என் மலர்
நீங்கள் தேடியது "சிவன் கோவில்"
- தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து இன்று காலையிலும் திருச்செந்தூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.
திருச்செந்தூர்:
வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்கி உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உள்பட 4 மாவட்டங்களில் இன்று பரவலான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உட்பட்ட சிவன் கோவில் வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அங்கு தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்று காலையிலும் திருச்செந்தூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
- ஒரு நாள் சிவபெருமான் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணினார்.
- கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது.
கடலூர் மாவட்டம் திருத்தினைநகர் எனும் ஊரில் அமைந்துள்ளது சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் திருத்தலமாகும். இத்தல இறைவன் சிவக்கொழுந்தீஸ்வரர் என்றும், இறைவி ஒப்பிலாநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மிகுந்த சிவ பக்தி கொண்ட ஒரு விவசாயத் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள், தினமும் சிவபக்தர் ஒருவருக்காவது உணவளித்து விட்டு, அதன்பின்புதான் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு நாள் சிவபெருமான் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணினார். அதன்படி, எந்த சிவ பக்தரையும் அவரது வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார்.
இதனால் மிகவும் மனம் வருந்திய விவசாயி, தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றார். ஆனால் அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, அந்த வழியாக முதியவர் ஒருவர் வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
அதற்கு முதியவர் அவரிடம், ''நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது ஒரு வேலை கொடு. அதற்கு கூலியாக வேண்டுமானால் நான் சாப்பிடுகிறேன்'' என்றார். இதற்கு விவசாயியும் ஒப்புக்கொண்டார். அதன்படி, தன் தோட்டத்தை உழும்படி கூறினார், விவசாயி. முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர்.
அப்போது, தோட்டத்தில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர்கள் முற்றி, அறுவடைக்கு தயார் நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது. இந்த அற்புதக் காட்சியைப் பார்த்த விவசாயி அதிசயித்து போனார். பின்பு சந்தேகத்துடன் அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் முதியவருக்கு சாதம் பரிமாறினார். முதியவரும் மகிழ்ச்சியுடன் விவசாயி அளித்த உணவை சாப்பிட்டார்.
பின்பு அவரிடம், ''ஒரே நாளில் எப்படி பயிர் விளைந்தது?'' எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். முதியவர் சிரித்தபடி, சிவனாக சுயரூபம் காட்டி, அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, சிவலிங்கமாக எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால், இத்தலத்துக்கு 'தினைநகர்' என்ற பெயர் வந்தது. அதுவே தற்போது, 'தீர்த்தனகிரி' என்று அழைக்கப்படுகிறது. வயலில் இறங்கி வேலை செய்ததால் இத்தல சிவபெருமானுக்கு 'விவசாயி' என்ற பெயரும் உண்டு.
மகரிஷி ஒருவர் முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்றார். அவர் இத்தலம் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இத்தலத்தில் உள்ள தீர்த்தம் 'ஜாம்புவதடாகம்' என்று அழைக்கப்படுகிறது.

கோவில் தோற்றம்
கோவில் அமைப்பு
கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. கோபுர வாசலுக்கு முன்பாக கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை காணலாம். இத்தலத்தில் சிவபெருமான், சுயம்பு லிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். அவர் நிலத்தை உழ பயன்படுத்திய ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலம் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. கோவில் வெளிப்பிரகாரத்தின் வலதுபுறத்தில் ஒப்பிலாநாயகி அன்னை தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.
ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் மனைவியுடன் காட்சி தருகிறார். விநாயகர் புடைப்பு சிற்பமாக காணப்படுகிறார். அவரை நான்கு பூதகணங்கள் வணங்கியபடி உள்ளனர். விஷ்ணு, துர்க்கைக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. சுப்பிரமணியர், நால்வர், வீரசேன மன்னன் ஆகியோரது சன்னிதிகளும் உள்ளன. கோவில் தல விருட்சமாக கொன்றை மரம் விளங்குகிறது. கோஷ்ட மூர்த்திகளாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர்.
திருவிழா
ஆலயத்தில் வைகாசி மாதம் 13 நாள் பிரம்மோற்சவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், பிரதோஷம், நவராத்திரி, ஆருத்ரா தரிசனம் ஆகியவை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதம் 20-ந் தேதியில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. இதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள சிவனுக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் சாத்தியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துக்கின்றனர்.
கோவில், காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கடலூரில் இருந்து புவனகிரி செல்லும் சாலையில் சென்றால் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் வரும். அங்கிருந்து உள்ளே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
- மகிழ்ச்சியோடு சென்ற பார்வதி தேவிக்கு அவமானமே மிஞ்சியது.
- திருவிழா சமயங்களில் மட்டும் 64 கலசங்களில் ஆபரணங்கள் எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்தியாவில் ஆண்டுக்கு குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் கோவில்கள் ஏராளமாக உள்ளன. அதில் ஒன்று தான் கொட்டியூர் சிவன் கோவில். கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது, கொட்டியூர் என்னும் ஊர். இந்த ஊரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் வருடத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வழிபாட்டிற்காக திறக்கப்படுகிறது.
தல வரலாறு
பார்வதி தேவியின் தந்தை தட்சன். இவன், சிவபெருமானை அழைக்காமலேயே இரண்டு பெரும் வேள்விகளை வெற்றிகரமாக நடத்தினான். அவ்வாறு மூன்றாவதாக 'பிரகஸ்பதீஸ்தவ' எனும் வேள்வியை நடத்த முடிவு செய்தான். அதில் கலந்து கொள்ள சிவபெருமானை தவிர தேவர்கள் என மற்ற அனைவரையும் அழைத்திருந்தான். தன் தந்தை நடத்தும் மாபெரும் வேள்வியில் தன்னுடைய கணவரான சிவபெருமானை அழைக்கவில்லையே என்று மிகவும் வருந்தினார், பார்வதி தேவி.
அதேநேரம், அந்த வேள்வியில் கணவருடன் கலந்து கொள்ளவும் விரும்பினார். பார்வதி தேவி, தன் எண்ணத்தை சிவபெருமானிடம் கூறினார். அதற்கு சிவபெருமான், ''நாம் அங்கு செல்ல வேண்டாம். அழைப்பில்லாமல் சென்றால் அவமானமே கிடைக்கும்'' என்றார். ஆனால் பார்வதி தேவி வேள்வியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் சிவபெருமான் சொன்னதை கேட்காமல் தனியாகவே வேள்வி நடைபெறும் இடத்துக்கு சென்றார்.
மகிழ்ச்சியோடு சென்ற பார்வதி தேவிக்கு அவமானமே மிஞ்சியது. தட்சன், பார்வதியையும், சிவபெருமானையும் அவமதித்து பேசினான். இதனால் மிகவும் மனம் வருந்திய பார்வதி தேவி, தனது உயிரை அங்கேயே மாய்த்துக் கொண்டார். இதை அறிந்து கோபம் கொண்ட சிவபெருமான், வேள்வி நடக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு வேள்வி நடத்திக் கொண்டிருந்த தட்சனின் தலையை துண்டாக வெட்டி வீசினார். தட்சனின் தலையை வெட்டிய பிறகும் சிவபெருமானின் கோபம் அடங்கவில்லை. பின்பு கோபம் தணிந்து, சிவபெருமான் ஓரிடத்தில் சுயம்புவாக தோன்றினார். அந்த இடம்தான் கேரளாவில் இருக்கும் கொட்டியூர் என்கிறது தல புராணம். இந்த தலத்திற்கு திருசேருமன்னா என்ற பெயரும் உண்டு.
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் கூடியிருந்த இடம் என்பதால் 'கூடியூர்' என அழைக்கப்பட்டு, பிறகு 'கொட்டியூர்' என்று மாறிப்போனது. கொட்டியூர் மட்டுமல்ல அதனை சுற்றி உள்ள பல ஊர்களும் தட்சன் நடத்திய யாகத்துடன் தொடர்புடையவை என சொல்லப்படுகின்றன. தட்சனின் யாகத்திற்கு வந்த பார்வதி தேவி, யாகம் நடந்த இடத்தை தூரத்தில் இருந்து கண்டதால் அவ்விடம் 'நீண்டு நோக்கி' என்றும், தட்சனின் யாகத்தை காண நடந்து வந்த பார்வதி தேவியின் நடை வேகம் குறைந்த இடம் என்பதால் 'மந்தன்சேரி' என்றும் அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு
கொட்டியூரில் மாவேலிப்புழை எனப்படும் பாவலி ஆறு ஓடுகிறது. இதன் இரண்டு கரைகளிலும் சிவபெருமானுக்கு இரண்டு கோவில்கள் அமைந்துள்ளன. ஆற்றின் இக்கரையில் அமைந்துள்ள கோவிலை 'இக்கரை கொட்டியூர்' என்றும், அடுத்த கரையில் அமைந்துள்ள கோவிலை 'அக்கரைக் கொட்டியூர்' என்றும் அழைக்கின்றனர். இவற்றில் அக்கரை கொட்டியூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் வருடத்திற்கு 28 நாட்கள் மட்டுமே பக்தர்கள் தரிசிப்பதற்காக திறக்கப்படுகிறது. அதாவது வைகாசி மாதத்தில் நடைபெறும் மகோற்சவ காலத்தின்போது மட்டுமே இந்த கோவில் திறக்கப்படுகிறது.
மற்ற நாட்களில், பக்தர்கள் சிவபெருமானை தரிசிப்பதற்காக அமைக்கப்பட்ட கோவில் தான், இக்கரைக் கொட்டியூர் சிவன் கோவில். இக்கோவில் சற்று உயரத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்ல பல படிகளை ஏறி செல்ல வேண்டும். அங்கு இடப்பக்கம் பார்வதி தேவி சிலையும், வலப்பக்கம் சிவன் சிலையும் உள்ளன.
அக்கரை கோவில், 'திருவஞ்சிற' எனும் சிறு குளத்தின் மீது கருங்கல்லால் ஆன மேடைகளுடன் அமைந்துள்ளது. இந்த இடம் தட்சன் நடத்திய வேள்வி குண்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இங்கு 'மணித்துறை' எனும் மேடையில் சுயம்புவாக சிவபெருமான் எழுந்தருள்கிறார். சற்று தூரத்தில் பார்வதி தேவி அக்னிப்பிரவேசம் செய்த மேடை ஒன்று உள்ளது. அதற்கு 'அம்மாறக்கல்' என்று பெயர்.
கோவிலுக்கு சொந்தமான நகைகள், கரிம்பனக்கல் கோபுரம் என்னும் இடத்தில் உள்ள பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பெட்டகத்தின் நான்கு சாவிகள் நான்கு பிரமுகர்களிடமும், ஐந்தாவது சாவி மணாளன் என்பவரிடமும் இருக்கும். இவர்கள் ஐந்து பேரும் ஒன்று சேர்ந்து வந்தால் மட்டுமே பெட்டகத்தை திறக்க முடியும். இந்த பெட்டகத்தை பாம்புகள் பாதுகாத்து வருவதாக சொல்லப்படுகிறது.
திருவிழா சமயங்களில் மட்டும் 64 கலசங்களில் இந்த ஆபரணங்கள் எடுத்துச் செல்வது வழக்கம். இந்த கலசங்களுக்கு 'பண்ணாரம்' என்றும், இந்த உற்சவத்திற்கு 'பண்ணாரம் எழுந் நலத்து வைபவம்' என்றும் பெயர். இந்த வைபவத்தை நடத்துபவர்கள் 'குடிபதிகள்' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

அக்கரை கொட்டியூர் கோவில்
வைகாசி மகோற்சவ விழா
அக்கரை கொட்டியூரில் வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரம் நாளன்று தொடங்கி ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் வரை 28 நாட்கள் வைகாசி மகோற்சவம் நடைபெறும். இதில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள். திருவிழா சமயங்களில் மட்டும் அக்கரை கொட்டியூரில் சுயம்பு மூர்த்தியான சிவபெருமானை சுற்றிலும் குடில் அமைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் திறந்த வெளியிலேயே ஈசன் வாசம் செய்கிறார். பக்தர்கள் சிவனை வழிபடும் இடத்திற்கு 'திருவஞ்சரா' என்று பெயர். இந்த இடத்தை எப்போதும் தண்ணீர் சூழ்ந்திருக்கும். இந்த நீர் 'தட்சனின் ரத்தம்' என கருதப்படுகிறது.
அமைவிடம்
கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும், தலச்சேரியில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் கொட்டியூர் இருக்கிறது.
- ‘மதானந்தேஸ்வரர்’ என்பதற்கு, ‘காமம், ஆசையைக் கொன்ற கடவுள்’ என்று பொருள்.
- இந்த ஆலயத்தின் பிரதான பிரசாதமாக ‘அப்பம்’ இருக்கிறது.
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் மதுர் என்ற இடத்தில் அமைந்துள்ளது, மதானந்தேஸ்வரர் ஆலயம். மதுவாகினி ஆற்றின் கரையில் இருக்கும் இந்த ஆலயத்தின் முதன்மை தெய்வம் மதானந்தேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படும் சிவபெருமான்தான். 'மதானந்தேஸ்வரர்' என்பதற்கு, 'காமம், ஆசையைக் கொன்ற கடவுள்' என்று பொருள். சிவபெருமானின் கருவறைக்குள், பார்வதி தேவியும் வீற்றிருக்கிறார். கோவிலின் முதன்மை தெய்வமாக சிவபெருமான் இருந்தாலும், இந்த ஆலயத்தின் முக்கியத்துவம் உள்ள தெய்வமாக சித்தி விநாயகர் உள்ளார். சிவபெருமான் கருவறையின் தெற்கே இந்த விநாயகர் சன்னிதி இருக்கிறது.
இங்கு ஆரம்ப காலத்தில் மதானந்தேஸ்வரர் கோவில் மட்டுமே இருந்தது. துளு மொகர் சமூகத்தைச் சேர்ந்த மதரு என்ற மூதாட்சி, சுயம்பு லிங்கம் ஒன்றை கண்டெடுத்ததன் பேரில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது. இந்த ஆலயத்தின் கருவறை தெற்கு சுவரில், ஒரு சிறுவன் விளையாட்டாக பிள்ளையார் உருவம் ஒன்றை வரைந்தான். அந்த ஓவியமானது நாளுக்கு நாள் பெரியதாகவும், புடைப்பாகவும் மாறியது.
இந்த ஆலயம் யானையின் பின்புறத்தை போன்ற அமைப்புடன் (கஜபிருஷ்ட வடிவம்) கட்டப்பட்டுள்ளது. மூன்று அடுக்கு நிலைகளைக் கொண்டதாக ஆலயம் அமைந்திருக்கிறது. ஆலயத்தைச் சுற்றிலும் ராமாயணக் காட்சிகளை சித்தரிக்கும் வகையில் அழகிய மர வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக்கோவில் துளு நாட்டின் பாரம்பரிய ஆறு பிள்ளையார் கோவில்களில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. மங்களூர் (ஷரவு மகாகணபதி), அனேகுடே, ஹத்தியங்கடி, இடகுஞ்சி, கோகர்ணா ஆகிய இடங்களில் உள்ளவை மற்ற ஐந்து கோவில்களாகும்.
இந்த ஆலயத்தின் பிரதான பிரசாதமாக 'அப்பம்' இருக்கிறது. இந்த அப்பம் ஒவ்வொரு நாளும் இறை வழிபாட்டிற்காக தயாரிக்கப்படுகிறது. ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகளின் போது, 'சகஸ்ரப்பா' (ஆயிரம் அப்பங்கள்) இறைவனுக்கு படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும். இந்த அப்பம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். ஆலயத்தின் மற்றொரு சிறப்பு பூஜை 'மூடப்ப சேவை.' இந்த வழிபாட்டில், விநாயகரின் சிலை முழுவதையும் அப்பங்களால் மூடுகின்றனர்.
காசர்கோடு நகரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, மதுர் திருத்தலம்.
- காஞ்சிபுரம் கூரம் கிராமத்தில் இந்த கோவில் உள்ளது.
- விருப்பங்களை நிறைவேற்றும் பரிகார தலமாக உள்ளது.
காஞ்சிபுரத்தில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் கூரம் கிராமத்தில், வித்யவினீத பல்லவ பரமேஸ்வர சிவன் கோவில் உள்ளது. இக்கோயில் , ஏழாம் நூற்றாண்டில், முதலாம் பரமேஸ்வர வர்ம பல்லவ மன்னர் காலத்தில் வித்ய வினீத பல்லவரசன் என்னும் குறு நில மன்னன் இந்த ஊரில் நிலத்தை விலைக்கு வாங்கி, கோயிலை கட்டியுள்ளான். இதற்கு வித்ய வினீத பல்லவ பரமேச்வரகிருஹம் என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கற்கோயில் , கட்டுமானக் கலைக்கும் முன் உதாரணமாக, திகழ்கிறது எனலாம். பரமேச்வரவர்மன், ராஜசிம்மன், நத்திவர்மன், நிருபதுங்கன் என நான்கு பல்லவ அரசர்கள் இவ்வூரின் மீது அதிக அளவில், ஈடுபாடு கொண்டுள்ளனர். முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் பெருந்திருக்கோயில் என சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு, ஆதிகேசவப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில், பல்லவர்கள் கால கோவிலாகும். வைணவத்திற்கு பெரும் தொண்டாற்றிய கூரத்தாழ்வான் அவதரித்தார். கூரத்தாழ்வானுக்கு பெருமாள் கோவிலில் ஒரு தனி சன்னிதி உள்ளது.
தினமும் மாலை வேளையில், சூரியன் மறையும் நேரத்தில், சூரிய கதிர்கள் லிங்கத்தின் மீது விழும் வகையில், கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது, ராமர் வழிபட்ட தலம்.
விருப்பங்களை நிறைவேற்றும் பரிகார தலமாக உள்ளது. சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
- ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.
- விநாயகர், முருகன் ஆகிய பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள 13ம் நூற்றாண்டை சேர்ந்த நம்பு ஈஸ்வரர் கோவிலில் விநாயகர், முருகன் ஆகிய பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்றது. இதில் 1008 சங்குகளால் சங்காபிஷேகமும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. சிவாச்சாரியார்களால் யாகம் வளர்க்கப்பட்டு, மந்திரங்கள் ஓதப்பட்டு சிவன், விநாயகர், முருகன், நந்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மண்டல பூஜை நடைபெற்றது.
ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
- இந்த கோவிலில் மும்மூர்த்திகளும் ஒருசேர அருள்பாலிக்கிறார்கள்.
- இந்த கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒருசேர அருள்பாலிக்கிறார்கள். அதனால்தான் தாணுமாலயன் கோவில் (தாணு என்றால் சிவன், மால் என்றால் திருமால், அயன் என்றால் பிரம்மா) என்ற பெயருடன் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.
இந்திரன் சாபம் நீங்கியது
இந்திரன் தனது சாபம் நீங்க மும்மூர்த்திகளையும் ஒருசேர பூஜித்து வணங்கிய இடமே (அறிவுக்கானகம் என்று போற்றப்பட்ட ஞானாரண்யம் என்ற பகுதிதான்) சுசீந்திரம் என்பது புராண வரலாறு. அதனால் இந்திரன் இந்த கோவிலுக்கு அர்த்தசாமத்தில் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அத்திரி மகரிஷி முனிவருக்கும், அவரது மனைவி அனுசூயாவிற்கும் மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் இங்கு காட்சி அளித்ததாக தல வரலாறு கூறுகிறது.
இறைவன் மீது அளவற்ற பற்றுக்கொண்ட அறம்வளர்த்தாள் என்ற பெண்ணை இறைவன் உயிரோடு ஆட்கொண்ட இடம் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் என்றும் தலப்புராணம் கூறுகிறது. அதன்காரணமாக அறம்வளர்த்த நாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது என்றும், இந்த சம்பவத்தின் நினைவாக ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது என்றும் கூறுகிறார்கள்.
சன்னதிகள்
இந்த கோவிலின் பிரதான சன்னதியாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் இணைந்த தாணுமாலய சாமி சன்னதி அமைந்துள்ளது. இதுதவிர கொன்றையடி சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, அறம் வளர்த்த நாயகி சன்னதி, கால பைரவர் சன்னதி, கங்காளநாதர் சன்னதி, கைலாசநாதர் சன்னதி, சேரவாதல் சாஸ்தா சன்னதி, ராமர் சன்னதி, முருகன் சன்னதி, பஞ்சபாண்டவர் சன்னதி, நீலகண்ட விநாயகர் சன்னதி, நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது), இந்திர விநாயகர் சன்னதி, உதயமார்த்தாண்ட விநாயகர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி, ஸ்ரீகிருஷ்ணர் சன்னதி, துர்க்கை அம்மன் சன்னதி, ஸ்ரீசக்கரம் சன்னதி, விக்னேஸ்வரி (பெண் கணபதி- முகம் விநாயகர் உருவிலும், உடல் பெண் தோற்றத்திலும் காட்சி தரும்) சன்னதி, மன்னருக்கு தலைவலியை போக்கிய ஜூர தேவமூர்த்தி சன்னதி (3 தலை, 3 கால், 4 கைகளைக் கொண்ட சாமி சிலையுடன் கூடியது), நந்தீஸ்வர் சன்னதி போன்ற சன்னதிகள் இக்கோவிலில் அமைந்துள்ளன. இத்தகைய சிறப்புகள் மிகுந்த இந்த கோவிலுக்கு தினமும் குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட, வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும், பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
பழம்பெருமை மிக்க இந்த கோவிலில் அமைந்துள்ள விஷ்ணு சிலை கடுசர்க்கரை மருந்தால் ஆனது. இதனால் விஷ்ணுவின் திருமேனி எப்போதும் வெள்ளி கவசம் தாங்கி இருக்கும். எனவே விஷ்ணுவுக்கு அபிஷேகம் கிடையாது. இதனால் அவர் அலங்காரப்பிரியராகவும், சிவன் அபிஷேகப் பிரியராகவும் இங்கு காட்சி தருகின்றனர். இங்குள்ள உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ நாட்களில் மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
ராஜகோபுரம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலின் முகப்பில் உள்ள ராஜ கோபுரம் 135 அடி உயரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. கோபுரம் 10 அடி உயர கருங்கல் பீடத்தில் 7 நிலைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் உள்புறத்தில் மர வேலைப்பாடுகள் நிறைந்துள்ளது. உட்புற சுவர்களில் மூலிகைச் சாற்றில் இருந்து எடுக்கப்பட்ட வண்ணங்களில் ஆன ராமாயணம், மகாபாரத இதிகாச ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் ராமாயணம், மகாபாரதம், சிவபுராண கதாபாத்திரங்களின் சுதை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் கடுசர்க்கரை, நவபாஷாண மூலிகைகளால் தயாரிக்கப்பட்டதாகும். கோவிலில் உள்ள நந்தி சிலை முழுக்க, முழுக்க கடற்சங்கை மாவாக்கி அதில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை மாக்காளை என்றும், பிரமாண்டமாக காட்சி தருவதால் மகாக்காளை என்றும் அழைக்கப்படுகிறது.
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 22 அடி உயரம் ஆஞ்சநேயரின் சிலையுடன் கூடிய சன்னதி இந்த கோவிலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். சிலை பாதத்தின் கீழே உள்ள 4 அடி பூமிக்குள் பதித்து வைக்கப்பட்டுள்ளது. வெளியில் தெரிவது 18 அடி உயரங்கொண்ட ஆஞ்சநேயர் மட்டும்தான். பாதத்தில் இருந்து உச்சிவரை எந்தவித பிடிப்பும் இல்லாமல் இந்த சிலை நிற்கிறது. சுசீந்திரம் கோவிலில் மண்ணிலிருந்து கிடைத்த மாணிக்கமாக திகழ்கிறார் மாருதி. கோவிலின் தின வழிபாடுகளிலும், காணிக்கை வசூலிலும் இந்த கோவிலில் முதலிடம் வகிப்பவர் இவரே என கோவில் பணியாளர்கள் பெருமையோடு கூறுகிறார்கள். கோவிலின் அலங்கார மண்டபத்தில் 36 இசைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லும் கவிபாடும் என்பதற்கேற்ப இந்த தூண்களை தட்டினால் இசை ஒலி எழும்பும். கை தாளத்துக்கு ஏற்ப நாதஓசை எழும்பும் வகையில் இசைத்தூண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற வியக்க வைக்கும் சுற்றுப்பிரகார மண்டபத்தைக் கொண்டது இக்கோவில். 2 பெரிய கொடிமரங்கள் இந்த கோவிலில் அமைந்துள்ளன.
மார்கழி திருவிழா தேரோட்டம், சித்திரை திருவிழா தெப்போற்சவம், ஆவணி மாத தேர்திருவிழா, மாசித்திருக்கல்யாண திருவிழா, மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில் வரும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா ஆகியவை இந்த கோவிலின் முக்கிய விழாக்களாகும். இந்த விழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். கோவிலில் தினமும் காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு மற்ற சன்னதிகளும், 1 மணிக்கு ஆஞ்சநேயர் சன்னதியும் நடை அடைக்கப்படும். மாலை 4 மணிக்கு ஆஞ்சநேயர் சன்னதி நடைதிறக்கப்படும். மற்ற சன்னதிகள் மாலை 5 மணிக்கு திறக்கப்படும். இரவு 8 மணிக்கு அனைத்து சன்னதிகளும் நடை அடைக்கப்படும்.காலை, மாலை 6.30 மணிக்கு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறும்.
- இத்தலம் காங்கேயன்பாளையம் என முருகனின் பெயரால் அமைந்துள்ளது.
- கார்த்திகை கடைசி திங்களன்று சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும்.
ஈரோடு மாவட்டத்தில், காங்கேயன்பாளையத்தில் அமைந்துள்ள 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான நல்லநாயகி உடனருள் நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் சிவனின் அரங்கமாகவே திகழ்கிறது. மூர்த்தி மற்றும் காவிரி தீர்த்தத்தால் சிறப்புப் பெற்றுள்ள இத்தலம் காங்கேயன்பாளையம் என முருகனின் பெயரால் அமைந்துள்ளது. இத்தலத்தில் காவிரி ஆறு இரு புறமும் சுழித்துக் கொண்டு ஓட, நடுவில் உயர்ந்து, அகத்தியர் வியாக்ரபாதர், பதஞ்சலி முதலிய முனிவர்கள் திருவடி பதிந்த பாறைமீது அமைந்துள்ள திருக்கோயிலாகும்.
காவிரியின் நடுவிலுள்ள குன்றின் மீது, ஓம்கார வடிவில் விளங்கும் கோயில் இது. கொங்கு நாட்டு பஞ்சபூதத் தலங்களில் அகத்தியரால் மணலில் வடிக்கப்பட்ட லிங்கமாக இத்தல இறைவன் இருப்பதால், இத்தலம் கொங்குநாட்டு பிருத்வி (மண்) தலமாகக் கருதி வழிபடப்படுகிறது. இதுவரை இத்திருக்கோயிலுக்குச் செல்பவர்கள் வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் காவிரி ஆற்றில் பரிசலில் பயணித்துச் சென்றுதான் தரிசனம் செய்து வரவேண்டும்.
குடகிலிருந்து கடலின் முகத்துவாரம் வரையில் உள்ள நீளத்தின் மையப்புள்ளி அமைந்துள்ள இடமே தற்போது நட்டாற்றீஸ்வரர் கோயில்கொண்டிருக்கும் பகுதியாகும். மேலும் இரு கரைகளுக்கு இடையிலும் நடு ஆற்றில் அமைந்துள்ள பகுதியாக இருப்பதால் நடு ஆற்று ஈஸ்வரர் என்ற காரணப் பெயர் ஏற்பட்டு, தற்போது நட்டாற்று ஈஸ்வரர் என வழங்கி வருகிறது. இந்த நட்டாற்றீஸ்வரர், அகத்தியரால் அவர்தம் பூஜைக்கென உருவாக்கப்பட்டு வணங்கப்பட்ட லிங்கமாகும்.
அகத்தியரால் வணங்கப்பட்ட சிவலிங்கம் நடு ஆற்றில் குடி கொண்டதால், 'நட்டாற்றீஸ்வரர்' எனவும், அகத்தியரால் மணலால் பிடித்து வைத்து வணங்கப்பட்டதால் அகத்தீஸ்வரர் எனவும் வழங்கப்பட்டார். பின்னர் சிவலிங்கத்திற்கு மேல் விமானம் கட்டப்பட்டது சிவகுடும்பத்தின் அங்கமாக அருகில் உமையம்மை, 'நல்லநாயகி' என்ற பெயரோடு, சிவன் சந்நதிக்கு வலப்புறம் தனி சந்நதியில் எழுந்தருளினாள். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நற்பலன்களைத் தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர் வழங்குகிறது. அன்னபூரணி என்றும் பெயருண்டு.
சின்னமைந்தன் முருகன், வலது காலை முன்வைத்தும், இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் காட்சி தருகிறார். அகத்தியர் இங்கு சிவனைத் தரிசிக்க வந்தபோது, முருகன் அவரை முன்னின்று வரவேற்று அழைத்து வந்து ஆற்றின் நடுவில் அமைந்திருந்த குன்றைக் காட்டியதால் இக்கோலத்தில், அதாவது நடக்கும் பாவனையில், காட்சி தருகின்றார். இவர் இடது கையில் கிளி ஒன்றை வைத்திருப்பது வித்தியாசமான தரிசனம். இது 'தகப்பன் சாமி' எனப் பெயர்பெற்ற ஞானஸ்கந்தன் என்னும் முருகப் பெருமானின் ஞானக்கோலம் ஆகும். கோயில் வளாகத்திலுள்ள பாறை மீது தலவிருட்சமான ஆத்திமரத்தைக் காணலாம். மிகவும் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது அதிசயம்.
இம்மரத்தின் கீழ் தல விநாயகராக காவிரி கண்ட விநாயகர் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தின் பிராகாரத்தில் காவிரி கண்ட விநாயகரோடு, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர், நால்வர், பைரவர். ஆகியோர் எழுந்தருளி அருளுகின்றார்கள். ஸ்ரீதேவி-பூதேவியுடனான ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் தனி சந்நதியில் சேவை சாதிக்கிறார்.தினமும் காலை 6.30 முதல் இரவு 7.00 மணிவரை திருக்கோயில் தரிசனத்திற்காக திறந்திருக்கும் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அகத்தியர் பிருத்வி லிங்கம் செய்து சிவபூஜை செய்தபோது, சுவாமிக்கு கம்பு தானியத்தை படைத்து வழிபட்டார்.
இதன் அடிப்படையில் அச்சம்பவம் நிகழ்ந்த சித்திரை முதல்நாள் மட்டும் சிவனுக்கு தயிர் கலந்த கம்பங்கூழ் நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது. அன்று பக்தர்களுக்கு இதுவே பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. சித்திரை முதல்நாள், ஆடிப்பெருக்கு மற்றும் கார்த்திகை கடைசி திங்களன்று சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும். ஆடிப்பூரத்தன்று மதியவேளை பூஜையில் நல்லநாயகி அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும். காவிரியாற்றின் நடுவில் அமைந்த தலம் என்பதால், ஆடிப்பெருக்கன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அன்று கமண்டலத்தின் மூலம் காவிரி நதியைக் கொண்டு வந்த அகத்தியருக்கு தலைப்பாகை மற்றும் வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.
இத்திருக்கோயில் சிறிய பாறைமீது அமைந்திருந்தாலும், அந்தப் பாறையிலேயே ஆத்திமரம் தலவிருட்சமாகத் துலங்குகிறது. அனைத்து நட்சத்திரங்களும், ராசிகளும் இறைவனின் இயக்கத்துக்குக் கட்டுப்பட்டவை என்பதால் அந்தந்த நட்சத்திரத்துக்கும் ராசிக்கும் உரிய தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரவர் தமக்குரிய விருட்சத்தை வணங்கி பின்னர் வந்து இறைவனை வணங்கிச் செல்லும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது.
செவ்வாய், வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் நல்லம்மை, துர்க்கை வழிபாடும், சோமவாரத்தில் சிவனுக்கு அபிஷேகமும், சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடும், சஷ்டி, கிருத்திகை, செவ்வாய் நாட்களில் ஞானவடிவாக உள்ள சுப்ரமணியருக்கு கல்வியில் தேர்ச்சிபெற மாணவர்கள் வந்து வணங்கிவிட்டுச் செல்கிறார்கள். தீயதை அழித்து நல்லது நடைபெற அகத்தியர் மூலமாக எழுந்தருளி அருள்பாலித்துவரும் அகத்தீஸ்வரர் என்னும் நல்லம்மை உடனாய நட்டாற்றீஸ்வரரைத் தொழ நம்மைச் சுற்றி இருக்கும் தீமைகள் அழிந்து, நமக்கு நன்மையே விளையும்.
- நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக இந்த கோவில் விளங்குகிறது.
- நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன.
நாட்டின் தெற்கு எல்லையாக இருப்பது குமரி மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைநகராக நாகர்கோவில் நகரம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு நாகர்கோவில் என்று பெயர் வரக்காரணம், நகரின் நடுவே அமைந்துள்ள நாகராஜா கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலின் நுழைவு வாயில்களில் ஒன்றான மகாமேரு மாளிகை தான் நாகர்கோவில் மாநகராட்சி சின்னமாக இருப்பது சிறப்புக்குரியது.
பரிகாரத்தலம்
நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக நாகராஜா கோவில் விளங்குகிறது. இக்கோவில் கிழக்கு திசையை நோக்கி அமைந்து இருந்தாலும், தெற்கு முகமாக உள்ள கோபுர வாசல் (மகாமேரு மாளிகை) வழியாகவே அதிகமான மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கிழக்கு வாசல் வழியாகவும் கோவிலுக்கு செல்லலாம். நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன. ஒரு கருவறையில் நாகராஜரும், மற்றொரு கருவறையில் அனந்த கிருஷ்ணரும் எழுந்தருளியுள்ளனர். நாகராஜர் கருவறையின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டு உள்ளது. மூலவராக உள்ள நாகராஜா சுயம்புவாக உருவானதாக ஐதீகம். சுயம்பு வடிவில் உள்ள சுவாமிக்கு 5 தலைகளை கொண்ட ஐம்பொன் நாகர் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக அனந்த கிருஷ்ணர் நின்ற கோலத்தில் தலைக்கு மேல் 5 தலை நாகத்துடன் காட்சி தருகிறார். அதில் நாகம், இடுப்பில் இருந்து தலைக்கு மேல் படமெடுத்தபடி நிற்கும். அனந்த கிருஷ்ணரின் இடது மற்றும் வலது புறங்களில் பத்மாவதி, அம்பிகாவதி நின்ற கோலத்தில் உள்ளனர். இவர்களின் தலைமேல் 3 தலை நாகம் உள்ளது. நாகராஜா கருவறைக்கும், அனந்த கிருஷ்ணர் கருவறைக்கும் இடையே சிறிய சன்னிதானத்தில் லிங்க வடிவில் சிவன் இருக்கிறார். எதிரே நந்தி சிலையும் உண்டு.
குழந்தை பாக்கியம்
கோவில் வளாகத்தில் அரச மரம் பரந்து விரிந்தபடி காணப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் விநாயகர் சன்னதி உள்ளது. மரத்தை சுற்றிலும் நாகர் சிலைகள் வரிசையாக அமைக்கப்பட்டு உள்ளன. நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பதும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், திருமணத்தடை உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.நாகதோஷ பரிகாரத்துக்காக உப்பு, நல்லமிளகு, வெளியில் உள்ள நாகர் சிலைக்கும், மூலவரான நாகராஜருக்கு வெள்ளியால் ஆன முட்டைகள், நாகம், மனித உருவபொம்மை ஆகியவற்றை தோஷ பரிகாரமாக பக்தர்கள் செலுத்துகிறார்கள்.
மன்னர் நோய் நீங்கியது
இந்த கோவில் கட்டுமானம் தொடர்பாக சில தகவல்கள் கூறப்படுகின்றன. அதாவது இந்த கோவிலை முதலில் வைணவ கோவிலாக கட்ட தொடங்கியவர் பூதலவீர வீர உதயமார்த்தாண்டன் என்ற அரசர் ஆவார். இவர் 1516 முதல் 1585-ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் சோழகுல வல்லிபுரம் என்ற களக்காட்டை (திருநெல்வேலி மாவட்டம்) தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்து வந்தவர்.
அவருக்கு தீர்க்க முடியாத சரும நோய் இருந்ததாம். இந்த நோயானது நாகதோஷத்தால் வந்தது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் வழிபாடு செய்தால் சரும நோய் தீரும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அரசரும் நாகராஜா கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தார். அப்போது கோவிலின் தலவிருட்சமான ஓடவள்ளி செடியை தனது உடலில் தேய்த்து கொண்டு 41 மண்டலங்கள் கோவிலில் இருந்தார். அங்கு தங்கி இருந்த காலக்கட்டத்தில் கோவிலில் சில பகுதிகளை கட்டினார் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலின் புற்றுமண் முக்கிய பிரசாதமாகும். புற்று மண் எவ்வளவோ எடுத்தும் இன்னமும் குறையாமல் இருப்பது அதிசயமாகும். இந்த கோவிலில் உள்ள நாகலிங்கப்பூவை நாகராஜரின் உருவகமாக பக்தர்கள் கருதுகிறார்கள்.
சன்னதிகள்
இந்த கோவிலில் 8-க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. தெற்கு வெளிப்பிரகாரத்தில் நாகமணி பூதத்தான் காவல் தெய்வமாக இருக்கிறார். வடக்கு வெளிபிரகாரத்தில் சாஸ்தா சன்னதி உள்ளது. இங்கு சாஸ்தா அமர்ந்த கோலத்தில் தலையில் கிரீடத்துடன் காட்சி தருகிறார். உள் பிரகாரத்தில் கன்னி மூல கணபதி உள்ளார். இதுதவிர கோவிலுக்கு வடபுறத்தில் சிறு, சிறு சன்னதிகளும் உள்ளன. இங்கு துர்க்கை அம்மன் சங்கு சக்கரத்தை கையில் ஏந்தியபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த சன்னதி 1965-ம் ஆண்டு கட்டப்பட்டது. துர்க்கை அம்மன் அருகே உள்ள பாலமுருகன் சன்னதி 1979-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தெற்கு பகுதியில் குழல் ஊதியபடி கிருஷ்ணர் சிலை உள்ளது. இதுதவிர கோவிலின் மகா மண்டபம், உள் பிரகார மண்டபங்களில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக கிருஷ்ணன் கோவில் கொடிமரத்தின் உச்சியில் கருடன் தான் காணப்படும். ஆனால் இந்த ஆலயத்தின் கொடி மர உச்சியில் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான கூர்ம (ஆமை) அவதாரத்தை நினைவு கூறும் வகையில் ஆமை உருவம் வைக்கப்பட்டுள்ளது.
நாகராஜா கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனம், 4.30 மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு உஷபூஜை, காலை 10 மணிக்கு பால் அபிஷேகம், 11 மணிக்கு கலசாபிஷேகம், 11.30 மணிக்கு உச்ச பூஜை, அதைத்தொடர்ந்து ஸ்ரீபலி, 12 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அர்த்தசாம பூஜை, 8 மணிக்கு ஸ்ரீபலி முடிந்து நடை அடைக்கப்படும்.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை இங்கு பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அதிலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை திருவிழா கூட்டமாக இருக்கும். குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, பிற மாவட்ட பக்தர்கள், கேரளா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் அதிகமாக வருவார்கள். இதனால் பகலிலும், இரவிலும் நடை அடைக்க சில மணி நேரங்கள் தாமதமாகும். தினமும் நாகராஜருக்கு பூஜை செய்த பிறகு தான் அனந்தகிருஷ்ணருக்கும், சிவனுக்கும் பூஜைகள் நடக்கின்றன. அர்த்த சாம பூஜை மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதலில் நடக்கிறது. பூஜையானது கேரள பாரம்பரியப்படி தாந்திரீக ஆகமப்படி நடக்கிறது. சைவ, வைஷ்ணவ ஆராதனை நடைபெறும் கோவில் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
நாகராஜா கோவிலில் தை மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழா, ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை விழாக்கள், கார்த்திகை விழா, ஐப்பசி மாத ஆயில்ய நாட்களில் விசேஷ பூஜைகள், கந்தசஷ்டி விழா ஆகியவை முக்கிய விழாக்களாகும்.
- சிவன், பெருமாள் கோவில்களில் காவல் தெய்வமாக பைரவர் வீற்றிருப்பார்.
- இரவில் சாமி பள்ளியறைக்கு சென்றபின்னர் கோவில் சாவியை பைரவர் முன்பாக வைத்து எடுத்து செல்வது பல கோவில்களில் வழக்கமாக உள்ளது.
சேலம்:
சேலம் அருகே வலசையூர் அரூர் மெயின்ரோட்டில் சுந்தர்ராஜ் காலனி பஸ் நிறுத்தம் அருகில் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையின்போது சமீபகாலமாக மணி ஓசைக்கு ஏற்ப நாய் சத்தமிட்டு வழிபடுவது அந்த பகுதி பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது.
இந்த கோவிலில் பிரமாண்டமான 18 அடி உயர லிங்கம் உள்ளது. சிவனுக்கு உகந்த பிரதோஷம், அஷ்டமி, பவுர்ணமி பூஜையின்போது அபிஷேகம், அலங்காரம் வழிபாடு நடக்கும். அப்போது லிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதிக்கு 2 நாய்கள் வந்தன. இந்த கோவில் வழிபாட்டின்போது 2 நாய்களும் கோவில் வளாகத்திலேயே சாமியை சுற்றி சுற்றி வலம் வரும்.
சமீபத்தில் இங்குள்ள நாய் 4 குட்டிகளை ஈன்றது. இந்த குட்டிகள் வளர வளர கோவில் பூஜையை உன்னிப்பாக கவனித்தன. அவற்றில் ஒரு நாய் கோவில் படியில் நின்று வழிபட்டது. முதலில் ஏதோ நாய் தானே நிற்கிறது என பக்தர்கள் நினைத்துவிட்டனர். நாளடைவில் அந்த நாயின் செயல்பாடு பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கோவில் பூஜையின்போது சங்கு ஒலிக்க தொடங்கியதுமே சங்கு ஒலிக்கு ஏற்ப அவை சத்தமிட தொடங்கின.
மற்ற நாட்களில் இந்த நாய் அங்கு வருவதில்லை. பவுர்ணமி, பிரதோஷம், அஷ்டமி நெய் அபிஷேக வழிபாட்டின்போது மட்டும் சங்கு ஒலிக்கு ஏற்ப சத்தமிடுகிறது. கடந்த சில நாட்களாகவே நாயின் இந்த செயல் வியப்பாகவே இருப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள். பொதுவாக நாயை பைரவரின் வாகனம் என்பார்கள். சிவன், பெருமாள் கோவில்களில் காவல் தெய்வமாக பைரவர் வீற்றிருப்பார். இரவில் சாமி பள்ளியறைக்கு சென்றபின்னர் கோவில் சாவியை பைரவர் முன்பாக வைத்து எடுத்து செல்வது பல கோவில்களில் வழக்கமாக உள்ளது. இந்த சூழலில் பைரவரின் வாகனமான நாய் சிவனை வழிபடுவது சேலம் பகுதியில் சற்று புதுமையானதாகவும், ஆச்சரியமானதாகவும் உள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இதுபற்றி கோவில் நிர்வாகி ராஜேந்திர குருஜி கூறியதாவது:-
இங்கு 18 நாகங்களுடன் ஸ்ரீ ஆத்ம லிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். தமிழகத்திலேயே இதுபோன்ற லிங்கம் வேறு இல்லை. கடந்த 6 வருடமாக பைரவர் வாகனம் இந்த வழிபாட்டில் பங்கேற்கிறது. லிங்கம் பிரதிஷ்டை செய்து 7 வருடம் ஆகிறது.
இங்கு காலபைரவர், விநாயகர், காமாட்சி அம்மன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. தஞ்சை பெரியகோவிலில் உள்ளதுபோன்று ஒரே கல்லிலால் ஆன நந்தி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நந்தி சிலை தஞ்சை பெரியகோவில் நந்தியைவிட அளவில் சிறியது. 110 டன் எடை உடையது. சிவன், காமாட்சியம்மன் உள்ளிட்ட தெய்வங்களின் சக்தி பரிபூரணமாக உள்ளதால்தான் பைரவர் வாகனமான நாய் வழிபடுகிறது. இது கலியுக அற்புதங்களில் ஒன்றாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவில் முன்புறம் உள்ள சதுர வடிவ தெப்பம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகிறது.
- இத்தல இறைவன் வன்னி மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மூலவர்: கொற்றவாளீஸ்வரர்
அம்மன்: நெல்லை அம்பாள்
தீர்த்தம்: மது புஷ்கர்ணி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது, கோவிலூர் என்ற ஊர். இங்கு அமைந்துள்ள கொற்றவாளீஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி பார்ப்போம்.
இந்த ஆலயத்தை காளையார்கோவில் பகுதியை ஆட்சி செய்து வந்த வீரபாண்டியன் என்ற மன்னன் கட்டமைத்துள்ளான்.
இத்தல இறைவன் வன்னி மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
காளீசர் அருளால் வீரபாண்டியன் பெற்றிருந்த கொற்றவாளை, இத்தல இறைவன் மறைத்து விளையாடியதால், அவருக்கு 'கொற்றவாளீஸ்வரர்' என்று பெயர் வந்தது.
மன்னனுக்கு மீண்டும் கொற்றவாளை வழங்கிய ஈசன் என்பதால், இவருக்கு 'ராஜகட்க பரமேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு.
மதுப்பிரியன் என்ற முனிவரின் தவத்திற்கு அருள்பாலித்த காரணத்தால், இத்தல இறைவன் 'திரிபுவனேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
இக்கோவிலில் வீணை சரஸ்வதி, ஊர்த்துவ தாண்டவ நடராஜர், மீனாட்சி திருக்கல்யாண திருவுருவம், சர்வ அலங்கார சாரதாம்பிகை, ரிஷப வாகனத்தில் சிவ-பார்வதி, மயில் மீது சண்முகர் ஆகியோரது சிற்பங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.
இங்கு பிரதோஷம், பவுர்ணமி மற்றும் சிவராத்திரி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இந்த ஆலயத்தை புதுப்பித்து திருப்பணி செய்தவர், கோவிலூரில் வேதாந்த மடத்தை நிறுவியவரான முத்துராமலிங்க தேசிகர் ஆவார்.
கோவில் முன்புறம் உள்ள சதுர வடிவ தெப்பம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. இதன் நடுவில் 16 தூண்களுடன் கூடிய நீராழி மண்டபம் இருக்கிறது. தெப்பக்குளத்தைச் சுற்றி நடந்தால் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
சிவகங்கையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும், பிள்ளையார்பட்டியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, கோவிலூர்.
- கருவறையில் உள்ள மூலவர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- சிவலிங்கத்தின் மீது, அம்பு பட்ட தடம் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிசயமங்கை என்ற ஊரில் அமைந்துள்ளது, விஜயநாதேஸ்வரர் கோவில். தேவாரப்பாடல் பெற்ற இந்த ஆலயம் காவிரியின் வடகரைத் தலங்களில் 47-வது தலமாகும். இந்த ஆலயத்தின் மூலவராக விஜயநாதேஸ்வரரும், அம்பாளாக மங்களாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர். அர்ச்சுனன் வழிபட்ட தலம் என்பதால் இந்த ஆலயம் 'விஜயநாதேஸ்வரர் கோவில்' என்று அழைக்கப்படுகிறது. அர்ச்சுனனுக்கு 'விஜயன்' என்ற பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மகாபாரத போர் தொடங்குவதற்கு முன்பாக அர்ச்சுனனை சந்தித்த வேதவியாசர், 'சிவனை நினைத்து தவம் இருந்து பாசுபத அஸ்திரம் பெற்றால், கவுரவர்களை எளிதாக வெல்லலாம்' என்று கூறினார்.
இதையடுத்து அர்ச்சுனன் வனத்திற்குள் சென்று, சிவனை நினைத்து தவம் இருந்தான். அவனது தவத்தை கலைப்பதற்காக, முகாசுரன் என்ற அரக்கனை துரியோதனன் அனுப்பினான். பன்றி வடிவில் வந்த அந்த அசுரன், அர்ச்சுனனின் தவத்தை கலைக்க முயற்சித்தான். இதனால் கோபம் கொண்ட அர்ச்சுனன், அந்த பன்றியை தன்னுடைய அம்பால் வீழ்த்தினான். அதே நேரம் இன்னொரு அம்பும் அந்த பன்றியை துளைத்திருந்தது. அர்ச்சுனனை நோக்கி வந்த வேடன் ஒருவன், தான்தான் அந்த பன்றியை வீழ்த்தியதாக கூறினான். அதில் வேடனுக்கும், அர்ச்சுனனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. கோபம் அதிகமாக தன் கையில் இருந்த அம்பைக் கொண்டு அந்த வேடனை, அர்ச்சுனன் தாக்கினான். அப்போது வேடனாக வந்த சிவபெருமான் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டி, அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை வழங்கினார்.
அப்போது ஈசனின் அருகில் நின்ற அம்பாள், "ஐயனே.. ஆயுதங்களில் உயர்ந்த பாசுபத அஸ்திரத்தை பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதி பெற்றவனா?" என்று கேள்வி எழுப்பினாள். அதற்கு சிவன், "அர்ச்சுனன் 'மஸ்ய ரேகை' (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்" என பதிலளித்தார். அப்போது அர்ச்சுனனும், அம்பாளின் முன்பாக பணிவாக குனிந்து நின்று தன்னுடைய கையில் ஓடும் அந்த அதிர்ஷ்ட ரேகையை காண்பித்தான். பின்னர் சிவபெருமானையும், அம்பாளையும் அங்கேயே எழுந்தருளும்படி பணித்தான். ஈசனும் ஒப்புக்கொண்டார். அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்த ஈசன், 'விஜயநாதேஸ்வரர்' என்றும், இந்த திருத்தலம் 'திருவிஜயமங்கை' என்றும் பெயர் பெற்றது.
சோழர் காலத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த ஆலயத்தின் மூலஸ்தான கோபுரம் பெரியதாகவும், நுழைவு கோபுரம் சிறியதாகவும் அமைந்துள்ளது. இத்தல அம்பாள் நான்கு கரங்களுடன் காட்சி தரு கிறாள். முன் இரண்டு கரங்களில் அபய, வரத முத்திரையும், பின் இரண்டு கரங்களில் அட்சரமாலை, நீலோத்பவ மலர் தாங்கியிருக்கிறாள். கோவிலுக்கு எதிரில் வெளியே அர்ஜுன தீர்த்தம் உள்ளது. பிரகாரத்தில் அனுக்கை விநாயகர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், சூரியன், நால்வர் திருமேனிகள் உள்ளன. சிவன் சன்னிதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.
கருவறையில் உள்ள மூலவர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் மீது, அம்பு பட்ட தடம் உள்ளது. ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். செயல்களில் வெற்றி பெற, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜயநாதரை வழிபட்டு வரலாம். திருமணத்தடை உள்ளவர்களும் வழிபாடு செய்யலாம். இந்த ஆலயத்தில் திருக்கார்த்திகை, சிவராத்திரி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் சென்று, அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் பயணித்தால் திருவிஜயமங்கை திருத்தலத்தில் கொள்ளிட ஆற்றின் கரையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலும், திருப்புறம்பியத்தில் இருந்து 8 கிேலாமீட்டர் தூரத்திலும் ஆலயத்தை அடையலாம்.






