search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panchayats"

    • ஊராட்சிகளில் மண்புழு உரம் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • இயற்கை உரம் உற்பத்திக்கு குடில் அமைத்து தயாரிப்பதற்கு தேவையான தொட்டிகள் அமைக்கப்பட்டன.

    குடிமங்கலம் :

    மத்திய அரசின் தூய்மை இந்தியா மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் மண்புழு உரம் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.முதற்கட்டமாக குடிமங்கலம் ஒன்றியத்தில் சில ஊராட்சிகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு இயற்கை உரம் உற்பத்திக்கு குடில் அமைத்து தயாரிப்பதற்கு தேவையான தொட்டிகள் அமைக்கப்பட்டன.கிராமங்க ளில், தூய்மை பணியாள ர்களால் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து மக்கும் கழிவுகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது.உற்பத்தியாகும் உரத்தை விற்பனை செய்து வருவாயை ஊராட்சி நிதியில் சேர்க்கவும் அரசு உத்தரவிட்டது.இத்தகைய மண்புழு உரம் தயாரிப்புக்கு ஊராட்சிகளில் 90 ஆயிரம் ரூபாய் செலவில் 8 தொட்டிகளுடன் இயற்கை உரக்குடில் அமைக்கப்பட்டது.உரம் தயாரிப்பு மற்றும் உரக்குடில் பராமரிப்புக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆட்களும் நியமிக்கப்பட்டனர்.

    சில மாதங்கள் மட்டுமே இத்திட்டம் அனைத்து ஊரா ட்சிகளிலும் செயல்பாட்டில் இருந்தது. அதன்பின் குப்பையை தரம் பிரிப்பதில் தொய்வு ஏற்பட்டது.தற்போது அனைத்து ஊராட்சிகளிலும் இயற்கை உரக்குடில் காட்சிப்பொருளாகவும் சில இடங்களில் பராமரிப்பி ல்லாமல் மேற்கூரை, சுவர்கள் இடிந்தும் வருகின்றன.ஊராட்சி ஒன்றிய நிர்வாக ங்களின் அலட்சியத்தால் இத்திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. திட்டத்தை செயல்படுத்தாமல் கழிவுகளை ஆங்காங்கே குவித்து வைத்து தீ வைத்து எரிக்கப்படுகிறது.திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து திருப்பூர் கலெக்டர் கிராமங்களில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிரத்யேக இணையதளம் http://onlineppa.tn.gov.in/ உருவாக்கப்பட்டுள்ளது.
    • யு.பி.ஐ. கட்டணம், பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலமாகவும் தொகையை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்துவதற்கு வசதியாக http://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக்கட்டணம், இதர வரியில்லா வருவாய் இனங்கள் ஆகியவற்றை செலுத்தலாம். இதில் ஆன்லைன் பேமெண்ட், டெபிட், கிரெடிட் கார்டு, ஏ.டி.எம்.கார்டுகள், யு.பி.ஐ. கட்டணம், பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலமாகவும் தொகையை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    ஊரக பகுதிகளில் பொதுமக்கள் மனைப்பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்த தேவையான அனு–ம–தி–களை எளி–தில் பெற ஒற்றை சாளர முறையில் இதற்கென பிரத்யேக இணையதளம் http://onlineppa.tn.gov.in/ உருவாக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் ஊராட்சியில் இணையதள வரி வசூல் செயல்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கோவிந்தாபுரம் ஊராட்சி தலைவர் விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் நாளை (திங்கட்கிழமை) தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    எனவே கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று கிராமசபை கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 11:00 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • கிராமசபை கூட்டத்தில் 12 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், மே தினத்தன்று, கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. தொழிலாளர் தினமான வரும் மே 1ம் தேதி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராசபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 265 கிராம ஊராட்சிகளில், காலை, 11:00 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.

    கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்த விவாதம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடைபெற்றுவரும் பணிகளின் முன்னேற்றம்.

    அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்குவது; அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு; எங்கள் கிராமம், எழில் மிகு கிராமம், ஜல் ஜீவன் என, கிராமசபை கூட்டத்தில், 12 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    கிராமசபை கூட்ட நிகழ்வுகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில், 'நம்ம கிராமசபை' என்கிற ஆன்ட்ராய்டு செயலி உருவாக்கப்பட்டு, கடந்த அக்., முதல் செயல்பாட்டில் உள்ளது. மக்களின் வருகைப்பதிவு உள்பட கிராமசபை கூட்ட நிகழ்வுகள் அனைத்தையும், இந்த செயலியில் பதிவு செய்யவேண்டும் என தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது

    • தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளுக்கும் இணையதள சேவை கிடைக்கும்.
    • 31-ந் தேதிக்குள் உட்கட்டமைப்பு பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர் :

    பாரத்நெட் திட்டத்தில் அதிவேக இணையதள வசதியுடன் ஊராட்சிகளில் இ-கிராம சேவை மையம் அமைக்கும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது.நகரங்களுக்கு இணையாக, கிராமங்களுக்கும் இணை யதள சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கு டன், பாரத் நெட் திட்டம் தொடங்கப்பட்டு ள்ளது. இத்திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளுக்கும் இணையதள சேவை கிடைக்கும். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்து றை அதிகாரிகள் கூறுகை யில், பாரத் நெட் திட்டத்தில் , இ-கிராமசேவை மையம் துவங்க இருப்பதால் 31-ந் தேதிக்குள் உட்கட்ட மைப்பு பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான பணி நிறைவடைந்த நிலையில் கேபிள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

    இ-கிராம சேவை மையத்தில் அதி வேக இணைய தள வசதி யுடன் ஊராட்சி மக்களுக்கு அனைத்து வகை சேவை களையும் வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது என்றனர். 

    • குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை பிரச்சி னைகள் குறித்து விவாதிக்க ப்பட்டது.
    • குடிநீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    பல்லடம் :

    உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்ப ட்டதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிட ப்பட்டு இருந்தது. அதன்படி பல்லடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை பிரச்சி னைகள் குறித்து விவாதிக்க ப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் புவனேஸ்வரி, அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல வடுகபாளையம்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் புனிதா சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர் லட்சுமணன், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதில் குடிநீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    இதேபோல செம்மிபா ளையம் ஊராட்சியில் ஷிலா புண்ணியமூர்த்தி தலைமையிலும், மாதப்பூர் ஊராட்சியில் அசோக்குமார் தலைமையிலும், கரடிவாவி ஊராட்சியில் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் தலைமை யிலும், கோடங்கிபாளையம் ஊராட்சியில் காவி.பழனிச்சாமி தலைமையிலும், மாணிக்காபுரம் ஊராட்சியில் நந்தினி சண்முகசுந்தரம் தலைமையி லும், மல்லேகவுண்ட ம்பாளை யத்தில் முத்துக்குமாரசுவாமி தலைமையிலும், பருவாய் ஊராட்சியில் ரவிச்சந்திரன் தலைமையிலும், புளியம்பட்டி ஊராட்சியில் உத்தமராஜ் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் , பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு ஊராட்சிகளும், புதிதாக கம்ப்யூட்டர் வாங்க ஊரக வளர்ச்சி முகமை அனுமதியளித்துள்ளது.
    • கம்ப்யூட்டர் பழுதானால், திரும்ப மாற்றிக் கொள்ளவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அவிநாசி:

    தமிழகத்தில், 12, 500க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி அலுவலக பணிகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் ஆன்லைன் வரி வசூல் திட்டமும் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.ஒவ்வொரு ஊராட்சிகளும், புதிதாக கம்ப்யூட்டர் வாங்க ஊரக வளர்ச்சி முகமை அனுமதியளித்துள்ளது.

    கம்ப்யூட்டர், பிரின்டர், யு.பி.எஸ்., உள்ளிட்ட உபகரணங்கள் சேர்த்து1.50 லட்சம் ரூபாய் வரையிலான நிதியை ஊராட்சி பொதுநிதி அல்லது மாநில நிதிக்குழு மானிய நிதியில் செலவிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின்இ-சந்தை (GeM) இணைய தளம் வாயிலாக, கம்ப்யூட்டர்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. செயலியை பதிவிறக்கம் செய்து, விரும்பும் நிறுவனத்தின் கம்ப்யூட்டரின் பெயரை குறிப்பிட்டால், இ-சந்தையில் இணைந்துள்ள வர்த்தகர்கள், தங்கள் விலையை குறிப்பிடுவர்.இதில், குறைந்த விலைப்புள்ளியை குறிப்பிட்டு ஊராட்சி தலைவர்கள் கம்ப்யூட்டரை கொள்முதல் செய்து கொள்ளலாம்.அந்த கம்ப்யூட்டர் பழுதானால், திரும்ப மாற்றிக் கொள்ளவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'இ- மார்க்கெட்டிங் மூலம் கம்ப்யூட்டர் கொள்முதல் செய்யப்படுவதன் மூலம், அதன் தரம், விலை உறுதி செய்யப்படுகிறது என்றனர்.

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பட்டியல் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தின் 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் கூட்டம் நடத்துவதற்கான செலவு தொகையை ரூ.1000த்தில் இருந்து ரூ.5000மாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம ஊராட்சியின் 1.4.2022 முதல் 31.7.2022 முடியவுள்ள காலாண்டின் வரவு செலவு விபரங்கள் கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்களின் பார்வைக்காக தகவல் பலகை வைக்கப்பட்டது. மேலும், கிராம சபையில் வரவு செலவுக் கணக்குகள் ஒப்புதல் பெறப்பட்டது.

    தமிழக அரசால் 15.8.2022 முதல் 2.10.2022 வரை தனிநபர் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையை மையப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு எழில் மிகு கிராமம்" என்ற சிறப்பு பிரச்சாரம் ஒருங்கிணைந்த முயற்சியுடன் பல்வேறு துறைகள் மற்றும் சமூக பங்கேற்புடன் மேற்கொள்ளுதல் குறித்து விவாதித்து செயல்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் உற்பத்தி தடை செய்தல், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் - 2 திட்டத்தின் கீழ் 2022-23 ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட பணிகளின் விவரம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், 2010-க்கு பின்னர் புதிய குடிசைகள் அமைத்துள்ளோர் விவரம் குக்கிராமம் வாரியாக கணக்கெடுத்தல், ஜல் ஜீவன் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பயனடையும் வகையும் அரசின் நடவடிக்கைகள் குறித்தும், பயனாளிகள் பட்டியல் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

    பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும், கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் துறை சார்ந்த திட்டங்களைப் பற்றி விளக்கினார்கள். மேலும், ஊத்துக்குளி வட்டாரம், சின்னேகவுண்டன்வலசு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வினீத் கலந்து கொண்டார். திருப்பூர் வட்டாரம், கணக்கம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மா வட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர்-திட்ட இயக்குநர் கலந்து கொண்டார். 

    • நகர்ப்புறத்தில் பெரும்பாலான உடல்கள் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகின்றன.
    • நடமாடும் எரிவாயு தகனமேடை வாகனத்தின் சாவிகளை ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.

    திருப்பூர்:

    இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானத்தை தேடி சென்ற நிலை மாறிவிட்டது. நகர்ப்புறத்தில் பெரும்பாலான உடல்கள் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கிராமப்புற மக்கள் பயன்படுத்த வசதியாக, நடமாடும் எரிவாயு தகனமேடை வாகனம், மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நமக்கு நாமே திட்டத்தில் தனியார் நிறுவனம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன், மங்கலம், சின்ன மருதூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும், 32.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடமாடும் எரிவாயு தகன மேடை வாகனம் பயன்பாட்டுக்கு வருகிறது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் நடமாடும் எரிவாயு தகனமேடை வாகனத்தின் சாவிகளை ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.

    மயிலாடுதுறையில் வளர்ச்சியடைந்த 10 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகராட்சியின் நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் சிறப்பு உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்தில் ராஜகுமார் எம்.எல்.ஏ.முன்னிலையில் நகர் மன்ற துணைத் தலைவர் எஸ்.எஸ். குமார் வரவேற்றார். அப்போது மயிலாடுதுறை போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், புதிய பஸ் நிலையம் அமைவதற்கும், நகர வளர்ச்சியை பெருக்கவும், 10 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

    மயிலாடுதுறை நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் மயிலாடுதுறை எல்லையையொட்டி மணக்குடி கிராமத்தில் பூம்புகார்-கல்லணை நெடுஞ்சாலையில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ள இடத்தின் அருகில் 13.77 ஏக்கர் பரப்புடைய தருமபுரம் ஆதீனம் பராமரிப்பில் உள்ள சக்திபுரீஸ்வரர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க உரிய ஆவணங்களை அரசுக்கு அனுப்பப்பட்டு தருமபுர ஆதீனம் முன் நுழைவு அனுமதி பெறப்ப ட்டுள்ளது.

    இடத்திற்கு கிரைய தொகை நிர்ணயம் செய்ய அரசிடம் தற்போது கோப்பு பரிசீலனையில் உள்ளது. மேலும் மயிலாடுதுறை நகராட்சியினை யொட்டி யுள்ள மன்னம்பந்தல் கிராமத்தில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்கப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 

    புதிய பஸ் நிலையத்தையும் புதிய கலெக்டர் அலுவலகத்தையும் ஒட்டி புறவழிச் சாலைகள் அமைய உள்ளதால் மயிலாடுதுறை தற்போது உள்ள எல்லையினையொட்டி அமைந்துள்ளமணக்குடி, மன்னம்ப ந்தல், வள்ளலா கரம், ரூரல், பட்டமங்கலம், நல்லத்துக்குடி, சித்தர்காடு, மாப்படுகை, திருவழுந்தூர், நீடூர், ஆகிய ஊராட்சிகளை மயிலாடுதுறை நகராட்சி யுடன் இணைக்க, வளர்ச்சி மற்றும் வருவாய் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு நகராட்சியின் தரத்தை உயர்த்திட நகரமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதோடு ஆலோசனை வழங்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே நகர பகுதியின் எல்லையினை ஒட்டிய மேற்கண்ட ஊராட்சிகளின் திருஇந்தளூர், நீடூர், மாப்படுகை, சித்தர்காடு, பட்டமங்கலம், நல்லத்து க்குடி, ரூரல் ஆகியவை வளர்ச்சியடைந்த கிராம ங்கள் என்பதால் நகராட்சியுடன் இணை த்தால் நகராட்சியின் தரம் உயர்வதுடன்வருவாய் பெருகும்.

    மேற்கண்ட வளர்ச்சியடைந்த 7 ஊரக பகுதிகளுடன் மணக்குடி மன்னம்பந்தல் வள்ள லாகரம் ஆகிய 3 ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட 10 ஊராட்சி பகுதியினை நகராட்சியுடன் இணைக்க உரிய அரசாணை பிறப்பிக்க கோரி அரசிற்கு அனுப்பப்பட உள்ளது.

    இவ்வாறு நகராட்சி சிறப்பு மன்ற கூட்டத்தில் ராஜகுமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அரசு அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளன.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் அதன் நிர்வாக பொறுப்புகளை தனி அதிகாரிகள் நிர்வகித்து வருகின்றனர். இதில் குறிப்பாக கிராம ஊராட்சிகளின் ஒட்டுமொத்த நிதி அதிகாரமும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 ஊராட்சிகளில் அரசு வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தெருவிளக்குகள் மாற்றம், மின் மோட்டார் சீரமைப்பு, ஆழ்துளை கிணறு பராமரிப்பு, கால்வாய் சீரமைப்பு போன்ற பணிகளை செய்ததாக போலி ரசீதுகள் தயாரித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்து உள்ளன.

    இதுகுறித்து ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அரவிந்தனிடம் கேட்டபோது, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 69 ஊராட்சிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்து உள்ளன. இதுகுறித்து இன்று (திங்கட்கிழமை) முதல் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இந்த ஊராட்சிகளின் கணக்கில் இருந்து நிதி பரிமாற்றம் செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகியிடம் கேட்டபோது, ‘திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் நிதி அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்தது. வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த கருணாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். ஒரு அலுவலர் ஓய்வு பெற்றுவிட்டால் மற்றொரு அலுவலர் பொறுப்பேற்கும் வரை நிதி பரிமாற்றம் செய்வது நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி, தற்போது நிதி பரிமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் நிதி ஆதாரம் குறைவு தான். அதனால் அங்கு மோசடி ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார்.
    ×