search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abuse"

    பெண்கள் குரல் எங்கும் ஒலிக்க வேண்டும் என்பதை விட அவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் கேட்கப்பட வேண்டும், தீர்க்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை கோரிக்கை.
    ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்ற காலம் மாறி இன்று ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் நிலை வந்துவிட்டது. இந்திய ராணுவத்தில் “காம்பட்” எனப்படும் போர்களத்தில் சண்டையிடும் பணிகளில் மகளிர் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக சேவை செய்கின்றனர். சி.ஆர்.பி. போன்ற துணை ராணுவ பிரிவுகளில் பெண்கள் பட்டாலியன் அணியில் முழுக்க பெண்களே பணி புரிகின்றனர். போர் விமான பிரிவிலும் பெண்கள் பைலட்டுகளாக பயிற்சி பெற்று வீர தீரத்தில் ஆண்களுக்கு நாங்களும் நிகர் என்று நிரூபித்துள்ளனர். காவல் துறையிலும் இதர அரசு பணிகளில் அதிகமாக பெண்கள் பங்குகொள்வது வரவேற்க வேண்டிய மாற்றம். அரசு பணிகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்த முதல் மாநிலம் தமிழ்நாடு.

    தேர்தல் பணியில் பெண் அதிகாரிகள் நடத்தும் வாகன சோதனையில் அதிகம் பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. 2011-ம் ஆண்டு தேர்தலின் போது ஒரு பெண் வருவாய்த்துறை அதிகாரி நடத்திய சோதனையில் ஐந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது மறக்க முடியாது. இப்போதுள்ள இளம் சேலம் மாவட்ட கலெக்டர் துணிச்சலோடும், பொறுப்புணர்ச்சியோடும் செயல்பட்டு மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்பது உண்மையாகிறது.

    துணிச்சலோடு செயல்படுவதற்கு உறுதுணையாக இருப்பது கல்வி. அதிலும் பெண்களுக்கு கல்வி கொடுப்பது ஒரு குடும்பத்திற்கு விளக்கேற்றியது போல், அதன் பலனால் ஒரு தலைமுறை முன்னுக்கு வரும். குழந்தைகளை தாயுள்ளத்தோடு வழிநடத்தும் பல பெண் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மயிலை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளியில் ஆசிரியைகள் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு ஊக்கம் அளித்து மற்ற குழந்தைகளுக்கு இணையாக திறமையை வளர்த்து அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் காந்தாடு பஞ்சாயத்து யூனியன் அரசு தொடக்கப்பள்ளியின் ஆங்கில ஆசிரியை அபர்ணா மோஹன் தனது சொந்த பணம் செலவு செய்து பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தி குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேசவும், சரியாக உச்சரிக்க பயிற்சியும் அளித்துவருகிறார். மேலும் ரூ.7 லட்சம் கடன் பெற்று காணொலி மூலம் மாணவர்கள் பயில எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்கியுள்ளார். இவரது தன்னலமற்ற சேவை செய்தியாக வந்து பலர் இவரது முயற்சியை பாராட்டி பள்ளிக்கு பொருளுதவி அளித்துள்ளனர். வீரர்களுக்கு விசேஷ பயிற்சி அளித்து அகில இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் முத்திரை பதிக்க உதவி அளித்து வருகிறார். இத்தகைய கனவு ஆசிரியர்கள் உள்ளதால் தான் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

    உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர் குறியீட்டில் 47 சதவீதம் எட்டி தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. அரசு பணி போட்டி தேர்வுகளில் பெண்கள் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுகிறார்கள். பேனோ சபீன் என்ற பார்வை குறைவான மாற்றுத்திறனாளி தமிழ் பெண் அகில இந்திய அளவில் 2015-ம் ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ். போட்டி தேர்வில் வெற்றி பெற்று ஐ.எப்.எஸ். அதிகாரியாக பணிபுரிகிறார். இத்தகைய முன்னேற்றத்திற்கு நடுவே மனதை உறுத்தும் நடப்புகள் வேதனை அளிக்கின்றன. ஒரு வருடத்திற்கு சுமார் ஒரு கோடி பெண் சிசுக்கள் இந்தியாவில் கொல்லப்படுகின்றன.

    பெண் சிசு வதையால் முளைக்கும் பிரச்சினைகள் இவை. பஞ்சாப் மாநிலத்தில் ஒரு உண்மை நிகழ்வு. விவசாய குடும்பத்தை சேர்ந்த கணவன்-மனைவிக்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பெண்ணுக்கு திருமணம் செய்ய சொத்து முழுவதும் விற்றால் கூட போதாது. அத்தகைய அவல நிலை. அந்த பெண் மூன்றாவது முறை கர்ப்பமுற்றாள். அடுத்தது பெண் குழந்தை என்றால் பிறந்த வீட்டிலிருந்து திரும்ப வேண்டாம் என்று கணவன் கறாராக கூறிவிட்டான். ஆனால் பிறந்தது பெண்குழந்தை.

    அபலை பெண் செய்வதறியாது தவித்தாள். அவளது சகோதரன் கணவனிடம் பேசி மனைவியை ஏற்றுக்கொள் மூன்றாவது குழந்தை இருக்காது என்ற உத்திரவாதம் அளித்தான், அப்படியாவது தங்கைக்கு வாழ்வு கிடைக்கும் என்ற ஆசையோடு! ஆனால் அவளுக்கோ உடன்பாடில்லை. வேண்டா வெறுப்பாக கணவன் வீட்டிற்கு சென்று மூன்றாவது கைக்குழந்தையை வெறும் உடம்போடு பனியில் உறையட்டும் என்று நெஞ்சை கல்லாக்கி வீட்டு வாசல் திறந்த வெளியில் போட்டுவிட்டு படுத்தாள்.

    குழந்தை இறந்திருப்பாள் என்று நெஞ்சம் பதப்பதைக்க மறுநாள் எழுந்து பார்த்தால் குழந்தை உடம்பு பனியில் ஜில்லிட்டிருந்தது, ஆனால் மூச்சு நிற்கவில்லை. பச்சிளம் குழந்தைக்கு உயிரோடு போராடும் சக்தியும் வைராக்கியமும் இருக்கும்போது நான் ஏன் மனம் கலங்க வேண்டும் என்று அந்த தாய் மூன்று பெண் குழந்தைகளையும் போராட்டத்தின் நடுவே ஆளாக்கி வெற்றி கண்டாள். இத்தகைய வெற்றி போராட்டங்கள் வெறு சிலவே.

    சோகங்கள் பல. தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தை மற்றும் பெண் குழந்தைகள் பராமரிப்பு போன்ற நடவடிக்கைகளால் வட மாநிலங்களில் உள்ள பிரச்சினைகள் இங்கில்லை. பெண்கள் குரல் எங்கும் ஒலிக்க வேண்டும் என்பதை விட அவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் கேட்கப்பட வேண்டும், தீர்க்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை கோரிக்கை. பெண்கள் பாதுகாப்பு பல மாநிலங்களில் நகரங்களில் சவாலாக உள்ளது.

    பாலியல் கொடுமைகள் குறையவில்லை. டெல்லி நிர்பயா மானபங்க கொடுமைக்கு பிறகு பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய நீதியரசர் வர்மா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு நல்ல பல பரிந்துரைகள் பெண்களுக்கு எதிரான வழக்குகள் துரிதப்படுத்தவும் பாதுகாப்பு பலப்படுத்தவும் அளிக்கப்பட்டன. நடைமுறைபடுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம். சென்னை பாதுகாப்பான நகரம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் முதலிடம் வகிக்கிறது என்பதில் பெருமை கொள்ளலாம்.

    இணையதளத்தில் வரும் ஆபாச படங்கள் கைபேசி புகைப்படங்கள் விரசமான தகவல் பரிமாற்றங்கள் காவல்துறைக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கு ஒரு சவால். பாலியல் கொடுமைகள் நிகழ்வதற்கு இவை காரணமாகின்றன. இயற்கை அழகு நிறைந்த பொள்ளாச்சியிலா இத்தகைய பாலியல் கொடுமைகள் என்று பதற வைக்கிறது. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே: அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் பெற்றோர் வளர்ப்பினிலே என்பது உண்மையாகிறது. ஆண் பிள்ளைகளை வளர்ப்பதில் மெத்தன போக்கு இதற்கு காரணம். சுதந்திரம் கட்டுக்கடங்காமல் போகக்கூடாது. அதற்கு ஒரு வரையறை உண்டு. அதை தாண்டவிடக்கூடாது. பெண் விடுதலை பெற்றாயிற்று ஆனால் அவள் சுதந்திரம் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு.

    நடராஜ் ஐ.பி.எஸ்.,

    சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர்.
    பெண்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் தங்களை மேம்படுத்திக் கொள்வது அவசியமானது. தங்களுக்கு சட்டப்படியுள்ள உரிமைகளையும், பாதுகாப்பையும் உணரும்போதும் அவர்கள் சமூகத்தின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியும்.
    21 -ம் நூற்றாண்டிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது வேதனை. இன்றைய காலக்கட்டத்தில் அவர்களை பாதுகாக்கும் வகையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அறியாமையாலும், அச்சத்தாலும் அவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    பெண்களுக்கு அநீதிகளும், கொடுமைகளும், எல்லா தரப்பிலும், எல்லா வயதினருக்கும் பாகுபாடின்றி சரளமாக இழைக்கப்படுகிறது. கருவிலே அழிப்பது, சிசுக்கொலை என தொடங்கி வாழ்நாள் இறுதிவரை கொடுமைகள்தொடர் கதையாக தொடர்கிறது.

    பள்ளிக்கூடம், கல்லூரி, வேலைப்பார்க்குமிடம், வழிப்பாட்டு தலங்கள், பஸ், ரெயில், என எல்லா இடங்களிலும் பெண்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. இதைத்தவிர ஆணவ கொலைகளையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. பெண்கள், மனிதர்களாக, அவர்களுக்கும், அறிவு, ஆற்றல் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளாது ஆண் சமூகம் அவர்களை இன்பம் துய்க்கும் பொருளாக மட்டுமே பார்ப்பது கொடுமையிலும் கொடுமை. குடும்ப சூழலை எடுத்துக்கொண்டாலும் பெண்கள் சுதந்திர மனப்பான்மையுடன் செயல்பட முடியாத நிலை தானே நிலவுகிறது.

    தாய் தந்தையர் கடும் சொற்களால் கண்டிப்பது, காயம் ஏற்படும்படி அடிப்பது, மன உளைச்சல் ஏற்படும்படி தண்டிப்பது என்று பல விதமான கொடுமைகளை சிறுவயதில் இருந்தே பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பத்து வயதில், பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது வகுப்பில் முதல் இடம் பெறவில்லை என்று அறையில் பூட்டிவைக்கப்பட்ட மாணவி, விலை உயர்ந்த பேனாவை தொலைத்து விட்டாள் என்பதற்காக வீட்டிற்கு வெளியே பல மணிநேரம் நிற்க வைக்கப்பட்ட சிறுமி என்பன போன்ற நிகழ்வுகளை அன்றாடம் நாம் காண்கிறோம்.

    பெண்கள் என்றால் கண்ணுக்கு அழகாக, லட்சணமாக இருக்கவேண்டும் என்கிற மூடக்கருத்து பல பெண்களின் வாழ்கையை சீரழிக்கிறது. கருப்பாக இருக்கிறாய், குண்டாக இருக்கிறாய் என்று விமர்சித்து அவர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாக்குதல் ஒருபுறம் என்றால்,.மறு புறம் உனக்கு பாடத் தெரியுமா ஆடத் தெரியுமா என்று கேட்டு அவர்களை கடையில் விற்கும் பொருள்கள் போல பார்க்கப்படுகிறது.

    சின்னஞ்சிறு சிறுமியர்களை பலநாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு கொள்ளும் கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. வேலை செய்யும் இடங்களில் உடன் பணியாற்றும் ஊழியர்கள், மேலதிகாரிகள் என பாலியல் தொடர்பான சித்திரவதைகள் தொடர்கின்றன. குழுக்களாக ஆண்கள், பெண்கள் கூடியிருக்கும்போது பாலியல் தொடர்பான நகைச்சுவைகள், சீண்டல்களை பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளன. தன் இச்சைக்கு இணங்காத பெண்ணின் மீது அமிலம் வீசி தாக்குதல், ஊர்திகளை கொண்டு ஏற்றி கொல்லுதல், பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி கொலைசெய்தல் என்ற பாதுகாப்பற்ற நிலையில் பெண்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

    திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை, ஓயாத வீட்டு வேலைகள், மனைவியின் விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொள்ளாது மேற்கொள்ளப்படும் உடலுறவுகள், கட்டாய கருச்சிதைவுகள் என தொடரும் சித்திரவதைகள் நாளுக்கு நாள் அரங்கேறி கொண்டே இருக்கின்றன.. இத்தகைய சூழலில், பெண்களுக்கு சட்டம் அளிக்கும் பாதுகாப்புகள் என்ன என்பதை அறிவோம்.

    பெண்கள் பாதுகாப்பு சட்ட விதிகள் 2005-ன் படி, குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் இரண்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள், 2018-ல், சுமார் 2,785 சச்சரவுகளை நீதிமன்றம் செல்லாமலேயே தீர்த்து வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு 5 பெண்களில், இரண்டு பெண்கள், கணவர்களால், வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1983-ல் இந்திய தண்டனை சட்டம் 498-ன் பிரிவின்படி கிரிமினல் குற்றமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் புகார்கள் கொடுக்க எல்லா பெண்களும் முன்வருவதில்லை. நிதி நிலைமை, குழந்தைகளின் எதிர்காலம், சமூகப் பார்வை போன்றவை புகார் அளிக்கத் தடைகளாக உள்ளன.

    வரதட்சணை தொல்லையால் பெண்களை தீக்கிரையாக்கும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடியது. வரதட்சணை தடுப்பு சட்டம் பெருமளவில் இத்தகைய குற்றங்களை குறைத்துவிட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலமாக, பெண்கள் தைரியமாக காவல்நிலையத்துக்கு தாங்களாவே சென்று முறையிட வாய்ப்பு அதிகரித்தது. இருந்தாலும், பல இடங்களில், விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், வன்கொடுமைகள் திரைமறைவில் அரங்கேறி வருகின்றன.

    வரதட்சணை தடுப்பு சட்டம் (1961), பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (2013), கடத்தல் தடுப்பு சட்டம் (1986), சதி தடுப்பு சட்டம் (1987), பெண்களை அநாகரிகமாக சித்தரித்தல் (தடுப்பு) சட்டம் (1986), குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் (2005), என்று பெண்களுக்காக சட்டங்கள் உள்ளன. இது தவிர, இந்தியக் குற்றவியல் சட்டமும் (திருத்தப்பட்டது 2013) பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ளது. மேலும், இந்து திருமண சட்டத்தின்படி, கணவனால் இழைக்கப்படும் கொடுமையில் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் பெற சட்டத்தில் வழியுள்ளன. பரஸ்பர உடன்பாட்டின்படி விவாகரத்து பெற வழிவகுக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கிடைக்க சட்டங்கள் வழிவகுக்கின்றன.

    பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிப்பார்கள். மீண்டும் அத்தகைய பாதிப்புகள் ஏற்படாதவாறு தக்க ஆலோசனை கூறுவர். ஒருவேளை, இம்முயற்சி கைக்கூடவில்லை யென்றால் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் முழுமையாக விசாரணை செய்து தக்க ஆலோசனைகள் வழங்குவார். இந்த முயற்சியிலும் வெற்றிப்பெற முடியவில்லையெனில் சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெண்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் தங்களை மேம்படுத்திக் கொள்வது அவசியமானது. தங்களுக்கு சட்டப்படியுள்ள உரிமைகளையும், பாதுகாப்பையும் உணரும்போதும் அவர்கள் சமூகத்தின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியும். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அவமானங்களையும், வன்முறைகளையும் முதலில் மற்றவர்களுடன் பேசவேண்டும். அலுவலகமாக இருந்தால் சக பெண் ஊழியர்களிடம் பேச வேண்டும். அவர்கள் அறியும்படி செய்யவேண்டும். தனியாக போராடுவதைவிட குழுவாக இணைந்து எதிர்கொள்ளும்போது பலன்கள் கூடுதலாக கிடைக்கும். மேலும், பெண்கள் தங்கள் ஆண் குழந்தைகளை வளர்க்கும்போது அவர்களை பொறுப்புள்ளவர்களாகவும், பெண்களை மதிக்கக்கூடிய தன்மையுடனும் உருவாக்கவேண்டும்.

    தாட்சாயணி, ஐகோர்ட்டு வக்கீல், சென்னை.
    இச்சமூகம் பெண்ணின் உடல் முழுமைக்கும் மானத்தை வைத்துள்ளது. ஒவ்வொரு நொடியும் அவர்கள் தம் மானம் காக்கவேண்டி நிரந்தரமான மன அழுத்தத்துடனே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
    கற்பிழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அந்த பெண் எழுப்பும் ஓலம் மரணத்தின் ஓலத்தை விட கொடியது. பொள்ளாச்சியில் எழுந்த அந்த ஓலம் என் செவிகளை அடைந்த போதும், ஒளி அலைகளாக என் கண்களை அடைந்தபோதும் என் ரத்தம் கொதித்தது. அப்பெண்களுக்கு ஓடிப்போய் உதவ என்னால் இயலவில்லையே என்ற நிலை எனக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

    முகநூல் எனும் பெரும்பாலோர் படிக்கும் சமூக வலைதளத்தை நாம் எவ்வாறு, எதற்காக, ஏன் உபயோகிக்க வேண்டும் என்று காவல் துறையும் சமூக ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும் உரைத்த வண்ணம் உள்ளனர். ஏன் பெண்களே அவற்றை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்?

    “நெறி தவறினால் மானம் போம்” என்பது அறம். ஆனால் இச்சமூகம் பெண்ணின் உடல் முழுமைக்கும் மானத்தை வைத்துள்ளது. ஒவ்வொரு நொடியும் அவர்கள் தம் மானம் காக்கவேண்டி நிரந்தரமான மன அழுத்தத்துடனே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். பிறந்த நொடி முதல் இடுகாட்டில் அழியும் வரை அவளது மானம் அவளுடைய உடலோடு ஒட்டிக்கொண்டுள்ளது. ஆகவே தான் பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் பொதுவெளிக்கு வந்தால் அது குற்றமாகிறது.

    என்னதான் புராணங்களும், அறங்களும் ஆணும், பெண்ணும் சமம் என்று சொல்லியிருந்தாலும் கூட பெண்களின் பாதுகாப்புக்காக சட்டங்கள் பல உருவாகி ஆண்களின் வக்கிரத்தை அடக்கி வைத்துள்ளது. இருப்பினும் காமக்கொடூரர்கள் உலகு முழுவதும் பரந்து கிடக்கின்றனர். அரேபிய நாடுகள் மற்றும் வடகொரியா நாடுகளில் உள்ள நீதி மேலாண்மை இங்கும் இருந்தால் பொள்ளாச்சியின் இக்கயவர்களுடைய சமாதிகள் மீது மரங்கள் முளைத்திருக்கும்.

    குற்றம் நடந்த மூன்று நான்கு நாட்களில் பாதிக்கப்பட்ட பெண்ணே கூட தன்னை சிதைத்தவர்களை சுட்டுக்கொல்ல வாய்ப்பினைப் பெற்றிருப்பர். நமது நாட்டிலோ எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. அதற்குள் பாதிக்கப்பட்ட பெண்களின் துயரங்கள் கூடிக்கொண்டே போகும். எனவே தாமதமாக கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே உணரவேண்டியுள்ளது.

    அறிவியல் அசுர வளர்ச்சியின் விளைவாக உருப்பெற்றுள்ள இச்சமூக வலைதளங்கள் நிறைய நன்மைகள் செய்தாலும் பொள்ளாச்சி வழக்கு போன்ற நிகழ்வுகள் பேரிடர் துயரங்களை ஏற்படுத்துகின்றது. இது போன்ற சைபர் குற்றங்கள் நமக்கு ஏற்படும் போது அதற்கான அடித்தளம் அமைத்துக்கொடுப்பதே நாம் தான் என்பதை நாம் உணரவேண்டும். எப்படிப்பட்ட தகவலை எந்த அளவுக்கு யாருடன் பரிமாறிக்கொள்ளலாம் என்பதை நாமே தான் தீர்மானிக்க வேண்டும்.

    நம்மோடு தொடர்பு கொண்டிருப்பது ஆணா, பெண்ணா, என்று கூட தெரியாத நிலையில் நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் நாம் அளித்து விடுவதால் ஏற்படும் இன்னல்கள் ஏராளம். வழக்கமான குற்றங்களில் யார் எப்போது எங்கே செய்கிறார்கள் என்று கண்டு பிடிக்கலாம். ஆனால் சைபர் குற்றங்களை நமக்கு தெரிந்தவர்களே வேறுமுகமூடியுடன் நமக்கு அருகில் இருப்பதாக சொல்லிக்கொண்டு, வெகு தொலைவில் இருந்து நமக்கே துரோகம் செய்வது தான் வேதனை. பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் இந்த நொடியில் கூட வேறெங்காவது நடந்து கொண்டுதான் இருக்கும்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் சோர்ந்து முடங்கிவிடக்கூடாது. தனக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு பெண்ணுக்கு ஏற்பட அனுமதிக்கக்கூடாது என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். வலுவாக காலூன்றி போராட வேண்டிய தருணம் இது. தமிழகமே உங்களின் பக்கம் நிற்கிறது. நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்று ஒரு வரி சொன்னால் சோர்ந்துபோன உங்களின் உறவினரும், நண்பர்களும் உங்களுக்காக உதவ முன் வருவார்கள். பொது மக்களும், சட்டமும் இந்த நிலையில் உங்களுக்கு நிச்சயம் துணை நிற்பர்.

    உங்கள் துயரம் இச்சமூகத்தின் துயரம், மரியாதை, கவுரவம், ஏழ்மை, கற்பு, எதிர்காலம் என்றெல்லாம் உங்கள் முன் நிற்கும் தடைகளை உடைத்தெறிந்து விட்டு புறப்படுங்கள். உங்கள் உதவியின்றி சி.பி.சி.ஐ.டியோ, சி.பி.ஐயோ வெற்றிக்கரமான எந்த விசாரணை வியூகங்களையும் அமைக்க இயலாது. உங்களின் பாதுகாப்பு அரணாக உள்ள சட்டங்களை உபயோகியுங்கள். மீறியவர்களை எதிர்த்துப் போராடுங்கள். நீதி கிடைக்கும் வரை ஓயக்கூடாது. காவல் துறையில் இதுபோன்ற நிகழ்வுகளை கடமையோடும், உணர்வுபூர்வமாகவும் கையாளும் அதிகாரிகள் நிறையவே உள்ளனர்.

    புகார் கொடுத்த பெண்ணின் விவரங்களை பாதுகாப்பு மற்றும் அவரது எதிர்காலம் கருதி பொது வெளியில் வெளியிடக்கூடாது என்பது சட்டமாக உள்ளது. இருப்பினும் இன்று பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் பொது வெளிக்கு வந்து விட்டது. அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதால் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்புள்ளது. பகிரங்கமாக வெளியிட்டு இருந்தால் அது காவல் துறையாகவே இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்.

    நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரியவருகிறது. ஆனால் இன்று வரை ஒரேயொரு பெண்ணைத் தவிர யாரும் புகார் கொடுக்கவில்லை. புகார் இல்லாத நிலையில் காவல்துறையினர் என்ன செய்ய முடியும்?. வீடியோ ஆதாரங்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் சென்று புகார் பெற்று எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

    பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் விசாரணைக்கு ஒத்துழைப்பார்கள் என்று தெரியாது. பாதிக்கப்பட்டவரை போலீசார் தொடர்பு கொண்ட மாத்திரத்திலேயே அவர்கள் தம் மன உளைச்சலின் விளிம்புக்கே சென்று தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டிய நிகழ்வுகள் நிறைய உண்டு. தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. குடும்பத்தார்களும் ஒத்துழைப்பு தர மறுத்து விடுவது உண்டு.

    பாதிக்கப்பட்டவர்கள் பெயர் மற்றும் குடும்ப விவரங்கள் வெளியே வராத வண்ணம் விசாரிக்கும் கடமை காவல் துறையினருக்கும், நீதிமன்றத்திற்கும் உண்டு. அதனை உறுதி செய்தால் மட்டுமே இது போன்ற வழக்குகளில் சிறப்பான விசாரணையும், தண்டனையும் எதிர்பார்க்க இயலும். அதே நேரத்தில் பத்திரிகைகளும், ஊடகங்களும் காவல் துறையை விட வேகமாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.

    எத்தனைதான் தவிர்த்தாலும் ஊடகங்கள் பாதிக்கப்பட்டவருடன் அவரது குடும்பத்தினரையும் சேர்த்து நிழற்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து வெளியிடுகின்றனர். சட்டத்திற்கு பயந்து முகத்தை மட்டும் மறைத்து வெளியிடுகின்றனர். இதனால் அச்சம் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணோ அவரது குடும்பத்தாரோ நிச்சயம் காவல் துறைக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். ஊடகங்கள் தம் பொறுப்பை உணர வேண்டும். அதே சமயம் அரசின் விசாரணையில் நடக்கும் தவறுகளை புகார்தாரர் பாதிக்கப்படாத வகையில் பொது வெளிக்கு கொண்டுவர பத்திரிக்கைக்கும், ஊடகத்திற்கும் உரிமை உண்டு.

    மு.அசோக்குமார்,
    போலீஸ் சூப்பிரண்டு (ஓய்வு)
    வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ்
    முகநூலில் ஒரு ஸ்டேட்டஸ் போடும் போதோ, டிக்டாக் செயலியில் ஆடல் பாடலை போடும் போதோ சற்று சிந்திக்க வேண்டும். இதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என உணர்ந்து செயல்பட்டால் நல்லது.
    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் சிக்கிதான் அப்பெண்கள் சீரழிந்து உள்ளனர். இதனால் பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றை தவிர்த்து விடலாமா என்றால் அதற்கு சரியென சொல்ல மாட்டேன். பரிணாம வளர்ச்சியை, அறிவியல் வளர்ச்சியை தவிர்க்க முடியாது, தடுக்க முடியாது.

    ஆரம்ப காலத்தில் மனிதன் காடுகளில் வசித்தான். பின்னர் வீடு கட்டி குடிபுகுந்தான். இப்போது அடுக்குமாடி குடியிருப்பு ஆகிவிட்டது. அதனால் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த மனிதர்கள் இன்று தனிக்குடித்தனமாக மாறி தீவாகி விட்டார்கள். பக்கத்தில் இருப்பவர்கள் கூட யார் என்று தெரியவில்லை. அடுத்த வீடு இன்னொரு பூமியாகி விட்டது.

    ஆரம்பத்தில் மனிதன் பயணத்திற்கு மாடு, குதிரை வண்டிகளை பயன்படுத்தினான். பின்னர் கார், ரெயில் வந்தது. இப்போது அதிவீன காரில் பறக்கிறான். காலம் தோறும் இப்படி மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அவற்றை பயன்படுத்த தெரிந்து கொள்கிறோம் அல்லவா? அதுபோன்றுதான் இன்றைய காலத்திற்கேற்ப வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.

    எந்த ஒரு விசயத்திலும் நன்மையும் இருக்கும். தீமையும் இருக்கும். உடல் நலத்துக்கு டாக்டர்கள் கொடுக்கும் மாத்திரையைக்கூட பக்கவிளைவுகள் உண்டு. பேஸ்புக்கில் இருக்காதா என்ன? எப்படி அணுக வேண்டும் என்ற புரிதல் இருந்தால் போதும் பிரச்சினை ஏற்படாது. இதற்கு கற்றுக்கொடுத்தல்தான் முக்கியம்.
    பள்ளியில் இருந்தே இதனை ஆரம்பிக்க வேண்டும். விளையாட்டுக்கு பயிற்சி இருப்பது போல், பொது அறிவுக்கு பாடம் நடத்துவது போல் வாழ் வியல் பற்றிய மனவளக்கலை பயிற்சியும் அளிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க் கையில் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்க அவர்களுக்கு மனதிடம் உண்டாகும்.

    ஜெர்மனி கார்கள்தான் பேமஸ். அங்குள்ள சாலைகளும் உலத்தரமானவை. போக்குவரத்து குற்றங்களுக்கு அதிகப்படியான அபராதமோ தண்டனையோ விதிக்கும் சட்ட திட்டம் கிடையாது. அப்படி இருந்தும் உலகிலேயே அங்குதான் விபத்துக்கள் குறைவு. காரணம் எப்படி வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு நன்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் வாழ்க்கை முறை குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கற்பித்து வந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது.

    ஒவ்வொரு குழந்தையும் வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை பெற்று விட்டால் பிரச்சினை ஏற்படும் சமயங்களில் அவர்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன்களே சிக்கல்களில் இருந்து காப்பாற்றி கொள்ளும் திறனை அளிக்கும்.

    பொதுவாக மூன்று விசயங்களில் ஈர்ப்பு இருக்கும். ஒன்று ஆண்&பெண் கவர்ச்சி. இரண்டாவது புகழ். புகழுக்கு மயங்காதவர்கள் யாருமே கிடையாது. மூன்றாவது அன்பு. அன்புக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. இந்த மூன்றும் கவர்ந்து இழுப்பவை. அதனால் இந்த மூன்றும் கிடைக்கும் இடம் நோக்கி அனைவரும் செல்கிறார்கள்.

    இன்றைய இளைஞர்களுக்கு சமூகவலை தளங்கள் மூலம் இந்த மூன்றும் கிடைக்கிறது. அதாவது அவர்கள் போடும் ஸ்டேடஸ், டிக்டாக் செயலில் ஆடல் பாடல் மூலம் பிரபலம் என்ற புகழ் கிடைக்கிறது. அதன் மூலம் ஆண்&பெண்களிடையே நட்பு ஏற்பட்டு கவர்ச்சியால் ஈர்க்கப்படுகிறார்கள். அடுத்து தொடர்ந்து காட்டும் அன்பில் அவர்கள் மயங்கி விழுகிறார்கள். அதன் பின்னரே இது போன்ற வக்கிரமான குற்றச் செயல்கள் நடக்கின்றன.

    சமூக வலைதளங்கள் மூலம் கிடைக்கும் இவையாவும் உண்மையானவை அல்ல. ஒருவருக்கு ஐந்தாயிரம் பேர் எப்படி நண்பனாக, தோழியாக இருக்க முடியும்? அந்த உறவுகளில் போலியானவையும் இருக்கலாம். எல்லாவற்றையும் உண்மை என்று நம்பி விடுவதால் தான் பிரச்சினையே. வீடு வேறு, வெளிஉலகம் வேறு. வீட்டில் சில குறைகள் இருக்கலாம். வெளியே இருக்கும் பூங்கா பார்க்க பசுமையாக அழகாகத்தான் இருக்கும். அது உங்கள் வாழ்விடம் ஆகாது. அதுபோல் நம் வீட்டு உறவுகள் போல் வெளி தொடர்பு உறவுகள் இருக்காது. அதை உண்மை என்று மயங்காதீர்கள். இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை உணர்ந்து கொண்டால் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

    சினிமாவில் நடிக்கும் நடிகர் அந்த கதையுடன் எப்படி தொடர்பு இல்லாமல் இருக்கிறாரோ அது போன்றதுதான் இதுவும். ஆனால் பெண்கள் முகநூலில் காட்டும் அன்பை உண்மை என்று நம்பி படுகுழியில் விழுந்து விடுகிறார்கள்.

    எனவே முகநூலில் ஒரு ஸ்டேட்டஸ் போடும் போதோ, டிக்டாக் செயலியில் ஆடல் பாடலை போடும் போதோ சற்று சிந்திக்க வேண்டும். இதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என உணர்ந்து செயல்பட்டால் நல்லது.

    பொதுவாக நேர்மறையான விசயங்க ளைவிட எதிர்மறையான விசயங்களே மக்கள் மனதில் அதிக ஈர்ப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அதாவது 1:16 என்ற விகிதத்தில் உள்ளது. 16 நல்ல விசயங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஒரு கெட்ட விசயம் செய்து விடும். அதனால்தான் குழந்தைகள் எதிர்மறையான செயல்களால் எளிதில் ஈர்க்கப்படுகின்றனர். எனவே எப்பொழுதும் நல்லவற்றையே பேச வேண்டும். நல்லவற்றையே செய்ய வேண்டும். சூழலை நல்லவிதமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

    மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும். கண்டிப்புடன் இருந்தால் அது பெற்றோர்&குழந்தைகளிடையே இடைவெளியை ஏற்படுத்தி விடும். அதில் தான் ஆபத்து உண்டாகிறது. பயத்தின் காரணமாக குழந்தைகள் தங்கள் பிரச்சினையை சொல்ல மாட்டார்கள். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தங்களுக்கு ஆறுதலாக இருக்கும் நபர்களைத்தேடி செல்வார்கள். இப்படியாகத்தான் கயவர்கள் காட்டும் போலியான அன்பில் மாட்டிக்கொள்கிறார்கள்.

    சமூகவலை தளங்களில் ஆண்கள் வீசும் வலைகளில் பெண்கள் எப்படி சிக்கி கொள்கிறார்கள் என்றால் மனோவசியம் செய்யப்படுகிறார்கள். முகநூலில் நட்பு கொண்ட ஆண்&பெண் இருவரும் தொடக்கத்தில் மனம் விட்டு பேசுகிறார்கள். அடுத்த கட்டமாக அந்த ஆண் தன் விருப்பங்களை திரும்ப திரும்ப கூறுகிறான். எந்தவொரு கட்டளையும் தொடர்ந்து கொடுக்கும் போது அதை செய்ய மனம் பழக்கப்பட்டு விடுகிறது. பறவைகள், விலங்குகளை பழக்கப்படுத்துகிறோம் அல்லவா, அது போல் தான். அந்த நபர் மீது நம்பிக்கை ஏற்பட்டதும் அவள் தன்னை சுற்றி அமைத்திருந்த வேலியை உடைத்து விடுகிறாள். அதன் பின் அவன் சொல்கிறபடி நடக்க தொடங்குகிறாள். இந்த மனோவசியத்தில் தான் பெண்கள் சிக்கி கொள்கிறார்கள்.

    பொதுவாக பெண் குழந்தைகள் இதுபோன்ற விசயங்களை வெளியே சொல்ல மாட்டார்கள் என்பதால் ஆண்கள் துணிந்து தவறு செய்கிறார்கள். பெண் குழந்தைகளும் பெற்றோரிடம் எதனையும் தெரியப்படுத்தும் நிலையில் இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தை களிடம் அன்பாக தோழமையாக நடந்து கொண்டால் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் எந்த பிரச்சினைகள் என்றாலும் தயங்காமல் தெரிவிப்பார்கள். பின் விளைவுகள் ஏற்படும் முன்னரே தடுத்து நிறுத்தி விடலாம்.

    மேலும் பெற்றோர்கள் என் குழந்தை அப்படியெல்லாம் தவறு செய்யமாட்டான். அந்த துணிவெல்லாம் அவனுக்கு கிடையாது என்றும், என் குழந்தை எந்த பிரச்சினையென்றாலும் சமாளித்து விடுவான் என்றும் நம்பியிருக்கக் கூடாது. அதுவும் ஆபத்தை விளைவிக்கும். குழந்தைகளிடம் கஷ்டப்பட்டு படிங்க, கஷ்டப்பட்டு வேலை செய்யுங்க. அப்போதுதான் நல்லா இருக்கலாம் என்று சொல்லி வந்தால், தேவையான விஷயங்களை செய்ய கஷ்டம்தான் படணும், மகிழ்ச்சிக்கான தேடல் என்பது நல்ல விசயங்களில் இருக்காது போல என நினைத்து கேளிக்கை விசயங்களில் நாட்டம் கொள்கின்றனர்.

    எனவே அவர்கள் எதனையும் இஷ்டப்பட்டு செய்யும் வகையில் நடந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் மனம் கெட்ட விசயங்களில் அலை பாயாது.

    நாம் எந்த விசயத்தை அடிக்கடி நினைக்கிறமோ, விரும்புகிறமோ அது ஆழ்மனதில் பதிந்து விடும். அதனால் குழந்தைகளிடம் எப்போதும் நல்லவற்றையே பேச வேண்டும். அவர்களை சுற்றிலும் நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் எவ்வளவுதான் உணர்வு மனதளவில் நாம் நல்லவற்றை எண்ணி னாலும் ஆழ்மனதில் கெட்ட விசயங்கள் பதிந்திருந்தால் அதுவே வெளிப்பட்டு செயலாகும்.

    இரண்டு வகையான பார்வை இருக்கிறது. பிரச்சினைகள் இல்லாத சூழலை ஏற்படுத்துவது ஒரு விசயம். பிரச்சினைகள் இருந்தாலும் அதில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது? ஒரு விசயத்தில் பிரச்சினை இருக்கிறதா இல்லையா? பிரச்சினை இருந்தால் அதனை எப்படி கையாள்வது என்பது குறித்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கும் அறிவுத்த வேண்டும்.

    இந்த பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு மனநல வாழ்வியல் ஆலோசகராக நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் இந்த பாதிப்பால் அவர்கள் சுருண்டு போய்விடக் கூடாது. இது அவங்களுக்கு ஒரு பெரிய விபத்தாக இருக்கிறது. சாதாரணமாக ஒரு விபத்தை கண்ணால் பார்த்தால் கூட அது மனதுக்குள் ஒரு அதிர்ச்சியை துயரத்தை ஏற்படுத்தும்.

    ஆனால் அவர்களே விபத்தில் சிக்கி இருக்கும் போது எப்படி இருக்கும்? அதுவும் தன் மீது அன்பு காட்டிய நபரே இப்படி நடந்து கொண்டதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள். பெரிய பாரமாக தான் இருக்கும். இந்த சம்பவம் அவர்கள் மனதில் சித்திரமாக பதிந்திருக்கும். இது பின்னாட்களில் வேறு எது நடந்தாலும் பதட்டத்தை ஏற்படுத்தும். எனவே அதில் இருந்து மீட்டெடுக்க அவர்களுக்கு தகுந்த மனநல சிகிச்சையும் மனநல திட பயிற்சியும் அளிக்க வேண்டும்.

    Email:fajila@hotmil.com
    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.69 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. #PMModi #Congress

    புதுடெல்லி:

    முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடிக்கு 2ஜி, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு நடந்ததாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

    இதை அப்போது பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு காங்கிரசுக்கு எதிராக ஊழல் புகார்களை தெரிவித்தன. இதையடுத்து மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இது 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலித்ததால் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

    தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.69 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.

    இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி சமீபத்தில் பேசுகையில், தனது ஆட்சிக்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் கிடையாது என்றார். ஆனால் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பா.ஜனதா ஆட்சியில் தேசிய அளவில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

    2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இதை மீறும் வகையில், மோடி அரசாங்கம் முதலில் வருபவருக்கு முதல் ஒதுக்கீடு என்ற வகையில் தனியார் நிறுவனத்துக்கு மைக் ரோவேவ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரு.560 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் இதற்கு முன் நடைபெற்ற ஒதுக்கீட்டில் தனியார் செல்போன் நிறுவனங்கள் பயன் அடையும் வகையில் செயல்பட்டதால் பொதுமக்கள் பணம் ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத் தொகை வசூலிப்பது 6 ஆண்டுகளாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்ததால் அரசுக்கு ரூ.23 ஆயிரத்து 821 கோடிக்கு வட்டி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கஜா புயல் நிவாரணத்தில் தமிழக அரசு ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #GajahStorm #EdappadiPalanisamy #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கஜா புயலால் நிர்க்கதியாக்கப்பட்ட மக்களுக்கு எத்தனை எத்தனையோ உதவிடும் உள்ளங்கள் ஓடோடி வந்து உதவி புரிந்ததை, 11 நாட்கள் அப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாராண உதவிகளை வழங்கியபோது நேரில் கண்டேன்.

    தொடக்கத்திலிருந்தே மேம்போக்காகவும், விளம்பரத்துக்காகவும் பழனிசாமி அரசு மறு சீரமைப்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக வெறும் வெற்றுப் பேட்டிகளை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தது.

    தற்போது, 27 வகையான நிவாரண பொருட்களை கொடுக்கிறோம் என்று சொன்ன அரசு, அதை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக பத்திரிக்கை செய்தி வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

    அரசு இயந்திரம் எந்த அளவிற்கு முறைகேடுகளுக்கு துணைபோயுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான், அந்நிவாரண பொருட்களை பேக்கிங் செய்யும் பணிக்கு அரசு ஊழியர்களை விடுத்து, சத்துணவு முட்டை ஊழலில் சிக்கிய, கிருஸ்டி குழுமத்திற்கு சொந்தமானது என்று சொல்லப்படும், பேக்கிங் அன்டு மூவர்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு, அப்பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

    இப்பணியின்போது நிவாரணப் பொருட்களை மக்களுக்கு கொடுக்காமல் பணியாளர்களே எடுத்துக்கொண்டதோடு, 42 டன் அளவு ரவை மற்றும் 20 டன் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை கள்ளத்தனமாக விற்பனை செய்துள்ளதாகவும், இன்னும் முழுமையாக நிவாரண உதவிகள் மக்களிடம் போய் சேரவில்லை எனவும் அப்பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பழனிசாமி அரசு எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதில் ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகாமல் இருந்தது கிடையாது, கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து நடு வீதியில் நிற்கும் மக்களுக்கு கொடுக்கக்கூடிய நிவாரண பொருட்களில் கூடவா இந்த அரசு முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்?



    அக்கறையற்ற தனத்தோடும், மக்களை ஏளனமாக பார்க்கும் எண்ணம் கொண்ட ஒரு அரசு தமிழகத்தில் அமைந்திருப்பது மிகப்பெரிய துரதிர்ஷ்டவசமானது. இது விரைவில் அகற்றப்பட வேண்டும்.

    மனசாட்சியும், மனித நேயமும் அற்றுப்போன ஒரு செயலை இந்த அரசாங்கம் செய்திருப்பதாக வரும் செய்திகள் யாராலும் தாங்கிக் கொள்ளமுடியாத ஒன்று, இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த விரிவான விசாரணையை பழனிசாமி அரசு மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவருக்கும் அரசின் நிவாரண உதவிகள் முறையாக சென்று சேருவதை பழனிசாமி அரசு உறுதி செய்யவேண்டும்.

    இவ்வாறு தினகரன் கூறி உள்ளார். #GajahStorm #EdappadiPalanisamy #TTVDinakaran
    உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி.
    உலகத்தில் எல்லா சமூகத்திலும், சாதி, மதம் என்கிற வித்தியாசமின்றி ஒட்டு மொத்தமாக ஒடுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு என்றால் அது பெண்ணினமேஆகும். தாமஸ்ராய்ட்டர்ஸ் ஆய்வின் முடிவின்படி உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி.

    கருவிலேயே பெண் சிசுவாக இருந்தால் கருச்சிதைவிலிருந்து, பிறந்தவுடன் பெண்குழந்தையாக இருந்தால் கள்ளிப்பால் என்று வன்முறை தொடங்கி விடுகிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள் என்கிற பெயரில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், விதவை, பொட்டுக்கட்டுதல் என்று காலங்காலமாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டனர்.

    பெரும்பாலும் இத்தகையவன்முறைகள்,90 சதவீதம் நெருங்கிய உறவினர்களாலோ, நண்பர்களாலோ, அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களாலோ, பணியிடத்திலோ, பள்ளிக்கூடங்களிலோ உள்ளவர்களால் நடத்தப்படுகிறது.

    இதில் வேதனையான விஷயம், பெரும்பாலான குற்றங்கள் வெளியே தெரிவதில்லை. அப்படியே வந்தாலும் செய்தித்தாள்களில் எங்கோ ஒருமூலையில் ஒதுங்கி விடுகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் சேலம் ஆத்தூரை சேர்ந்த ராஜலட்சுமி என்கிற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டு, தலை வெட்டப்பட்டுக் கொலை செய்யபட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்க வேண்டும். அப்படியே நாட்டையே உலுக்கினாலும், ஒரே வாரத்தில் மறக்கடிக்கப்படுகிறது. உதாரணமாக, காஷ்மீரில் எட்டு வயது பெண்குழந்தை ஆசிபா பலநாட்கள் கோவிலுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதில் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் வேதனை. இவைகள் எல்லாம் தடுக்கப்பட என்னதான் வழி?

    குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். இந்திய அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம், 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியில் வல்லுறவு கொள்பவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என்று சட்டம் இயற்றியுள்ளது. வரவேற்கப்படவேண்டிய ஒன்றானாலும், குற்றங்கள் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறுவதற்கும் பலஆண்டுகள் ஆகி விடுகிறது.

    தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்களது ஆண்குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களிடத்தே, பெண்களும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு சமஉரிமை உடையவர்கள்; ஆண்களுக்கு அடிமையாக, ஏவல் செய்பவர்களாக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல என்கிற உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும்.



    சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை. தைரியம், பலம், அறிவு, இவைகளை எல்லாம் ஆணுக்கு மட்டுமே உரியகுணங்களாக சித்தரிக்கப்படுகிறது, அத்தகைய சூழலில் வளரும் பெண் குழந்தைகள் தங்களுக்கு புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் குறைவு, மற்றும் பலவீனமானவர் என்று கருதத் தொடங்கி விடுகின்றனர். உதாரணமாக, ஏதாவது பொருளினைத் கைத்தவறி நழுவவிட்டால், ஆண்குழந்தை அதைபற்றிக் கவலைக்கொள்ளாது.

    வீட்டிலும் திட்டிவிட்டு விட்டு விடுவார்கள். அதே நேரத்தில் பெண் குழந்தைக்கு திட்டு மட்டுமல்ல, உனக்கு ஏன் இந்த கடினமான வேலை என்று கூறப்படும் போது பெண் குழந்தை தன்னால் கடினமானவற்றை செய்ய முடியாது என்று நம்பத் தொடங்குகிறது. இப்படியாக வளரும் அப்பருவத்திலேயே அதன் மனதில் நீ பலவீனமானவள் என்கிற ஆழமான விதை ஊன்றப்படுகிறது. நன்கு பயிற்சிப் பெற்ற தடகள வீராங்கனையுடனோ, குத்துச்சண்டை பயின்ற பெண்ணிடமோ அவ்வாறு பயிற்சிப் பெறாத ஆண்கள் மோதி வெற்றிப் பெறமுடியாது. ஆகவே ஆணோ, பெண்ணோ, நான் யாருக்கும் சளைத்தவரல்ல, என்கிற எண்ணமும், பயிற்சியும் பெற்றால் எதையும் செய்ய முடியும் என்பது தான் உண்மை.

    ஊடகங்கள் மற்றும் தொலைக் காட்சி தொடர்கள் பெண்களுக்கு எதிரானதாகவும் வன்முறையை தூண்டுபவையாகவும் உள்ளன. திரைப்படங்கள் போன்று தணிக்கைக்குழு இல்லையென்றாலும் சுயக்கட்டுப்பாடுகளோடு நம் வீட்டு பெண்களும் குழந்தைகளும் பார்ப்பதாக இருந்தால் எத்தகைய பொறுப்புணர்வோடு நடந்து கொள்வோமோ அந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேப்போன்று ஊடகங்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் கேலி செய்யும் செய்திகளையும் வெளியிடக்கூடாது.

    பெண்களையும் சகமனிதர்களாக பார்க்காமல் அவர்கள் தங்ககள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கருவியாக பார்க்கும் மனோபாவமே அடிப்படை முறையான பாலினகல்வி கொடுக்காமையும், இத்தகைய தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கின்றன.

    மீடூ (நானும்கூட) இயக்கங்கள் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வடிக்கால்களாக அமைந்துள்ளன. மேலைநாடுகளில் மட்டுமின்றி நமது நாட்டில் கூட, பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகவலைத்தளங்களில் தங்களுக்கு கொடுமை இழைத்தோரை குறித்த உண்மையை வெளியிடுவதன் மூலமாக, தவறு செய்தவர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இது போன்று தவறு செய்தவர்களை வெளிப்படுத்தும் போது எதிர்காலத்தில் தவறு செய்ய முயற்சி செய்பவர்களை தடுக்க ஏதுவாகும். பெண்களுக்கு எதிராக தொடரும் இழிச்செயல்கள் முடிவுக்கு கொண்டு வர இந்நாளில் உறுதி ஏற்போம்.

    வழக்கறிஞர் நல்லினி

    சென்னை மாநகராட்சியில் புயல் வெள்ள தடுப்பு பணி டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதற்கு டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சியில் புயல் வெள்ள நீர் வடிகால் கட்டுமான பணிகளுக்காகவும் மற்றும் சாலைகள் அமைப்பதற்காகவும் கோரப்பட்ட ரூபாய் 740 கோடி மதிப்பிலான டெண்டரில், மிகப்பெரிய முறைகேட்டில் மாநகராட்சியின் முக்கிய அதிகாரிகள் கூட்டாக ஈடுபட்டிருப்பதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

    மழைக்காலங்களில் புயல் வெள்ள பாதிப்புகளால் மக்கள் தங்களது உடைமைகளை இழப்பதும், பல நேரங்களில் உயிர் சேதங்கள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

    இதனை தடுக்கும் பொருட்டு, மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வதும், நீர் நிலைகளை முறையாக பராமரிப்பதும், விரிவுபடுத்துவதும் அவசியமான ஒன்று. அவ்வாறு மக்களின் வாழ்வாதாரத்தோடு ஒன்றிய பணிகளில் முறைகேடுகள் நடைபெற அனுமதிக்கும் அரசானது, மக்களின் நலனை சிறிதும் சிந்திக்காத மக்கள் விரோத அரசு என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.

    திரும்பும் திசையெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு, காணும் காட்சியெல்லாம் நிர்வாக அவலம், இதுதான் பழனிசாமி ஆட்சியின் சாதனை. ஊழல் புகார் மயமான ஆட்சியில் மக்கள் நலன் புதைகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது என் பதைத்தான் இச்செய்தி காட்டுகிறது.

    மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் உள்ளாட்சித்துறையில் பூதாகரமாக எழுந்து வரும் தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கள், அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் நடைபெறுவதைத்தான் எடுத்துரைக்கிறது. ஊழல் குற்றசாட்டுக்கு தொடர்ந்து உள்ளாகிவரும் உள்ளாட்சித்துறைக்கும், அதனை தடுக்கத் தவறும் பழனிசாமி அரசுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran
    குழந்தைகளுக்கு அவர்கள் நான்கு வயதாக இருக்கும் போதே பாலியல் வன்முறைகளின் சில கூறுகளை அவர்களுக்கு விளக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
    பெண்குழந்தையைப் பெறுவதே மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நடப்பதற்கு சமம் என பாட்டிமார் கூறும் கூற்று இன்றைய நேயமற்ற சமூகத்தில் நிதர்சனமாகியிருக்கிறது.

    உலகெங்கும் பல்லாயிரம் குழந்தைகள் பாலியல் வன்முறையினால் உயிரையும் இழக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். பெரும்பாலான பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே மறைக்கப்பட்டு விடுகின்றன. “வெளியே சொன்னால் நம் குழந்தைக்குத் தான் அவமானம்” எனும் கவலையும், பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர் குடும்பத்தின் நெருங்கிய நபர் எனும் நிர்பந்தமும் இத்தகைய பாலியல் வன்முறைகள் சட்டத்தின் முன் வராமல் செய்து விடுகின்றன.

    குழந்தைகளுக்கு அவர்கள் நான்கு வயதாக இருக்கும் போதே பாலியல் வன்முறைகளின் சில கூறுகளை அவர்களுக்கு விளக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மிக முக்கியமாக எது “நல்ல தொடுதல்”, எது “மோசமான தொடுதல்” எது “பாலியல் தொடுதல்” என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பது அன்னையின் கடமையாகும்.

    நல்ல தொடுதல் அன்னையின் அரவணைப்பைப் போல ஆனந்தமாய், பாதுகாப்பாய், உற்காசமூட்டுவதாய் இருக்கும். இவை இன்னும் மிச்சமிருக்கும் மனித நேயத்தின் வெளிப்பாடுகள். மோசமான தொடுதல் என்பதை அடித்தல், உதைத்தல், காயப்படுத்துதல் போன்ற வலி ஏற்படுத்தும் நிகழ்வுகளாகச் சொல்லிக் கொடுங்கள்.

    தினமும் குழந்தைகளிடம் அன்றைய தினம் நடந்த செயல்கள், சந்தித்த மனிதர்கள் போன்ற அனைத்தையும் விரிவாக கேட்டு அறியுங்கள். ஏதேனும் பிழை நடந்திருப்பதாக உணர்ந்தால் பதட்டப்படாதீர்கள். முழுமையாய் கேளுங்கள்.

    குழந்தை எதைச் சொன்னாலும் முழுமையாய் நம்புங்கள். பாலியல் தொந்தரவுகளை குழந்தைகள் ஒரு போதும் உருவாக்கிச் சொல்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏதேனும் “விளையாட்டு” எனும் பெயரில் குழந்தைகள் பெரும்பாலும் ஏமாற்றப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதுண்டு என்பதை அன்னையர் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

    தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான வெளிப்படையான, நட்புறவும் நம்பிக்கையும் கூடிய உரையாடல் மிக மிக முக்கியம். இல்லையேல் குழந்தைகள் தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தாமலேயே போய்விடும் அபாயம் உண்டு.

    சில சூழல் அல்லது சில நபர்களுடைய அருகாமை சந்தேகத்தைத் தருவதாக இருந்தால் அந்த சூழலைத் தவிருங்கள். குறிப்பாக குழந்தை யாருடனாவது நெருங்குவதை விரும்பவில்லையெனில் சுதாரித்துக் கொள்ளுங்கள். அங்கே ஏதேனும் பிழை இருக்கலாம். உங்கள் குழந்தைகளை மூன்றாவது நபரிடம், நீங்கள் கூடவே இல்லாதபோது, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமாக செலவிட அனுமதிக்காதீர்கள்.



    உங்கள் குழந்தையின் உடல் குழந்தைக்கு மட்டுமே சொந்தமானது. அதை வேறு யாரும் தொடும் உரிமை இல்லை என்பதை வெகு தெளிவாக, அழுத்தமாகவே குழந்தைகளிடம் சொல்லுங்கள். அதை மீறி யாரேனும் தொந்தரவு கொடுத்தால் கண்டிப்பான “நோ” சொல்ல குழந்தைகளைப் பழக்குங்கள்.

    குழந்தைகளுடைய நடவடிக்கையில் பதட்டம், கோபம், மன அழுத்தம், சோகம் போன்ற உணர்வுகள் மேலோங்கியிருப்பதைக் கண்டாலோ, உடலில் ஏதேனும் அடையாளங்களைக் கண்டாலோ உஷாராகிவிடுங்கள். குழந்தைகளிடம் ஏதேனும் விரும்பத் தகாத நிகழ்வு நடந்தால் யாரைச் சந்திக்க வேண்டும், யாரிடம் பேசவேண்டும் என்பதைச் சொல்லி வையுங்கள்.

    குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளருங்கள். வீட்டில் பெற்றோர் முன்மாதிரிகையாக இருப்பதும், குழந்தைகளிடம் நேரத்தைச் செலவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்குவதும் மிக மிக முக்கியம்.

    குழந்தைகள் தவறு செய்தால் பக்குவமாய் திருத்துங்கள். பிழை செய்வது மனித இயல்பு, அதைத் திருத்துவதில் தான் மனித மாண்பு இருக்கிறது என்பதை உணர்த்துங்கள். இல்லையேல் பிழைகளை உங்களிடமிருந்து மறைக்கும் வழியையே குழந்தைகள் யோசிக்கும்.

    திரையரங்கு, பேருந்து, பள்ளிக்கூடம், விளையாட்டுப் பூங்கா போன்ற இடங்களில் கவனமாக இருக்கவேண்டிய வழிமுறைகளை விளக்குங்கள். எதையும் பயமுறுத்தும் விதமாகச் சொல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம்.

    “அம்மா, அப்பாவிடம் சொல்லாதே” என யாராவது ஏதாவது சொன்னார்களா, செய்தார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பாலியல் விஷயத்தில் வாக்குறுதிகளை உடைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதை குழந்தைகளுக்கு புரியவையுங்கள்.

    குழந்தைகளிடம் திடீர் பாசம் பொழியும் உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீது ஒரு கண் வைப்பது அவசியம். குழந்தைகளை கடைக்கு அழைத்துப் போகிறேன், திரையரங்கு அழைத்துச் செல்கிறேன் என முன்வந்தால் நாகரீகமாக தவிர்த்து விடுங்கள்.

    ஆபாசப் புத்தகங்கள், படங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு காண்பித்து அவர்களை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவதும், பின்பு அதை வைத்தே அவர்களை மிரட்டி, பயமுறுத்தி தொடர் தொந்தரவுகளை கொடுப்பதும் பரவலாக நிகழும் செயல் என்பதால் எச்சரிக்கையுடன் கவனித்தல் அவசியம்.

    90 விழுக்காடு பாலியல் தொந்தரவுகளும் குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த நபர்களாலேயே வருகின்றன. எனவே குழந்தைகள் உண்மையை விரைவில் பெற்றோரிடம் தெரிவிப்பது மிகவும் அவசியம். தாயும், மகளுமான மிகவும் தனிமையான சூழலில் நிகழும் உரையாடலே உண்மையை முழுமையாய் வெளிக்கொணரும்.

    தமிழ்நாட்டில் மட்டும் கடத்தப்படும் பெண்களில் 53.22 சதவீதம் பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று காவல்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
    ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடத்தப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்கிறது, ஒரு புள்ளிவிவரம்.

    தமிழ்நாட்டில் மட்டும் இப்படி கடத்தப்படும் பெண்களில் 53.22 சதவீதம் பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று காவல்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பெண்ணை கடத்திச் செல்பவர்கள் ஒரு இருட்டறையினுள் 10 முதல் 15 நாட்கள் வரை அடைத்துவைத்து அடித்து காயப்படுத்துகிறார்கள்.

    கடுமையாக தாக்கப்பட்டு, பலவீனமாகி, தன்னம்பிக்கை இழந்த பின், கட்டாயப்படுத்தி போதைப்பொருளை உடலினுள் செலுத்துகிறார்கள். அதன் பிறகு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். தப்பிக்க வழி இல்லாமல் மாட்டிக்கொண்ட அந்தப் பெண்ணை விற்றுவிடுகிறார்கள்.

    உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில், தற்போது இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை வைத்து கடத்தல் குறைந்திருப்பதாகச் சொல்லிவிட முடியாது.



    பல சம்பவங்கள் வெளிவராததற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை. கடத்தப்படும் பெரும்பான்மையான பெண்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களே.

    கடத்தப்பட்ட பெண்கள் காப்பாற்றப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டாலும், குறைந்தது 3 மாத காலம் வரை மனநல ஆலோசகரின் உதவி கட்டாயம் தேவை. ஒருமுறை பாதுகாப்பின்மையை உணர்ந்துவிட்ட அந்தப் பெண்ணுக்கு, அதில் இருந்து மீண்டு வர நீண்ட காலம் தேவைப்படும்.

    கடத்தப்பட்டதை நினைவுபடுத்தும் ஒரு வார்த்தை, ஏதேனும் ஒரு அடையாளம்கூட மீண்டும் பாதுகாப்பின்மையை உணரவைக்கும்.

    காப்பாற்றப்பட்டவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் அவசியம் தேவை. இதை அந்த பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் புரிந்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சுமத்தும் போக்கு நம் சமூகத்தில் நிலவுகிறது. அது மாற வேண்டும்.
    அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்து விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விழுப்புரம்:

    அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம் மத்திய, தெற்கு மாவட்டங்கள் சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், ராதாமணி, மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட தளபதி நற்பணி மன்ற தலைவர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் தனசேகரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் சபாராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், முத்துகுமார், அவைத்தலைவர் நந்த கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாவாடை குழந்தைசாமி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர்கள் வக்கீல் அருள்குமார், சிங்காரவேல் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.
    ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் இன்று ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் மனு அளித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அலுவலகம் ஈரோடு வ.உ.சி. பார்க் அருகே பவானி மெயின் ரோட்டில் செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தில் மொத்தம் 1180 உறுப்பினர்கள் உள்ளனர். லாரி உரிமையாளர் சங்கத்தின் 2017 மற்றும் 2018-ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அதன் நகலும் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு அறிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. உதாரணமாக டீசல் வாங்கியதில் ஆட்டோ மொபைல்ஸ் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் வாராக்கடன் என பல்வேறு வகையில் பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே தாங்கள் ,இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு முறைகேடுகள் குறித்து விசாரித்து அதன் மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    இது பற்றி ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் கேட்டபோது, ‘‘இந்த புகாரில் எந்த ஆதாரமும் இல்லை. இப்படி தவறான புகார் கொடுப்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர். #tamilnews
    ×