search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kancheepuram"

    காஞ்சீபுரம் அருகே மது குடித்துவிட்டு ரகளை செய்ததால் கணவனின் தலையில் மனைவியே அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 48), கூலித் தொழிலாளி, இவரது மனைவி சுந்தரி.

    இவர்களது மகன் கோவிந்தவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டும், மகள் ராஜேஸ்வரி 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

    திருமுருகன் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தினை வீட்டிற்கு தராமல் மது குடித்து செலவழித்து வந்தார். மேலும் மது போதையில் வீட்டுக்கு வரும் அவர் மனைவி சுந்தரியிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை முதலே மது போதையில் திருமுருகன் இருந்தார். மனைவியிடமும் ரகளையில் ஈடுபட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது சுந்தரியை அவர் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் சுந்தரி மிகவும் மனவேதனை அடைந்தார்.

    தினமும் மது குடித்து வரும் கணவனால் ஏற்படும் தொல்லையை தடுக்க அவரை தீத்துக்கட்டுவது என்று சுந்தரி முடிவு செய்தார்.

    இரவு மகன் கோவிந்தவாசனும், ராஜேஸ்வரியும் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இதையடுத்து நள்ளிரவில் மது போதையில் தூங்கி கொண்டிருந்த கணவர் திருமுருகனின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே திருமுருகன் பலியானார்.

    இன்று காலை நீண்ட நேரம் வரை திருமுருகன் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். அப்போது திருமுருகன் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக சுந்தரியை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
    காஞ்சீபுரத்தில் அரசு பணியாளர்களின் பணி பதிவேடு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்படுகிறது. இத்திட்டம் வரும் ஆகஸ்டு மாதம் முதல் நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட பயிற்சி முகாம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது.

    பயிற்சியின் போது கருவூல கணக்கு துறை முதன்மை செயலாளர் தென்காசி ஜவகர் பேசியதாவது:-

    நிதி மேலாண்மை தொடர்பான அரசு பணிகள் திறம்பட நடைபெற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு 288.91 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்கியுள்ளது.

    இத்திட்டம் செயல்படுத்தப்படும் அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்சமயம் முடிவடைந்துள்ளன. இத்திட்டம் மூலம் சம்பள பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்பிக்க இயலும்.

    இதன் மூலம் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை நிர்வாகம் சிறப்பாக நடைபெற வழிவகுக்கும். தேவையற்ற காலதாமதமும், முறைகேடுகளும் தடுக்கப்படும். அரசு பணியாளர்களின் பணி பதிவேடு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட்டு சம்பள பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு உள்ளிட்டவைகள் உடனுக்குடன் பதியப்படும்.

    இத்திட்டம் வரும் ஆகஸ்டு மாதம் முதல் நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை அரசு பணியாளர்களின் பணி வரலாறு முழுமையாக இத்திட்டதின் மூலம் கணினிமயமாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், சென்னை கருவூல மற்றும் கணக்கு துறை கூடுதல் இயக்குனர் மகாபாரதி, கருவூலம் மற்றும் கணக்குதுறை மண் டல இணை இயக்குனர் திருஞானசம்பந்தம், கைத்தறி மற்றும் துணி நூல் துறை இணை இயக்குனர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ள டாஸ் மாக்கடைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் அரசு பொது மருத்துவமனை, பழைய ரெயில் நிலையம், மின் வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.

    மேலும் தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பஸ் நிலையத்தில் இருந்து இந்த சாலை வழியாகவே இயக்கப்படுகின்றன.

    நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் இந்த சாலையில், ராஜாஜி மார்கெட் அருகே அரசு டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது.

    மாலை நேரங்களில் மதுக்கடைக்கு வருபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். எனவே இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    மேலும் அரசு மருத்துவமனைக்கு இந்த வழியாக அடிக்கடி 108 ஆம்புலன்சுகள் சென்று வரும்போது வாகனங்களால் நெரிசலில் சிக்கி கொள்கின்றன.

    எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ள இந்த டாஸ் மாக்கடைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது. ‘‘முக்கிய சாலையால் உள்ள டாஸ்மாக் கடையில் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    குடிமகன்கள் தினமும் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இந்த மதுக்கடையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும்’ என்றனர். #tamilnews
    காஞ்சீபுரம் அருகே குடிநீர் வழங்க கோரி மதுராந்தகம்- உத்தரமேரூர் செல்லும் சாலையில் பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் 3 பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மதுராந்தகம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் தண்டலம் கிராமத்துக்கு 3 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை.

    இது குறித்து ஊராட்சி மன்ற செயலாளர் கோதண்டராமனிடம் தண்டலம் கிராம மக்கள் புகார் செய்தனர். தங்கள் கிராமத்துக்கு 2 கிணறுகளில் இருந்தும் ஆபரேட்டர்கள் சீராக குடிநீர் வழங்கவில்லை.

    எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பிறகும் குடிநீர் சப்ளை முறையாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து 3 மாதங்களாக சீராக அனைத்து குடும்பங்களுக்கும் கிடைக்கும் வகையில் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று காலை மதுராந்தகம்- உத்தரமேரூர் செல்லும் சாலையில் பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் 3 பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் அங்கு சென்ற மேல்மருத்துவத்தூர் போலீசார் பொது மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதுபோல் திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி காலனிக்கு 35 நாட்களாக குடிநீர் வரவில்லை. இங்கு 350 குடும்பங்கள் உள்ளனர். குடிநீர் வராததை கண்டித்து இன்று காலை 8 மணி அளவில் இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் திருத்தணி-நாகலாபுரம் சாலையில் மறியல் செய்தனர்.

    தகவல் அறிந்ததும் திருத்தணி தாசில்தார் நரசிம்மன், பி.டி.ஓ. லட்சுமணன் ஆகியோர் அங்கு சென்று சமாதானம் செய்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக அங்கு 1 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது. #Tamilnews
    விவசாயிகள் பிரச்சனைக்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் துணை நிற்பதில்லை என அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதை தடைசெய்யக்கோரி மார்ச் 1-ந் தேதி முதல் 100 நாட்கள் குமரிமுதல் கோட்டை வரை 32 மாவட்டங்கள் வழியாக விவசாயிகள் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் எண்ணத்தூர், உத்திரமேரூர், வேடந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட அவர் காஞ்சீபுரம் வந்தார்.

    பின்னர் அய்யாக்கண்ணு மாவட்ட கலெக்டர் பொன்னையாவை சந்தித்து பாலாற்றில் 3 கிலோ மீட்டருக்கு ஒன்று என தடுப்பணை கள் கட்ட வேண்டும், மாவட் டத்தில் உள்ள அனைத்து சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்.

    அப்போது அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க யாரும் முயற்சி மேற்கொள்ளவில்லை. காலம்காலமாக அரசியல் வாதிகள் விவசாயிகளை அடிமை போல் வைத்துள்ளனர்.

    அ.தி.மு.க, தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி என எந்த ஒரு அரசியல் கட்சியும் விவசாயிகளுக்காக துணை நிற்கவில்லை.

    மத்திய மாநில அரசுகளின் எந்தவொரு திட்டத்திற்காகவும், விவசாய நிலங்களை கையகப்படுத்த விட மாட்டோம். மீறி கையகப்படுத்தினால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்.

    நடிகர் ரஜினிகாந்த் நதிகள் இணைப்பிற்காக தருவேன் என்று சொன்ன 1 கோடி ரூபாயை என்னிடமோ அல்லது மத்திய அரசிடமோ இதுவரை தரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அய்யாக்கண்ணு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அவருடன் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைபொதுச் செயலாளர் தீனன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். #Tamilnews
    பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. #PlusTwoExamResults #Plus2Result
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 47 ஆயிரம் 461 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 41 ஆயிரத்து 389 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 87.21 சதவீதம் ஆகும்.

    கடந்த ஆண்டு 88.85 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தது. தற்போது காஞ்சீபும் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

    மாவட்ட அளவில் காஞ்சீபுரம் 24-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 23-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அரசு பள்ளியில் மொத்தம் 19 ஆயிரத்து 171 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 14 ஆயிரத்து 769 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 77 சதவீதம்தேர்ச்சி ஆகும்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 43 ஆயிரத்து 866 பேர் தேர்வு எழுதினர். இதில் 38 ஆயிரத்து 255 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 87.17 ஆகும். கடந்த ஆண்டு 87.57 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. தற்போது 0.40 சதவீதம் தேர்ச்சி குறைவு.

    மாவட்ட அளவில் திருவள்ளூர் மாவட்டம் 25-வது இடத்தை பிடித்துள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 90 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் 16 ஆயிரத்து 340 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 944 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 73.10. கடந்த ஆண்டு 74.28 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது.  #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
    காஞ்சீபுரம் அருகே நள்ளிரவில் மணல் திருடிய 3 பேரை கிராம மக்கள் சிறைப்பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த மாகரல் பகுதியில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் மர்மமான முறையில் வேன் ஒன்று சுற்றித் திரிந்துள்ளது.

    வீட்டுக்கு வெளியே படுத்திருந்த கிராம மக்கள் சந்தேகமடைந்து வேனை மடக்கிப் பிடித்து பார்த்த போது அதில் ஆற்று மணல் திருடப்பட்டு எடுத்துச் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. வேனில் இருந்த 3 பேரை கிராம மக்கள் மடக்கிப் பிடித்தனர்,

    இது குறித்து மாகரல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் 3 பேரையும் கைது செய்து வேனை பறிமுதல் செய்தார்.

    இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் இந்த 3 பேரில் ஒருவர் பழைய குற்றவாளி ஆவார். இவர்கள் மணல் திருடுவதற்கு வந்ததாகத் தெரியவில்லை. கொள்ளையடிப்பது போன்று வேறு நோக்கத்திற்காக வந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது எனத் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
    ×