search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "usa"

    • நியூயார்க் நகரில் 200க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டன
    • ஆக்லேண்டு பகுதியில் 249 மில்லிமீட்டர் மழைபொழிவு ஏற்பட்டது

    கடந்த செப்டம்பர் 29 அன்று அமெரிக்காவின் முக்கிய பெருநகரமான நியூயார்க் நகரில் திடீரென பெய்த பெருமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் ஆங்காங்கே வெள்ள பெருக்கு ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட பல விமான சேவைகள் நிறுத்தப்பட்டு நகரின் ஒரு சில பிராந்தியங்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.

    நகரில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அவ்வப்போது புகைப்படங்களும், வீடியோக்களும் பயனர்களால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வந்தது.

    அவ்வாறு வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் ஒரு பல்பொருள் அங்காடியில் முழங்கால் அளவு வரை நீர், நதி போல் ஓடுவதும், அதில் மிதக்கும் பொருட்களை தாண்டி அக்கடைக்கு வந்த பல வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துடன் தண்ணீர் நடுவே மெதுவாக நடந்து செல்வதையும் காண முடிந்தது.

    மேலும் அந்த வீடியோவில், "பிரளயத்தை போன்ற வெள்ளத்தில் நியூயார்க் மக்கள் ஒரு பெரிய மளிகை கடையில், ஓடி வரும் தண்ணீரில், மிதக்கும் மளிகை பொருட்கள், மிருகங்களுக்கு நடுவே பொருட்களை வாங்கி செல்கின்றனர்" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது.

    ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது. உண்மையில், இந்த வீடியோவில் காணப்படும் சம்பவம் பல மாதங்களுக்கு முன் 2023 ஜனவரி 28 தேதியிட்ட ஒரு வீடியோவில் உள்ளது.

    நியூசிலாந்து நாட்டின் ஆக்லேண்டு நகரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 24 மணி நேர இடைவெளியில் 249 மில்லிமீட்டர் மழைப்பொழிவு ஏற்பட்ட போது அங்குள்ள கிலென்ஃபீல்டு சூப்பர் மார்கெட் (Glenfield Super Market) எனும் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்க வந்தவர்கள் சிக்கி கொண்டு மெதுவாக வெளியேறியது வீடியோ பதிவாகி வெளியிடப்பட்டது.

    அந்த சம்பவம் குறித்த வீடியோவைத்தான் நியூயார்க் நகர வெள்ளத்துடன் தொடர்புபடுத்தி தவறுதலாக வலைதளங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர்.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.


    • 1956, அக்டோபர் 14 அன்று டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் காலமானார்
    • சர்தார் படேல் சிலையை உருவாக்கிய சிற்பி இதனை வடிவமைத்துள்ளார்

    தலித்துகள் உரிமைகளுக்காக போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவருமான 'பாபா சாகிப்' டாக்டர். பீம் ராவ் அம்பேத்கர், 1891 ஏப்ரல் 14 அன்று பிறந்தார்.

    அம்பேத்கர், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு பிரதமர் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான முதல் அமைச்சரவையில் சட்ட மற்றும் நீதி துறை அமைச்சராக இருந்தவர். 1956, அக்டோபர் 14 அன்று டாக்டர். அம்பேத்கர் காலமானார். இந்த நாளை அவரது தொண்டர்கள் 'தம்மா சக்ரா பரிவர்தன் தினம்' என கொண்டாடுகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவில், வரும் அக்டோபர் 14 அன்று மேரிலாண்ட் மாநிலத்தில் அக்கோகீக் (Accokeek) பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகி வரும் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் (AIC) 'சமத்துவத்திற்கான சிலை' (Statue of Equality) என பெயரிடப்பட்ட 19 அடி உயர அம்பேத்கர் சிலை ஒன்று திறக்கப்பட இருக்கிறது. "ஒற்றுமைக்கான சிலை" (Statue of Unity) எனும் பெயரில் இந்திய மாநிலம் குஜராத்தில் இந்திய சுதந்திர போராட்ட தலைவரான சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்த புகழ் பெற்ற சிற்பி ராம் சுதார் (Ram Sutar) கைவண்ணத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு உலகெங்கிலுமிருந்து பல முக்கிய பிரதிநிதிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பூங்காவிற்கு வருபவர்களில் பலர் தற்காலிக கூடாரம் அமைத்து தங்குவது வழக்கம்
    • சார்லோட் கடைசியாக ஆரஞ்சு நிற சட்டை, கருநீல பேண்ட், கருப்பு நிற க்ராக் காலணி அணிந்திருந்தாள்

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது சரடோகா கவுன்டி பகுதி.

    இங்கு சுமார் 6250 ஏக்கர் பரப்பளவில் உள்ளது மோரு ஏரி மாநில பூங்கா (Moreau Lake State Park) எனப்படும் இயற்கை எழில் மிகுந்த சிறிய வனப்பகுதி. இயற்கை காட்சிகளும், பெரிய ஏரியும், அழகான மரங்களை கொண்ட அடர்ந்த காடுகளும் உள்ளதால் இப்பகுதிக்கு பொழுதுபோக்கவும், அங்கேயே தற்காலிக கூடாரம் அமைத்து சுற்றி பார்க்கவும் மக்கள் வருவது வழக்கம்.

    அவ்வாறு சில தினங்களுக்கு முன் பொழுது போக்க ஒரு குடும்பத்தினர் தங்கள் மகளுடன் வந்திருந்தனர். சார்லோட் சேனா எனும் அவர்களின் 9 வயது மகள் நேற்று முன் தினம் தனது சைக்கிளில் சுற்றி வர கிளம்பினார். கிளம்பி சென்றும் நீண்ட நேரம் திரும்பி வராததால் அவள் பெற்றோர் கவலையடைந்தனர்.

    அச்சிறுமியின் தாய் த்ரிஷா, அவசர சேவை எண் 911-ஐ தொடர்பு கொண்டு தெரிவித்ததின் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையினை தொடங்கினர்.

    விசாரணையில் அச்சிறுமியை அங்குள்ள லூப் ஏ (Loop A) பகுதியில் கடைசியாக அவள் அணிந்திருந்த ஆரஞ்சு நிற சட்டை, கருநீல பேண்ட், கருப்பு நிற க்ராக் (Croc) காலணியுடன் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு பிறகு என்னவானார் என தெரியவில்லை.

    இது குறித்து நியூயார்க் நகர கவர்னர் கேதி ஹோசல் தெரிவித்ததாவது:

    அச்சிறுமியை தேடும் பணியில் 75 காவல்துறை அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 18 மணி நேரத்திற்கும் மேலாக நியூயார்க் காவல்துறை அதிகாரிகள், மோப்ப நாய்கள், விமான சேவை, வேட்டை நாய்கள் என அனைத்துவிதமான வளத்தையும் இந்த தேடுதலில் ஈடுபடுத்தியுள்ளோம். பல்வேறு சிறப்பு அதிகாரிகளும் இதில் பங்கு பெற்றுள்ளனர். டிரோன் சேவை, மற்றும் நீருக்கடியில் சென்று மீட்கும் படை சேவை உட்பட எல்லாவித வளங்களையும் உபயோகபடுத்தியுள்ளோம். பூங்காவில் அச்சிறுமி காணாமல் போன போது பரிமாறி கொள்ளப்பட்ட செய்திகள் குறித்தும் ஆராய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எந்த சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்தாமல் தேடி வருகிறோம்.

    இவ்வாறு கவர்னர் தெரிவித்தார்.

    5 அடி 1 அங்குலம் உயரமும் 40 கிலோ எடையும் உள்ள அச்சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை, பொது மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளது. அப்பகுதி முழுவதும் ஆம்பர் எச்சரிக்கை (Amber Alert) எனப்படும் குழந்தைகள் கடத்தல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • நவம்பர் 28 வரை ஆணையம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது
    • எழுத்தாளர் கிரீன்வால்டின் கருத்தை ஆமோதித்தார் மஸ்க்

    "இணையதள ஸ்ட்ரீமிங் சட்டம்" எனும் புது சட்டத்தின் மூலம் 10 மில்லியன் டாலருக்கு மேல் வருமானம் ஈட்டும் இணையதள சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், தங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை அரசாங்கத்திடம் பதிவு செய்து அரசு விதிக்கும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என கனடா அரசாங்கத்தின் வானொலி-தொலைக்காட்சி மற்றும் தொலைதொடர்பு ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்ய நவம்பர் 28 வரை காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளது. இந்த உத்தரவு, ஆடியோ-வீடியோ சேவைகளை வழங்கும் பல வலைதளங்கள் உட்பட சமூக வலைதளங்களுக்கும், இணையவழி சந்தாதாரர் தொலைக்காட்சி சேவைகள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

    "உலகத்திலேயே கனடா அரசாங்கம்தான் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான பிற்போக்கு வழிமுறைகளை கையாண்டு வருகிறது" என இதனை குறித்து கெல்ன் கிரீன்வால்ட் எனும் அமெரிக்க எழுத்தாளர் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

    "ட்ரூடோ கருத்து சுதந்திரத்தை நசுக்க முயற்சிக்கிறார். வெட்கக்கேடு" என குறிப்பிட்டு, கிரீன்வால்டின் கருத்தினை ஆமோதிக்கும் வகையில் எக்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிறுவனரும் உலகின் நம்பர் 1. பணக்காரரான அமெரிக்கர் எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    கனடா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு உலகளவில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    • அமெரிக்காவில் சுமார் 45 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்
    • நான்கு மத மக்களுக்கு எழும் பிரச்சனை குறித்து குரலெழுப்ப முடியும் என்கிறார் ஸ்ரீதானேதர்

    அமெரிக்க பாராளுமன்றத்திற்கு மிச்சிகன் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஸ்ரீதானேதர் (68). அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான இவர் ஒரு முன்னணி தொழிலதிபராகவும், எழுத்தாளராகவும் உள்ளார்.

    90களில் தொடங்கி அமெரிக்காவிற்கு மென்பொருள் மற்றும் உயர் தொழில்நுட்பங்களில் கல்வி பயிலவும் பணிகளுக்காகவும் இந்தியாவிலிருந்து பலர் சென்றுள்ளனர். அவ்வாறு செல்பவர்களில் 95 சதவீதம் பேர் அங்கேயே தங்கி விடுகின்றனர். அவர்களில் பல மதத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். சுமார் 45 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் வாழ்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

    இந்நிலையில், அமெரிக்காவில் வாழும் இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் ஜைனர்கள் (HBSJ) ஆகியோருக்காக ஒரு தனித்துவமான அரசியல் அமைப்பு ஒன்றை ஸ்ரீதானேதர் தொடங்குகிறார். இதற்கு இருபதிற்கும் மேற்பட்ட சட்ட வல்லுனர்களின் ஆதரவும் உள்ளது.

    நான்கு மதங்களின் மக்களுக்கிடையே பரஸ்பர புரிதலை வளர்க்கவும், இந்த மதங்களில் உள்ள மக்களின் தனித்துவ சிக்கல்கள் மற்றும் தேவைகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கவும் இந்த அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பின் மூலம் 4 மதங்களை சேர்ந்தவர்களுக்கான உரிமைகளை பெறவும், மத ரீதியில் அவர்கள் பாகுபாடு செய்யப்பட்டால் அதனை எதிர்க்கவும், இந்த மதங்களை குறித்த தவறான புரிதல்களை நீக்கவும் முடியும் என ஸ்ரீதானேதர் கருதுகிறார்.

    அனைவரையும் ஒன்றிணைத்து வாழும் அமெரிக்கா பலமான அமெரிக்காவாக திகழும் என ஸ்ரீதானேதர் தெரிவித்துள்ளார்.

    • நல்ல ஊழியரை பணிநீக்கம் செய்வதற்கு பதில் நான் சிறை சென்றிருப்பேன்
    • மூன்றாவது டோஸ் செலுத்தி கொண்ட பின் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது

    2019 வருட இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா எனும் வைரஸ் தொற்று, 2020ல் உலகம் முழுவதும் பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி, உலக பொருளாதாரத்தை நலிவடைய செய்து லட்சகணக்கானவர்களை பலி வாங்கியது. இதனை எதிர்கொள்ள இந்தியா உட்பட பல நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து அவற்றை அந்தந்த நாட்டு மக்கள் கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தின. விருப்பமில்லையென்றாலும் அரசாங்கங்கள் கட்டாயமாக்கியதால் மக்கள் சில மாதகால இடைவெளிகளில் ஒன்றன் பின் ஓன்றாக செலுத்தி கொண்டனர்.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் பயன்பாடு குறைந்து வருவதாகவும் சில நாடுகள் அதனை உபயோகிப்பதையே நிறுத்தி விட்டதாகவும் எக்ஸ் வலைதளத்தில் ஒரு பயனர் கருத்து தெரிவித்திருந்தார்.

    இதற்கு தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிலளித்த எக்ஸ் நிறுவனத்தின் அதிபரும், உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாவது:

    மக்கள் கட்டாயமாக தடுப்பூசிகளையும் பூஸ்டர்களையும் செலுத்தி கொள்ள வேண்டும் என அரசாங்கங்கள் கட்டாயபடுத்தியதை நான் நாகரிகமற்ற அத்துமீறலாக கருதுகிறேன். அதிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் எனக்கு விருப்பமில்லை. தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்பதால் ஒரு நல்ல ஊழியரை பணி நீக்கம் செய்வதற்கு பதிலாக நானே சிறைக்கு சென்றிருப்பேன்.

    அது மட்டுமல்ல; நானும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

    நோயினால் ஏற்பட்ட உடல்ரீதியான சிக்கலை விட தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு பலருக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட்டன. நோய் தடுப்புக்கான தடுப்பூசி, நோயை விட கடுமையான விளைவுகளை தர கூடாது.

    இவ்வாறு மஸ்க் தெரிவித்துள்ளார்.

    • புறநகர் பகுதியில் வெட்டவெளி விருந்தில் ஜேலி கலந்து கொண்டார்
    • காவல்துறை அதிகாரி நெருங்கி வந்ததும் ஜேலி துப்பாக்கியை எடுத்தார்

    அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலம் கன்சாஸ் (Kansas). இதன் தலைநகரம் டொபேகா (Topeka).

    இங்குள்ள க்ளவுட் கவுன்டி பிராந்தியத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஜேலி சில்ஸன் (Jaylee Chillson) எனும் 14 வயது சிறுமி, சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடி விட்டாள். இத்தகவல் க்ளவுட் கவுன்டி காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

    ஜேலி தனது நண்பர்களுடன் ஊருக்கு வெளியே உள்ள அரோரா எனும் புறநகர் பகுதியில் ஒரு வெட்டவெளி விருந்தில் கலந்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவளை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். அப்போது ஒரு காவல்துறை அதிகாரி அவள் தப்பி செல்லாதவாறு இருக்க அவளை பிடித்து கொள்ள முயன்றார்.

    ஆனால், அதிகாரிகள் என்ன சொல்லியும் கேட்க மறுத்த அச்சிறுமி, ஒரு கட்டத்தில் திடீரென ஒரு துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு கொண்டார். அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவல்துறை அதிகாரியும், தீயணைப்பு அதிகாரிகளும் அச்சிறுமிக்கு உயிர்காக்கும் முதலுதவிகளை செய்தனர். ஆனால் இந்த முயற்சிகள் பலனளிக்காததால் அச்சிறுமி உயிரிழந்தார்.

    விருந்துக்கு வந்திருந்த பலரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    தனது மகளை பறி கொடுத்த ஜேலியின் தந்தை உருக்கமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • தனது பெயரை அவர்களது உடலில் பச்சை குத்தி விடுவது இவன் வழக்கம்
    • பல வித சித்திரவதைகளை கையாண்டு தனது கூட்டத்திலிருந்து தப்பிப்பதை தடுப்பான்

    அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் வசித்தவன் "சுகர் பேர்" (sugar bear) என அழைக்கப்பட்டு வந்த சோமோரி மோசஸ் (47).

    2003 தொடக்கத்திலிருந்தே இவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகளை காட்டி மயக்கி, பிறகு அவர்களை பல விதங்களில் அச்சுறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தான். தன்னை விட்டு அவர்கள் வெளியேறுவதை தடுக்க பல வழிமுறைகளை கையாண்டு வந்தான. அவர்களது உடலில் அவனது பெயரை பச்சை குத்தி விடுவான்.

    ஒரு பெண் இவரை விட்டு தப்ப முயன்ற போது அவளை அடித்து காயங்களின் மேல் எலுமிச்சை சாற்றை ஊற்றினான். வேறொரு பெண்ணை மின் ஒயரால் அடித்து காயங்களில் உப்பை தடவினான். மற்றொரு பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி இத்தொழிலில் ஈடுபட வைத்தான்.

    இந்நிலையில், 2017ல் லியாண்ட்ரா ஃபாஸ்டர் எனும் 32 வயது பெண்ணை அடித்து கொன்று விட்டான். பிறகு அவள் உடலை கத்தியாலும், அறத்தாலும் துண்டு துண்டுகளாக்கினான். சில பாகங்களை தனது வீட்டில் உள்ள ஃப்ரீசரில் மறைத்து வைத்த அவன், பல பாகங்களை எப்படியோ அழித்து விட்டான்.

    லியாண்ட்ரா காணாமல் போனதாக வந்த புகாரை காவல்துறை விசாரித்து வந்தது. லியாண்ட்ராவை தேடி வந்த காவல்துறையினர் சோமோரியின் வீட்டை சோதனையிட்ட போது, "சோமோரி" என பச்சை குத்தப்பட்ட ஒரு உடல் பாகம் அவன் வீட்டில் சிக்கியது. இதனை தொடர்ந்த நடைபெற்ற தீவிர விசாரணையில் அவன் கைது செய்யப்பட்டான்.

    குற்றத்தை ஒப்பு கொண்ட சோமோரி 15 வருட சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளான்.

    • 2020ல் இந்தியாவால் பயங்கரவாதி என பிரகடனப்படுத்தபட்டவர் ஹர்திப் சிங் நிஜ்ஜார்
    • அமெரிக்கா, கனடா இடையே பல உரையாடல்கள் நடைபெற்றன என்றார் கோஹென்

    அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய உளவுத்துறை கூட்டமைப்பு, ஃபை ஐஸ் (Five Eyes). உலகளாவிய தீவிரவாத, பயங்கரவாத மற்றும் நாசவேலைகள் குறித்து கண்காணிப்பின் மூலமாகவும் சமிக்ஞைகளை உள்ளடக்கியும் பெறப்படும் தகவல்கள், இந்த 5 நாடுகளுக்கிடையே பரிமாறி கொள்ளப்பட்டு அதன் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    2020ல் இந்தியாவால் பயங்கரவாதி என பிரகடனப்படுத்தப்பட்ட ஹர்திப் சிங் நிஜ்ஜார் எனும் காலிஸ்தான் தீவிரவாதி கடந்த 18 அன்று கனடாவில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவிற்கு பெரும்பங்கு உண்டு என கனடாவின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை ஆதாரமற்றது என இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

    இரு நாடுகளும் தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து கொள்ளும் அளவிற்கு இரு நாட்டு உறவு நலிவடைந்தது.

    இந்நிலையில், ஹர்திப் கொலையில் இந்திய அரசுக்கு பங்கு இருப்பதற்கான ஆதாரங்கள் ஃபை ஐஸ் அமைப்பின் மூலம் கனடாவிற்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக கனடா மற்றும் அமெரிக்காவிற்கிடையே பல உரையாடல்கள் நடைபெற்றதாகவும் கனடாவிற்கான அமெரிக்க தூதர் டேவிட் கோஹென் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா இந்த கொலை குற்றச்சாட்டு குறித்து கனடாவுடன் ஒத்துழைப்பதாகவும், இதற்கு பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் தனது தரப்பிலிருந்து முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து இந்தியா அடுத்து என்ன செய்ய போகிறது என அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர்.

    • நிஜ்ஜார், கனடாவின் வேன்கூவர் நகரில் கடந்த ஜூன் மாதம் சுட்டு கொல்லபப்ட்டார்
    • தீவிரவாதிக்கு கனடா ஏன் அடைக்கலம் கொடுத்தது என ரூபின் கேள்வி எழுப்பினார்

    இந்தியாவிலிருந்து சீக்கியர்களுக்கென காலிஸ்தான் எனும் பெயரில் தனிநாடு கேட்டு பஞ்சாப் மாநிலத்தில் 1980களில் உருவான பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் இயக்கம். இந்தியாவின் அடுத்தடுத்த ஆட்சிகளில் நசுக்கப்பட்டு விட்டாலும், இதன் ஆதரவாளர்கள் கனடா போன்ற நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வேன்கூவர் நகரில் கடந்த ஜூன் மாதம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45) எனும் காலிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.

    சில தினங்களுக்கு முன் கனடா நாட்டதிபர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த கொலையில் இந்தியாவிற்கு தொடர்பிருப்பதாக தெரிவித்தார். இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டினை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

    இதன் தொடர்ச்சியாக கனடாவிலுள்ள இந்தியாவின் தூதரை கனடா வெளியேற்ற, பதிலடியாக இந்தியா, கனடா நாட்டு தூதரை இங்கிருந்து வெளியேற உத்தரவிட்டது. மேலும், கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் கனடா குடிமக்களுக்கு விசா வழங்குவதையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

    இந்த பிரச்சனையில் தனது கருத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் கனடா, இந்தியாவிற்கு எதிராக தங்களோடு இணைய அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்தது.

    இரு நாட்டு உறவிற்கும் சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ள இந்த சிக்கல் குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்ததாவது:

    கனடாவின் இந்த குற்றச்சாட்டு, இந்தியாவை விட கனடாவிற்குத்தான் அதிக அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய உறவா அல்லது அமெரிக்க உறவா என முடிவெடுக்க வேண்டிய கட்டம் வந்தால், அமெரிக்கா இந்தியாவுடன்தான் துணை நிற்கும். இந்தியாவுடனான உறவு எங்களுக்கு முக்கியமானது. கனடா, இந்தியாவோடு சச்சரவில் ஈடுபடுவது, ஒரு எறும்பு, யானையுடன் சண்டையிடுவது போலாகும். தனது குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரத்தை தர ஜஸ்டின் ட்ரூடோவால் முடியவில்லை. இந்தியாவால் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்ட ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தது எதற்காக என கனடா விளக்க கடமைப்பட்டுள்ளது. பிளம்பராக வேலை செய்து வந்த கொல்லப்பட்ட நிஜ்ஜார் ஒன்றும் சுத்தமான மனிதரல்ல; அவரது கரங்கள் ரத்தக்கறை படிந்தவை.

    இவ்வாறு மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.

    • ரஷியா, கருங்கடல் பகுதி வழியாக உணவு தானிய கப்பல் போக்குவரத்தை தடுத்தது
    • 5 நாடுகளில் 3 நாடுகள், தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன

    2022 பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களாக தொடர்ந்து வருகிறது.

    மத்திய ஐரோப்பிய நாடான போலந்து உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கி உதவியது.

    போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்ரமித்த கருங்கடல் பகுதியை உணவு தானிய ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதை ரஷியா தடை செய்து விட்டது. இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்கள் உலகின் பல நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் வழியாக சென்றடைகின்றன.

    இந்நிலையில் ஐரோப்பியாவின் பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் உள்ளூர் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் அந்நாடுகளின் வழியாக தானியம் எடுத்து செல்ல அனுமதித்தாலும் அந்நாடுகளில் அவற்றை விற்பனை செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை விலக்குவதாக அறிவித்தது.

    இருப்பினும் அந்த 5 நாடுகளில் போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா ஆகிய 3 நாடுகள், தங்கள் நாட்டு உள்ளூர் விவசாயிகளை காக்கும் வகையில் இந்த தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன.

    இதனை எதிர்க்கும் விதமாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. கூட்டமைப்பின் பொது சபை கூட்டத்தில் உரையாற்றும் போது, "சில ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிற்கு மறைமுகமாக உதவுகின்றன" என குறிப்பிட்டார்.

    இதற்கு எதிர்வினையாக தற்போது போலந்து நாட்டு பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி (Mateusz Morawiecki), உள்நாட்டு ராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

    • ஐ.நா. பொது சபையின் 78-வது அமர்வு நியூயார்க் நகரில் நடைபெறுகிறது
    • பிற நாட்டின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்று கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்தது

    ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் கொள்கைகளை வகுக்கும் முக்கிய அங்கம், பொது சபை (General Assembly). ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் உறுப்பினர் நாடுகளுக்கான சந்திப்புக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இச்சபையின் கூட்டம் நடைபெறும்.

    இதன் 78-வது அமர்வு இம்மாதம் 5 அன்று தொடங்கியது. இது இம்மாதம் 26 வரை நடைபெறும். நேற்று தொடங்கி வரும் 23 வரையிலும், பிறகு இரண்டு நாட்கள் கழித்து 26 அன்றும், பல்வேறு பிரச்சனை குறித்து உறுப்பினர் நாடுகள் கலந்து கொள்ளும் விவாதங்கள் நடைபெறும்.

    இதில் உறுப்பினர் நாடான துருக்கியின் சார்பில் அதன் அதிபர் ரிசெப் டாயிப் எர்டோகன் கலந்து கொண்டார்.

    "பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி நிலைபெற இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச வேண்டும். இதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் துருக்கி வழங்க தயாராக உள்ளது." என விவாதத்தில் பேசிய போது அவர் தெரிவித்தார்.

    கடந்த வருடம் நடைபெற்ற பொது சபை சந்திப்பிலும் எர்டோகன் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார்.

    "பிற நாட்டின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்று கொள்ள வேண்டும்" என பதிலளித்து அதற்கு அப்பொழுதே இந்தியா கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் துருக்கி இந்த சிக்கலை கிளப்பியிருப்பதால், இந்தியாவின் நகர்வை அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர்.

    ×