search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவுக்கு வந்த விமானத்தில் ரூ.3 கோடி தங்கம் கடத்திய 6 பயணிகள் கைது
    X

    கேரளாவுக்கு வந்த விமானத்தில் ரூ.3 கோடி தங்கம் கடத்திய 6 பயணிகள் கைது

    • கரிப்பூர் விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 6 பயணிகளும் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது கரிப்பூர் விமான நிலையம். சர்வதேச விமான நிலையமான இது, கோழிக்கோட்டுக்கு அருகே இருக்கிறது. சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகிறது.

    இதனால் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பரபரப்பான விமான நிலையமாக திகழ்ந்து வருகிறது. அரபு நாடுகளில் இருந்து விமானம் வருவதால் அங்கிருந்து தங்கத்தை கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    அதனை கண்காணிக்கும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரிப்பூர் விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதனடிப்படையில் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 6 பயணிகள் சிக்கினர்.

    துபாயில் இருந்து பயணம் செய்து வந்த கோழிக்கோடு கொடுவள்ளி பகுதியை சேர்ந்த முகம்மது மித்லாஜ் (வயது21) என்பவர் தனது பையில் தாள் வடிவில் 985 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தார். அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதேபோன்று கொடு வள்ளி பகுதியை சேர்ந்த பஷீர்(40), கோழிக்கோடு சவுர்காடு பகுதியை சேர்ந்த அஜீஸ் (45), மலப்புரத்தை சேர்ந்த சமீர்(34), அப்துல் சக்கீர்(34), லிகீஷ்(40) ஆகிய 5 பேர் கேப்சூலுக்குள் தங்கத்தை வைத்து விழுங்கி வயிற்றுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தனர்.

    ஸ்கேன் செய்தபோது, அவர்களது குடலுக்குள் கேப்சூல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை வெளியே எடுத்து சோதனை செய்தபோது கேப்சூலுக்குள் தங்கம் இருந்தது தெரியவந்தது. பஷீரிடம் 619 கிராம், அஜீசிடம் 970 கிராம், சமீரிடம் 1,277 கிராம், சக்கீரிடம் 1,066 கிராம், லிகீசிடம் 543 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 6 பயணிகளும் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 5.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அவற்றின் மதிப்பு ரூ.3கோடி ஆகும்.

    Next Story
    ×