search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drone"

    • ஒளிரும் விளக்குடன் வானத்தில் அடுத்தடுத்து பறந்த ட்ரோன்கள்.
    • ட்ரோன் ஷோ வீடியோவை 40 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

    இரவு வானத்தில் வண்ண வண்ண விளங்குகள் அங்குமிங்கும் அசைந்து செல்லும் வீடியோ ஒன்று 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. டிக் டோக்கில் வெளியான அந்த வீடியோ கிராப்பிக்ஸ் காட்சியாக இருக்கலாம் என பலர் கருதினார். ஆனால் அது ட்ரோன்கள் மூலம் உருவாக்கப்பட்டது என்பது பலரை வியப்பில் ஆழ்த்தியது. 


    அந்த வீடியோவில், பல ட்ரோன்கள் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளை ட்ரோன் பைலட் ஒருவர் சோதித்து பார்க்கிறார். பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக, ஒளிரும் விளக்குடன் ட்ரோன்கள் வானத்தில் பறக்க விடப்படுகின்றன. 


    இரவு நேர வானத்தை பல வண்ணங்களில் ஒளிரச் செய்த அந்த ட்ரோன்கள் மூலம், பல்வேறு வடிவங்கள் மற்றும் ஒளி ஓவியங்கள் உருவாக்கப்பட்டன. இது காண்போரை பிரமிக்க வைத்தது. டெல்லியில் நடைபெற்ற இந்த ட்ரோன் லைட் ஷோ விளையாட்டில், பயிற்சி பெற்ற குழு ஈடுபட்டது. சான்றளிக்கப்பட்ட ட்ரோன் பைலட்டுகள் மற்றும் பொறியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். 

    • 1 ஏக்கருக்கு சுமார் 45 கிலோ பயன்படும் இடத்தில் 500 எம்.எல் நானோ யூரியாவை எளிதில் ஏக்கர் முழுவதும் தெளித்துவிடலாம்.
    • நானோ யூரியா பயன்படுத்தும் முறை குறித்து அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு செயல் விளக்கங்கள் மேற்கொள்ள விவசாயிகள் முன்வரவேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூரில் குறுவை நெல் பயிறில் டிரோன் மூலம் நானோ யூரியா மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் செயல் விளக்கம் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    அப்போது அவர் கூறியதாவது:-மேலப்பூதனூர் கிராமத்தில் ஒரு முன்னோடி விவசாயி அவரின் நிலத்தில் குறுவை சாகுபடி செய்து அவற்றிற்கு ட்ரோன் மூலமாக நானோ யூரியா என்ற உரத்தை தெளித்துள்ளார்.

    நானோ யூரியா பயன்படுத்துவதன் மூலம் 1 ஏக்கருக்கு சுமார் 45 கிலோ பயன்படும் இடத்தில் 500 எம்.எல் நானோ யூரியாவை எளிதில் ஏக்கர் முழுவதும் தெளித்துவிடலாம்.ட்ரோன் மூலம் நானோ யூரியா மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்து தெளிப்பதால் ஒரு குறைவான நேரத்தில் அதிக பரப்பினை தெளிக்க முடியும். தற்சமயம் ஆள் பற்றாக்குறையை போக்க ட்ரோன் முறை பயன்படுத்தலாம். நானோ யூரியா பயன்படுத்தும் முறை குறித்து அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு செயல் விளக்கங்கள் மேற்கொள்ள விவசாயிகள் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த செய்முறை விளக்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் ஜாக்குலா அகண்டராவ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • எல்லைப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டை
    • ட்ரோன் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்டதா என்பது குறித்து ஆய்வு.

    ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சில்லியாரி கிராமம் அருகே பறக்கும் சாதனம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அந்த பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அது ட்ரோன் ஆக இருக்கலாம் என்று எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார். எனினும் அந்த ஆளில்லா விமானத்தை யாரும் பார்த்தார்களா என்பது குறித்து தகவல் இல்லை என்றும் அவர் கூறினார்.

    பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு எல்லைப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்றதாகவும் ட்ரோன் மூலம் ஆயுதங்கள் ஏதுவும் வீசப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் இந்த பணிக்கு ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    அண்டை நாட்டில் இருந்து ஏவப்படும் ட்ரோன்களின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை நகரில் குற்றங்கள் நடைபெறும் இடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் வி.ஐ.பி.க்கள் செல்லும் சாலைகளில் பணிபுரியும் போலீசாருக்கு உதவும் வகையில் நடமாடும் டிரோன் காவல் பிரிவு செயல்படுத்தப்படுகிறது.
    சென்னை:

    சட்டசபையில் காவல் துறை மானியக் கோரிக்கையின்போது சென்னையில் கண்காணிப்பு பணிக்காக நடமாடும் டிரோன் காவல் பிரிவு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சென்னை பெருநகரில் கூட்டமான இடங்களையும், நீண்ட தூர சாலைகளையும் கண்காணிப்பதற்காக ரூ. 3.60 கோடி செலவில் நடமாடும் டிரோன் காவல் அலகு ஏற்படுத்துவதற்கு நிர்வாக அனுமதியை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    சென்னை நகரில் குற்றங்கள் நடைபெறும் இடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் வி.ஐ.பி.க்கள் செல்லும் சாலைகளில் பணிபுரியும் போலீசாருக்கு உதவும் வகையிலும், பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையிலும் நடமாடும் டிரோன் காவல் பிரிவு செயல்படுத்தப்படுகிறது.

    இதில் 3 வகையான நடமாடும் டிரோன் போலீஸ் யூனிட்டுகள் ஏற்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாடு அறையுடன் செயல்படும் இந்த யூனிட்டுகள் 40 அடி அகலம், 10 அடி உயரத்தில் இருக்கும். அங்கிருந்தபடி டிரோன்களை பறக்கவிட்டு கண்காணிக்கப்படும். ஒவ்வொரு யூனிட்டிலும் 9 டிரோன்கள் இருக்கும்.

    மெரினா கடற்கரை, பாண்டி பஜார் போன்ற இடங்களில் நடமாடும் டிரோன் காவல் பிரிவு செயல்படும்.

    டிரோன் வந்து கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்ததைக் கண்டு ஆரம்ப சுகாதாரத்தில் பணியில் இருந்த டாக்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொரோனா வைரஸ் தடுப்பூசி சென்றடைந்து வருகிறது.

    அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள ஹரக்காட்டே என்ற கிராமத்துக்கு சந்தப்புரா ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 50 கொரோனா தடுப்பூசி குப்பிகளை சிரிஞ்சுகளுடன் தி ஆக்டாகாப்டர் என்ற டிரோன் (ஆளில்லா சிறிய ரக விமானம்) எடுத்துச் சென்று நேற்று காலை 9.53 மணிக்கு ஒப்படைத்தது.

    அதன்பின்னர் அந்த டிரோன், சந்தப்புரா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திரும்பியது.

    சாலை வழியாக சென்றால் 40 நிமிடத்தில் சென்று அடையக்கூடிய தொலைவை இந்த டிரோன் 10 நிமிடத்தில் சென்று அடைந்துள்ளது.

    டிரோன் வந்து கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்ததைக் கண்டு ஆரம்ப சுகாதாரத்தில் பணியில் இருந்த டாக்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாரி டாக்டர் மணிஷா தெரிவித்துள்ளார்.

    இந்த வினியோகத்தை செய்துள்ள டிரோன், இதற்காகவே வடிவமைக்கப்பட்டு தேசிய விண்வெளி ஆய்வுக்கூடத்தால் இயக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    ஃபேஸ்புக் நிறுவனம் மொபைல் இண்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த சிறிய ரக டிரோன்களை பயன்படுத்த திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



    இண்டர்நெட் இணைப்பு சீரற்று இருக்கும் பகுதிகளில் இணைய வேகத்தை அதிகப்படுத்த ஃபேஸ்புக் சிறிய ரக டிரோன்களை பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிரோன்கள் ஹை-டென்சிட்டி சாலிட் ஸ்டேட் டிரைவ்களை கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் டிரோன்கள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் அதிவேக இணைய வசதியை வழங்கும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. கேடலினா என்ற குறியீட்டு பெயரில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்றும், இது ஒரு ஆண்டுக்கு முன்பே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 



    2017 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் சிறிய டிரோன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு செல்லுலார் சேவைகளில் கவனம் செலுத்தியதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 2017 இல் நடைபெற்ற ஃபேஸ்புக் டெவலப்பர் நிகழ்வில் அறிவிக்கப்பட்டு பின் சில மாதங்களிலேயே இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

    ஆபத்து மற்றும் இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதிகளில் ஹெலிகாப்டர்களில் தொலைதொடர்பு சாதனங்களை வைத்து வானில் சில நூறு மீட்டர்கள் உயரத்தில் இருந்து இணைய வசதியை வழங்க ஃபேஸ்புக் திட்டமிட்டிருந்தது. 2018 ஜூன் மாதத்தில் ஃபேஸ்புக் அக்யுலா டிரோன் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது.

    அக்யுலா திட்டத்தின் நோக்கம் உலக மக்களுக்கு இணைய வசதியை அறிமுகம் செய்து அவர்களுக்கு அனைத்து வித வாய்ப்புகளை வழங்குவது தான் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்தார். இதற்கென ஃபேஸ்புக் ஹை ஆல்டி-டியூட் பிளாட்ஃபார்ம் ஸ்டேஷன் சிஸ்டத்தை பயன்படுத்த திட்டமிட்டிருந்தது.
    கொல்கத்தாவில் புகழ்பெற்ற விக்டோரியா மகால் மீது பறந்த ஆளில்லா விமானம் தொடர்பாக சீன வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் புகழ்பெற்ற விக்டோரியா மகால் மீது சிறிய ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது.

    இதை அறிந்த போலீசார் உடனே அப்பகுதிக்கு சென்றனர். ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட சீன நாட்டை சேர்ந்த லீ வெய்யை கைது செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, சீன வாலிபர் லீ ஜிவெய் மலேசியாவில் இருந்து கொல்கத்தாவுக்கு வந்துள்ளார். அவர் சிறு ஆளில்லா விமானம் பறக்கவிட்டதற்கான உண்மையான நோக்கம் குறித்து விசாரித்து வருகிறோம்.

    விக்டோரியா மகாலில் இருந்து சிறிய தூரத்தில் துறைமுகம், போன்ற முக்கிய பகுதிகள் உள்ளன. இங்கு ஆளில்லா விமானம் பறக்கவிட அனுமதி பெற வேண்டும். ஆனால் அவர் அனுமதி எதுவும் பெறவில்லை என்றனர்.
    சாம்சங் நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் அந்நிறுவனம் மடிக்கக்கூடிய டிரோன் ஒன்றை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. #Samsung #drones



    சாம்சங் நிறுவனம் சிறிய ரக ஆளில்லா பறக்கும் ஊர்திகளை (டிரோன்) உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் தென்கொரிய நிறுவனம் மடிக்கக்கூடிய டிரோன் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இதில் கேமரா, கைரோஸ்கோப், அக்செல்லோமீட்டர் மற்றும் பாரோமீட்டர் போன்றவை இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த டிரோன் பெருமளவு உற்பத்திக்கு எப்போது தயாராகும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய வகையில் புதிய டிரோன் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த டிரோனின் இறக்கையை மடிக்கவும், நீட்டிக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.


    புகைப்படம் நன்றி: USPTO | Samsung

    இந்த டிரோன் இரண்டு பிரிவுகளை கொண்டிருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் போது டிரோன் பறக்க தயாராகி விடும். இந்த ஆண்டு மட்டும் டிரோன் தயாரிப்பது பற்றி சாம்சங் பதிவு செய்துள்ள ஐந்தாவது காப்புரிமை இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    சாம்சங் டிரோனின் ஒரு பகுதியில் வயர்லெஸ் தகவல் பரிமாற்றம் செய்யும் சர்கியூட், மற்றொரு பகுதியில் வெளிப்புற கண்ட்ரோலர், நேவிகேஷன் சர்கியூட் போன்ற பாகங்கள் பொருத்தப்படுவதாக சாம்சங் காப்புரிமைகளில் தெரிகிறது. 

    மேலும் இந்த டிரோன் வழக்கமான டிரோன்களை போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் என்றும் இதனை ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது கணினி உள்ளிட்டவற்றை கொண்டு இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. கூடுதலாக சாம்சங் டிரோன் கொண்டு மற்ற மின்சாதனங்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.
    தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆள் இல்லாத விமானம் இந்த ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த சிறிய விமானத்தை அண்ணா பல்கலை கழக தொழில்நுட்ப குழுவினரிடமிருந்து போலீசார் வாங்கி உள்ளனர். #Drone
    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு இன்றும், நாளையும் கூட்டம் அலைமோதும்.

    இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை வரையில் மாம்பலம், பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் தினமும் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

    ஆண்டுதோறும் தீபாவளி நேரத்தில் தி.நகரில் மக்கள் கூடும் இடங்கள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே போல் பாதுகாப்பு பணிகள் இன்று தொடங்கின.

    தி.நகர் பாண்டிபஜார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். பொருட்களை வாங்க வரும் பொது மக்களின் உடமைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு வலம் வரும் இந்த கொள்ளையர்களை பிடிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தி.நகர் ரங்கநாதன் தெரு உஸ்மான் ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் 750 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். மாம்பலம் போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த விழாவில் கூடுதல் கமி‌ஷனர் மகேஷ் குமார் அகர்வால், தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க மாம்பலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.


    தி.நகர் பஸ் நிலையம், போத்தீஸ் சந்திப்பு ஆகிய 2 இடங்களில் சிறிய கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    கூட்டத்தில் புகுந்து திருடும் கொள்ளையர்களின் 50-க்கும் மேற்பட்ட போட்டோக்களை போலீசார் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளனர். பேஸ் டிடெக்டிவ் என்கிற கண்டு பிடிப்பு முறையில் புகைப்படத்தில் இருக்கும் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களை காட்டிக் கொடுக்கும் வகையிலும் சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருடும் எண்ணத்தில் எந்த குற்றவாளியாவது மாம்பலம் பகுதியில் ஊடுருவினால் நிச்சயம் போலீசில் சிக்கிக் கொள்வார்கள். அவர்கள் தப்ப முடியாது.

    தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆள் இல்லாத விமானமும் இந்த ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த சிறிய விமானத்தை அண்ணா பல்கலை கழக தொழில்நுட்ப குழுவினரிடமிருந்து போலீசார் வாங்கி உள்ளனர். இதன் மூலம் போலீசார் பணியில் இல்லாத இடங்களிலும் கூட்டத்தை எளிதாக கண்காணிக்க முடியும்.


    தீபாவளி பாதுகாப்பில் இன்னொரு சிறப்பு ஏற்பாடாக போலீசாரின் சீருடையில் கேமரா பொருத்தி கண்காணிக்கும் முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 15 போலீசாரின் சீருடைகளில் கேமராக்களை கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பொருத்திவிட்டார். இந்த போலீசார் பணியில் ஈடுபட்டிருக்கும்போது கேமரா இயங்கிக் கொண்டே இருக்கும். போலீசாரின் எதிரே நின்று பேசுபவர்களின் குரலும், போலீசின் குரலும் அதில் பதிவாகும்.

    ஜி.பி.எஸ். கருவியுடன் கேமரா இணைக்கப்பட்டிருப்பதால் போலீஸ்காரர் எங்கு இருக்கிறார்? என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலம் போலீசார் யாராவது தவறு செய்திருந்தாலும் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

    இது தவிர 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், 8 இடங்களில் கண்காணிப்பு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. #Drone
    கோவை வனக்கோட்டத்தில் உள்ள வனவிலங்குகளை கண்காணிக்க ஆளில்லாத குட்டி விமானம் கோவை வந்தது. அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து இதை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    கோவை:

    கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டெருமைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    இதில் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள், மலையடிவார பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அவற்றை தடுக்க அகழி வெட்டப்பட்டாலும், ஆழம் குறைந்த பகுதி வழியாக காட்டு யானைகள் அகழியை கடந்து வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விடுகின்றன.

    அவற்றை கண்காணித்து மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வந்தாலும், சில நேரங்களில் யானை- மனித மோதல் நடந்து வருகிறது. இதனால் மலையடிவார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தாலும், அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தும்போது, அவைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டதா அல்லது அவை எங்கு நிற்கின்றன என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அத்துடன் வனப்பகுதிக்குள் எந்த இடங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்பதையும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    எனவே காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்துவதற்காகவும், வனவிலங்குகளை கண்காணிப்பதற்காகவும் ஆளில்லாத குட்டி விமானம் வேண்டும் என்று வனத்துறை சார்பில் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டது. தற்போது அதற்கான அனுமதி அளித்து, ஆளில்லாத குட்டி விமானமும் கோவை வந்துள்ளது.

    இதை இயக்க அதிகாரிகள் யாரை நியமிப்பது? என்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். அதன் பின்னர் அதை பயன்படுத்து வது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் அந்த ஆளில்லாத குட்டி விமானத்தை பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவைக்கு கொடுக்கப்பட்டு உள்ள ஆளில்லாத குட்டி விமானத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன. வீடியோ பதிவு செய்வதுடன், புகைப்படமும் எடுக்கும். அதுபோன்று அதில் தேனீக்கள் போன்று சத்தம் எழுப்பும் வசதியும் உள்ளது. பெரும்பாலும் தேனீக்களின் சத்தம் கேட்டதும் காட்டு யானைகள் ஓடிவிடும்.

    வனப்பகுதிக்கு மேல் இந்த குட்டி விமானத்தை இயக்கி, கண்காணிக்கும்போது, வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக யாராவது நடமாடுகிறார்களா? என்பதையும் கண்காணிக்க முடியும். அத்துடன் எந்தெந்த பகுதிகளில், எந்தெந்த வகையான வனவிலங்குகள் இருக்கின்றது என்பது குறித்தும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

    இந்த ஆளில்லாத குட்டி விமானத்தை இயக்க பயிற்சி அளித்த பின்னர், அதன் பயன்பாடு குறித்து பரிசோதனை செய்யப்படும். இந்த ஆளில்லாத குட்டி விமானம் வித்தியாசமானதாக, எடை அதிகம் கொண்டதாக இருக்கிறது. எனவே வனப்பகுதியை விட்டு வெளியே வந்து தொந்தரவு செய்யும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்த மிகவும் உதவியாக இருக்கும். அதுபோன்று அந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டதா? அல்லது வன எல்லையில்தான் நிற்கிறதா? என்பது குறித்தும் அறிய முடியும்.

    மேலும் இதை வனப்பகுதிக்கு மேல் இயக்கும்போது, வனப்பகுதிக்குள் காயத்துடன் ஏதாவது வனவிலங்குகள் சுற்றுகிறதா? என்பதையும் உடனடியாக கண்டறிய முடியும். எந்தப்பகுதியில் வனவிலங்குகளின் தொந்தரவு இருக்கிறதோ அங்கு உடனடியாக ஆளில்லாத குட்டி விமானத்தை எடுத்துச்சென்று கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்
    முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் 1 ரூபாய் அபராதம் விதித்தனர்.
    மசினகுடி:

    முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் 1 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    கோவையை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது நண்பர்கள் 9 பேருடன் நீலகிரி மாவட்டம் முதுமலையை சுற்றி பார்க்கவும், தனியார் நிறுவனத்திற்கு விளம்பர படம் எடுக்கவும் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மசினகுடிக்கு வந்துள்ளார். மசினகுடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கிய அவர்கள் நேற்று முன்தினம் காலை முதலே முதுமலை புலிகள் காப்பகத்தை ரகசியமாக ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்து வந்து உள்ளனர். புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாயார் பகுதிக்கு நேற்று மாலை சென்ற அவர்கள் வனப்பகுதியையும், மாயார் அணை மற்றும் நீர்மின்நிலையத்தையும் வீடியோ எடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மசினகுடி வனச்சரகர் மாரியப்பன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் 10 பேரையும் மசினகுடி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்த அவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதமாக விதிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    அபராத தொகையை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோவையை சேர்ந்த சில காவல்துறை உயர் அதிகாரிகளிடம் செல்போனில் பேசினர். அதனையடுத்து அந்த அதிகாரிகள் சம்பந்தபட்ட 10 பேரையும் விட்டுவிடும்படி சிபாரிசு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மசினகுடி வனத்துறையினர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு சிறிய தொகையாவது அபராதம் விதிக்க வேண்டும் என்பதற்காக சந்தோசுக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர். அத்துடன் ஆளில்லா குட்டி விமானத்தை இயக்கிய கோவையை சேர்ந்த அகமது மற்றும் அவரது நண்பருக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் 1 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    சிறந்த சுற்றுலா தலமாகவும், வனவிலங்குகளின் புகலிடமாகவும் விளங்கும் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. பொதுவாக புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வனத்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் பெருந்தொகை அபராதமாக விதிக்காமல் 1 ரூபாயை மட்டும் அபராதம் விதித்து உள்ளனர். இதனை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளோம். வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் உயர் அதிகாரிகள் சிபாரிசு செய்தது கண்டனத்துக்குரியது. சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அரசு அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தவறான முன் உதாரணமாகி விடும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரில் 7 பேரின் உடல்கள் ஐகோர்ட் உத்தரவுப்படி நேற்று மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நேற்று மாலை தொடங்கி இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    உடலை வாங்க கூட்டமாக திரண்டு வரக்கூடாது எனவும், குடும்பத்தினர் மட்டுமே வந்து உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடலை வாங்க வரும் உறவினர்களிடம் மட்டும் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.

    குடியிருப்பு பகுதியில் பறந்த குட்டி விமானம்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேவையில்லாமல் யாரேனும் கூட்டமாக நிற்கின்றனரா? அல்லது திரண்டு வருகிறார்களா? என்று போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர். மேலும் கேமிரா பொருத்திய ஆளில்லா குட்டி விமானத்தை பறக்க செய்து அதன் மூலம் வீடியோ எடுத்து கண்காணித்து வருகிறார்கள்.

    அந்த விமானம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் பறக்கவிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. #ThoothukudiGovtHospital

    ×