர் .

    விசாரணையில் அந்த பயணிகள் இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து சுமார் 920 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் இந்திய மதிப்பு ரூ. 55 லட்சத்து 22 ஆயிரம் என தெரிய வருகிறது.

    • ஐந்து கிலோ எடைகொண்ட 50 செயின்கள் பறிமுதல்
    • யாருக்காக பதுக்கி கொண்டு வந்தார்கள் என அதிகாரிகள் விசாரணை

    டெல்லி விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்: உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 8 பேர் கைதுடெல்லி விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு மறைத்து கொண்டு வந்த ஐந்து கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று பெண்கள் உள்பட 8 உஸ்பெகிஸ்தானியர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

    அவர்களிடம், தங்கத்தை யாருக்காக கொண்டு வந்துள்ளனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து 5,319 கிராம் எடைகொண்ட 50 தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 2.92 கோடி ரூபாய் ஆகும்.

    தற்போது விமான நிலையத்தில் உள்ள லக்கேஜ் டிராலியில் தங்கத்தை கடத்துவது அதிகரித்து வருவதாக அதிகாரகிள் தெரிவித்தனர்.

    ரகசிய தகவலின்படி அதிகாரிகள் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களை வருகைக்கான வாசல் பகுதியில் இடைமறித்து சோதனை செய்தனர். அப்போது லக்கேஜ் டிராலியில் பேஸ்ட் வைத்து ஒட்டி மறைத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    • ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
    • பையில் களிமண் போன்ற பொருளுடன் தங்க துகள்கள் கலந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

    மதுரை:

    சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    எனவே அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தினர். ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், அவர் கொண்டு வந்த உடைமைகளையும் பரிசோதித்தனர்.

    அப்போது அவர் கொண்டு வந்த பையில் களிமண் போன்ற பொருளுடன் தங்க துகள்கள் கலந்து கடத்தி வந்தது தெரியவந்தது. களிமண்ணில் இருந்து தங்கத்துகள்களை அதிகாரிகள் பிரித்து எடுத்தபோது, ரூ.59 லட்சத்து 28 ஆயிரத்து 210 மதிப்புள்ள 995 கிராம் எடை கொண்ட கடத்தல் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இலங்கைக்கு கடத்திச் செல்லும் போதை பொருட்களுக்கு பணத்தை இலங்கையைச் சேர்ந்தவர்கள் நேரடியாக படகோட்டியிடம் கொடுக்க மாட்டார்கள்.
    • ஏழை, எளிய மீனவர்கள் மத்தியில் பணத்தாசையைத் தூண்டி அவர்களைக் கடத்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்பட கடலோர மாவட்டங்கள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு போதைப்பொருள் உள்ளிட்டவை தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் சர்வதேச கடல் எல்லை வழியாக சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகம் நடைபெறுகிறது.

    இதனை தடுக்க இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பல்கள் மணல்திட்டு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வான்வெளியிலும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள், முழு வீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறது.

    இந்த நிலையில் நேற்று இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு கடத்தி வந்த 9 கிலோ தங்கம் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.6 கோடியாகும். இது தொடர்பாக தங்கச்சிமடத்தை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்பட்ட 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். சமீபகாலமாக அதிக அளவு கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவது பெரும் சவாலாக உள்ளது.

    இதற்கிடையே இதுபோன்ற கடத்தல் தொழிலுக்கு ஏழை, எளிய மீனவர்களை கடத்தல்காரர்கள் மூளை சலவை செய்து மீன்பிடி படகுகளை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறுதான் இலங்கையில் இருந்து போதைப் பொருட்களைக் கச்சிதமாக கடத்தி செல்வதும், பதிலுக்கு தங்கம் கடத்தி வருவதும் தொடர்கிறது.

    ராமேசுவரம் கடல் பகுதியில் நடக்கும் கடத்தல் குறித்து விசாரித்தபோது, குறைந்த நாட்களில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் வசதி படைத்தவர்கள் கூட கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், தமிழக கடற்கரையில் இருந்து படகில் ஏற்றி விடும் பொருட்களை நடுக்கடலில் நிற்கும் இலங்கை படகிற்கு கை மாற்றி விட்டால் மட்டும் போதும், குறிப்பிட்ட பணம் அல்லது தங்கம் கைமாறாக கொடுத்துவிடுவார்கள்.

    அந்த வகையில்தான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மீறி சர்வதேச கடல் வழியாக தமிழகத்திற்குள் படகில் பல கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:-

    சில நேரங்களில் கடற்படை துரத்தும்போது சில படகுகள் நடுக்கடலில் கவிழ்ந்து படகில் செல்பவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இலங்கையில் இருந்து இத்தனை கிலோ கஞ்சா தேவை என்ற தகவல் முதலில் குறுஞ்செய்தியாக வரும். ஆனால் இப்போது வாட்ஸ்அப் அழைப்பு மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. இந்த அழைப்பை போலீசார் இடைமறித்துக் கேட்க முடியாது என்பதால் அதன் மூலம் தொடர்பு கொள்கின்றனர்.

    இலங்கைக்கு கடத்திச் செல்லும் போதை பொருட்களுக்கு பணத்தை இலங்கையைச் சேர்ந்தவர்கள் நேரடியாக படகோட்டியிடம் கொடுக்க மாட்டார்கள். கஞ்சாவுக்கு பணத்தை தமிழகத்தில் உள்ள சில நபர்களின் தொடர்பு எண்ணைக் கொடுத்து அவர்களைத் தொடர்பு கொண்டு பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு சொல்வார்கள். அந்த எண்ணைத் தொடர்பு கொண்டால், குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி அங்கு வைத்து அந்தப் பணத்தை வாங்கி கொள்வது பழக்கமாக இருந்து வருகிறது.

    ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தொலைபேசி எண்கள், வெவ்வேறு நபர்களிடம் இருந்து பணம் பெற்று கொள்வார்கள். ஆனால் பல நேரங்களில் பணத்திற்குப் பதிலாக அதற்கு நிகரான மதிப்பு கொண்ட தங்க கட்டிகள் இலங்கையிலிருந்து கொடுத்து விடப்படும். பண நெருக்கடியில் இருக்கும் ஏழை, எளிய மீனவர்கள் மத்தியில் பணத்தாசையைத் தூண்டி அவர்களைக் கடத்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பது வேதனைக்குரியது.

    பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மீறி சர்வதேச கடல் வழியாக தமிழகத்திற்குள் படகில் தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவத்தில் மண்டபம் அருகே வேதாளையை சேர்ந்த நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்பதால் அவர்களது வீடுகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் வந்த 4 பேரையும் கைது செய்தனர்.
    • கடத்தலில் தொடர்புடைய நபர்கள் வேதாளை கிராமத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் படகில் சென்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த நாட்டுப்படகை மறித்து அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் படகில் சோதனையிட்டனர். இதில், படகில் சுமார் 10 கிலோ எடை தங்கம் இருந்தது தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் வந்த 4 பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட நபர்களை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த கடத்தலில் தொடர்புடைய நபர்கள் வேதாளை கிராமத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த கிராமத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

    • சிலர் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 5 இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சிலர் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.2.56 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்று தங்கத்தை கொண்டு வந்திருந்தனர். இது தொடர்பாக 5 இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×