search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayalalithaa"

    • தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்ற முதன்மை முழக்கத்தோடு அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.
    • அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது உழைத்து பார் போற்றும் வெற்றியை உறுதி செய்வோம்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் வகையில் "தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம்" என்கிற முழக்கத்துடன் கூடிய இலச்சினை மற்றும் ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் ஜெயலலிதா பேசிய பிரசார ஆடியோ இன்று வெளியிடப்பட்டது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி அதனை வெளியிட்டார்.

    பின்னர் அவர் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்ற முதன்மை முழக்கத்தோடு அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.

    தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும், நிச்சயம் எங்களை வெற்றி பெற செய்வார்கள்.

    விரைவில் அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும். அதனை விரைவில் அறிவிப்போம்.

    எங்களிடம் மத்திய அரசின் அதிகாரமோ, மாநில அரசின் அதிகாரமோ இல்லை. எங்கள் கட்சியின் இதய தெய்வங்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நல்லாசி உள்ளது. 2 கோடியே 6 லட்சம் தொண்டர்கள் எங்களுக்கு பலமாக உள்ளனர். தமிழக மக்களும் எங்களை ஆதரிக்க தயாராகி விட்டனர்.

    இன்று தொடங்கி உள்ள பிரசாரத்தை அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் முன்னெடுத்து உள்ளனர். இரவு-பகல் பாராமல் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது உழைத்து பார் போற்றும் வெற்றியை உறுதி செய்வோம்.

    கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலும் அ.தி.மு.க. சார்பில் 37 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சென்றார்கள். எங்களது குரல் பாராளுமன்றத்துக்குள் வலுவாக ஒலித்தது. தமிழக நலனுக்காக எங்களது எம்.பி.க்கள் குரல் கொடுத்தார்கள்.

    அப்போது 14,619 கேள்விகளை எங்கள் எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்குள் எழுப்பி உள்ளனர். தற்போது தி.மு.க. சார்பில் உள்ள 38 எம்.பி.க்கள் 7 ஆயிரம் கேள்விகளை கேட்டு உள்ளனர். இதன் மூலம் எங்களது செயல்பாடும், அவர்களது செயல்பாடும் தெரியும்.

    காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தை நாங்கள் தான் அமைத்தோம். தற்போது மேகதாது விவகாரம் விசுவரூபம் எடுத்துக்கொண்டு இருக்கிறது. அதுபற்றி தி.மு.க. எம்.பி.க்கள் கவலைப்படவில்லை.

    காவிரி மேலாண்மை ஆணையத்திலும் அவர்களால் சிறப்பான வாதத்தை எடுத்து வைக்க தெரியவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ஒழிப்பேன் என்று வாக்குறுதி அளித்தனர். விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று சொன்னார். ஆனால் நீட் தேர்வை ஒழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மத்திய அரசில் தி.மு.க. அங்கும் வகித்தபோதுதான் அவர்களது ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. தற்போது அதனை ஒழிக்கப் போவதாக தி.மு.க. நாடகமாடி வருகிறது.

    பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிய பிறகும் எங்களை பற்றி தி.மு.க. அவதூறு பரப்பி வருகிறது. நாங்கள் ரகசிய உடன்பாடு செய்து உள்ளதாக குற்றம் சாட்டி வருகிறது.

    ஆனால் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க.தான் ரகசிய உறவு வைத்துள்ளது. ஆட்சியில் இல்லாதபோது 'கோ பேக்' மோடி என்றார்கள். தற்போது 'வெல்கம் மோடி' என்கிறார்கள். இதன் மூலமே தெரியும் யார் ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்பது.

    தி.மு.க.வை பொறுத்தவரை வாக்களித்த மக்களுக்காக நன்மை எதுவும் செய்ய மாட்டார்கள். மக்களை பற்றி அவர்கள் கவலைப்படுவது இல்லை. எங்களுக்கு தற்போதைய காலத்தில் எதிரிகளே இல்லை. தேர்தலில் எங்களை வெற்றி பெற செய்வதற்கு மக்கள் தயாராகி விட்டனர்.

    எத்தனை முனை போட்டி நிலவும் என்பதை பற்றி நான் இப்போது கூற முடியாது. இந்தியா கூட்டணியில் ஒவ்வொரு சக்கரமாக கழன்று கொண்டு இருக்கிறது. 4 சக்கரங்கள் ஒன்றாக இருந்தால்தான் காரை ஓட்ட முடியும். இந்தியா கூட்டணி தற்போது சக்கரம் இல்லாத கார் போல உள்ளது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்வது போன்று ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் கூடிய ஆடியோ வெளியிடப்பட்டது.
    • தமிழகத்தில் உரிமையை மீட்டெடுத்து தமிழ்நாட்டை காப்பதற்காக சகோதரர் எடப்பாடி பழனிசாமி கரத்தை நீங்கள் வலுப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்வது போன்று ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் கூடிய ஆடியோ வெளியிடப்பட்டது. அதில் ஜெயலலிதா பேசுவது போன்ற இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளான தாலிக்கு தங்கம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய சாதனைகளுக்காகவே தமிழக மக்கள் அ.தி.மு.க.வை ஆதரித்தார்கள். மத்தியில் ஆளும் அரசும் மாநிலத்தில் ஆளும் அரசும் தமிழக நலனுக்கு எதிராக உள்ளனர். எனவே தமிழகத்தில் உரிமையை மீட்டெடுத்து தமிழ்நாட்டை காப்பதற்காக சகோதரர் எடப்பாடி பழனிசாமி கரத்தை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். மக்களாலே நாம் மக்களுக்காகவே நாம்.

    இவ்வாறு ஜெயலலிதா பேசியது போன்று ஆடியோ வெளியிடப்பட்டது.

    • அதிமுக கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • கட்சி கொடியை ஏற்றி, தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்கினார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழாவினை அ.தி.மு.க.வினர் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

    இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகம் விழாக்கோலம் பூண்டு இருந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமை கழகத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வருங்கால முதல்வர் வாழ்க. எடப்பாடியார் வாழ்க என அவர்கள் கோஷமிட்டனர்.

    தலைமை கழக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் 76-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 76 கிலோ எடையுள்ள கேக்கினை வெட்டி அதனை தொண்டர்களுக்கு வழங்கினார். லட்டும் கொடுக்கப்பட்டது.

    ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அங்கு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    இந்த விழாவில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி. தம்பித்துரை எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, தளவாய் சுந்தரம், வளர்மதி, நத்தம் விசுவநாதன்,கோகுல இந்திரா, பெஞ்சமின், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆதிராஜாராம், ஆர்.எஸ்.ராஜேஷ், மாதவரம் மூர்த்தி, கே.பி.கந்தன், வெங்கடேஷ் பாபு, வக்கீல் பிரிவு மாநில செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை, தி.நகர் பகுதி செயலாளர் ஆர்.எஸ். வேலு மணி, மாநில இளைஞர் அணி இணை செயலாளர் லட்சுமி நாராயணன், இலக்கிய அணி மாநில துணை செயலாளர் இ.சி. சேகர், முன்னாள் கவுன்சிலர் சின்னையன், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மாணவரணி வக்கீல் பரணி, ஏ.எம்.காமராஜ், எம்.ஜி.ஆர். நகர் குட்டிவேல் ஆதித்தன், வேளச்சேரி மூர்த்தி, வேல் ஆதித்தன் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவ படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவு.
    • தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று.

    சென்னை :

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று.

    தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், அவர் செயல்படுத்திய நலத்திட்டங்கள் என்றும் அவரது புகழைக் கூறும் என பதிவிட்டுள்ளார்.

    • சிலை 9 அடி உயரம் கொண்டது. பீடம் 7 அடியில் அமைந்துள்ளது.
    • டவுன்ஷிப்பில் 500-க்கும் மேற்பட்ட மகளிரணியினர் பூரண கும்பமரியாதை அளிக்க உள்ளனர்.

    நெய்வேலி:

    நெய்வேலியில் இன்று ஜெயலலிதா முழு உருவ சிலையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க. மற்றும் என்.எல்.சி.அண்ணா தொழிலாளர்கள், ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலை ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 9 அடி உயரம் கொண்டது. பீடம் 7 அடியில் அமைந்துள்ளது. இந்த சிலை திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறுகிறது.

    இதற்கு கடலூர் தெற்கு மாவட்டசெயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள், மாநில, மாவட்ட, நகர ஒன்றிய, சார்பு பணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    சிலை திறப்பு விழாவுக்காக வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு கடலூர் தெற்கு மாவட்ட எல்லையான பணிக்கன்குப்பத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து வழி நெடுகிலும் விளம்பர பேனர் கள், போஸ்டர்கள் மற்றும் தோரணங்கள், கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே அமைக்கப்பட்டு சாலையின் இருபுறத்திலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். மேலும் நெய்வேலி டவுன்ஷிப்பில் 500-க்கும் மேற்பட்ட மகளிரணியினர் பூரண கும்பமரியாதை அளிக்க உள்ளனர்.

    இது தவிர விழா மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. சிலையை திறந்துவைத்த பின்னர் எடப்பாடி பழனிச்சாமி விழா மேடை யில் பேச உள்ளார்.

    • ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க, வைர நகைகளில் 7 கிலோ விற்க கோர்ட்டு விலக்கு அளித்து உள்ளது.
    • ஜெயலலிதாவுக்கு அவரது தாய் கொடுத்த பாரம்பரிய நகைகள் என்பதால் விலக்கு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூரு:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 1996-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. அப்போது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த சோதனையில் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள் என ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 468 வகையான 27 கிலோ தங்க, வைர நகைகள் மற்றும் 700 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா 1136 பக்க தீர்ப்பு வழங்கினார்.

    அதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். மேலும் அவர்கள் அனைவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்தார். இதை எதிர்த்து இவர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு இந்த வழக்கு சென்றது.

    கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி ஜான் மைக்கேல் டிகுன்ஹாவின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ஆனால் அதற்குள் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் காலாவதியாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. ஆனாலும் மற்ற 3 பேரும் 4 வருட சிறை தண்டனை அனுபவித்து அபராதம் செலுத்த வேண்டியிருந்தது.

    மேலும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்கும் வகையில் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கோர்ட்டு அறிவித்தது.

    இதற்கிடையே, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் எனவும், அதன் மூலம் வரும் பணத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கோரி சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அரசால் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களில் தனக்கு உரிமை உண்டு எனவும், அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்கள் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடியை திரட்டுவதற்காக அவரது சொத்துக்களை விற்க நீதித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை அடுத்த மாதம் (மார்ச்) 6, 7-ந் தேதிகளில் தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்க பெங்களூரு 36-வது சிட்டி சிவில் நீதிமன்றம் அறிவித்தது.

    மேலும் 27 கிலோவில் 20 கிலோ நகைகளை மட்டும் விற்க வேண்டும் என்றும் மீதியுள்ள 7 கிலோ நகைகள் ஜெயலலிதாவுக்கு அவரது தாய் கொடுத்த பாரம்பரிய நகைகள் என்று கருதப்படுவதால் இவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று அறிவித்தனர். மேலும் ஜெயலலிதா கணக்கு வைத்திருந்த நிறுவனம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ரூ.59 லட்சத்தை ஒப்படைத்தது. மேலும் ஜெயலலிதாவின் நகைகளை பெற தமிழக உள்துறை செயலாளர் வருமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. நகைகளை கொண்டு செல்லும்போது தேவையான பாதுகாப்புடன் வீடியோகிராபர் மற்றும் 6 பெரிய டிரங்க் பெட்டிகளுடன் வரவேண்டும் என்று கூறி உள்ளனர். மேலும் பாதுகாப்புக்காக உள்ளூர் போலீசாரை ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி பெங்களூருவில் இருந்து 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி நகைகள், 11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், 740 விலை உயர்ந்த செருப்புகள் என மொத்தமாக 6 பெட்டகங்களில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. இவற்றின் மதிப்பு பல கோடி இருக்கலாம் எனத் தெரிகிறது. அவை, தமிழ்நாடு அரசின் கருவூலத்தில் வைக்கப்படும்.

    ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க, வைர நகைகளில் 7 கிலோ விற்க கோர்ட்டு விலக்கு அளித்து உள்ளது. ஜெயலலிதாவுக்கு அவரது தாய் கொடுத்த பாரம்பரிய நகைகள் என்பதால் விலக்கு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே 20 கிலோ நகையை ஏலம் மூலம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதி உள்ள 7 கிலோ நகை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சட்ட நிபுணர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    ஜெயலலிதாவின் உண்மையான சட்ட வாரிசாக ஜெ.தீபா உள்ளார். அவரிடம் தான் தற்போது போயஸ் கார்டன் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. எனவே பாரம்பரியமான குடும்ப நகையான இந்த 7 கிலோ நகையும் ஜெ.தீபாவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.

    • தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 5 நாட்கள் நடக்கிறது.
    • சேலத்தில் வருகிற 25-ந்தேதி நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் வருகிற 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 5 நாட்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடக்கிறது. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அதில் கலந்துகொண்டு பேசுவோர் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

    சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கொண்டலாம்பட்டியில் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

    வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை துறைமுகம் தொகுதியில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் எம்.பி. பாலகங்கா, வேளச்சேரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், தாம்பரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செம்மலை, தி.நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரவாயல் தொகுதியில் பெஞ்சமின், பொன்னேரி தொகுதியில் முன்னாள் எம்.பி. வேணுகோபால், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.சேதுராமன், திருவொற்றியூர் தொகுதியில் ஆர்.கமலக்கண்ணன், பெரம்பூர் தொகுதியில் ச.கல்யாண சுந்தரம் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பூந்தமல்லி தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, பெஞ்சமின், திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.விஜயகுமார், ஆலந்தூர் தொகுதியில் நடிகை விந்தியா, மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகு மாறன், ஆவடி தொகுதியில் ராயபுரம் மனோ, விருகம்பாக்கம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, எழும்பூர் தொகுதியில் ராஜ் சத்யன், ஆர்.கே.நகர் தொகுதியில் கே.சிவசங்கரி, செங்கல்பட்டு தொகுதியில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், நடிகை பபிதா ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) சென்னை மாதவரம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அண்ணாநகர் தொகுதியில் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஆதிராஜாராம், மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் எம்.பி. ஆ.இளவரசன், சோழிங்கநல்லூர் தொகுதியில் கோபி காளிதாஸ், வில்லிவாக்கம் தொகுதியில் மணவை மாறன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ராயபுரம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பல்லாவரம் தொகுதியில் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, அம்பத்தூர் தொகுதியில் முன்னாள் எம்.பி. தாமோதரன், திருத்தணி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோ.சமரசம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் சினிமா இயக்குனர் ஷக்தி சிதம்பரம் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) திரு.வி.க.நகர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் எம்.பி. நா.பாலகங்கா, காஞ்சிபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆதி ராஜாராம், திருப்போரூர் தொகுதியில் கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.
    • கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 24.2.2024 முதல் 28.2.2024 வரை 5 நாட்கள், 'இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்', கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

    பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.

    கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை, கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், "நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழுக்கும்" அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • நீட் தேர்வுக்கு மத்திய அரசு தற்போது வரை விலக்கு அளிக்கவில்லை.
    • விளம்பர அரசியலை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிநகர் 4-வது தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

    கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்திற்காக என்ன சாதனைகளை செய்தார்கள். பட்டியலிட அண்ணாமலை தயாரா?. பா.ஜ.க. தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளை இதுவரை ஒன்றை கூட தீர்க்கவில்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று வரை அடிக்கல் நாட்டப்பட்டதாகவே இருக்கிறது.

    நீட் தேர்வுக்கு மத்திய அரசு தற்போது வரை விலக்கு அளிக்கவில்லை. என்.எல்.சி. நிலம் எடுப்பு தொடர்பாக மத்திய அரசு பாராமுகம் காட்டியுள்ளது. இது போன்ற பிரச்சினைகளை அண்ணாமலை பேசினால் நன்றாக இருக்கும். விளம்பர அரசியலை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அந்த விளம்பரம் தமிழகத்தில் எடுபடாது. அதே போல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த காலத்தில் இந்திராகாந்தி, கருணாநிதி ஆகியோர் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர்.


    தேசிய கட்சிகளால் எந்த நலனும் இல்லை என்ற ஜெயலலிதாவின் முடிவையே எடப்பாடி பழனிசாமி தற்போது எடுத்துள்ளார். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பற்றி எல்லாம் அண்ணாமலை விமர்சிக்கிறார். அதையெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் கேட்கவில்லை.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வர உள்ளன. நாங்கள் தற்போது தான் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே வேகம் எடுக்கும். அந்த நடைமுறையை தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். விரைவில் நீங்கள் எதிர்பார்க்காத மெகா கூட்டணி அ.தி.மு.க. தலைமையில் உருவாகும். 39 தொகுதிகளிலும் வெற்றியை பெறுகிற கூட்டணியாக அ.தி.மு.க. இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டின, அது ஒரு காலம்.
    • தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள், தி.மு.க. மீது கோபத்தில் உள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏழுமலை தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    1972-ம் ஆண்டில் 11 லட்சம் தொண்டர்களுடன் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கி வழிநடத்தினார். அனைத்து தரப்பு மக்களாலும் சாதி, மத வித்தியாசம் இன்றி இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட பல்வேறு சட்டவிதிகளை எம்.ஜி.ஆர். வகுத்துச்சென்றார்.

    அவரது மறைவுக்குப் பிறகு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கொடுத்த பல்வேறு இடையூறுகளை தாண்டி 1½ கோடி தொண்டர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளராக 30 ஆண்டுகள் பணியாற்றி இந்த இயக்கத்தை வழிநடத்தினார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

    தற்போது எடப்பாடி பழனிசாமி, அடிப்படை தொண்டர்களின் உரிமையை காலில் போட்டு மிதித்து கபளீகரம் செய்துள்ளார்.

    இன்றைக்கு சாதாரண தொண்டர்கள், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட கூடிய சட்டவிதியை எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார். அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டருக்கும் உரிமையைப் பெற்றுத்தரும் நோக்கில், மாநிலம் முழுவதும் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள தொடங்கி, இதுவரை 24 மாவட்டங்களில் முடித்துள்ளேன்.

    எஞ்சிய மாவட்டங்களிலும் பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க உள்ளேன்.

    தமிழக முதலமைச்சர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்ற பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல் என 8 தேர்தல்களை சந்தித்தார். அத்தனை தேர்தல்களிலும் தோல்வியைத்தான் கண்டார்.

    ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டின, அது ஒரு காலம். ஆனால் இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை.

    தற்போது கூட்டணிக்கு யாரேனும் வருவார்களா என கட்சித்தலைமை அலுவலகத்தில் கதவை திறந்து வைத்துக்கொண்டு தலைவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கூட்டணிக்கு வாருங்கள் வாருங்கள் என அழைத்தாலும், அவர்களை நம்பி யாரும் வருவதில்லை. அ.தி.மு.க.வில் இந்த நிலை உருவாக யார் காரணம். மிகவும் பரிதாப நிலையில் கட்சி உள்ளது.

    தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள், தி.மு.க. மீது கோபத்தில் உள்ளனர். இந்திய அரசியலில் தமிழ்நாடு அனைத்து மாநிலத்திற்கும் வழிகாட்டியாக இருந்த காலம் மாறி விட்டது. தி.மு.க.வில் கருணாநிதி இருந்தார்.

    இப்போது ஸ்டாலின் உள்ளார். பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, மாநில வக்கீல் அணி செயலாளரும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான செஞ்சி கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, விஜய் சிறந்த திரைப்பட நடிகர். புதிய கட்சியை தொடங்கி உள்ள அவருக்கு எங்களுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் எதிர்வரும் சவால்களை சமாளித்து தமிழக அரசியலில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

    அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் கூட்டணி அமைக்க இருக்கிறோம். ஏற்கனவே நாங்கள் பா.ஜனதாவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம். 10 ஆண்டுகள் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்.

    உலகத்தில் இருக்கும் 20 வளர்ந்த நாடுகள், நரேந்திர மோடியின் நிர்வாகத்தையும், அயல்நாட்டின் அணுகுமுறையையும் பாராட்டியிருக்கிறார்கள். எனவே 3-வது முறையாக மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என்ற பொதுவான கருத்து இந்தியாவில் நிலவி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக பா.ஜனதா பெரும்பான்மை பெற்று மீண்டும் மோடி, பிரதமராக வலம் வருவார் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வந்தது.
    • சுபமுகூர்த்த சுபதினமான இன்றைய தினம் புதிய இல்லத்தில் கோ பூஜை நடத்தி விநாயகரை வழிபட்டு பால்காய்ச்சி குடியேறி உள்ளார்.

    சென்னை:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார். பின்னர் அவர் தி.நகரில் வசித்து வந்தார். இதனிடையே போயஸ் தோட்டம் பகுதியிலேயே வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வந்தது.

    இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிதாக வீடு ஒன்றை கட்டி இன்று அதிகாலை கிரகபிரவேசம் செய்துள்ளார்.


    சுபமுகூர்த்த சுபதினமான இன்றைய தினம் புதிய இல்லத்தில் கோ பூஜை நடத்தி விநாயகரை வழிபட்டு பால்காய்ச்சி குடியேறி உள்ளார்.

    • தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 30 கிலோ தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.
    • கர்நாடக அரசு வசம் உள்ள தங்க நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு தனிக்கோர்ட்டு ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனிக்கோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீா்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. மற்ற 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

    இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 30 கிலோ தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்தனர். ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை கைப்பற்றினர். அந்த தங்க நகைகள் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த மனு அந்த சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி மோகன், இந்த வழக்கின் செலவு தொகை ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், அதை வங்கி வரைவோலையாக (டி.டி.) வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் கர்நாடக அரசு வசம் உள்ள தங்க நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவற்றை பெற தமிழக போலீஸ் துறை முதன்மை செயலாளர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவற்றை ஏலம் விட்டு அபராதத்தை செலுத்த வேண்டும், வழக்கில் தொடர்புடைய நிலத்தின் மதிப்பை விரைவாக தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற பிப்ரவரி மாதம் 21-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, "ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதில் எனக்கு உடன்பாடில்லை.

    நான் கர்நாடக அரசின் சட்டத்துறையை அணுகி, இந்த உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யுமாறு வற்புறுத்த முடிவு செய்துள்ளேன். வழக்கு விசாரணை இங்கு நடைபெற்று கொண்டிருக்கும்போது, இங்கு தான் அந்த பொருட்களை ஏலம் விட வேண்டும்" என்றார்.

    ×