search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதானி குழுமம்"

    • அதானி நிறுவனங்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது.
    • பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து பிரச்சினை எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

    புதுடெல்லி :

    அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. இதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாத நிலையில், இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து பிரச்சினை எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

    அதன்படி அந்தக் கட்சி, அதானி நிறுவனங்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கும் மத்திய அரசுக்கும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது.

    அந்த வகையில் அதானி நிறுவனங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி நேற்று 3 முக்கிய கேள்விகள் எழுப்பி உள்ளது.

    இதையொட்டி அந்த கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-

    இன்று தொடர்ந்து 10-வது நாளாக அதானி நிறுவனங்களின் அற்புதமான வளர்ச்சியில் பிரதமரின் பங்கு குறித்து 3 முக்கிய கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. உங்கள் மவுனத்தைக் கலையுங்கள், பிரதமர், அவர்களே.

    * கவுதம் அதானி, 2017-ம் ஆண்டு மேற்கொண்ட இஸ்ரேல் பயணத்தில் இருந்து, அவர் இந்திய, இஸ்ரேல் ராணுவ உறவில் சக்திவாய்ந்த லாபகரமான பங்களிப்பைக்கொண்டிருக்கிறார். அவர், டிரோன்கள், மின்னணுவியல், சிறிய ரக ஆயுதங்கள், விமான பராமரிப்பு போன்றவற்றை உள்ளடங்கிய இஸ்ரேலிய நிறுவனங்களுடன் கூட்டு திட்டங்களைப் பெற்றிருக்கிறாரே?

    * அதானி நிறுவனங்கள், கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு 'ஷெல்' நிறுவனங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த குற்றசாட்டுகளை சந்தித்துள்ள நிலையில், இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ உறவை ஒரு கேள்விக்குரிய குழுமத்திடம் ஒப்படைப்பது தேசிய நலனுக்காகவா? உங்களுக்கும், ஆளும் கட்சிக்கும் (பா.ஜ.க.) இதில் ஏதேனும் கைமாறு உண்டா?

    * நமது ஆயுதப் படைகளின் அவசரகாலத் தேவைகளை அரசு ஏன் சாதகமாகப் பயன்படுத்தி, எதற்காக புத்தொழில் நிறுவனங்கள் ('ஸ்டார்ட்-அப்'கள்) மற்றும் நிறுவப்பட்ட இந்திய நிறுவனங்களின் இழப்பில், அதானி டிரோனின் ஏகபோக ஆதிக்கத்தை எளிதாக்குகிறது?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாராளமயமாக்கலை காங்கிரஸ் ஆதரிக்கிறது.
    • அதானி விவகாரத்தில் நாங்கள் அஞ்சமாட்டோம்.

    புதுடெல்லி :

    அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. பங்குச்சந்தையில் அதானி நிறுவனங்களின் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இது தொடர்பாக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதேநேரம் அதானி விவகாரத்தில் மறைப்பதற்கோ, அஞ்சுவதற்கோ பா.ஜனதாவிடம் எதுவும் இல்லை என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அதானி விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் பாராளுமன்ற கூட்டு விசாரணைக்குழு அமைக்க தயங்குவது ஏன்?

    கூட்டு விசாரணைக்குழு கோரிக்கையை பாராளுமன்றத்தில் எழுப்பக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட எங்கள் தலைவர்கள் பாராளுமன்றத்தில் பேசினால், அந்த கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்றன.

    அப்படி அதானி விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை அரசு அனுமதிக்க வேண்டும்.

    அதானி விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் 'செபி' தலைவர் மதாபி புரிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

    அதானிக்கும், அரசுடனான அவரது நிறுவனங்களின் உறவுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.

    அதேநேரம் நாங்கள் எப்போதும் தொழில் முனைவோருக்கு ஆதரவாக இருக்கிறோம். அதுவே பொருளாதார வளர்ச்சிக்கு முன்னோக்கி செல்லும் வழி ஆகும். கண்மூடித்தனமான தனியார்மயமாக்கல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

    இதைப்போல தாராளமயமாக்கலை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால் அது விதிகள் மற்றும் நிறுவனங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். அவை சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் விதிகள் பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான முறையில் பயன்படுத்தப்படும்.

    அதானி விவகாரத்தில் நாங்கள் அஞ்சமாட்டோம், தொடர்ந்து குரல் எழுப்புவோம். பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இருக்கின்றன.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

    • அரசிடம் கேள்வி கேட்பது எதிர்க்கட்சிகளின் வேலை.
    • அதானி விவகாரம் பெருந்தொகையுடன் தொடர்புடைய மிகப்பெரிய ஊழல்.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி கூறியதாவது:-

    அதானி விவகாரம் பெருந்தொகையுடன் தொடர்புடைய மிகப்பெரிய ஊழல். இதை முறையாக விசாரிக்க வேண்டும். மாநிலங்களவையில் நான் பேசியபோது, பாராளுமன்ற நடைமுறைக்கு ஒவ்வாத எதையும் கூறிவிடவில்லை. நான் அதானி விவகாரத்தில் சில கேள்விகளை எழுப்பினேன்.

    அதானி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஏன் மோடி அரசு நடத்தவில்லை?

    பாராளுமன்றத்தில் மோடியும், அவரது அரசும் அதானி என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட அனுமதிக்கவில்லையே, அதன் பின்னணியில் உள்ள காரணம்தான் என்ன?

    ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை பரிமாற்ற வாரியம் (செபி), அமலாக்கத்துறை இயக்குனரகம், தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (எஸ்.எப்.ஐ.ஓ), கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகம், வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவை ஏன் முடங்கிப்போய்விட்டன? எத்தனையோ ஊழல்கள் நடந்துள்ளன, ஏன் இன்னும் அவர்கள் மவுனமாக இருக்கிறார்கள்?

    அரசிடம் கேள்வி கேட்பது எதிர்க்கட்சிகளின் வேலை. மக்கள்தான் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் பணத்தையும், அவர்களது உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியது, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஊழல்கள் குறித்து அரசிடம் கேள்விகள் எழுப்புவது, தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றவாதிகளின் பொறுப்பு.

    ஆனால் அதானி விவகாரத்தில் அவர்கள் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த விஷயத்தை பாராளுமன்றத்தில் எழுப்பவும் எங்களை அனுமதிக்கவில்லை. எனவே தான் எங்கள் ஆட்கள் போராடுகிறார்கள். அதானி விவகாரத்தை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து எழுப்புவோம்.

    பாராளுமன்ற ஜனநாயகத்தில் நாங்கள் அரசிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்போம். ஆனால், ஜனநாயக ரீதியில் பாராளுமன்றம் இயங்குவதை அரசு விரும்பவில்லை. ஜனநாயக ரீதியில் செயல்பட தயாராக இல்லை என்றால், சர்வாதிகாரமாக பேசினால், மக்கள் அதிலிருந்து விடுபடுவார்கள்.

    எனது பேச்சின் குறிப்பிட்ட பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது பற்றி நான் சபைத்தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளேன். வெறுமனே எனது பேச்சின் அம்சங்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுவதால், மக்களும், ஊடகங்களும் கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட்டு விட முடியாது.

    ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து, அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று கேட்கின்றன. இந்த விஷயத்தில் ஒற்றுமை இருக்கிறது. ஒவ்வொருவரும் நாட்டை காப்பாற்ற வேண்டும், ஏழை மக்களின் சொத்தை பாதுகாக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பங்குகளின் அடிப்படையில் எந்த கடனும் வழங்கவில்லை.
    • அதானி குழுமத்தின் கணக்கில் ஒரு பைசா கூட பாக்கி இல்லை.

    மும்பை :

    இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான அதானியின் பல்வேறு நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், கணக்குகளில் மோசடி செய்ததாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

    இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது. எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், அதானியின் நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதால் இந்த வீழ்ச்சி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன.

    இந்த நிலையில் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி தலைவர் தினேஷ் கரா பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அதானி குழுமத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய மொத்த கடன் ரூ.27 ஆயிரம் கோடி மட்டுமே. இது வங்கியின் கடன் புத்தகத்தில் வெறும் 0.88 சதவீதம் ஆகும்.

    பங்குகளின் அடிப்படையில் அதானி குழுமத்துக்கு எந்த கடனும் வழங்கவில்லை.

    கடன் வழங்குவதற்கான உறுதியான சொத்துகள் மற்றும் போதுமான பணப்புழக்கங்களை அதானி குழும திட்டங்கள் கொண்டுள்ளன. அத்துடன் கடனை திருப்பி செலுத்துவதில் சிறந்த வரலாறும் இந்த குழுமத்துக்கு உண்டு.

    இதைப்போல இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக அதானி குழுமத்திடம் இருந்து எந்தவித மறுநிதி கோரிக்கைகளும் வரவில்லை.

    இவ்வாறு பாரத ஸ்டேட் வங்கி தலைவர் தினேஷ் கரா தெரிவித்தார்.

    இதற்கிடையே அதானி குழுமத்துக்கு தாங்கள் வழங்கிய கடன் பாதுகாப்பாக இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் வங்கி (ஜே.கே.வங்கி) தெரிவித்து உள்ளது.

    இது குறித்து வங்கியின் துணை பொதுமேலாளர் நிஷிகாந்த் சர்மா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'அதானி குழுமத்துக்கான எங்கள் கடன்கள் ஜே.கே. வங்கியால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் சொத்துகளுக்கு மேல் பாதுகாக்கப்படுகின்றன' என தெரிவித்தார்.

    மேலும் அவர், 'அதானி குழுமத்துக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 மின் திட்டங்களுக்காக ரூ.400 கோடி கடன் வழங்கப்பட்டது. தற்போது அது சுமார் ரூ.250 கோடியாக உள்ளது. கடனுக்கான பணத்தை திருப்பி செலுத்துவது ஒழுங்காக நடைபெறுவதுடன், 2 மின் திட்டங்களும் மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களுடன் செயல்படுகின்றன. அதானி குழுமத்தின் கணக்கில் ஒரு பைசா கூட பாக்கி இல்லை' என்றும் கூறினார்.

    • அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8.22 லட்சம் கோடி அளவுக்கு சரிந்தது.
    • அதானி விவகாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்.

    புதுடெல்லி :

    அதானியின் நிறுவனங்கள் பங்குகள் விவகாரத்தில் பெரும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை, தொடர்ந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8.22 லட்சம் கோடி அளவுக்கு சரிந்தது.

    பொதுமக்களின் முதலீடுகள் பெருமளவில் உள்ள எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், அதானியின் நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதால், இது மக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் உடனே விவாதிக்க வேண்டும், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் கோரின. அரசு ஏற்காத நிலையில், இரு அவைகளும் முடங்கின.

    இந்த நிலையில், டெல்லியில் பாராளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் அறையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, ஆம்ஆத்மி, பாரத ராஷ்டிர சமிதி, சிவசேனா, ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோஸ் மணி), கேரள காங்கிரஸ் (தாமஸ்), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி என 16 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதானி நிறுவன விவகாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த மறுப்பதால், அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்பது பற்றி விவாதித்தனர்.

    முடிவில் இந்த கூட்டத்தில் அதானி விவகாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். அதற்கு மத்திய அரசு அனுமதிக்காவிட்டால் இரு அவைகளுக்குள்ளும் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, "பிரதமர் வற்புறுத்தலின் பேரில் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதால், சுதந்திரமான விசாரணைதான் எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பிற நிறுவனங்களைக் காப்பாற்றும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை" என தெரிவித்தார்.

    • அதானி நிறுவனங்களின் விவகாரம் அதிமுக்கியமானது
    • எல்.ஐ.சி. என்பது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும்.

    புதுடெல்லி :

    அதானி நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் சமீபத்தில் மோசடிக் குற்றச்சாட்டுகளுடன் வெளியிட்ட அறிக்கை, நாட்டையே அதிர்வில் ஆழ்த்தி உள்ளது.

    இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இதை மத்திய அரசு தரப்பில் ஏற்காத நிலையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று அலுவல் எதையும் நடத்த முடியாமல் முடங்கிப்போயின.

    இதையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் எம்.பி., செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாடு சந்தித்து வருகிற பிரச்சினைகளை விவாதிப்பதற்கான இடம்தான் பாராளுமன்றம். இதன் மூலம், எம்.பி.க்களின் அக்கறைகளைப் பற்றியும், எம்.பி.க்கள் எவற்றில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைக் குறித்தும் நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள முடியும்.

    ஆனால் துரதிரஷ்டவசமாக மத்திய அரசு இதன் நன்மையை கண்டு கொள்ள வில்லை. எனவேதான் அவர்கள் (அரசில் அங்கம் வகிக்கிறவர்கள்) விவாதங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். இதன் விளைவுதான், நாம் பாராளுமன்றத்தின் 2 நாட்களை இழந்து இருக்கிறோம்.

    அதானி நிறுவனங்களின் விவகாரம் அதிமுக்கியமானது, நாட்டின் மக்களைப் பாதிக்கிறது என்பதால்தான் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு விரும்புகின்றன. இது போதுமான முக்கியத்துவம் வாய்ந்த விஷயம், அரசு விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. ஆனால் தனக்கு தர்ம சங்கடமாக அமைகிற எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க அரசு விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையொட்டி சசி தரூருக்கு பதில் அளிப்பதுபோல பா.ஜ.க. எம்.பி. மகேஷ் ஜேத்மலானி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் தூண்டுதலால்தான் அதானியின் நிறுவனங்களில் எல்.ஐ.சி., முதலீடு செய்தது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

    இதில் மத்திய அரசு செய்வதற்கு என்ன இருக்கிறது? இதில் மத்திய அரசின் பங்களிப்பு என்ன என்பதை யாரும் கூறவில்லை. எல்.ஐ.சி. என்பது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். அவர்கள் சில முதலீடுகளைச் செய்வது என்று தீர்மானித்து செயல்பட்டிருக்கிறார்கள்.

    இந்த முதலீடுகளில் தவறுகள் நேர்ந்திருந்தால் இது பற்றி இந்திய பங்குச்சந்தை பரிமாற்ற வாரியம் (செபி) மற்றும் பாரத ரிசர்வ் வங்கிதான் விசாரிக்கும். அவர்கள் விசாரித்து அதன் அறிக்கை வரட்டும். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நியாயப்படுத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 6 நாட்களில் மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 26.5 சதவீதம் இழப்பை சந்தித்துள்ளது.
    • இந்திய வங்கிகளில் பொதுத்துறை வங்கிகளே அதானி குழுமத்திற்கு 90 சதவீதத்திற்கு அதிகமான கடன்களை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    அதானி குழுமம் மீது அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை கூறியது.

    இதைத்தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக அதானியின் சொத்து மதிப்பும், கடும் சரிவை சந்தித்தது.

    கடந்த 24-ந் தேதி வரை உலக பணக்கார பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி தற்போது முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறியது மட்டுமல்லாமல் முகேஷ்அம்பானிக்கு பின் சென்று விட்டார். இதன் மூலம் கவுதம்அதானி ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற நிலையையும் இழந்துள்ளார்.

    இந்நிலையில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், எப்.பி.ஓ. பங்குகள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி திரட்டும் திட்டத்தையும் நேற்று ரத்து செய்தது.

    இதுஒரு புறம் இருக்க, பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் 6 நாட்களில் மட்டும் ரூ.9 லட்சம் கோடி (100 பில்லியன் டாலர்) அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது.

    அதாவது கடந்த 6 நாட்களில் மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 26.5 சதவீதம் இழப்பை சந்தித்துள்ளது. அதானி டோடல் கேஸ் நிறுவனம் 10 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 10 சதவீதம், அதானி துறைமுகங்கள் 6.1 சதவீதம், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் 10 சதவீதம், என்.டி.டி.வி. பங்குகள் 5 சதவீதம், அதானி பவர் 5 சதவீதம், அதானி வில்மர் 22.4 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. ஏ.சி.சி. லிமிடெட் 0.1 சதவீதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 5.3 சதவீதமும் உயர்ந்துள்ளது.

    இதன் மூலம் அதானி குழுமத்தில் 10 நிறுவனங்கள், 8 நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் குறித்த விபரங்களை தெரிவிக்குமாறு வங்கிகளிடம் பாரத ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது. வங்கிகளிடம் இருந்து அதானி குழும நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ரூ.2.1 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளன. இவற்றின் இந்திய வங்கிகள் வழங்கிய கடன் மட்டும் சுமார் 40 சதவீதம் என கூறப்படுகிறது.

    இந்திய வங்கிகளில் பொதுத்துறை வங்கிகளே அதானி குழுமத்திற்கு 90 சதவீதத்திற்கு அதிகமான கடன்களை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.22 ஆயிரம் கோடியையும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7 ஆயிரம் கோடியையும், பரோடா வங்கி ரூ.7 ஆயிரம் கோடியையும் அதானி குழும நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். மற்ற வங்கிகள் கடன் விபரங்களை வெளியிடவில்லை.

    இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கிகள் அதானி குழுமங்களுக்கு வழங்கிய கடன் விபரங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு பாரத ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

    • மோடி அரசின் ஆதரவோடு அதானி இந்த ஊழலை நடத்திக்கொண்டிருக்கிறார்.
    • பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டு இருக்கிறது.

    புதுடெல்லி

    பாராளுமன்றத்தில் நேற்று அதானி குழும விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. எம்.பி.க்களின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச்சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அது வருமாறு:-

    கனிமொழி (தி.மு.க. எம்.பி.):- அதானி குழுமத்தின் நிலையால் பொதுத்துறைகளில் சாமானிய மக்கள் முதலீடு செய்த பணம் என்ன ஆனது என நாடாளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினோம். ஆனால் பா.ஜனதா இதை காதில் வாங்கவில்லை. அவையை ஒத்தி வைத்துவிட்டனர். நாங்கள் கூட்டுக்குழு விசாரணை கேட்டு இருக்கிறோம். தமிழக முதல்-அமைச்சரும் இதை வலியுறுத்துகிறார். நிச்சயம் நாங்கள் இதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

    கார்த்தி ப.சிதம்பரம் (காங்கிரஸ் எம்.பி.):- வெளிப்படையான, தரமான சந்தை பரிமாற்றம் உள்ள ஒரு நாட்டில் வெளிநாட்டு அமைப்பு சில கருத்துகளை சொன்னால் அந்த நாட்டின் பொருளாதாரத்தை கவனிக்கும் மந்திரியோ, அதிகாரியோ மக்களை சந்தித்து நாட்டின் நிலை என்ன? என்று வெளிப்படையாக சொல்லி இருக்க வேண்டும். சாதாரண மக்களின் பணம் பாதுகாப்பாக இருக்கிறதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பொதுத்துறைகளை நிர்வகிக்கும் செபி, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளன. இதையெல்லாம் பற்றி அரசு ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவையை ஒத்திவைத்து விட்டனர். இதுபற்றி முதலில் அரசு பதில் அளிக்கட்டும். அது திருப்தியா? இல்லையா? என்பதை பார்த்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வோம்.

    வெளிநாட்டு அமைப்பு சொல்வதாலேயே அது உண்மை என ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்?. இதில் பொதுமக்களின் பணமும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. அது பத்திரமாக இருக்கிறதா என்பதையும் விளக்க வேண்டும்.

    ஜோதிமணி (காங்கிரஸ் எம்.பி.):- அதானி குழுமம் வீழ்ச்சியால் அதில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி.யில் ஒரே நாளில் மக்கள் பணம் ரூ.30 ஆயிரம் கோடி நாசமாகியுள்ளது. மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை இந்த பிரச்சினை ஏற்படுத்தி உள்ளது. மோடி அரசின் ஆதரவோடு அதானி இந்த ஊழலை நடத்திக்கொண்டிருக்கிறார். ராகுல்காந்தி கடந்த 8 ஆண்டுகளாக இது அதானி அரசு என்று சொல்வது தற்போது நிரூபணமாகி இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்களின் பங்குகள் 819 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
    • அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74 ஆயிரம் கோடி பங்குகளை எல்ஐசி வைத்து உள்ளது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம், பங்குச்சந்தையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் தில்லுமுல்லுவை அம்பலப்படுத்தி வருகிறது.

    அந்த நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், "அதானி குழுமம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து, ரூ.17.80 லட்சம் கோடிக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது. 'அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி). இதில், 100 பில்லியன் டாலர் (ரூ.8.2 லட்சம் கோடி) கடந்த மூன்று ஆண்டில் ஈட்டப்பட்டுள்ளது.

    இந்தக் காலக்கட்டத்தில் அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்களின் பங்குகள் 819 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், பங்குச்சந்தையில் மோசடி செய்து, போலி நிறுவனங்கள் மூலமாக அதானி நிறுவனம் பணத்தை முறைகேடாக ஈட்டியுள்ளது. இதற்காக தாராள வரிச்சலுகை உள்ள மொரீசியஸ், ஐக்கிய அரபு எமிரேட், கரீபியன் தீவுகள் போன்ற நாடுகளில் போலி நிறுவனங்களை தொடங்கி உள்ளது. இவற்றை அதானி குழுமத்தில் உயர் பதவிகளில் உள்ள அதானியின் உறவினர்கள் நிர்வகித்து வருகின்றனர். மொரீசியசில் மட்டுமே 38 போலி நிறுவனங்களை அதானி குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.

    மேலும், அதானி குழுமம் வரம்புக்கு மீறி கடன் பெற்றுள்ளது. இதனால் நிலையற்ற தன்மையில் அதானி குழும நிறுவனங்கள் உள்ளன" என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    கருப்புப் பண ஒழிப்பு பற்றி பேசும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தனக்கு நெருக்கமான நிறுவனத்தின் இந்த சட்ட விரோதச் செயல்களைப் பார்த்து கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறதா? இந்த குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல் முழுமையாக செபி விசாரிக்குமா?

    அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74 ஆயிரம் கோடி பங்குகளை எல்ஐசி வைத்து உள்ளது. மேலும், அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வழங்கி உள்ளது. எனவே, அதானி குழுமம் முறைகேடு செய்து தனது பங்கு மதிப்பை தன்னிச்சையாக உயர்த்தி, அவற்றை அடமானமாக வைத்து, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்றதா? என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி விசாரணை நடத்த வேண்டும். இது உண்மையாக இருந்தால் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் நிதிநிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    எனவே, பொதுநலன் கருதி இந்திய பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், கவுதம் அதானி, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பங்கேற்றனர்.
    • ஹைஃபா துறைமுக ஒப்பந்தம் ஒரு மகத்தான மைல்கல் என்று பிரதமர் நேதன்யாகு குறிப்பிட்டார்.

    ஹைஃபா:

    இஸ்ரேலிய முக்கியமான துறைமுகமான ஹைஃபா துறைமுகத்தை அதானி குழுமம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கி உள்ளது. டெல் அவிவ் நகரில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தைத் திறப்பது உள்பட இஸ்ரேலில் அதிக முதலீடு செய்வதற்கான அதானி நிறுவன திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைஃபா நகரத்தை வளர்ச்சி அடைய செய்ய உள்ளதாக அதானி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

    ஹைஃபா துறைமுகத்தை கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அதானி, முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கினார். துறைமுகத்தில் ரியல் எஸ்டேட்டை உருவாக்க உள்ளதாகவும் கூறினார்.

    அதானி குழுமத்துடனான ஹைஃபா துறைமுக ஒப்பந்தம் மிகப்பெரிய மைல்கல் என்று பிரதமர் நேதன்யாகு குறிப்பிட்டார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை கணிசமாக மேம்படுத்தும் என்றும் கூறினார்.

    ஹைஃபா துறைமுகமானது சரக்கு கப்பல்களை கையாளும் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் ஆகும். சுற்றுலா பயணக் கப்பல்களை அனுப்புவதில் மிகப்பெரிய துறைமுகமாக விளங்குகிறது.

    அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஹிண்டன்பர்க், அதானி குழுமத்திற்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து ஆய்வறிக்கை வெளியிட்டது. இந்த விவாகரம் உலகளவில் விவாதிக்கப்பட்டு வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்த, அதானி குழும பங்குகள் சரியத் தொடங்கின. இந்த சரிவுக்கு மத்தியில் அதானி குழுமம் புதிய துறைமுகத்தை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் உள்ளன.
    • எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாக உள்ளது.

    மும்பை :

    இந்தியாவின் 'நம்பர் 1' கோடீஸ்வரரான கவுதம் அதானியின் அதானி குழுமம், முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது.

    அது, அதானி குழுமத்துக்கு பலத்த அடியாக அமைந்தது. அந்நிறுவன பங்குகள் ரூ.4.20 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. தங்கள் மீது தெரிவிக்கப்படும் முறைகேடுகளை மறுத்துள்ள அதானி குழுமம், இது இந்தியாவுக்கு எதிரான சதி என்று கூறியுள்ளது.

    அதேவேளையில், அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளதால், அவற்றுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக குரல் எழுந்துள்ளது.

    இந்நிலையில் எல்.ஐ.சி. நிறுவனம் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. சார்பில் ரூ.36 ஆயிரத்து 474 கோடியே 78 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அது கடந்த டிசம்பர் 31-ந்தேதியன்று ரூ.35 ஆயிரத்து 917 கோடியே 31 லட்சமாக இருந்தது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. பங்குகளின் மொத்த வாங்கு மதிப்பு ரூ.30 ஆயிரத்து 127 கோடியாகவும், கடந்த 27-ந்தேதி நிலவரப்படி அதன் சந்தை மதிப்பு ரூ.56 ஆயிரத்து 142 கோடியாகவும் உள்ளது. அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு, எல்.ஐ.சி.யின் மொத்த முதலீடுகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு' என்று தெரிவித்துள்ளது.

    அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை எல்.ஐ.சி. தெரிவிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாக உள்ளது.

    • நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
    • இந்த விவகாரத்தில், மத்திய நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் சம்பந்தப்பட்டுள்ளன.

    கொல்கத்தா :

    அதானி குழுமம் பங்குச்சந்தைகளில் மோசடி செய்ததாகவும், கணக்கில் முறைகேடு செய்ததாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீ்ட்டு ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.

    இந்தநிலையில், இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசு உயர்மட்ட விசாரணை குழுவை அமைக்க வேண்டும். அதில், சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும்.

    அந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிக்க வேண்டும். விசாரணை முடிவடையும்வரை, அன்றாட அடிப்படையில் கண்காணிக்க வேண்டும். நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

    இந்த விவகாரத்தில், மத்திய நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. அனைத்து குற்றச்சாட்டுகளும் முறையாக விசாரிக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×