search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodanad robbery"

    கொடநாடு விவகாரம் குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகிய இருவரும் பேச கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. #MadrasHC #EdappadiPalaniswami #MKStalin
    சென்னை:

    இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.  கடந்த 11-ந்தேதி 91 பாராளுமன்ற தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் வருகிற 18-ந்தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற உள்ளது.  இதில் தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்கு பதிவு நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.  ஒவ்வொரு கட்சியின் தலைவரும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த தேர்தல் பிரசாரத்தில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.


    வழக்கை விசாரித்த நீதிமன்றம், மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க. ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.

    இந்த தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதன்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.  இதில், கொடநாடு விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகிய இருவரும் பேசக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்து இந்த மனு முடித்து வைக்கப்பட்டு உள்ளது.  இந்த தடையை மீறி பேசினால் நீதித்துறையில் தலையிடுவதாக கருதப்படும் என தெரிவித்து உள்ளது. #MadrasHC #EdappadiPalaniswami #MKStalin

    கொடநாடு விவகாரத்தியில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சிக்க வைக்க தி.மு.க. நடத்திய சதி அம்பலமாகியுள்ளதாக வைகைசெல்வன் தெரிவித்துள்ளார். #EdappdiPalaniswami #KodanadEstate
    சென்னை:

    அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும், துணை முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ். மீதும் களங்கம் சுமத்தும் நோக்கில், தி.மு.க.வின் அரசியல் பின்னணியோடு, கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில், தெகல்கா பத்திரிகை திட்டமிட்டு உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டது.

    தற்போது, அந்த கும்பல் வெட்கித் தலை குனியும் வகையில், கொடநாடு குற்றவழக்கில் சம்மந்தப்பட்ட இரு குற்றவாளிகளின் சதித்திட்டத்தோடு அரங்கேற்றிய உரையாடல்கள் அடங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளி வந்துள்ளன.



    நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.வின் மீது களங்கம் சுமத்தும், தி.மு.க.வின் கபட நாடகங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

    கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட இரண்டு கிரிமினல் குற்றவாளிகளும், கேரளாவில் உள்ள ஒருவரை சந்தித்து தாங்கள் தப்பிப்பதற்கு வழி சொல்ல வேண்டும் என உதவி கேட்பதும், அதற்கு அந்த நபர், இருவரிடமும், தமிழக முதல்வருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறினால் மட்டுமே, உங்களை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க முடியும் என ஆலோசனை சொல்கிற விதமாக, வீடியோ பதிவுகள் வெளியாகி இருப்பது, தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க.வின் அதிகாரமும், வன்முறையும் எல்லை கடந்து போனதால்தானே நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் மக்கள் தூக்கியெறிந்து விட்ட நிலையில், எதிரிகளும், துரோகிகளும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, கழக அரசை கவிழ்த்தி விடத் துடிக்கும் தி.மு.க.வின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது.

    கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில், தெகல்கா பத்திரிகையாளரைப் பயன்படுத்தி உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு, தூத்துக்குடி, பொள்ளாச்சி சம்பவங்களுக்கும், ஆளுகின்ற அ.தி.மு.க அரசே காரணம் என பழி சுமத்தி, ஆட்சியை கவிழ்த்து விடத் துடிக்கிறார்கள்.

    ஆயிரம் பொய் சொல்லி, அ.தி.மு.க அரசை கவிழ்க்க முடியாது. உண்மைகள் ஒரு போதும் தூங்குவதுமில்லை, பொய்கள் ஒரு போதும் வாழ்ந்ததுமில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #EdappdiPalaniswami #KodanadEstate #VaigaiChelvan
    கொடநாடு கொள்ளை வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். #Kodanadissue #Sayan #Manoj

    ஊட்டி:

    கொடநாடு பங்களாவுக்குள் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி புகுந்த கொள்ளை கும்பல் காவலாளியை கொலை செய்து விட்டு, பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

    இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் இறந்தார். கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூசாமுவேல் முன்னிலையில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது கொள்ளை வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் பற்றி அவதூறு பரப்பியாக சயான், வாளையார் மனோஜ் ஆகிய இருவரையும் டெல்லியில் கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஆனால் அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்து விட்டார்.

    இந்நிலையில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என ஊட்டியை சேர்ந்த அரசு வக்கீல் பாலநந்தகுமார் ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 2-ந் தேதி நடந்தது.

    அப்போது அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டு தலைமை அரசு வக்கீல் நடராஜ் ஆஜரானார். சயான் மற்றும் வாளையார் மனோஜ் சார்பில் வக்கீல் பிரபாகரன் ஆஜரானார். சுமார் 5 மணி நேரம் இரு தரப்பினரும் நீதிபதி முன் காரசாரமாக வாதாடினர். அதன்பின் 8-ந் தேதி இந்த வழக்கு தொடர்பாக உத்தரவு வெளியிடப்படும் என நீதிபதி வடமலை தெரிவித்தார்.

    நேற்று சயான், வாளையார் மனோஜ், திபு, பிஜின் ஆகிய 4 பேர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. மனோஜ்சாமி, ஜித்தின் ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி ஆகிய 6 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்வதாகவும், கோர்ட்டில் ஆஜராகாத பிஜின், திபு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி கூறினார். மேலும் சயான், வாளையார் மனோஜ், பிஜின், திபு ஆகிய 4 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தும் உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த வழக்கு வருகிற 18-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து சயான், வாளையார் மனோஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    முதல்-அமைச்சர் குறித்து செய்தி வெளியிட மேத்யூ சாமுவேலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MathewSamuel #MadrasHC #Kodanadissue
    சென்னை:

    கொடநாடு கொலை- கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ‘தமிழக முதல்-அமைச்சராக கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி பதவி ஏற்றேன். என்னுடைய கடினமான உழைப்பினால், அரசு எந்திரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு அரசியல்வாதியாக எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்றி வருகிறேன்.

    இந்த நிலையில், வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தலும், 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த அவதூறு தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பேட்டியை கடந்த 11-ந்தேதி ‘யூடியூப்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் என்னை சம்பந்தப்படுத்தி அவர்கள் அளித்த பேட்டியை நாரதா நியூஸ் என்ற ஆன்லைன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.



    தேர்தல் நெருங்கும் நேரத்தில், அவதூறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எனக்கு எதிராக சுமத்தப்படுகிறது. எனவே, என்னை பற்றி அவதூறான செய்தி வெளியிடவும், பேட்டிக் கொடுக்கவும் நாரதா நியூஸ் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்பட 7 பேருக்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை கடந்த 23-ந்தேதி விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், முதல்அமைச்சர் குறித்து அவதூறு செய்தி வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேத்யூ சாமுவேலுக்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று காலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் நோட்டீசு மேத்யூ சாமுவேலுக்கு சென்றடையவில்லை என்று கூறப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை முதல்அமைச்சர் குறித்து செய்தி வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார். #MathewSamuel #MadrasHC #Kodanadissue
    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட ‌சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் இருவரும் இன்று ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். #Kodanadissue #Sayan #Manoj
    கோவை:

    நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட ‌சயான், மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

    அவர்களின் ஜாமீனை ரத்து செய்யகோரி அரசு சார்பில் கடந்த 16-ந்தேதி அரசு வக்கீல் நந்தகுமார் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி வடமலை விசாரித்து ‌சயான், மனோஜ் ஆகியோர் 24 -ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கூறி சம்மன் அனுப்பினார்.

    ஆனால் கடந்த 24-ந்தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வரவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல் செந்தில்குமார் மனு தாக்கல் செய்தார். அதில் ‌சயான், மனோஜ் ஆகியோர் ஆஜராக போதிய அவகாசம் கிடைக்காததால் ஆஜராக முடியவில்லை.

    எனவே அவகாசம் நீடித்து தர வேண்டும் என்று கூறினார். அதன் படி அவர்களின் கால அவசாகத்தை இன்று (29-ந்தேதி) வரை நீதிபதி வடமலை நீடித்தார்.

    இதற்கிடையே இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ‌சயான்,மனோஜ் ஆகியோர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஏற்கனவே 20 முறைக்கு மேல் இந்த வழக்கிற்காக நேரில் ஆஜராகி உள்ளதால் ஊட்டி கோர்ட்டு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதனை ஏற்க மறுத்த ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த வேங்கடேசன் விசாரணைக்கு அழைக்கும் போது நேரில் ஆஜராவதாக கூறி ஜாமீன் பெற்றதை சுட்டிக்காட்டி கோரிக்கையை விசாரணை நீதிமன்றத்தின் முன் வைக்குமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதனை தொடர்ந்து மனுவை நேற்று திரும்ப பெற்றுக் கொண்டு ‌சயான், மனோஜ் இருவரும் இன்று ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

    அவர்களை வருகிற 2-ந்தேதி ஆஜராகும் படி நீதிபதி வடமலை உத்தரவிட்டார். அன்று கொடநாடு கொலை , கொள்ளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. #Kodanadissue #Sayan #Manoj
    கொடநாடு கொலை, கொள்ளை குறித்து சர்ச்சை வீடியோ வெளியிட்ட மேத்யூ சாமுவேல் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #MathewSamuel #MadrasHC #Kodanadissue
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்த காவலாளி கொலை, அதில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் மரணம் ஆகியவை குறித்து நாரதா நியூஸ் என்ற ஆன்-லைன் செய்தி நிறுவனம், கடந்த 11-ந்தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.

    இதையடுத்து அந்த செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அதில், இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ) (மதம், மொழி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் இருபிரிவினரிடையே பகையை, மோதலை ஏற்படுத்துதல்), 505(1), (2) (ஆவணங்களை வெளியிட்டு, அரசுக்கு எதிராக பொதுமக்களை கலவரத்தில் ஈடுபடச் செய்தல்) 120(பி) (கூட்டுச்சதி) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.


    இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில், மேத்யூ சாமுவேல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் ஏ.நடராஜன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பதா? வேண்டாமா? என்பது குறித்து தீர்ப்பு அளிப்பதாக கூறி நீதிபதி வழக்கை தள்ளிவைத்தார். இந்த நிலையில், இந்த தீர்ப்பை இன்று காலையில் நீதிபதி ஏ.ஆனந்தவெங்கடேஷ் பிறப்பித்தார்.

    அதில், ‘தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன். மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கிற்கு ஒரு வாரத்துக்குள் சென்னை போலீஸ் கமி‌ஷனர் பதில் அளிக்க வேண்டும். அதுவரை, மேத்யூ மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கிறேன்’ என்று நீதிபதி கூறியுள்ளார். #MathewSamuel #MadrasHC #Kodanadissue
    ஜனவரி 29-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற உதகை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சயான், மனோஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். #KodanadEsate #MadrasHC
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த பங்களாவுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் காவலாளியை கொலை செய்து விட்டு கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ‌சயான், மனோஜ் உள்பட பலரை கைது செய்தனர்.

    தற்போது ‌சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இவர்களுக்கு அடுத்த மாதம் 2-ந்தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவர்கள் 2 பேரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால் இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரி ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வக்கீல் பால நந்தகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, ‌சயான் தரப்பு நேற்று ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து ‌சயான், மனோஜ் தரப்பில் ஆஜரான வக்கீல் செந்தில் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார்.


    இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை வருகிற 29-ந்தேதி ‌சயான், மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

    இந்நிலையில் ஜனவரி 29-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற உதகை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சயான், மனோஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். அப்போது நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் வரும் 28-ந்தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர். #KodanadEsate
    கொடநாடு வீடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #SC #KodanadEstate #CBI
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். பின்னர் 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து பல முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றனர்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து, ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.

    இவர்கள் விபத்தில் இறந்ததாக சொன்னாலும், அது சந்தேகத்துக்கு இடமான ஒன்றாகவே இருந்தது. மேலும் சம்பவம் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கடந்த வாரம் தெகல்கா இணைய தள முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.


    அதில் மேற்கண்ட சம்பவங்கள் அனைத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். இதே போல் வழக்கில் 2-வது குற்றவாளியான சயான் மற்றும் மனோஜ் ஆகியோரும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அனைத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் நடந்தது என தெரிவித்துள்ளனர்.

    எனவே, இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் எதுவும் இல்லை. அவர் பத்திரிகை மற்றும் டி.வி.சேனல்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று முடிவு செய்கிறோம். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர். #SC #KodanadEstate #CBI
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால் 2 பேரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் வருகிற 29-ந் தேதி ‌ஷயான், மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
    ஊட்டி:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு இந்த பங்களாவுக்குள் நுழைந்த மர்மநபர்கள் காவலாளியை கொலை செய்து விட்டு கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ‌சயான், மனோஜ் உள்பட பலரை கைது செய்தனர்.

    தற்போது ‌சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இவர்களுக்கு அடுத்த மாதம் 2-ந் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இவர்கள் 2 பேரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால் இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரி ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வக்கீல் பால நந்தகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, ‌சயான் தரப்பு இன்று ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

    இதனையடுத்து ‌சயான், மனோஜ் தரப்பில் ஆஜரான வக்கீல் செந்தில் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

    இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை வருகிற 29-ந் தேதி ‌ஷயான், மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். #KodanadEsate
    சிலை கடத்தல் வழக்கை போல் கொடநாடு விவகாரத்திலும் தனிக்குழு அமைத்து விசாரணை வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #KodanadEstate

    திருவாரூர்:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலை காரணம் காட்டி திருவாரூர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. எப்போது தேர்தல் நடந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமோக வெற்றி பெறும்.

    திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்த விவகாரத்தில் ஆளுங்கட்சியும், எதிர் கட்சியும் இணைந்து செயல்பட்டுள்ளது.

    தி.மு.க. எம்.எல்.ஏ.கள் அ.தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்துள்ளனர். கூட்டுறவு தேர்தலின் போது 60க்கு 40 என்ற சதவீதத்தில் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டு தேர்தலை நடத்தினர்.

    கொடநாடு கொலை விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும். கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு விவரங்களை கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேர் இறந்துள்ளனர். இந்த இறப்பில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து முதல்வர் பெயர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தமிழக முதல்வருக்கு பயம், பதட்டம் உள்ளது தெரிகிறது. கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் தமிழக காவல்துறையினர் கைது செய்து வந்தவர்களை நீதிபதி சிறைக்கு அனுப்ப மறுத்துள்ளது முதல்வருக்கு மிகப்பெரிய பின்னடைவு.

    உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி மூலம் முதல்வர் மீதான வழக்கை, எப்படி பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் பிரிவு கண்காணிப்பது போன்று கண்காணிக்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளுடன் மற்றும் இட பகிர்வு குறித்து கூறப்படும். கட்சிகளின் பெயர்கள், கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்தவுடன் தெரிவிக்கப்படும். கூட்டணிகள் அமையாவிட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2014-ல் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது போல் போட்டியிட்டு வெற்றி பெறும்.

    தேசிய கட்சிகள் தமிழ்நாட்டின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. இதனால் பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை.

    எனவே தேசிய கட்சிகளுக்கு பதிலாக மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் உடனிருந்தார். #TTVDhinakaran #KodanadEstate

    கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார். #ThangaTamilSelvan #EdappadiPalaniswami #KodanadEstate

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    அந்த சம்பவம் முதல்வர் பழனிச்சாமி ஏற்பாட்டில்தான் நடந்ததா? என்பது விசாரணையில்தான் தெரிய வரும். முதல்வர் மீது பழி சுமத்தப்பட்டிருப்பதால் அவர் தனது பதவியை விட்டு விலகி வேறு ஒருவரிடம் தற்காலிகமாக ஒப்படைக்க வேண்டும். தான் நிரபராதி என நிரூபித்தபின் மீண்டும் முதல்வர் பதவிக்கு வரலாம். இதை அவர் செய்வாரா? என்பது தெரிய வில்லை.


    இந்த சம்பவத்தில் யார்? யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது விசாரணைக்கு பின்னரே தெரிய வரும். தனி நீதிபதி மூலமாகவோ, சி.பி.ஐ. மூலமாகவோ விசாரித்து அதன் உண்மைத்தன்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. 3 மாதத்தில் விசாரணை முடியும் என கூறிய நிலையில் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இழுத்துக்கொண்டே செல்வது ஏன்? அப்படி என்றால் இந்த விசாரணை கமி‌ஷன் இன்னும் எத்தனை ஆண்டுக்குள் இதனை முடிக்கும் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினர். #ThangaTamilSelvan #EdappadiPalaniswami #KodanadEstate

    கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கைதுசெய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #KodanadEstate #KodanadVideo

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

    10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து கொள்ளை சம்பவத்தையும் அரங்கேற்றினர்.

    ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் யாருமே நெருங்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்புடன் காணப்பட்ட கொடநாடு எஸ்டேட்டில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவரது தூண்டுதலின் பேரிலேயே கொலை-கொள்ளையில் ஈடுபட்டதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

    முக்கிய ஆவணங்களை கனகராஜ் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அவர் மர்மமான முறையில் கார் விபத்தில் பலியானார்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் கைதான கேரளாவை சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் ‌சயனின் மனைவி, மகள் ஆகியோரும் விபத்தில் பலியானார்கள். ‌ஷயான் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்படி 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொடநாடு சம்பவம் தொடர்பாக ‌சயன், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைதானார்கள்.

    இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. இது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    கடந்த 11-ந்தேதி தெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல், கொடநாடு வழக்கின் குற்றவாளியான ‌சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர்.

    அப்போது கொடநாடு கொலை தொடர்பாக பரபரப்பான வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். தன் மீதான இந்த குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியான ராஜன் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், ‌சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமி‌ஷனர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர்.


    அங்கு தனியார் விடுதியில் தங்கி இருந்த ‌சயன், மனோஜ் இருவரையும் நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    இரவோடு இரவாக இருவரையும் சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை 4.15 மணியளவில் சென்னை வந்த விமானத்தில் ‌சயன், மனோஜ் ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

    விமான நிலையத்தில் இருந்து 5 மணியளவில் வெளியில் வந்த போலீசார் அங்கு தயாராக இருந்த போலீஸ் வேனில் 2 பேரையும் ஏற்றி எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில், இப்போது புதிதாக குற்றச்சாட்டை கூறி இருப்பது ஏன்? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது போன்ற கேள்விகளை கேட்டு 2 பேரிடமும் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தெகல்கா முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல் உங்களை தொடர்பு கொண்டது எப்படி? கொடநாடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இப்போது முதல்வர் மீது புகார் கூறுவது ஏன்? என்பது போன்ற கேள்விகளையும் போலீசார் முன் வைத்துள்ளனர்.

    இதற்கு ‌சயன், மனோஜ் ஆகியோரும் விரிவாக பதில் அளித்துள்ளனர். ‌ஷயான் கூறும்போது, எனது மனைவியும், மகளையும் விபத்தில் பலி கொடுத்துவிட்டேன். இனி இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை என்று பேட்டியில் கூறிய கருத்துக்களையே போலீசாரிடம் கூறி இருப்பதாக தெரிகிறது.

    இவர்கள் அளித்த தகவல்களை போலீசார் வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர்.

    சயன், மனோஜ் இருவரையும் எழும்பூரில் உள்ள மாஜிஸ்திரேட்டு குடியிருப்பில் நீதிபதி முன்பு இன்று போலீசார் ஆஜர் படுத்துகின்றனர். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

    சயன், மனோஜ் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வரும் எழும்பூர் பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்கள் யாரும் அனு மதிக்கப்படவில்லை. நுழைவாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாரை தவிர வெளியாட்கள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #KodanadEstate #KodanadVideo

    ×