search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fraud case"

    • உரிமையாளர்கள் உள்பட 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
    • அபராதமாக ரூ. 3,95 கோடியை செலுத்த வேண்டுமென சிறப்பு நீதிபதி ரவி தீா்ப்பு வழங்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் டவுன் சேலம் சாலையில் எஸ்.ஆா்.ஒய். என்ற பெயரில் ஈமு நிறுவனம் 2012-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இங்கு ஈமு கோழிப் பண்ணையாளா் திட்டம், விஐபி திட்டம் போன்ற திட்டத்தை நடத்தி வந்த ஐம்புகுமாா், சம்பத், ஸ்ரீதா், திருப்பதி, முபாரக் பாஷா, மேகநாதன், இனுக் ஆன்ட்ரூஸ், சந்தோஷ் ஆகியோா் பொதுமக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகாா் எழுந்தது.

    இதனைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்பட்டனா். 172 முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ. 4,24 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆா்.ஒய் ஈமு நிறுவனம் மீதும், அதில் தொடா்புடைய 8 போ் மீதும் கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலன் பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    இவ்வழக்கு விசாரணை முடிவு பெற்றதை அடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஆா்.ஒய். ஈமு நிறுவனம், ஜம்புகுமாா், சம்பத், ஸ்ரீதா், திருப்பதி மற்றும் இனுக் ஆன்ட்ரூஸ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதமாக ரூ. 3,95 கோடியை செலுத்த வேண்டுமென சிறப்பு நீதிபதி ரவி தீா்ப்பு வழங்கினார்.

    இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முபாரக் பாஷா, மேகநாதன் ஆகியோா் விடுதலை செய்யப்பட்டனா். இத்தகவலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனா்.

    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி செய்ததாக தாய்-மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தாங்கரை அருகிலுள்ள புதுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 29). இவர் மதுரை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

    உசிலம்பட்டி கலாம் நகரைச் சேர்ந்த சத்யசீலன் (31) மற்றும் அவரது தாயார் பாண்டியம்மாள் தேவி ஆகியோர் என்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி தந்தனர். இதன் அடிப்படையில் நான் அவர்களிடம் ரூ.13 லட்சம் கொடுத்தேன்.

    இதையடுத்து எனக்கு மத்திய அரசு நிறுவனத்தின் பணியாணை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எனது நண்பர்களுக்கும் அரசு வேலை வாங்கித்தருமாறு ரூ.15 லட்சம் கொடுத்தனர்.

    இதற்கிடையே நான் பணி ஆணையில் உள்ள நிறுவனம் குறித்து விசாரித்தேன். அப்போது அது போலி நிறுவனம் என்பது தெரியவந்தது. நாங்கள் அரசு வேலைக்காக கொடுத்த ரூ.28 லட்சத்தையும் சத்யசீலனும், பாண்டியம்மாள் தேவியும் திருப்பித்தர மறுத்து வருகின்றனர்.

    மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    புகார் மனு மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை தனக்கன்குளம் வேடர்புளியங்குளத்தை சேர்ந்த கோட்டூர் கருப்பு என்பவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 2014-ம் ஆண்டு என் மனைவி ஜோதிக்கு தமிழக அரசின் சத்துணவு மையத்தில் வேலை தேடி வந்தேன். அப்போது எம்.கல்லுப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பாண்டி (50) மற்றும் அவரது மகன்கள் சந்திரசேகரன், குட்டிக்கண்ணன் ஆகிய 3 பேரும் என்னிடம் சத்துணவு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினர். இதனை நம்பிய நான் அவர்களிடம் ரூ.2.60 லட்சம் கொடுத்தேன். அவர்கள் வாக்குறுதி அளித்தபடி என் மனைவிக்கு வேலை வாங்கி தரவில்லை.

    நான் அவர்களிடம் என் பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் என்னிடம் வாங்கிய ரூ.2.60 லட்சத்தை திருப்பி தர மறுத்ததுடன் எனக்கு மிரட்டலும் விடுத்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளா£ர்.

    இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    ரூ.700 கோடி மோசடி வழக்கின், அமலாக்கப்பிரிவு விசாரணை அறிக்கையை செசன்சு கோர்ட்டு ஏற்றுக் கொண்டதை எதிர்த்து ‘சுபிக்‌ஷா’ சுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ள மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    குஜராத், டெல்லி, மராட்டியம், தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல இடங்களில் ‘சுபிக்‌ஷா’ என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஆர்.சுப்பிரமணியன் என்பவர் இருந்தார்.

    இவர், விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் விஸ்வபிரியா பைனான்ஸ் செக்யூரிட்டி என்ற பெயரில் நிதி நிறுவனங்களை நடத்தினார். இந்த நிறுவனங்களின் பெயரில், பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.150 கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில், ‘சுபிக்‌ஷா’ சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்காக வங்கிகளில் சுமார் ரூ.700 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக சுப்பிரமணியன் மீது, மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    பின்னர், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யாமல், இடைக்கால அறிக்கையை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், அமலாக்கப்பிரிவு உதவி இயக்குனர் தாக்கல் செய்தார். இதை மாவட்ட நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், வழக்கை விசாரணைக்கு நீதிபதி எடுத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சுபிக்‌ஷா சுப்பிரமணியம் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் விசாரித்தார். பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின்படி இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், மேல் விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. அதேபோல இந்த சட்டத்தின்படி, புலன் விசாரணை முடிந்ததும், காலதாமதம் இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறுகிறது. அதற்கு கால அளவை நிர்ணயம் செய்யவில்லை.

    அதனால், இடைக்கால அறிக்கையை கீழ் கோர்ட்டில் தாக்கல் செய்ய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. இதுபோல பிற அம்சங்களையும் கீழ் கோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்த பின்னர் தான் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் விதிமீறல் எதுவும் இல்லை. சட்டவிரோதமும் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #tamilnews
    எஸ்.பி.ஐ. வங்கியில் 90 கோடி ரூபாய் கடன் வாங்கி ஊழல் செய்த வழக்கில், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியுள்ளது. #EnforcementDirectorate #TamilNadu
    சென்னை:

    விருதுநகரை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் செண்பகன் என்பவருக்குச் சொந்தமான இன்சுமதி சுத்திகரிப்பு நிலையம் என்ற தனியார் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் சுமார் 87.36 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இதையடுத்து, இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான செண்பகத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர். மதுரை, கோவை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அவருக்கு சொந்தமான 9 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.#EnforcementDirectorate #TamilNadu
    தாய்லாந்து நாட்டில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. #Thailand #WirapolSukphol
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர், வைராபான் சுக்பான் (வயது 39). முன்னாள் புத்த துறவி. இவர் அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயது அடையாத ஒரு பெண்ணை கற்பழித்து, கர்ப்பம் ஆக்கினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.

    அவர் மீது போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் புத்தருக்கு உலகிலேயே மிகப்பெரிய மரகத சிலை செய்வதற்காக நன்கொடையாளர்களிடம் பெரும்தொகை திரட்டி ஏமாற்றினார்; வங்கிக்கணக்குகளில் 7 லட்சம் டாலர் (சுமார் ரூ.4¾ கோடி) குவித்து உள்ளார்; பல சொகுசு கார்களை வைத்து இருக்கிறார்; ஆடம்பர வாழ்க்கை நடத்தி வருகிறார் என்றெல்லாம் தெரிய வந்தது.

    அதைத் தொடர்ந்து அவரை அமெரிக்காவில் இருந்து தாய்லாந்து அரசு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்தியது.

    இதில் அவர்மீது சட்ட விரோத பண பரிமாற்றம், மோசடி, ஆன்லைன் வழியாக நிதி திரட்டுவதற்காக கணினி குற்ற சட்டத்தை மீறியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய பாங்காக் கோர்ட்டு, அவருக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    மேலும் அவர்மீது புகார் கூறிய 29 நன்கொடையாளர்களுக்கு 8 லட்சத்து 61 ஆயிரத்து 700 டாலரை (சுமார் ரூ. 5 கோடியே 85 லட்சம்) திரும்பத்தர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

    இவர் மீது தொடரப்பட்டு உள்ள கற்பழிப்பு வழக்கில் வரும் அக்டோபர் மாதம் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #Thailand #WirapolSukphol #tamilnews
    புதுச்சேரி மற்றும் கோவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார்கள் உள்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. #FakeATMCard
    புதுச்சேரி:

    ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மரை பொருத்தி வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டில் உள்ள தகவல்களை திருடி போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து அவர்களது வங்கிகணக் கில் இருந்து பணத்தை ஒரு கும்பல் மோசடி செய்தது. இது குறித்து ஏராளமான புகார்கள் வந்ததால் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் என்ஜினீயர் பாலாஜி, டாக்டர் விவேக் ஆனந்தன், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா உள்ளிட்ட 11 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்தியால்பேட்டையை சேர்ந்த சந்துருஜியை வலைவீசி தேடிவருகின்றனர். சமீபத்தில் சமூக வலைதளத்தில், தனக்கும் இந்த மோசடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    போலீசாரின் தீவிர விசாரணையில் சந்துருஜிக்கும் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியை சேர்ந்த பீட்டர் (வயது 38) என்பவருக்கும் தொடர்பு இருப்பதும், இவர்தான் சந்துருஜியின் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. மரைன் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்திவருகிறார்.

    கோவையை சேர்ந்த பட்டதாரியான தினேஷ் (33) என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கோவையில் அழகுநிலையம் நடத்திவரும் இவரும், பீட்டரும் சந்துருஜியிடம் இருந்து ஸ்வைப்பிங் மெஷின்களை வாங்கி சட்டவிரோதமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    மேலும் சென்னை கொளத்தூரை சேர்ந்த இர்பான் ரகுமான் (34) என்பவருக்கும் இந்த மோசடி வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் சென்னை வடபழனியில் விமான டிக்கெட் வாங்கித்தரும் ஏஜென்சி நடத்திவருகிறார். இந்த வழக்கில் இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    பீட்டரிடம் இருந்து ரூ.2 லட்சம், லேப்டாப் மற்றும் 5 ஏ.டி.எம். கார்டுகள், தினேஷிடமிருந்து சொகுசு கார் ஒன்றும், இர்பான் ரகுமானிடமிருந்து அதிநவீன சொகுசு கார் ஒன்றும், 4 லேப்டாப், 3 வங்கி காசோலை புத்தகங்கள், 2 வங்கி கணக்கு புத்தகம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி.

    கோவையிலும் இதேபோல போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், கிருஷ்ணகிரியில் ஒரு ஓட்டல் அருகில் ஏ.டி.எம். மோசடி கும்பலை சேர்ந்த 6 பேரை மடக்கிப்பிடித்தனர். கைதானவர்கள் விவரம் வருமாறு:-

    நவசாந்தன் (29), உத்தண்டி, சென்னை. இலங்கை திரிகோணமலையை சேர்ந்த இவர் இலங்கை அகதியாக வந்து தங்கியிருந்தார். நிரஞ்சன் (38), கானத்தூர், சென்னை. தமிழரசன் (26), வசீம் (30), இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கிஷோர் (25), திருச்சி, மனோகரன் (19), திருப்பூர் அனுப்பர்பாளையம்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, கோவையில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, வாடிக்கையாளர்களின் ரூ.19 லட்சத்தை சுருட்டியது தெரியவந்தது. இந்த கும்பல் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்று லட்சக்கணக்கில் சுருட்டியுள்ளனர்.

    கைதானவர்களில் சென்னையை சேர்ந்த நிரஞ்சன், நவசாந்தன் ஆகியோர் தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணர்கள். போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரிப்பதில் இவர்கள் முக்கியமாக செயல்பட்டுள்ளனர். இந்த கும்பலுக்கு நவசாந்தன் மூளையாக செயல்பட்டுள்ளார். பி.எம்.டபிள்யூ. உள்பட சொகுசு கார்கள், 2 லேப்டாப், 17 செல்போன்கள், 20 போலி ஏ.டி.எம். கார்டுகள், 40 கிராம் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 6 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். 
    அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 40 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், குசவன்குண்டு அருகே உள்ள குதிரைகுத்தியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 46). பட்டதாரியான இவர், அரசு வேலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    அப்போது செங்கல்பட்டைச் சேர்ந்த சேகர் (58), அவரது மனைவி கிளாடி (50) ஆகியோர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டனர்.

    தலைமை செயலகத்தில் வேலை பார்ப்பதாக கூறிய சேகர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தனக்கு முக்கியமான நபர்களை தெரியும் என்றும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித்தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதனை நம்பி ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ரூ. 40லட்சம் வரை கொடுத்துள்ளனர். ஆனால் சேகர் வேலை எதுவும் வாங்கித்தரவில்லை.

    பலமுறை பணம் கேட்டும் சேகர் மற்றும் கிளாடி தர மறுத்ததால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஜெயக்குமார் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    ×