search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் மறியல்
    X

    காஞ்சீபுரம் அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் மறியல்

    காஞ்சீபுரம் அருகே குடிநீர் வழங்க கோரி மதுராந்தகம்- உத்தரமேரூர் செல்லும் சாலையில் பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் 3 பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மதுராந்தகம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் தண்டலம் கிராமத்துக்கு 3 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை.

    இது குறித்து ஊராட்சி மன்ற செயலாளர் கோதண்டராமனிடம் தண்டலம் கிராம மக்கள் புகார் செய்தனர். தங்கள் கிராமத்துக்கு 2 கிணறுகளில் இருந்தும் ஆபரேட்டர்கள் சீராக குடிநீர் வழங்கவில்லை.

    எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பிறகும் குடிநீர் சப்ளை முறையாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து 3 மாதங்களாக சீராக அனைத்து குடும்பங்களுக்கும் கிடைக்கும் வகையில் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று காலை மதுராந்தகம்- உத்தரமேரூர் செல்லும் சாலையில் பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் 3 பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் அங்கு சென்ற மேல்மருத்துவத்தூர் போலீசார் பொது மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதுபோல் திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி காலனிக்கு 35 நாட்களாக குடிநீர் வரவில்லை. இங்கு 350 குடும்பங்கள் உள்ளனர். குடிநீர் வராததை கண்டித்து இன்று காலை 8 மணி அளவில் இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் திருத்தணி-நாகலாபுரம் சாலையில் மறியல் செய்தனர்.

    தகவல் அறிந்ததும் திருத்தணி தாசில்தார் நரசிம்மன், பி.டி.ஓ. லட்சுமணன் ஆகியோர் அங்கு சென்று சமாதானம் செய்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக அங்கு 1 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது. #Tamilnews
    Next Story
    ×