search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷியா"

    • மாஸ்கோவில் நடைபெறும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்
    • ரஷியாவை தொடர்ந்து பெலாரஸ் செல்கிறார்

    சீனாவின் பாதுகாப்புத்துறை மந்திரி லி ஷாங்ஃபு இன்று முதல் ஆகஸ்ட் 19-ந்தேதி வரை ஆறு நாட்கள் ரஷியா மற்றும் பெலாரஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வு கியான் தெரிவித்துள்ளார்.

    ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கெய் ஷோய்கு, பெலாரஸ் பாதுகாப்பு மந்திரி விக்டர் கிரெனின் ஆகியோரின் அழைப்பை ஏற்று இந்த பயணம் மேற்கொள்கிறார்.

    முதலில் ரஷியா செல்லும் அவர், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற இருக்கும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து பெலாரஸ் செல்கிறார்.

    உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்கு பெலாரஸ் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, உதவி வருகிறது. ஆனால், சீனா மறைமுகமாக ஆதரவு கொடுப்பதுடன், ஆயுதங்கள் வழங்குவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ரஷிய- உக்ரைன் போர் தற்போது 530 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது
    • இரு நாடுகளும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன

    ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் தனது ராணுவத்தால் ஆக்ரமித்தது.

    சிறப்பு ராணுவ நடவடிக்கை என பெயரிட்டு ரஷியா மேற்கொண்ட இந்த ஆக்ரமிப்பிற்கு எதிர்வினையாக உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது.

    இந்த ரஷிய-உக்ரைன் போர் தற்போது 530 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பிலும் வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்து பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சில மாதங்களாக தாக்குதல்களில் இரு நாடுகளும் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன.

    இந்நிலையில் உக்ரைன் இரு டிரோன்களை ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி ஏவியது. இவற்றை ரஷியாவின் விமானப்படை தாக்கி அழித்தது. மாஸ்கோவின் தெற்கு புறநகரில் உள்ள டொமோடிடோவோ (Domodedovo) பகுதியின் மீது ஏவப்பட்ட ஒரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது.

    தலைநகரின் மேற்கு பகுதியில் உள்ள மின்ஸ்க் நெடுஞ்சாலையின் மேலே இன்னொரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது. வீழ்த்தப்பட்ட டிரோன்களின் பாகங்கள் தாக்கப்பட்டு காயமடைந்ததாகவோ அல்லது உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல்கள் இல்லை.

    ரஷியாவின் மாஸ்கோ நகரை குறிவைத்து ஒரே வாரத்தில் 3-வது முறையாக உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன்- ரஷியா போரில் பெலாரஸ் ரஷியாவுக்கு உதவு செய்து வருகிறது
    • பெலாரஸ் அண்டை நாடுகளான போலந்து லிதுவேனியா பாதுகாப்பை அதிகரித்துள்ளது

    உக்ரைன்- ரஷியா இடையே 17 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. ரஷியாவுக்கு அண்டை நாடான பெலாரஸ் ஆதரவாக உள்ளது. அதேவேளையில் லிதுவேனியா, போலந்து நாடுகள் நேட்டோ படையில் உள்ளது. இதனால் எல்லையில் லிதுவேனியா மற்றும் போலந்து நாடுகள் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    கடந்த ஜூன் மாதம் வாக்னர் குழு திடீரென ரஷிய ராணுவதிற்கு எதிராக கலகம் செய்து, ஆயுத கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சித்தது. ஆனால், பெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு, கலகம் இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தார்.

    வாக்னர் குழு பெலாரஸ் செல்வது, ரஷியா அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளாது என ஒப்பந்தும் செய்யப்பட்டது. இதனால் வாக்னர் படையைச் சேர்ந்தவர்கள் பெலாரஸ் வந்துள்ளனர். இதனால் லிதுவேனியா, போலந்து நாடுகள் மேலும் பாதுகாப்பை எல்லையில் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இரு நாடுகள் எல்லையில் பெலாரஸ் ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதனால் மேலும் தங்களது பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    இரண்டு நாடுகளுக்கும் இடையில் ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கலினிங்ராட் பிராந்தியத்தில் ஆத்திரமுட்டும் செயலில் ரஷியா மற்றும் பெலாரஸ் ஈடுபட்டு வருவதாக லிதுவேனியா, போலந்து தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம் பெலாரஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டு தங்கள் எல்லைக்குள் அத்துமீறி பறந்ததாக போலந்து குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் பெலாரஸ் அதை மறுத்துள்ளது.

    லிதுவேனியா, போலந்து எல்லையில் அருகே உள்ள கிரோட்னோ மாகாணத்தில் பெலாரஸ் ராணுவப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

    போலந்து லிதுவேனியா எல்லையை இணைக்கும் 96 கி.மீட்டர் நீளம் கொண்ட எல்லைப் பகுதி சுவால்கி என அழைக்கப்படுகிறது. இந்த பகுதி ரஷியா கட்டுப்பாட்டில் இருக்கும் கலினிங்ராட் பிராந்தியத்திற்கும் பெலாரஸ் எல்லைக்கும் இடையிலான பகுதி.

    இந்த பகுதிதான் நேட்டோவுக்கும், ரஷியாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட முக்கிய புள்ளியாக இருக்கிறது. ரஷியா இந்தப் பகுதியை ஆக்கிரமித்தால் லிதுவேனியா, லித்வியா, எஸ்டோனியா போன்ற நேட்டோ உதவி நாடுகளில் இருந்து போலந்து தனியாக பிரிக்கப்பட்டு விடும். இது ரஷியாவுக்கு ஆதாயமாக இருக்கும் என ராணுவ நடவடிக்கை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பால்டிக் கடலில் உள் கலினிங்ராட் பிராந்தியத்திற்கும் ரஷியாவிற்கும் இடையில் நிலப்பரப்பு தொடர்பு கிடையாது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பின்வாங்காமல் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்
    • ஆனால் துறைமுகத்தில் தாக்குதல் நடைபெற்றதாக ரஷியா தெரிவிக்கவில்லை

    ரஷிய- உக்ரைன் போர் 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இரு தரப்பிலும் உயிர்ச் சேதமும், கட்டிட சேதங்களும் தொடர்கின்றன. ஆனாலும், பின்வாங்காமல் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கருங்கடல் பகுதியின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ரஷியாவின் மிகப்பெரிய துறைமுகம் நோவோரோசிஸ்க் (Novorossiysk). உக்ரைனின் உளவுத்துறையும், கடற்படையும் இணைந்து நடத்திய கடல் டிரோன் தாக்குதலில் ரஷியாவின் பெரிய கப்பலான ஒலெனெகோர்ஸ்கி கோர்னியாக் (Olenegorsky Gornyak) தாக்கப்பட்டது.

    450 கிலோ டைனமைட் வெடிப்பொருளுடன் சென்ற உக்ரைனின் ஆளில்லா சிறுகப்பல்கள் (Sea Drone) தாக்கியதில், அந்த கப்பல் பலத்த சேதமடைந்திருப்பதாகவும், அது தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இனி பயன்படாது எனவும் உக்ரைன் தரப்பு தெரிவிக்கிறது.

    இரு ஆளில்லா விமானங்களை இடைமறித்து வீழ்த்தியதாக தெரிவித்த ரஷியா, துறைமுகத்தில் தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கவில்லை.

    ரஷிய ஏற்றுமதிகளுக்கு நோவோரோசிஸ்க் துறைமுகம் ஒரு முக்கியமான இடம். 2-ம் உலகப் போரின்போது கட்டமைக்கப்பட்ட 'லேண்டிங் ஷிப்' எனப்படும் வகையை சேர்ந்த ஒலெனெகோர்ஸ்கி கப்பல், ராணுவ தளவாடங்களை நீர் மற்றும் நிலத்தில் இருந்து எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    எனவே இப்படி ஒரு தாக்குதலை உக்ரைன் இலக்காக வைத்திருப்பதாக தெரிகிறது.

    • ரஷியாவிற்கு, போரினால் ஏற்படும் செலவினங்களின் அதிகரித்திருக்கிறது
    • ராணுவ தளவாடங்கள், உபகரணங்கள் உற்பத்தி ரஷியாவில் அதிகரித்திருக்கிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது.

    இதனை தீவிரமாக எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவத்தின் துணையோடு உக்ரைன் போரிட்டு வருகிறது.

    ரஷிய- உக்ரைன் போர் 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் அதிகளவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் போரினால் ஏற்படும் செலவினங்களின் அதிகரிப்பால் ரஷியாவின் 2023-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் உள்ள ராணுவ செலவினங்களுக்கான தொகை இரு மடங்காகியுள்ளது. 2023-க்கான ராணுவ செலவுக்கு ரஷியா சுமார் ரூ.45 ஆயிரம் கோடி ($54 பில்லியன்) திட்டமிட்டிருந்தது. ஆனால் முதல் அரையாண்டிலேயே இதைவிட 12 சதவீதம் அதிகம் செலவிட்டிருக்கிறது.

    போரை தீவிரமாக ரஷியா நடத்தி வந்தால், அதனால் ஏற்படும் அதிகமான ராணுவ செலவின் காரணமாக பட்ஜெட் தொகையில் விழும் துண்டு இன்னும் அதிகமாகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    போரின் காரணமாக ராணுவ தளவாடங்கள், உபகரணங்கள் தொடர்புடைய உற்பத்திகள் ரஷியாவில் அதிகரித்திருக்கும் வேளையில் ஏற்றுமதி வருவாய் குறைந்திருப்பது மட்டுமல்லாமல் பிற தொழில்களும் போரினால் மிகவும் நலிந்து வருகிறது.

    உலக பொருளாதாரம் மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் போர் விரைவில் முடிவுக்கு வருவது அனைத்து நாடுகளுக்கும் நல்லது என பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை (port of Izmail) ரஷியா டிரோன்கள் மூலம் தாக்கியது
    • உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு ஈடாக வேறு ஒரு நாடு ஏற்றுமதி செய்ய முடியாது

    ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் ஆக்ரமித்தது.

    இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டு பல அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். ரஷிய- உக்ரைன் போர் தற்போது 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகின்றது.

    இந்நிலையில், உக்ரைன்- ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை (port of Izmail) ரஷியா டிரோன்கள் மூலம் தாக்கியது. இதனால் அத்துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றி செல்லும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இஸ்மாயில் துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றி செல்ல கப்பல்கள் அத்துறைமுகத்திற்கு உள்ளே வர இருந்தபோது இந்த தாக்குதல் நடைபெற்றது.

    "ஆப்பிரிக்கா, இஸ்ரேல் மற்றும் சைனா ஆகிய நாடுகளுக்காக தானியங்களை ஏற்றி செல்ல கப்பல்கள் வர இருந்தன. இத்தாக்குதல்களால் 40 ஆயிரம் டன் தானியங்கள் சேதமாகியிருக்கிறது. டானுபே துறைமுகத்தின் கட்டமைப்பு பெருமளவில் சேதமடைந்திருக்கிறது. உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு ஈடாக வேறு ஒரு நாடு ஏற்றுமதி செய்ய முடியாது" என்று இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் துணை பிரதமர் ஒலெக்ஸாண்டர் குப்ரகோவ் (Oleksandr Kubrakov) தெரிவித்தார்.

    "உலகத்திற்கே சர்வ நாசத்தை விளைவிக்கும் ஒரு போரை ரஷியா நடத்தி வருகிறது. அவர்களின் இந்த வெறியாட்டத்தால் உலக உணவு சந்தை அழிந்துவிடும். அதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள். தானிய வினியோகம் பாதிக்கப்படுவதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்" என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ரஷியா, "அந்த துறைமுகம் அயல்நாட்டு பயங்கரவாதிகளுக்கும், ராணுவ தளவடங்களுக்கும் புகலிடமாக திகழ்ந்தது" என கூறியிருக்கிறது.

    உயிர்ச்சேதம் எதுவும் இல்லையென்றாலும் அங்கிருந்து வெளிவரும் புகைப்படங்களில், உடைந்த கட்டிடங்களும், பெரும் தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்களும் மற்றும் மிக பரவலாக சிதறிக்கிடக்கும் தானியங்களும் காணப்பட்டது.

    உலகளவில் தானியங்களுக்கு தட்டுப்பாடும், தானியங்களின் விலைகள் கடுமையாக உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 97,000 போர் குற்றச்சாட்டு அறிக்கைகளை உக்ரைன் ஆராய்ந்தது
    • "வாட்டர் போர்டிங்" எனப்படும் தீவிர சித்ரவதையையும் கையாண்டனர்

    கடந்த 2022-ம் ஆண்டு ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது.

    இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. போர் 525-ம் நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் ரஷியா மீது புதிய குற்றச்சாட்டை உக்ரைன் வைத்துள்ளது.

    ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கெர்ஸன் பகுதி உக்ரைன் நாட்டால் மீட்கப்பட்டது. இங்கு ரஷியாவால் அடைக்கப்பட்டிருந்த போர் கைதிகளிடம் உக்ரைன் விசாரணை நடத்தியது. உக்ரைன் அதிகாரிகளுடன் இணைந்து மனித உரிமை சட்டங்களுக்கான குளோபல் ரைட்ஸ் கம்ப்ளையன்ஸ் எனும் சர்வதேச அமைப்பின் மொபைல் ஜஸ்டிஸ் டீம் குழுவினர் செயலாற்றினர்.

    இதில் கைதிகளை ரஷியா உடல் ரீதியான சித்ரவதைகளுக்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கியதாக இந்த குழு கண்டுபிடித்துள்ளது.

    சுமார் 97,000 போர் குற்றச்சாட்டு அறிக்கைகளை உக்ரைன் ஆராய்ந்து ரஷியாவை சேர்ந்த 220 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட உக்ரைன் நாட்டவர்களை பல்வேறு விதமாக ரஷியர்கள் சித்ரவதை செய்துள்ளனர். கைதிகளை அடிப்பது, அவர்களின் உடலில் மின்சாரம் பாய்ச்சுவது, அவர்களின் பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்துவது மற்றும் ஒரு கைதி பாலியல் கொடுமை செய்யப்படுவதை பிற கைதிகளை பார்க்க வைப்பது போன்ற துன்புறுத்தல்களை கையாண்டனர்.

    மேலும் கைதிகளின் முகத்தை மெல்லிய துணியால் மூடி மூச்சு திணறும் அளவிற்கு அதிவேகமாக நீரை பாய்ச்சும் "வாட்டர் போர்டிங்" எனப்படும் தீவிர சித்ரவதையையும் கையாண்டனர்.

    இக்குற்றச்சாட்டுகளில் பெரும் குற்றம் புரிந்தவர்கள் மீது நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரத்திலுள்ள சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். இந்த நீதிமன்றம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக ஏற்கனவே கைது உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஷியாவால் கைது செய்யப்பட்டவர்களில் உக்ரைன் ராணுவத்தை சேர்ந்தவர்களை தவிர தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ பணியாளர்கள், கல்வி பணியில் உள்ளவர்களும் அடங்குவர்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ரஷியா மறுத்துள்ளது.

    • 10 வருடங்களுக்கு மேலாக இத்தகைய உணவு முறை சிறப்பானது என கூறி வந்தார்
    • சாம்சோனோவா சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை

    சைவ உணவு உண்பவர்களை வெஜிடேரியன்கள் என்றும் சைவ உணவுகளிலும் கூட பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர், யோகர்ட், மோர், பாலாடை கட்டி மற்றும் வெண்ணெய் போன்றவற்றையும் உண்ணாதவர்கள் வேகன் என அழைக்கப்படுவார்கள்.

    இந்த வேகன் உணவுகளை சமைக்காமல், பச்சை காய்கறிகளாகவும், கனிகளாகவும் மட்டும் உண்டு வந்து, பிறரையும் உண்ண பிரசாரம் செய்து வந்தவர் ரஷியாவை சேர்ந்த ஜன்னா சாம்சோனோவா (39).

    சுமார் 10 வருடங்களுக்கு மேலாக இத்தகைய உணவு முறை சிறப்பானது என கூறி சமூக வலைதளங்களில் ஜன்னா டார்ட் எனும் பெயரில் பிரச்சாரம் செய்து வந்தார்.

    "என் உடலும், மனமும் தினமும் மாறுவதை நான் காண்கிறேன். இப்பொழுது உள்ள என் புதிய 'என்னை' நான் விரும்புகிறேன். பழைய உணவு பழக்கங்களுக்கு போக விரும்பவில்லை" என வலைதளங்களில் பதிவு செய்திருந்தார். கடந்த 7 வருடங்களாக சாம்சோனோவா, பலாப்பழமும், டூரியன் பழங்களும் மட்டுமே உண்டு வந்தார்.

    இந்நிலையில் சாம்சோனோவா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்தார்.

    இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தபோது, சில மாதங்களுக்கு முன் அவர் மிகுந்த களைப்புடன் இருந்தார். அவர் கால்கள் வீங்கி இருந்தன. நீண்ட சிகிச்சைக்காக அவரை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை.

    பிறகு அவர் தாய்லாந்து சென்றார். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமாகியது. அவரை சிகிச்சை எடுத்து கொள்ள சொல்லி அவரது நண்பர்கள் வற்புறுத்தியும் அவர் மறுத்துவிட்டார்.

    இந்நிலையில் அவர் பட்டினியால் உயிரிழந்தார்.

    பட்டினியால் ஏற்பட்ட களைப்பினாலும், முழுவதும் வேகன் உணவாகவே உண்டு வந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தாலும், காலரா நோயால் பாதிக்கப்பட்டவரை போல் மாறி தன் மகள் இறந்ததாக அவரின் தாயார் தெரிவித்தார்.

    சாம்சோனோவாவின் இறப்பிற்கான அதிகாரபூர்வ காரணம் தெரிவிக்கப்படவில்லை.

    உணவு மற்றும் ஊட்டச்சத்துக்களுக்கான வல்லுனர்களின் ஆலோசனையின்படியே உணவு பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், தகுந்த மருத்துவ வழிகாட்டுதல் இல்லாமல் செய்து கொள்ளும் இதுபோன்ற மாறுதல்கள் உடல்நலத்தை மோசமடைய செய்து உயிருக்கும் ஆபத்தாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • முதல் ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் டேகன்ராக் நகரத்தில் விழுந்தது
    • இரண்டாவது S-200 ஏவுகணை அசோவ் நகருக்கு அருகே செலுத்தப்பட்டது

    520 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் ரஷிய- உக்ரைன் போரில் இருதரப்பும் மாறிமாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் அதிக உயிர்கள் பலியாகியது. தவிர, பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

    இந்நிலையில், உக்ரைனின் தெற்கு ரோஸ்டோவ் பிராந்தியத்தின் மீது உக்ரைன் ஏவிய 2 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

    "உக்ரேனிய ஏவுகணைகளை ரஷிய வான் பாதுகாப்பு கருவிகள் கண்டு, வானில் இடைமறித்து தாக்கியது. இதில் கீழே விழுந்த உக்ரைன் நாட்டு முதல் ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் டேகன்ராக் நகரத்தில் விழுந்தது. சுமார் 2.5 லட்சம் மக்கள் வசிக்கும் டேகன்ராக் நகரின் குடியிருப்புகளை குறிவைத்து முதல் S-200 ஏவுகணை செலுத்தப்பட்டது.

    இரண்டாவது S-200 ஏவுகணை அசோவ் நகருக்கு அருகே செலுத்தப்பட்டது. இதனை வீழ்த்தியபோது அதன் பாகங்கள், மக்கள் இல்லாத பகுதியில் விழுந்தது", என்று ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளது.

    உக்ரைனின் எல்லை பகுதிகள், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதில் இருந்து டிரோன் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை கண்டு வருகின்றன. ஆனால் நேற்றைய சம்பவம் நடைபெறும் வரை ஏவுகணைகளால் குறிவைக்கப்படவில்லை.

    "மத்திய டேகன்ராக் பகுதியில் உள்ள செகோவ் கார்டன் உணவகத்திற்கு அருகே இத்தாக்குதலால் 15 பேர் லேசாக காயமடைந்தனர். மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். உயிரிழப்புகள் இல்லை. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

    அந்த ஓட்டலில் இருந்து சில 100 மீட்டர் தொலைவில் உள்ள கலை அருங்காட்சியகத்திற்கு மேல் தாக்கி அழிக்கப்பட்டது. இதில் அருங்காட்சியகச் சுவர், அதன் கூரை மற்றும் வெளிப்புறக் கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதன் தாக்கத்தால் அருகில் உள்ள 3 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் பிரேம்கள் சேதமடைந்தன" என இச்சம்பவம் குறித்து ரோஸ்டோவ் பிராந்திய ஆளுனர் வாசிலி கோலுபேவ் தெரிவித்தார்.

    உக்ரைன் நகரின் எல்லையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அசோவ் கடற்கரை அருகே டேகன்ராக் நகரம் அமைந்துள்ளது.

    • கொரியா போரில் வடகொரியாவின் 70-வது வெற்றி தின கொண்டாட்டத்தில் ரஷிய படை பங்கேற்பு
    • சீன ராணுவ வீரர்களும் வெற்றி விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்

    ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கேய் ஷாய்கு வடகொரியா சென்றுள்ளார். வடகொரிய சென்றுள்ள அவர், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்தார். அப்போது ரஷிய அதிபர் புதின் கொடுத்து அனுப்பிய கடிதத்தை வழங்கினார். கடிதத்தை பெற்ற கிம் ஜாங் உன், பாதுகாப்புத்துறை மந்திரி தலைமையில் ராணுவ குழுவை அனுப்பியதற்கு நன்றி தெரிவித்தார்.

    மேலும், இருவர் இடையிலான ஆலோசனை மூலோபாய மற்றும் பாரம்பிய வடகொரியா- ரஷியா நட்பு குறித்ததாக இருக்கும் எனக் கூறினார்.

    கொரிய போரில் வடகொரியாவின் வெற்றியை கொண்டாடும் வகையில், 70-வது வெற்றி தினம் இந்த வாரம் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய வீரர்கள், சீன வீரர்கள் வட கொரியாக சென்றுள்ளது.

    அதிபர் சந்திப்பிற்குப்பின் வடகொரியா ராணுவ மந்திரியை சந்தித்தார். அப்போது ரஷியா மந்திரி செர்கேய் ஷாய்கு ''உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவம்'' என வடகொரியாவை பாராட்டினார்.

    • கைது நடவடிக்கை காரணமாக தென்ஆப்பிரிக்கா செல்வதை தவிர்த்து உள்ளார்
    • சீனாவை தொடர்ந்து துருக்கி நாட்டிற்கும் செல்ல இருக்கிறார்

    ரஷிய அதிபரான புதின் அக்டோபர் மாதம் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, அவருடைய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யுரி யுஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார். 'ஒன் பெல்ட் ஒன் ரோடு' மாநாட்டின் இணைந்த ஒரு பகுதியாக இந்த பயணம் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    'ஒன் பெல்ட், ஒன் ரோடு' ஆசியாவை ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைக்கும் கட்டமைப்பு திட்டங்களை உள்ளடக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    சீனா பயணத்தை தொடர்ந்து துருக்கியும் செல்ல இருக்கிறார். அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு பகுதியாக இந்த பயணம் இருக்கும் என யுஷாகோவ் தெரிவித்துள்ளார். துருக்கி ரஷியாவுக்கு ஆதரவு நாடாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் 20ஜி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா பயணத்தை அவர் தவிர்ப்பதாக இதுவரை தெரிவிக்காத நிலையில், பயணம் செய்வாரா? என்பது குறித்து இன்னும் உறுதியாக முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை புதின் நிராகரித்துள்ளார். அவருக்கு எதிராக சர்வதேச கிரிமினல் கோர்ட் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. உக்ரைனில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டதற்கு புதின் தனிப்பொறுப்பு என குற்றம்சாட்டி சர்வதேச கிரிமினல் கோர்ட் அந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    சர்வதேச கிரிமினல் கோர்ட் ஒப்பந்தத்தில் தென்ஆப்பிரிக்கா கையெழுத்திட்டுள்ளதால், அங்கு சென்றால் கைது செய்யப்படும் நிலை ஏற்படும். இதனால் புதின் தென்ஆப்பிரிக்கா செல்லவில்லை.

    சீனா, துருக்கி, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதனால் சீனா, துருக்கி செல்ல புதினுக்கு சிக்கல் ஏதும் இல்லை.

    சீன அதிபர் சில மாதங்களுக்கு முன் மாஸ்கோ சென்றிருந்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்- புதின் சந்திப்பு 2022-ம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற மாநாட்டின்போது நடைபெற்றது. அதேபோல் 2022-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற குளிர்கால விளையாட்டு தொடக்கவிழாவின் போது சந்தித்துக் கொண்டனர்.

    • உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதற்கு ஆஸ்திரேலியா எதிர்ப்பு
    • ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டின் முக்கிய அதிகாரிகளுக்கு தடைவிதிப்பு

    சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த வருடம் பிப்ரவரி 24 அன்று, ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து போரிட்ட உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் உதவி வருகின்றன. இந்த உதவிகளின் ஒரு பகுதியாக அவை ரஷியா மீது விரிவான பொருளாதார தடைகளை உருவாக்கி, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

    500 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் இந்நிலையில், ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டை சேர்ந்த 10 பேருக்கும், ரஷியாவின் 35 நிறுவனங்களுக்கும் ஆஸ்திரேலியா தடைவிதித்துள்ளது.

    இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ரஷியாவின் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி துறைகளில் உள்ள 35 நிறுவனங்கள் மீதும், ரஷியாவின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் பெலாரஸின் மூத்த ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் மீதும் தடை ஆஸ்திரேலியா தடை விதிக்கிறது.

    ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இது கொண்டு வரப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ரஷிய முதல் துணை பிரதமர் ஆண்ட்ரே பெலோசோவ் மற்றும் துணை பிரதமர் டிமிட்ரி செர்னிஷென்கோ மற்றும் பெலாரஸ் நாட்டை சேர்ந்த சில மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக இந்த கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    தவிர, முக்கிய ரஷிய பாதுகாப்பு நிறுவனங்களும், அந்நாட்டின் மிக பெரிய ராணுவ ஹெலிகாப்டர் உற்பத்தி செய்யும் நிறுவனம் மற்றும் அதன் தலைவர் ஆகியோரும் இந்த தடைகள் பட்டியலில் அடங்குவர். இப்புதிய கட்டுப்பாடுகள், அணுசக்தி நிறுவனங்கள் மற்றும் ஆர்க்டிக் வளங்களை பிரித்தெடுப்பதில் ஈடுபட்டுள்ள ரஷிய நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×