என் மலர்
நீங்கள் தேடியது "Property tax"
- சொத்து வரி விதிப்பை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
- சொத்து வரியை எந்த காரணம் கொண்டும் குறைக்கப்போவதில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் சூசகமாக தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் சொத்துவரியை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சீரமைக்கப்பட்ட சொத்துவரி பற்றி வீட்டின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சொத்துவரி குறித்த அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சொத்துவரி மிக அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி கூறி இருந்தது. அதன்படி சுமார் 4 ஆயிரம் பேர் சென்னை மாநகராட்சியில் கடிதம் கொடுத்தனர்.
என்றாலும் சொத்து வரி விதிப்பை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சொத்து வரியை எந்த காரணம் கொண்டும் குறைக்கப்போவதில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் சூசகமாக தெரிவித்துள்ளனர். அதிருப்தியில் இருப்பவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
இதற்கிடையே சொத்து வரியை நீண்ட நாட்களுக்கு நிலுவையில் வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது புதிய அதிரடி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சொத்து வரியை நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருக்கும் வீடுகளை சீல் வைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.
அதற்கு முன்னதாக வரி நிலுவையில் உள்ள கட்டிடங்களுக்கு 3 முறை நோடடீஸ் வழங்கி, 6 மாதம் அவகாசம் கொடுக்கப்படும். வீட்டு உரிமையாளர்களே வீட்டை அளந்து வரி விதிப்பு பற்றி தெரிவிக்கலாம். இதில் அலட்சியம் காட்டினால் வீடு சீல் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் சொத்து வரியை முழுமையாக வசூல் செய்தால் ஆண்டுக்கு சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,400 கோடி வருமானம் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. உயர்த்தப்பட்ட சொத்துவரி முழுமையாக வசூலிக்கப்பட்டால் சென்னை மாநகராட்சிக்கு மேலும் பல நூறு கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு சொத்து வரி எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது என்பதை ஆன்லைன் மூலம் சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது.
- அதன்படி தஞ்சை ரெயிலடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை வகித்தார்.
தஞ்சாவூர்:
மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி தஞ்சை ரெயிலடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை வகித்தார்.
ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் குமரேசன், மாவட்டத் தலைவர் பாலா என்கிற பாலமுருகன், மாவட்டத் துணைத் தலைவர் இளங்கோவன், வழக்கறிஞர் பிரிவு சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சொத்து வரி உயர்வு அதிகமாக இருப்பதாக கூறி 3,552 புகார்கள் மாநகராட்சிக்கு இதுவரையில் வந்துள்ளன.
- அதற்கு உரிய விளக்கத்தை அதிகாரிகள் இன்று முதல் அளிக்கிறார்கள்.
சென்னை:
சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உயர்த்தப்பட்டது. 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை பல்வேறு வகையாக பிரித்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் பழைய பகுதிகளுக்கு அதிகமாவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைந்த விகிதத்திலும் ஒவ்வொரு தெருக்களின் மதிப்பு அடிப்படையில் சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே செலுத்தப்பட்ட சொத்து வரி எவ்வளவு போன்ற விவரங்கள் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
சொத்து வரி செலுத்தக்கூடிய 13 லட்சம் பேருக்கு சொத்து வரி உயர்வு விளக்க நோட்டீஸ் கடந்த மாதம் முதல் தபால் மூலம் அனுப்பப்படுகிறது. இருப்பினும் சொத்து வரி உயர்வு அதிகமாக இருப்பதாக கருதினால் மாநகராட்சி ஆணையரிடம் முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் சொத்து வரி உயர்வு அதிகமாக இருப்பதாக கூறி 3,552 புகார்கள் மாநகராட்சிக்கு இதுவரையில் வந்துள்ளன. அதற்கு உரிய விளக்கத்தை அதிகாரிகள் இன்று முதல் அளிக்கிறார்கள்.
மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தலின் பேரில் மண்டல துணை கமிஷனர்கள் சொத்து வரி புகாருக்கு உரிய விளக்கத்தை ஆன்லைன் வழியாக வழங்குகிறார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி துணை கமிஷனர் விஷ்ணு மகாஜன் கூறியதாவது:-
சொத்து வரி உயர்வு அதிகமாக இருப்பதாக பல புகார்கள் வந்துள்ளன. சொத்து வரியை நாங்கள் குறைக்க முடியாது. அரசின் உத்தரவை தொடர்ந்து சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி மன்ற கூட்டத்திலும் சொத்துவரி உயர்வுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. சொத்துவரி எவ்வாறு கணக்கிடப்பட்டது என்ற விவரத்தை ஆன்லைன் வழியாக கொடுக்கிறோம். நியாயமான புகார்களுக்கு தகுந்த விளக்கங்கள் தரப்படுகின்றன.
ஆன்லைன் வழியாக சொத்துவரி புகார் கொடுத்தவர்களுக்கு உயர்வு விளக்கம் கூற தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கார சென்னையாக மாற்ற சொத்துவரியை குறித்த காலத்தில் செலுத்தி உதவிட வேண்டும். சொத்து வரியை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு சினிமா டிக்கெட், கேஷ்பேக் சலுகை வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சிக்கு பெறப்பட்ட புகார்களால் அதிகமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க.நகர், அம்பத்தூரில் இருந்து வந்துள்ளது. மத்திய சென்னையில் இருந்து 1986 புகார்களில் 221-ல் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
வடசென்னை பகுதியில் இருந்து பெறப்பட்ட 668 புகாரில் 10 மட்டுமே சரி செய்யப்பட்டுள்ளது. தென் சென்னையில் இருந்து பெற்ற 878 மனுக்களில் 94-க்கு மட்டும் தீர்வு காணப்பட்டுள்ளது.
- சென்னையில் 13 லட்சத்து 6 ஆயிரத்து 777 குடியிருப்புகள் உள்ளன.
- அதன் உரிமையாளர்களுக்கு சொத்து வரி உயர்வு தொடர்பான நோட்டீசு அடுத்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.
சென்னை:
சென்னையில் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக கடந்த 30-ந்தேதி நடந்த சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி சென்னையில் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதற்காக சொத்து உரிமையாளர்களுக்கு படிவம் 6 நோட்டீசை சென்னை மாநகராட்சி வழங்க உள்ளது.
படிவம் 6-ல் கட்டிடங்களின் அளவு, பரப்பளவு, தெரு, திருத்தப்பட்ட வரித்தொகை இடம்பெற்றிருக்கும்.
சென்னையில் 13 லட்சத்து 6 ஆயிரத்து 777 குடியிருப்புகள் உள்ளன. அதன் உரிமையாளர்களுக்கு சொத்து வரி உயர்வு தொடர்பான நோட்டீசு அடுத்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:-
சொத்து வரி உயர்வு தொடர்பான நோட்டீசு வருகிற 13 அல்லது 14-ந்தேதி முதல் அச்சடித்து வினியோகம் செய்யப்படும். ஒவ்வொரு சொத்துக்களும் தனித்தனி நோட்டீசு இருக்கும். மொத்தம் 13 லட்சத்துக்கும் அதிகமான நோட்டீசுகளை ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அச்சிட உள்ளோம்.
உரிமையாளர்கள் பெயர், பில் எண் மற்ற விவரங்கள் நோட்டீசில் சேர்க்கப்படும். சொத்து உரிமையாளர்கள் புதிய வரி விகிதம், சொத்தின் அளவு ஆகியவற்றின் முரண்பாடுகளை கண்டறிந்தால் மேல்முறையீடு செய்ய 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
ஏற்கனவே இருந்த மாநகராட்சி பகுதிகளில் 600 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 150 சதவீதம் வரி உயர்த்தப்படுகிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி பகுதிகளில் 600 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 125 சதவீதம் வரி உயர்த்தப்படுகிறது.
இதே போல் 601 சதுர அடி முதல் 1200 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு வரி உயர்வு 175 மற்றும் 150 சதவீதமாக இருக்கும்.
1201 சதுர அடி முதல் 1800 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 200 மற்றும் 175 சதவீதம் வரி உயர்வு இருக்கும். 1801 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு 250 சதவீதம் மற்றும் 200 சதவீத அளவுக்கு வரி உயரும்.
சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளாக இருந்த போது சொத்து வரி உயர்த்தப்பட்டது. எனவே அங்கு சொத்து வரி உயர்வு குறைவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல் மாதத்தில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது.
- 28 நாட்களில் ரூ.1,000 கோடி வசூலானது
பெங்களூரு:
பெங்களூரு மாநகராட்சியில் 2022-23-ம் ஆண்டிற்கான சொத்து வரி வசூல் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வரி வசூல் தொடங்கியது. இது தொடங்கிய முதல் 28 நாட்களில் ரூ.1,000 கோடி வசூலானது. 28 நாட்களில் ரூ.1,000 கோடி வசூலானது இதுவே முதல் முறை ஆகும். இது வரி வசூலில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
முதல் மாதத்தில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி மேலும் ஒரு மாதம் அதாவது கடந்த மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த தள்ளுபடி வழங்கப்பட்ட 2 மாதங்களில் ரூ.2,000 கோடி சொத்து வரி வசூலாகியுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் தீபக் கூறுகையில், ''நாங்கள் சொத்துவரி செலுத்தும் நடைமுறையில் சில மாற்றங்களை செய்தோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதன் காரணமாக சொத்துவரி வசூல் அதிகரித்துள்ளது. வரி வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் வரும் நாட்களில் சொத்துவரி செலுத்தும் நடைமுறையை மேலும் சீரமைப்போம். கட்டிடங்களின் உரிமையாளர்கள் சரியான முறையில் வரியை செலுத்துகிறார்களா? என்பது குறித்து கட்டிட சர்வே நடத்துகிறோம்'' என்றார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை பெருநகரம் உள்ளிட்ட, மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50 சதவீதமாகவும், வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி 100 சதவீதமாகவும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமாகவும் உயர்த்தப்படும் என்பதை தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் எழும்பிய கடுமையான கண்டனத்தின் காரணமாக உயர்த்தி அறிவிக்கப்பட்ட சொத்துவரியில், வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரியை 50 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தது.
ஆனால், சொத்துவரி கணக்கிடும் நடைமுறையில், மக்கள் தாங்கமுடியாத பெரும் சுமையை, அவர்கள் தலையில் அரசு சுமத்தி உள்ளது. சொத்துவரி கணக்கிடும் முறையில், நிலத்தின் தற்போதைய மதிப்பை கணக்கில் எடுத்து, உச்சபட்சமாக எந்த அளவுக்கு உயர்த்தமுடியுமோ அத்தனை வழியையும் பின்பற்றி, சொத்து வரி உயர்த்தி நோட்டீஸை அனுப்பியிருக்கிறார்கள்.
அதனை ஒப்பிட்டுப் பார்த்தபோது, கடந்தமுறை மக்கள் செலுத்திய வரியைக் காட்டிலும், நூறு மடங்கிற்கு மேலாக கூடுதல் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மக்களை அரசு உட்படுத்தி உள்ளது.

ஏற்கனவே 60 சதவீதத்திற்குமேல் பேருந்து கட்டணத்தை உயர்த்திய அரசு, தற்போது சொத்து வரியை பலமடங்கு உயர்த்தி மக்களை துன்பத்தில் ஆழ்த்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது.
தங்களின் நிர்வாகத் திறமையின்மைக்காக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் எடப்பாடி அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை மனதில் கொண்டு இந்த சொத்து வரி கணக்கிடும் முறையை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #PropertyTax
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு சொத்து வரியை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய படி நிர்ணயிக்கும் அதே நேரத்தில் பொது மக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் குறைந்த அளவில் நிர்ணயம் செய்ய வேண்டும்
தமிழக அரசு குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கு உரிய கட்டிடங்களுக்கு சொத்து வரியை பல மடங்கு அதிகமாக உயர்த்தி நிர்ணயம் செய்திருப்பது ஏற்புடையதல்ல.
உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலில் சொத்து வரியை மக்களுக்கு சுமையாக அமையும் விதத்தில் தமிழக அரசு 5 மடங்கு, 10 மடங்கு என உயர்த்தியுள்ளது. அதாவது 2018- 19 -ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிலேயே வசூலிக்கப்படும் சொத்து வரி உயர்வு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மீறுகின்ற வகையில் அமைந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக உயர்த்தாமல் இருந்ததற்காக திடீரென்று சொத்து வரியை பல மடங்கு அதிகமாக உயர்த்தினால் பெரிதும் பாதிக்கப்படுவது சாதாரண ஏழை, எளிய, நடுத்தர குடும்பம் தான்.
காலச்சூழலுக்கு ஏற்ப, பொருளாதார நெருக்கடியை கவனத்தில் கொண்டு குறைந்த அளவில் சொத்து வரியை உயர்த்தினால் பொது மக்கள் ஓரளவிற்கு பொருளாதார சுமையை ஏற்றுக்கொள்வார்கள்.
எனவே உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய படி சொத்து வரியை நிர்ணயிக்கும் அதே நேரத்தில் பொதுமக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் சொத்து வரியை குறைந்த அளவில் நிர்ணயம் செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TamilMaanilacongress #GKVasan #PropertyTax
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்ததை விட பல மடங்கு அதிகமாக சொத்துவரி உயர்த்தப்பட்டிருக்கிறது. மக்களைச் சுரண்டும் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்து வரி உயர்த்த வேண்டும் என்று விதி இருந்தாலும், 1998-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை. இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்த ஆணையிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் சொத்துவரியை விருப்பம் போல உயர்த்தியுள்ளன. சென்னையின் சில பகுதிகளில் சொத்து வரி 518 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.
சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில் 958 சதுர அடி பரப்புள்ள தனி வீட்டுக்கான ஆண்டு சொத்துவரி 390 ரூபாயிலிருந்து ரூ.2410 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கான ஆண்டு சொத்துவரி 1100 ரூபாயிலிருந்து ரூ.3370 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 206 சதவீதம் உயர்வாகும்.
ஆலந்தூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கான சொத்துவரி 256 ரூபாயிலிருந்து ரூ.1480 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 478 சதவீதம் உயர்வாகும். சில இடங்களில் இதைவிட அதிகமாக சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வீடுகளுக்கான சொத்துவரியை ஒரே நேரத்தில் 518 விழுக்காடு அளவுக்கு உயர்த்துவது எந்த அடிப்படையில் நியாயம் என்பது தெரியவில்லை. எந்த அளவீடுகளின் அடிப்படையில் சொத்துவரியை சென்னை மாநகராட்சி இந்த அளவு உயர்த்தியது என்பதும் தெரியவில்லை.
அதேநேரத்தில் சிலருக்கு மட்டும் மிகக்குறைந்த அளவிலேயே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னைக் கோடம்பாக்கத்தில் 394 சதுர அடி பரப்பளவுள்ள தனி வீட்டுக்கு இதுவரை சொத்துவரியாக ஆண்டுக்கு ரூ.1802 வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது இது ரூ.2020 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வெறும் 12 சதவீதம் உயர்வு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பல குடியிருப்புகளுக்கு குறைந்தபட்சமாக 10 சதவீதம் வரையிலும், வணிக நிறுவனங்களுக்கு 40 சதவீதம் வரையிலும் மட்டுமே சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. எந்த அடிப்படையில் இவர்களுக்கு வரி குறைவாக உயர்த்தப்பட்டது என்பது ரகசியமாகவே உள்ளது. இவற்றை யார், எந்த அடிப்படையில் தீர்மானித்தனர் என்பது தெரியவில்லை.
சொத்துவரி தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்படும் என்று கடந்த ஜூலை 23-ந்தேதி அறிவிப்பு வெளியானது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் பின் தேதியிட்டு இந்த வரி வசூலிக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. ஆனால், பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து சொந்தப் பயன்பாட்டுக்கான வீடுகளுக்கான சொத்து வரி 50 சதவீதம் வரை மட்டுமே உயர்த்தப்படும் என்றும், பின்தேதியிட்டு ஏப்ரல் மாதத்திலிருந்து வசூலிக்கப்படாது என்றும், அக்டோபர் மாதம் முதல் தான் புதிய வரி வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஆனால், தமிழக அரசின் அரசாணையை தமிழக அரசே மதிக்கவில்லை. அதிகபட்ச வரி உயர்வை விட 10 மடங்குக்கும் கூடுதலாக சொத்துவரி வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏப்ரல் மாதம் முதல் பின்தேதியிட்டு சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
நகர்ப்புற உள்ளாட்சிகளின் செலவுகள் அதிகரித்து விட்ட நிலையில், அதை சமாளிக்க சொத்துவரியை ஓரளவு உயர்த்த வேண்டியது அவசியம் தான். ஆனால், அது மக்களைப் பாதிக்காவாறு இருக்க வேண்டும். மக்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் விருப்பம் போல சொத்து வரியை உயர்த்துவது கொள்ளைக்கு சமமானதாகும். மக்களை சுரண்டவும், கொள்ளை அடிக்கவும் ஓர் எல்லை உண்டு என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
வீடுகளுக்கான சொத்து வரி 50 விழுக்காட்டுக்கும் மேல் உயர்த்தப்படாது என்று உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்த தமிழக அரசு, அதை விட 10 மடங்குக்கும் மேலாக சொத்துவரியை உயர்த்தி இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதை உணர்ந்து சொத்துவரி உயர்வை 50 சதவீதம் என்ற அளவுக்கு அரசு குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்.
அதுமட்டுமின்றி, சொத்துவரியை உயர்த்தும் அரசின் முடிவை ஏதேனும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்தால் அவர்களை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்று எச்சரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பை மிகக் கடுமையாக கையாள வேண்டும். இதற்கு காரணமான அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து கண்டிக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவொற்றியூர் மற்றும் அதையொட்டிய குடியிருப்புகள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் என்று கூறப்பட்டாலும் அங்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எதுவும் பெரிய அளவில் செய்யப்படவில்லை.
கட்டமைப்பு வசதிகளின் தரம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையாக இருக்கும் நிலையில், வீட்டு வரியின் அளவு அமெரிக்க நகரங்களுக்கு இணையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருவொற்றியூரில் வீட்டு வரி ஓரளவு நியாயமாகவே இருந்தது.
ஆனால், ஒரு கட்டத்தில் எந்த நியாயமும் இல்லாமல் வீட்டு வரி கண் மூடித்தனமாக உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட வரி ஏழை மற்றும் நடுத்தர மக்களால் கட்ட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
சென்னையில் பணக்கார மக்கள் வாழும் பகுதியாகவும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் நிறைந்ததாகவும் கருதப்படும் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், அடையாறு, பெசன்ட்நகர் ஆகிய பகுதிகளில் கூட சதுர அடிக்கு சராசரியாக ஒரு ரூபாய் மட்டுமே சொத்துவரியாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத திருவொற்றியூர் பகுதியில் ஒரு சதுர அடிக்கு ரூ.4.15 வீட்டு வரியாக வசூலிக்கப்படுகிறது.
இத்தகைய சூழலில், வீடுகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால், அந்த வீடுகளை மறுமதிப்பீடு செய்து கூடுதல் வரி விதிக்கும் அதிகாரிகள், அந்த கூடுதல் வரியை 5 ஆண்டுகள் முன்தேதியிட்டு செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.
இதனால், ஆண்டு வரியாக ரூ. 2000 செலுத்த வேண்டிய வீட்டுக்கு ரூ.41,500 வரி செலுத்த வேண்டியுள்ளது. சென்னையின் மற்ற பகுதிகளில் வசூலிக்கப்படும் வரியை விட இது 20 மடங்குக்கும் அதிகம்.
இத்தகைய அதிக வரி விதிப்பால் மாநகராட்சிக்கு எந்த வகையிலும் கூடுதல் வருவாய் கிடைக்கவில்லை. மாறாக, தவறான நோக்கம் கொண்ட அதிகாரிகள், இடைத்தரகர்கள் ஆகியோர் தான் பயனடைகின்றனர்.
பொதுமக்களிடம் கையூட்டு வாங்கிக் குவிக்கும் அதிகாரிகள், கையூட்டு கொடுத்தவர்களுக்கு மட்டும் வீட்டு வரியை குறைத்து நிர்ணயிக்கின்றனர். அதிக வரி நிர்ணயிக்கப்பட்ட மக்கள் வரி செலுத்த மறுப்பதால் மாநகராட்சியின் வருமானம் குறைந்துள்ளது. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல் வரிக் குறைப்பு செய்ய மாநகராட்சி மறுப்பது நியாயமல்ல.
இவை ஒருபுறமிருக்க சென்னை மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் வீட்டு வரி உயர்த்தப்பட்டு, புதிய வரி மதிப்பிடப்பட்டு வருகிறது. அதன்படி, இப்போது இருப்பதை விட இன்னும் ஒரு மடங்கு கூடுதலாக வரி செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே மக்கள் வரிச்சுமையையும், விலை வாசியையும் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக உயர்த்தப்படும் வரி மக்களின் சுமைகளை அதிகரிக்கும். மக்களின் சுமைகளை உணராமல் வீட்டு வரியை உயர்த்துவது கொள்ளைக்கு சமமாகும்.
எனவே, திருவொற்றியூர் மண்டலத்தில் வீட்டுவரியை சென்னையின் மற்ற பகுதிகளில் வசூலிக்கப்படுவதற்கு இணையாக குறைக்க வேண்டும். அது மட்டுமின்றி, வீட்டு வரியை குறைத்து நிர்ணயிப்பதற்காக கையூட்டு வாங்கப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMK #Ramadoss #PropertyTax
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வரும் சொத்து வரியின் அடிப்படையில் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியோடு சேர்க்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே அதிகளவு சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் பழைய வார்டு பகுதிகளை விட புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் சொத்துவரி பல மடங்கு அதிகமாகும். இவற்றையெல்லாம் ஆய்வு செய்து சொத்துவரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அதிகமாக உள்ள பகுதிகளில் குறைந்த விகிதத்திலும், குறைவாக உள்ள இடங்களில் அதிகமாகவும் உயர்வு செய்யப்பட்டு இருக்கிறது. 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்துவரி உயர்ந்து இருக்கிறது.
சென்னையில் 12 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 18-ந்தேதி முதல் புதிய சொத்து வரி நடைமுறைப்படுத்தப்பட்டது. 2018-19 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் அரையாண்டு காலத்திற்கும் உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரியினை செலுத்த வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சொத்துவரி உயர்ந்து இருக்கிறது என்பதனை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். சொத்து அளவு, கட்டிடத்தின் பரப்பளவு போன்றவற்றை கணக்கிட்டு சொத்து வரி மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது.
சொத்தின் உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்து அதிகாரிகள் சொத்து வரியினை உயர்த்தி உள்ளனர்.
உயர்த்தப்பட்ட சொத்து வரி குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. ஆட்சேபனை இருக்குமாயின் அதனை தெரிவிக்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் 12 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் இன்று முதல் வீடு வீடாக வினியோகிக்கப்படுகிறது. சொத்துவரி எவ்வளவு உயர்த்தப்பட்டு இருக்கிறது என்ற தகவல் ஒவ்வொருவருக்கும் மாநகராட்சி மூலம் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 46,600 தெருக்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் இந்த நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
சொத்துவரி உயர்வு குறித்த ஆட்சேபனை இருக்குமாயின் நோட்டீஸ் பெற்ற 15 நாட்களுக்குள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி 3 மண்டல துணை கமிஷனர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் கூறியதாவது:-
குடியிருப்பு பகுதிகளுக்கு 50 சதவீதமும், வணிக கட்டிடங்களுக்கு 100 சதவீதம் வரை சொத்து வரி அரசின் உத்தரவுப்படி உயர்த்தப்பட்டு இருக்கிறது.
தெருக்களின் அடிப்படையில் சொத்து மதிப்பு மற்றும் சதுர அடி, நிலம் வழிகாட்டு மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சொத்து வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.
சொத்து உரிமையாளர்கள் பூர்த்தி செய்து கொடுத்த விவரங்களை வைத்து ஏற்கனவே உள்ள மதிப்பீட்டினை ஒப்பிடு செய்து புதிய சொத்து வரி முறைபடுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே வசூலிக்கப்பட்ட வரி, தற்போது உயர்த்தப்பட்டுள்ள புதிய வரி ஆகியவற்றை விளக்கி ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய வரி விவரங்களை வீடு வீடாக இன்று முதல் வழங்கும் பணி நடைபெறுகிறது. இதில் வினியோகிக்கப்படும் நோட்டீசில் ஏதாவது ஆட்சேபனை இருக்குமானால் மண்டல துணை ஆணையரிடம் முறையிடலாம்.
நோட்டீஸ் பெற்ற 15 நாட்களுக்குள் முறையிட வேண்டும். அதன் பின்னர் வரிவிதிப்பு முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என அந்த முறையீடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தவறுகள் இருக்குமாயின் சரி செய்யப்படும். முறையான வரி விதிக்கப்பட்டிருப்பின் அது குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #ChennaiCorporation
சென்னை:
தமிழ்நாட்டில் சொத்துவரி விதிப்பு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
அந்த அடிப்படையில் கடந்த 2008-ம் ஆண்டு அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சொத்துவரியில் திருத்தம் செய்யப்பட்டன. ஆனால் அப்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சொத்து வரியில் திருத்தம் செய்யப்பட வில்லை.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் சொத்துவரியை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய வரி விதிப்பு பட்டியலை தயாரித்த னர். கடந்த ஜூலை மாதம் அந்த வரிவிதிப்பு விவரம் வெளியிடப்பட்டது.
இதில் சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சென்னை மாநாகரட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்துவரியை மறு ஆய்வு செய்ய உத்தர விட்டனர்.
இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் உங்கள் வீட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு? அதில் எத்தனை சதுர அடிக்கு வீடு கட்டப்பட்டுள்ளது? எத்தனை அறைகள் உள்ளன? என்பன போன்ற விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன.
சுமார் 12 லட்சம் சொத்துக்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அவர்கள் சொத்துவரி தொடர்பான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு ஆகஸ்டு 31-ந்தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் ஆகஸ்டு இறுதி வரை கொஞ்சம் பேர் தான் வரித்தொடர்பான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து இருந்தனர். இதையடுத்து செப்டம்பர் மாதம் 16-ந்தேதி வரை வீட்டின் அளவு பற்றிய தகவல்களை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் பேரில் சுமார் 8 லட்சம் பேர் தங்களது வீட்டின் அளவு பற்றி தகவல்களை பூர்த்தி செய்து கொடுத்து இருந்தனர். மக்கள் அளித்துள்ள சுய தகவல் விண்ணப்பங்களின் அடிப்படையில் ஒவ்வொரு வீட்டிற்கும் புதிய வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.

அந்த புதிய வரி விதிப்பு பற்றிய தகவல்கள் வீட்டின் சொந்தக்காரர்களுக்கு ‘குறுஞ்செய்தி’ மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய வரியை உடனே கட்டும்படி பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாளை (புதன்கிழமை) முதல் புதிய வரி விதிப்பின் அடிப்படையில் சொத்து வரிகளை கட்ட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த பருவத்திற்கான சொத்து வரியை கட்டியவர்கள் கட்டிய தொகையை கழித்துவிட்டு மீதமுள்ள தொகையை செலுத்த வேண் டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் அனைவரும் புதிய வரி விதிப்பின்படி சொத்து வரியை கட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ரூ.300 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
சில இடங்களில் பாதிகட்டப்பட்ட நிலையில் கட்டிடங்கள் உள்ளன. அந்த கட்டிடங்கள் உள்ள பகுதிகளுக்கு சொத்து வரியில் 20 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
சொத்துவரி அதிகரிக்கப்பட்டு இருப்பதற்கு பெரும் பாலான குடியிருப்பு வாசிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சொத்து வரி கட்டுவதற்கு கால அவகாசம் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக சொத்துவரி ஆண்டுக்கு 2 தடவை வசூலிக்கப்படுகிறது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை முதல் அரையாண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரை 2-வது அரையாண்டும் கணக்கிடப்பட்டு சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி பகுதியில் இன்னமும் 4 லட்சம் வீட்டுக்காரர்கள் தங்களது வீட்டின் அளவு பற்றிய சுய தகவலை சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் ஒப்படைக்காமல் இருக்கிறார்கள். அவர்களது இல்லங்களுக்கு வருவாய் அதிகாரிகள் சென்று விண்ணப்பத்தை வழங்கி சொத்து பற்றிய தகவல்களை சேகரிக்க உள்ளனர்.
இந்த பணிகள் முடிந்த பிறகு சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வீட்டின் சொத்து வரி தொடர்பான தகவல்கள் சரியாக உள்ளதா? என்ற ஆய்வு பணியை நடத்த உள்ளனர்.#ChennaiCorporation #PropertyTax