search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேலிய ராணுவ படை"

    • வடக்கு காசா பகுதியில் இருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது
    • பசியின் காரணமாக உணவு வாகனங்களை கும்பல்கள் தாக்கி களவாடுகின்றன

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 130 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.

    பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவ படையினர் (Israeli Defence Forces) ஹமாஸ் (Hamas) அமைப்பினரை அழிக்க வான்வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    மேலும், ஹமாஸ் அமைப்பினரின் வசம் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை காசா பகுதி முழுவதும் அனைத்து இடங்களிலும் இஸ்ரேலிய ராணுவம் தேடி வருகின்றனர்.

    இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து வடக்கு காசாவில் இருந்து மக்களில் பலர் கூட்டம் கூட்டமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர்.

    அங்கிருந்து செல்லாமல் தங்கிய மக்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் (World Food Programme) எனும் சர்வதேச அமைப்பின் வழியாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வடக்கு காசாவில் உணவுகளை வினியோகிக்க சென்ற இந்த அமைப்பினரின் வாகனங்களை பசி மற்றும் வறட்சி காரணமாக காசா மக்கள் சூழ்ந்து கொண்டு உணவு பண்டங்களை சூறையாடினர்.

    ஒரு சில இடங்களில் வாகன ஓட்டுனர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

    இந்நிலையில், அங்கு நிலவும் அசாதாரணமான சூழலால், உணவு வழங்குவதை உலக உணவு திட்ட அமைப்பினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.


    இது குறித்து உலக உணவு திட்ட அமைப்பு அறிவித்திருப்பதாவது:

    வடக்கு காசா பகுதியில் வன்முறையும், கட்டுப்பாடற்ற சூழலும் நிலவுகிறது. அங்கு சட்டம் ஒழுங்கற்ற நிலை உருவாகி விட்டது.

    உணவுக்காக கும்பல் கும்பலாக தாக்குதலில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கிச் சூடு மற்றும் உணவு களவாடப்படுதல் சம்பவங்கள் அதிகரித்து விட்டது.

    பாதுகாப்பற்ற சூழலில் உள்ள மக்கள் சிறிது சிறிதாக பசி மற்றும் நோய் தாக்குதல் ஆகியவற்றால் தீவிர துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

    உணவு வினியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு கோரியுள்ளோம்.

    விரைவில் வினியோகம் மீண்டும் தொடங்கப்படும்.

    இவ்வாறு அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

    வடக்கு காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது.

    இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் பாலஸ்தீனத்தில் இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • காசா முழுவதும் ஹமாஸ் அமைப்பினரை தேடி வருகிறது இஸ்ரேல் ராணுவம்.
    • தலைமை அலுவலகத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டது என்கிறது இஸ்ரேல்.

    கடந்த 2023 அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினரை காசா பகுதி முழுவதும் இஸ்ரேலிய ராணுவ படையினர் தேடித்தேடி வேட்டையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான தலைமையக அலுவலகத்திற்கு கீழே சுரங்கப்பாதைகள் உள்ளதை கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    "இந்த சுரங்கப்பாதைகள் ஹமாஸ் போராளிகளால் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான மின்சார வினியோகம் ஐ.நா. அமைப்பின் தலைமையகத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது" என இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு, ஹமாஸ் அமைப்பினருக்கு மறைமுகமாக உதவி வருவதாக முன்னரே இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இப்பின்னணியில் இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கிறது.

    ஆனால், சுரங்கப்பாதைகளில் ஹமாஸ் போராளிகள் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் தற்போது வரை முன்வைக்கப்படவில்லை.

    இந்த சுரங்கபாதை அரை கிலோமீட்டர் தூர நீளத்துக்கு உள்ளது என்றும் இதில் ஆங்காங்கே 10 கதவுகள் இருந்து உள்ளன என இதனை பார்வையிட்ட பத்திரிகையாளர்களிடம் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    காசாவின் குறுக்கே பல கிலோமீட்டர் சுரங்கப்பாதைகளை கட்டியதை ஹமாஸ் ஒப்புக்கொண்டு உள்ளது.

    அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரின் முக்கிய நோக்கங்களில், காசாவில் ஹமாஸ் அமைத்திருக்கும் அனைத்து கட்டுமான வசதிகளை அழிப்பதும் ஒன்று என இஸ்ரேல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 100 நாட்களை எட்டிய போர், நிற்பதற்கான அறிகுறி இல்லை
    • பணய கைதிகள் அனைவரையும் ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும் என்றார் பர்கட்

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தாக்குதல் நடத்தி 2500க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதை தொடர்ந்து பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவ படை தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

    போர், 100-வது நாளை எட்டியும் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தவில்லை. போர் நிறுத்தம் குறித்து உலக நாடுகள் முன்வைத்த ஆலோசனைகளை இஸ்ரேல் புறக்கணித்தது.

    இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சார்ந்துள்ள லிகுட் கட்சியை (Likud party) சேர்ந்த அந்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர் பர்கட் (Nir Barkat) போர் நிலவரம் குறித்து பேட்டி அளித்தார்.

    அப்போது பர்கட் கூறியதாவது:

    இஸ்ரேலியர்களாகவும், யூதர்களாகவும் இருந்ததற்காக அப்பாவிகளை அக்டோபர் 7 அன்று ஹமாஸ் கொன்று குவித்தது.

    எங்கள் நாட்டில் அனைவரின் குறிக்கோளும் போரை வென்று, பணய கைதிகளை மீட்க வேண்டும் என்பதே ஆகும்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான எங்கள் போர் அந்த அமைப்பினர் முழுவதும் சரணடையாமல் நிற்காது.

    எந்த நிபந்தனையும் இன்றி அவர்கள் சரணடைய வேண்டும். எங்கள் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணய கைதிகள் அனைவரும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    இதற்கெல்லாம் உடன்பட்டு ஹமாஸ் அமைப்பினர்தான் வெள்ளை கொடி காட்ட வேண்டும். இல்லையென்றால் போர் தொடரும். இதை தவிர வேறு எந்த மாற்று வழியும் கிடையாது.

    எங்கள் நாட்டு மக்களை கொல்லவோ, இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழிக்கவோ நினைக்காத ஒரு அமைப்பின் கீழ் புதிய பாலஸ்தீனம் நிறுவப்பட வேண்டும்.

    இவ்வாறு பர்கட் கூறினார்.

    "வெற்றி பெறும் வரை போர் தொடரும்" என சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இடைநிறுத்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை என்றார் நேதன்யாகு
    • மத்திய காசா பகுதியை அடைந்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது

    தங்கள் நாட்டின் மீது அக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா முனை பகுதியில் தரைவழியாகவும் மற்றும் வான்வழியாகவும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடங்கி ஒரு மாத காலத்திற்கும் மேலான நிலையில், காசா பகுதியில் உள்ள பொதுமக்கள் 10 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.

    மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தத்தை இஸ்ரேல் பரீசிலிக்க வேண்டும் என பல உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்தது.

    "போர்நிறுத்தம் அல்லது இடைநிறுத்தம் போன்ற பேச்சுகளுக்கே இடமில்லை. போர் முடிந்த பிறகும் கூட காசாவின் பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் முழுமையாக இருக்கும்", என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    "உலகிலேயே பெரிய பயங்கரவாத முகாம் காசா. அதை அழித்தாக வேண்டும்" என இஸ்ரேலிய ராணுவ அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் காசாவின் மத்திய பகுதியை அடைந்து விட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்திருக்கிறது.

    வான்வழியாகவோ, தரைவழியாகவோ இஸ்ரேல் அறியாமல் ஆயுத கடத்தலில் ஈடுபட முடியாததால் பூமிக்கு அடியில் நீண்ட சுரங்கம் அமைத்து அதன் மூலம் தனது ஆதரவு நாடுகளிலிருந்து தாக்குதலுக்கான ஆயுதங்களை ஹமாஸ் அமைப்பினர் பெற்று வந்தனர். இதை அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகுதான் இஸ்ரேல் தாமதமாக கண்டறிந்ததாக தகவல்கள் வெளியாகின.

    தற்போது காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் அங்கு அமைத்துள்ள சுரங்கங்களை தேடி கண்டுபிடித்து அவற்றை அழித்து வருகின்றது. அதில் ஒரு சில சுரங்கங்கள் நூறு கிலோமீட்டருக்கும் மேல் நீண்டு செல்வதாகவும் ராணுவம் தெரிவித்தது.

    போர் விரைவில் முடிவடைந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • போர் நிறுத்தத்தை பல உலக நாடுகள் கோரி வருகின்றன
    • உலகம் அக்டோபர் 7 தாக்குதலை மறக்க விட மாட்டோம் என்றார் ஹகரி

    ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா முனை பகுதி மீது கடந்த அக்டோபர் 7 முதல் நடத்தி வரும் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சுமார் 9770 பேருக்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.

    பல உலக நாடுகளின் தலைவர்கள் போர் நிறுத்த கோரிக்கையை விடுத்திருந்தனர். ஆனால், இதனை இஸ்ரேல் புறக்கணித்து விட்டது.

    "போர் நிறுத்தமா? அந்த வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்து விடுங்கள். அக்டோபர் 7 அன்று பணயக்கைதிகளாக பிடித்து சென்றவர்களை ஹமாஸ் விடுவிக்காத வரை போர் நிறுத்தம் எனும் பேச்சிற்கே இடமில்லை. நாங்கள் வெற்றி பெறும் வரை போரை தொடர்ந்து நடத்தியாக வேண்டும்; வேறு வழியில்லை" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உறுதிபட தெரிவித்திருந்தார்.

    இப்பின்னணியில் இஸ்ரேலிய ராணுவ படைகளின் (IDF) செய்தித்தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகரி, தற்போதைய நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    முக்கியமான இடங்களில் தாக்குதல்களை தொடர்கிறோம். நாங்கள் காசா முனை பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து விட்டோம். அதனை இரண்டாக பிரித்து விட்டோம். இப்போது காசா, வடக்கு காசா மற்றும் தெற்கு காசா என இரண்டாகி விட்டது. வட காசா மீது எந்நேரமும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம். கடற்கரையையொட்டி உள்ள பகுதிகளை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டோம். பயங்கரவாத அமைப்பினருக்கு சொந்தமான பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்கள், மேலே உள்ள தளங்கள், தளவாடங்கள் ஆகியவை மீதான தாக்குதல் தொடர்கிறது. அக்டோபர் 7 அன்று எங்களுக்கு நடந்ததை உலகம் மறக்க விட மாட்டோம்.

    இவ்வாறு ஹகரி தெரிவித்தார்.

    ×