search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Durai Murugan"

    • தற்போது காவிரி அணைகளில் 60 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது
    • சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தியா முழுமைக்கும் பொதுவானது.

    சென்னை:

    கர்நாடகத்தில் இந்த முறை இயல்பான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனால் இதுவரை அணைகளில் 28 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு பற்றாக்குறையாக உள்ளது. இதுகுறித்து காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளோம். அதனால் இந்த மாத இறுதி வரை எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என்று கூறினோம். ஆனாலும் அந்த குழு, தினமும் ஒரு டிஎம்சி நீர் தமிழகத்திற்கு திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

    தற்போது காவிரி அணைகளில் 60 டி எம் சி நீர் இருப்பு உள்ளது. இது எங்களுடைய விவசாய பணிகளுக்கு தேவைப்படுகிறது. அதனால் இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது. அதே நேரத்தில் கடந்த 3 நாட்களாக கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த உத்தரவை எதிா்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது குறித்து ஆலோசிக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது என்று தீர்மானித்துள்ளோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறி உள்ளார்.

    கர்நாடக அரசின் இந்த முடிவு தமிழக விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் காவிரிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 'தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-

    காவிரியில் தினமும் ஒரு டிஎம்சி நீர் இந்த மாதம் (ஜூலை) இறுதி வரை வழங்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

    இந்த ஒழுங்காற்று குழு என்பது தமிழ்நாடு குழு அல்ல. தமிழகம், கர்நாடகம் என 2 மாநிலத்திற்கும் பொதுவான குழு. இது சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட குழு.

    இந்த குழு கர்நாடக அணைகளில் உள்ள மொத்த நீர் இருப்பை கணக்கெடுத்து கர்நாடகத்தின் தேவைக்கு போக தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு டிஎம்சி வீதம் தண்ணீர் வழங்க உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கர்நாடக அரசு சொல்வது சிறுபிள்ளைகள் விளையாடுகிறபோது அழுகுணி ஆட்டம் ஆடுவதுபோல் இருக்கிறது. இதே ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டுக்கு கூட பாதகமாக பலமுறை கருத்து சொல்லி இருக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டால் உருவாக்கப்பட்ட ஒழுங்காற்று குழுவின் உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சொல்வது சுப்ரீம் கோர்ட்டின் ஆணையை எதிர்த்து சொல்வது போன்றதாகும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு சொல்வது அரசியல் சட்டத்தை மீறும் செயலாகும். சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தியா முழுமைக்கும் பொதுவானது.

    தமிழ்நாட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டு செல்வதற்கு வழி தெரியும். இந்த விவகாரத்தில் பிரச்சனை எழாமல் இருக்க ஒழுங்காற்று குழுவின் உத்தரவை ஏற்று நடைமுறைப்படுத்துவதுதான் அண்டை மாநிலங்களுக்கு இடையே நட்புறவை பலப்படுத்துவதாக இருக்கும். இது தெரியாதவரல்ல கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா. அதுபோலவே நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாருக்கும் இது நன்றாக தெரியும்.

    இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

    • பா.ஜ.க. அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளது. அந்த சட்டத்தின் வார்த்தை வாயில் வராது.
    • இந்தியை நுழைக்க வேண்டும் என்பதற்காக இது போன்று பா.ஜ.க. செய்துள்ளது.

    சென்னை:

    மத்திய அரசு புதிய 3 குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    அரசியலமைப்புக்கு எதிரான, ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. சட்டத் துறை சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இதற்காக பந்தல் போடப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வக்கீல்கள் கலந்து கொள்ளும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. தி.மு.க. சட்டத்துறை நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிர மணியன், தயாநிதி மாறன் எம்.பி., சட்டத்துறை தலைவர் இரா.விடுதலை, சட்டத்துறை இணை செய லாளர் இ.பரந்தாமன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டத்துறை இணை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ. வுமான கே.எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்றார்.

    இந்த போராட்டத்தில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், மூத்த பத்திரிகையாளர்கள் இந்து என்.ராம், ஏ.எஸ்.பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேயக் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி., தி.மு.க. சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் வழக்கறிஞர் இரா.கிரிராஜன் எம்.பி., மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரதப் போராட்டத்தை பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க. அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளது. அந்த சட்டத்தின் வார்த்தை வாயில் வராது. இதற்கு தான் ஆதியில் இருந்து இந்தியை நாம் எதிர்த்தோம். அதிகாரத்தில் இருக்கும் யாரும் தங்களை கேள்வி கேட்கக் கூடாது என பா.ஜ.க. நினைக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு இந்நேரம் இந்த சட்ட திருத்தங்களை குப்பை தொட்டியில் வீசி இருக்க வேண்டும்.

    சர்வாதிகாரத்தின் தொனியை திணிப்பதுதான் இந்த 3 சட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த சட்டங்களின் பெயரை நீதிமன்றங்களில் உச்சரிக்க வேண்டும்.

    இந்தியை நுழைக்க வேண்டும் என்பதற்காக இது போன்று பா.ஜ.க. செய்துள்ளது. இந்த சட்ட திருத்தங்களை எதிர்த்து நியாயமான கருத்து கூறியிருக்க வேண்டியவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. ஆரம்பத்திலேயே ஒன்றிய அரசின் போக்கை கிள்ளி எறிய வேண்டும். சட்டக்குழு இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உண்ணாவிரதத்தில்முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

    மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதில் 90 முதல் 95 சதவீதம் வரை பழைய சட்ட திருத்தத்தை தான் கொண்டு வந்துள்ளார்கள். ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, காப்பி அடித்து உள்ளார்கள். இதை சொன்னால் மத்திய அரசு மறுக்கிறது. விவாத்திற்கு தயாராக இருக்கிறார்களா? இது பற்றி பட்டிமன்றமே நடத்தலாம். அதில் பழைய பிரிவு, புதிய பிரிவு குறித்து விவாதிக்கலாம்.

    513 பிரிவுகளில் 46 பிரிவுகளில் கை வைத்து இருக்கிறார்கள். பொதுவாக திருத்தம் செய்ய வேண்டும் என்றால் திருத்தம் கொண்டு வரலாம். அதை போல் சட்டத்தை நீக்க வேண்டும் என்றால் நீக்கலாம். ஆனால் புதிய சட்டம் என்று கொண்டு வருகிறார்கள். உதாரணத்திற்கு 302 கொலை குற்றம் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். அதை 203-க்கு மாற்றி இருக்கிறார்கள். அதனால் என்னவாகும் என்றால் சட்டத்தில் குழப்பம் வரும். எல்லாரும் மீண்டும் சட்டத்தை படிக்க வேண்டியது வரும். நீதித்துறையில் குழப்பம் ஏற்படும். முதலில் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால் சட்ட கமிஷனுக்கு அனுப்பியிருக்க வேண்டும். பாராளுமன்ற நிலைக் குழுவில் எல்லாரும் விவாதித்து இருக்க வேண்டும்.

    ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் வெளியேற்றி விட்டு நிறைவேற்றிருக்கிறார்கள். சட்ட கமிஷனிடம் ஆலோசனை நடத்தாதது தவறு. 3 சட்டப்பிரிவுகளை அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றால், இது மோசமான அரசு தானே. தற்போது வந்துள்ள சட்டத்தால் ஜாமின் பெறுவது கடினமாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஒரு நாளைக்கு 100 ஜாமின் மனுக்கள் வருகிறது. அங்கு போய் எல்லாரும் ஜாமின் வாங்க முடியாது. ஜாமின் கிடைப்பது என்பது சிறிய குற்றத்துக்கு 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம். அதை போல போலீஸ் காவல் முறையிலும் அவர்கள் சட்டத்தால் குழப்பம் ஏற்படும்.

    ஒவ்வொரு மாநிலங்களும் புதிய சட்டங்களை எதிர்த்து சட்டசபைகளில் தீர்மானம் கொண்டு வரலாம். அதில் எதை மத்திய அரசு எடுக்கும் என்று சொல்ல முடியாது. மாநிலங்களுக்கு சட்டங்களில் திருத்தம் கொண்டுவர அதிகாரம் உண்டு. ஆனால் மத்திய அரசு அதை ஏற்காது. இந்த சட்டத்தால் மக்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். எனவே, இந்த சட்டத்தை நிறுத்தி வைத்து சட்ட கமிஷனுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இறுதியாக தி.மு.க. துணைப் பொதுச்செய லாளர் ஆ.ராசா எம்.பி, நிறைவுரையாற்றுகிறார்.

    • இடைதேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது.
    • மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி நகர பகுதியில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் பொன்முடி, சி.வெ.கணேசன், சேகர் பாபு ஆகியோர் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    வாக்கு சேகரிப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், இடைதேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் வெற்றி பெற்று பெறுவோம். பா.ம.க. வினருக்கு வன்முறையில் ஈடுபடுவது தான் வேலை. அவர்களுக்கு அது தான் தெரியும்.

    பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவோம் என ஆந்திர முதல்வர் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அவர்கள் தடுப்பனை கட்டுவோம், கட்டுவோம் என்பார்கள். நாங்கள் அதனை தடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை.
    • மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் இதனை ஒழிக்க முடியாது.

    சென்னை:

    கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

    * டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்.

    * உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை.

    * அரசாங்கம் விற்கும் சரக்கு அவர்களுக்கு Soft drink போல மாறிவிடுகிறது.

    * கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது.

    * கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர்.

    * மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் இதனை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோகக்கூடிய அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம். எல்லாத்துக்கும் ஒரு நியாயம் வேண்டாமா. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்று கூறினார்.

    • விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    • மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்ததால் அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

    தேர்தலுக்கு நாள் நெருங்கி விட்ட காரணத்தால் இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி,

    * விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக கௌதம்சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

    * விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    எனவே, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பார்கள்.
    • தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இதனால் உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துக்கொள்ளவேண்டும் என்று கட்சி தலைமை அறிவுறுத்தும்.

    இந்நிலையில், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம், 'கலைஞர் அரங்கத்தில்' நடைபெறும்.

    அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்திய தியாகிகளை நாங்கள் மறைத்ததாக கூறுகிறார்கள். அதை மறைத்தது கவர்னர் தான்.
    • ஒரு விழாவுக்கு நாங்கள் கவர்னர் மாளிகைக்கு போயிருந்தபோது அவர் போட்டுக்காட்டிய தியாகிகள் வரலாற்று படத்தில் காந்தி, நேரு படம் இல்லை.

    வேலூர்:

    தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் காட்பாடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் எத்தனையோ அத்துமீறல்களுக்கு உட்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும், பிரதமருக்கும் வித்தியாசம் உண்டு. பிரதமரின் பேச்சு முக்கியத்துவம் பெறும்.

    அதில் ஒன்றுதான் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ள வேளையில் ஒருவித மறைமுகமான செல்வாக்கை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இவரது செய்கை உள்ளது என்பதால் தான் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். நாங்கள் மட்டும் அல்ல, இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லாம் மோடியின் செய்கையை தவறு என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதையெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் கன்னியாகுமரிக்கு வந்து தடை உத்தரவு போட்டு வியாபாரம் ஸ்தம்பித்து போகிற நிலையை உருவாக்கி தியானத்தில் அமர்ந்துள்ளார். இது நல்லது அல்ல என்பதை தான் நாங்கள் சுட்டிக் காட்டியுள்ளோம்.

    காந்தி பற்றி மோடி பேசியதை நான் எதிர்பார்க்கவில்லை. காந்தி குஜராத்தை சேர்ந்தவர். அவரது ஆசிரமம் அங்குதான் உள்ளது. அதைக்கூட பார்த்திருக்க மாட்டாரா?. காந்தி பற்றி தெரியாதா?. அவரது பேச்சு காந்தி மீது எவ்வளவு வஞ்சகம் கொண்டிருக்கிறார் என்பதை காட்டுகிறது.

    இந்திய தியாகிகளை நாங்கள் மறைத்ததாக கூறுகிறார்கள். அதை மறைத்தது கவர்னர் தான். ஒரு விழாவுக்கு நாங்கள் கவர்னர் மாளிகைக்கு போயிருந்தபோது அவர் போட்டுக்காட்டிய தியாகிகள் வரலாற்று படத்தில் காந்தி, நேரு படம் இல்லை. அதை மறைத்தவர் கவர்னர்.

    புதிய அணை கட்ட கேரள அரசு அறிக்கை தாக்கல் செய்தாலும் சரி, டி.பி.ஆர். தாக்கல் செய்தாலும் சரி, அவர்களால் நம்மை கேட்காமல் ஒரு செங்கல்லையும் எடுத்து வைக்க முடியாது. வைக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் திட்டவட்டமாக கூறியுள்ளது.

    அவர்கள் அரசியலுக்காக வேண்டுமானால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்காமல் நடந்து கொள்ளலாம். ஆனால் மேகதாது, சிலந்தி ஆறு, முல்லை பெரியாறில் எந்த காரணத்தைக் கொண்டும் சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியின்றியும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலும் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைப்பதற்கு முடியவே முடியாது.

    ஒடிசாவை தமிழர் ஆள்வதா என்று மத்திய மந்திரி அமித்ஷா பேசியுள்ளார். ஒடிசா ஒரு காலத்தில் தமிழர்கள், சோழ மன்னர்கள் ஆண்ட காலத்தில் எங்களிடம் தான் இருந்தது. ஏன் நாங்கள் இலங்கை வரை சென்று ஆட்சி செய்துள்ளோம். இதெல்லாம் அமித்ஷாவுக்கு தேவையில்லாத ஒன்று. ஒடிசாவில் எத்தனை வடமாநிலத்தவர் செல்வாக்கோடு உள்ளனர். அதேபோன்றுதான் ஒரு தமிழர் உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
    • அதில், வாக்கு எண்ணிக்கையின்போது பூத் முகவர்கள் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    கழக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி, ஜூன் 4-ம் தேதி அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்தாலோசித்திட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் "மாவட்டக் கழகச் செயலாளர்கள்-கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட் டம்" வருகிற 1-6-2024 காலை 11 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

    இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார்.

    அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. உள்கட்சி விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.
    • அண்ணா அறிவாலயத்தின் தரைதளத்தில் அறைகள் இடிக்கப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதுபற்றியும் கேட்டறிந்தார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் வரவேற்றனர்.

    அறிவாலயத்தில் சுமார் 1மணி நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தார். கழக பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலுவுடன் வடமாநில தேர்தல் நிலவரம் குறித்து விவாதித்தார்.

    இந்தியா கூட்டணிக்கு எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு 'சீட்' கிடைக்கும். வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது பற்றியும் ஆலோசித்தார். சுமார் 1 மணி நேரம் அரசியல் நிலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

    தி.மு.க. உள்கட்சி விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. அண்ணா அறிவாலயத்தின் தரைதளத்தில் அறைகள் இடிக்கப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதுபற்றியும் கேட்டறிந்தார்.

    அறிவாலயத்தில் உள்ள அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் அறை, முரசொலி மாறன் வளாகம் உள்ளிட்ட பல அறைகள் இடிக்கப்பட்டு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும் கேட்டறிந்தார்.

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு திறக்கவில்லை.
    • அணைகளில் அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான்.

    சென்னை:

    இன்று (மே 1-ந் தேதி) உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவுச் சின்னத்துக்கு தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மே தின நினைவு சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தலைமை நிலைய செயலாளரான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், தொ.மு.க. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி., அமைச்சர் சி.வி.கணேசன், சென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் நே.சிற்றரசு, பகுதிச் செயலாளர் மதன்மோகன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

     

    இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகனை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு திறக்கவில்லை. என்றைக்காவது கர்நாடகா அரசு நாங்கள் தண்ணீர் திறந்து விடுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்களா? இல்லை. அணைகளில் அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். குறைவாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். காவிரி ஒழுங்காற்று குழு தண்ணீரை திறந்து விடுமாறு கூறியும் திறக்க மாட்டேன் என்று கர்நாடக அரசு கூறுகிறது.

    ஆகையால் மத்திய அரசை கர்நாடக அரசு மதிக்காமல் இருக்கிறது. இதில் கேள்வி கேட்க வேண்டியது சுப்ரீம் கோர்ட்டுதான். எனவே காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழிசைக்கு குரு பெயர்ச்சி மாறிபோய் விட்டது.
    • அண்ணனின் இயல்பை ரசிப்பவள் நான்.

    சென்னை:

    தேர்தல் களத்தில் பிரசார அனல் வீசினாலும் அவ்வப்போது பெரிய தலைவர்களின் பேச்சுக்கள் சிரிப்பு, சிந்தனை, நையாண்டியோடு வாழைப் பழத்தில் ஊசி இறக்குவது போல் அவர்கள் நயமாக பேசுவது தென்றலாக வந்து செல்லும்.

    அப்படித்தான் தி.மு.க.வின் மூத்த தலைவரான அமைச்சர் துரைமுருகனின் பேச்சும் தேர்தல் களத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.

    தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். வழக்கம் போலவே தனது நகைச்சுவை கலந்த பேச்சை மலரும் நினைவுகளோடு பேசினார். அவர் பேசியதாவது:-

    உனக்கு ரொம்ப அதிர்ஷ்டம். உன் பெயர் தமிழச்சி. எதிர்த்து போட்டியிடுபவர் தமிழிசை. கொஞ்சம் மாறினால் வேறு ராகத்துக்கு போய் விடும். ஜாக்கிரதையாக பேச வேண்டும். இப்போது என்னண்ணா அந்த அம்மாவும் (தமிழிசையும்) எனக்கு வேண்டியவர்தான்.

    என் வீட்டின் பின்னால்தான் குமரிஅனந்தன் குடியிருந்தார். தமிழிசை குழந்தையாக இருந்த போது கவுன் போட்டு கொண்டு வீட்டின் முன் விளையாடும். இப்போ அது தலைவராகி, கவர்னராகி விட்டது.


    ஒரு திருமண நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டோம். அந்த நிகழ்ச்சியில் என்னை முதலில் பேச விட்டு அவரை பேசவைத்தனர். அதை பார்த்ததும் அவரை அழைத்து சிரித்துக் கொண்டே நீயெல்லாம் தலைவர் என்றேன். அதையும் பேசும் போது அப்படியே சொல்லிவிட்டார்.

    தமிழிசைக்கு குரு பெயர்ச்சி மாறிபோய் விட்டது. இல்லை என்றால் கவர்னர் பதவியை விட்டு விட்டு வருமா? ஒரு மாநிலத்துக்கு அல்ல. இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக இருந்தவர். ஒரு வேலையும் கிடையாது. காலை எழுந்து சாப்பிட்டு விட்டு ஒரு பைல் வந்தால் கையெழுத்து போட வேண்டியது. அதன் பிறகு நிம்மதியாக இருக்கலாம்.

    இப்போ அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி விட்டது. எனக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தால் போன் போட்டு வேண்டாம்மானு சொல்லி இருப்பேன்.

    அதிலும் தென்சென்னனக்கு வரலாமா? தமிழச்சி பாராளுமன்றத்துக்கு தகுதியானவர். தமிழச்சி ஆங்கிலத்தில் புலமை பெற்று பேராசிரியையாக இருந்தார். அவர் பேசியபோது சபையே அதிர்ந்து போனது என்றார்.

    அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கு டாக்டர் தமிழிசையும் தனது பாணியில் பதிலடி கொடுத்து உள்ளார். அவர் கூறியதாவது:-

    அண்ணன் துரைமுருகன் அவர்களே உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் தனி என்பது தமிழிசைக்கும் புரியும்.


    உங்கள் வீட்டு முன்பு கவுன் போட்டுக் கொண்டு நானும், உங்கள் மகன் தம்பி கதிர்ஆனந்த், அண்ணன் ரகுமான்கான் மகன் தம்பி சுபீர் எல்லாம் விளையாடி கொண்டிருப்பதும் அப்போது நாங்கள் உங்களை பார்த்ததும் நீங்கள் எங்களை சிரிக்க வைத்து மகிழ்வதும் மறக்க முடியாத மலரும் நினைவுகள்தான்.

    நீங்கள் பார்த்து வளர்ந்த பிள்ளை நான். கட்சிக்காக எனக்கு எதிராக நீங்கள் பேசினாலும் நான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்மனதில் இருக்கும். உங்கள் உதடுகள் பேசினாலும் உள்ளம் பேசாது.

    அண்ணன் அவர்களே, நீங்களே கூறி விட்டீர்கள் கவர்னர் பதவி எவ்வளவு சொகுசானது என்று. அப்படிப்பட்ட சொகுசான, கவுரவமான பதவியையே வேண்டாம் என்று நான் குடியிருக்கும் தென் சென்னையில் போட்டியிடுகிறேன் என்றால் எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். அதை சொகுசான பதவி நிறைவேற்றி வைக்காது. மக்களோடு இருந்து நேரடியாக மக்களுக்கு சேவை செய்யும் ஆசையில் வந்திருக்கிறேன்.

    இந்த நேரத்தில் உங்களை நினைத்து சநதோசப்படுகிறேன். நாங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். உங்களுக்கும் குரு பெயர்ச்சி மீது நம்பிக்கை வந்திருக்கிறது. அதை நினைத்து மகிழ்கிறேன்.

    எனக்கு பெயர்ச்சிகள் சாதகமாகவே இருந்து வருகின்றன. கட்சி தலைவராகவும், கவர்னராகவும் பெயர்ச்சி நடந்தது. இப்போது பாராளுமன்றத்தை நோக்கி பெயர்கிறது.

    அண்ணனின் இயல்பை ரசிப்பவள் நான். ஆனால் கொஞ்சம் அகங்காரத்தோடு பேசுகிறீர்கள். பெயரில் தமிழச்சி, நீங்களெல்லாம் முழுங்குவதும் தமிழ் தமிழ் என்றுதான். ஆனால் தமிழச்சி பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பிய்த்து உதறி விட்டார் என்று பெருமை பேசுகிறீர்கள்.

    உங்கள் தமிழ் பேச்சு இவ்வளவு தானா? ஊருக்கு தான் உபதேசமா? பாராளுமன்றத்தில் தாய்மொழி தமிழில் பேசும் உரிமையை குமரிஅனந்தன் எப்போதோ பெற்று தந்து விட்டாரே. ஆங்கில புலமை பெற்றிருந்தும் தமிழில் பேசி அதிர வைத்தார். அவரது போராட்ட வெற்றியை கலைஞரும் பாராட்டினார் என்பதை நீங்களும் அறிவீர்கள்.

    நான் இரு மாநிலங்களிலும் தமிழில்தான் பதவி பிரமாணம் எடுத்து கொண்டேன். தமிழ் மீது அக்கறை இருந்தால் கன்னிப் பேச்சை அன்னை தமிழில் அல்லவா பேச செய்து இருக்க வேண்டும்.

    தமிழ் மொழியில் பேசுவதையே அவமானமாக கருதுகிறார்கள் தி.மு.க. எம்.பி.க்கள். ஆனால் என் தாய்மொழியாக தமிழ் இல்லாமல் போய் விட்டதே என்று பிரதமர் மோடி ஆதங்கப்படுகிறார். தாய் மொழியில் பாராளுமன்றத்தில் பேசும் உரிமையை கூட விட்டுக் கொடுத்தவர்கள் நீங்கள்.

    பேசி பேசியே மக்களை மயக்கியவர்கள் நீங்கள். மக்கள் மயக்கம் தெளிந்து விட்டார்கள். உண்மையை உணர்ந்து கொண்டார்கள். சூரியன் உதித்தாலும் சரி, உதிக்காவிட்டாலும் சரி. தாமரை மலரும் காலம் இது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரே மதம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறீர்கள்.
    • என் மனைவி குழந்தைகளை விட நான் நேசிப்பது என் கட்சியை தான்.

    வேலூர்:

    வேலூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் உணர்ச்சி பொங்க அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    நாங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து மக்களிடையே ஒட்டு கேட்கிறோம். ஆனால் தேர்தல் வாக்குறுதி என்று எதுவும் குறிப்பிடாத பிரதமர் மோடி நான் ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளை இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவேன் என்கிறார்.

    எதற்காக எங்களை அழிக்க வேண்டும். நாங்கள் என்ன தவறு செய்தோம். மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறோம். இனியும் செய்யப் போகிறோம்.

    இது போன்ற மக்கள் சேவைக்காக எங்களை அழிக்க போகிறார்களா? வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்றும் பிரதமர் சொல்கிறார்.

    நாங்கள் கட்சிக்காக பல தியாகங்கள் செய்துள்ளோம். சிறை சென்று இருக்கிறோம். எங்களைப் பார்த்து எங்கள் வாரிசுகளும் அரசியலுக்கு வருவது வாரிசு அரசியலா? பிரதமர் ஒரு சந்தேக வழக்கிலாவது சிறை சென்றுள்ளாரா? முஸ்லிம்களுக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள். ஒரே மதம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறீர்கள்.


    இது சர்வாதிகாரி நாடு அல்ல. சமதர்ம நாடு. இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. கடந்த முறை நடந்த சோதனையின் போது என் வீட்டில் இருந்தோ எனக்கு சொந்தமான இடங்களில் இருந்தோ ஒரு கோடி ரூபாய் பணத்தை எடுத்தீர்களா? எங்கேயோ எடுத்த பணத்தை வைத்து என் மீது பழி சுமத்தினீர்கள். இதனால் அந்த தேர்தல் நின்றது. மறுபடியும் தேர்தல் நடந்து வெற்றி பெற்றது மட்டுமின்றி சத்தியமும் வென்றது.

    இப்போதும் சொல்கிறேன். இதே போன்ற செயலுக்கான ஆயத்தங்களே நடக்கின்றன. எப்படியாவது கதிர் ஆனந்தை கைது செய்யுங்கள் என்று சில வேட்பாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். என் மகனை சிறைக்கு அனுப்புவதற்கும் தயாராக இருக்கிறேன். இதற்கு எல்லாம் பயப்பட மாட்டேன். என் மனைவி குழந்தைகளை விட நான் நேசிப்பது என் கட்சியை தான்.

    நான் ஒழுக்கமாகவும் நாணயமாகவும் இருந்ததால்தான் ஒரே தொகுதியில் 12 முறை நின்றாலும் எனக்கு மக்கள் ஓட்டு போட்டனர். அது போல தான் என் மகனையும் வளர்த்து உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×