search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரும்பு"

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுப்பதற்கான பொங்கல் தொகுப்புகளும் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கரும்பு கட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    கோவை,

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி ெகாண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்த ஆண்டும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் மற்றும் வேட்டி சேலை வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

    அதன்படி கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    இதற்காக கடந்த 3-ந் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனர்.

    குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுப்பதற்கான பொங்கல் தொகுப்புகளும் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு இன்று காலை கரும்பு கட்டுகள் வந்து இறங்கியது. இவை சேலம் மேட்டூரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கரும்பு கட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவை அனைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நாளை முதல் பொங்கல் தொகுப்பு அந்தந்த ரேஷன் கடைகளில் வழங்கப்படும். எனவே டோக்கன் பெற்றவர்கள் நாளை முதல் பொங்கல் தொகுப்பினை பெற்று கொள்ளலாம் என்றனர்.

    • ஷார்ஜா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.
    • கோவையில் இருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு கரும்பு அனுப்பப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு அனைத்து நாட்களும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஷார்ஜா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர். இதற்காக கோவையில் இருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு கரும்பு அனுப்பப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை-ஷார்ஜா இடையே இயக்கப்படும் விமானத்தில் ஒவ்வொரு முறையும் 2.5 டன் முதல் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து கரும்பு கோவைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் இங்கிருந்து ஷார்ஜா விமானத்தில் கொண்டு செல்ல புக்கிங் செய்யப்படுகிறது.

    இன்று முதல் ஷார்ஜாவுக்கு கரும்பு அனுப்பப்படுகிறது. முதல் நாளில் 1 டன்னுக்கு அதிகமாக கரும்பு புக்கிங் செய்யப்பட்டது. முழு கரும்பு கொண்டு செல்ல அதிக இடவசதி தேவைப்படுவதால், மற்ற பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும். இதனால் 400 கிலோ குறைத்து, 600 கிலோ கரும்பு மட்டும் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கரும்பு கொள்முதலில் இதுவரை எந்த முறைகேடு புகார்களும் எழவில்லை என்பது மனநிறைவு அளிக்கிறது.
    • 6 அடி உயரத்திற்கும் குறைவான கரும்புகளை தோட்டத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் ஆணையிடுகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக உழவர்களிடம் இருந்து நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரும்பு கொள்முதலில் இதுவரை எந்த முறைகேடு புகார்களும் எழவில்லை என்பது மனநிறைவு அளிக்கிறது.

    6 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட்டிருப்பதால் அதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். இதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. ஆனால், காலமும், சூழலும் இந்த விஷயத்தில் உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும்.

    6 அடி உயரத்திற்கும் குறைவான கரும்புகளை தோட்டத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் ஆணையிடுகின்றனர். அவ்வாறு அகற்றப்படும் கரும்புகள் வீணாகி விடும். பொங்கலுக்கு இன்னும் 8 நாட்கள் இருப்பதால் அகற்றப்படும் கரும்புகளை சந்தையிலும் விற்க முடியாது.

    கரும்பின் உயரம் சில காரணங்களால் குறைவது இயல்பு. இதில் உழவர்களின் தவறு எதுவும் இல்லை. அதனால் உழவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதனால், 5 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
    • 6.5 லட்சம் கார்டுகளுக்கு இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

    அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

    இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன.

    பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று தொடங்கிவைக்கிறார்.

    அன்றைய தினமே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

    பொங்கல் தொகுப்பை பெறுவதற்காக இன்று முதல் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

    தஞ்சை மாவட்டத்தில் 1185 ரேஷன் கடைகளில் உள்ள 6.5 லட்சம் கார்டுகளுக்கு இன்று முதல் டோக்கன்விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

    தஞ்சை கரந்தை சுஜானா கீழக்கரை பகுதியில் 4-வது வார்டு கவுன்சிலர் சுமதி இளங்கோவன், ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகித்தனர்.

    இதேப்போல் தஞ்சை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் டோக்கன் வினியோகம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    அந்த டோக்கனில் பொங்கல் தொகுப்பை பெறும் நாள், நேரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    அதைக் காட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    • அறுவடைக்கு கரும்புகள் தயார் ஆகிறது.
    • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலைவாசி உயர்வு காரணமாக சற்று கூடுதல் விலைக்கு விற்பனை ஆகும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    புதுக்கோட்டை:


    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு வார காலமே உள்ள நிலையில், வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் பகுதியில் ஒரு சில விவசாயிகள் மூலமாக, நடவு செய்துள்ள செங்கரும்புகள் தற்சமயம் அறுவடை செய்ய தயாராக உள்ளது. கடந்த ஆண்டுகளில் இப்பகுதியில் விளைந்த செங்கரும்புகள் பத்து கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று விவசாய தோட்டங்களில் ரூ.150 வரை விற்பனை ஆனது. மேலும் சரக்கு வேன் மூலமாக, வாங்கி சென்ற வியாபாரிகள் கடைகள் மற்றும் பொது இடங்களில் கொண்டு சென்று கட்டு ஒன்று ரூ.200 மற்றும் ரூ.250 வரை பேரம் பேசி விற்பனை செய்து வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலைவாசி உயர்வு காரணமாக சற்று கூடுதல் விலைக்கு விற்பனை ஆகும் எனவும் இப்பகுதி செங்கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.


    • பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று கரும்பு வழங்கப்படுகிறது.
    • மதுரை விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அவனியாபுரம்

    சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் பொங்கல் தொகுப்புடன் கரும்பையும் சேர்த்து வழங்கியதற்கு காரணம் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க.வின் போராட்டத்திற்கு பயந்து அல்ல.

    2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர் களுக்கு முழுமையாக ரூ.1000த்துடன் பொங்கல் தொகுப்பு மற்றும் கரும்பு இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் முறையாக கிடைக்கும். அதில் எந்த தங்கு தடை இருக்காது. அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் முடிவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மதுரை மாநகர் விவசாய அணி துணை அமைப்பாளர் மாணகிரி குணசேகர்,ஜெய ஹிந்துபுரம் நாகராஜன் உள்பட பலர் இருந்தனர்

    • பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
    • இந்த முடிவு அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

    சென்னை:

    பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பை வழங்கக் கோரி அ.தி.மு.க. சார்பில் ஜனவரி 2-ம் தேதி திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்தது.

    இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கக் கோரி தி.மலையில் ஜனவரி 2-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது என தமிழக அரசு எடுத்த முடிவு அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.

    கரும்பை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வந்த நிலையில், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.
    • பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது.

    பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 22-ந்தேதி அறிவித்தது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    அதில் அவர் கூறியுள்ளதாவது:

    பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் குறைந்த விலைக்கு கரும்பை விற்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.

    பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி டிசம்பர் 24-ந்தேதி தமிழ்நாடு அரசிடம் மனு அளித்தேன். அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

    • பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படாத கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்.

    பூதலூர்:

    பொங்கல் பரிசு தொகுப்பில் பொங்கல் கரும்பு வழங்கப்படாத கண்டித்தும், உடனடியாக பொங்கல் கரும்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய பிரிவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய பிரிவு பொதுச் செயலாளர் பூண்டி வெங்கடேசன் தலைமைவகித்தார். விவசாய அணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் நக்கீரன், திருக்காட்டுப்பள்ளி நகர தலைவர் சதீஷ்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் பழனி பிரபா, திருச்சி புறநகர் மாவட்ட விவசாய அணி தலைவர் சசி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேலும், நாளை கலெக்டர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக மாநில பொதுச் செயலாளர் பூண்டி வெங்கடேசன் தெரிவித்தார்.

    • நடவு செய்த 8 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை
    • வெளிச்சந்தையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை

    மடத்துக்குளம்,நவ.21-

    மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுப் பயிரான கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, கரும்புக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளிட்ட காரணங்களால் கரும்பு சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் குறைய தொடங்கியுள்ளது. தற்போது கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம் மட்டுமில்லாமல் சுற்று வட்டார தாலுகாக்களில் நடைபெற்று வரும் கரும்பு விவசாயத்தை அடிப்படையாக கொண்டு கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான கரும்பு விவசாயிகள் இந்த ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வழங்கி வந்தனர். இதனால் கரும்புக்கு சீரான விலை, நிரந்தர வருமானம் என்ற நிலை இருந்ததால் பல விவசாயிகள் ஆர்வமுடன் கரும்பு சாகுபடி செய்து வந்தனர்.

    இந்தநிலையில் சர்க்கரை ஆலையில் நிகழ்ந்த பல்வேறு குளறுபடிகளால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதாவது கரும்பு சாகுபடியை பொறுத்தவரை நடவு செய்த 8 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை செய்தால் மட்டுமே சரியான அளவில் சாறு இருக்கும். ஆனால் உரிய பருவத்தில் அறுவடை செய்ய நடவடிக்கை எடுக்காததால் சாறு வற்றி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பல கரும்பு விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு மாற்றுப்பயிர்களை நாடிச்சென்றனர்.

    சில விவசாயிகள் கரும்பை சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்யாமல், வெளிச்சந்தையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் உரிய பருவத்தில் அறுவடை செய்ய முடிவதுடன் லாபகரமானதாகவும் உள்ளது. அதே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்துக்கு சரியான விலை கிடைக்காத நிலை நீடித்து வருவதால் பலரும் வெல்ல உற்பத்தியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

    இதே நிலை நீடித்தால் வெல்லம் உற்பத்தியாளர்களும் கரும்பை வாங்க தயங்கும் சூழல் ஏற்படும். இதனால் பணப்பயிராக கருதப்படும் கரும்பு சாகுபடி படிப்படியாக குறையும் நிலை ஏற்படும். எனவே கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். குறிப்பாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தி உரிய பருவத்தில், உரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். குளறுபடிகளைக் களைந்து உரிய பருவத்தில் விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • நடப்பாண்டு கரும்பு அரவை, ஒரு லட்சம் டன் எட்டியுள்ளது.
    • 5.75 கோடி ரூபாய் வழி வகை கடன் வழங்கப்பட்டது.

    மடத்துக்குளம் :

    உடுமலை அமராவதி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு, கரும்புக்கான தொகை வழங்க 15.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆலையின் மேலாண்மை இயக்குனர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறுகையில், நடப்பாண்டு கரும்பு அரவை, ஒரு லட்சம் டன் எட்டியுள்ளது.கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு கிரையத்தொகைக்காக, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அங்கத்தினர்களுக்கு, 15.75 கோடி ரூபாய் வழி வகை கடன் வழங்கியதற்காக கரும்பு பயிடுவோர் சங்கம், திருப்பூர், கோவை, திண்டுக்கல் விவசாயிகள் சார்பிலும், ஆலை நிர்வாக குழு, தமிழக அரசுக்கும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்றார். 

    • ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • 7 ஆயிரம் ஏக்கர் கரும்பு பதிவு செய்யவேண்டும் என்று குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மடத்துக்குளம் :

    உடுமலை கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு அரவைக்கு 3 ஆயிரத்து 10 ஏக்கர் கரும்பு பதிவு செய்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் ஆலையில் அரவை துவங்கியது.இந்நிலையில் ரெட்டிபாளையம் விவசாயிகள், கொமரலிங்கம் சர்க்கரை கட்டுப்பாட்டு பகுதியில் அலுவலர்கள் நடவடிக்கையால் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். கரும்பு வெட்ட முன்னுரிமை பட்டியலை பின்பற்றவில்லை.

    குறித்த நேரத்தில்அறுவடை செய்யாமல், கரும்பு சக்கையாக மாறி கரும்பை தீயிட்டு அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என முதல்வருக்கு புகார் மனு அனுப்பினர். இதையடுத்து, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் பால்பிரின்சிராஜ்குமார், கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன் உள்ளிட்ட குழுவினர் ரெட்டிபாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கரும்பு பதிவு செய்த விவசாயிகளிடம் அறுவடை குறித்து, அலுவலர்கள் எவ்வித தகவலும் தரவில்லை. வெட்டு ஆட்கள் அனுப்புவதிலும் குளறுபடி இருந்தது. ஓராண்டு கரும்பு சாகுபடிக்கு வாங்கிய கடனைக்கூட திருப்பிச்செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.கூ ட்டுறவு சங்கத்தில் சாகுபடிக்காக பெறப்பட்ட கடனை ரத்து செய்ய வேண்டும் என்றனர். பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி 2021-2022-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு 2,010 ஏக்கர் கன்னி கரும்பும், 1,000 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 3,010 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு கரும்பு அரவை கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்கியது.

    இதன்மூலம் 1 லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டது. இந்த ஆலை நாள் ஒன்றுக்கு 1,200 டன் கரும்பு அரவை செய்யக்கூடிய அளவிற்கு பிழிதிறன் கொண்டது. ஆனால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுவதால் அரவை நிறுத்தப்பட்டு, அவை சரி செய்யப்பட்ட பிறகு இயக்கப்பட்டு வருகிறது.

    கரும்பு வெட்டும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் போது வெட்டப்படும் கரும்பின் அளவு குறைந்து கரும்பு அரவை நிறுத்தப்பட வேண்டியதாகிறது. இந்த அரவைப்பருவத்தில் தற்போது வரை 80 ஆயிரத்து 451 டன் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் முதிர்ச்சியடைந்த கரும்புகளை வெட்டி ஆலை அரவைக்கு அனுப்புவதற்கு 13 மாதங்களுக்கு மேலாகிறது.

    இந்த நிலையில் 2022-2023-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு தேவையான கரும்பிற்கு 2021-2022நடவு பருவத்தில் 4 ஆயிரம் ஏக்கர் கன்னி கரும்பும், 3 ஆயிரம் ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 7 ஆயிரம் ஏக்கர் கரும்பு பதிவு செய்யவேண்டும் என்று குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கரும்பு வெட்டப்படாமல் காலதாமதம் ஆகியவற்றால் இந்த ஆண்டு நடவு பருவத்தில், ஆலைக்கு கரும்பு பதிவு மந்தமாக உள்ளது. அதனால் இதுவரை கன்னி கரும்பு 110 ஏக்கர், கட்டை கரும்பு 610 ஏக்கர் என மொத்தம் 720 ஏக்கர் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த நிலையில் ஆலையின் கரும்பு பிரிவு களப்பணியாளர்கள் கரும்பு விவசாயிகளை தொடர்ந்து நேரில் சந்தித்து, ஆலைக்கு கரும்பு பதிவு செய்யும்படி கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் கரும்பு பதிவு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

    ×