என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்த்தனகிரி"

    • ஒரு நாள் சிவபெருமான் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணினார்.
    • கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது.

    கடலூர் மாவட்டம் திருத்தினைநகர் எனும் ஊரில் அமைந்துள்ளது சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் திருத்தலமாகும். இத்தல இறைவன் சிவக்கொழுந்தீஸ்வரர் என்றும், இறைவி ஒப்பிலாநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

    தல வரலாறு

    முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மிகுந்த சிவ பக்தி கொண்ட ஒரு விவசாயத் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள், தினமும் சிவபக்தர் ஒருவருக்காவது உணவளித்து விட்டு, அதன்பின்புதான் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு நாள் சிவபெருமான் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணினார். அதன்படி, எந்த சிவ பக்தரையும் அவரது வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார்.

    இதனால் மிகவும் மனம் வருந்திய விவசாயி, தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றார். ஆனால் அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, அந்த வழியாக முதியவர் ஒருவர் வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

    அதற்கு முதியவர் அவரிடம், ''நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது ஒரு வேலை கொடு. அதற்கு கூலியாக வேண்டுமானால் நான் சாப்பிடுகிறேன்'' என்றார். இதற்கு விவசாயியும் ஒப்புக்கொண்டார். அதன்படி, தன் தோட்டத்தை உழும்படி கூறினார், விவசாயி. முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர்.

    அப்போது, தோட்டத்தில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர்கள் முற்றி, அறுவடைக்கு தயார் நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது. இந்த அற்புதக் காட்சியைப் பார்த்த விவசாயி அதிசயித்து போனார். பின்பு சந்தேகத்துடன் அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் முதியவருக்கு சாதம் பரிமாறினார். முதியவரும் மகிழ்ச்சியுடன் விவசாயி அளித்த உணவை சாப்பிட்டார்.

    பின்பு அவரிடம், ''ஒரே நாளில் எப்படி பயிர் விளைந்தது?'' எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். முதியவர் சிரித்தபடி, சிவனாக சுயரூபம் காட்டி, அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, சிவலிங்கமாக எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால், இத்தலத்துக்கு 'தினைநகர்' என்ற பெயர் வந்தது. அதுவே தற்போது, 'தீர்த்தனகிரி' என்று அழைக்கப்படுகிறது. வயலில் இறங்கி வேலை செய்ததால் இத்தல சிவபெருமானுக்கு 'விவசாயி' என்ற பெயரும் உண்டு.

    மகரிஷி ஒருவர் முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்றார். அவர் இத்தலம் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இத்தலத்தில் உள்ள தீர்த்தம் 'ஜாம்புவதடாகம்' என்று அழைக்கப்படுகிறது.

     

    கோவில் தோற்றம்

    கோவில் அமைப்பு

    கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. கோபுர வாசலுக்கு முன்பாக கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை காணலாம். இத்தலத்தில் சிவபெருமான், சுயம்பு லிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். அவர் நிலத்தை உழ பயன்படுத்திய ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலம் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. கோவில் வெளிப்பிரகாரத்தின் வலதுபுறத்தில் ஒப்பிலாநாயகி அன்னை தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

    ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் மனைவியுடன் காட்சி தருகிறார். விநாயகர் புடைப்பு சிற்பமாக காணப்படுகிறார். அவரை நான்கு பூதகணங்கள் வணங்கியபடி உள்ளனர். விஷ்ணு, துர்க்கைக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. சுப்பிரமணியர், நால்வர், வீரசேன மன்னன் ஆகியோரது சன்னிதிகளும் உள்ளன. கோவில் தல விருட்சமாக கொன்றை மரம் விளங்குகிறது. கோஷ்ட மூர்த்திகளாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர்.

    திருவிழா

    ஆலயத்தில் வைகாசி மாதம் 13 நாள் பிரம்மோற்சவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், பிரதோஷம், நவராத்திரி, ஆருத்ரா தரிசனம் ஆகியவை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதம் 20-ந் தேதியில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. இதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள சிவனுக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் சாத்தியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துக்கின்றனர்.

    கோவில், காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கடலூரில் இருந்து புவனகிரி செல்லும் சாலையில் சென்றால் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் வரும். அங்கிருந்து உள்ளே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    • இவ்வூர் `தீர்த்தனகிரி’ என்று வழங்கப்படுகின்றது.
    • `சிவ ரகசியம்’ என்னும் நூலில் இத்தல மகிமைகள் விவரிக்கப்பட்டுள்ளது.

    கோவில் தோற்றம்

    உலகில் எங்கும் காணாத அதிசய கோவில் ஒன்று உண்டெனில், அது கடலூர் அருகே உள்ள திருத்தினை நகரில் உள்ள சிவக் கொழுந்தீஸ்வரர் ஆலயமே எனலாம். ஆம்... கடந்த மூன்று யுகங்களில்.... நான்கு கோபுரங்கள், மூன்று பெரும் பிரகாரங்களைக்கொண்டு, சுமார் ஐந்து குரோச (12¼ மைல்) சுற்றளவு கொண்ட மிக பிரமாண்டமான கோவிலாக இருந்துள்ளது.

    இத்திருத்தலம் கிருதயுகம் மற்றும் திரேதாயுகத்தில் `ஓம்காரபுரம்' என்றும், துவாபரயுகத்தில் `தேசப்பிரதம்' என்றும், கலியுகத்தின் தொடக்கத்தில் `ஞானப்பிரதம்' என்றும் அழைக்கப்பட்டு, தற்போது `திருத்தினை நகர்' என்று போற்றப்படுகின்றது. வழக்கில் இவ்வூர் `தீர்த்தனகிரி' என்று வழங்கப்படுகின்றது.

    `சிவ ரகசியம்' என்னும் நூலில் இத்தல மகிமைகள் விவரிக்கப்பட்டுள்ளது. இத்தலத்தின் மகிமையை பற்றி அகத்தியருக்கு முருகப்பெருமான் உபதேசித்துள்ளார். இத்தல ஈசனை வணங்கியே முராசுரன் என்ற அசுரனை திருமால் வதம் செய்தார். அதன் மூலம் திருமாலுக்கு `முராரி' என்ற பெயர் வந்தது. துர்வாச முனிவரால் சாபம் பெற்ற பிருங்கி மகரிஷி, இத்தலம் வந்து ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார். கருடன் இப்பெருமானை பூஜித்து, பலம் பெற்று, தன் தாயின் அடிமை தளையை தகர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

    ராவணனை வெல்வதற்கு ராமருக்கு உதவியாக இருந்ததுடன், ராமரின் பட்டாபிஷேகத்தையும் கண்டுகளித்த ஜாம்பவான், இத்திருத்தலத்தில் உள்ள ஈசனை வெகு காலம் பூஜித்து, பூரண ஆயுளும், ஞானமும் பெற்றிருக்கிறார். கந்தன், உமாதேவி, நந்திதேவர், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட சிவலிங்கம், இத்தல மூலவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பதஞ்சலி - வியாக்ரபாதரின் கோரிக்கைக்கு இணங்கிய இத்தலப் பெருமான், திருநடனக் காட்சியை இங்கு காட்டிய பின்னரே தில்லையில் காட்டியதாகவும் தல வரலாறு சொல்கிறது. அகத்தியருக்கு, தன்னுடைய திருமணக் காட்சியை இந்த திருத்தலத்திலும் ஈசன் காட்டியருளி இருக்கிறார்.

    பெரியான் என்னும் ஏழை விவசாயியின் பேரன்புக்கு பணிந்த சிவபெருமான், அந்த விவசாயி படைத்த தினையமுதை உண்டு, அவருக்கு மோட்சம் அளித்துள்ளார்.

    ஒரு சமயம் வங்கதேசத்து அரசனான வீரசேனன், இத்தலத்திற்கு வந்தபோது தோல் நோய் பிடித்திருந்த நாய் ஒன்று, இத்தல தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கி நல்ல நிலையுடன் திரும்பியதைக் கண்டான். இதனால் ஆச்சரியம் அடைந்த அந்த மன்னன், தன்னுடைய காவலாளிகளை கொண்டு குளத்தை தூர் வாரினான். அப்போது கிடைக்கப்பெற்ற நடராஜரை, இந்த தலத்திலேயே நிறுவினான். அப்போது வீரசேனனுக்கு ஒரு அசரீரி ஒலித்தது. `நான் இங்கு சுயம்புவாக எழுந்தருளி பல காலம் ஆகிவிட்டது.

    எனவே எனக்கு இங்கே ஒரு ஆலயம் எழுப்பு' என்றது அந்தக் குரல். அதன்படியே சிவபெருமானுக்கு ஆலயத்தை எழுப்பினான், மன்னன் வீரசேனன்.

    நடுநாட்டின் தேவார திருத்தலங்களில் 22-வது தலமாக இத்தலம் திகழ்கிறது. அதோடு, திருஞானசம்பந்தர், அப்பர், சேக்கிழார், பட்டினத்தார் ஆகியோரும் இத்தல இறைவனைப் பற்றி பாடியுள்ளனர். இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் 26, 27, 28 தேதிகளில் சூரிய ஒளிக்கதிர்கள் படரும் அதிசயம் நிகழ்கிறது.

    ஆலய ராஜகோபுரத்திற்கு வெளியே, அன்னை கருந்தடங்கண்ணி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். இந்த அன்னைக்கு நீலாயதாட்சி, பிரணவபுரீஸ்வரி, ஒப்பிலாநாயகி ஆகிய பெயர்களும் உண்டு. விசாலமான ராஜகோபுரம். அதை கடந்து உள்ளே சென்றால், கிழக்கு நோக்கிய சுவாமி சன்னிதி உள்ளது. அதனுள் 4 யுகங்களாக அருள்புரிந்து வருகிறார், சிவக்கொழுந்தீஸ்வரர். இவர் சிவாங்குரேஸ்வரர், நந்தீஸ்வரர், பிரணவபுரீஸ்வரர் போன்ற பெயர்களாலும் போற்றப்படுகிறார்.

    உற்சவமூர்த்தியான நடராஜர் திருவடியின் கீழ் பிரம்மா பஞ்சமுக வாத்தியமும், திருமால் பஞ்சசானிய சங்கும் முழங்குகின்றனர். இந்த அபூர்வ கோலத்தை இங்கு மட்டுமே காண முடியும். யோகாசனம் இட்டு அமர்ந்திருக்கும் அதிசயமான தட்சிணாமூர்த்தியை இங்கு தரிசனம் செய்யலாம். தல வரலாற்று புடைப்புச் சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன.

    துர்க்கை அஷ்டபுஜங்களுடன் நின்ற கோலத்தில் பேரருள் புரிகிறார். ஜாம்பவானால் ஏற்படுத்தப்பட்ட ஜாம்பவான் தீர்த்தம், ஆலயத்திற்கு இடப்புறம் அமைந்துள்ளது. அதோடு அம்பிகை உண்டாக்கிய கவுரி தீர்த்தம், கருடன் ஏற்படுத்திய பெருமாள் ஏரி, தேவதீர்த்தம் என்னும் கடல் போன்றவையும் இத்தல தீர்த்தங்களாக விளங்குகின்றன.

    தினமும் ஒரு பூ பூக்கும் - காய் காய்க்கும் சரக்கொன்றை மரம், இவ்வாலயத்தின் தல விருட்சமாக திகழ்கிறது. கல்வெட்டில் இவ்வூர் `விருதராச பயங்கர வளநாட்டு மேற்கானாட்டு ஜெயங்கொண்ட சதுர்வேதிமங்கலத்து திருத்தினை நகர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடைசியாக 1949 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் இவ்வாலயத்தில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தினமும் இரண்டு கால பூஜைகள் நடக்கும் இவ்வாலயத்தில், வைகாசி விசாகத்தில் தேர்த்திருவிழாவும், அனுஷத்தில் ஜாம்பவான் தீர்த்தத்தில் தீர்த்தவாரியும், மாசி மகத்தில் தேவதீர்த்தம் என்னும் கடலில் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றது.

    இவ்வாலய இறைவனுக்கு தினையமுது படைத்து வழிபடுபவர்களின், தீராத வினைகளையும், நோய்களையும் இத்தல ஈசன் தீர்த்தருள்கிறார்.

    அமைவிடம்

    கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில், ஆலப்பாக்கம்- புதுச்சத்திரம் இடையே உள்ளது மேட்டுப்பாளையம். இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, தீர்த்தனகிரி. கடலூர் மற்றும் சிதம்பரத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

    ×