search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Price Hike"

    • ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
    • இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, சமையல் எண்ணெயை (பாமாயில்) மிக குறைந்த விலையில் பெற்று வருகிறார்கள்.

    ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயிலை வெளி சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து அவற்றை மிக மிக குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது. அதாவது துவரம் பருப்பு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது.

    அதுபோல சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்

    15-ந்தேதி முதல் இந்த விலையில் இந்த இரு பொருட்களும் கிடைக்கிறது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள்.

    கடந்த 2 மாதங்களாக ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை. இந்த பொருட்களை விரைவில் வழங்குவோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஆகஸ்டு மாதத்திற்கான வினியோகத்துக்கும் இதுவரை துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

    வெளிச்சந்தையில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விலை மிக மிக கடுமையாக உயர்ந்து விட்டதால் அவற்றுக்கு தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2014-15-ம் ஆண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய ஆண்டுக்கு ரூ.1,800 கோடி மானியம் கொடுத்தது.

    தற்போது அந்த மானிய தொகை ரூ.3,800 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்தான் ரேசன் கடை களில் தொடர்ந்து துவரம் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

    கடந்த 2007-ம் ஆண்டு ஒரு கிலோ துவரம் பருப்பை வெளிச்சந்தையில் 50 ரூபாய்க்கு வாங்கி தமிழக அரசு ஏழை எளியவர்களுக்கு 30 ரூபாய்க்கு கொடுத்தது. அது போல பாமாயிலை வெளிச்சந்தையில் லிட்ட ருக்கு 45 ரூபாய் கொடுத்து வாங்கி நுகர்வோர்களுக்கு 25 ரூபாய்க்கு வழங்கியது.

    தற்போது துவரம் பருப்பு வெளிச்சந்தையில் ஒரு கிலோ 155 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பாமாயில் ஒரு லிட்டர் 95 ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது.

    தமிழக அரசு இந்த விலைக்கு கொள்முதல் செய்தாலும் ரேசன் கடைகளில் 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது போல இன்றும் துவரம் பருப்பை கிலோ 30 ரூபாய்க்கும், பாமாயிலை 25 ரூபாய்க்கும் வழங்கி வருகிறது.

    துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய 2 பொருட்கள் விலை உயர்வு காரணமாக தமிழக அரசுக்கு அதிக இழப்பு ஏற்பட்டு வருகிறது. இத னால் இந்த விவகாரத்தில் ஏழை எளிய குடும்ப அட்டைதாரர்களை பாதிக்காத வகையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

    அதன்படி ரேசனில் வழங்கும் துவரம் பருப்பு, பாமாயில் விலையை சற்று அதிகரிக்கலாமா? என்று ஆலோசிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    என்றாலும் சில மாதங்களில் ரேசனில் துவரம் பருப்பு, பாமாயில் விலை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பொருட்கள் வாங்கும் நுகர்வோர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    • தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும், 25 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை.
    • நடப்பாண்டு, விற்பனை அதிகரித்துள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

    அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் மக்கள் தங்க நகைகளை வாங்கி மகிழ்கின்றனர்.

    இந்த ஆண்டு, அட்சய திருதியை நேற்று அதிகாலை 4.56 மணிக்கு தொடங்கி, இன்று (சனிக்கிழமை) மதியம் 2.50 மணியுடன் முடிவடைந்தது.

    கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்க நகைகள் விற்பனை இருந்தது. நடப்பாண்டு, விற்பனை அதிகரித்துள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அட்சய திருதியை விற்பனை தொடர்பாக தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், " அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க மக்கள் அதீத ஆர்வம் காட்டியதால், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும், 25 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு 16 ஆயிரத்து 750 கோடி ரூபாய் ஆகும்.

    மேலும், 2030-ல் ஒரு சவரன் ஒரு லட்சம் வரை விற்பனையாக வாய்ப்புள்ளது" என்றார்.

    • பிப்ரவரி மாதம் வரத்து குறைவால் பூண்டு விலை ஒரு கிலோ ரூ.500வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    • வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி பூண்டு விற்பனைக்கு வருகிறது. கடந்த 10 நாட்களுக்குள் பூண்டுவின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ பூண்டு ரூ.160 முதல் ரூ.320 வரை விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ரூ.200 முதல் ரூ.400வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உற்பத்தியாளர்களிடம் இருந்து பூண்டுவை அதிகளவில் கொள்முதல் செய்து பின்னர் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அதை பயன்படுத்தி விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதனால் பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களான பூண்டு பதுக்கலில் ஈடுபடுவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு பூண்டு வியாபாரிகள் கோரிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் வரத்து குறைவால் பூண்டு விலை ஒரு கிலோ ரூ.500வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.160-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200-க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் பீர்க்கங்காய் கிலோ ரூ.70-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.50-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.60-க்கும், வெள்ளரிக்காய் கிலோ ரூ.40-க்கும், புடலங்காய் கிலோ ரூ.35-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.25-க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.50-க்கும் மொத்த விற்பனையில் விற்கப்படுகிறது.

    • இரு சக்கர வாகனங்களுக்கு 28 சதவீத உச்சபட்ச ஜிஎஸ்டி தேவையா?
    • பிற நாடுகளில் வாகனங்களுக்கு 8% முதல் 14% வரை மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.

    வாகனங்கள் விலை உயர்ந்து வருவதற்கு மத்திய அரசு விதிக்கும் அதிக ஜிஎஸ்டி விகிதங்களே காரணம் என, மத்திய அரசு மீது பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    மத்திய அரசின் அதிகப்படியான விதிமுறைகள் மற்றும் அதிக ஜிஎஸ்டி விகிதங்களே வாகனங்களின் கணிசமான விலை உயர்வுக்குக் காரணம்.

    பிஎஸ்6 போன்ற எரிபொருள் தரநிலைகளை தான் எதிர்க்கவில்லை, ஆனால் இரு சக்கர வாகனங்களுக்கு 28 சதவீத உச்சபட்ச ஜிஎஸ்டி தேவையா?

    இந்தியாவின் ஜிஎஸ்டி விகிதங்களை ASEAN (தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சங்கம்) மற்றும் பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிட்ட ராஜீவ் பஜாஜ், அந்த நாடுகளில் வாகனங்களுக்கு 8% முதல் 14% வரை மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.

    இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18% அல்லது 12%-ஆக மத்திய அரசு குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

    • தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் காஞ்சி பட்டு சேலைகள் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • ஒரே ரகத்தில் நெய்யப்பட்ட சேலை கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் காஞ்சி பட்டு சேலைகள் உலகப் புகழ் பெற்றவையாக திகழ்கின்றன. மத்திய அரசின் புவிசார் குறியீட்டை பெற்றுள்ள காஞ்சி பட்டு சேலைகள் சிறப்பு அம்சங்களை கொண்டவையாக திகழ்கின்றன.

    தங்கம், வெள்ளி ஜரிகைகளை கோர்த்து செய்யப்படுவதால் 25 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சி பட்டு சேலைகள் தனித்துவம் பெற்றவையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் காஞ்சி பட்டு சேலைகளின் வியாபாரமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகவே இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ரூ.300 கோடி அளவுக்கு பட்டு சேலைகள் விற்பனையாகின்றன.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் காஞ்சி பட்டு சேலைகள் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் ஏரிக்கரையில் உள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலையில் உற்பத்தியாகும் ஜரிகையில் 0.5 சதவீதம் தங்கம், 40 சதவீதம் வெள்ளி, 35.5 சதவீதம் காப்பர், 24 சதவீதம் பட்டு இழை ஆகியவை சேர்க்கப்படும்.

    ஒரு பாக்கெட்டில் 242 கிராம் அளவுக்கு ஜரிகை இருக்கும். 5 கட்டைகளில் சுற்றப்பட்டுள்ள இந்த ஜரிகையை ஒரு மார்க் என்று அழைப்பார்கள். இந்த ஒரு மார்க் ஜரிகை ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் தங்கம்-1.210 கிராம், வெள்ளி-96.8 கிராம், காப்பர்-85.91 கிராம், சில்க்-58.08 கிராம் சேர்க்கப்பட்டிருக்கும்.

    தங்கம், வெள்ளி விலை உயர்வால் பட்டு சேலைகள் விலையை 30 சதவீதம் அளவுக்கு உற்பத்தியாளர்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளனர். காஞ்சி பட்டு சேலைகள் ரூ.10 ஆயிரத்தில் இருந்து 2 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளி விலையேற்றம் காரணமாக ஜரிகை விலை உயர்ந்து பட்டு சேலைகளின் விலையும் அதிகரிப்பதால் விற்பனை பாதிக்கப்படும் என்று பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    விற்பனை பாதிக்கப்படும் பட்சத்தில் பட்டு சேலைகள் தேக்கம் அதிகமாகி உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    இதனால் நெசவாளர்களுக்கு எப்போதும் போல வேலையை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஒரு மார்க் ஜரிகை ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.20 ஆயிரமாக விலை உயர்ந்து உள்ளது. ஒரே ரகத்தில் நெய்யப்பட்ட சேலை கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

    தேர்தல் காரணமாக கடந்த 1½ மாதமாக பட்டு சேலைகள் வியாபாரம் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தங்கம், வெள்ளி விலையேற்றமும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையாகி வந்த பட்டு சேலை ரூ.15 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும், இப்படி அனைத்து ரக சேலைகளின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.

    • கோயம்பேடு சந்தைக்கு தினசரி 10லாரிகள் வரை சுமார் 80 முதல் 100டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
    • கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தற்போது கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் எலுமிச்சை பழம் தேவை அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு சந்தைக்கு தினசரி 10லாரிகள் வரை சுமார் 80 முதல் 100டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். கோடை சீசன் தொடங்கி உள்ளதால் பல்வேறு மாநிலங்களுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

    கடந்த சில நாட்களாகவே 40 டன் எலுமிச்சை பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலையும் தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.130வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடைகளில் எலுமிச்சை பழச்சாறு, குளிர்பானங்கள், சர்பத்தை பலர் விரும்பி குடித்து வருகிறார்கள். இதனால் சாலையோரங்களிலும் எலுமிச்சை சர்பத் கடைகள் பல இடங்களில் முளைத்து உள்ளன.

    • கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    போரூர்:

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.250-க்கு விற்ற மல்லிப்பூ தற்போது 2 மடங்காக விலை அதிகரித்து கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.100-க்கு விற்ற சாமந்தி ரூ.220 வரை உயர்ந்துள்ளது. அதேபோல் கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல் ஆப்பிள் சீசன் முடிந்து உள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் இந்தியன் ஆப்பிள் ஒரு கிலோ ரூ180-க்கும், ஈரான் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.120-க்கும் விற்கப்படுகிறது. மாதுளை கிலோ 180-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.50-க்கும், கொய்யா கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    சாமந்தி - ரூ.150 முதல் ரூ.220 வரை, மல்லி - ரூ.500, பன்னீர் ரோஜா ரூ.80 முதல் ரூ.100வரை, சாக்லெட் ரோஜா ரூ.100 முதல் ரூ.120 வரை, அரளி - ரூ.250, செவ்வரளி - ரூ.400, கனகாம்பரம் - ரூ.600, சம்பங்கி - ரூ.180, முல்லை - ரூ.600, ஜாதிப்பூ - ரூ.500.

    • கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அதிரடியாக ஐஸ்கிரீம் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐஸ்கிரீம் உள்பட பால் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    கோடை காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்களுக்கு வழக்கத்தை விட தேவை அதிகரிக்கும்.

    தற்போது கோடை காலம் உச்சத்தை எட்ட தொடங்கி இருக்கிறது. அடுத்த வாரம் முதல் வெயில் அளவு கடுமையாக உயரும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் ஐஸ்கிரீம் விற்பனை கணிசமாக உயர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அதிரடியாக ஐஸ்கிரீம் விலையை உயர்த்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கு கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் நேற்று முன்தினம் கடிதம் அனுப்பி உள்ளார்.

    அந்த கடிதத்தில் 4 வகையான ஐஸ்கிரீம் விலையை உயர்த்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 65 எம்.எல். எடை கொண்ட சாக்கோ பார் ஐஸ்கிரீம் விலை ரூ.20-ல் இருந்து ரூ.25ஆக அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல 125 எம்.எல். எடை கொண்ட பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.

    100 எம்.எல். எடை கொண்ட கிளாஸ்சிக் கோன் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அது போல கிளாஸ்சிக் கோன் சாக்லெட் ஐஸ்கிரீமும் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்ந்துள்ளது.

    ஐஸ்கிரீம் விலை உயர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வருவதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று தெரிகிறது.

    ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பால் உபபொருட்களின் விற்பனை விலையை நேரடியாகவும், பால் விற்பனை விலையை மறைமுகமாகவும் கடந்தாண்டு வரலாறு காணாத வகையில் உயர்த்திய ஆவின் நிர்வாகம் நடப்பாண்டில் நாளை (3-ந் தேதி) முதல் ஐஸ்கிரீம் விற்பனை விலையை உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    ஏனெனில் தனியார் பால் நிறுவனங்கள் பலவும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை விலையை குறைப்பது, பல்வேறு சலுகைகள் வழங்குவது என செயல்பட்டு வரும் சூழலில் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போலிருக்கிறது.

    மேலும் தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதலில் கவனம் செலுத்தாமல், வடமாநிலங்களில் இருந்து பால் பவுடர், வெண்ணெய் கொள்முதல் செய்து அதன் மூலம் பணம் ஈட்டி, தங்களின் கஜானாவை நிரப்பிக் கொள்வதில் அக்கறை காட்டும் ஊழல் அதிகாரிகளால் ஆவின் நிர்வாகம் சிதிலமடைந்து வரும் நிலையில் இதுபோன்ற விற்பனை விலை உயர்வு அறிவிப்புகள் ஆவினுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் எச்சரிக்கையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

    அத்துடன் பால் வளத்துறை அமைச்சரும், ஆவின் நிர்வாக இயக்குனரும் அதிகாரிகள் மட்டத்தில் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து கொண்டு ஆலோசனை கூட்டம் என்கிற பெயரில் மக்களின் வரிப்பணத்தை, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பால் வரும் வருமானத்தை வீணடிப்பதை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் நடப்பாண்டின் கோடை காலத்தில் ஆவின் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன.
    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகளின் விலை பல மடங்கு எகிறி உள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இன்று 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன.

    ஊட்டி கேரட், வெண்டைக்காய், முருங்கைக்காய் ஆகியவை வரத்து குறைவால் அதன் விலை அதிகரித்து உள்ளது. கேரட் கிலோ ரூ.90-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.80-க்கும், பீன்ஸ், அவரைக்காய் மற்றும் பன்னீர் பாகற்காய் ஆகிய காய்கறிகள் கிலோ ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகளின் விலை பல மடங்கு எகிறி உள்ளது. தக்காளி ரூ40-க்கும், உஜாலா கத்தரிக்காய் கிலோ ரூ.50-க்கும், முருங்கைக்காய் மற்றும் இஞ்சி கிலோ ரூ.120 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது.

    • டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு.
    • 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயருகிறது.

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

    பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்படுகிறது.

    அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விரைவில் உயர உள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயருகிறது.

    இந்நிலையில், வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறித்துள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 11 கார்களை விற்பனை செய்து வருகிறது.
    • கார்களின் விலை மாற்றம் பிப்ரவரியில் அமலுக்கு வருகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு பிப்ரவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. ஐ.சி. என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் என அனைத்தின் விலையும் உயர்த்தப்படுகிறது. இந்த முறை கார்களின் விலை 0.7 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    தற்போது ஏழு ஐ.சி. என்ஜின் கார்கள் மற்றும் நான்கு எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. இதில் டியாகோ, டியாகோ EV, டிகோர், டிகோர் EV, பன்ச், பன்ச் EV, அல்ட்ரோஸ், நெக்சான், நெக்சான் EV, ஹேரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்டவை அடங்கும்.

     


    சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 10 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

    • மாருதி சுசுகி தனது வாகனங்கள் விலையை மாற்றி இருக்கிறது.
    • பலேனோ மாடல் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனம் தனது நெக்சா பிரான்டு கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் இக்னிஸ், பலேனோ, ஃபிரான்க்ஸ், ஜிம்னி, சியாஸ், XL6 மற்றும் கிரான்ட் விட்டாரா போன்ற மாடல்கள் நெக்சா பிரான்டிங்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டை போன்றே இந்த ஆண்டும் மாருதி சுசுகி தனது வாகனங்கள் விலையை மாற்றி இருக்கிறது.

    அதன்படி இக்னிஸ் ஹேச்பேக் மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 84 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இந்த மாடலின் AMT வேரியன்ட்களுக்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மேனுவல் வேரியன்ட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     


    மாருதி சுசுகி பலேனோ மாடலின் மேனுவல் மாடல்கள் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் AMT மாடல்கள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய சந்தையில் பலேனோ மாடல் சிக்மா, டெல்டா, சீட்டா மற்றும் ஆல்ஃபா போன்ற வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6 லட்சத்து 66 ஆயிரம் என துவங்குகிறது. டாப் என்ட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 88 ஆயிரம் ஆகும்.

    கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ் 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் இதன் 1.0 லிட்டர் AT மாடல் விலை ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மற்ற மேனுவல் வேரியன்ட்களின் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     


    மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 10 லட்சத்து 80 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 20 லட்சத்து 09 ஆயிரம் ஆகும். மாருதி சுசுகி ஜிம்னி மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 12 லட்சத்து 74 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 14 லட்சத்து 95 ஆயிரம் என மாறியுள்ளது.

    XL6 மாடல்கள் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு தற்போது இதன் விலை ரூ. 12 லட்சத்து 56 ஆயிரத்தில் இருந்து ரூ. 14 லட்சத்து 77 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாருதி சுசுகி இன்விக்டோ மாடல்களின் விலை ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை தற்போது ரூ. 25 லட்சத்து 21 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 29 லட்சத்து ஆயிரத்து 500 ஆக மாறி இருக்கிறது.

    மாருதி சுசுகியின் செடான் மாடல் சியாஸ் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை தற்போது ரூ. 9 லட்சத்து 40 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 12 லட்சத்து 45 ஆயிரம் ஆகும்.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ×