search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் பருமன்"

    • உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.
    • பலர் ஜிம் சென்று மணிக்கணக்கில் உடற்பயிற்சிகளை செய்கிறார்கள்.

    தற்போது உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இந்நாட்களில் இது ஒரு நோயாகவே கருதப்படுகிறது. ஏனெனில் உடல் பருமன் நீரிழிவு, கொலஸ்ட்ரால், பக்கவாதம் மற்றும் குழந்தையின்மை போன்ற கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உடல் பருமன் பிரச்சினை சரியான நேரத்தில் தீர்க்கப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மக்கள் உடல் எடையை குறைக்க கடினமாக உழைக்கிறார்கள்.

    பலர் ஜிம் சென்று மணிக்கணக்கில் உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். பலர் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்தி பல கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். இருப்பினும், பலருக்கு உணவு முறை பற்றிய சரியான புரிதல் இல்லை. எனவே அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவர்களின் எடை குறைவதில்லை.

    சில எளிய இயற்கையான வழிகளிலும் தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கலாம். ஆனால், நாம் எந்த வழியை பின்பற்றினாலும் அதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதிக சிரமம் இல்லாமல் உடல் எடையை விரைவாக குறைக்கும் சில எளிய வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

    காலையில் எலுமிச்சை நீரை குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்றும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வெப்பத்தை உருவாக்குகிறது மற்றும் கலோரிகளை வேகமாக எரிக்கிறது. வேகமாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த எளிய முறையை பின்பற்றி பார்க்க வேண்டும்.

    சாலட் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. உணவு உண்ட பிறகு சாலட் சாப்பிடுவது செரிமானத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்த சாலட்டை சாப்பிடுவதற்கு முன் உட்கொண்டால், அதிகப்படியான உணவைத் தவிர்க்கலாம்.

    உணவிற்கு முன் சாலட் சாப்பிடுவதால் வயிறு நிரம்பி, குறைவாகச் சாப்பிடுவோம், அதிகமாக சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படும். இதனால் அதிக கலோரிகளை நாம் உட்கொள்ளாமல், குறைவான கலோரிகள் உடலுக்குச் செல்லும். இதன் மூலம் உடல் எடையும் வேகமாக குறையும். இரவில் ரொட்டி மற்றும் சாதம் இரண்டையும் தவிர்க்கவும். அரிசி மற்றும் ரொட்டி இரண்டிலும் கார்போஹைட்ரேட் உள்ளது.

    இரவில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்பதால் உப்பசம் மற்றும் எடை கூடும். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசியை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அதிக எடை கொண்டவர்கள் இரவில் சாதம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எண்டோகிரைன் சொசைட்டியின் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி அண்ட் மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில், இரவில் தாமதமாக சாப்பிடுவது விரைவான எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    உணவை தாமதமாக சாப்பிடுவதால், உடல் கொழுப்பை சரியாக எரிக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், இரவு உணவை இரவு 7 மணிக்கு முன்பே சாப்பிட வேண்டும். இதன் காரணமாக, உடலில் சேமிக்கப்படும் கொழுப்பு ஆற்றலாக மாறத் தொடங்குகிறது. ஆகையால் இரவு நேரத்தில் 7 மணிக்குள் உணவு உட்கொள்வதை பழக்கமாக்கிக்கொண்டால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

    கொழுப்பு மிகுந்த, கலோரிகள் மிகுந்த தயிர், நெய், வெண்ணெய், சீஸ், இனிப்பு, பேக்கரிப் பண்டங்கள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். மாலை சிற்றுண்டிக்கு வடை, பஜ்ஜி, போண்டா, பீட்சா, பர்கர், சேவு, சீவல், சிப்ஸ், பப்ஸ், லேஸ், கடலைப்பருப்பு, கார்ன் ஃபிளேக்ஸ், முறுக்கு, மிக்சர், கார வகைகள், விதவிதமான ரொட்டிகள் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.

    பதிலாக வேர்க்கடலை, எள்ளுருண்டை, கடலை உருண்டை, பொரிகடலை, சுண்டல், முளைகட்டிய பயறு, காய்கறி கட்லெட், பழ சாலட் ஆகியவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள். மாலையில் பழச்சாறு/காய்கறி சூப் சாப்பிடுங்கள். ஐஸ்கிரீம், மில்க் ஷேக், கோக், குளிர்பானங்கள் வேண்டவே வேண்டாம். புரோட்டா, நூடுல்ஸ், ருமாலி ரொட்டி, ஃபிரைடு ரைஸ், நாண், பட்டர் நாண், பேல் பூரி, பானி பூரி போன்ற ஹோட்டல் உணவு வகைகளில் கலோரி மிக அதிகம். இவற்றைத் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.

    கீரைகள், கத்திரிக்காய், புடலங்காய், சுரைக்காய், சுண்டைக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், முருங்கைக்காய், காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பாகற்காய், வாழைத்தண்டு ஆகியவற்றில் கலோரிகள் குறைவு. தினமும் சராசரியாக 500 கிராம் காய் நமக்குத் தேவை.

    கிழங்குகள், மா, வாழை, பலா, சீத்தா, அத்தி, திராட்சை, சப்போட்டா ஆகியவற்றில் கலோரி அதிகம். ஆகவே, இவற்றைத் தவிருங்கள். அதற்கு பதிலாக, கொய்யா, மாதுளை, தக்காளி, சாத்துக்குடி, அன்னாசி, பேரிக்காய் சாப்பிடலாம். தினமும் 250 கிராம் பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

    விரதம் இருக்காதீர்கள்; அடிக்கடி விருந்துக்கும் ஹோட்டலுக்கும் செல்லாதீர்கள். டிவி முன்னால் உட்கார்ந்து சாப்பிடுவதைத் தவிருங்கள். மது அருந்தாதீர்கள். தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி வேண்டாம்.

    முட்டையில் வெள்ளைக் கருவைச் சாப்பிடலாம். மஞ்சள் கரு ஆகாது. ஃபிரைடு சிக்கன், தந்தூரி சிக்கன், ஆம்லெட் போன்ற எண்ணெயில் தயாரித்த அசைவ உணவு வகைகள் வேண்டாம்.

    சமையலுக்குச் சூரியகாந்தி எண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதன் அளவு ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 15 மி.லி. தேங்காய் எண்ணெய், பாமாயில், வனஸ்பதி ஆகியவற்றில் செறிவுற்ற கொழுப்பு அமிலம் அதிகமுள்ளது. இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, கொழுப்பு அதிகமாகி உடல் பருமனுக்கு வழிவகுக்கும். ஆகவே, இவற்றை தவிர்க்க வேண்டும். நினைத்தால் எண்ணெய் பயன்பாட்டைப் பெருமளவு குறைக்க முடியும்.

    • நீச்சல் பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை தரும்.
    • உடல் சார்ந்த பல பிரச்சினைக்கு நீச்சலும் ஒரு தீர்வாக அமையும்.

    கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல் குடும்ப தலைவிகள், பணிபுரியும் பெண்கள் எனப் பலருக்கும் நீச்சல் பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. இளம் பெண்கள் முதல் முதிய பெண்கள் வரை உடல் சார்ந்த பல பிரச்சினைக்கு நீச்சலும் ஒரு தீர்வாக அமையும்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை 40 வயதை கடந்தவர்களுக்குத்தான் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள், சுவாசப்பிரச்சினைகள், உடல் பருமன் ஆகியவை ஏற்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் 25 வயதானவர்களுக்கே இத்தகைய பிரச்சினைகள் வருகின்றன. இளம் பெண்களிடமும் தற்போது நீச்சல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

    நீச்சல் பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. நீச்சல் பயிற்சி உடல் பருமனை குறைக்கும். நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்தும். 1 மணி நேரம் நீந்தினால் 500 முதல் 800 கலோரிகள் எரிக்கப்படும். உடலின் எல்லா பாகங்களும் வலுப்பெறும். காலி வயிற்றுடனோ, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டோ நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது.

    நீந்தும் முன், தகுதி பெற்ற பயிற்சியாளரும், தகுதி பெற்ற மீட்பாளர்களும் நீச்சல் குளத்தில் இருக்க வேண்டும். நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர், சுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்பட வேண்டும். குளோரின் கலந்த நீர் சருமத்தில் படுவதால் நிறம் மாறும்.

    இதைத் தவிர்க்க நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு 1 மணிநேரத்துக்கு முன்பாக உடலில் வைட்டமின்-ஏ, இ ஆகியவை அடங்கிய கிரீம்களை பூசிக்கொள்ளலாம். இதனால் சருமம் பாதிக்கப்படாது.

    • டிஜிட்டல் யுகத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்.
    • செல்போன் மோகம் தூங்க செல்லும் நேரத்தை தாமதப்படுத்திவிடுகிறது.

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். செல்போன் மோகம் தூங்க செல்லும் நேரத்தை தாமதப்படுத்திவிடுகிறது. இரவில் திடீரென்று கண் விழித்தாலோ, காலையில் எழுந்தாலோ கைகளின் முதல் தேடல் செல்போனாகத்தான் இருக்கிறது. செல்போனில் இருந்து வெளிப்படும் ஒளி கண்களை சோர்வுக்குள்ளாக்குகிறது.

    இரவில் போதுமான அளவு தூங்காவிட்டால் ஏற்படும் சோர்வு மறுநாள் முழுவதும் எதிரொலிக்கும். ''தூக்கமின்மை உடல் நலனில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். போதிய நேரம் தூங்காவிட்டால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதயநோய், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு வித்திடும்'' என்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாள் இரவும் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு மாரடைப்பு, மனச்சோர்வு உள்ளிட்ட உடல்நலப்பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மேலும் தூக்கமின்மை ரத்த அழுத்த அளவை அதிகரிக்கச்செய்யக்கூடும். இதய செயலிழப்பு மற்றும் சிறுநீரக நோய்க்கும் வழிவகுக்கும். தினமும் இரவில் 7 மணி முதல் 9 மணி நேரம் வரை தூங்குமாறு அமெரிக்க இதய சங்கம் பரிந்துரை செய்துள்ளது.

    தூக்கத்தின்போது உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் இயல்புடையது. இதன் மூலம் சிறு, சிறு உடல்நல குறைபாடுகள் நீங்கிவிடும். இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும். ''நீங்கள் போதுமான நேரம் தூங்க முடியாமல் அவதிப்படும்போது உடல் அதிக மன அழுத்த ஹார்மோனை உற்பத்தி செய்யும். அப்போது ரத்த நாளங்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்துவிடும்'' என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    நன்கு ஆழ்ந்து தூங்கும்போது இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வழிவகை ஏற்படும். மன அழுத்தத்தில் இருந்து மீளவும் உதவும். போதுமான அளவு தூக்கம் கிடைக்காவிட்டாலோ, ஆழ்ந்து தூங்க முடியாவிட்டாலோ இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வாய்ப்பில்லாமல் போகும். நாள்பட்ட அழற்சி, ஆக்சிஜனேற்ற அழுத்தத்திற்கு வித்திடும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்து இதய அமைப்பை சேதப்படுத்தும். நீரிழிவு நோய்க்கும் வழிவகுக்கும்.

    • முதல் தளத்திற்கு செல்வதற்கு கூட லிப்ட் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
    • படிக்கட்டுகளை பயன்படுத்துவது பல்வேறு வகைகளில் இதயத்திற்கு பலன் அளிக்கும்.

    அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் என உயரமான கட்டுமானங்களை கொண்ட இடங்களுக்கு செல்லும்போது பலரும் லிப்ட், எஸ்கலேட்டர் பயன்படுத்துகிறார்கள். முதல் தளத்திற்கு செல்வதற்கு கூட லிப்ட் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். நவீன சாதனங்களால் உடல் உழைப்பு குறைந்து கொண்டிருக்கும் நிலையில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தொழில்நுட்ப சாதனங்களை சார்ந்திருப்பது உடல் நலனை பலவீனப்படுத்திவிடும்.

    சமீப காலமாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் சார்ந்த பிரச்சினைகள் விஸ்வரூபமெடுத்துக்கொண்டிருக்கின்றன. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது வேகமான நடைப்பயிற்சி மற்றும் ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வது இதயத்தின் ஆயுளை அதிகரித்து உடலை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    தினமும் நடைப்பயிற்சிக்கு செல்ல போதிய நேரம் இல்லாவிட்டாலும், ஏதாவதொரு வகையில் உடல் இயக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பது கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்கும். அதற்கான வழிகளில் ஒன்றாக, படிக்கட்டுகளை தேர்ந்தெடுக்கலாம். லிப்ட், எஸ்கலேட்டர் போன்றவற்றை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்துவது பல்வேறு வகைகளில் இதயத்திற்கு பலன் அளிக்கும். அது குறித்து பார்ப்போம்.

    இதயத் துடிப்பு

    நீங்கள் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கும்போது, தசைகள் வேலை செய்ய அதிக ஆக்சிஜன் தேவைப்படும். அதன் தேவையை பூர்த்தி செய்ய இதய துடிப்பு அதிகரிக்க தொடங்கும். அதனால் இதயம் ரத்தத்தை வேகமாக பம்ப் செய்யும். அப்போது தசைகளுக்கு ஆக்சிஜன் மட்டுமின்றி ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

    ஆற்றல்

    படிக்கட்டுகளில் நடக்க தொடங்கியதும் இதய துடிப்பு ஒவ்வொரு முறை அதிகரிக்கும்போதும் இதயத்தின் தசை சுவர்கள் அதிக அளவு ரத்தத்தை அழுத்துவதற்கு அதிக ஆற்றலுடன் சுருங்குகின்றன. இப்படி அதிக ஆற்றல் வெளிப்படுவது கால் தசைகள் உள்பட உடலின் திசுக்களுக்கு போதுமான ரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவும்.

    ரத்த நாளங்கள்

    படிக்கட்டு ஏறும்போது ரத்த ஓட்டத்திறன் அதிகரிக்கும். அது ரத்த நாளங்கள் விரிவடைவதற்கு வித்திடும். உடல் முழுவதும் ரத்த ஓட்டத்திற்கான தேவை பூர்த்தி செய்யப்படும். இதனால் மற்ற சமயங்களில் ரத்த ஓட்டம் எளிதாக நடப்பதற்கு வழி செய்கிறது. தசைகளுக்கு போதுமான ரத்தம் கிடைப்பதையும் உறுதி செய்கிறது.

    ரத்த ஓட்டம்

    ஒரு நிமிடத்திற்கு இதயம் பம்ப் செய்யும் ரத்தத்தின் அளவு 'கார்டியாக் அவுட்புட்' என குறிப்பிடப்படுகிறது. படிக்கட்டு ஏறும்போது இதயம் பம்ப் செய்யும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். உடலின் ஆக்சிஜன் தேவையையும் பூர்த்தி செய்துவிடும். உடல் உறுப்புகள் அனைத்திற்கும் ரத்தம் சென்றடைவதை உறுதி செய்வதாகவும் அமைந்துவிடும்.

    காற்றில் இருந்து ஆக்சிஜனைப் பிரித்தெடுத்து ரத்த ஓட்டத்தில் கலக்க செய்வதற்கு நுரையீரல் கடினமாக உழைக்கிறது. இந்த ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் பின்னர் இதயத்தால் பம்ப் செய்யப்பட்டு தசைகளுக்கு செலுத்தப்படுகிறது. இது உடல் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றலை உருவாக்க பயன்படுகிறது.

    ரத்த உறைவு

    படிக்கட்டு ஏறுவதும் கார்டியாக் உடற்பயிற்சிகளின் ஒரு அங்கம்தான். தசை வலிமையை அதிகரிக்க செய்யும். எலும்புகளை வலுப்படுத்தும். மேலும் படிக்கட்டுகளில் ஏறும்போது உடலில் கலோரிகள் எரிக்கப்படும்.

    படிக்கட்டு போன்ற பயிற்சியின் காரணமாக இதயத் துடிப்பு அதிகரிக்கும். அப்போது தமனிகளின் சுவர்களை தளர் வடைய செய்யும். வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளை ரத்தக்குழாயில் அடைப்பதை தடுக்கும். அதனால் ரத்த உறைவு பிரச்சினை தவிர்க்கப்படும்.

    • உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
    • ராகியில் புரோலமைன், குளுட்டானின் உள்ளிட்ட அமினோ அமிலங்கள் உள்ளன.

    கேழ்வரகில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு விவரங்களை பார்ப்போம். சிறுதானிய உணவுகளில் அரிசியை காட்டிலும் அதிகப்படியான புரதச்சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் உயிர் சத்துக்கள் அடங்கி உள்ளன. ஆதலால் தான் மருத்துவர்கள் சிறுதானிய உணவுகளை தற்பொழுது அதிகப்படியாக பரிந்துரை செய்கின்றனர். அனைத்து ஊட்டச்சத்துகளும் சிறுதானிய உணவுகளில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளன.

    அரிசி மற்றும் கோதுமையை விட ஊட்டச்சத்து நிறைந்த ராகியில் அமைந்துள்ள புரோலமைன், குளுட்டானின் உள்ளிட்ட உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. ராகியில் முளைகட்டி பொடியாக்கி குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பது பழங்காலம் தொட்டு நம் பழக்கத்தில் உள்ளது. மேலும் ராகி நூடுல்ஸ், ராகி பணியாரம், ராகி சேமியா, ராகி இடியாப்பம், ராகி அல்வா, ராகி தோசை, ராகி அடை போன்றவைகளை தயாரிக்க முடியும். மேலும் ராகி முறுக்கு, ராகி மிக்சர், ராகி கேக், ராகி பிஸ்கட், ராகி லட்டு போன்ற நொறுக்கு தீனி வகை பலகாரங்களையும் செய்யலாம். கேழ்வரகு மாவில் எப்படி முறுக்கு செய்யலாம் என்று பார்க்கலாம்

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு - ஒரு கப்

    அரிசி மாவு - அரை கப்

    கடலை மாவு- கால் கப்

    பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி

    எள்- ஒரு ஸ்பூன்

    சீரகம் - 2 தேக்கரண்டி

    மிளகாய்த்தூள்- ஒரு ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மாவு வகைகளுடன் உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளர வேண்டும். அதன்பிறகு சூடாக இருக்கும் எண்ணெய்யை மாவுக் கலவையில் ஒரு குழிக்கரண்டி அளவிற்கு சேர்க்க வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்கு பிசைய வேண்டும்.

    வாணலியில் எண்ணெய்யை ஊற்றி காயவைக்க வேண்டும். எண்ணெய் காந்ததும் பிசைந்த மாவை முறுக்கு குழலில் போட்டு, சூடான எண்ணெய்யில் முறுக்குகளாக பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும். சுவையான ராகி முறுக்கு தயார்.

    • இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்.
    • ‘உடற்பயிற்சியை தொடருவது அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்கிறது.

    வயது அதிகரித்தாலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழவும் ஆசைப்படுகிறார்கள். உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கட்டமைக்க மேற்கொள்ள வேண்டிய பழக்கவழக்கங்களில் உடற்பயிற்சி அத்தியாவசியமானது. உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் நாள்பட்ட நோய்களை தடுக்கும் வல்லமையும் பெற்றது.

    ''உடற்பயிற்சியை தொடருவது அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்கிறது என்று நோயாளிகள் அடிக்கடி கூற கேட்டிருக்கிறேன். உடற்பயிற்சி செய்யும்போது மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோனின் செயல்பாடு குறைகிறது. கார்டிசோல் ஹார்மோன் அதிகமானால் இனிப்பு பதார்த்தங்களையும், கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகளையும் சாப்பிட தோன்றும். இன்சுலினின் செயல்பாட்டில் மாற்றம் நிகழும். உடலில் கொழுப்பும் அதிகம் சேரும்'' என்கிறார், அமெரிக்க மருத்துவரும், எழுத்தாளருமான டாக்டர் மார்க் ஹைமன். உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தவறாமல் தினமும் பின்பற்றுவதால் உடலில் நிகழும் மாற்றங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

    இன்சுலின் உணர்திறன்:

    உடற்பயிற்சி செய்யும்போது செல்கள் மற்றும் தசைகளின் செயல்பாடுகள் சீராக நடைபெறும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் இன்சுலின் செயல்பாடும் சுமூகமாக நடைபெற வழிவகுக்கும். அப்படி இன்சுலின் உணர்திறன் சமநிலையில் பராமரிக்கப்படும்போது உடல் பருமன், தொப்பை பிரச்சினையும் எட்டிப்பார்க்காது.

    மூளை ஆரோக்கியம்:

    உடற்பயிற்சியை தொடர்ந்து வந்தால் மூளை சிறப்பாக செயல்படும். நினைவாற்றல், கற்றல் திறன், கவனிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும். உடற்பயிற்சி செய்யும் போது மூளை மேலும் மீள்தன்மை அடையும். அதனால் மனநிலை மேம்படும். உடல் ஆற்றலும் அதிகரிக்கும். உடலிலும், மனதிலும் அழுத்தத்தை குறைக்கவும் வழிவகை செய்யும். மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாத்து மனச்சோர்வு, அல்சைமர் போன்ற மன நலம் சார்ந்த பிரச்சினைகளை விலக்கி வைக்கவும் உதவும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்ற வைத்து முதுமை பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை திறம்பட சமாளிக்க வித்திடும்.

    நாள்பட்ட நோய்கள்:

    உடற்பயிற்சி பல வழிகளில் உடலுக்கு நன்மை சேர்க்கிறது. இதயத்தை பாதுகாக்கிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய், வகை ௨ நீரிழிவு, பக்கவாதம், மார்பக மற்றும் பிற புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன.

    நச்சு நீக்கம்:

    உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் முடியும். கடுமையான உடற்பயிற்சி முறைகளை பின்பற்றும்போது வியர்வை வெளியேறும். அதன் மூலம் நச்சுக்களும் வெளியேறிவிடும். தினசரி உடற்பயிற்சி செய்யும்போது அதிக வியர்வை வெளிப்படவில்லை என்றால் நீராவி பிடிக்கும் பழக்கத்தை பின்பற்றலாம். அதன் மூலம் சருமத்தில் படிந்திருக்கும் நச்சுக்கள், அழுக்குகள் வெளியேறிவிடும்.

    கடினமான உடற்பயிற்சி முறைகளை பின்பற்றமுடியாதவர்கள் இந்த வழக்கத்தை பின்பற்றலாம். மென்மையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் நன்மை பயக்கும். அது ரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கவும், நிணநீர் மண்டலத்தில் உருவாகும் அனைத்து நச்சு திரவங்களைவெளியேற்றவும் உதவி புரியும்.

    • 40 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 12 ஆயிரம் காலடிகள் நடப்பது நல்லது.
    • குழந்தைகளை பொறுத்தவரை நடைப்பயிற்சி மேற்கொள்வது சாத்தியமில்லாதது.

    இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பலரும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். தினமும் குறிப்பிட்ட தூரம் நடப்பதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை நெருங்கவிடாமல் தற்காத்துக்கொள்ளலாம். சில நாள்பட்ட நோய் பாதிப்புகளில் இருந்தும் விடுபடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதனால் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.

    எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? வயதுக்கு ஏற்ப நடக்கும் தூரம் மாறுபடுமா? வயதானவர்கள் குறைந்த தூரம் நடந்தால் போதுமா? என்ற கேள்வி நிறைய பேரிடம் எழுகிறது. ஒவ்வொருவரும் தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் காலடிகளாவது எடுத்து வைத்து நடக்க வேண்டும். 10 ஆயிரம் காலடிகள் என்பது சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடப்பதற்கு சமமானது. அப்படி நடப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    நீரிழிவு, இதய நோய், பக்கவாதம், உடல் பருமன், மனச்சோர்வு, மார்பக புற்றுநோய் தொடர்பான நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவும். தினமும் 10 ஆயிரம் காலடிகள் எடுத்து வைத்து நடக்க முடியாவிட்டாலும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் காலடிகளாவது நடப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும். இருப்பினும் வயதுக்கு ஏற்ப நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

    குழந்தைகளை பொறுத்தவரை நடைப்பயிற்சி மேற்கொள்வது சாத்தியமில்லாதது. அவர்களை நடக்க சொல்லி கட்டாயப்படுத்துவதை விட ஓடியாடி விளையாட அனுமதித்தாலே போதுமானது. வழக்கமான விளையாட்டுகளுடன் குதித்தல், மெதுவாக ஓடுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட வைக்க வேண்டும். பெரியவர்களை பொறுத்தவரை தினமும் 10 ஆயிரம் காலடிகள் எடுத்துவைத்து நடப்பது சிரமமானது. அவர்களால் 8 கிலோ மீட்டர் தூரம் நடக்க முடியாது. அதற்கு உடலும் ஒத்துழைக்காது.

    வயது அடிப்படையில் எந்தெந்த வயதினர் எவ்வளவு தூரம் நடக்கலாம் என்பது பற்றி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதன் முடிவு உங்கள் பார்வைக்கு...

    1. 40 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 12 ஆயிரம் காலடிகள் நடப்பது நல்லது.

    2. 40 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 11 ஆயிரம் காலடிகள் நடப்பதை இலக்காக கொள்ளலாம்.

    3. 50 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 10 ஆயிரம் காலடிகள் நடக்கலாம்.

    4. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 8 ஆயிரம் காலடிகள் வரை நடக்கலாம்.

    5. 18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண்கள் தினமும் 12 ஆயிரம் காலடிகள் நடப்பதற்கு முயற்சி செய்யலாம்.

    6. 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தினமும் 11 ஆயிரம் காலடிகள் வரை நடக்கலாம்.

    7. உடல் எடையை குறைக்கும் நோக்கில் நடைப்பயிற்சி செய்பவர்கள் நடக்கும் அடிகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

    8. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தினமும் 12 ஆயிரம் அடிக்கு மேலும் நடப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    • மாத்திரை வடிவில் கொண்டு வர பல தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் மற்றும் ஆய்வுகளை நிறுவனம் செய்து வந்தது.
    • மாத்திரைக்கு ஒப்புதல் அளிக்கும்படி அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பிக்க உள்ளனர்.

    உலகெங்கிலும் வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கும் வருகின்ற ஒரு நோய் உடல் பருமன். உடல் பருமன் என்பது தவிர்க்க வேண்டியது என்றும், பல நோய்களை வரவழைக்கக் கூடியது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுவதுடன் இதற்கான பல்வேறு சிகிச்சைகளையும் வழங்குகின்றனர். இருப்பினும் உடல் பருமன் அவ்வளவு எளிதில் குறைந்துவிடாது. நீண்ட கால சிகிச்சையோ அல்லது வாழ்வியல் முறைகளோ தேவைப்படும்.

    உடல் பருமனை குறைக்கும் சிகிச்சைக்கு பல்வேறு மாத்திரைகள் இருந்தாலும், பெரும்பாலான சிகிச்சைக்கு ஊசி வழி மருந்துகளே பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, ஊசி மருந்து போன்ற வீரியம் மிக்க மாத்திரை இருந்தால் எப்படி இருக்கும்..? என்பதே உடல் பருமனால் அவதிப்படும் மக்களின் ஏக்கமாக இருக்கிறது. அவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளியாகியிருக்கிறது.

    ஆம். டென்மார்க் நாட்டை சேர்ந்த "நோவோ நோர்டிஸ்க்" எனும் மருந்து உற்பத்தி நிறுவனம், "ஜி.எல்.பி.-1 அகனிஸ்ட்" எனப்படும் ஒரு புதிய மருந்து வகையில், "ஸெமாக்ளூடைட்" எனும் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்படும் "வெகோவி" (Wegovy) எனும் மருந்தை, மாத்திரை வடிவில் சந்தையில் கொண்டு வர இருக்கிறது.

    ஏற்கெனவே, இது ஊசி வடிவில் கிடைத்தாலும், மாத்திரை வடிவில் கொண்டு வர பல தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் மற்றும் ஆய்வுகளை இந்நிறுவனம் செய்து வந்தது. இந்த சோதனைகளில், ஊசி மருந்து போலவே இந்த மாத்திரை வேலை செய்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாத்திரைக்கு ஒப்புதல் அளிக்கும்படி இந்த ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பிக்க மருந்து தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    நீரிழிவு நோயினால் அவதிப்படும் பலருக்கும் உடல் பருமன் குறைப்பில் இந்த மருந்து பலனளிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிப்பதாகவும், கூடுதல் தகவல் வெளியாகியிருக்கிறது. இது அந்நோயினால் அவதிப்படுவோருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

    மாத்திரை வடிவில் உள்ளதால், ஊசி வழியாக செலுத்தப்படும் உடல் பருமன் குறைப்பு சிகிச்சை முறைகளை வேண்டா வெறுப்பாக ஏற்போர்களுக்கு, "வெகோவி" ஒரு சிறந்த மாற்றாக பிரபலம் ஆகலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே இது சந்தையில் பயன்பாட்டுக்கு வரும் நாளை நோயாளிகள் ஆர்வமுடன் எதிர் நோக்குவதாக தெரிகிறது.

    "வெகோவி" மாத்திரைகளின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை என "நோவோ நோர்டிஸ்க்" நிறுவனம் தெரிவிக்கிறது.

    எலி லில்லி (Eli Lilly), ஃபைசர் (Pfizer) போன்ற மேலும் பல முன்னணி மருந்து நிறுவனங்களும் இது போன்ற "வாய் வழி உட்கொள்ளும் மருந்து" (oral drug) தயாரிக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×