search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hamas militants"

    • செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து புலனாய்வு செய்யும் அமைப்பு, ஹானஸ்ட்ரிபோர்டிங்
    • பத்திரிகை தர்மத்தை மீறிய செயல் இது என இஸ்ரேல் குற்றம் சாட்டி உள்ளது

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதலை நடத்தி 1400க்கும் மேல் இஸ்ரேலியர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர்.

    இத்தாக்குதலின் போது நடைபெற்ற பல சம்பவங்கள் குறித்து வீடியோக்களும், புகைப்படங்களும் வலைதளங்களில் வெளிவந்தன.

    இந்நிலையில், ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து கண்காணிக்கும் இஸ்ரேல் நாட்டின் ஹானஸ்ட்ரிபோர்டிங் (HonestReporting) அமைப்பு, காசா பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர், ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் காணப்படுகின்றனர் என்றும் அவர்களுக்கு இத்தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அறிக்கை சமர்ப்பித்தது.

    ராய்டர்ஸ், தி அசோசியேட்டட் பிரஸ் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் ஹசன் எஸ்லையா, யூசுப் மசோட், அலி மஹ்முத், ஹதேம் அலி, மொஹம்மத் ஃபய்க் அபு மொஸ்டஃபா மற்றும் யாசர் குடிஹ் எனும் காசாவை சேர்ந்த 6 பத்திரிக்கையாளர்களையும் ஹானஸ்ட்ரிபோர்டிங் அமைப்பு அடையாளம் காட்டியுள்ளது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய ராணுவ டாங்க் ஒன்றை ஹமாஸ் எரிக்கும் போதும், இஸ்ரேலில் இருந்து பணயக்கைதிகளாக பலரை ஹமாஸ் கொண்டு செல்லும் போதும் அருகிலேயே இருந்து அவர்கள் படம் பிடித்துள்ளதை இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

    இது குறித்து இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்திருப்பதாவது:

    அக்டோபர் 7 அன்று காசா முனை பகுதி வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென நடத்திய மிருகத்தனமான தாக்குதல்களை சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் சில புகைப்பட பத்திரிகையாளர்கள் படம் பிடித்துள்ளனர். அந்த பத்திரிக்கையாளர்களுக்கு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்ததா? மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் துணை நின்றிருக்கிறார்களா? பத்திரிகை தர்மத்தையும், தொழில் தர்மத்தையும் மீறிய செயல் இது என்பதால், இதனை இஸ்ரேல் தீவிரமாக பார்க்கிறது.

    இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சில சர்வதேச ஊடகங்களின் தலைமையகங்களுக்கு இஸ்ரேல் தகவல் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது.

    இதுவரை ராய்டர்ஸ் நிறுவனம் மட்டுமே இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இடைநிறுத்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை என்றார் நேதன்யாகு
    • மத்திய காசா பகுதியை அடைந்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது

    தங்கள் நாட்டின் மீது அக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா முனை பகுதியில் தரைவழியாகவும் மற்றும் வான்வழியாகவும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடங்கி ஒரு மாத காலத்திற்கும் மேலான நிலையில், காசா பகுதியில் உள்ள பொதுமக்கள் 10 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.

    மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தத்தை இஸ்ரேல் பரீசிலிக்க வேண்டும் என பல உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்தது.

    "போர்நிறுத்தம் அல்லது இடைநிறுத்தம் போன்ற பேச்சுகளுக்கே இடமில்லை. போர் முடிந்த பிறகும் கூட காசாவின் பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் முழுமையாக இருக்கும்", என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    "உலகிலேயே பெரிய பயங்கரவாத முகாம் காசா. அதை அழித்தாக வேண்டும்" என இஸ்ரேலிய ராணுவ அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் காசாவின் மத்திய பகுதியை அடைந்து விட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்திருக்கிறது.

    வான்வழியாகவோ, தரைவழியாகவோ இஸ்ரேல் அறியாமல் ஆயுத கடத்தலில் ஈடுபட முடியாததால் பூமிக்கு அடியில் நீண்ட சுரங்கம் அமைத்து அதன் மூலம் தனது ஆதரவு நாடுகளிலிருந்து தாக்குதலுக்கான ஆயுதங்களை ஹமாஸ் அமைப்பினர் பெற்று வந்தனர். இதை அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகுதான் இஸ்ரேல் தாமதமாக கண்டறிந்ததாக தகவல்கள் வெளியாகின.

    தற்போது காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் அங்கு அமைத்துள்ள சுரங்கங்களை தேடி கண்டுபிடித்து அவற்றை அழித்து வருகின்றது. அதில் ஒரு சில சுரங்கங்கள் நூறு கிலோமீட்டருக்கும் மேல் நீண்டு செல்வதாகவும் ராணுவம் தெரிவித்தது.

    போர் விரைவில் முடிவடைந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • 10 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழப்பு ஏற்பட்டதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது
    • போரை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என இஸ்ரேல் அறிவித்தது

    பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக அறிவித்துள்ள இஸ்ரேல், கடந்த அக்டோபர் 7 முதல் அவர்கள் மறைந்திருக்கும் காசா பகுதியில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் 32-வது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

    இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையேயான இந்த போரில் பாலஸ்தீன காசா பகுதியில் இருக்கும் அப்பாவி பாலஸ்தீனியர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன தரப்பு அறிவித்துள்ளது.

    உலக நாடுகள் விடுத்த போர் நிறுத்த கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்து விட்டது.

    இதற்கிடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தொலைபேசியில் பேசினார்.

    இரு நாட்டு தலைவர்களும் இந்தியா-ஈரான் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்தும் உரையாடியுள்ளனர்.

    இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு ரீதியான இந்த உரையாடலில் இப்ராஹிம் தெரிவித்திருப்பதாவது:

    மேற்கத்திய நாடுகளின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியா நடத்திய போராட்டங்களும், அணி சேரா நாடுகளை ஒருங்கிணைப்பதில் எடுத்த முயற்சிகளையும் ஈரான் இத்தருணத்தில் நினைவு கூர்கிறது. தன்னிடம் உள்ள அனைத்து திறனையும் முழுவதுமாக உபயோகித்து பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் போரை இந்தியா முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இது நடக்கும் என நாங்கள் நம்புகிறோம். காசாவில் நடப்பது அங்குள்ள மக்களுக்கு எதிரான குற்றம். போர் நீண்டு கொண்டே சென்றால் பிற நாடுகளுக்கும் பரவலாம் எனும் அச்சம் மேற்கு ஆசிய நாடுகளிடையே அதிகரித்து வருகிறது. அது நிலைமையை இன்னும் சிக்கலாக்கும். பாலஸ்தீன மக்களின் துன்பங்களை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்படும் எந்த உலகளாவிய நடவடிக்கைக்கும் ஈரான் ஆதரவளிக்கும். பாலஸ்தீன சுதந்திரத்திற்காக பாடுபடும் அமைப்புகளுக்கு தங்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட முழு உரிமை உண்டு.

    இவ்வாறு ஈரான் அதிபர் கூறியுள்ளார்.

    முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "பாலஸ்தீன பிரச்சனையை தீர்ப்பதற்கும், மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து அங்கு கிடைப்பதை உறுதி செய்யவும், விரைவில் அமைதி திரும்பவதையும் இந்தியா விரும்புகிறது" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் தெரிவித்திருந்தார்.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 வல்லரசு நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்
    • சுழற்சி முறையில் சீனாவிற்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

    உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது, ஐ.நா. சபையின் 6 அங்கங்களில் ஒன்றான யு.என்.எஸ்.சி. (UNSC) எனப்படும் பாதுகாப்பு கவுன்சில்.

    1945 அக்டோபரில் உருவாக்கப்பட்ட இந்த கவுன்சிலின் மொத்த உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை, 15. இதில் சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்.

    பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவி, அதன் உறுப்பு நாடுகளால் சுழற்சி முறையில் மாதம் ஒரு நாட்டிற்கு வழங்கப்படும்.

    இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் போர் புரிந்து வரும் இஸ்ரேல், உலக நாடுகளின் போர் நிறுத்த கோரிக்கையை புறக்கணித்து, தாக்குதலை மேலும் கடுமையாக்கியுள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவியை சீனா ஏற்று கொண்டது.

    தற்போது தீவிரமடைந்துள்ள இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் உலகளாவிய அமைதிக்கு சீனாவின் தலைமை பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    "தனது கடமையை பாதுகாப்பு கவுன்சில் செய்ய சீனா ஊக்குவிக்கும். ஒருமித்த கருத்தை உலக நாடுகளிடையே உருவாக்கவும், பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தில்லாத நிலையை கொண்டு வரவும் சீனா அனைத்து வகையிலும் முன் நிற்கும்" என இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் தலைமை பதவி குறித்து சீனாவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் வேங் வென்பின் (Wang Wenbin) தெரிவித்தார்.

    கடைசியாக 2022 ஆகஸ்ட் மாதம் சீனா இந்த தலைமை பொறுப்பை வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • போர் நிறுத்தத்தை பல உலக நாடுகள் கோரி வருகின்றன
    • உலகம் அக்டோபர் 7 தாக்குதலை மறக்க விட மாட்டோம் என்றார் ஹகரி

    ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா முனை பகுதி மீது கடந்த அக்டோபர் 7 முதல் நடத்தி வரும் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சுமார் 9770 பேருக்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.

    பல உலக நாடுகளின் தலைவர்கள் போர் நிறுத்த கோரிக்கையை விடுத்திருந்தனர். ஆனால், இதனை இஸ்ரேல் புறக்கணித்து விட்டது.

    "போர் நிறுத்தமா? அந்த வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்து விடுங்கள். அக்டோபர் 7 அன்று பணயக்கைதிகளாக பிடித்து சென்றவர்களை ஹமாஸ் விடுவிக்காத வரை போர் நிறுத்தம் எனும் பேச்சிற்கே இடமில்லை. நாங்கள் வெற்றி பெறும் வரை போரை தொடர்ந்து நடத்தியாக வேண்டும்; வேறு வழியில்லை" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உறுதிபட தெரிவித்திருந்தார்.

    இப்பின்னணியில் இஸ்ரேலிய ராணுவ படைகளின் (IDF) செய்தித்தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகரி, தற்போதைய நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    முக்கியமான இடங்களில் தாக்குதல்களை தொடர்கிறோம். நாங்கள் காசா முனை பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து விட்டோம். அதனை இரண்டாக பிரித்து விட்டோம். இப்போது காசா, வடக்கு காசா மற்றும் தெற்கு காசா என இரண்டாகி விட்டது. வட காசா மீது எந்நேரமும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம். கடற்கரையையொட்டி உள்ள பகுதிகளை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டோம். பயங்கரவாத அமைப்பினருக்கு சொந்தமான பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்கள், மேலே உள்ள தளங்கள், தளவாடங்கள் ஆகியவை மீதான தாக்குதல் தொடர்கிறது. அக்டோபர் 7 அன்று எங்களுக்கு நடந்ததை உலகம் மறக்க விட மாட்டோம்.

    இவ்வாறு ஹகரி தெரிவித்தார்.

    • எர்டோகன் தலைமையில் துருக்கி, ஹமாஸ் ஆதரவு நிலையை எடுத்துள்ளது
    • 1967ல் வகுக்கப்பட்ட எல்லைகளே அங்கு இருக்க வேண்டும் என்றார் எர்டோகன்

    தென்கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையே அமைந்துள்ள அரபு நாடு துருக்கி (Turkey). இதன் தலைநகரம் அங்காரா.

    துருக்கியின் அதிபராக ரிசெப் டாய்யிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) 2014லிருந்து பதவியில் உள்ளார். தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிப்பவர் எர்டோகன்.

    நேற்று இந்த போர் குறித்து அவர் தெரிவித்ததாவது:

    காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறோம். இந்த போர் முடிந்ததும் காசாவில் அமைதியையும், அது ஒரு சுதந்திர பாலஸ்தீனதின் ஒரு பகுதியாகவும் இருப்பதை பார்க்க விரும்புகிறோம். கிழக்கு ஜெருசலேம் நகரை தலைநகராக கொண்டு 1967ல் வகுக்கப்பட்ட எல்லைகளே அங்கு இருக்க வேண்டும். பாலஸ்தீனர்களின் வாழ்வை இருள செய்யும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இது குறித்த பேச்சு வார்த்தைகளில் துருக்கி ஈடுபட்டாலும், நேதன்யாகுவை ஆதரிக்க போவதில்லை. இஸ்ரேல் நடத்திய போர் குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் இஸ்ரேலை பொறுப்பாக்குவோம். இஸ்ரேலை ஆதரித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் எங்கள் நம்பிக்கையை இழந்து விட்டது.

    இவ்வாறு எர்டோகன் கூறினார்.

    அக்டோபர் 7-ஆம் தேதியிலிருந்து காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 3,826 குழந்தைகள் உட்பட 9,277 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார துறை அறிவித்துள்ளது.

    • காசாவில் அனைத்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது
    • காசாவில் ரத்தம் சிந்தப்படுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்றார் ஃபரூக்

    பாலஸ்தீன காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைகிறது.

    காசா மீது வான்வழி மற்றும் தரைவழியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. காசாவில் குடிநீர், எரிபொருள், மருந்து, உணவு உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    இந்நிலையில், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் குப்கர் மக்கள் கூட்டணி தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து காசா பிரச்சனை குறித்து ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    காசா மருத்துவமனைகளில் மருந்து, நீர், மின்சாரம் எதுவும் இல்லை. நம் நாட்டு மக்கள் காசா மக்களுக்கு ஆதரவாக துணை நின்று குரல் கொடுக்க வேண்டும். அங்கு அமைதி திரும்ப இந்தியா முயற்சி எடுக்க வேண்டும். அகிம்சையை போதித்த மகாத்மா காந்தி பிறந்த நாடு இந்தியா. காசாவில் ரத்தம் சிந்தப்படுவதை தடுக்க அனைத்து வழிகளையும் இந்தியா ஆராய வேண்டும்.

    இவ்வாறு ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

    • இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
    • ஐ.நா. பொதுச்சபை தீர்மானத்தை இஸ்ரேல் வேண்டுமென்றே ஏற்க மறுத்தது என்றார் இலாஹி

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். வெளிநாட்டினர் உள்ளிட்ட பலரை இஸ்ரேலிலிருந்து பணய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பலவந்தமாக பிடித்து சென்றனர்.

    இந்த தாக்குதலில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்க போவதாக உறுதி எடுத்து அவர்கள் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது போர் நடத்தி வருகிறது. இப்போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவிற்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி (Iraj Elahi) இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அவர் இஸ்ரேலை குறித்து தெரிவித்ததாவது:

    இஸ்ரேல் அரசுக்கு பணய கைதிகளின் உயிரை குறித்து சிறிதும் அக்கறை இல்லை. ஹமாஸ் சிறை பிடித்திருக்கும் இஸ்ரேலியர்களை, இஸ்ரேல் பிடித்து வைத்திருக்கும் பாலஸ்தீனர்களுடன் பரிமாற்றம் செய்து கொள்ள ஐ.நா. பொதுச்சபை (UNGA) தீர்மானமாக கொண்டு வந்தும் அதை ஏற்று கொள்ள இஸ்ரேல் மறுத்து விட்டது. அவர்கள் ஹமாஸை அழிக்கவே போர் தொடுத்திருப்பதாக கூறுவது உண்மை இல்லை. அவர்களின் நோக்கம், காசாவை ஆக்ரமித்து தங்கள் நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தி தங்கள் நாட்டின் குடியமர்வை அங்கு அதிகரிப்பதுதான். இப்போரில் இஸ்ரேல் தோல்வி அடைய போவது உறுதி. ஆனாலும் தோல்வியை ஒத்து கொள்ள மறுத்து ஆபத்தான முயற்சியை தொடர்கின்றனர். பாலஸ்தீனர்களின் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாழ முடியாத நிலைக்கு பாலஸ்தீனர்களை தள்ளி, அல் அக்ஸா மஸ்ஜித்தையும் இடித்து விட்டனர்.

    இவ்வாறு இலாஹி கூறினார்.

    • பஹ்லாவி வம்சத்தினரை ஆட்சியிலிருந்து அகற்றினார் கொமெய்னி
    • ஈரானின் ராணுவம், இஸ்லாமிய புரட்சி வீரர்கள் படை என அழைக்கப்படுகிறது

    மேற்காசிய நாடான ஈரானில் 1925லிருந்து பஹ்லாவி வம்சத்தினரின் (Pahlavi Dynasty) மன்னராட்சி நடைபெற்று வந்தது. இவர்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் 1979ல் புரட்சியில் ஈடுபட்டனர். அதன் முடிவில் பஹ்லாவிகள் ஆட்சி அகற்றப்பட்டு, அயதொல்லா கொமெய்னி (Ayatollah Khomeini) தலைமையில் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றும் ஆட்சி பதவிக்கு வந்தது.

    தொடர்ந்து, இஸ்லாமிய புரட்சி வீரர்கள் படை (Islamic Revolutionary Guards Corps) எனும் ஈரானின் ராணுவத்தை ஈரான் அமைத்தது. அதன் 5 முக்கிய அங்கங்களில் ஒன்று குட்ஸ் படை (Quds Force).

    குட்ஸ் படையை கொண்டு ஈரான், பிற நாட்டினர் மீது தங்கள் ஆதிக்கத்தை வளர்க்கவும், தங்கள் கோட்பாடுகளை பரப்பவும், உளவு மற்றும் மறைமுக சதி வேலைகளின் மூலம் நீண்ட காலமாக முயன்று வருகிறது.

    தங்கள் கோட்பாடுகளுக்கு எதிரான சக்திளை எதிர்க்கவும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும் செயல்படும் "எதிர்ப்பின் மையம்" (Axis of Resistance) என வர்ணிக்கப்படும் ஈரான், குட்ஸ் படையினர் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக ராணுவ படைகளையும், அரசியல் கட்சிகளையும் பல நாடுகளில் ஆதரித்து, வளர்த்து வருகிறது. இந்த அமைப்புகள் தங்கள் நாடுகளில் ஈரானுக்கு ஒரு மறைமுக பிரதிநிதியாக (proxy) செயல்படுகின்றன.

    ஈராக், லெபனான், எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் கிடைத்த ஆதரவு, வன்முறை சித்தாந்தங்களை ஏற்காத பிற அரபு நாடுகளில், ஈரானுக்கு கிடைக்கவில்லை.

    ஏமனின் ஹவுதி, லெபனானின் ஹிஸ்புல்லா, சிரியாவின் ஜய்னாபியோன் பிரிகேட் மற்றும் ஃபதேமியோன் பிரிவு, ஈராக்கில் கதாய்ப் ஹிஸ்புல்லா, பாலஸ்தீன காசா பகுதியின் ஹமாஸ், பக்ரைனின் அல் அஷ்டார் பிரிகேட்ஸ் ஆகிய பயங்கரவாத அமைப்புகள், ஈரானின் எதிர்ப்பு மையத்தின் மறைமுக ஆலோசனை, ராணுவ மற்றும் நிதியுதவி ஆகியவற்றால் வளர்க்கப்பட்டவை.

    எதிர்ப்பின் மையத்திற்கு நிதியுதவி கிடைப்பதை அனைத்து வழிகளிலும் அமெரிக்கா 1984லிருந்து தடுக்க முயன்று வருகிறது.

    தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வன்முறை அமைப்புகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் ஈரானையும், அதன் புரட்சி வீரர்கள் படையின் தாக்கத்தையும் இனி வளர விட கூடாது என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன.

    • ஷனி ஒரு பிக்-அப் டிரக்கில் அலங்கோலமான நிலையில் கடத்தி செல்லப்பட்டார்
    • ஷனியின் தாய் தன் மகளை மீட்குமாறு இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியிடம் கோரிக்கை வைத்தார்

    கடந்த அக்டோபர் 7 அன்று நூற்றுக்கணக்கான பாலஸ்தீன பயங்கரவாத ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் நுழைந்து கண்ணில் படுபவர்களை எல்லாம் சுட்டுக் கொன்று, 230க்கும் மேற்பட்ட பலரை சிறை பிடித்து சென்றனர். இந்த தாக்குதலில் 1400க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களும், பல வெளிநாட்டினரும் உயிரிழந்தனர்.

    ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்டவர்களில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களுடன் பல வெளிநாட்டினரும் அடங்குவர்.

    இந்த தாக்குதலின் போது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதிக்கும் இடைபட்ட எல்லை பகுதியில் 'சூப்பர் நோவா' (Super Nova) இசைக்கச்சேரி எனும் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கும் திடீரென நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், பலரை கொன்று, சிலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

    கடத்தப்பட்டவர்களில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 23 வயதான ஷனி லவுக் (Shani Louk) எனும் பெண்ணும் சிக்கி கொண்டார். அவர் ஒரு பிக்-அப் டிரக்கில் (pick-up truck) குப்புற படுக்க வைக்கப்பட்டு, பலவந்தமாக, அலங்கோலமான நிலையில் கடத்தி செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகின.

    இந்த தாக்குதலில் கடுங்கோபமடைந்த இஸ்ரேல் அரசு, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து காசா பகுதி முழுவதும் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது. இந்த போர் 23-வது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

    தங்கள் வசமுள்ள பணயக்கைதிகளின் நிலை குறித்து எந்த விவரமும் ஹமாஸ் அமைப்பினர் தெரிவிக்கவில்லை. தன் மகளை எப்படியாவது மீட்டுத்தருமாறு ஷனியின் தாய் ரிகார்டா லவுக் (Ricardo Louk) ஜெர்மனியிடமும், இஸ்ரேலிடமும் கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்நிலையில் அவர் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் உறுதி செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் அரசு அறிவித்திருக்கிறது.


    இந்த துயரச்செய்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை எதிர்க்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஷனி கொல்லப்பட்டதற்கு தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

    • காசா பகுதியில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது
    • பேட்ரியாட், அமெரிக்க ராணுவ தளவாடங்களில் அதி நவீன தொழில்நுட்பம் வாய்ந்தது

    ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க, இஸ்ரேல் பாலஸ்தீன காசா பகுதியில் அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல், தங்கள் நாட்டு எல்லைக்குள்ளும் விரைவில் பரவலாம் என ஜோர்டான் அஞ்சுகிறது. இதனால், தனது நட்பு நாடான அமெரிக்காவின் உதவியை ஜோர்டான் கோரியுள்ளது.

    "அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் எங்கள் நாட்டின் வழியாக இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்களையும், உபகரணங்களையும் கடத்துவதாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகளில் உண்மையில்லை. அதே சமயம், எங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை முறியடிக்க அமெரிக்காவின் பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகளை எங்கள் நாட்டு எல்லையில் நிலைநிறுத்தி உதவுமாறு அமெரிக்காவை கோரியுள்ளோம்" என இது குறித்து ஜோர்டான் நாட்டு ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முஸ்தஃபா ஹியாரி கூறினார்.

    அமெரிக்காவின் நட்பு நாடுகளின் விருப்பமான ராணுவ தளவாடங்களில், அதி நவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட  பேட்ரியாட் ஏவுகணைக்கு எப்போதும் முதலிடம் உண்டு.

    சிரியா மற்றும் ஈரானில் இருந்து பயங்கரவாதிகள் ஜோர்டான் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க கடந்த 2011ல் இருந்து ஜோர்டானுக்கு அமெரிக்கா உதவி புரிந்து வருகிறது. அமெரிக்க ராணுவ நிதியுதவியை பெருமளவில் பெறும் நாடுகளில் ஜோர்டானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    • இப்போரில் இதுவரை 110 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்
    • ஹமாஸ் அமைப்பினரை தேடும் போது இஸ்ரேல் ராணவத்தின் மீது தாக்குதல் நடைபெற்றது

    அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே தொடங்கிய போர் தீவிரமடைந்துள்ளது. இதுவரை பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் 110 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், 29லிருந்து 31 வரை வயதுடைய 3 பேர் இன்று அதிகாலை நேரத்தில் பாலஸ்தீனத்தின் ரமல்லா பகுதியின் வடமேற்கிலுள்ள பெய்ட் ரிமா, நப்லு பகுதியில் உள்ள அஸ்கர் அகதிகள் முகாம் மற்றும் வடக்கே உள்ள டுபாஸ் நகர் ஆகிய 3 இடங்களில் இஸ்ரேல் ராணுவ படையினரால் கொல்லப்பட்டனர்.

    மூன்று இடங்களிலும் ஹமாஸ் அமைப்பினரை தேடும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வந்தது. இதில் மறைவிடங்களில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இந்த மூவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் சுகாதார துறை அறிவித்திருக்கிறது.

    கடந்த 1967ல் இஸ்ரேல்-அரேபிய போர் நடைபெற்ற போது மேற்கு கரை பகுதியை இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அந்த காலகட்டத்திலிருந்து பாலஸ்தீன போராளிகளை தேடி இஸ்ரேல் வேட்டையாடி வருவது தற்போது வரை தொடர்கதையாகி வருகிறது.

    ×