search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhinakaran"

    சிலை கடத்தல் வழக்கை போல் கொடநாடு விவகாரத்திலும் தனிக்குழு அமைத்து விசாரணை வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #KodanadEstate

    திருவாரூர்:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலை காரணம் காட்டி திருவாரூர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. எப்போது தேர்தல் நடந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமோக வெற்றி பெறும்.

    திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்த விவகாரத்தில் ஆளுங்கட்சியும், எதிர் கட்சியும் இணைந்து செயல்பட்டுள்ளது.

    தி.மு.க. எம்.எல்.ஏ.கள் அ.தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்துள்ளனர். கூட்டுறவு தேர்தலின் போது 60க்கு 40 என்ற சதவீதத்தில் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டு தேர்தலை நடத்தினர்.

    கொடநாடு கொலை விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும். கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு விவரங்களை கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேர் இறந்துள்ளனர். இந்த இறப்பில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து முதல்வர் பெயர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தமிழக முதல்வருக்கு பயம், பதட்டம் உள்ளது தெரிகிறது. கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் தமிழக காவல்துறையினர் கைது செய்து வந்தவர்களை நீதிபதி சிறைக்கு அனுப்ப மறுத்துள்ளது முதல்வருக்கு மிகப்பெரிய பின்னடைவு.

    உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி மூலம் முதல்வர் மீதான வழக்கை, எப்படி பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் பிரிவு கண்காணிப்பது போன்று கண்காணிக்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளுடன் மற்றும் இட பகிர்வு குறித்து கூறப்படும். கட்சிகளின் பெயர்கள், கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்தவுடன் தெரிவிக்கப்படும். கூட்டணிகள் அமையாவிட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2014-ல் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது போல் போட்டியிட்டு வெற்றி பெறும்.

    தேசிய கட்சிகள் தமிழ்நாட்டின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. இதனால் பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை.

    எனவே தேசிய கட்சிகளுக்கு பதிலாக மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் உடனிருந்தார். #TTVDhinakaran #KodanadEstate

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று தினகரன் கூறியுள்ளார். #SterlitePlant

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று உச்சநீதி மன்றம் அளித்துள்ள உத்தரவு மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. பலவீனமான நடைமுறை கொண்டு ஸ்டெர்லைட்டை மூடியதாலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பழனிசாமி அரசு உரிய ஆதாரங்களை முன்வைக்க தவறிய காரணத்தினாலும், உணர்வு பூர்வமாக செயல்படாமலும், சட்ட ரீதியாக வலுவாக வாதிடாத காரணத்தினாலும் தான் ஸ்டெர்லைட் நிர்வாகம் சொன்னபடி தனது ஆலையை திறந்துவிட்டது.

    உச்சநீதிமன்றத்தில் தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளில் தொடர் தோல்விகளைத்தான் நாம் சந்தித்து வருகிறோம். முல்லைப் பெரியாறு, மேகதாது, நீட் என்று தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைகளில் பழனிசாமி அரசு பெரும் தோல்வியையே தமிழகத்திற்கு பெற்றுத்தந்து வருகிறது.

    ஸ்டெர்லைட் வி‌ஷயத்தில் துவக்கத்திலிருந்தே இந்த ஆலையை மூடவேண்டும் என்ற எண்ணம் பழனிசாமி அரசுக்கு இருந்ததே இல்லை.

    அதனால் தான் “தாமிர உருக்காலைகளே தமிழகத்திற்கு வேண்டாம்“ என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப் பட்டதை செவிமடுக்க மறுத்தது. இனிமேலாவது தாமதிக்காமல் ஒரு கொள்கை முடிவை எடுத்து, அவசியப்பட்டால் அவசரச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SterlitePlant

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று டி.டி.வி. தினகரன் பேட்டியில் கூறியுள்ளார். #Parliament #Dhinakaran

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துடன் அ.தி.மு.க.வை இணைப்பது குறித்து எங்கள் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெளிவான கருத்துக்களையே கூறி வருகிறார். அ.தி.மு.க.வில் உள்ள குறிப்பிட்ட 12 பேர் தவிர மற்ற அனைவரும் விரும்பினால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் வந்து சேரலாம்.

    தனிப்பட்ட முறையில் நாங்கள் யாரையும் வந்து சேருங்கள் என்று அழைக்கவில்லை. அ.தி.மு.க. அமைச்சர்களுடன் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

    அ.தி.மு.க-அ.ம.மு.க இருகட்சிகளும் இணைய வேண்டும் என்று பா.ஜ.க. கூறியதாக நான் நாளிதழ்களில் தான் படித்தேன். இது தொடர்பாக யாருமே என்னிடம் பேசவில்லை. எந்த தேசிய கட்சியும் தூதர் அனுப்பி என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தவில்லை.


    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக நான் ராகுல்காந்தியை சந்திக்க முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் எந்த உண்மையும் இல்லை. எந்த தேசிய கட்சியுடனும் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    தமிழ்நாட்டில் 4 மாநில கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி பற்றி பேசு உள்ளோம். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அந்த கூட்டணி முழுவடிவம் பெறும். அந்த 4 கட்சிகள் பற்றி இப்போது நான் எதுவும் சொல்ல இயலாது.

    மத்திய அரசு என்னை அரசியலில் இருந்து அகற்றி ஒழித்து விடலாம் என்று முயற்சி செய்கிறது. அதை எதிர்த்து போராடி நான் வெற்றி பெறுவேன்.

    எங்களுக்கு பொது எதிரி தி.மு.க. தான். எனவே தி.மு.க. அங்கம் வகிக்கும் எந்த கூட்டணியிலும் நாங்கள் இடம்பெற மாட்டோம்.

    ரஜினியும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் எங்களுக்கு 40 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை ஆதரவு உள்ளது.

    இவ்வாறு டி.டி.வி தினகரன் கூறினார். #Parliament #Dhinakaran

    கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிற்கு முதல் துரோகி தினகரன்தான் என தெரிவித்தார். #EdappadiPalanisamy #ADMK #TTVDhinakaran
    கோவை:

    கோவை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது; 

    தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 18 தொகுதிகளில் மட்டுமல்ல, 234 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிமுகவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியவர் தினகரன்தான்.

    சமீபத்தில் ஸ்டாலின் சந்திரபாபுவை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் நாட்டின் நலன் கருதி பாலாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக கேட்டாரா? தமிழகத்திற்கு ஆந்திரா தரவேண்டிய தண்ணீர் குறித்து ஸ்டாலின் கேட்டாரா? நாங்கள் கொள்கை உணர்வுடன் தான் யாருடனும் கூட்டணி வைப்போம். ஆனால், திமுக சந்தர்ப்பவாத கூட்டணி வைத்து கொள்ளும். 



    வயதான கமலுக்கு திரைஉலகில் ஓய்வு வழங்கப்பட்டு விட்டது. தற்போது அவர் அரசியலில் நடிக்க துவங்கியுள்ளார். அரசியலில் கமலின் நடிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனது படத்திற்கு பிரச்சினை வந்தபோது நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறிய கமல், எப்படி மக்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பார்?

    விலையில்லா திட்டத்தை சமீபத்திய திரைப்படம் ஒன்றில் அவமதிக்கிறார்கள். இதனை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள். திரைப்பட இயக்குநர் முருகதாஸ் உறவினர்கள் கூட விலையில்லா திட்டத்தால் பயன் பெற்றிருப்பார்கள். ஊடகங்களும் இதனை தெளிவுபடுத்த வேண்டும்.

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. காய்ச்சல் வந்ததும் அரசு மருத்துவமனையை அணுகினால், நிச்சயம் டெங்குவை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தார். #EdappadiPalanisamy #ADMK #TTVDhinakaran
    மு.க.ஸ்டாலின் மற்றும் தினகரன் பல தடவை சந்தித்து பேசி உள்ளனர் என்று துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #MKStalin #DMK #TTVDhinakaran #OPanneerselvam

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதி இடைத்தேர்தல்கள் விரைவில் வர இருக்கிறது. இதையொட்டி அ.தி.மு.க. சார்பாக 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்கள் தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி பணியாற்றி கொண்டிருக்கிறார்கள் உறுதியாக 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்பதை தெரிவிக்கிறேன்.

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் பேசியதாக பத்திரிகையில் வந்த செய்தி தவறு.


    எந்த சூழ்நிலையிலும் 4 தொகுதி, 6 தொகுதி, 8 தொகுதி என அவர் பேசவில்லை. முழுமையாக அ.தி.மு.க. 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் பேசினார். வெற்றிக்காக பூர்வாங்க பணிகளை கழகத்தின் பொறுப்பாளர்கள் முன்னின்று நடத்திட வேண்டும். உறுதியாக அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் பேசினார்.

    கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது எங்களது பெருந்தன்மை. அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் மனநிலையாகும்.

    அம்மா வகுத்து தந்த கொள்கைபடி எந்த சூழ்நிலையில் எந்த தேர்தலாக இருந்தாலும் தனித்து நின்றுதான் வெற்றி பெறும் என்ற முடிவை ஏற்கனவே எடுத்துள்ளார்.

    எங்களுடன் ஒத்த கருத்தோடு, கொள்கைகளோடு இணைந்து வருகிற கட்சிகள் வந்தால் நாங்கள் அதை இணைத்து தேர்தலில் போட்டியிடுவோம் என்றார்.

    மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், மு.க.ஸ்டாலினும்- தினகரனும் பல முறை ரகசியமாக சந்தித்து பேசுவதாக எங்களுக்கு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். #MKStalin #DMK #TTVDhinakaran #OPanneerselvam

    தினகரன் அணியில் இருந்து விலகமாட்டோம், நோட்டீசை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான பிரபு, கலைச்செல்வன் கூறி உள்ளனர். #TTVDhinakaran #ADMKMLAs
    கள்ளக்குறிச்சி:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கவர்னரிடம் மனு கொடுத்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தது சரி தான் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    இதையடுத்து டி.டி.வி. தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்களும் பதவி இழந்துள்ளனர்.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி), ரத்தினசபாபதி (அறந்தாங்கி) ஆகியோர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். தினகரன் தொடங்கிய புதிய கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. மேலிடம் முடிவெடுத்துள்ளது.

    அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப சபாநாயகருக்கு கொறடா பரிந்துரை செய்துள்ளார். விரைவில் அவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட உள்ளது.



    இருப்பினும் 3 பேரும் தினகரன் அணியில் இருந்து விலக மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினால் அதனை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று 3 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்துள்ளனர். #Dhinakaran

    இது தொடர்பாக பிரபு எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக இருந்தேன். எனக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவி வழங்கி உள்ளனர்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோருக்கு உண்மையானவராக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் செயல்பட்டு வருகிறார்.

    தொண்டர்களை அவர் அரவணைத்து செல்கிறார். அவரது செயல்பாடு எனக்கு பிடிக்கிறது. எனவே அவரை விட்டு நான் வரமாட்டேன். யார் அழைப்பு விடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட் டேன். தினகரன் வழிகாட்டுதல் படியே நடப்பேன். தினகரனை தொடர்ந்து ஆதரிப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

    சபாநாயகரிடம் இருந்து எனக்கு நோட்டீசு வரவில்லை. நோட்டீசு வந்த பிறகு விளக்கமாக பதில் அளிக்கிறேன். என் மீது எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் அதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

    கள்ளக்குறிச்சி தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும்படி முதல்-அமைச்சரிடம் பலமுறை மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. மாவட்ட செயலாளர் குமரகுருவிடமும் தொகுதிக்கு திட்டங்களை நிறைவேற்றும்படி கூறினேன். அவரும் கண்டு கொள்ளவில்லை. எனவேதான் நான் தினகரன் அணிக்கு சென்றேன்.

    தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சி வந்தால்தான் நல்லது நடைபெறும். தொகுதிக்கு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் கூறியதாவது:-

    சபாநாயகரிடம் இருந்து எனக்கு நோட்டீஸ் வரவில்லை. வந்தபிறகு அதற்கு பதில் அளிக்கிறேன். அதே நேரத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோதமாகும். நியாயத்துக்கும், தர்மத்துக்கும், உண்மைக்கும் எதிரானதாகும். அந்த 18 எம்.எல்.ஏ.க்களையும் மக்கள் விரும்புகிறார்கள்.

    11 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். அவர்கள் அம்மா அமைத்த ஆட்சியை கவிழ்க்க வாக்களித்தார்கள். ஆனால் 18 எம்.எல்.ஏ.க்கள் அந்த ஆட்சியை காப்பாற்ற நினைத்தார்கள். எனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை ஆகும். #TTVDhinakaran #ADMKMLAs

    தகுதி நீக்கம் வழக்கு குறித்து 18 எம் எல் ஏக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என அமமுக துணை பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase
    சென்னை:

    தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. முதலில் இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால், இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இவ்வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.

    அப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும். தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்று நீதிபதி அறிவித்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.



    இதுபற்றி டிடிவி தினகரன் கூறுகையில், தகுதி நீக்கம் வழக்கு குறித்து 18 எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வதா அல்லது தேர்தலை சந்திப்பதா என 18 பேரிடமும் நாளை கருத்து கேட்க உள்ளேன்.

    நீதிமன்ற தீர்ப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாது. தமிழகத்தில் இடைத்தேர்தல் வருமா என்பது சந்தேகமாக உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase
    மு.க.ஸ்டாலினும், தினகரனும் சேர்ந்து உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்களோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். #OPanneerselvam #MKStalin #TTVDhinakaran

    சிவகாசி:

    அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசியில் பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார்.

    கொட்டும் மழையில் நடந்த இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் எத்தனையோ சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி அ.தி.மு.க.வை வளர்த்துள்ளனர்.

    எம்.ஜி.ஆர். இருந்தபோது அ.தி.மு.க.வில் 16 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். அதை 1 1/2 கோடி உறுப்பினர்களாக உயர்த்தியவர் ஜெயலலிதா.

    ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்று இருவரும் ஆட்சி நடத்தினர். அவர்களது வழியில் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். மக்கள் நலத்திட்டங்கள் தொலை நோக்குடன் தொடங்கி தற்போது சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    2016 சட்டசபை தேர்தலில் எப்படியாவது அ.தி.மு.க.வை தோற்கடித்து விட வேண்டும் என்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைத்தார். அவரது எண்ணம் நிறைவேறவில்லை. மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்த பலர் தோற்றுப்போனார்கள்.

     


    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் தற்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தினகரன் முயற்சி செய்து தோல்வியடைந்து வருகிறார். அவரது சதி வேலைகள், மக்களிடம் அவர் எப்படிப்பட்டவர் என்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

    அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க திட்டம் போட்டதில் தற்போது 18 எம்.எல்.ஏ.க் களின் கதி, அதோகதியாகப் போகிறது. தொண்டர்கள் அ.தி.மு.க.வின் பக்கம் இருக்கும்போது யாரும் எதுவும் செய்ய முடியாது.

    தினகரன் கட்சியில் அனைவருக்கும் பதவி என்று வாரி வழங்கி வருகிறார். அவர் ஜாதகத்தை வைத்துக் கொண்டு ஜோதிடர்களிடம் வெற்றி பெற இயலுமா? என்று கேட்டுக் கொண்டு வருகிறார்.

    குழப்பத்தை உருவாக்கி சித்து வேலை செய்து ஆட்சியை கலைத்து விட வேண்டும் என்று தினகரன் நினைக்கிறார். அது பலிக்காது.

    அ.தி.மு.க. ஒரு எக்கு கோட்டை. ஸ்டாலினை தி.மு.க.வினர் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. தினகரனும், ஸ்டாலினும் சேர்ந்து உள் நோக்கத்தோடு செயல்படுகிறார்களோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஸ்டாலின் என்ன செய்தாலும் அது மக்களிடம் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #OPanneerselvam #MKStalin #TTVDhinakaran

    டி.டி.வி.தினகரனிடம் இருந்து இழுக்க 4 எம்.எல்.ஏ.க்களை மிரட்டுகிறார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #TTVDhinakaran #ThangaTamilselvan

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருதாச்சலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 4 பேருக்கு சபாநாயகர் நோட்டுஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதற்கான காரணம் பற்றி தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    டி.டி.வி.தினகரனுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருவது ஆளும் கட்சியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருந்தார்.

    அதன்பிறகும் கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பக்கம் இருப்பது இவர்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. 4 பேரும் தினகரனை விட்டு பிரியமாட்டார்கள் என்பதால் இவர்களை பயமுறுத்தி எடப்பாடி பழனிசாமி பக்கம் இழுப்பதற்காகவே நோட்டீஸ் அனுப்ப போவதாக மிரட்டுகிறார்.


    தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் இரு பக்கமும் ‘பேலன்ஸ்’ செய்வதால் அவர்களை கொறடா கண்டு கொள்ளவில்லை.

    இந்த 4 எம்.எல்.ஏ.க்களும் அப்படி என்ன தவறு செய்து விட்டார்கள் என்று தெரியவில்லை. இந்த விசயத்தில் சர்வாதிகாரமாக எடுக்கும் முடிவுகள் சபாநாயகருக்கு கெட்ட பெயரைதான் ஏற்படுத்தும்.

    ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்னும் தீர்ப்பு வராததால் விடை தெரியாமல் தவிக்கிறோம். இப்போது இந்த வரிசையில் மேலும் 4 எம்.எல்.ஏ.க்களா? என்று நினைக்கிறபோது சினிமாவில் வரும் வசனம் போல் மறுபடியும் முதுலில் இருந்தா? என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TTVDhinakaran #ThangaTamilselvan

    தற்போது நடைபெறும் ஆட்சியை கட்சியை கலைத்து விட்டு கட்சியை கைப்பற்ற டி.டி.வி. தினகரனும், ஆட்சியை கைப்பற்ற மு.க.ஸ்டாலினும் திட்டமிட்டுள்ளனர் என்று அமைச்சர் தங்கமணி கூறினார். #MinisterThangamani
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இழைக்கப்பட்ட துரோகத்தை கண்டித்து பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.

    கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

    காலம் முழுவதும் கருணாநிதியை எதிரியாக கொண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது தான் அ.தி.மு.க. ஆகும். அதன் வழியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தற்போது சிறப்பாக ஆட்சி புரிந்து வருகின்றனர்.

    ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கு கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்துகொண்டு இருந்தபோது, அவர் எப்படியும் சிறைக்கு சென்றுவிடுவார், நாம் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்று அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேசியுள்ளனர். இதற்கான ஆதாரம் ஜெயலலிதாவின் கையில் கிடைத்ததை அடுத்து, அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களை கட்சியை விட்டே ஒதுக்கி வைத்தார்.

    கருணாநிதி ஆட்சியில், 1996-ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் லண்டனில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் சொத்து வாங்கினார். அதுகுறித்து வழக்கில் ஜெயலலிதாவும் சேர்க்கப்பட்டார். இதையடுத்து டி.டி.வி.தினகரன் கருணாநிதியை சந்தித்து, இந்த வழக்கில் இருந்து என்னை மட்டும் விடுவித்துவிட்டு, வழக்கை வேகமாக முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

    இதையடுத்து கருணாநிதிதான் அந்த வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரனை விடுவித்து, ஜெயலலிதாவுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார். இதனால் கருணாநிதியை விட டி.டி.வி.தினகரன் தான் ஜெயலலிதாவுக்கு துரோகி ஆனார்.

    தற்போது அவர் 18 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு மு.க.ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து, இந்த ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறார். அ.தி.மு.க.வின் எதிரியான தி.மு.க.வுடன், டி.டி.வி.தினகரன் உடன்படிக்கை போட்டு உள்ளார். இதனால் அவர் பக்கம் சென்றவர்கள் இந்த உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

    ஜெயலலிதாவுக்கு இந்த நிலை ஏற்பட காரணம் முழுவதும் டி.டி.வி.தினகரன் தான். அவர் எங்களை பார்த்து ஊழல்வாதி என்கிறார். ஊழலின் தலைவரே டி.டி.வி.தினகரன் தான்.



    கட்சியில் 98 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். டி.டி.வி.தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு, தேர்தலை சந்தித்து இருந்தால் அவருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்று வைத்து கொள்ளலாம். தற்போது நடைபெறும் ஆட்சியை கட்சியை கலைத்து விட்டு கட்சியை கைப்பற்ற டி.டி.வி. தினகரனும், ஆட்சியை கைப்பற்ற மு.க.ஸ்டாலினும் திட்டமிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #MinisterThangamani
    அதிமுகவை அழிக்க நினைக்கும் தினகரன் கனவு பலிக்காது என்று பெரம்பூரில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறினார். #GokulaIndira #ADMK
    அம்பத்தூர்:

    வடசென்னை தெற்கு மாவட்டம் திருவிக நகர் தொகுதி 70-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ஜெயஸ்ரீமகேஷ் தலைமையில் மாவட்ட பொருளாளர் பெரம்பூர் ஆர்.மகேஷ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, பகுதி செயலாளர் இரா.வீரமணி முன்னிலையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பெரம்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசியதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட தார்மீக உரிமை அ.தி.மு.க.விற்கு மட்டுமே உண்டு.

    முதல்-அமைச்சர் பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் ஸ்டாலின் முதல்வர் மடியில் கனம் இல்லாததால் தான் ஊழல் தடுப்பு பிரிவை ஸ்டாலின் புகார் குறித்து முழுமையாக விசாரிக்க சொல்கிறார். அண்ணா சொன்னது போல் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் அ.தி.மு.க.வினர் எவ்வளவு பொய் வழக்கு போட்டாலும் சட்டபடி சந்திப்போம்.

    அம்மா அவர்கள் உயிரை கொடுத்து ஏற்படுத்தி விட்டுசென்ற ஆட்சியை கழகத்தை அழிக்க தினகரன் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார். அம்மாவின் கழகத்தை அழிக்க நினைக்கும் டி.டி.வி.தினகரன் கனவு ஒரு காலமும் பலிக்காது. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். என்ற இரு துருவங்களை கொண்டு வெற்றி மேல் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் டி.ஜி.வெங்கடஷ்பாபு எம்.பி., தலைமை கழக பேச்சாளர்கள் கோவிந்தசாமி, பி.எம்.மூர்த்தி எம்.குமார், நிர்வாகிகள் ரவிந்திரஜெயின், புண்ணியகோட்டி, எஸ்.எஸ்.கோபால், புரசை சீனிவாசன், மைதிலி, வி.எம்.ஜி.முகுந்தன், இளைய கிருஷ்னன், எம்.பி.பரமகுரு, பி.ஜீவா, பே.சு.நவமனியன், வி.சி.ஜெகன், சுப்புரு, பி.எம்.ரமேஷ்குமார், சு.அறிவழகன், அப்துல்வ ஹாப், நிரஞ்சன், ஆர்.ஹரேஷ்.

    புருசோத்தமன், ஆர்.யுவராஜ், ஆவின் சேகர், அருணா, பாக்கியலட்சுமி, லட்சுமிபாய், அந்தோணியம்மாள், பக்தா, எடைகுமார், பாகுலேயன், அமுல், நூர்ஜஹான், ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை பகுதி இணை செயலாளர் எம்.ரபி நன்றி கூறினார்.

    கூட்டத்தில் தினகரன் அணியில் இருந்து விலகி 70 வது வட்ட நிர்வாகி நீலகண்டன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். #GokulaIndira #ADMK

    18 எம்.எல்.ஏ.வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழக ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும் என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார். #TTVDhinakaran
    வேலூர்:

    18 எம்.எல்.ஏ.வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழக ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும் என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேலூர் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டத்தின் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று வேலூரில் நடந்தது. கூட்டத்திற்கு வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளில் நடக்கவேண்டிய இந்த கூட்டத்திற்கு தடைவிதித்ததால் இன்று நடக்கிறது. நம்மால் வளர்ந்த ஜாம்பவான் அமைச்சர் வீரமணி என்னென்ன சொத்துக்கள் சேர்த்துள்ளார் என்ற பட்டியலை அவருடன் இருப்பவர்களே என்னிடம் கொடுத்துள்ளார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று 8 கோடி தமிழ் மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    அந்த தீர்ப்பு வந்ததும் இந்த ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும். ஆட்சியாளர்கள் மாமியார் வீட்டுக்கு செல்லும் காலம் நெருங்கிவிட்டது. வேலூரில் ஆங்கிலேயருக்கு எதிராக 1806-ம் ஆண்டு சிப்பாய் புரட்சி ஏற்பட்டது. அதேபோன்று சுதந்திரம் பெற்றதும் செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசிய கொடியும் குடியாத்தத்தில் இருந்துதான் நெய்யப்பட்டு அனுப்பப்பட்டது. முப்படைக்கும் வீரர்களை அனுப்பும் மாவட்டம் வேலூர். அதேபோன்று இந்த மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மக்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

    தமிழகத்தில் நடைபெறும் துரோக ஆட்சியை அகற்ற, அதர்மத்தை முறியடிக்க 13 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். அதேபோன்று திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். இரண்டாவது இடம் உதய சூரியனுக்கா, இரட்டை இலைக்கா என்பதுதான் போட்டி. இந்த தேர்தலில் ஆளுங்கட்சி எத்தனை சித்துவேலைகள் செய்தாலும் பலிக்காது. அவர்கள் பணம் கொடுத்தாலும் மக்கள் குக்கர் சின்னத்திற்குதான் வாக்களிப்பார்கள்.

    திருவாரூர் கருணாநிதி வெற்றிபெற்ற தொகுதியாக இருந்தாலும், எனக்கும் அதுதான் சொந்தஊர். முன்பு வேண்டுமானால் கருணாநிதி வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தற்போது நமது மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அரசியலில் பிரவேசிக்கவேண்டும் என்பதற்காகவும், துரோக ஆட்சியை அகற்றவும் நமக்கு மாபெரும் வெற்றியை தருவார்கள்.

    உண்மையான அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகமாக பரிணாமம் பெற்றுள்ளது. இனி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்று ஒரு அமைச்சர் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் அ.தி.மு.க. என்பது போர்டும், கட்டிடமும்தான் உள்ளது. மக்கள் நம் பக்கம்தான் இருக்கிறார்கள். ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். எம்.ஜி.ஆர். 1972-ல் புதிய கட்சி தொடங்கி திண்டுக்கல்லில் வெற்றிபெற்றார். தி.மு.க. 2-வது இடத்திற்கும், காங்கிரஸ் 3-வது இடத்திற்கும் தள்ளப்பட்டது. அதேபோன்று அம்மாவின் தொண்டர்கள் மீண்டும் சரித்திரம் படைப்பார்கள்.

    நான் உங்களால் உருவாக்கப்பட்ட தலைவன். அதனால்தான் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றுபெற்றேன். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் சின்ன அம்மாவால் உருவாக்கப்பட்டவர்கள். அவர்கள் சின்ன அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டு மக்கள் விரோத நடவடிக்கை, மக்கள் விரும்பாத திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அம்மா தடைவிதித்த திட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கதவை திறந்துவிட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்து ஒரு ஆண்டு பெரிய சாதனை படைத்துவிட்டதாகவும், ராஜதந்திரம் என்றும் கூறுகிறார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு கோர்ட்டில் உள்ளதால் தான் இந்த ஆட்சி நீடிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #TTVDhinakaran
    ×