search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க மாநிலம்"

    • லாட்டரி பரிசு வெல்பவர்கள் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்
    • வென்றவர்களின் தகவல்களை தரும் கடைக்காரர்களுக்கும் கமிஷன் வழங்கினார்

    வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள மாநிலம் மசாசுசெட்ஸ் (Massachusetts). இதன் தலைநகரம் பாஸ்டன் (Boston).

    1990களின் ஆரம்பத்தில் லெபனான் நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறி மசாசுசெட்ஸ் மாநிலத்தின் வாடர்டவுன் பகுதியில் வசித்து வந்தவர் 63 வயதான அலி ஜாஃபர் (Ali Jaafar). இவருக்கு யூசெஃப் (Yousef) மற்றும் மொஹமெட் (Mohamed) என இரு மகன்கள் உள்ளனர்.

    அலி செல்போன் பயனர்களுக்காக ஒரு ப்ரீபெய்டு சிம் கார்டு கடை நடத்தி வந்தார். இதன் மூலம் அலிக்கு பலர் அறிமுகமானார்கள்.

    கடந்த 2011ல் பணத்தேவைக்காக அலி ஜாஃபர் ஒரு புதிய திட்டம் தீட்டினார்.

    மசாசுசெட்ஸ் மாநில வருமான துறை சட்டங்களின்படி அம்மாநிலத்தில் லாட்டரி பரிசுச்சீட்டில் பெரும் தொகையை வெல்பவர்கள், சுமார் 30 சதவீதத்திற்கும் மேல் வருமான வரி செலுத்த வேண்டும். இதை தவிர்க்க பரிசை வென்றவர்கள் வழிமுறைகளை தேடி வந்தனர்.

    இதையறிந்த அலி, பரிசுச்சீட்டு வென்றவர்களை தேடிச்சென்று, அந்த பரிசு சீட்டை, வென்ற தொகையை விட குறைவாக கொடுத்து பெற்று கொள்வார். வென்றவர்கள், அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரித்தொகை சேமிக்கப்படுவதால், இதற்கு சம்மதித்தனர்.

    அந்த பரிசுச்சீட்டை தான் வாங்கியதாக கூறி, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காண்பித்து வங்கியின் மூலமாக பரிசுத்தொகையை அலி பெற்று கொள்வார். அத்துடன் தான் பல பரிசுச்சீட்டுகள் வாங்கியதாகவும் அவற்றில் அனைத்திற்கும் பரிசு கிடைக்காமல் நஷ்டம் அடைந்ததாக வருவாய்த்துறைக்கு கணக்கு காட்டி தானும் வரி கட்டாமல் தப்பித்தார்.

    "10 பர்சென்டிங்" (10 Percenting) என அந்நாட்டில் அழைக்கப்படும் இந்த நூதன மோசடியில் உண்மையாக வென்றவர்களுக்கும், பரிசுச்சீட்டு நிறுவனத்திற்கும் ஒரு மறைமுக தரகராக அலி செயல்பட்டார்.

    2011ல் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்த அலி, 136 லாட்டரி சீட்டுகளை அந்த வருடம் வென்றதாக காட்டி பணம் பெற்றார். 2012ல், 214 பரிசுச்சீட்டுகளில் வென்றதாக பணம் பெற்றார். 2013ல் தனது இரு மகன்களையும் இத்திட்டத்தில் ஈடுபடுத்தி 867 லாட்டரி டிக்கெட்டுக்கான பரிசுத்தொகையை அலி குடும்பத்தினர் பெற்று கொண்டனர்.

    பரிசுத்தொகை எந்த சீட்டிற்கு விழுந்திருக்கிறது என்பதை கடைக்காரர்கள் அலிக்கு தெரிவிப்பார்கள். இதில் அவர்களுக்கும் ஒரு தொகையை அலி, கமிஷனாக வழங்கினார்.

    அடிக்கடி லாட்டரி பரிசு வெல்லும் அலி குறித்து 2019ல் அம்மாநில லாட்டரி ஆணைய செயல் இயக்குனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் அலி சிக்கி கொண்டார். இவ்வழக்கில் அவருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை அலி குடும்பத்தினர் ரூ.166 கோடி ($20 மில்லியன்) அளவிற்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. 

    • ட்ரிஃப்ட் எனும் டச்சு நிறுவனத்தால் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது
    • பறவை கூட்டங்களை போல் நேர்த்தியாக பல வடிவங்களில் பறக்க விடப்பட்டன

    அமெரிக்க மாநிலம் நியூயார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் 843 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது புகழ் பெற்ற சென்ட்ரல் பார்க் (Central Park). நியூயார்க் நகரின் ஐந்தாவது மிக பெரிய பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்குள்ள ஏரிக்கு அருகே சனிக்கிழமை இரவு ட்ரிஃப்ட் (DRIFT) எனும் டச்சு ஸ்டூடியோ ஒன்றினால் "பிரான்சைஸ் ஃப்ரீடம்" (Franchise Freedom) எனும் பெயரில் நடத்தப்பட்ட ஒரு கண்கவர் நிகழ்வு உலகமெங்கும் பேசுபொருளாகி வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில், இரவு வானில் 1000 டிரோன்கள் ஒரே நேரத்தில் பறக்க விடப்பட்டன. அந்த டிரோன்களை இயக்குபவர்களால் வானில் பறந்த அவை, பல கலை வடிவங்களை காண்பிக்கும்படி பறக்க விடப்பட்டது.

    10 நிமிட இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் பறந்த இவை, இது போல் 3 முறை பல வெவ்வேறு விதமான வடிவங்களை வானில் வெளிப்படுத்தின. ஒவ்வொரு டிரோனில் இருந்தும் வரும் சிறு ஓளி ஒட்டு மொத்தமாக 1000 டிரோன்களில் இருந்து பெரும் நட்சத்திர கூட்டம் போன்று வானில் தெரிந்தது.


     



    இந்த டிரோன்கள், வானில் பல வடிவங்களில் பறவை கூட்டம் போல் நேர்த்தியாக பறக்க விடப்பட்டது காண்போரை மிகவும் பரவசப்படுத்தியது.

    "மனிதன், இயற்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றிற்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்யும் ஒரு முயற்சி இது. கவித்துவமான இந்த நிகழ்வு, மனிதர்களாக நாம் ஒரே சமூகமாக சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதை உணர்த்துகிறது" என தங்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் இந்த நிகழ்ச்சி குறித்து ட்ரிஃப்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

    இரவு நேர பறவைகள், பறக்கின்ற வழித்தடங்களுக்கு இந்த நிகழ்ச்சியினால் எந்த தடையும் ஏற்படாது என விலங்குகள் மற்றும் பறவைகள் நல அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே இது ஏற்பாடு செய்யப்பட்டதாக டிரிஃப்ட் அமைப்பினர் தெரிவித்தனர்.

    ஒரே சமயத்தில் இத்தனை டிரோன்கள் வானில் பறக்கும் நிகழ்வு, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


     

    • 4 மாணவர்களை கீழே தள்ளி விட்டனர்; ஒருவரை முகத்தில் குத்தினர்
    • பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது ஆபர்ன் ரிவர்சைடு (Auburn Riverside) உயர்நிலை பள்ளி.

    கடந்த திங்கட்கிழமையன்று மதியம் 01:00 மணியளவில் 6 முகமூடி அணிந்த நபர்கள், அப்பள்ளியின் பக்கவாட்டில் உள்ள கதவுகளின் வழியாக அப்பள்ளிக்குள் திடீரென உள்ளே நுழைந்தனர். அவர்கள் வேக வேகமாக அப்பள்ளியின் பல இடங்களுக்கு ஓடி, பல பள்ளி மாணவர்களை தாக்க தொடங்கினர்.

    4 மாணவர்களை கீழே தள்ளிய அவர்கள், ஒரு மாணவனின் முகத்தில் குத்து விட்டனர். இதையடுத்து அங்குள்ள மாணவர்கள் பயத்தில் அங்குமிங்கும் ஓட தொடங்கினர்.

    இதை கண்ட பள்ளி நிர்வாகத்தினர் அந்த முகமூடி மனிதர்களை துரத்த தொடங்கினர். அவர்களை கண்டதும் அந்த முகமூடிகள் பின்வாங்கி பள்ளியை விட்டு ஓடி விட்டனர்.

    அவர்கள் சென்றதும் உடனடியாக அந்த பள்ளியின் அனைத்து கதவுகளும் அடைத்து பூட்டப்பட்டு, பாதுகாப்பான முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன.

    அன்றிலிருந்து பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இச்சம்பவம் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் மனதளவில் பாதிப்படைந்துள்ள அவர்களில் பெரும்பாலானோர் ஒட்டு மொத்தமாக வகுப்பிற்கு வரவில்லை.

    செவ்வாய்கிழமையிலிருந்து மொத்தம் 532 மாணவ மாணவியர் பள்ளியிலிருந்து விடுப்பில் உள்ளதாக அம்மாவட்ட கல்வி துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது.

    மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் அந்த முகமூடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போவதாக அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. யார் அந்த முகமூடி அணிந்து வந்த நபர்கள் என்பதும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணமும் இதுவரை தெரியவில்லை.

    • 1956, அக்டோபர் 14 அன்று டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் காலமானார்
    • சர்தார் படேல் சிலையை உருவாக்கிய சிற்பி இதனை வடிவமைத்துள்ளார்

    தலித்துகள் உரிமைகளுக்காக போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவருமான 'பாபா சாகிப்' டாக்டர். பீம் ராவ் அம்பேத்கர், 1891 ஏப்ரல் 14 அன்று பிறந்தார்.

    அம்பேத்கர், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு பிரதமர் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான முதல் அமைச்சரவையில் சட்ட மற்றும் நீதி துறை அமைச்சராக இருந்தவர். 1956, அக்டோபர் 14 அன்று டாக்டர். அம்பேத்கர் காலமானார். இந்த நாளை அவரது தொண்டர்கள் 'தம்மா சக்ரா பரிவர்தன் தினம்' என கொண்டாடுகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவில், வரும் அக்டோபர் 14 அன்று மேரிலாண்ட் மாநிலத்தில் அக்கோகீக் (Accokeek) பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகி வரும் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் (AIC) 'சமத்துவத்திற்கான சிலை' (Statue of Equality) என பெயரிடப்பட்ட 19 அடி உயர அம்பேத்கர் சிலை ஒன்று திறக்கப்பட இருக்கிறது. "ஒற்றுமைக்கான சிலை" (Statue of Unity) எனும் பெயரில் இந்திய மாநிலம் குஜராத்தில் இந்திய சுதந்திர போராட்ட தலைவரான சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்த புகழ் பெற்ற சிற்பி ராம் சுதார் (Ram Sutar) கைவண்ணத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு உலகெங்கிலுமிருந்து பல முக்கிய பிரதிநிதிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • புறநகர் பகுதியில் வெட்டவெளி விருந்தில் ஜேலி கலந்து கொண்டார்
    • காவல்துறை அதிகாரி நெருங்கி வந்ததும் ஜேலி துப்பாக்கியை எடுத்தார்

    அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலம் கன்சாஸ் (Kansas). இதன் தலைநகரம் டொபேகா (Topeka).

    இங்குள்ள க்ளவுட் கவுன்டி பிராந்தியத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஜேலி சில்ஸன் (Jaylee Chillson) எனும் 14 வயது சிறுமி, சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடி விட்டாள். இத்தகவல் க்ளவுட் கவுன்டி காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

    ஜேலி தனது நண்பர்களுடன் ஊருக்கு வெளியே உள்ள அரோரா எனும் புறநகர் பகுதியில் ஒரு வெட்டவெளி விருந்தில் கலந்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவளை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். அப்போது ஒரு காவல்துறை அதிகாரி அவள் தப்பி செல்லாதவாறு இருக்க அவளை பிடித்து கொள்ள முயன்றார்.

    ஆனால், அதிகாரிகள் என்ன சொல்லியும் கேட்க மறுத்த அச்சிறுமி, ஒரு கட்டத்தில் திடீரென ஒரு துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு கொண்டார். அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவல்துறை அதிகாரியும், தீயணைப்பு அதிகாரிகளும் அச்சிறுமிக்கு உயிர்காக்கும் முதலுதவிகளை செய்தனர். ஆனால் இந்த முயற்சிகள் பலனளிக்காததால் அச்சிறுமி உயிரிழந்தார்.

    விருந்துக்கு வந்திருந்த பலரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    தனது மகளை பறி கொடுத்த ஜேலியின் தந்தை உருக்கமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • ரிட்ஜ்க்ரெஸ்ட் பகுதியில் 121-வது தெருவிற்கும் 134-வது வடக்கு நிழற்சாலைக்கும் அருகில் ஏரி உள்ளது
    • 13-அடி நீள முதலையின் வாயில் மனித உடல் பாகங்கள் தென்பட்டன

    அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ளது பினாலஸ் கவுன்டி பகுதி.

    இப்பகுதியின் ஷெரீப் அலுவலகத்திற்கு அங்குள்ள நீர்நிலை ஒன்றில் ஒரு உடல் தென்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக அதிகாரிகள் களத்திற்கு சென்றனர். சம்பவ இடமான ரிட்ஜ்க்ரெஸ்ட் பகுதியில் 121-வது தெருவிற்கும் 134-வது வடக்கு நிழற்சாலைக்கும் அருகில் உள்ள நீர்நிலையில் ஒரு 13-அடி நீள முதலை தென்பட்டது. அதன் வாயில் ஒரு மனித உடலின் பாகம் தெரிந்தது.

    இதனையடுத்து ஷெரீப் உத்தரவின் பேரில் அந்த முதலை சுடப்பட்டது. அதிகாரிகள் அதன் வாயிலிருந்த மனித உடல் பாகங்களை ஆய்வுக்காக பத்திரமாக வெளியில் எடுத்தனர். இந்த நடவடிக்கைக்கு ஷெரீப் அலுவலகத்தினருடன் அம்மாநில மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டனர்.

    விசாரணையில், இறந்தது 41 வயதான சப்ரீனா பெக்காம் எனும் பெண்மணி என தெரிய வந்துள்ளது.

    சில மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். "இவ்வளவு நீளமுள்ள ஒரு ராட்சச முதலை இங்குள்ள ஏரியில் இருக்கலாம் என நினைத்து கூட பார்த்ததில்லை" என இச்சம்பவம் குறித்து டெர்ரி வில்லியம்ஸ் எனும் அப்பகுதிவாசி தெரிவித்தார்.

    சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தை கை விரல்கள் சிலவற்றில் எலும்புகள் வெளியே தெரிந்தன
    • வீடு முழுவதும் குப்பை கூளங்கள் நிறைந்து எலிகள் நடமாட்டம் தெரிந்தது

    அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ளது எவான்ஸ்வில் பகுதி.

    இங்கு வசித்து வருபவர்கள் டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல் ஷோனபாம் தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகளுடன் பிறந்து 6 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. டெலானியா துர்மன் எனும் அவர்களின் மற்றொரு உறவுக்கார பெண்மணியும் அவர்களுடன் வசித்து வந்தார். வேறு ஒரு தம்பதியினரும் அவர்களின் குழந்தையுடன் இவர்களுடன் வசித்து வந்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு, தனது 6 மாத ஆண் குழந்தையின் உடலெங்கும் காயங்கள் இருப்பதாக எவான்ஸ்வில் அவசரசேவைக்கு டேவிட் தகவலளித்தார். இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்து வந்த பார்த்த போது அக்குழந்தை தலை மற்றும் முகத்தில் 50 இடங்களில் காயங்களுடன் உடல் முழுவதும் ரத்த களரியாக காணப்பட்டான். வலது கரத்தில் அனைத்து விரல்களின் தலைபாகங்களிலும் சதை முழுவதுமாக காணாமல் போயிருந்தது. ஒரு சில விரல்களில் உள்ளேயிருக்கும் எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு காயங்கள் இருந்தது.

    அக்குழந்தை உடனடியாக இண்டியானாபொலிஸ் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ரத்தம் செலுத்தப்பட்டது. அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் விளைவாக குழந்தை உயிர் பிழைத்து கொண்டது..

    காயங்களுக்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் அக்குழந்தையை ஒன்றுக்கும் மேற்பட்ட எலிகள் கடித்திருப்பது தெரிய வந்தது. வீடு முழவதும் குப்பை கூளங்கள் நிறைந்து எலிகள் நடமாட்டம் இருப்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து குழந்தையை வளர்ப்பதில் பொறுப்பற்ற முறையில் இருந்ததற்காகவும் பராமரிக்கும் கடமையில் தவறியதற்காகவும் அத்தம்பதியினரையும் அவர்களின் உறவுக்கார பெண்மணியையும் காவல்துறையினர் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் மீது அந்நாட்டு சட்டப்படி சம்பந்தபட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மருத்துவமனை சிகிச்சை முடிந்து அந்த குழந்தை, குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளான்.

    தேசிய குழந்தைகள் நலனுக்கான துறையின் பொறுப்பில் அந்த வீட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் தற்போது அரசு பொறுப்பில் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ×