search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றச்சாட்டு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாரி வெளியே செல்லும் பாதையில் செல்லாமல் எதிர் திசையில் முகாம் அலுவலகத்தை விட்டு மர்மமான முறையில் வெளியேறியது.
    • கண்டெய்னர் லாரி வந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் தாடே பள்ளியில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் முகாம் அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. வழக்கமாக முகாம் அலுவலகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுப்பபடுகின்றன.

    ஆனால் இந்த லாரி சோதனை எதுவும் செய்யப்படவில்லை. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் அங்கு நின்ற லாரி வெளியே செல்லும் பாதையில் செல்லாமல் எதிர் திசையில் முகாம் அலுவலகத்தை விட்டு மர்மமான முறையில் வெளியேறியது.

    கண்டெய்னர் லாரி வந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் இதுகுறித்து தேர்தல் அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்:-

    ஜெகன்மோகன் ரெட்டி முகாம் அலுவலகத்திற்கு வந்த லாரியில் கட்டு கட்டாக பணம் இருந்திருக்கலாம். அதனை எந்திரங்கள் மூலம் எண்ணி அனுப்பி வைத்துள்ளனர் அல்லது ஆந்திர பிரதேச தலைமை செயலகத்தில் மறைத்து வைக்கப்பட்ட கோப்புகள் கடத்தி வரப்பட்டு இருக்கலாம். ஒருவேளை லாரியில் போதைப்பொருட்கள் கூட இருந்திருக்கலாம் என கூறினார்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள மற்ற எதிர்க்க ட்சிகளும் இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறுகையில்:- தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் தேவையற்ற ஒரு நாடகத்தை உருவாக்குகிறார்கள்.

    பல அரசு துறைகள் முதல்வரின் முகாம் அலுவலகத்தில் இயங்குகிறது. சம்பந்தப்பட்ட வாகனம் அலுவலகங்களுக்கு பொருட்களை எடுத்துச் சென்றிருக்கலாம்.

    அவர்கள் சொல்வது போல பணம் எதுவும் கொண்டு வரப்படவில்லை. விசாகப்பட்டினத்தில் பிடிபட்ட போதை பொருள் நிரப்பப்பட்ட கண்டெய்னர் லோகேஷின் உறவினர்களுக்கு சொந்தமானது என்பது மக்களுக்கே தெரியும் என்றார்.

    • ஜெர்மனி அதிகாரிகள் இடையே நடந்த உரையாடல் மூலம் நேட்டோ படையின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது.
    • ஜெர்மனி அதிகாரிகளின் ஆடியோ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகிறது.

    ஆனாலும் போரில் ரஷியாவின் கையே ஓங்கி உள்ளது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, நேட்டோ அமைப்பு தங்களது படைகளை அனுப்பினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியா எச்சரித்து உள்ளது.

    இந்த நிலையில் ரஷியாவின் கிரீமியா பாலத்தை ஏவுகணை மூலம் தாக்க ஜெர்மனி திட்டமிட்டதாக ரஷியா குற்றம் சாட்டியது. இது தொடர்பாக ஜெர்மனி ராணுவ அதிகாரிகள் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் கிரீமியா பாலத்தில் தாக்குதல் நடத்துவது குறித்து சாத்தியக் கூறுகள் ஜெர்மனி ராணுவ ஜெனரல்கள் விவாதித்த பதிவு இருப்பதாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

    நீண்ட தூர டாரஸ் ஏவுகணைகளை பயன்படுத்து வது உள்பட கிரிமீயா பாலத்தின் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஜெர்மனி ராணுவ அதிகாரிகள் பரிசீலித்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெர்மனி அதிகாரிகள் இடையே நடந்த உரையாடல் மூலம் நேட்டோ படையின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது.

    உக்ரைனில் நேட்டோ ராணுவ நடவடிக்கைகள் குறித்து ரஷியா உறுதியாக நம்புகிறது என்றார்.

    உக்ரைன் போரில் மற்ற நாடுகள், நேட்டோ அமைப்பு தலையிட கூடாது என்று ரஷியா எச்சரித்து வரும் நிலையில் ஜெர்மனி அதிகாரிகளின் ஆடியோ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது மிகவும் தீவிரமான விஷயம். இதனால் மிகவும் கவனமாகவும், தீவிரமாகவும் விரைவாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். இதற்கிடையே ஆடியோ விவகாரம் தொடர்பாக முழு விசாரணைக்கு ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் உத்தரவிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஆடியோவில் மாற்றங்கள் செய்யப்பட்டதா? என்பது எங்களால் உறுதியாக கூற முடியவில்லை" என்றார்.

    • தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு என பேசாமல் ஆட்சியில் அமர்ந்ததும் ஒன்றிய அரசு என்று பிரிவினை சித்தாந்தத்தை விதைத்து வருகிறார்.
    • பேரிடர் மேலாண்மை விதிகளின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஏற்கனவே விடுவிடுத்துள்ளது.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2019 பாராளுமன்ற தேர்தல் போல மோடி எதிர்ப்பலையை கட்டமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார்.

    முதல்-அமைச்சராக பொறுப்பேற்றது முதல் மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

    தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு என பேசாமல் ஆட்சியில் அமர்ந்ததும் ஒன்றிய அரசு என்று பிரிவினை சித்தாந்தத்தை விதைத்து வருகிறார்.

    அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் பா.ஜ.க அரசின் தாரக மந்திரம். நிதி ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின் படியே அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்கப்படுகிறது.

    பேரிடர் மேலாண்மை விதிகளின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஏற்கனவே விடுவிடுத்துள்ளது.

    இதுவரை ரூ.1000 கோடி வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை ஆராய வந்த மத்திய குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கும்.

    மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் போது பாதிப்பு ஏற்படும் என கருதும் மாநிலங்கள் அவர்களின் கருத்துக்களை ஆதாரங்களுடன் முன்வைத்தால் பாதிப்புகளை தடுக்க முடியும் என்று தான் மத்திய நிதி மந்திரி கூறினார்.

    ஆனால் இதனை வெள்ள நிவாரணத்துடன் தொடர்புபடுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திசை திருப்பி மக்களை ஏமாற்றுவதற்காகவே மத்திய அரசு மீது அவதூறு பரப்பி வருகிறார்.

    ஊழல், குடும்ப ஆட்சியின் அவலங்களால் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

    அதனை திசை திருப்பி மக்களை ஏமாற்றுவதற்காகவே மத்திய அரசு மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்ப, திரும்ப அவதூறு பரப்பி வருகிறார்.

    தமிழக மக்கள் என்றும் தேசியத்தின் பக்கம் தான் என்பது வரும் மக்களவை தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • முதலில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியே வருவது ஒரு கனவாக இருக்கிறது.
    • இரட்டை என்ஜின் அரசு என்பது வேலையில்லாதவர்களுக்கு இரட்டை அடி.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

    உத்தரபிரதேசத்தில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறைந்த பட்சத் தகுதியுள்ள பதவிகளுக்குக்கூட வரிசையில் நிற்கின்றனர்.

    முதலில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியே வருவது ஒரு கனவாக இருக்கிறது.

    ஆட்சேர்ப்பு முடிந்தாலும் கூட கேள்விதாள் கசிந்து விடுகிறது. தேர்வுகள் நடந்தாலும் கூட அதன் முடிவு தெரியாது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு முடிவு வந்தாலும் பணியில் சேர்வதுதை உறுதி செய்வதற்காக அடிக்கடி கோர்ட்டுக்கு செல்ல வேண்டும்.

    ராணுவத்தில் இருந்து ரயில்வே மற்றும் கல்வியில் இருந்து காவல்துறை வரை ஆட்சேர்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் வயது முதிர்ந்தவர்களாக மாறியுள்ளனர். இந்த விரக்தியின் பிரமைக்குள் சிக்கிய மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகி உடைந்து போகிறார். இவையனைத்தும் மன உளைச்சலுக்கு ஆளாகி, அவர் தனது கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கும் போது, காவல்துறையினரிடம் இருந்து தடியடிகளைப் பெறுகிறார். ஒரு மாணவனுக்கு, வேலை என்பது வெறும் வருமான ஆதாரமாக இல்லாமல், அவனது குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றும் கனவாகவும் இருக்கிறது, இந்தக் கனவு தகர்க்கப்படுவதால், ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையும் சிதறடிக்கப்படுகிறது.இரட்டை என்ஜின் அரசு என்பது வேலையில்லா தவர்களுக்கு இரட்டை அடி.

    காங்கிரசின் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளுக்கு நீதி வழங்கும். அவர்களின் தவத்தை வீண் போக விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி பொது பிரிவில் பிறந்தவர்.
    • சாதி குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புவனேஸ்வர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை நடத்தி வருகிறார். அவரது யாத்திரை, தற்போது ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்து வருகிறது. இன்று யாத்திரையில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    பிரதமர் மோடி, தனது சாதி பற்றி பொய் சொல்கிறார். அவர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் அல்ல. அவர் குஜராத்தில் தெலி சாதியில் பிறந்தவர். அந்த சமூகத்திற்கு 2000-ம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்டோர் அடையாளத்தை பா.ஜனதா வழங்கியது. பிரதமர் மோடி பொது பிரிவில் பிறந்தவர். பொது சாதியில் பிறந்தவர் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்கமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் காந்தி தனது யாத்திரையில் பிரதமர் மோடி, மத்திய அரசையும் விமர்சனம் செய்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை பற்றி பேசி வருகிறார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடியின் சாதி குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் சிறுபான்மையினருக்கு உரிய முறையில் அதிகமாகவே சென்றடைந்துள்ளன.
    • கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு பணிகளில் 4.5 சதவீதம் தான் சிறுபான்மையினர் இருந்தார்கள்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    ஆங்கிலேயர் அன்று செய்த அதே பிரிவினையை தி.மு.க.வும், காங்கிரசும் செய்து வருகிறது.

    வாக்கு அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்த்துள்ளது. சிறுபான்மையினரை பாதுகாக்கும் கட்சி என்று போலியாக கூறுகிறது. சிறுபான்மையினருக்கு தி.மு.க.-காங்கிரஸ் என்ன செய்தது?

    கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு பணிகளில் 4.5 சதவீதம் தான் சிறுபான்மையினர் இருந்தார்கள்.

    தற்போது அது 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 31 சதவீத வீடுகள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு உள்ளது. முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 36 சதவீதம் பேர் சிறுபான்மையினர். உஜ்வாலா திட்டத்தில் பயன் பெறுபவர்களில் 37 சதவீதம் பேர் சிறுபான்மையினர். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியை விட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் சிறுபான்மையினருக்கு உரிய முறையில் அதிகமாகவே சென்றடைந்துள்ளன.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் ஊழலற்ற மோடிக்கும் ஊழல் ஒன்றையே குறிக்கோளாக வைத்திருக்கும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கும் எதிரான தேர்தல்.

    இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.

    • ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் மந்திரி தெரிவித்தார்.
    • பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தப் புதிய வழிகாட்டு விதிகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் அவற்றைப் பொதுப் பிரிவினருக்கான இடங்களாக மாற்றி மற்ற பிரிவினரைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம்" என்று பல்கலைக்கழக மானியக்குழு புதிய வழிகாட்டு விதிகளை உருவாக்கியுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பல்லாயிரக்கணக்கான பணி இடங்களை நிரப்பாமல் காலியாக வைத்திருந்தார்கள். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 12.12.2022 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்குப் பதில் அளித்த ஒன்றிய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் "பின்னடைவு காலிப் பணியிடங்களையெல்லாம் உடனடியாக நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், இதற்காகக் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு மாதந்தோறும் அது ஆய்வு செய்கிறது என்றும்; 2019-ம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்கள் ( ஆசிரியர் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்தவொரு பணியிடமும் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படவில்லை என்றும் பதிலளித்திருந்தார்.

    அதுமட்டுமின்றி, மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்.சி. பிரிவினருக்கென ரிசர்வ் செய்யப்பட்ட 307 பேராசிரியர் பதவிகளில் 231 இடங்களும்; 620 இணைப் பேராசிரியர் பதவிகளில் 401 இடங்களும்; 1,357 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 276 இடங்களு ம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்றும்; எஸ்.டி. பிரிவினருக்கு அது போலவே 123 பேராசிரியர், 232 இணைப்பேராசிரியர் மற்றும் 188 உதவிப்பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளன என்றும் தெரிவித்தார்.

    ஓ.பி.சி. பிரிவினருக்கு 367 பேராசிரியர் பதவிகளில் 311 இடங்களும்; 752 இணைப்பேராசிரியர் பதவிகளில் 576 இடங்களும்; 2332 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 672 இடங்களும் நிரப்பப்படவில்லை என்றும், ஐ.ஐ.டி.-களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 11,170 ஆசிரியர் பதவிகளில் 4,502 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும், ஐ.ஐ.எம்.களில் எஸ்.சி. பிரிவினருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட 97 பதவிகளில் 53 இடங்களும் எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 40 பதவிகளில் 34 இடங்கள் நிரப்பப்படவில்லை. ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் மந்திரி தெரிவித்தார்.

    நாடாளுமன்றத்தில் இவ்வாறு பதிலளித்துவிட்டு இப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரின் இட ஒதுக்கீட்டையே ஒழித்துக் கட்டுவதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

    அதன் அடிப்படையிலேயே, இப்போது பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டு விதிகளை வகுத்திருக்கிறது. பார்ப்பனர் அல்லாதார் அனைவரையும் தற்குறிகளாக மாற்ற முயற்சிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தப் புதிய வழிகாட்டு விதிகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இதனை வலியுறுத்தி அனைத்து ஜனநாயக சக்திகளும் களமிறங்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்கும் கிரீமி லேயர் முறையை நீக்க வேண்டும்.
    • பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவதை கட்டாயமாக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவதற்கு அனுமதிக்க பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்திருக்கிறது. இது உயர்கல்வி நிறுவன வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை நேரடியாக ஒழிப்பதற்கான சதி ஆகும்.

    இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவதை கட்டாயமாக்க வேண்டும். ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்கும் கிரீமி லேயர் முறையை நீக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில் மனிதநேய உதவிகளை செய்து வருகிறது.
    • 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

    இதையடுத்து ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதில் 26 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது.

    இதற்கிடையே இஸ்ரேல் மீதான அக்டோபர் 7-ந்தேதி தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு தெரிவித்தது.

    ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில மனிதநேய உதவிகளை செய்து வருகிறது. இதில் 13 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனியர்கள். இந்த முகமை மீதான குற்றச்சாட்டையடுத்து சில ஊழியர்களை ஐ.நா. பணிநீக்கம் செய்தது.

    இந்நிலையில் ஐ.நா. வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா, இங்கிலாந்து அறிவித்தன. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, "இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் அமைப்பு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப் படும் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. அந்த அமைப்புக்கு நிதிஉதவி அளிப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று தெரிவித்தது. இதே கருத்தை இங்கிலாந்தும் தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதிஉதவியை நிறுத்துவதாக மேலும் 7 நாடுகள் அறிவித்தது. கனடா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர் லாந்து, பின்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் நிதிஉதவி அளிப்பதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. நிதிஉதவியை நிறுத்தியதற்கு பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை தலைவர் பிலிப் லாசரினி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "நிதிஉதவியை நிறுத்துவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த அமைப்பு காசாவில் முதன்மையான மனிதாபிமான நிறுவனமாகும். அதில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர். போருக்கு மத்தியில் இதுபோன்ற முடிவுகள் ஏற்கனவே தலைவிரித்தாடும் பஞ்சத்தை அதிகரிக்க செய்யும். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மேலும் ஒரு கூட்டுத் தண்டனையை கொடுக்காதீர்கள்" என்றார்.

    • சர்வதேச கோர்ட்டில் இந்த தீர்ப்பால் இஸ்ரேலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    • நாங்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

    ஜெருசலேம்:

    பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

    காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக கூறி தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 26 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    காசாவில் இஸ்ரேல், இனப்படுகொலையில் ஈடுபடுவதாக ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது. இதில் விசாரணை நடை பெற்று வரும் நிலையல் நேற்று கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு வழங்கியது.

    அதில், காசாவில் இனப்படுகொலை தவிர்க்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. சர்வதேச கோர்ட்டில் இந்த தீர்ப்பால் இஸ்ரேலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சர்வதேச கோர்ட்டு தீர்ப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    இஸ்ரேல் மீது சுமத்தப்பட்டுள்ள இனப்படுகொலை குற்றச்சாட்டு தவறானது மட்டுமல்ல, அது மூர்க்கத்தனமானது, எல்லா இடங்களிலும் உள்ள கண்ணியமான மக்கள் அதை நிராகரிக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டையும் போலவே, இஸ்ரேலுக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒரு உள்ளார்ந்த உரிமை உள்ளது. இந்த அடிப்படை உரிமையை இஸ்ரேலுக்கு மறுக்கும் மோசமான முயற்சி. இஸ்ரேல் அரசுக்கு எதிரான அப்பட்டமான பாகுபாடு ஆகும். எங்கள் நாட்டைப் பாதுகாக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் தேவையானதை தொடர்ந்து செய்வோம்.

    ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும். இஸ்ரேலின் போர் ஹமாசுக்கு எதிரானது. பாலஸ்தீன மக்களுக்கு எதிரானது அல்ல. தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவோம், பொதுமக்களை ஹமாஸ் அமைப்பினர் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே காசாவின் கான்யூனுஸ் நகரில் தொடர்ந்து தாக்குதல் நடைபெறும் நிலையில் அங்குள்ள நாசர் ஆஸ்பத்திரியில் முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதே போல் அங்குள்ள மற்ற ஆஸ்பத்திரிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    • தாய்-சேய் நட்பு மருத்துவமனை முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் கேரளா.
    • வருகிற 31-ந்தேதிக்குள் இந்த பெயர் மாற்றத்தினை முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்- மந்திரி மற்றும் மந்திரிகள் இணைந்து சென்று மக்களை சந்திக்கும் நவ கேரள சதஸ் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி மலப்புரம் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தாய்-சேய் நட்பு மருத்துவமனை முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் கேரளா. மற்ற மாநிலங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை காட்டிலும் கூடுதல் சேவைகளை வழங்கி நாட்டிற்கு முன்னோடியாக நமது மாநிலம் திகழ்கிறது.

    சுகாதாரத்துறை முழுவதும் மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், சமீபத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வருகிற 31-ந்தேதிக்குள் இந்த பெயர் மாற்றத்தினை முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. பெயர் மாற்றத்தின் மூலம், சுகாதாரத்துறையில் மாநிலத்தின் சாதனைகளுக்கான பெருமையை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு திருட முயற்சிக்கிறது. இது ஆரோக்கியமான செயல் அல்ல.

    மேலும் கேரளா, கோ-பிராண்டிங்கை மேற்கொள்ளவில்லை என்று கூறி, பல்வேறு மானியங்கள், ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்களில் மத்திய பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேர்தலின்போது தி.மு.க. அளித்த 511 வாக்குறுதிகளில் 20-ஐ கூட நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்
    • துறையூர் நடைபயணத்தில் பேச்சு

    துறையூர்,

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நேற்று துறையூர் சட்டமன்றத் தொகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார். அவருக்கு திருச்சி புறநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    துறையூர் சட்டமன்ற தொகுதியில் துறையூர் சிலோன் ஆபீஸ் பகுதியில் நடைபயணத்தை ஆரம்பித்த அண்ணாமலை பெரிய கடை வீதி, பாலக்கரை,திருச்சி ரோடு வழியாக சென்று துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு தனது நடை பயணத்தை முடித்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:-

    திமுக அரசு பொறுப்பேற்ற 30 மாதங்களில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக துறையூர் பகுதியில் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவரின் மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் தி.மு.க.வினரால் பலமாக தாக்கப்பட்டார்.

    வருவாய் துறையில் பணிபுரியும் வி.ஏ.ஓ., ஆர்.ஐ. உள்ளிட்ட அரசு அலுவலர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்கும் நிலையில் உள்ளது தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, சொல்லும் படி எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பா.ஜ.க. குரல் கொடுத்த உடன் விவசாயிகள் மீதான குண்டர் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு கைவிட்டது. இதிலிருந்தே விவசாயிகளின் மீது தி.மு.க.விற்கு எந்த அளவுக்கு அக்கறை உள்ளது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

    தி.மு.க.வில் உள்ள பல நபர்களுக்கு சொந்தமாக மருத்துவ கல்லூரி இருப்பதால், தங்களிடம் உள்ள சீட்டுகளை விற்பனை செய்ய முடியாததால், நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மத்திய அரசு பி.எம். கிசான் திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய், 100 நாள் வேலை திட்டத்திற்கு 55 ஆயிரம் கோடி, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது.

    ஆனால் தி.மு.க.வோ கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 511 வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் இது நாள் வரை அதில் 20 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. உதாரணமாக துறையூர் தொகுதிக்கு புதிய பேருந்து நிலையம், பாதாள சாக்கடை திட்டம், புறவழிச்சாலை, அரசு கலைக் கல்லூரி, முந்திரி தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறியும், இதில் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை.

    தற்சமயம் தமிழக முழுவதும் வாக்காளர் சேர்க்கை நடைபெற்று வருவதால், அனைத்து இளைஞர்களும் வாக்காளராக பதிவு செய்து மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கவும், மோடி 3-வது முறையாக பிரதமராக அமர பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்து ஏராளமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலத் துணைத் தலைவர் வி.பி துரைசாமி, சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×