search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mylapore kapaleeswarar temple"

    • மாடவீதிகளில் மண்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாமிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினர்.
    • பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய...' என பக்தி கோஷமிட்டனர்.

    தமிழகத்தில் ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை எத்தனையோ சிவனடியார்கள் தோன்றி இருந்தாலும்கி.பி.400-ம் ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டு வரை வாழ்ந்த சிவனடியார்களில் 63 பேர் 'நாயன்மார்கள்' என்று போற்றப்படுகின்றனர். இவர்களில் 'சைவ சமயக்குரவர்கள்' என்று அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் சிவபெருமானுக்கு சேவை செய்ததால் இவர்களையே சிவபெருமானின் பிரதிபலிப்பாக கருதி பக்தர்கள் பூஜை செய்து வருகின்றனர்.

    அந்தவகையில், சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடந்துவருகிறது. இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதைத்தொடர்ந்து 'அறுபத்து மூவர் திருவிழா' என்று அழைக்கப்படும் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சி நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் நடந்தது.

    ஒரு பல்லக்கில் 4 நாயன்மார்கள் என்ற கணக்கில் 63 நாயன்மார்கள் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் ஏற்றப்பட்டு கோவில் இருந்து கோபுர வாசலில் உள்ள 16 கால் மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, திருவீதியுலா மேள தாளம் முழங்க, மங்கல இசை ஒலிக்க, வேத மந்திரங்கள் ஓத ஆரவாரத்தோடு புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் வந்த கபாலீசுவரர் 63 நாயன்மார்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் சிலர், திருக்கயிலாய வாத்தியம் இசைத்தும், சிவ நடனமாடியும் சாமியை வரவேற்றனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய...' என பக்தி கோஷமிட்டனர்.

    மாடவீதிகளில் திருவீதி உலா நிகழ்ச்சியில் விநாயகர் மற்றும் மயிலாப்பூரின் கிராம தேவதையான கோலவிழி அம்மன் ஆகியோர் முன்னே சப்பரத்தில் செல்ல, வெள்ளி சப்பரத்தில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், முண்டகக்கண்ணியம்மன், அங்காள பரமேஸ்வரி, பெரியநாயகி சமேத வாலீசுவரர், வீரபத்திர சுவாமிகள், திருவள்ளுவர்-வாசுகி ஆகியோர் கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ஆர்.கே.மடம் சாலை, வடக்குமாட வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

    63 நாயன்மார்கள் தனித்தனி சப்பரத்தில் மாட வீதிகளில் வலம் வரும் கண்கொள்ளா காட்சியை காண காலையில் இருந்தே சென்னை மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதியையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்தனர்.

    விழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள சைவ சித்தாந்த மன்ற தலைவர் பேராசிரியர் நல்லூர்சா.சரவணன் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    இதேபோன்று பெண்கள் பலர் கோவிலைச் சுற்றி உள்ள மாடவீதிகளில் மண்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாமிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினர். இவ்வாறு செய்வதன் மூலம் தீராத நோய்களும் குணமடையும் என்பது நம்பிக்கையாகும்.

    மயிலாப்பூரில் வசிப்பவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போன்றோர் சிறப்பு பந்தல் அமைத்து அன்னதானம், நீர்மோர், இனிப்புகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கினர். முன்னதாக நேற்று காலையில் திருஞானசம்பந்தர் சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், பிற்பகலில் 'அங்கம் பூம்பாவையாக்கி அருளுதல்' நிகழ்ச்சியும் நடந்தது.

    அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவிலைச் சுற்றி மாட வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். பெண்களின் நகைகளை பாதுகாப்பதற்காக ஊக்குகளை போலீசார் இலவசமாக பெண்களுக்கு அளித்தனர். மேலும் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கினர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை கபாலீசுவரர் கோவில் இணை கமிஷனர் இரா.ஹரிஹரன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

    • அறுபத்து மூவர் விழா இன்று மாலையில் நடக்கிறது.
    • பக்தர்கள் வரிசையில் நின்றும் சாமியை தரிசித்தனர்.

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று தேரோட்டம் நடந்தது.

    பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா இன்று மாலையில் நடக்கிறது. பிற்பகலில் தொடங்கும் இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் காலையிலே குவிய தொடங்கினார்கள். சென்னை, புறநகர் பகுதி மட்டுமின்றி சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் திரண்டனர்.

    கோவிலின் முன் பகுதியிலும், உள்ளேயும் பக்தர்கள் கூடினார்கள். அறுபத்து மூவர் நாயன்மார்களின் சிலைகள் கோவிலில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அதனை பக்தர்கள் வணங்கினார்கள். பக்தர்கள் வரிசையில் நின்றும் சாமியை தரிசித்தனர்.

    மாலையில் அறுபத்து மூன்று நாயன்மார்களும் பல்லக்குகளில் எழுந்தருளி 4 மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக வடம் பிடித்து செல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு மாலையில் மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    பங்குனி திருவிழாவையொட்டி கோவிலை சுற்றி அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. வெளியூர் பக்தர்கள் நோட்டு புத்தகம், பென்சில், பேனா போன்றவற்றை வாங்கி தானமாக வழங்கினார்கள்.

    • நாளை அறுபத்து மூவர் விழா நடக்கிறது.
    • 6-ந்தேதி தீர்த்தவாரி, திருக்கல்யாணம் நடக்கிறது.

    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி கடந்த மாதம் 27-ந்தேதி கிராம தேவதை பூஜை, கோலவிழி அம்மன் சிறப்பு வழிபாடு நடந்தது.

    28-ந்தேதி பங்குனி பெரு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கற்பகாம்பாள், கபாலீசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    பங்குனி பெருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி இன்று காலையிலேயே பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே சென்றது.

    காலை 7.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதன் பிறகு கபாலீசுவரர் தேர் புறப்பட்டது. இந்த தேர் 96 அடி உயரமும், 300 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. பார்க்க கண்கொள்ளாகாட்சியாக இருந்தது.

    அதன் பிறகு கற்பகாம்பாள் தேர் வந்தது. இதை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். இதனையடுத்து சுப்பிரமணியர் தேர், சண்டிகேசுவரர் தேர் ஆகியவை வலம் வந்தன.

    விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 மாட வீதிகளை சுற்றி வந்தது. தேர் வலம் வந்த போது பக்தர்கள் கபாலி.. கபாலி என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். சிவ வாத்தியம் முழங்க தேர் வலம் வந்தது.

    தேர் வலம் வந்தபோது ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தனர். 4 மாட வீதிகளின் பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மயிலாப்பூரில் பக்தர்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு இருந்தது. மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் கார்னரில் இருந்து மயிலாப்பூர் மாட வீதிகளுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அவை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. தேர்த்திருவிழா காரணமாக மயிலாப்பூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    நாளை (4-ந்தேதி) பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா நடக்கிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களும் பல்லக்குகளில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வருகிறார்கள். வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்துமூன்று நாயன்மார்களோடு வரும் திருக்காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

    வருகிற 5-ந்தேதி ஐந்திருமேனிகள் விழா நடக்கிறது. 6-ந்தேதி பகலில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    • அம்மாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • தேரோட்டம் 3-ந் தேதி நடக்கிறது.

    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் 3-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி அதிகாலை அதிகார நந்தி காட்சி மற்றும் திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் நடந்தது. சாமிக்கு தீர்த்தவாரி, அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் தினமும் காலை பொழுதில் கந்தருவன், கந்தருவி, மூஷிகம், வெள்ளி விடை வாகனங்களிலும், இரவு வெள்ளி பூதன், பூதகி, தாரகாசுர வாகனங்களிலும் சாமி, அம்மாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் 3-ந் தேதியும், 63 நாயன்மார்கள் திருவீதி உலா மற்றும் திருஞானசம்பந்தர் சாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    சென்னை மயிலாப்பூர் பகுதியில் கபாலீஸ்வரர் கோவில் உள்பட பழமையான 7 சிவாலயங்கள் அமைந்துள்ளன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்பவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
    சென்னை மயிலாப்பூர் பகுதியில் கபாலீஸ்வரர் கோவில் உள்பட பழமையான 7 சிவாலயங்கள் அமைந்துள்ளன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்பவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அந்த ஏழு சிவாலயங்களையும் ‘சப்த சிவ ஸ்தலங்கள்’ என்று அழைக்கிறார்கள். இந்த ஆலயங்களை முறையே காரணீஸ்வரர் கோவில், தீர்த்த பாலீஸ்வரர் கோவில், வெள்ளீஸ்வரர் கோவில், விருபாட்சீஸ்வரர் கோவில், வாலீஸ்வரர் கோவில், மல்லீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் என்ற முறையில் வரிசையாக வழிபாடு செய்ய வேண்டும்.

    இந்த ஆலயங்கள் அனைத்தும் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ராமபிரான் இந்த 7 தலங்களையும் வழிபாடு செய்ததாகவும், அந்த முறையிலேயே இன்றும் இந்த ஆலயத்தை வரிசையாக வழிபடும் மரபு உள்ளதாகவும் ஆன்மிக அன்பர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    காரணீஸ்வரர் கோவில்

    சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையில் இருந்து வரும் காரணீஸ்வரர் கோவில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இதன் அருகில் மாதவப் பெருமாள் திருக்கோவிலும் உள்ளது. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஆலயத்திற்கு, பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப் பணிகள் செய்யப்பட்டதாக தெரிகிறது. உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்பதால் இத்தல இறைவனுக்கு ‘காரணீஸ்வரர்’ என்று பெயர் வந்துள்ளது. அம்பாளின் திருநாமம் சொர்ணாம்பிகை என்பதாகும். இந்த ஆலயம் வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது. இங்குள்ள சொர்ணாம்பிகையை வழி படுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும், பொருளும் செழிக்கும்.

    தீர்த்தபாலீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் இருக்கிறது, தீர்த்த பாலீஸ்வரர் ஆலயம். மாசி மாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களில் இருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத் தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறும். இதனாலேயே இத்தல இறைவனுக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திரு நாமம் ஏற்பட்டது. அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் இதுவாகும். சப்த சிவாலயங்களில் இந்தக் கோவில் இரண்டாவதாக வழிபட வேண்டிய ஆலயம். பழங்காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக் குளங்கள் அருகருகே இருந்ததாக கூறப்படுகிறது. தெய்வீ சக்தி வாய்ந்த அந்த தீர்த்த குளங்களில் தான், முன் காலத்தில் இறைவனுக்கு தீர்த்தவாரி நடைபெற்றிருக்கிறது.

    வெள்ளீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகிலேயே இருக்கிறது, வெள்ளீஸ்வரர் கோவில். சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய திருத்தலமாக இது அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி செய்த யாகத்தின் போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டார். வந்திருப்பது மகா விஷ்ணு என்றும், தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்ராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்ராச்சாரியார் வண்டாக மாறி, கமண்டலத்தில் நீர் வரும் பாதையை அடைத்தார். வாமனராக வந்த விஷ்ணு, தர்ப்பை புல்லை எடுத்து நீர் வரும் பாதையில் குத்தினார். இதில் சுக்ராச்சாரியாரின் கண்பார்வை பறிபோனது. இதையடுத்து இத்தல இறைவனை வழிபட்டு தனது கண்பார்வையை சுக்ராச்சாரியார் திரும்பப் பெற்றார். சுக்ர பகவானுக்கு வெள்ளி என்ற பெயரும் உண்டு. எனவே இத்தல இறைவன் ‘வெள்ளீஸ்வரர்’ என்று அழைக்கப்படலானார். இத்தல இறைவனை வழிபட்டால், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    விருபாட்சீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூர் கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும், காரணீஸ்வரர் கோவிலுக்கு அருகில் தான் விருபாட்சீஸ்வரர் ஆலயமும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் நான்காவதாக வழிபட வேண்டிய கோவில் இதுவாகும். விசாலாட்சி அம்பாள் சமேதராக விருபாட்சீஸ்வரர் கோவில் கொண்டிருக்கிறார். இங்கு விசாலாட்சி அம்மன் சன்னிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. பைரவர் சன்னிதியும், சூரியனார் சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்த போது, இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த ஈசன் இங்கு அருள்கிறார். இத்தல இறைவனை வேண்டிக்கொண்டால், நமது மனம், உடல், இதயம் மூன்றையும் இணைக்கும் ஆத்ம பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    வாலீஸ்வரர் கோவில்

    ‘மயிலாப்பூரின் காவல் தெய்வம்’ என்று கூறப்படும், கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது வாலீஸ்வரர் கோவில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் பெரியநாயகி சமேதராக வாலீஸ்வரர் வீற்றிருக்கிறார். இந்தக் கோவில் 2 ஆயிரம் வருடங்களுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. கவுதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோவில். ராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான் என்று கூறப்படுகிறது. எனவேதான் இத்தல இறைவன் ‘வாலீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். நிலத்தில் இருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள், இந்தக் கோவிலின் சிறப்பம்சமாகும். சப்த சிவ ஸ்தலங்களில் 5-வதாக வழிபடவேண்டிய கோவில் இது.

    மல்லீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலை)யில் உள்ள காரணீஸ்வரர் கோவிலுக்குப் பின்புறம் மல்லீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோவில் கொண்ட இறைவனுக்கும் ‘மல்லீஸ்வரர்’ என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இதுவாகும். சப்த சிவ ஸ்தலங்களில் 6-வது தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர் களின் நம்பிக்கை.

    கபாலீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூரின் அடையாளமாக திகழ்வது தான் கற்பகாம்பிகை சமேத கபாலீஸ்வரர் கோவில். இதுவே சப்த சிவ ஸ்தலங்களில் நாம் நிறைவாக வழிபட வேண்டிய ஆலயம். காசியப முனிவர் வழிபட்ட சிறப்புக்குரியது இந்தக் கோவில். திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இதுவாகும். சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்த ஆலயமும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதைய ஆலயம் அமைக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

    புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு ‘மயிலாப்பூர்’ என்று பெயர் ஏற்பட்டது.
    கபாலீஸ்வரர் கோவில் சிலை மாயம் தொடர்பாக அறநிலையத்துறை பெண் அதிகாரி வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். #StatueSmuggling #MylaporeKapaleeswararTemple

    சென்னை:

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டன.

    அப்போது புன்னை வனநாதர் சன்னதி சிலை உள்பட 3 சிலைகள் மாற்றப்பட்டன.

    சிலைகள் மாற்றப்பட்டதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.

    சிலை மாற்றம் செய்யப்பட்ட புன்னை வனநாதர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். 3 சிலைகள் மாற்றப்பட்டது ஏன் என்று விசாரித்தார்.

    இதைத் தொடர்ந்து பழைய மூன்று சிலைகளும் எங்கே, அந்த சிலைகளை என்ன செய்தீர்கள் என்று ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கேள்வி எழுப்பினார். அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. மாற்றப்பட்ட மூன்று பழைய சிலைகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதற்கிடையே புன்னை வனநாதர் சன்னதி எதிரே இருந்த நந்தி சிலை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் இருந்து மீட்கப்பட்டது. எனவே மாயமான 3 முக்கிய சிலைகள் புதைக்கப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஏற்பட்டது.


    இதுதொடர்பாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய இணை ஆணையர் காவேரி மற்றும் கூடுதல் ஆணையர் திருமகள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் அதுபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி விட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து 3 சிலைகளை மாற்றியது தொடர்பான ஆவணங்களை தருமாறு அறநிலையத்துறை அதிகாரிகளிடம், ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கேட்டார். ஆனால் அதற்கான ஆவணங்களையும் அறநிலையத்துறை பெண் அதிகாரிகளால் கொடுக்க இயலவில்லை.

    இதனால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் மாயமானதில் சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியிள்ளனர்.

    இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை வியாசர்பாடியில் உள்ள கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர். சுமார் 30 நிமி டங்கள் அவர்கள் அங்கு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் ஏதேனும் ஆவணங்கள் சிக்கியதா என்று தெரிய வில்லை.

    கூடுதல் ஆணையர் திருமகளிடமும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. அவர் தெரிவித்துள்ள தகவல்களின் பேரில் மயிலாப்பூர் கோவில் சிலைகள் மாயமான விவகாரம் சூடுபிடித்துள்ளது. #StatueSmuggling #MylaporeKapaleeswararTemple

    ×