search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "statue smuggling"

    ஐகோர்ட்டு உத்தரவின் எதிரொலியாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 87 போலீசாரை நியமனம் செய்து டிஜிபி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். #PonManickavel
    சென்னை:

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குகளின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவரது தலைமையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே, தனது விசாரணைக்கு மாநில அரசு ஒத்துழைப்பு தரவில்லை என பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டினார். இதையடுத்து, அவர் கேட்கும் உதவிகளை செய்து தரவேண்டும் என ஐகோர்ட் காவல் துறைக்கு உத்தரவிட்டது.



    இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 87 போலீசார் நியமனம் செய்து டிஜிபி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதுதொடர்பாக டிஜிபி வெளியிட்டுள்ள செய்தியில், சிலை கடத்தல் பிரிவுக்கு 11 டி.எஸ்.பிக்கள், 14 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 87 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட 87 போலீசாரும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையின் கீழ் பணியாற்றுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #PonManickavel
    சிலை கடத்தல் வழக்கை போல் கொடநாடு விவகாரத்திலும் தனிக்குழு அமைத்து விசாரணை வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #KodanadEstate

    திருவாரூர்:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலை காரணம் காட்டி திருவாரூர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. எப்போது தேர்தல் நடந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமோக வெற்றி பெறும்.

    திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்த விவகாரத்தில் ஆளுங்கட்சியும், எதிர் கட்சியும் இணைந்து செயல்பட்டுள்ளது.

    தி.மு.க. எம்.எல்.ஏ.கள் அ.தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்துள்ளனர். கூட்டுறவு தேர்தலின் போது 60க்கு 40 என்ற சதவீதத்தில் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டு தேர்தலை நடத்தினர்.

    கொடநாடு கொலை விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும். கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு விவரங்களை கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேர் இறந்துள்ளனர். இந்த இறப்பில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து முதல்வர் பெயர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தமிழக முதல்வருக்கு பயம், பதட்டம் உள்ளது தெரிகிறது. கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் தமிழக காவல்துறையினர் கைது செய்து வந்தவர்களை நீதிபதி சிறைக்கு அனுப்ப மறுத்துள்ளது முதல்வருக்கு மிகப்பெரிய பின்னடைவு.

    உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி மூலம் முதல்வர் மீதான வழக்கை, எப்படி பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் பிரிவு கண்காணிப்பது போன்று கண்காணிக்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளுடன் மற்றும் இட பகிர்வு குறித்து கூறப்படும். கட்சிகளின் பெயர்கள், கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்தவுடன் தெரிவிக்கப்படும். கூட்டணிகள் அமையாவிட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2014-ல் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது போல் போட்டியிட்டு வெற்றி பெறும்.

    தேசிய கட்சிகள் தமிழ்நாட்டின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. இதனால் பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை.

    எனவே தேசிய கட்சிகளுக்கு பதிலாக மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் உடனிருந்தார். #TTVDhinakaran #KodanadEstate

    சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் 3-வது முறையாக புகார் அளிக்க வந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #PonManickavel
    அடையாறு:

    சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் போலீசார் டி.ஜி.பி.யிடம் ஏற்கனவே 2 முறை புகார் அளித்துள்ளனர்.

    மேலும் பொன் மாணிக்கவேல் பொய் வழக்கு போட சொல்வதாக கூறி சிலை கடத்தல் தடுப்பு போலீசார் சிலர் தங்களுக்கு இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று 3-வது முறையாக பொன் மாணிக்கவேலுக்கு எதிராக ஏ.டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் அதிகாரிகள் 23 பேர் சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும், பொய் வழக்கு போட வலியுறுத்தும் பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்க டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வந்தனர்.



    அப்போது அவர்களுடன் சிலை கடத்தல் வழக்கில் கைதான சக்திவேல், கே.தீனதயாளன் ஆகியோரும் வந்தனர். சிலை கடத்தல் குற்றவாளிகளுடன் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் பொன் மாணிக்கவேல் மீது புகார் அளிக்க வந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிலை கடத்தலில் கைதான 2 பேரும் ‘தாங்கள் முறைகேடாக இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டதாகவும், அதுபற்றி புகார் அளிக்கவே போலீசாருடன் வந்துள்ளோம்’ என்றனர். #PonManickavel
    பழனி சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் இன்று மலைக்கோவில் வந்ததையடுத்து முக்கிய பிரமுகர்கள் மீண்டும் பீதி அடைந்துள்ளனர். #PonManickavel

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவர் சன்னதியில் போகரால் வடிவமைக்கப்பட்ட நவப்பாசாண சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த சிலை சேதம் அடைந்ததாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு புதிய சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன சிலை மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டது.

    ஒரே கருவறையில் 2 சிலைகள் வைக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலை சில மாதங்களிலேயே உருமாறத் தொடங்கியது. இதனால் இந்த சிலை அமைத்ததில் முறைகேடு நடந்திருக்கலாம் என புகார்கள் எழுந்தன.

    இதனால் புதிதாக வைக்கப்பட்ட சிலை கருவறையில் இருந்து எடுத்து தனி அறையில் வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சிலை மோசடி குறித்து விசாரணை நடத்தி வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பழனி கோவில் சிலை குறித்தும் விசாரணையை தொடங்கினார்.

    அவரது விசாரணையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்சிலையில் மோசடி நடந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோவில் ஸ்தபதி முத்தையா, 2004-ம் ஆண்டு இணை ஆணையராக இருந்த ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


    மேலும் புதிதாக சிலை செய்யப்பட்ட காலத்தில் இருந்த அனைத்து அதிகாரிகளையும் தங்கள் விசாரணை வளையத்திற்குள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கொண்டு வந்தார். சிலை மோசடியில் ஈடுபட்ட ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் ராஜா, அறநிலையத்துறை ஆணையர் தனபால், உதவி ஆணையர் அசோக், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் அடுத்தடுத்து விசாரணை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர்.

    புதிதாக தயாரிக்கப்பட்ட ஐம்பொன்சிலை கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது. அடுத்தத்து பல்வேறு கோவில்களில் நடந்த சிலை கடத்தல் மற்றும் மோசடி வழக்குகளை விசாரித்து வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். இதனால் சிலை மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இனிமேல் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டு விடும் என நினைத்தனர். இதனிடையே பணி ஓய்வு பெற்ற ஐ.ஜி.பொன்மாணிக்க வேலை மீண்டும் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க அவர் ஓராண்டு பணியை தொடர தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இதனையடுத்து நிலுவையில் உள்ள சிலை மோசடி வழக்கை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்.

    இன்று காலை 5 மணிக்கு பழனி மலைக்கோவிலுக்கு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் வந்தார். விஞ்ச் மூலம் கோவிலுக்கு வந்த அவர் விஸ்வரூப தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கினார். இதனால் பழனி சிலை மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதில் சிக்கியுள்ள முன்னாள் அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

    விரைவில் சிலை மோசடி குறித்த அடுத்த கட்ட விசாரணையை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #PonManickavel

    திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் கல்தூண்கள் காணாமல் போனது குறித்து தொழில் அதிபர் ரன்வீர்ஷாவிடம் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். #IdolSmuggling #PonManickavel
    திருவாருர்:

    திருவாருர் தியாகராஜர் கோவிலில் சிலைகள் பாதுகாப்பகத்தில் நடை பெறும் ஆய்வை பார்வையிட சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நேற்று இரவு வந்தார்.

    சிலைகள் ஆய்வு பணிகள் விவரம் பற்றி தொல்லியல் துறையினர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 395 சிலைகளும் திருவாரூரில் 80 சிலைகளும் ஆய்வு செய்யபட்டுள்ளது. அனைத்து சிலைகளும் பரிசோதனை செய்யப்படும் வரை இந்த ஆய்வு தொடரும்.



    இதுவரை கடத்தபட்ட 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கபட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. ரூ.400 மதிப்புள்ள சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

    திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் கல்தூண்கள் காணாமல் போனது குறித்து தொழில் அதிபர் ரன்வீர்ஷாவிடம் விசாரணை நடத்தப்படும். விரைவில் திருவாரூரில் கற் சிலைகளும் ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IdolSmuggling #PonManickavel
    சிலை கடத்தல் வழக்கில் பெண் தொழில் அதிபர் கிரண்ராவின் ஊழியர்கள் போலீசில் ஆஜரானார்கள். #Statuesmuggling

    சென்னை:

    சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனின் கூட்டாளிகளான ரன்வீர்ஷாவின் சைதாப்பேடை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனை தொடர்ந்து ரன்வீர்ஷாவின் தோழியான கிரண்ராவ் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அப்போது வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கல் தூண்கள், சிலைகள் ஆகியவையும் சிக்கின. இது தொடர்பாக ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவர் மீதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


    ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவருக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் 2 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை

    கிரண்ராவின் அலுவலக மேலாளர் செந்தில், ஊழியர் தீனதயாளன் உள்ளிட்ட சிலருக்கும். சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை ஏற்று செந்தில், தீனதயாளன் இருவரும் இன்று கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சிலைகள் கிண்டியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளை இன்று போலீசார் ஆய்வு செய்தனர். #Statuesmuggling

    கபாலீஸ்வரர் கோவில் சிலை மாயம் தொடர்பாக அறநிலையத்துறை பெண் அதிகாரி வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். #StatueSmuggling #MylaporeKapaleeswararTemple

    சென்னை:

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டன.

    அப்போது புன்னை வனநாதர் சன்னதி சிலை உள்பட 3 சிலைகள் மாற்றப்பட்டன.

    சிலைகள் மாற்றப்பட்டதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.

    சிலை மாற்றம் செய்யப்பட்ட புன்னை வனநாதர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். 3 சிலைகள் மாற்றப்பட்டது ஏன் என்று விசாரித்தார்.

    இதைத் தொடர்ந்து பழைய மூன்று சிலைகளும் எங்கே, அந்த சிலைகளை என்ன செய்தீர்கள் என்று ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கேள்வி எழுப்பினார். அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. மாற்றப்பட்ட மூன்று பழைய சிலைகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதற்கிடையே புன்னை வனநாதர் சன்னதி எதிரே இருந்த நந்தி சிலை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் இருந்து மீட்கப்பட்டது. எனவே மாயமான 3 முக்கிய சிலைகள் புதைக்கப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஏற்பட்டது.


    இதுதொடர்பாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய இணை ஆணையர் காவேரி மற்றும் கூடுதல் ஆணையர் திருமகள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் அதுபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி விட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து 3 சிலைகளை மாற்றியது தொடர்பான ஆவணங்களை தருமாறு அறநிலையத்துறை அதிகாரிகளிடம், ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கேட்டார். ஆனால் அதற்கான ஆவணங்களையும் அறநிலையத்துறை பெண் அதிகாரிகளால் கொடுக்க இயலவில்லை.

    இதனால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் மாயமானதில் சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியிள்ளனர்.

    இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை வியாசர்பாடியில் உள்ள கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர். சுமார் 30 நிமி டங்கள் அவர்கள் அங்கு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் ஏதேனும் ஆவணங்கள் சிக்கியதா என்று தெரிய வில்லை.

    கூடுதல் ஆணையர் திருமகளிடமும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. அவர் தெரிவித்துள்ள தகவல்களின் பேரில் மயிலாப்பூர் கோவில் சிலைகள் மாயமான விவகாரம் சூடுபிடித்துள்ளது. #StatueSmuggling #MylaporeKapaleeswararTemple

    சென்னை சைதாப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் இருந்து 82 சிலைகளை ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் பறிமுதல் செய்துள்ளார். #StatueSmuggling #PonManickavel
    சென்னை:

    தமிழகம் முழுவதும் பழமையான கோவில்களில் இருந்த பழங்கால சிலைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    சர்வதேச சிலை கடத்தல் மன்னனான சுபாஷ்கபூர் தமிழகத்தில் உள்ள தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்தி விற்பனை செய்ததை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.

    ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தலைமையேற்ற பின்னரே, தமிழக கோவில்களில் இருந்த பழமை வாய்ந்த சிலைகள் களவாடப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதில் சுபாஷ்கபூரின் நெருங்கிய கூட்டாளியான தீனதயாளன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

    ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபரான இவருக்கு சொந்தமாக ஆழ்வார்பேட்டையில் 2 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் அப்போது அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஆழ்வார்பேட்டை மூர் தெருவில் நடத்தப்பட்ட சோதனையில் 300-க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டன. பழங்கால ஓவியங்களும் கிடைத்தது.

    இவைகளை தீனதயாளன் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து திருடி அந்த வீட்டில் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.


    இதையடுத்து தீனதயாளனின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தீனதயாளன் பழங்கால சிலைகளை தனது கூட்டாளிகள் பலரிடம் கொடுத்து வைத்திருப்பதை சிலை தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

    சைதாப்பேட்டை கோர்ட்டு பின்புறம் ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் ரன்வீர்ஷா என்பவரிடமும் தீனதயாளன் சிலைகளை கொடுத்து இருந்தார்.

    அதன் அடிப்படையில் அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

    சிலையை வாங்கியது தொடர்பாக பல்வேறு ஆவணங்களை ரன்வீர்ஷா அளித்திருந்தார். அவைகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இன்று காலை மீண்டும் தனது அதிரடி வேட்டையை தொடங்கினார். டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் போலீஸ் படையினருடன் ரன்வீர்ஷாவின் வீட்டுக்கு சென்றார்.

    சிலை தடுப்பு பிரிவு போலீசுக்கு உதவியாக சட்டம்-ஒழுங்கு போலீசாரும் அங்கு சென்றனர்.

    இந்த சோதனையின் ரன்வீர்ஷாவின் வீட்டில் குவியல் குவியலாக சிலைகள் இருந்தது. இதனை பார்த்து போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 82 சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.


    இதில் ஐம்பொன் சிலைகளும் அடங்கும். அனைத்தையும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பறிமுதல் செய்தார். இந்த சிலைகளில் பெரும்பாலானவை அசைக்க முடியாத அளவுக்கு வலுவானதாக உள்ளது.

    கோவில்களில் காணப்படும் பிரமாண்டமான கல் சிலைகளும் ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்தது. இந்த சிலைகளை கிரேன் மூலம் தூக்கி லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லவும் போலீசார் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    சிலைகளை கொண்டு செல்ல 5 லாரிகள் தேவைப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சோதனை காரணமாக சைதாப்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீட்டில் சோதனை முடிந்ததும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    இன்று மொத்தம் 89 சிலைகள், கல்தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 82 சிலைகள் ஐகோர்ட்டு உத்தரவு படி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சிலைகள் அனைத்தும் மிக பழமையானவை. கோவில்களில் இருந்து இந்த சிலைகள் திருடப்பட்டுள்ளன என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

    இந்த சிலைகளை வைப்பதற்கு அரசு அருங்காட்சியகத்தில் இடம் இல்லை என்று சொல்லி விட்டனர். எனவே கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தற்காலிகமாக வைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

    இன்று கைப்பற்றப்பட்டுள்ள சிலைகளில் 12 சிலைகள் மிக தொன்மையான ஐம்பொன் சிலைகள் ஆகும். இந்த சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும்.

    இந்த சிலைகள் எந்தெந்த கோவில்களில் இருந்து திருடப்பட்டது என்பது பற்றி விசாரணை நடைபெறும். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் 75 சதவீதம் சிலைகளை தீனதயாளனே ரன்வீர்ஷாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அது தொடர்பான தகவல்களை தமிழக அரசுக்கு சரியாக தெரிவிக்கவில்லை. அவர் அரசுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு பரபரப்பான குற்றச்சாட்டுகளை ஐகோர்ட்டில் தெரிவித்தது.

    இதன் காரணமாக சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க மறுத்து விட்டது.

    இந்த நிலையில்தான் பொன்.மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தொழில் அதிபர் வீட்டில் இருந்து ஏராளமான சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மூலம் சிலை கடத்தல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் பின்னணியில் இருப்பவர்கள் யார்- யார் என்பது பற்றியும் தீவிர விசாரணை நடைபெறுகிறது. தொழில் அதிபர் ரன்வீர்ஷா ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    ஒரு சினிமாவிலும் அவர் தலைகாட்டி உள்ளார். மின்சார கனவு படத்தில் அவர் நடித்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே சினிமா பிரபலங்கள் யாருக்கும் சிலை கடத்தலில் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்மூலம் ரன்வீர்ஷாவுடன் சிலை கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டவை என்று சிலை தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். எனவே விசாரணை முடிவில் ரன்வீர்ஷாவை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சிலை கடத்தலில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சினிமா இயக்குனர் வி.சேகரும் சிலை கடத்தல் வழக்கில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    சிலை கடத்தல் பிரிவு கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே வேகமாக இயங்கி வருகிறது. அதற்கு முன்னர் பெயரளவுக்கு மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தது.

    சிலை கடத்தலில் போலீசாரும், அறநிலையத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததையும் பொன். மாணிக்கவேல் கண்டு பிடித்தார்.

    அந்த வகையில் அறநிலையத்துறை இணை ஆணையரான கவிதா கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிலை தடுப்பு பிரிவில் பணியாற்றிய 2 டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #StatueSmuggling #PonManickavel
    குறைந்த போலீசார் இருப்பதால் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க இயலாது என சி.பி.ஐ. மறுத்துவிட்ட நிலையில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரிப்பார்கள் என உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். #IdolSmugglingCases
    சென்னை:

    சிலை கடத்தல் வழக்குகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் இதுவரை விசாரித்து வந்தார். ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் இவர் இந்த துறைக்கு நியமிக்கப்பட்டதால் அரசு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாற்றும் நிலவியது.

    ஆனாலும் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தனக்கு ஒதுக்கிய குறைந்த அளவு போலீசாரை வைத்துக் கொண்டு பல்வேறு திருட்டு சிலைகளை கண்டுபிடித்தார்.

    சிலை திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இதில் சிக்கினார்கள்.

    ஏராளமான சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு விற்கப்பட்டுள்ளதால் ‘இண்டர்போல்’ போலீஸ் உதவியை நாடுவதில் சிரமம் இருப்பதாக கூறி இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும்படி தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இதை ஏற்க சி.பி.ஐ. மறுத்துவிட்டது.


    சி.பி.ஐ.யில் ஏராளமான வழக்குகள் உள்ளதாகவும் சிலைகடத்தல் வழக்குகளை விசாரிக்க போதிய போலீசார் இல்லை என்பதால் தங்களால் விசாரிக்க இயலாது என்று கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

    தேவைப்பட்டால் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கடித போக்குவரத்து சம்பந்தமாக உதவுவதாகவும், இண்டர்போல் போலீசாரிடம் கேட்டு பெற வேண்டிய தகவல்களை பெற்று தருவதாகவும் சி.பி.ஐ. கூறி உள்ளது.

    வழக்குகளை முழுமையாக எடுத்து விசாரிக்க இயலாது என்று சி.பி.ஐ. கூறி இருப்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-


    சிலை கடத்தல் வழக்குகள் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் திறமையாகத்தான் விசாரிக்கப்பட்டு வந்தது. தமிழக போலீசார் திறமையானவர்கள் தான்.

    ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இந்த வழக்குகளை விசாரித்து வந்தாலும் அவர் ஓய்வுபெற்ற பிறகு வேறொரு அதிகாரிதான் இந்த வழக்குகளை விசாரிப்பார்.

    எனவே வழக்கு விசாரணையில் எந்த தொய்வும் ஏற்படாது. பொன்மாணிக்கவேல் போல் எத்தனையோ திறமையான அதிகாரிகள் தமிழக காவல்துறையில் உள்ளனர். இருந்தாலும் சி.பி.ஐயிடம் இருந்து தமிழக அரசுக்கு இன்னும் முறையாக கடிதம் வந்து சேரவில்லை. கோர்ட்டில் தான் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #IdolTheftCases #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC
    சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சிலைகளை பாதுகாப்பதில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #statuesmugglingcase #ministerkamaraj #cbi

    திருவாரூர்:

    திருவாரூரில் அமைச்சர் இரா.காமராஜ் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டுறவு துறை ஊழியர்கள் அரசின் கோரிக்கையை ஏற்று வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

    சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சிலைகளை பாதுகாப்பதில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது. சிலை கடத்தல் வழக்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்கள், நாடுகள் சம்பந்தப்பட்டுள்ளது. எனவே சி.பி.ஐ. விசாரித்தால் தான் சரியாக இருக்கும். அதன் அடிப்படையில் அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

    சம்பா சாகுபடி மேற்கொள்ள தமிழகம் முழுவதும் ரூ. 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் அனைத்தும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார். #statuesmugglingcase #ministerkamaraj #cbi

    கண்ணமங்கலத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சாமி சிலையை கடத்திய 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் சசிக்குமார் நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் மகன் கோகுலன் (வயது 29). இவருடைய வீட்டில் ஐம்பொன் சிலையை கடத்தி பதுக்கி வைத்திருப்பதாகவும், அதனை விலைக்கு வாங்க பல லட்சத்துடன் கார்களில் அடையாளம் தெரியாத டிப்-டாப் ஆசாமிகள் வந்து செல்வதாக கிராம நிர்வாக அலுவலர் முனிவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதுப்பற்றி, கண்ணமங்கலம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். இன்ஸ் பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று கோகுலன் வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். வீட்டில் ஐம்பொன் சிலைகள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, கோகுலனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    வீட்டின் அருகே செல்லும் நாகநதி ஆற்றுப்படுகையில் பள்ளம் தோண்டி ஐம்பொன் சிலையை புதைத்து பதுக்கி இருப்பதாக தெரிவித்தார். சிலையை புதைத்த இடத்தை கோகுலன் காட்ட, போலீசார் பள்ளம் தோண்டி ஐம்பொன் சாமியை சிலை மீட்டனர்.

    அந்த ஐம்பொன் சிலை, ரூ.2 கோடி மதிப்புடைய புவனேஸ்வரிம்மன் சிலை என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சிலையை கைப்பற்றி கோகுலனை போலீஸ் நிலையம் அழைத்து சென்று, தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், நண்பர்களுடன் சேர்ந்து ஐம்பொன் சாமி சிலையை கடத்தி விற்க முயன்றதாக கோகுலன் வாக்கு மூலம் அளித்தார்.

    இதையடுத்து, கோகுலனை கைது செய்த போலீசார், சிலை கடத்தலில் தொடர்புடைய கோகுலனின் நண்பர்களான கண்ணமங்கலத்தை அரிராஜன் (26), நாகநதியை சேர்ந்த திருமலை (27), அடுக்கம்பாறை இ.பி. காலனியை சேர்ந்த தினேஷ் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கண்ணமங்கலம் அடுத்த கீழ் வல்லத்தை சேர்ந்த சக்திவேல் மற்றும் களம்பூரான் குட்டையை சேர்ந்த சிலம்பு ஆகிய 2 பேரையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 4 பேரிடமும், ஐம்பொன் சாமி சிலையை எந்த கோவிலில் இருந்து கொள்ளையடித்து கடத்தி வந்தனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? ஐம்பொன் சிலையை வாங்க முயற்சித்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூரின் கூட்டாளி பரமதுரையை 15 நாள் காவலில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கும்பகோணம்:

    நெல்லை மாவட்டம் பழவூரில் பிரசித்தி பெற்ற நாறும்பூநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது.

    இந்த வழக்கில் சுபாஷ் சந்திரகபூர், வல்லப பிரகாஷ், ஆதித்யா பிரகாஷ், தீனதயாளன் உள்ளிட்ட 18 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷ் சந்திரகபூர், வல்லப பிரகாஷ், ஆதித்யா பிரகாஷ், தீனதயாளன் உள்பட 10 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் தேடிவந்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூரின் கூட்டாளியான தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பரமதேவன்பட்டியை சேர்ந்த பரமதுரை (வயது 42), கடந்த 13 ஆண்டுகளாக போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பரமதுரை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சென்னைக்கு சென்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்ற பரமதுரையை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரமதுரையை போலீசார் நேற்று கும்பகோணத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    தொடர்ந்து அவரை போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பரமதுரையை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு கொண்டு சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.

    இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள நாறும்பூநாதர் கோவிலில் கொள்ளை போன பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளில் ஆடல் நடராஜர், சிவகாமி அம்மன், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திர தேவர், வெயில்காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் உள்ளிட்ட 9 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் நடராஜர் சிலை மட்டும் ரூ.15 கோடி மதிப்புள்ளது. கைது செய்யப்பட்ட பரமதுரை மீது சிலை கடத்தல் வழக்கு மட்டுமின்றி பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×