search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Khalistan Movement"

    • கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது
    • ஆக்கபூர்வமான உறவை வளர்க்க தீவிரமாக உள்ளதாக ஜஸ்டின் தெரிவித்தார்

    இந்தியாவால் பயங்கரவாதி என பிரகடனப்படுத்தப்பட்ட காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த பிரிவினைவாதி ஹர்திப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் 18 அன்று கனடா நாட்டில் உள்ள வேன்கூவர் நகரில் சுட்டு கொல்லப்பட்டான்.

    இந்த கொலையை தீவிரமாக கனடா விசாரித்து வந்த நிலையில், இம்மாதம் 18 அன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு பாராளுமன்றத்தில் இக்கொலை சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளது என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனை திட்டவட்டமாக இந்தியா மறுத்தது. இரு நாடுகளும் பரஸ்பரம் தூதர்களை வெளியேற்றும் அளவிற்கு உறவு சீர்கெட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தியா கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புபவர்களுக்கு 'விசா' வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

    இந்நிலையில், கனடாவின் க்யூபெக் பிராந்தியத்தில் உள்ள மான்ட்ரியல் பகுதியில் நேற்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேட்டியளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் வளர்ந்து வருவதை உணர்கிறோம். கனடாவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவுடன் ஆக்கபூர்வமாகவும் தீவிரமாகவும் நல்லுறவு வளர்க்க வேண்டியது மிக அவசியம். கடந்த வருடம் நாங்கள் வெளியிட்டிருந்த இந்தோ-பசிபிக் திட்டப்படி, இந்தியாவுடன் நெருங்கிய உறவினை வளர்க்க நாங்கள் தீவிரமாக உள்ளோம். அதே சமயம், ஹர்திப் விவகாரத்தில் சட்டப்படி நடக்க விரும்பும் நாடான எங்களுடன் இணைந்து பணியாற்றி உண்மையை வெளிக்கொண்டு வர இந்தியா உதவ வேண்டும்.

    இவ்வாறு ஜஸ்டின் தெரிவித்தார்.

    ஹர்திப் சிங் கொலையில் இந்தியாவிற்கு உள்ள தொடர்புகள் குறித்து கனடாவிடம் இந்தியா ஆதாரங்களை கேட்டிருந்தது. இதுவரை தங்களின் குற்றச்சாட்டுகளுக்கு கனடா அரசாங்கம் ஆதாரங்கள் எதுவும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு நாட்டு உறவுகளும் சீராகாத நிலையில் இந்த வீடியோ பரவியுள்ளது
    • 2023 மார்ச் மாதம் இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடைபெற்றது

    2020-ஆம் ஆண்டு, இந்தியாவால் பயங்கரவாதி என பிரகடனப்படுத்தப்பட்ட ஹர்திப் சிங் நிஜ்ஜார் எனும் காலிஸ்தான் பயங்கரவாதி கடந்த 18 அன்று கனடாவில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவிற்கு பெரும்பங்கு உண்டு என கனடாவின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை ஆதாரமற்றது என இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இரு நாடுகளும் தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து கொள்ளும் அளவிற்கு இரு நாட்டு உறவு நலிவடைந்தது.

    இரு நாட்டு உறவுகளும் இன்னமும் சீராகாத நிலையில் கனடாவில் நடைபெற்ற சம்பவம் என குறிப்பிடப்பட்டு சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் ஒரு காலிஸ்தான் ஆதரவாளர் சாலையில் சென்று கொண்டிருக்கும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரை வழிமறித்து மிரட்டுகிறார்.

    இந்த வீடியோவுடன் ஒரு குறுஞ்செய்தியையும் ஒரு பயனர் வெளியிட்டுள்ளார். அதில் "அப்பாவி குஜராத்தி தொழிலதிபரை காலிஸ்தானி 'எலிகள்' வெளிப்படையாக மிரட்டுகிறது. ஆனால் இதே 'எலிகள்' இந்திய அரசாங்கத்தின் எதிர்ப்பை கண்டதும் எங்காவது பொந்துக்குள் ஒளிந்து கொள்கின்றன" என குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    இந்திய மாநிலமான பஞ்சாபில் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் எனும் பயங்கரவாதிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    2023 மார்ச் மாதம், இதனை எதிர்த்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு வெளியே புறநகரில் சவுத் ஆல் எனும் பகுதியில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தினார். அப்போது சாலையில் நடந்து சென்ற ஒரு குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரை காலிஸ்தான் ஆதரவாளர்களில் ஒருவர் மிரட்டினார். இது அப்போதே வீடியோவாக வலைதளங்களில் பரவியது. அதே காலகட்டத்தில்தான் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

    மார்ச் மாதம் இங்கிலாந்தில் அப்போது நடைபெற்ற சம்பவம் குறித்த வீடியோ கனடாவில் நடைபெற்றதாக தவறுதலாக பகிரப்பட்டுள்ளது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • நிஜ்ஜார், கனடாவின் வேன்கூவர் நகரில் கடந்த ஜூன் மாதம் சுட்டு கொல்லபப்ட்டார்
    • தீவிரவாதிக்கு கனடா ஏன் அடைக்கலம் கொடுத்தது என ரூபின் கேள்வி எழுப்பினார்

    இந்தியாவிலிருந்து சீக்கியர்களுக்கென காலிஸ்தான் எனும் பெயரில் தனிநாடு கேட்டு பஞ்சாப் மாநிலத்தில் 1980களில் உருவான பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் இயக்கம். இந்தியாவின் அடுத்தடுத்த ஆட்சிகளில் நசுக்கப்பட்டு விட்டாலும், இதன் ஆதரவாளர்கள் கனடா போன்ற நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வேன்கூவர் நகரில் கடந்த ஜூன் மாதம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45) எனும் காலிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.

    சில தினங்களுக்கு முன் கனடா நாட்டதிபர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த கொலையில் இந்தியாவிற்கு தொடர்பிருப்பதாக தெரிவித்தார். இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டினை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

    இதன் தொடர்ச்சியாக கனடாவிலுள்ள இந்தியாவின் தூதரை கனடா வெளியேற்ற, பதிலடியாக இந்தியா, கனடா நாட்டு தூதரை இங்கிருந்து வெளியேற உத்தரவிட்டது. மேலும், கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் கனடா குடிமக்களுக்கு விசா வழங்குவதையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

    இந்த பிரச்சனையில் தனது கருத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் கனடா, இந்தியாவிற்கு எதிராக தங்களோடு இணைய அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்தது.

    இரு நாட்டு உறவிற்கும் சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ள இந்த சிக்கல் குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்ததாவது:

    கனடாவின் இந்த குற்றச்சாட்டு, இந்தியாவை விட கனடாவிற்குத்தான் அதிக அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய உறவா அல்லது அமெரிக்க உறவா என முடிவெடுக்க வேண்டிய கட்டம் வந்தால், அமெரிக்கா இந்தியாவுடன்தான் துணை நிற்கும். இந்தியாவுடனான உறவு எங்களுக்கு முக்கியமானது. கனடா, இந்தியாவோடு சச்சரவில் ஈடுபடுவது, ஒரு எறும்பு, யானையுடன் சண்டையிடுவது போலாகும். தனது குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரத்தை தர ஜஸ்டின் ட்ரூடோவால் முடியவில்லை. இந்தியாவால் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்ட ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தது எதற்காக என கனடா விளக்க கடமைப்பட்டுள்ளது. பிளம்பராக வேலை செய்து வந்த கொல்லப்பட்ட நிஜ்ஜார் ஒன்றும் சுத்தமான மனிதரல்ல; அவரது கரங்கள் ரத்தக்கறை படிந்தவை.

    இவ்வாறு மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.

    ×