search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"

    • இரண்டாம் உலகப்போரின்போது அங்கு உயிர்நீத்த தமிழர்களுக்கு “நடுகல்” அமைத்திட 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
    • முதலமைச்சரிடம், தாய்லாந்து காஞ்சனபுரியில் நடைபெற இருக்கும் “நடுகல்” திறப்பு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சென்னை:

    1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. அப்போது, ஜப்பானிய ராணுவத்திடம் போர்க் கைதிகளாக இருந்தவர்கள், மலேசியா, இந்தோனேசியா, பர்மா நாடுகளிலிருந்து கட்டாயப்படுத்தி ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்களில், தாய்லாந்து நாட்டினைப் பர்மா நாட்டுடன் இணைக்கும் ரெயில் பாதையின் கட்டுமானப் பணிகளில் ஏறத்தாழ 1.50 லட்சம் தமிழர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இப்பணியின்போது வேலைச்சுமை, போதிய உணவு கிடைக்காமை, நோய் முதலிய காரணங்களால் ஏறத்தாழ 70 ஆயிரம் தமி ழர்கள் இறந்துள்ளனர்.

    இந்நிலையில் தாய்லாந்து நாட்டின் காஞ்சனாபுரியில் உள்ள தவாவோர்ன் என்ற புத்தர் கோவில் வளாகத்தில் இக்கட்டுமானப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் உடல்கள் மொத்தமாகப் புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    அங்குப் புதைக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது அங்குக் கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எந்தவிதமான அங்கீகாரமும் இன்றி அங்குப் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு – தமிழ்ச் சமுதாய மரபுப்படி "நடுகல்" அமைத்திட தாய்லாந்து நாட்டுத் தமிழ்ச் சங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது.

    அயலகத் தமிழர் நலத்துறையின் சார்பில் கடந்த 12.1.2024 அன்று சென்னையில் கொண்டாடப்பட்ட அயலகத் தமிழர் தின விழாவில் அயல்நாடுகளிலிருந்து வருகைபுரிந்த தமிழர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கிப் பெருமைப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாய்லாய்ந்து தமிழ்ச் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை ஏற்று, இரண்டாம் உலகப்போரின்போது அங்கு உயிர்நீத்த தமிழர்களுக்கு "நடுகல்" அமைத்திட 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து, தாய்லாந்து நாட்டில் இருந்து வருகைபுரிந்துள்ள தாய் லாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ரமேஷ் தர்மராஜன், துணைத்தலைவர் ரமணன், ஒருங்கிணைப்பாளர் சுந்தர குமார், செய்தி தொடர்பாளர் மகேந்திரன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (புதன் கிழமை) நேரில் சந்தித்து, தாய்லாந்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு "நடுகல்" அமைத்திட வழங்கிய நிதியுதவிக்காக நன்றி தெரிவித்தனர்.

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாத்திட அயலகத் தமிழர் நலத்துறை ஒன்றை உருவாக்கி, உலகத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்வதற்காக தாய்லாந்து நாட்டின் சார்பில் நன்றியுடன் பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.

    இந்தச் சந்திப்பின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தாய்லாந்து காஞ்சனபுரியில் 1.5.2024 அன்று நடைபெற இருக்கும் "நடுகல்" திறப்பு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தற்போது தேர்தல் நடைபெற்று வரும் பரபரப்பான சூழ்நிலையிலும், எங்களை வரவேற்று, அன்புடன் எங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட உலகத் தமிழர்களின் நலன் காக்கும் முதலமைச்சரை என்றும் நினைவில் வைத்து நன்றியுடன் போற்றிக் கொண்டாடுவோம் என்று தாய்லாந்து தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் குறிப்பிட்டு நெகிழ்ந்தனர்.

    • தி.மு.க. அடங்கிய இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
    • பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலைக்கு அவர்கள் என்ன பதிலடி கொடுக்க போகிறார்கள் என்பதை கேட்க இந்தியா கூட்டணி கட்சியினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழக தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்டு, ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து காணப்படுகிறது.

    ஆளும் கட்சியான தி.மு.க. தமிழகத்தில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.

    தி.மு.க. அடங்கிய இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் கோவை, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களான கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி ஆகியோர் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை சென்னையில் இருந்து கோவைக்கு வருகிறார். இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நெல்லை பிரசாரத்தை முடித்துக்கொண்டு கோவைக்கு வருகிறார்.

    தொடர்ந்து இரு தலைவர்களும், கோவை எல்.அண்ட்டி சாலையில் நாளை மாலை 5 மணிக்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள்.

    இந்த கூட்டத்தில் 12 சட்டசபை தொகுதிகளில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து பா.ஜ.க. போட்டியிடுகிறது. பா.ஜ.க. சார்பில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.

    அண்ணாமலையை ஆதரித்து பிரதமர் மோடி 3 முறை கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு அவருக்கு ஆதரவு திரட்டி சென்றுள்ளார்.

    அப்போதெல்லாம் தமிழகத்தை ஆளுகின்ற தி.மு.க. மீது பிரதமர் மோடி கடுமையான குற்றச்சாட்டுகளையும் வைத்து சென்றுள்ளார். நேற்று நடந்த கூட்டத்தில் கூட தி.மு.க. அரசின் மீது குற்றச்சாட்டு வைத்து பேசினார்.

    இந்த நிலையில் தான், பிரதமர் வந்து சென்ற ஒரு நாள் இடைவெளியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தியும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலைக்கு அவர்கள் என்ன பதிலடி கொடுக்க போகிறார்கள் என்பதை கேட்க இந்தியா கூட்டணி கட்சியினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

    இருபெரும் தலைவர்களும் கோவைக்கு வந்து ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்வது இந்தியா கூட்டணி கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முதலமைச்சர் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    • தி.மு.க.வுக்கு முதல் பிரசார பாடலாக, 'நமக்காகவே நமைக் காக்கவே எப்போதும் ஒலிக்கும் ஸ்டாலின் குரல்' என்ற பிரசார பாடல் வெளியிடப்பட்டிருந்தது.
    • உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்று பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.

    சென்னை:

    2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.வுக்கு பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவனம் பணியாற்றியது. அந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்ததும் 'ஐபேக்' நிறுவனம் பணியை முடித்துக்கொண்டு வெளியேறியது.

    இப்போது நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு 'பென் டீம்' செயல்பட்டு பிரசார வியூகம் வகுத்து வருகிறது. இது தி.மு.க. தலைமையே உருவாக்கிய நிறுவனமாகும். ஐபேக் டீமில் என்னென்ன பணிகள் செய்யப்பட்டதோ? அதே வகையில் பென் டீம் சற்று வித்தியாசமாக தி.மு.க.வுக்கு ஆலோசனைகளை வழங்கி பணியாற்றுகிறது.

    இந்த நிறுவனம் இப்போது தேர்தல் பிரசார பாடல்களையும் தயாரித்து வெளியிட்டு வருகிறது.

    தி.மு.க.வுக்கு முதல் பிரசார பாடலாக, 'நமக்காகவே நமைக் காக்கவே எப்போதும் ஒலிக்கும் ஸ்டாலின் குரல்' என்ற பிரசார பாடல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த பிரசார பாடல் பட்டிதொட்டியெங்கும் மிகப் பிரபலமான நிலையில் இப்போது 2-வது பிரசார பாடலை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

    அந்த பாடல் வரிகளில் ஆஜாகா, ஐஜாகா, ஊஜாகா வேணாமே வீணான பூஜாகா, ஏஜாகா ஐஜாகா ஓஜாகா நாமளா? அவங்களா? பார்ப்போம் வா...

    உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்று பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த பிரசார பாடல் இப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

    • ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
    • நீராலும், நிலத்தாலும் ஏன் நாடுகளாலும், கண்டங்களாலும் பிரிந்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.

    சென்னை:

    தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நேற்று தொடங்கியது.

    இதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இன்று 2-ம் நாள் மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அண்மையில் இதே அரங்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. தமிழ்நாட்டை வளப்படுத்த உலகமே திரண்ட மாநாடு என்று சொன்னால், இன்று நடைபெறுவது உலகத்தை வளப்படுத்த சென்ற தமிழர்கள் கொண்டாடும் மாநாடு இது.

    இந்த மாநாட்டுக்கு கிடைத்த மாபெரும் சிறப்புகளில் ஒன்று சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் சண்முகம் இங்கு வருகை தந்திருப்பதுதான்.

    அவர் உலகப் புகழ்பெற்ற தமிழர் மட்டுமல்ல. உலகமே கவனிக்கிற பதவியில் இருக்கும் தமிழர். நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது, நான் தங்கிய இடத்திற்கே வந்து எனக்கு சிறப்பு செய்தார். நேற்று அவரை என்னுடைய வீட்டிற்கே வரவழைத்து மகிழ்ந்தேன். அவரை இன்றும் என்றும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

    அவரை மாதிரியே இந்த மேடையில் அமர்ந்திருக்கிற அனைவரையும் வரவேற்கிறேன். உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு பெருமையாக உள்ளது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற உழைப்பு திறன்தான் கடல் கடந்தும் தமிழர்கள் வெற்றிகரமாக வாழ காரணம்.

    இப்படி புலம் பெயர்ந்த தமிழ் சொந்தங்கள் அந்த நாடுகளோட வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் முதுகெலும்பாக இருந்து வருகிறவர்கள். கலைஞரால் 2010-ம் ஆண்டு வெளிநாடு வாழ் தமிழர்களின் துயரங்களை களைய, வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவை உருவாக்கி அரசாணை வெளியிட்டதோடு, வாரியம் அமைக்கவும் சட்ட முன்முடிவு உருவாக்கப்பட்டது.

    ஆனால் தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றம் காரணமாக இந்த முயற்சிகளில் தடை ஏற்பட்டது. ஆனால் இப்போது அமைந்துள்ள திராவிட மாடல் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னபடி அயலகத் தமிழர் நலனுக்கு தனியாக ஒரு துறையை உருவாக்கி தனி அமைச்சரையும் நியமித்து உங்களுடைய அவசரத் தேவைகள் உடனுக்குடன் சிறப்பான முறையில் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது.

    ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துறையும் வாரியமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை உள்ள தமிழர்களுடைய குழந்தைகளுக்கு தமிழ் மீது ஆர்வத்தை உருவாக்கி, தமிழ் இணைய கல்விக்கழகம் மூலம் தமிழ் கற்றுத் தரப்படுகிறது.

    வெளிநாடுகளில் கைது செய்யப்படுகிற சூழலுக்கு ஆளாகிற தமிழர்களுக்கு உரிய சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அயல்நாடுகளில் உதவி தேவைப்படுகிற தமிழர்களுக்கு மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய இந்திய தூதரகத்துடன் இணைந்து உரிய நிவாரண நடவடிக்கைகளை இந்த துறை சிறப்பாக செய்து வருகிறது.

    மருத்துவ இயலாமை மற்றும் பல்வேறு காரணங்களால், தாயகம் திரும்ப முடியாமல் கஷ்டப்படுகிற தமிழர்கள், அவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரவும், வெளிநாட்டில் இறக்க நேரிடும் தமிழர்களின் உடல்களை இந்தியா கொண்டு வரவும், தமிழ்நாடு அரசால் 1 கோடி ரூபாய் சுழல் நிதி ஏற்படுத்தப்பட்டு, தமிழர்களின் துயரங்களை துடைக்கிற பணி உரிய முறையில் செய்யப்பட்டு வருகிறது.

    முகவர் மீதான புகார், நில அபகரிப்பு புகார் தொடர்பாக 53 இனங்களில் தீர்வு காணப்பட்டுள்ளது.

    உக்ரைன், சூடான், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் இப்படி பல்வேறு நாடுகளில் இருக்கிற தமிழர்கள் அங்கே எதிர்பாராத விதமாக பிரச்சனைகளை சந்திக்கிறபோது தமிழ்நாடு அரசு விரைவாக செயல்பட்டு, பத்திரமாக அழைத்து வந்துள்ளது.

    இயற்கை இடர்பாடு மற்றும் அசாதாரண சூழ்நிலைகளிலும் தமிழர்களை பாதுகாப்பாக மீட்பதில் கண்ணும் கருத்துமாக நாங்கள் செயல்பட்டதை நீங்களே பார்த்தீர்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 'எனது கிராமம்' திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

    இந்த ஆண்டின் அயலகத் தமிழர் நாள் கொண்டாட்டம் 'தமிழ் வெல்லும்' என்ற சிறப்பான கருப்பொருளைக் கொண்டு, மிக எழுச்சியோடும், 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து வந்திருக்கின்ற உங்கள் எல்லோருடைய பங்கேற்போடும் மிகச் சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமில்லாமல், ஒரு தமிழனாகவும் இதை பார்த்து நான் அகம் மகிழ்கிறேன். நீராலும், நிலத்தாலும் ஏன் நாடுகளாலும், கண்டங்களாலும் பிரிந்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.

    தமிழ் அன்னையின் குழந்தைகள், அந்த உரிமையுடன் உங்கள் சகோதரனாக நான் உங்களிடம் வைக்கின்ற வேண்டுகோள்... எங்கு வாழ்ந்தாலும் தாய்த்தமிழ் நாட்டை மறக்காதீர்கள். அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, ராஜகண்ணப்பன், மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சிதான் எனக்கு மருந்து.
    • எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள்.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அயலக தமிழர் தினவிழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உடல் நிலை பற்றி பேசியதாவது:-

    எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா? மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? ஒவ்வொரு முறையும் நான் வெளிநாடுகளுக்கு வரும்போது நீங்கள் எப்படி மிக பிரமாண்டமாக வரவேற்பு கொடுப்பீர்களோ அதே மாதிரி ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் 3-வது முறையாக இந்த அயலகத் தமிழர் திருநாளில் உங்களது தாய் மண்ணுக்கு வரவேற்பதில் ரொம்ப மகிழ்ச்சி.

    எனக்கு உடல் நலமில்லை, உற்சாகமாக இல்லை என்று நேற்று ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். அதை படித்தபோது எனக்கு சிரிப்பு தான் வந்தது.

    எனக்கு என்ன குறை? தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறபோது அதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு.

    நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். சென்னையை சேர்ந்த ஒரு சகோதரி பேசுறாங்க. கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் ரூ.1000 வந்து விட்டது. பொங்கல் பரிசாக ரூ.1000 வந்து விட்டது. அரிசி, சர்க்கரை, கரும்பு வந்து விட்டது. வெள்ள நிவாரணமாக ரூ.6000 கிடைத்துவிட்டது.

    ஒரு மாதத்தில் முதலமைச்சரே 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டார். பொங்கலுக்கு யாரையும் நான் எதிர்பார்க்க தேவை இல்லை என்று அந்த சகோதரி பேட்டி கொடுத்து உள்ளார். அவர் முகத்தில் பார்க்கிற மகிழ்ச்சிதான் எனக்கான உற்சாக மருந்து.

    எனக்கு மக்களை பற்றி தான் எப்போதும் நினைப்பே தவிர என்னைப் பற்றி இருந்ததில்லை. எந்த சூழலிலும் என்னோடு மக்கள் உள்ளனர். மக்களோடு இருப்பவன் தான் நான்.

    என் சக்தியை மீறியும் உழைப்பவன் நான். இது மாதிரி செய்திகளை ஒதுக்கிவிட்டு உழைத்துக்கொண்டே இருப்பேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வந்து பொதுமக்கள் ரூ.1000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள ரேசன் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பரிசை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை கார்டு பொருள் இல்லா கார்டுகளை வைத்திருப்பவர்களை தவிர்த்து அனைவருக்கும் ரூ.1000 ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.

    பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ரேசன் கடைகளில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது.

    கடந்த 7-ந்தேதி முதல் இன்று வரை தகுதியான அனைவருக்கும் டோக்கன் வழங்கி முடிக்கப்பட்டு உள்ளது. ரேசன் கடை ஊழியர்கள் இன்றும் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்கினார்கள்.

    கடந்த 3 நாட்களாக வழங்கப்பட்ட டோக்கனில் எந்தெந்த தேதியில் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் நாளை முதல் வழங்கப்படுகிறது. தொடர்ச்சியாக வருகிற 14-ந்தேதி வரை பொங்கல் தொகுப்பை ரேசன் கடைகளில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வந்து பொதுமக்கள் ரூ.1000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் தொகுப்பை வழங்கும்போது பிரச்சனை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ரேசன் கடைகளில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2.24 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன.

    இதில் 4 லட்சம் சர்க்கரை கார்டுகள் உள்பட வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் என 24 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் கிடைக்காது. மற்ற அனைவருக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    இதன்படி 1.86 கோடி ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.2,067 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதில் முதல் கட்டமாக ரூ.239 கோடி கடந்த 4-ந்தேதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1828 கோடி ரூபாய் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை காலை தொடங்கி வைக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள ரேசன் கடையில் அவர் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பரிசை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.

    இதன் பிறகு அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்பட உள்ளது.

    • மக்களுடைய அங்கீகாரத்தால் உழைத்து முதல்வரானார் மு.க.ஸ்டாலின்.
    • மோடியால் வாழ்ந்தது அதானி குடும்பம் மட்டுமே.

    திருப்பூர்:

    திருப்பூர் கொடுவாயில் தி.மு.க., இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இளைஞரணி மாநாட்டு நிதியாக திருப்பூர் வடக்கு மாவட்டம் ரூ.1 கோடி, தெற்கு மாவட்டம் ரூ.1 கோடி, வடக்கு மாவட்ட இளைஞரணி ரூ. 14 லட்சம், தெற்கு மாவட்ட இளைஞரணி ரூ.12 லட்சம், முன்னாள் மாவட்ட செயலாளர் சார்பாக 2 லட்சம் என ரூ. 2 கோடியே 28 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    சேலம் மாநாட்டிற்காக 4 லட்சம் டீ- சர்ட்டுகள் திருப்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மற்ற ஊர்களுக்கெல்லாம் சட்டையில் செல்லும் நான் இங்கு மட்டும்தான் டீ-சர்ட்டில் வந்திருக்கிறேன். மக்களுடைய அங்கீகாரத்தால் உழைத்து முதல்வரானார் மு.க.ஸ்டாலின்.

    காலில் விழுந்து முதல்வரானவர் அல்ல. மு.பெ.சாமிநாதன் வகித்த பொறுப்பை நான் வகிப்பது தான் எனக்கு பெருமை. இளைஞரணியில் கிளை அமைப்பாளராக பணியை தொடங்கியவர் மு.பெ. சாமிநாதன். சேலம் மாநாட்டை எழுச்சி மாநாடாக கொள்கை மாநாடாக நடத்தி காட்ட வேண்டும். இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவே சேலம் மாநாடு நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று முதல் தமிழக அரசால் அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. பா.ஜ.க., 9 ஆண்டுகளில் என்ன செய்தது. மோடியால் வாழ்ந்தது அதானி குடும்பம் மட்டுமே.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வைஷாலி பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.
    • உங்களின் பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கும்.

    சென்னை:

    தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். வைஷாலி பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.

    இந்நிலையில், வைஷாலிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் 3-வது பெண் கிராண்ட் மாஸ்டரும், தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டருமான வைஷாலிக்கு எனது பாராட்டுகள். நீங்கள் தான் இப்போது முதல் கிராண்ட் மாஸ்டர் உடன்பிறப்புகள்.

    உங்கள் சாதனைகளால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உங்களின் பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கும். இது தமிழ்நாட்டில் பெண்கள் அதிகாரம் பெற்றதற்கான சான்றாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

    • பெரிய அளவில் மழைநீர் பாதிப்பு இல்லை.
    • பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது.

    சென்னை:

    சென்னையில் பெய்த மழை பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    நேற்று காலை முதல் இன்று வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் 10 செ.மீ. முதல் 25 செ.மீ. அளவுக்கு கனத்த மழை பெய்துள்ளது. ஆனாலும் பாதிப்பு என்பது மிகப்பெரிய அளவில் இல்லை. பெரிய மழை பெய்தது என்ற சுவடே தெரியாத அளவுக்கு மழைநீர் வடியும் வகையில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் 800-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரத்துக்கான புதிய மழை நீர் வடிகால் கால்வாய்களை அமைத்ததால் மழை பெய்தாலும் முக்கிய சாலைகளில் சில மணிநேரத்தில் வடிந்து விடுகிறது. பெரிய அளவில் மழைநீர் பாதிப்பு இல்லை.

    ஏற்கனவே இருந்த கால்வாய்களை தூர்வாரிய காரணத்தால் தண்ணீர் விரைவாக வடிந்து விடுகிறது.

    சைதாப்பேட்டையை பொறுத்தவரை 5 செ.மீ. மழை பெய்தால்கூட திருவள்ளூர் தெரு, திவான் பாஷ்யம் தோட்டம், சுப்பிரமணிய சாலை போன்ற பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நாள் கணக்கில் தேங்கி நிற்கும்.

    ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு இடத்தில் கூட தண்ணீர் தேங்குவது கிடையாது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே மேலாண்மை செய்த காரணத்தால் மிகப்பெரிய பாதிப்பு இல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

    பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. 162 இடங்களில் நிவாரண மையங்களும் தயாராக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சனிக்கிழமை டெல்லி சென்றிருந்த கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று உலக மீனவர் தின நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடி சென்றுவிட்டார்.
    • சுப்ரீம் கோர்ட்டு எழுப்பிய பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களிலும் கையெழுத்திட்டுதான் ஆக வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்ததால் தமிழக அரசு அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

    இந்த நிலையில் அந்த 10 மசோதாக்களையும் காரணம் இன்றி அவர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி இருந்தார்.

    இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18-ந்தேதி சட்டமன்ற கூட்டத்தை கூட்டி அந்த 10 மசோதாவையும் எவ்வித திருத்தமும் செய்யாமல் அப்படியே நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த 10 சட்ட மசோதாக்கள் மீது கவர்னர் இன்னும் முடிவெடுக்காத நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜராகி கவர்னர் தரப்பில் வழங்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

    இதன் மீது நடைபெற்ற விவாதத்தில் தலைமை நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி கவர்னர் அரசியல் சட்டத்தை மீறி வருவதாக குற்றம் சாட்டினர்.

    தமிழக அரசின் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதால் அரசின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி மாநில பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை பறிக்கும் வகையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதால் இதில் ஆழ்ந்து பரிசீலித்து முடிவெடுக்க கவர்னருக்கு அவகாசம் தேவை என வாதிட்டார்.

    இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட் கவர்னர் முடிவு எடுக்க அவகாசம் அளிக்கும் வகையில் வழக்கு விசாரணையை டிசம்பர் 1-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

    இந்த நிலையில் சனிக்கிழமை டெல்லி சென்றிருந்த கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று உலக மீனவர் தின நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடி சென்றுவிட்டார். இன்று மாலையில்தான் சென்னை திரும்புகிறார்.

    தமிழக சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ள 10 மசோதாக்களில் கவர்னர் கையெழுத்து போடுவாரா? இல்லையா? என்பது பற்றி கவர்னர் மாளிகையில் இருந்து அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாமல் உள்ளது.

    இதுகுறித்து விசாரித்ததில் 10 சட்டமசோதாக்களிலும் கவர்னர் ஒப்புதல் வழங்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி சட்ட நிபுணர்களின் கருத்தை கவர்னர் கேட்டு உள்ளதாகவும் அதன் அடிப்படையில்தான் அவர் செயல்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் இது தொடர்பான மசோதாக்களுக்கு கவர்னர்கள் என்னென்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளனர் என்ற விவரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் இது தொடர்பாக என்ன நிலைப்பாட்டை மேற்கொள்ளலாம் என்றும் கவர்னர் சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டுள்ளதால் 2 நாளில் இது தொடர்பான முடிவு என்ன என்பது தெரிந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி. கருத்து தெரிவிக்கையில், சுப்ரீம் கோர்ட்டு எழுப்பிய பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவி இந்த 10 மசோதாக்களிலும் கையெழுத்திட்டுதான் ஆக வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

    • மசோதாக்களை கவர்னருக்கு மீண்டும் அனுப்பும் பட்சத்தில் கவர்னர் அதை ஏற்று கையெழுத்திடுவாரா? அல்லது ஏற்க மறுப்பாரா? என்று அரசியல் நிபுணர்கள் வினா எழுப்பி வருகின்றனர்.
    • சட்ட சிக்கல் வந்து விடக்கூடாது என்பதால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானமாக கொண்டு வந்து இவற்றை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 10 சட்ட மசோதாக்களை காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்து அதை அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கும் நிலையில் மறுபடியும் அதே மசோதாக்கள் சட்டசபையில் இன்று நிறைவேறி உள்ளது.

    இந்த மசோதாக்களை கவர்னருக்கு மீண்டும் அனுப்பும் பட்சத்தில் கவர்னர் அதை ஏற்று கையெழுத்திடுவாரா? அல்லது ஏற்க மறுப்பாரா? என்று அரசியல் நிபுணர்கள் வினா எழுப்பி வருகின்றனர்.

    ஏனென்றால் இந்த மசோதாக்களை அவர் திருப்பி அனுப்பிய போது காரணம் எதுவும் தெரிவிக்காமல்தான் அனுப்பி உள்ளார். இதுகுறித்து சட்டத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இவ்வாறு சட்ட சிக்கல் வந்து விடக்கூடாது என்பதால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானமாக கொண்டு வந்து இவற்றை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    சபையில் ஒருமனதான முடிவுடன் இந்த 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்படுவதால் இதில் சட்ட சிக்கல் வர வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம் என்று விளக்கம் தெரிவித்தனர்.

    • சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை கவர்னர்களோ, குடியரசு தலைவரோ நிராகரிக்கும் போது திருப்பி அனுப்புகிறோம் என்ற வார்த்தையை குறிப்பிடுவதில்லை.
    • ‘வித்ஹோல்டு’ (நிறுத்தி வைப்பு) என்றே குறிப்பிடுவார்கள். தமிழக கவர்னரும் அது போன்ற வார்த்தையையே குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    கவர்னர் மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வருவதற்குள் இந்த அவசர கூட்டம் நடத்த வேண்டியதன் அவசியம் என்ன?

    கவர்னர் மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதாக தானே அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அவை முன்னவர் துரைமுருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பதிலளித்து பேசினார்கள். அவர்கள் கூறும்போது, சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை கவர்னர்களோ, குடியரசு தலைவரோ நிராகரிக்கும் போது திருப்பி அனுப்புகிறோம் என்ற வார்த்தையை குறிப்பிடுவதில்லை.

    'வித்ஹோல்டு' (நிறுத்தி வைப்பு) என்றே குறிப்பிடுவார்கள். தமிழக கவர்னரும் அது போன்ற வார்த்தையையே குறிப்பிட்டுள்ளார். எனவே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றனர்.

    இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த 10 மசோதாக்கள் தொடர்பாக மட்டும்தான் வழக்கு போடப்பட்டுள்ளதா? கவர்னரிடம் நிலுவையில் உள்ள மற்ற கோப்புகளுக்கு எதிராகவும் வழக்கு போடப்பட்டு உள்ளதா? என்றார்.

    இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்த மசோதாக்கள் மற்றும் முன் விடுதலை தொடர்பாக நிலுவையில் உள்ள 50 கோரிக்கை தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

    எடப்பாடி பழனிசாமி:-பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாங்கள் ஏற்கனவே கொண்டு வந்தோம். அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். ஆனால் அப்போது தி.மு.க. சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இல்லை என்றால் அப்போதே தீர்வு கிடைத்து இருக்கும்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:-பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் போது அரசிடம் கலந்து விவாதிக்கும் பழக்கம் அப்போது இருந்தது. தற்போது அது இல்லை என்பதே பிரச்சனை.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    இதைத் தொடர்ந்து ஜெயலலிதா பெயரில் அமைக்கப்பட்டிருந்த மீன்வள பல்கலைக்கழகம் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

    ஆனால் அதன் பிறகு அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ஜெயலலிதா பெயரை நீக்கியதாக உண்மைக்கு மாறான தகவலை கூறி வெளிநடப்பு செய்துள்ளார்கள். மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்படவில்லை. நிலுவையில் உள்ளது" என்றார்.

    ×