search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Property tax"

    • அனைத்து வகையிலும் கட்டணங்களை 100 முதல் 200 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
    • விலை உயர்வுகள் அனைத்தும் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.

    சென்னை:

    தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க கூட்டம் தலைவர் ஜான் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் சங்க தலைவர் ஜான் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்திலுள்ள சுமார் 7000 திருமண மண்டபங்களுக்கு தொடர்ச்சியாக சொத்து வரி, மின் கட்டணம், வணிக உரிம கட்டணம் என்று அனைத்து வகையிலும் கட்டணங்களை 100 முதல் 200 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

    கொரோனா கால நஷ்டத்திலிருந்து இன்றளவும் மீள முடியாமல் திணறிக்கொண்டு இருக்கும் திருமண மண்டபங்கள் இவ்வாறான வரிகளால் திருமண மண்டப உரிமையாளர்கள் மண்டபங்களை பராமரிக்க முடியாமல், வங்கி கடனை செலுத்த முடியாமலும் மண்டபங்களை மூடும் தருவாய்க்கு வந்துவிட்டார்கள். இந்த விலை உயர்வுகள் அனைத்தும் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.

    மேலும் திருமண மண்டபங்கள் மூடப்பட்டால் திருமண நிகழ்ச்சிகளில் ஈடுபடும் கேட்டரிங், நடேஸ்வரன், புகைப்படம், அலங்காரம், புரோகிதர்கள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும். எனவே இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • பல கோடி ரூபாய் வரி நிலுவை இருந்த பொழுதிலும் எந்த ஒரு அனுமதி ஆணையும் இல்லாமல் இந்த சொத்துவரி கணக்குகள் நீக்கப்படுகின்றன.
    • சொத்துவரி நிலுவையில் இருக்கும் பட்சத்தில் முறையாக அனுமதி ஆணை இல்லாமல் நீக்கப்பட்ட கணக்குகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க. தனசேகரன் பங்கேற்று பேசியதாவது:-

    எனது தணிக்கை குழு ஆய்வின் போது அனைத்து மண்டலங்களிலும் வருடம் தோறும் ஆயிரக்கணக்கான சொத்து வரி கணக்குகள், சொத்து இணைப்பு, இடித்து புதிய கட்டிடம் கட்டுதல், ராங் பிராப்பர்டி போன்ற காரணங்களுக்காக நீக்கப்படுகின்றன.

    இக்கணக்குகளில் பல கோடி ரூபாய் வரி நிலுவை இருந்த பொழுதிலும் எந்த ஒரு அனுமதி ஆணையும் இல்லாமல் இந்த சொத்துவரி கணக்குகள் நீக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு மண்ட லம் 1-ல் 2019-20 நிதியாண்டில் சுமார் 682 வரிக் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளது. இவற்றின் வரி நிலுவை தொகை சுமார் 3.47 கோடிகளாகும்.

    இதேபோல் 2020-21 நிதியாண்டில் மண்டலம் 3-ல் 517 சொத்துவரி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதன் நிலுவை தொகை ரூ. 68.61 லட்சத்துக்கு மேல் உள்ளது.

    இதே நிலை அனைத்து மண்டலங்களிலும் காணப்படுகிறது. அதனால் ஆணையர் அவர்கள் சொத்துவரி நிலுவையில் இருக்கும் பட்சத்தில் முறையாக அனுமதி ஆணை இல்லாமல் நீக்கப்பட்ட கணக்குகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    மண்டலம் 3-ல் 2017-18 நிதியாண்டில் இருந்து 12 அரையாண்டுகளுக்கு மேலாக விஜய் ராஜ் சுரானா, தினேஷ் சந்த் சுரானா, கௌதம் ராஜ் சுரானா ஆகியோர் சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாமல் மொத்தமாக சுமார் ரூ. 18.83 லட்சம் நிலுவையாக வைத்து உள்ளனர். இதனை உடனடியாக வசூலிக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணையா ளர் உத்தரவிட வேண்டும். மண்டலம் 2-ல், தணிக்கை குழு களஆய்வில் அந்த மண்டலத்தில் இருக்கும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பல ஏக்கர் நிலங்களின் விவரங்கள் மற்றும் அவைகளின் சொத்து வரி நிலுவைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனை அடுத்து அந்நிறுவனம் ஆக்கிரமித்து வைத்திருந்த சுமார் 100 கோடி மதிப்புள்ள 3.3 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்ட செய்தி சில தினங்களில் பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்தன. இந்த துரித நடவடிக்கையை மேற்கொண்ட சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மண்டல குழு தலைவர் ஆறுமுகம், மண்டல உதவி ஆணையர் கோவிந்தராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் கவிதா ஆகியோருக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

    அதேபோல் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் பாலிடெக்னிக் கல்லூரியின் காலிமனை சொத்து வரி நிதியாண்டு 2020-21 வரை சுமார் ரூ.1.3 கோடிக்கு மேல் நிலுவை உள்ளது என தணிக்கை ஆய்வில் கண்ட றியப்பட்டது. இதற்கு மண்டல அதிகாரிகள் இதனை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தனர். அதனால் இந்த பெரும் நிலுவை தொகை முழுமையாக வசூலிக்க ஆணையர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதுமட்டுமல்லாமல், சுமார் 2.58 லட்சம் சதுரடிக்கு மேல் இயங்கி வரும் இந்த பாலிடெக்னிக் கல்லூரிக்கு நிதியாண்டு 2020-21 வரை சொத்துவரி எதுவும் விதிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. மேலும் சொத்துவரி விதிக்கப்பட்டிருந்தால் 2020-21 வரை சுமார் ரூ.29,92,320 வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. அதனால் இந்த கல்லூரி சொத்து வரி செலுத்துவதில் இருந்து ஏதேனும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. அப்படி இல்லையென்றால் சொத்துவரி வசூலிக்க ஆணையர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தணிக்கை குழு ஆய்வின் பொழுது அரசின் விதிகளுக்கு மாறாக மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர், உதவி வருவாய் அலுவலர், உதவி கோட்ட மின்பொறியாளர் அதிகாரிகள் செல்ப் செக் மூலம் பல கோடி ரூபாய் ரொக்கமாக எடுத்து வருவது தெரியவந்து உள்ளது. மேலும் இதனை செலவு செய்ததற்கான ஆதாரம் மற்றும் செலவு சீட்டுகள் முழுமையாக தணிக்கைக்கு அளிக்கப்படுவதும் இல்லை. உதாரணத்திற்கு மண்டலம் 9-ல் நிதி யாண்டு 2020-21-ல் வெறும் 37 செல்ப் செக் மூலம் சுமார் ரூ 6.34 கோடிக்கு மேல் ரொக்கம் எடுக்கபட்டுள்ளது. அதாவது ஒரு செல்ப் செக் மூலம் சராசரியாக ரூ. 17.13 லட்சம் ரொக்கமாக எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிதியாண்டு 2019-20-ல் சுமார் ரூ.2.3 கோடிக்கு மேல் செல்ப் செக் மூலம் பணம் எடுக்கபட்டுள்ளது. இன்றுவரை இதனை முறையாக தணிக்கை ஆய்வுக்கு உட்படுத்தவும் இல்லை. எனவே செல்ப் செக் மூலம் பணம் எடுக்கும் முறையை உடனடியாக நிறுத்த அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட வேண்டும்.

    மேலும் இதுவரை செல்ப் செக் மூலம் எடுக்கப்பட்ட பணம் முறையாக தணிக்கை செய்யப்பட்டதை உறுதி செய்து அதன் முழு விவரத்தை தணிக்கை குழுவிற்கு சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    மண்டலம் 9-ல், நிதி யாண்டு 2020-21-ல் 38 அம்மா உணவகங்களில் மொத்த வரவு ரூ. 1,55,34,200-ஆகவும், இதற்கான மொத்த செலவு சுமார் ரூ.9,54,51,092-ஆக உள்ளது. இதில் அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் வாங் குவதற்கான செலவு ரூபாய் 4,62,67,592 ஆகவும், அம்மா உணவகங்களின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட தினக்கூலி மட்டும் சுமார் ரூபாய் 4,91,83,500-ஆகவும் உள்ளது.

    இப்படி 7 கோடியே 99 லட்சத்து 16 ஆயிரத்து 892 ரூபாய் வருவாயை விட மிக அதிகமாக செலவிடப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அதீத செலவீனத்தை முழுமையாக விசாரணைக்கு ஆணையர் உட்படுத்த வேண்டும்.

    தணிக்கை குழுவிற்கு தங்கும் விடுதிகள் குறித்து பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையான தங்கும் விடுதிகள் முறையாக அரசின் வழி காட்டுதல்களை பின்பற்றுவதில்லை எனவும் முறையாக வரி விதிக்கப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி எல்லைக்குப்பட்ட அனைத்து தங்கும் விடுதிகள் முறையாக அரசின் விதிகள், மாநகராட்சியின் அனுமதி மற்றும் வரிகள் ஆகியவை முறையாக பின்பற்றபடுகின்றனவா என ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்த வேண்டும்.

    முதலமைச்சரின் சிங்கார சென்னை 2.0 திட்டதின் கீழ் சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வந்தாலும் மாநகராட்சி முழுக்க வரையபட்டுள்ள சுவர் விளம்பரங்கள் இன்னும் முழுமையாக அழிக்கபடாமலும் மேலும் தினம் புது புது சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டும் வருகின்றன. எனவே ஆணையர் இந்த சுவர் விளம்பரங்களை முழுமையாக அழித்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரைய அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கி நடவடிக்கைகளை துரித்த படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரத்யேக இணையதளம் http://onlineppa.tn.gov.in/ உருவாக்கப்பட்டுள்ளது.
    • யு.பி.ஐ. கட்டணம், பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலமாகவும் தொகையை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்துவதற்கு வசதியாக http://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக்கட்டணம், இதர வரியில்லா வருவாய் இனங்கள் ஆகியவற்றை செலுத்தலாம். இதில் ஆன்லைன் பேமெண்ட், டெபிட், கிரெடிட் கார்டு, ஏ.டி.எம்.கார்டுகள், யு.பி.ஐ. கட்டணம், பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலமாகவும் தொகையை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    ஊரக பகுதிகளில் பொதுமக்கள் மனைப்பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்த தேவையான அனு–ம–தி–களை எளி–தில் பெற ஒற்றை சாளர முறையில் இதற்கென பிரத்யேக இணையதளம் http://onlineppa.tn.gov.in/ உருவாக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் ஊராட்சியில் இணையதள வரி வசூல் செயல்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கோவிந்தாபுரம் ஊராட்சி தலைவர் விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில மாதங்களாக சோதனை அடிப்படையில் பரிசோதிக்கப்பட்டது.
    • குறைபாடுகள் சரி செய்யப்பட்ட பிறகு கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்தி சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துவதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது. மின்ஆளுமை மற்றும் ஜி.ஐ.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கியூ.ஆர். குறியீடு மூலம் பொது மக்கள் சேவைகளை செயல்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த புதிய வசதி தொடங்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் ஆகியவற்றில் 80 லட்சம் நுகர்வோர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் வீடுகளிலும் கியூ.ஆர். குறியீடு ஒட்டப்படும். அதன் மூலம் பொதுமக்கள் ஸ்கேன் செய்து குடிநீர் வரி, சொத்து வரியை கட்டலாம்.

    மாநகராட்சி பணிகள் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தாலும் இந்த கியூ.ஆர். குறியீடு மூலம் தெரிவிக்கலாம்.

    இதற்கு முன்பு மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்துக்கு குறைகள் தொடர்பாக புகார் செய்ய ஒவ்வொரு முறையும் அதிகாரிகளின் நம்பரை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அல்லது நேரில் செல்ல வேண்டும். இவை இரண்டுமே கடினமானது.

    இந்த பிரச்சினைகளை தடுக்க கோடை வெயில் மற்றும் பருவமழை காலத்தில் இந்த வசதி பயனுள்ளதாக அமையும்.

    கடந்த சில மாதங்களாக இந்த முறை சோதனை அடிப்படையில் பரிசோதிக்கப்பட்டது. அதில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்பட்ட பிறகு கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

    சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுதல், பொதுவான குறைகளை பதிவு செய்தல், திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுதல், வர்த்தக உரிமம் பெறுதல் போன்றவை தொடர்பாகவும் கியூ.ஆர். குறியீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    குடியிருப்புகள் தவிர பஸ் நிலையங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மயானங்கள், சமூக நல மையங்கள் மற்றும் பொது கழிப்பறைகளிலும் கியூ.ஆர். குறியீடு ஒட்டப்படும்.

    இது தொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தில் புகார்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தீர்வு காண்பதற்காக அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மறுஆய்வு பணிகளை 9 மாதங்களுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • கட்டிடங்களை மறு அளவீடு செய்யும் பணிகள் முடிந்ததும் சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் சொத்துவரி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை கணக்கீடு செய்ய புவிசார் தகவல் வரைபடம் தயாரிக்கப்பட்டது. இதற்காக டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடுகள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்களின் பரப்பளவு கணக்கீடு செய்யப்பட்டது.

    இதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் உள்ள 3.10 லட்சம் கட்டிடங்களில் சொத்து வரி செலுத்துவதில் மாறுபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

    அதில் 30 ஆயிரத்து 899 கட்டிடங்களை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் அளவீடு செய்து உறுதி செய்தனர். அவர்களுக்கு தற்போது சரியான சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

    மீதம் உள்ள 2 லட்சத்து 79 ஆயிரத்து 240 கட்டிடங்களில் சொத்துவரி நிர்ணயம் செய்வதில் குளறுபடி உள்ளது. இதையடுத்து இந்த கட்டிடங்களை மறுஅளவீடு செய்யும் பணி முழு வீச்சில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மறுஆய்வு பணிகளை 9 மாதங்களுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் சொத்துவரி மாறுபாடு உள்ள கட்டிடங்களின் எண்ணிக்கை மண்டல வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பணிகளுக்காக ஒப்பந்தம் கோரப்பட்டது. ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணையத்தை மேயர் பிரியா வழங்கினார். இந்த பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சீருடை, தொப்பி மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    மேலும் இந்த பணியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு மாறுபாடு உள்ள கட்டிடங்கள் குறித்த விவரங்களை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி பிரித்து வழங்கியுள்ளது.

    இந்த கட்டிடங்களை மறு அளவீடு செய்யும் பணிகள் முடிந்ததும் சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் சொத்துவரி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • விபரங்களை வாட்ஸ் அப்பில் பகிர மாநகராட்சி கூறி உள்ளதால் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
    • ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களின் தரவுத் தளம் புதுப்பிக்கப்படவில்லை.

    திருநின்றவூர்:

    சென்னை புறநகர் பகுதியான ஆவடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

    இந்நிலையில் ஆவடி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் சொத்துவரி செலுத்துபவர்கள் தங்களது ஆதார், பான் எண் உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    அந்த கடித்தத்தில் சொத்து வரி செலுத்துபவர்கள் தங்களது செல்போன் எண், குடும்ப அட்டை எண், ஆதார், இ- மெயில் முகவரி, பான் எண், வணிக நிறுவனங்களின் ஜி.எஸ்.டி. எண் மற்றும் மின் இணைப்பு எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மேலும் பூர்த்தி செய்யப்பட்ட அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்ப உத்தரவிட்டு உள்ளனர்.

    ஆனால் விபரங்களை வாட்ஸ் அப்பில் பகிர மாநகராட்சி கூறி உள்ளதால் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் இந்த விபரம் சேகரிப்பு எதற்காக நடத்தப்படுகிறது என்ற தெளிவான விளக்கமும் அறிவிக்கப்படவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பொது மக்கள் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளனர்.

    இது குறித்து ஆவடியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 'சொத்துவரி செலுத்துவோரிடம் இருந்து இது போன்ற விவரங்கள் எதற்காக கேட்கப்படுகின்றன என்று மாநகராட்சி தெளிவான விளக்கம் கூறவில்லை.

    மின்இணைப்பு எண் மற்றும் பான் எண் ஆகியவற்றை வழங்க பொது மக்கள் தயங்குகின்றனர்' என்றார்.

    இதுகுறித்து ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்பகராஜ் கூறும்போது, 'ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களின் தரவுத் தளம் புதுப்பிக்கப்படவில்லை. பல சொத்துக்கள் வேறு ஒருவருக்கு மாறி உள்ளது. இதுபற்றிய சரியான விபரங்கள் இல்லை.

    மேலும் எங்களிடம் உள்ள பெரும்பாலான தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவேதான் தற்போதைய சரியான விபரங்களை கேட்டு பதிவு செய்து வருகிறோம். பொது மக்கள் இது குறித்த விபரங்களை தயக்கம் இல்லாமல் அளிக்கலாம் என்றார்.

    • எந்திரத்தில் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்து வரி செலுத்த முடியும்.
    • தானியங்கி எந்திரங்கள் வட்டார துணை கமிஷனர்களின் அலுவலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதியை சுற்றியுள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நிலுவை சொத்து வரியை உடனடியாக செலுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரி சலுகை, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது.

    அந்த வகையில், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை இணையதளம், இ-சேவை மையம், பாரத் பில் பேமன்ட் முறை, இணைய வங்கி, கியூ-ஆர் கோர்டு, காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை தானியங்கி எந்திரம் மூலம் செலுத்தும் நடைமுறையை சென்னை மாநகராட்சி நேற்று தொடங்கியது. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் தானியங்கி எந்திரத்தின் செயல்பாட்டை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கிவைத்தார்.

    பெடரல் வங்கியுடன் இணைந்து சென்னை மாநகராட்சி இதை நிறுவியுள்ளது. இந்த தானியங்கி எந்திரத்தில் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்து வரி செலுத்த முடியும். இதற்கான ரசீதும் இந்த எந்திரத்தில் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தானியங்கி எந்திரங்கள் வட்டார துணை கமிஷனர்களின் அலுவலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் விசு மகாஜன், மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் மற்றும் வருவாய்துறை உயர் அலுவலகர்கள் கலந்துகொண்டனர்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து விரைந்து முடிக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் ராமானுஜபுரம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது.

    அந்த வகையில் ராமானுஜபுரம் ஊராட்சி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ம், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டு வரி, சொத்து வரி செலுத்துதல், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதித்து பொதுமக்களு டைய பல்வேறு கோரிக்கை களை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, பாபநாசம் ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சுதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நடராஜன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் மட்டும் கல்வியை அரசியல் ஆக்குவது ஒருபோதும் ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    காஞ்சிபுரம்:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் காஞ்சிபுரத்தில் நடந்த கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு ஆண்டுக் கால தி.மு.க. ஆட்சியிலே எதிர்பார்த்த மக்கள் இன்றைக்கு ஏமாந்து போய் இருப்பது வருத்தத்துக்குரியது, கொடுத்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக தி.மு.க. செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது,

    தமிழகத்தில் மட்டும் கல்வியை அரசியல் ஆக்குவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. புதிய கல்விக் கொள்கையில் ஏற்படும் சந்தேகங்களை விளக்க மத்திய அரசு இருக்கும் போது, இதனை முறையாக எடுத்துக் கொண்டு சென்று சந்தேகங்களை தீர்க்க வேண்டியது அரசின் கடமை.

    இந்த புதிய கல்விக் கொள்கையைப் பற்றி தமிழக அரசு பல ஆலோசனைகளை கூறலாம். ஆனால் எதையும் செய்யாமல் கண்மூடித்தனமாக இதனை எதிர்ப்பது ஏற்புடையதல்ல. கல்வியிலே அரசியலை புகட்டுவது பெற்றோர்களும் மாணவர்களும் 100 சதவிகிதம் ஏற்புடையதல்ல.

    மக்கள் நலனிலே அக்கறைக்கொண்ட ஆட்சியாளர்களாக மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற காரணத்தால் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைத்து, மக்கள் மீது உள்ள சுமையை மத்திய அரசு குறைத்து வருகிறது. இனிவரும் நாட்களிலும் மத்திய அரசு விலையினை குறைக்கும்.

    ஆனால் தி.மு.க. அரசு பெட்ரோல்-டீசல், கேஸ் விலையை குறைக்க மாட்டோம், சொத்து வரியை உறுதியாக உயர்த்துவோம் என சொல்லுவது மட்டுமல்லாமல், ஆண்டுக்கு ஒரு முறை சொத்துவரியினை உயர்த்துவோம் என கூறுவது மக்கள் விரோதபோக்கு.

    மேலும் மக்கள் மீது ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற சொத்து வரி உயர்வை முழுமையாக கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆணையின்படி சொத்துவரி செலுத்துவோரின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் சொத்து வரி செலுத்துவோர் வரி உயர்வுக்கு தங்களது ஆட்சேபணைகளை தெரிவித்துள்ளார்கள்.

    ஆனால், சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இந்த ஆட்சேபணைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், மீண்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதின் அடிப்படையில் புதிய சொத்து வரி தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளை சிறிதும் கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் அதே வரியை தீர்மானித்திருப்பது மக்களின் உணர்வுகளை அரசு செவிசாய்க்கவில்லை என்ற நிலையை உருவாக்கி விடும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

    மேற்கண்ட வரி உயர்வு மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் 6 சதமான சொத்து வரி உயர்த்தப்பட வேண்டுமெனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தினால் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் 6 சதவீதமான வரி உயர்வு ஏற்பட்டு 10 ஆண்டுகளில் நூறு சதவிகித சொத்து வரி உயர்வு ஏற்படும்.

    இதன் காரணமாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் மிகப்பெரும் வரிச்சுமைக்கு ஆளாக்கப்பட வேண்டிய நிலைமை உருவாகும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதமான வரி உயர்வு என்பதை முழுமையாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    சொத்துவரியை செலுத்தாவிட்டால் ஜூன் முதல் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என ஆணையாளர் தகவல் தெரிவித்தார்.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சியில் சொத்துவரியை உயா்த்தி சமீபத்தில் நகரசபை கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், நிலுவையில் உள்ள சொத்து வரிகளை மே மாதம் இறுதிக்குள் பொதுமக்கள் செலுத்த வேண்டும் என நகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.

    இது குறித்து நகராட்சி ஆணையாளர் சந்திரா கூறியதாவது:-

    ராமநாதபுரம் நகராட்சியில் பழைய வரிபாக்கியை குறைந்த அபராதத்துடன் நடப்பு மாதமான மே முடிவதற்குள் செலுத்தலாம். 

    ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து புதிய முறையில் வரி விதிக்கப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டுவிடும். ஆகவே புதிய முறையில் வரி செலுத்துவோருக்கு ஏற்கெனவே உள்ள பழைய சொத்து வரிகளுக்குரிய அபராதம் இரு மடங்காக விதிக்கப்பட உள்ளது. அபராதத் தொகையை கூடுதலாக செலுத்துவதைத் தவிா்க்க மக்கள் விரைந்து வரிகளை செலுத்துவது அவசியம் ஆகும். 

    ஜூன் மாதத்துக்குள் வரிகளைச் செலுத்தாதவா்கள் மீது நகராட்சி சட்டப்படி நட வடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    சொத்து வரி உயர்வு குறித்து ஒவ்வொருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வருவாய்த் துறை முடிவு செய்துள்ளது. ஜூன் மாதம் முழுவதும் இந்த பணி நடைபெறும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் சொத்துவரி உயர்த்தப்பட்டது. முந்தைய சென்னை மாநகராட்சி பகுதியில் குடியிருப்புகளுக்கு 600 சதுர அடி வரை 50 சதவீதமும், 601 முதல் 1200 சதுர அடி கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1201 முதல் 1800 சதுர அடி கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், 1800 சதுர அடி மேல் உள்ள கட்டிடங்களுக்கு 150 சதவீதமும் சொத்து சரி உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு 100 சதவீதமும், குடியிருப்பு அல்லாத பகுதிகளுக்கு 150 சதவீதமும் உயர்த்தப்பட்டது.

    2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வரி விதிக்கப்பட்ட பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு 50 சதவீதமும், முந்தைய சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், திரையரங்குகளுக்கு புதிய முறையில் கட்டிடத்தின் பரப்பளவு, அடிப்படை தெரு கட்டணம் அடிப்படையில் சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. காலி மனைக்கு 50 பைசாவாக இருந்த சொத்து வரி சதுர அடிக்கு ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்வது குறித்து பொது மக்களிடம் ஆட்சேபனை கருத்தினை கேட்டு அறிவிப்பாக வெளியிட்டது. அறிவிப்பு வெளியிட்ட 30 நாட்களுக்குள் ஆட்சேபனையை தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. கடந்த 11-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. 50-க்கும் குறைவான ஆட்சேபனை கடிதங்கள் வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து சொத்து வரி உயர்வு குறித்து மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 30-ந் தேதி நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    அதைத் தொடர்ந்து சொத்து வரி உயர்வு குறித்து ஒவ்வொருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வருவாய்த் துறை முடிவு செய்துள்ளது. ஜூன் மாதம் முழுவதும் இந்த பணி நடைபெறும்.

    இது குறித்து மாநகராட்சி வருவாய் அதிகாரி சுகுமார் பாபு கூறியதாவது:-

    சொத்து வரி உயர்வு குறித்து ஆட்சேபனை தெரிவித்து 40 மனுக்கள் மட்டுமே வந்துள்ளன. அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும். அறிவிக்கப்பட்ட சொத்து வரி உயர்வு ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் எவ்வளவு உயர்ந்துள்ளது என்ற விவரம் நோட்டீஸ் மூலம் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் மாதம் முழுவதும் 13 லட்சம் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்படும்.

    2022-23 முதல் அரையாண்டிற்கான சொத்து வரி விவரம் முழுமையாக தெரிவிக்கப்படும். அதன்படி சொத்து வரி வசூலிக்கும் பணி தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×