search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MK Stalin"

    • சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சித்து வருகிறது கேரள அரசு.
    • இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்க அம்மாநில அரசு முயற்சி செய்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக மவுனம் சாதித்து, தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது.

    இந்நிலையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இனியாவது தி.மு.க. அரசின் முதல்வர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
    • நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் நீண்டகாலம் வாழ விழைகிறேன்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் நீண்டகாலம் நிறைவான வாழ்க்கை வாழ விழைகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒரு போதும் பலிக்காது.
    • பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரெயில்களில் கூட்டமில்லை என புதுப்புரளி கிளப்பி இருக்கிறார் பிரதமர்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய நேர்காணலில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். இதனால் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்து விடுகிறது. பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. சுற்றுப்புற சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றார்.

    இதற்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை-பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும்-அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள்.

    பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பட்டியலினப் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்பதை நீக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களும் சமூகநீதியின் மேல் ஆழ்ந்த பற்றுக்கொண்ட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றோம். இந்தக் குரல் காங்கிரஸ் கட்சியாலும் இந்தியா கூட்டணிக் கட்சிகளாலும் அகில இந்திய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

    உத்தரபிரதேச மக்களுக்கும் மிகவும் பயனளிக்கக் கூடியது. இதுகுறித்து, பிரதமர் மோடி என்றைக்காவது வாய் திறந்திருக்கிறாரா? அல்லது ஏதாவது கேரண்டி கொடுத்திருக்கிறாரா? இல்லையே! ஆனால், வெறுப்புப் பரப்புரையை மட்டும் முந்திக்கொண்டு செய்கிறார்.

    மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். உத்தர பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாகத் தன்னுடைய கற்பனைக் கதைகளை-பொய் மூட்டைகளைக் கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளார்.

    உண்மையில், வெறுப்புப் பரப்புரைகளை மேற்கொள்ளவும் சமூகத்தில் பிளவுகளை உண்டாக்கவும் செயலாற்றும் மணீஷ் கஷ்யப் போன்ற யூடியூபர்களைக் கொண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று உருவாக்கப்பட்ட போலிச் செய்திகளை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் பா.ஜ.க.தான்.

    பயனற்றுப்போன வெறுப்புப் பரப்புரைகளால் விரக்தியடைந்துள்ள பிரதமர் மோடி, சொல்லிக் கொள்ள பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்து, அவர் எப்போதும் ஏழை மக்களுக்கு எதிரானவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

    கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்துவரும் விடியல் பயணத் திட்டத்தைப் பகிரங்கமாக எதிர்க்கத் துணிந்திருக்கிறார். ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம் பயணச் சுதந்திரத்தைத் தந்ததோடு, பெண்களுக்குப் பலவகைகளிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரெயில்களில் கூட்டமில்லை எனப் புதுப்புரளி கிளப்பி இருக்கிறார்.

    பிரதமர் பேசுவதைக் கவனித்தால் "உண்மை கிலோ என்ன விலை?" என்று கேட்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், 2019-ல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-ல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை.

    சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக் கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார். பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது.

    பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. உள்கட்சி விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.
    • அண்ணா அறிவாலயத்தின் தரைதளத்தில் அறைகள் இடிக்கப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதுபற்றியும் கேட்டறிந்தார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் வரவேற்றனர்.

    அறிவாலயத்தில் சுமார் 1மணி நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தார். கழக பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலுவுடன் வடமாநில தேர்தல் நிலவரம் குறித்து விவாதித்தார்.

    இந்தியா கூட்டணிக்கு எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு 'சீட்' கிடைக்கும். வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது பற்றியும் ஆலோசித்தார். சுமார் 1 மணி நேரம் அரசியல் நிலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

    தி.மு.க. உள்கட்சி விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. அண்ணா அறிவாலயத்தின் தரைதளத்தில் அறைகள் இடிக்கப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதுபற்றியும் கேட்டறிந்தார்.

    அறிவாலயத்தில் உள்ள அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் அறை, முரசொலி மாறன் வளாகம் உள்ளிட்ட பல அறைகள் இடிக்கப்பட்டு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும் கேட்டறிந்தார்.

    • பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படுகின்றன.
    • 65-வயதைத் தாண்டியவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பொதுவாக, அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, மருத்துவ தேர்வாணையத்தின் மூலமாகவோ, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ அல்லது பத்திரிகை விளம்பரத்தின் மூலமாகவோ நிரப்பப்படும்.

    இந்த முறையைக் கடைபிடிப்பதன்மூலம் அரசுப் பணிகளில் இருப்போருக்கு பதவி உயர்வு ஏற்படுவதோடு, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலை தி.மு.க. ஆட்சியில் நிலவுகிறது.

    தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், சார்புச் செயலாளர் நிலை முதல் செயலாளர் நிலைவரை ஓய்வு பெற்றவர்கள் அதே பணியில் அமர்த்தப்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், 65-வயதைத் தாண்டியவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர, அனைத்துத் துறைகளிலும் கடைநிலை ஊழியர் முதல் உதவியாளர் பதவி வரையிலான பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

    பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, அங்குள்ளவர்களுக்கு பதவி உயர்வு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் தி.மு.க. அரசால் பறிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சமூகநீதி தாரை வார்க்கப்பட்டு உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஓய்வு பெற்றவர்களை பணியிலிருந்து உடனடியாக நீக்கிவிட்டு அந்த இடங்களை பதவி உயர்வு மூலம் பணியில் உள்ளவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 9 மாவட்டங்களுக்கும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்களை நடத்தினார்.
    • தி.மு.க. ஆட்சியிலேயே 27 மாவட்டங்களுக்கும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்தி விடலாமா? என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும்.

    இந்த தேர்தல்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன.


    கடந்த 2019-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டது.

    புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வார்டு மறுசீமைப்பு பணிகள் முடியாத காரணத்தால் மேற்குறிப்பிட்ட 9 மாவட்டங்களுக்கும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்களை நடத்தினார்.

    சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 2020 ஜனவரி மாதம் பதவி ஏற்றனர்.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2021 அக்டோபர் மாதம் பதவி ஏற்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

    இந்த தேர்தல்கள் 27 மாவட்டங்களுக்கு மற்றும் 9 மாவட்டங்களுக்கு என தனித்தனியாக நடந்ததால் இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் 21 மாதம் உள்ளது.

    இதனால் இந்த வித்தியாசத்தை மாற்றி சீராக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமானால் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் டிசம்பரில் முடிந்ததும் தனி அதிகாரியை நியமித்து உள்ளாட்சி அமைப்பு செயல்பாட்டை நீட்டிக்க வேண்டும். இதற்கு சட்டசபையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட வேண்டும்.


    இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு அதிகாரிகள் ஏற்கனவே கொண்டு சென்றிருந்தனர். இதனை தொடர்ந்து மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்துள்ளார். அப்போது வெவ்வேறு நிலைப்பாட்டை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதாவது 2019 டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களுக்கு 2024 டிசம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் 2021 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்த உள்ளாட்சிகளுக்கு 2026 செப்டம்பரில் தேர்தல் நடத்த வேண்டும்.

    2026 செப்டம்பர் என்பது சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு வருவதாகும். அந்த கால கட்டத்தில் சட்டமன்ற தேர்தல் தி.மு.க.வுக்கு சாதகமாகவும் அமையலாம். அல்லது பாதகமாகவும் இருக்கலாம். அந்த சூழல்களை அப்போது தான் கணிக்க முடியும்.

    எனவே தி.மு.க. ஆட்சியிலேயே 27 மாவட்டங்களுக்கும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்தி விடலாமா? என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்து 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் சூழல் அமைந்து விட்டால் இந்த ஆண்டு டிசம்பர் மாதமே 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த அதிக வாய்ப்பு உள்ளது.

    அவ்வாறு உள்ளாட்சி தேர்தலை நடத்த முற்படும் போது 2026-ல் பதவி காலம் முடியும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு பதவிகளை கலைத்து விட்டு இந்த டிசம்பர் தேர்தலோடு சேர்த்து நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை பொறுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி முடிவு எடுப்பார் என தெரிகிறது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீனியர் அமைச்சர்களிடம் அடுத்து உள்ளாட்சி தேர்தலையும் விரைவில் எதிர்கொள்ள வேண்டும். அதிலும் முழுமையாக வெற்றி பெற்று மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    எனவே அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதா கொண்டு வர அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அப்போது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது தெரிய வரும். அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதையும் சட்டசபையில் அமைச்சர்களும் தெளிவுபடுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • போதைப்பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்.
    • போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அண்டை மாநிலங்களின் வழியாக போதைப்பொருள் தமிழகத்துக்கு எளிதில் கொண்டு வந்து விற்பனை செய்பவர்களை கண்டு

    பிடித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் போலீஸ் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருளை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ஆய்வு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் சென்று போலீஸ் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்தக் கூட்டத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அருண், போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ், ஆவடி கமிஷனர் சங்கர் மற்றும் போதை தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் போதைப்பொருளை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரமும் தெரிவிக்ககப்பட்டது.

    விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் என அண்டை மாநில எல்லைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, போதைப்பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட இன்னும் அதிகமாக கண்காணித்து போதைப்பொருள் கடத்தி வருபவர்களை கைது செய்ய வேண்டும்.

    துறைவாரியாக செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் வலியுறுத்தினார்.

    • போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
    • சில தினங்களுக்கு முன் தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதாக பல்வேறு கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    சில தினங்களுக்கு முன் தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாக மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
    • தந்தையை இழந்து வாடும் தனி செயலாளர் தினேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (33), இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனி செயலாளராக உள்ளார். தினேஷ்குமாரின் தந்தை டி.வி. ரவி (60), தாய் சுமதி ஆகியோர் மட்டும் வெண்ணந்தூரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

    இதற்கிடையே உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, பொன்முடி, சுப்பிரமணியம், எ.வ.வேலு, மூர்த்தி, மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., மற்றும் சபரீசன், வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி மின் மயானத்தில் ரவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே டி.வி.ரவி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும் ரவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் 10.45 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் இங்கிருந்து காரில் மு.க.ஸ்டாலின் வெண்ணந்தூர் சென்றார். அங்கு தந்தையை இழந்து வாடும் தனி செயலாளர் தினேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் 12.30 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதையொட்டி அவர் செல்லும் பகுதிகளில் சேலம், நாமக்கல் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நாகை தொகுதி எம்.பி.யான செல்வராஜ் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
    • இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யான செல்வராஜ் இன்று அதிகாலை 2 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில மாதமாக நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

    நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினருமான செல்வராஜ் மறைவெய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

    1975-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த செல்வராஜ் சுமார் அரை நூற்றாண்டு காலம் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தவர் ஆவார். செல்வராஜ் 4 முறை நாகை பாராளுமன்ற தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

    டெல்டா மாவட்டங்களுக்கு ரெயில்வே திட்டங்கள் வேண்டியும், அப்பகுதி வேளாண் மக்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை செல்வராஜ் முன்னெடுத்துள்ளார்.

    என் மீது கொள்கைரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், இருவரும் டெல்டாகாரர்கள் என்ற வகையிலும் மிகுந்த பாசமும் நன்மதிப்பும் கொண்டவர் செல்வராஜ். கடந்த ஆகஸ்டு மாதம்தான் செல்வராசின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றியிருந்தேன்.

    கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், டெல்டா மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • கொரோனா பெருந்தொற்றின்போது செவிலியர்கள் ஆற்றிய தன்னலமற்ற தொண்டை நாம் என்றும் மறக்கவியலாது.
    • ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் 14 ஆயிரம் ரூபாயிலிருந்து 19 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    செவிலியர்களின் முன்னோடியான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12-ந்தேதி ஆண்டுதோறும் உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கிரீமியப் போரின்போது காயமடைந்த வீரர்களைப் பராமரிப்பதில் நைட்டிங்கேல் அம்மையாரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், துணிவும் இன்றைய செவிலியர் சேவைக்கு அடித்தளமிட்டது. அதை நினைவுகூரும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

    மருத்துவத்துறையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்வதில் நமது செவிலியர்களின் பங்கும் சேவையும் அளப்பரியது. கொரோனா பெருந்தொற்றின் போது அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற தொண்டை நாம் என்றும் மறக்கவியலாது. அத்தகைய செவிலியர்களின் தொண்டினைப் போற்றும் வகையில், நமது அரசு பொறுப்பேற்ற பின் அவர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

    1,412 ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் 14 ஆயிரம் ரூபாயிலிருந்து 19 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,912 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாகப் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். மக்களைத் தேடி மருத்துவம் எனும் மகத்தான திட்டத்தின் மூலம் 2,650 பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள் ஊக்கத் தொகையாக மாதம் ரூ.5,100 நிலையான ஊதியம் பெறுகின்றனர்.

    வெளிப்படையான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் மூலம் 9,535 செவிலியர்கள் அவரவர் விரும்பிய இடங்களுக்கே பணிமாறுதல்கள் பெற்றுள்ளனர். செவிலியர்கள் பதவி உயர்வு பெறும் பொருட்டு செவிலியர் படிப்புகளின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பச்சிளங்குழந்தை பராமரிப்பு மற்றும் அதிதீவிர சிகிச்சை ஆகிய பிரிவுகளில் 'போஸ்ட் பேசிக் டிப்ளமோ' செவிலியர் பயிற்சிப் பிரிவுகள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்கள் நலனில் செவிலியர்களின் பெரும்பங்கினைப் பாராட்டி அவர்களின் தொண்டு மேன்மேலும் வளர, உலக செவிலியர் நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
    • அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை நீதியை அடையாளப்படுத்துவது மட்டுமின்றி நமது இந்திய கூட்டணியை பலப்படுத்துகிறது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமின் வழங்கியது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

    இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை நீதியை அடையாளப்படுத்துவது மட்டுமின்றி நமது இந்திய கூட்டணியை பலப்படுத்துகிறது. இது தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான நமது வேகத்தை வலுப்படுத்துகிறது.

    இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    ×