search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accused"

    • கைரேகை , ரத்த மாதிரிகள் சேகரித்து கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • கொலையாளிகள் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (வயது 57), கருணாஸ் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் காலாப்பட்டு மத்திய சிறைக்கு சென்று சிறுமி கொலையாளிகளான விவேகானந்தன், கருணாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் அவர்களின் கைரேகை, ரத்த மாதிரிகள் சேகரித்து கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் கைதான 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், புதுச்சேரி போக்சோ விரைவு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சோபனா தேவி, கொலையாளிகள் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

    இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. சிறுமியை எப்படி அழைத்து சென்றனர். அவளை கொன்று கால்வாயில் வீசியதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அவர்களிடம் போலீசார் கேட்டனர். விசாரணை முடிவில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.

    திருச்சி:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் கடந்த 2022 நவம்பர் 11-ந் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என்பதால் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் இவர்கள் சிறப்பு முகாமில் காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தங்களை உடனடியாக சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி, முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் கால வரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில்

    'ராபர்ட் பயஸ் மயக்கமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக' கடந்த 2 நாட்களுக்கு முன் அவரை காணச் சென்ற வழக்கறிஞர் புகழேந்தி குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில் முருகன் மனைவி எஸ். நளினி தமிழக அரசின் தலைமைச் செயலர், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உருக்கமான ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    நானும் எனது கணவர் முருகனும் கடந்த 11-11-2022 அன்று உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டோம். அதன் பின்னர் எனது கணவரை அவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைத்துவிட்டனர்.

    சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டது முதல் எனது கணவர் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்.

    எனது கணவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தும் இதுவரை அவரை இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் சென்று பாஸ்போர்ட் விண்ணப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சிறையில் இருந்து எனது கணவர் விடுதலை ஆனாலும் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளார். சிறப்பு முகாமிற்குள் எனது கணவர் நடைபயிற்சி கூட செய்ய அனுமதிப்பதில்லை.

    எந்தவித விளையாட்டும் விளையாட அனுமதிப்பதில்லை. மேலும் எனது கணவர் மட்டும் மற்ற முகாம் வாசிகளை பார்க்கவோ, பேசவோ, முடியாத அளவில் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    அவர் முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.

    இந்த சிறப்பு முகாமில் முறையான உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிறப்பு முகாமில் இறந்துவிட்டார்.

    அவர் தனக்கு மாத்திரை வேண்டும் என்று கேட்ட போது உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கொடுக்கவில்லை. ஏற்கனவே இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி எனது கணவர் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.

    எனது கணவரை கடந்த 5-ம் தேதி நான் முகாமில் சந்தித்தபோது அவர் உடல் மெலிந்து 15 கிலோ எடை குறைந்து காணப்பட்டார்.

    எனது கணவர் இன்றுடன் 12 நாட்கள் உணவு உட்கொள்ளாத நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.

    மேலும் தற்போது எனது கணவர் சிறப்பு முகாமில் மயங்கிய நிலையில் உள்ளதாகவும் அவருக்கு முகாமில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் அவரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும் என அஞ்சுகிறேன் எனவே இந்த கடிதத்தை கருணையுடன் பரிசீலனை செய்து எனது கணவர் உயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    • திட்டத்தின் நம்பகத் தன்மையை களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்
    • கேரளாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேச பாரதிய ஜனதா தயாராக இல்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள கூட்டிக்கல் பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரால் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கான சாவியை பயனாளிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

    அவர் பேசும்போது, மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். கேரளாவில் செயல்படுத்தப்பட்டு வரும் லைப் மிஷன் வீட்டுத் திட்டத்தை, மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி சிலர் இழிவுபடுத்த முயல்கின்றனர். அவர்கள் லைப்மிஷன் திட்டம் குறித்து பொய் பிரசாரம் செய்கின்றனர்.

    மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், திட்டத்தின் நம்பகத் தன்மையை களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார். கேரளாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேச பாரதிய ஜனதா தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.

    • இதுதான் தி.மு.க.வின் ஒப்பற்ற சாதனை.
    • பிரதமர் மோடி கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மணப்பாறை பகுதியில் யாத்திரை சென்றார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    மணப்பாறை தொகுதியில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்தவர் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    இந்த கட்சிக்கு தமிழகத்தில் இருக்கும் ஒரே வேலை பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதுதான். இந்த கட்சியை மனிதநேய மற்ற கட்சி என்றுதான் அழைக்க வேண்டும்.

    மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். ஆனால் பணியின் போது கிடைக்கும் சரளை மண்ணுக்காக கல்லூரியை காலனி வாசல் பட்டிக்கு மாற்றிவிட்டார்கள். இது வரை கல்லூரி கட்டவில்லை. சொந்த கட்டிடம் இல்லாமல் பள்ளிக்கூட கட்டிடத்தில் கல்லூரி செயல்படுகிறது. எய்ம்ஸ் பற்றி பேச தி.மு.க. வுக்கு என்ன தகுதி இருக்கிறது?

    புதிதாக டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு குடிப்பழக்கம் கேடு விளைவிக்கும் என்று, டாஸ்மாக்கில் மது விற்பனை செய்பவர், அறிவுரை கூறுவார் என்றார் அமைச்சர் முத்துசாமி.

    மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். சென்ற ஆண்டு டாஸ்மாக்கில் சராசரியாக மது குடிப்போர் எண்ணிக்கை 80 லட்சமாக இருந்தது, தற்போது 90 லட்சமாக உயர்ந்துள்ளது என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது. இதுதான் தி.மு.க.வின் ஒப்பற்ற சாதனை.

    தமிழ்நாட்டை முழுவதுமாக குடிகார மாநிலமாக மாற்றும் வரை அமைச்சர் முத்துசாமி ஓயமாட்டார். வரும் பாராளுமன்ற தேர்தலில், இத்தகைய மக்கள் விரோத தி.மு.க. கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும். தமிழக மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கியுள்ள பிரதமர் மோடி கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பட்டுள்ளார்.

    • தீர்ப்பளித்த வில்கின்சன் தன் வீட்டு வாசலில் சடலமாக கிடந்தார்
    • சலாசின் மகனை டிரைவர் வேடமணிந்து வந்து ராய் சுட்டு கொன்றான்

    அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநில நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தவர் 52 வயதான ஆண்ட்ரூ வில்கின்சன் (Andrew Wilkinson). இவர் கடந்த வாரம் ஒரு விவாகரத்து வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார். இதன் பிறகு அந்த வழக்கில் சம்பந்தபட்ட பெண்ணுக்கு சாதகமான உத்தரவை பிறப்பித்தார்.

    இதையடுத்த சில மணி நேரங்களில் ஹேகர்ஸ்டவுன் பகுதியில் உள்ள வில்கின்சனின் வீட்டு வாசலில் அவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் விசாரித்து வந்த வழக்கில் சம்பந்தபட்ட அப்பெண்ணின் கணவன் பெட்ரோ அர்கோட் (Pedro Argote) என்பவனை காவல்துறையினர் சந்தேகித்து தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், மேரிலேண்ட் நீதிபதி ஆண்ட்ரூ வில்கின்சன் உயிரிழந்ததற்கு, நியூ ஜெர்சி மத்திய நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரியும் எஸ்தர் சலாஸ் (Esther Salas), தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    நீதிபதி வில்கின்சனை போன்று, நீதிபதி எஸ்தரும் சில வருடங்களுக்கு முன் ராய் டென் ஹாலேண்டர் (Roy Den Hollander) என்பவரின் வழக்கில் அவருக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்தார். இதனால் சலாஸ் மீது ஆத்திரத்தில் இருந்த ராய், ஒரு டெலிவரி வாகன ஓட்டுனராக வேடமணிந்து வந்து 20 வயதே ஆன சலாஸின் மகன் டேனியல் ஆண்ட்ரியை சுட்டு கொன்று, சலாஸின் கணவர் மார்க் ஆண்ட்ரியை கடுமையான காயங்கள் ஏற்படும் அளவிற்கு தாக்கி விட்டு ஓடி விட்டான். பிறகு காவல்துறையினரால் தேடப்படும் போது தனக்கு தானே ஏற்படுத்தி கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தான்.

    இப்பின்னணியில் நீதிபதி எஸ்தர் சலாஸ் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    வில்கின்சன் குடும்பத்தினரை நன்கு அறிவேன். அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கல்கள். நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளில் எவருக்கோ எங்கேயே அதிருப்தி இருந்து கொண்டுதான் இருக்கும். எனவே அமெரிக்காவின் அனைத்து மாநில நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் வகையில் சட்டங்கள் உருவாக்க வேண்டும். நியூ ஜெர்சியை போல ஒரு சில மாநிலங்களே இதற்காக போராடி வருகின்றன. பிற மாநிலங்கள் தங்களுக்கு உகந்த சட்டதிட்டங்களை நீதித்துறையில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி உருவாக்க வேண்டும். மத்திய, மாநில மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களில் வில்கின்சனை போன்று எத்தனை நீதிபதிகள் கொல்லப்பட்டனர் என்பது பற்றிய விவரங்கள் சரியான வகையில் இல்லை. நீதிபதிகளின் பாதுகாப்பை அலட்சியபடுத்தியதை நினைவூட்டுவதே வில்கின்சன் மரணம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தாங்கள் பெறும் அதிக ஊதியத்தில் இருந்து நீதிபதிகள் தங்கள் பாதுகாப்பிற்கு தாங்களாகவே பாதுகாப்பாளர்களை நியமித்து கொள்ள வேண்டும் என ஒரு சாராரும், நீதிபதிகள் மக்களுக்கு பணியாற்றுவதால் அவர்கள் பாதுகாப்பிற்கு அரசே பொறுப்பு என மற்றொரு சாராரும் இது குறித்து சமூக வலைதலங்களில் விவாதித்து வருகின்றனர்.

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    • அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பூங்காவை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து மாநகராட்சியாக கடந்த 2021-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி மேயராக மகாலட்சுமி உள்ளார்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் வளர்ச்சி திட்டங்கள் முழுமை அடையவில்லை என்றே கூறப்படுகிறது.

    கலெக்டர் அலுவலகம் அருகே பல்லவன் நகரில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த பெருநகராட்சி என்ற பெயர் பலகைகள் கூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளன. மாநகராட்சி என்று பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. மேலும் பூங்கா முழுவதும் புதர் மண்டி காடுபோல் காட்சி அளிக்கிறது. அங்குள்ள விளையாட்டு சாதனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு காட்சி அளிக்கின்றன. இதனால் இந்த பூங்காவுக்கு செல்வதையே பெரும்பாலானோர் தவிர்த்து வருகிறார்கள்.

    இந்த பூங்கா கடந்த 2017-ம் ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது பூங்கா சரிவர சீரமைக்கப்படாமல் அலங்கோலமாக காட்சிஅளிப்பதால் இங்கு வரும் பொதுமக்கள் முகம்சுளித்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கூட்டத்திலும் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த மாதம் நடந்த கூட்டத்திலும் இந்த பூங்காவை சீரமைக்க ரூ.2 லட்சம் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    ஆனாலும் இதுவரை பூங்காவை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காஞ்சிபுரம் பெருநகராட்சி என்ற பெயர் பலகையும் மாநகராட்சியாக தரம் உயராமல் அப்படியே காட்சி அளிப்பதால் இதனை பார்த்து செல்லும் மக்கள் பூங்காவில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆவது எப்போது? என்ற கேள்வியுடனே செல்கிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் வளர்ச்சிப்பணிகளில் மாறவில்லை. போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் அலுவலகம் அருகே பல்லவன் நகரில் உள்ள பூங்காவை சீரமைக்க மாநகராட்சி கூட்டத்தின் போது அனுமதி அளிக்கப்பட்டாலும் இதுவரை பணிகள் நடைபெறவில்லை.இதற்காக காரணம் என்ன என்று தெரிவியவில்லை.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மண்டல குழு அலுவலகங்கள் புதிதாக புனரமைக்க வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பூங்காவை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • முந்தைய அரசாங்கம் மாபியா கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கறை காட்டவில்லை.
    • குற்றவாளிகள் மற்றும் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச மக்கள் விரும்புகிறார்கள்.

    உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உத்தரபிரதேச மாநில வளர்ச்சி பாதையில் யாராவது தடைகளை உருவாக்கினால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரபிரதேசத்தில் முந்தைய அரசாங்கம் மாபியா கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கறை காட்டவில்லை. அரசு சொத்துக்களை சட்ட விரோதமாக அபகரித்தவர்களுக்கு நான் ஆரத்தியா எடுக்க முடியும்? குற்றவாளிகள் மற்றும் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச மக்கள் விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    மாநிலத்தில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்த கலவரமும் நடக்கவில்லை. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அனைத்து பண்டிகைகளும் அமைதியாக கொண்டாடப்படுகிறது என்றார்.

    • ராஜேஷ், தினேஷ்குமாரிடையே பிரச்சினை எழுந்தது.
    • 10 பேரும் தினேஷ்குமாரின் கை, கால்களை அமுக்கி பிடித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு ஜெய் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 30), பெயிண்டர். இவர் மீது கொலை முயற்சி, அடி தடி, வழிப்பறி என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவருக்கும், ராஜேஷ் என்பவருக்குமிடையே 'யார் பெரிய ரவுடி' என்ற முன்விரோத மோதல் உள்ளன. இதன் காரணமாக தினேஷ்குமாரை கொல்ல ராஜேஷ் திட்டமிட்டார்.

    நேற்று முன்தினம் இரவு ராஜேஷ், தினேஷ்குமார் உட்பட 10 பேர் கொண்ட கும்பல் சந்திராபுரத்தில் உள்ள மதுக்கடையில் மது அருந்தினர். அப்போது ராஜேஷ், தினேஷ்குமாரிடையே பிரச்சினை எழுந்தது. உடன் வந்த நண்பர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து முன்விரோதம் தொடர்பாக சமாதானப் பேச்சு நடத்தலாம் என கூறி தினேஷ்குமாரை கே.என்.பி., சுப்ரமணியம் நகருக்கு அழைத்து சென்றனர். காட்டுப்பகுதிக்குள் சென்ற போது மீண்டும் இருவருக்குமிடையே தகராறு எழுந்தது. இதில் ராஜேஷ் உட்பட, 10 பேரும் தினேஷ்குமாரின் கை, கால்களை அமுக்கி பிடித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், (28), கண்ணன் (25), தினேஷ் (26), பாலாஜி சரவணன் (28), தமிழரசன், (25), பாலகிருஷ்ணன், (25) என 6 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 3 ேமாட்டார் சைக்கிள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜேஷ், ராம்குமார் உட்பட 4 பேரை போலீசார் தேடி வந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து வெளியூர் தப்பி செல்ல முயன்ற முக்கிய குற்றவாளி ராஜேஷை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து நள்ளிரவு கைது செய்தனர்.அவரிடம் நல்லூர் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ராஜேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் 6பேர் மீது கஞ்சா, கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்கு உள்ளன. ஜாமீனில் எடுக்க உதவி செய்யாதது தொடர்பாக தினேஷ்குமார், ராஜேஷிடம் முன்விரோதம் இருந்தது. 'யார் பெரிய ரவுடி' என்ற பிரச்னை முற்றி போய், தற்போது கொலையில் முடிந்தது.

    6 பேரில் பாலாஜி சரவணன், மணிகண்டன் மற்றும் தலைமறைவாக உள்ள ராம்குமார் ஆகியோர் மீது கடந்த, 2022 திருப்பூர் எம்.பி., நகர் காட்டு பகுதியில் சதீஷ் என்ற வாலிபரை கொடூரமாக கொலை செய்து, தலையை துண்டித்த வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மேகதாது அணை பிரச்சனைக்காக 12 வருடத்திற்கு முன்பாகவே ஆயிரம் பேரை திரட்டி நான் போராட்டம் நடத்தினேன்.
    • கிருஷ்ணராஜசாகரில் தண்ணீர் வந்து சேராமல் தமிழ்நாடு பஞ்சப் பிரதேசமாக ஆக்கப்படும்.

    மதுரை:

    மதுரை செக்கானூரணியில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமான மூலம் இன்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரெயில்வே துறை வரலாற்றிலேயே மிக கொடூரமான, கோரமான விபத்து ஒடிசாவில் ஏற்பட்டது. இது தொழில்நுட்ப கோளாறா ? அல்லது சதி வேலையா? என்பது பிரச்சனைக்குரியதாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    அப்படி சதி வேலையாக இருக்குமானால் அதை செய்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள், 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். எனவே ரெயில் பயணம் என்பதே ஆபத்தை உண்டாக்கும் என்கிற பயத்தை உண்டாக்கி இருக்கிறது.

    இந்த சூழலில் இதை தீவிரமாக ஆய்வு செய்து உண்மை காரணத்தை கண்டுபிடித்து, அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. இதில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அனுப்பி வைத்து செயல்பட்டது பாராட்டுக்குரியதாகும்.

    மேலும் மேகதாது அணை பிரச்சனைக்காக 12 வருடத்திற்கு முன்பாகவே ஆயிரம் பேரை திரட்டி நான் போராட்டம் நடத்தினேன். அப்போதே மேகதாதுஅணை கட்டியே தீருவோம் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு பணமும் ஒதுக்கப்பட்டுவிட்டது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மத்திய அரசு அதை வேடிக்கை பார்க்கும். அது தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கிருஷ்ண ராஜசாகரில் தண்ணீர் வந்து சேராமல் தமிழ்நாடு பஞ்சப் பிரதேசமாக ஆக்கப்படும். இது நமது தலைக்கு மேலே கத்தி போல தொங்கி கொண்டிருக்கும் பேராபத்து. மத்திய அரசு இதில் வஞ்சகம் செய்யும் என்பதுதான் என் குற்றச்சாட்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பூமிநாதன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செய லாளர் முனியசாமி, பாஸ்கர் சேதுபதி, மகபூப்ஜான் உள்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக மதுரை விமான நிலையத்திற்கு வந்த வைகோ, மதுரை 44-வது வார்டு கவுன்சிலர் தமிழ் செல்வியின் பேரனுக்கு ஆதித்த கரிகாலன் என்று பெயர் சூட்டினார். 

    • காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தி.மு.க. அமைச்சர் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக நவாஸ் கனி எம்.பி. குற்றம் சாட்டினார்.
    • பா.ஜ.க. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ்வாறு செயல்பட்டு வருவதாக கூறினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட நெல்மடூர் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப் பட்டது. அதனை நவாஸ் கனி எம்.பி. தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

    முன்னதாக நெல்மடூர் ஊராட்சி மன்றத்தலைவி சுகன்யா சதீஷ் சால்வை அணிவித்து வரவேற்று பேசினார். பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    இதைத்தொடர்ந்து நவாஸ்கனி எம்.பி. பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தி.மு.க. அமைச்சரின் வீடுகளில் வரு மான வரித்துறை சோதனை நடந்தது. பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ்வாறு செயல்பட்டு வருகிறது.

    கொங்கு மண்டலத்தில் தி.மு.க. வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.கவை எப்படியாவது ஒடுக்கி விடலாம் என நினைத்து இதுபோன்ற செயலை பா.ஜ.க. செய்து வருகிறது. இதற்கெல்லாம் தி.மு.க. வினர் பயப்பட மாட்டோம்.

    கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும் நபராக இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ. 6 லட்சம் மதிப்பில் நடைபாதை அமைக்கப்பட்டது.
    • காலில் மிதிக்கும் போது, சிமெண்ட் அப்படியே வருகிறது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டப்பெட்டு அருகே உள்ளது பில்லிக்கம்பை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சக்தி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அண்மையில் ரூ. 6 லட்சம் மதிப்பில் நடை பாதை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த நடைபாதை மிகவும் மோசமாக உள்ளது. காலில் மிதிக்கும் போது, சிமெண்ட் அப்படியே வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பணி செய்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே தரமற்ற நடைபாதை அமைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தூத்துக்குடியில் நடைபெற்ற தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் தங்கள் நலனை மட்டுமே சிந்தித்தார்கள் என அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டி உள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பேருந்துநிறுத்தம் அருகில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் அறநிலைத்துறை மூலம் ரூ.2500 கோடி மதிப்புள்ள கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டுள்ளது. 81 கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.  வரும் ஆண்டில் ஆயிரம் கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு குடமுழுக்கு பணிகளுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூசாரிகளுக்கு மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

    சமூக நலத்துறை மூலம் காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். 
    தமிழகம் முழுவதும் குழந்தைகள் கணக்கெடுப்பின் மூலம் 10 லட்சம் குழந்தைகள் சத்துக்குறைவு உள்ளது என கண்டறியபட்டு அதற்கு தேவையான ஊட்டச்சத்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    குழந்தை பருவம் தான் நல்ல ஆரோக்கியம், மூளை வளர்ச்சி, அறிவுத்திறன் பெறும் காலம் கர்ப்பினி பெண்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்து தேர்வு எழுதி அரசு பணியில் சேர்வதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தமிழில் எழுத்து தேர்வு பெற்று வெற்றி பெற வேண்டும். தமிழர்களுக்கு மட்டும்  தான் இனி அரசு வேலை என்பதை முதல்-அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

    மாவட்டத்தில் 1100 ஏக்கரில் ரூ.1400 கோடி முதலீட்டில் பர்னிச்சர் பூங்கா அமைப்பதற்காக முதல்கட்ட பணியாக சாலை போடும் பணி நடைபெறுகிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களிலிருந்து இங்கு தொழில் தொடங்க தயாராகி வருகின்றனர். இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்வீட்டு பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 
    அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களுக்கு மாதந்தோறும் 600 முதல் 1200 வரை மிச்சப்படுகிறது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில் தற்போது அதன்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி நடைபெற்ற சம்பவங்களில் ஒன்று தான். விருதுநகர் சம்பவம் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு எல்லா தொலை தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. 

    இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாத எடப்பாடி பழனிசாமி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்கிறார். கடந்த 10 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக வளர்ச்சிக்கென்று எந்த திட்டங்களும் செயல்படுத்தாமல் அமைச்சர்களின் நலன் மட்டுமே முக்கியம் என்று பணியாற்றினார்கள் தி.மு.க. ஆட்சியில் ஓராண்டு சாதனை அனைவரும் வரவேற்கும் வகையில் உள்ளது.
    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநில பேச்சாளர்கள் இளங்கோவன், இருதயராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா உள்பட பலர் பேசினார்கள். 
    ×