என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Militants Attack"
பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
இன்று காலை அம்ரேலி நகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசினார். அவர் கூறியதாவது:-
குஜராத் மாநிலம்தான் எனது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது. இங்கு நான் கற்றுக் கொண்டது ஏராளம். அந்த படிப்பினை காரணமாகத் தான் பிரதமர் பதவியில் என்னால் திறம்பட செயல்பட முடிகிறது.
2017-ம் ஆண்டு சீனாவுடன் டோக்லாம் எல்லைப் பகுதியில் திடீர் பிரச்சனை ஏற்பட்டது. குஜராத்தில் நான் கற்றுக் கொண்ட பாடம்தான் அந்த பிரச்சனையை தீர்க்க உதவியாக இருந்தது.
இன்று இங்கு நீங்கள் திரண்டிருப்பது தேர்தல் பிரசார பேரணிக்காக அல்ல. நான் உங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
குஜராத்தில் சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டம் 40 ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி முடிக்கப்பட்டு இருந்தால் குஜராத் இன்று வளமான மாநிலமாக இப்போது இருப்பதை விட மிக சிறப்பாக இருந்து இருக்கும்.
குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு நான் பிரமாண்ட சிலை அமைத்ததை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்ததன் மூலம் நான் நேருவுக்கு எந்த அவமரியாதையும் செய்யவில்லை. இதை அரசியல் ஆக்கக் கூடாது.
காஷ்மீர் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் பயங்கரவாதம் இருந்தது. அந்த மாநிலம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நாங்கள் வந்தபிறகு பயங்கரவாதத்தை கடுமையாக ஒடுக்கி இருக்கிறோம். அந்த மாநிலம் முழுவதும் இருந்த பயங்கரவாதத்தை தற்போது 2 மாவட்டங்களுக்குள் அடக்கி இருக்கிறோம்.
கடந்த 5 ஆண்டுகளில் காஷ்மீரில் எந்த பெரிய குண்டு வெடிப்பும் நடக்கவில்லை என்பதை பொதுமக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
காஷ்மீரில் புல்வாமா பகுதியில் தாக்குதல் நடத்தியதற்கு நாம் சரியான பதிலடி கொடுத்து இருக்கிறோம். அப்படி பதிலடி கொடுத்த பிறகு பாகிஸ்தான் பணிந்ததை நீங்களே பார்த்தீர்கள்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளிப்படையாகவே போனில் பேசி சமரசத்திற்கு தயாராக இருந்தேன் என்று கூறினார். இதற்கு முன்பு பாகிஸ்தான் தரப்பில் இருந்து இப்படி பேசப்பட்டது இல்லை. அத்தகைய வலுவான நிலையை நாம் உருவாக்கி இருக்கிறோம்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சி, கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில்தான் மிக மோசமான தோல்வி தழுவியது. வரலாறு காணாத அளவுக்கு அந்த கட்சிக்கு வெற்றி எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்தது.
என்றாலும் அவர்களுக்கு இன்னும் ஆசை விடவில்லை. இந்த தடவை மிக குறைவான இடங்களில் போட்டி போடும் காங்கிரசார் ஆளும் கட்சியாக மாற கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு மோடி பேசினார். #PMModi #BJP
காசியாபாத்:
மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 50-வது ஆண்டு தொடக்க விழா உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது புல்வாமா மற்றும் உரியில் நடந்த தாக்குதல்களை குறிப்பிட்டு பேசிய அவர் பயங்கரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரும் பகை உணர்வு கொண்ட அண்டை நாட்டை (பாகிஸ்தானை) எதிர் கொள்வதில் மத்திய தொழில் பாதுகாப்பு படைகள் போன்றவைகளின் பங்கு மிக முக்கியமானது. அண்டை நாடு பெரும் பகை உணர்வுடன் இருந்தாலும், அவர்களால் நம்முடன் போரிடும் திறன் இல்லை.
எனவே, எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சதி செயலில் ஈடுபடுகின்றனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போன்ற நிறுவனங்கள் முக்கிய சவால்களை சந்திக்கின்றன.
புல்வாமா மற்றும் உரியில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தினர். இதுபோதும் என கருதுகிறேன். காலம் உள்ளவரை எங்களால் இதை பொறுத்துக் கொள்ள முடியாது. நாடு எப்போதும் கஷ்டங்களை தாங்கிக் கொண்டிருக்காது என பயங்கரவாதிகளை கடுமையாக எச்சரிக்கிறேன்.
வி.ஐ.பி. கலாசாரம் சில நேரங்களில் நாட்டின் பாதுகாப்பு முறையில் தடையை ஏற்படுத்துகின்றன. எனவே அரசு கடும் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஒரு தனிப்பட்ட நபரை பாதுகாப்பது எளிது, ஆனால் எந்த ஒரு நிறுவனத்தையும் பாதுகாப்பது மிகவும் கடினம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
காஷ்மீர் மாநிலம், புலவாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 14-ந் தேதி நடத்திய காட்டுமிராண்டித்தனமான கார்குண்டு தாக்குதல், இந்தியாவை உலுக்கியது.
இந்த தாக்குதலில், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிக்கொண்டிருந்த தமிழகத்தின் சுப்பிரமணியன், சிவசந்திரன் உள்பட மொத்தம் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
அந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில், “புலவாமா தாக்குதலை நடத்தியது நாங்கள்தான்” என்று பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. உடனே பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி தர வேண்டும் என்ற ஆவேசம், நாட்டு மக்கள் அத்தனைபேர் மத்தியிலும் எழுந்தது.
இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமை, தனது இயக்க பயங்கரவாதிகளுடன் கடந்த 16-ந் தேதி மற்றும் 17-ந் தேதி தொலைபேசியில் கலந்துரையாடியதை உளவுத்துறையினர் இடைமறித்து பதிவு செய்தனர்.
அதில், அவர்கள் புலவாமா தாக்குதலை விட பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் வகையில் இந்திய பாதுகாப்பு படையினர் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருப்பது அம்பலத்துக்கு வந்தது. இது இந்தியாவுக்கு அதிர்ச்சியை அளித்தது.
பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என இனியும் பொறுத்துப் பயனில்லை என்ற முடிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார்.
அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அமைந்துள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் மீது குண்டு போட்டு ஒழித்துக்கட்டி பழி தீர்க்க இந்திய விமானப்படைக்கு அவர் அதிரடியாக உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, 100 சதவீதம் துல்லியமான தாக்குதலுக்கு பெயர் பெற்ற இந்திய விமானப்படையின் ‘மிராஜ்-2000’ ரக போர் விமானங்கள் 12, சக்திவாய்ந்ததும், ஆயிரம் பவுண்ட் எடையுடையதுமான லேசர் வழிகாட்டும் குண்டுகளை சுமந்து கொண்டு பாகிஸ்தானுக்கு பறந்தன.
அவை அங்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம், தளம் அமைந்துள்ள பாலகோட், முசாபராபாத், சகோதி ஆகிய இடங்களில் மிகத்துல்லியமாக குண்டுமழை பொழிந்தன. இதில், பயங்கரவாத முகாம்களும், தளமும் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலம் ஆகின.
அதைத் தொடர்ந்து வெற்றிகரமாக இந்திய போர் விமானங்கள், புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தன.
இந்த துல்லிய தாக்குதல் நடவடிக்கை, இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஏகோபித்த வரவேற்பை யும், நாட்டு மக்களின் பாராட்டுக்களையும் ஒருசேரப் பெற்றது. பரவலாக பல இடங்களில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறினர். பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்தியாவின் அதிரடி தாக்குதலுக்கு மக்கள் பாராட்டு மழை பொழிந்து பதிவுகளை வெளியிட்டனர்.
புலவாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்நாடக மாநிலம், மண்டியாவை சேர்ந்த வீரர் குருவின் மனைவி கலாவதி நிருபர்களிடம் பேசினார்.
அவர், “புலவாமா தாக்குதலில் பலியானவர்களின் ஆன்மா இப்போது அமைதி அடையும். இந்திய விமான படையினருக்கு நான் வீர வணக்கம் செலுத்துகிறேன். இந்த நடவடிக்கை எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது” என ஆனந்த கண்ணீர் வழிய குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 14-ந் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அதில் வீரமிக்க 40 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தானில் இந்த பயங்கரவாத அமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பஹவல்பூரை தலைமையிடமாக கொண்டு, இந்த அமைப்பினை மசூத் அசார் தலைமை தாங்கி நடத்தி வந்தார்.
ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்டுள்ள இந்த அமைப்புதான், 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி நடந்த இந்திய நாடாளுமன்ற தாக்குதல், 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நடந்த பதன்கோட் விமானப்படை தள தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களுக்கு பொறுப்பு ஆகும்.
பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இயங்கி வருகிற அந்த இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும், பாகிஸ்தான் அதை மறுத்து வந்துள்ளது. ஆனால் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிற திறன் வாய்ந்த பயிற்சி முகாம்கள் அங்கு செயல்பட்டு வந்தன என்றால், அது பாகிஸ்தான் அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்காது.
பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதையும், பாகிஸ்தானுக்குள் ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு இருப்பதையும் தடுத்து நிறுத்தும் வகையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தோம். ஆனால் பாகிஸ்தான் தனது மண்ணில் பயங்கரவாத கட்டமைப்புகளை அகற்றுவதற்கு உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர், நாட்டின் பல்வேறு இடங் களில் மற்றொரு தற்கொலைப்படை தாக்குதலை நடத்த முயற்சிப்பதாகவும், அதற்காக பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதாகவும் நம்பத்தகுந்த உளவுத்தகவல் கிடைத்தது.
தவிர்க்க முடியாத ஆபத்தை சந்திக்கும் நிலை உருவானதால், அதைத் தடுக்கிற வகையில் அதிரடியாக தாக்குதல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
இன்று (நேற்று) அதிகாலை உளவு தகவல்கள் அடிப்படையில், பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் மிகப்பெரிய பயிற்சி முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள், குழுக்கள் கொல்லப்பட்டனர்.
பாலகோட் பயிற்சி முகாம், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் மைத்துனர் மவுலானா யூசுப் அசார் தலைமையில் இயங்கி வந்தது ஆகும்.
பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்து போரிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு இந்திய அரசு உறுதி கொண்டுள்ளது. எனவேதான் ராணுவ நடவடிக்கை இல்லாமல், ஜெய்ஷ் இ முகமது அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் உயிரிழப்பை தடுக்கிற வகையில், இந்த தாக்குதல் இலக்குகள் முடிவு செய்யப்பட்டன.
2004-ம் ஆண்டு, ஜனவரி மாதம் பாகிஸ்தான் தனது மண்ணை அல்லது கட்டுப்பாட்டில்வரும் பிராந்தியத்தை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று பகிரங்கமாக உறுதி அளித்தது. தனது வாக்கினை பாகிஸ்தான் காத்து நடக்கும், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு மற்றும் பிற அமைப்புகளின் பயிற்சி முகாம் களை அகற்றவும், பயங்கரவாதிகளை பொறுப்பேற்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்