என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடிநீர் தட்டுப்பாடு"
- சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
- வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
சென்னை:
சென்னை போரூர் சிக்னல் அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக சாலையில் ஓடியது. இந்த தண்ணீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
?LIVE : சென்னை போரூர் சிக்னல் அருகே, குடிநீர் குழாயில் உடைப்பு https://t.co/gWAl4ojTo4
— Thanthi TV (@ThanthiTV) March 24, 2024
- மழை கைகொடுத்தால் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணமுடியும்.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
வருசநாடு:
வைகை அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை, வருசநாடு, அரசரடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை முற்றிலும் ஓய்ந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மூல வைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மூல வைகையாறு முற்றிலும் வறண்டு வருகிறது. குறைந்த அளவே தண்ணீர் வருவதால் பொதுமக்கள் மிகவும் கவலையடைந்து உள்ளனர். இதன் காரணமாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மழை கைகொடுத்தால் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணமுடியும். மூல வைகையாற்றில் நீர்வரத்து இல்லாததால் வைகை அணைக்கு 5 கனஅடி நீர் மட்டுமே வருகிறது.
அணையின் நீர்மட்டம் 64.52 அடியாக உள்ளது. பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4525 மி.கனஅடியாகும்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.20 அடியாக உள்ளது. 42 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 110.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
- பல நாட்களாக குடிநீர் இன்றி இப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
- அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியாம்பட்டி ஊராட்சியில் காமராஜர் நகர் பெரியாம்பட்டி, புல்லுக்குறிச்சி, ஜொல்லம்பட்டி, காசி கொல்லன் கொட்டாய், உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இதில் புள்ளுக்குறிச்சி, காமராஜர்நகர், பெரியாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மாதத்திற்கு ஒரு முறை ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் உள்ளூரில் வழங்கப்படும் உப்பு தண்ணீர் கூட வழங்கப்படுவதில்லை.
பல நாட்களாக குடிநீர் இன்றி இப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
தொடர்ந்து ஊராட்சி , மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறியிட்டும் எவ்வித நடவடிக்கை இல்லை .
இதனால் குடிநீர் இன்றி அவதி அடைந்து வந்த காமராஜர் நகர் ,புல்லுக்குறிச்சி, பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த பெண்கள் பொதுமக்கள் காலி குடும்பங்களுடன் தர்மபுரி-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பெரியாம்பட்டிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் இன்று காலை குடிநீர் கேட்டு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர் .
சாலை மறியல் ஈடுபட்டு வந்த பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் உதயசங்கர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
- தோட்டம், கட்டுமான வேலை, நீரூற்று சாலை அமைக்கும் பணிக்கு குடிநீரை பயன்படுத்த தடை.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வழக்கத்திற்கு மாறாக கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தண்ணீர் தட்டுப்பாடு நிலவியுள்ளது. கர்காடகா மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், தனது வீட்டின் ஆழ்துளை கிணற்றில் கூட தண்ணீர் வறண்டு விட்டது எனத் தெரிவித்திருந்தார்.
இதனால் பெங்களூரு மக்களுக்கு குடிநீர் கிடைக்க அம்மாநில அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா நீர் வாரியம் குடிதண்ணீரை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
கார் கழுவுதல், தோட்டம், கட்டுமான வேலை, நீரூற்று சாலை அமைக்கும் பணி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்கு குடிநீரை பயன்படுத்த கர்நாடகா நீர் வாரியம் தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவை மீறினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பருவமழை சரியான அளவிற்கு பெய்யாத காரணத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பெங்களூரு:
கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
பெங்களூருவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கர்நாடக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடக துணை முதல் மந்திரி கே.டி.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் இந்தப் பிரச்சனையை மிக மிக தீவிரமாகப் பார்க்கிறேன். அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியுள்ளேன்.
அனைத்து தொட்டிகளையும் கையகப்படுத்தி அனைத்து நீர் கிடைக்கும் இடங்களையும் கண்டறிந்து வருகிறோம். 217 சுரங்கங்கள் முயற்சி செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு நகரில் 3,000க்கும் மேற்பட்ட போர்வெல்கள் வறண்டுவிட்டன. காவிரியில் இருந்து என்ன தண்ணீர் வருகிறதோ அதுதான் வருகிறது.
எனது வீட்டில் உள்ள போர்வெல் உள்பட அனைத்து போர்வெல்களும் வறண்டு கிடக்கின்றன என தெரிவித்தார்.
- தண்ணீர் என்பது யாருடைய சொத்தும் இல்லை.
- கர்நாடகாவில் பால் உற்பத்தி குறைந்துள்ளது.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்வது தொடர்பாக துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் பெங்களூரில் நிலவும் குடிநீர் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று விவாதிக்கப்பட்டது. பின்னர் டி.கே.சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூர் மாநகராட்சி பகுதியில் 14 ஆயிரத்து 781 ஆழ்துளை கிணறுகள் உள்ளது. அவற்றில் 6,997 ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. தண்ணீர் என்பது யாருடைய சொத்தும் இல்லை. இது அரசின் சொத்து. எனவே பாசன மற்றும் தனியார் போர்வெல்களில் தண்ணீர் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்வோம். இதற்காக போர்வெல் உரிமையாளர்களுக்கு ஓரளவு இழப்பீடு வழங்கப்படும். மேலும் நகரில் புதியதாக ஆழ்துளை கிணறுகளும் தோண்டப்படும்.
காவிரி 5-ம் கட்ட திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மே மாதம் இறுதிக்குள் பெங்களூர் சுற்றுப் பகுதிகளில் உள்ள 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்கப்படும். 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பைப் லைன் அமைப்பதில் சிறிய பிரச்சினை உள்ளது. அந்த இடத்தை பார்வையிட்டு பிரச்சினைகளை சரிசெய்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை வியாழக்கிழமைக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அதிகாரிகள் பதிவு செய்யாத தண்ணீர் டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்வார்கள்.
தற்போது கர்நாடகாவில் பால் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் சில பால் டேங்கர்கள் பயன்படுத்தப்படாமல் கிடப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே அவற்றை சுத்தம் செய்து பெங்களூரு நகருக்கு குடிநீர் வினியோகம் செய்ய பயன்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டேங்கர் லாரிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- குடிநீர் டேங்கர் லாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பெங்களூர்:
கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இதை குடிநீர் டேங்கர் லாரி வைத்திருப்பவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிகளவில் வசூல் செய்து வருகின்றனர். இதுவரை 12ஆயிரம் லிட்டர் டேங்கர் லாரி ரூ.700 முதல் ரூ.800 வரை வசூலித்து வந்தனர். ஆனால் தற்போது அவர்கள் ரூ.1800 முதல் ரூ.2ஆயிரம் வரை வசூலித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குடிநீர் டேங்கர் லாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பிரச்சினை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.
இதுகுறித்து கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் கூறும்போது, பெங்களூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யும் டேங்கர்களை மாநில அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.
மேலும் பெங்களூரில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் எனது துறை மானியத்தில் இருந்து ஏற்கனவே 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளேன். இதுதொடர்பான சிறப்பு கூட்டம் இன்று மதியம் நடத்தப்படும் என்றார்.
இதற்கிடையே பெங்களூர் மாநகராட்சி தண்ணீர் டேங்கர் லாரிகள் வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனங்களில் அனுமதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. பெங்களூரு பகுதியில் 60 டேங்கர் லாரிகள் மட்டுமே உரிமம் பெற்றுள்ள நிலையில் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் இயங்கி வருவதாக மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அனுமதி இன்றி இயக்கப்படும் டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
- குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
- பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சபரிநகரில் கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் திடீரென அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு இன்று காலை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆறுமுத்தாம்பாளையம் - திருப்பூர் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார், பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
- கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
- 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன.
ஏரியூர்:
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சித்திரப்பட்டி, செல்லமுடி, முழியான் காடு, நரசிமேடு, அருந்ததியர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொது மக்கள் இன்று ஏரியூர் -மேச்சேரி பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திடம் கடும் வாக்கு வாதம் செய்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டத்தால் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் பாதி வழியில் தவித்து வரும் மாணவ மாணவிகளின் நலன் கருதி போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக ஏரியூர் மேச்சேரி பிரதான சாலையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி பேருந்துகளும், 5 வேன்களும், 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- கடந்த சில நாட்களாக இந்த பகுதிக்கு குடிநீர் சரவர வினியோகிக்கபப்டவில்லை என தெரிகிறது.
- ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் திடீரென்று ஆலங்குடி சாலையில் திரண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் காந்தி நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்த பகுதிக்கு குடிநீர் சரவர வினியோகிக்கபப்டவில்லை என தெரிகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இன்று காலையும் குடிநீர் சரிவர வரவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் இன்று காலை திடீரென்று ஆலங்குடி சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்டநேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலந்து சென்றனர்.
இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
- மழை நின்ற பிறகும் அணையின் நீர் மட்டம் 71 அடியில் நின்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறையத் தொடங்கியது.
- வைகை பூர்வீக பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் பருவமழை கைகொடுத்ததால் கடந்த மாதம் 70 அடிக்கு மேல் எட்டியது. அதன் பிறகு கடந்த 6-ந் தேதி முழு கொள்ளளவான 71 அடியை எட்டியதால் அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்பட்டது.
இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மழை நின்ற பிறகும் அணையின் நீர் மட்டம் 71 அடியில் நின்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறையத் தொடங்கியது. இருந்த போதும் வைகை பூர்வீக பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 70.10 அடியாக உள்ளது. வரத்து 910 கன அடியாக உள்ளது. பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை குடிநீருக்காக மட்டும் 69 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5873 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.70 அடியாக உள்ளது. வரத்து 134 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 6294 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.75 அடி. வரத்து 21 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 430.23 மி.கன அடி.
சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.28 அடி. வரத்து 34 கன அடி. திறப்பு 25 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.
- பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
- ஈரோட்டுக்கு வந்த வாகனங்கள் சாலையின் இரு புறம் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி 1-வது மண்டலத்தில் உள்ள 6-வது வார்டில் ஞானபுரம், பச்சைபாளிமேடு பகுதி உள்ளது. இங்குள்ள நூற்றுக்கணக்கான பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. அதுவும் தண்ணீர் மிகக்குறைந்த நேர அளவிலேயே திறந்து விடப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து 3 வாரத்திற்கு மேல் இதேநிலை நீடித்ததால் பகுதி சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் இன்று காலை திடீரென கனிராவுத்தர் பகுதியில் உள்ள ஈரோடு-சக்தி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் போட்டனர். இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வாகனங்கள், அதேபோல் சத்தியமங்கலம், கோபியில் இருந்து ஈரோட்டுக்கு வந்த வாகனங்கள் சாலையின் இரு புறம் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இது குறித்து தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் போலீசார், தாசில்தார் ஜெயக்குமார், வார்டு கவுன்சிலர் தமிழ்பிரியன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் கடந்த 3 வாரமாக சீரான குடிநீர் வராததால் பல்வேறு வகையில் அவதி அடைந்து வருகிறோம். எனவே சீரான முறையில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அப்போது குடிநீர் விநியோகிக்கப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதில் பிரச்சனை இருப்பதாகவும், தற்போது தான் அது குறித்து தெரிய வந்துள்ளதாகவும், உடனடியாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதைஏற்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்