என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • முதலில் வழக்கு தொடர்பான முக்கிய விஷயங்களை மட்டும் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தால் போதும் என ஆளுநர் கூறினார்.
    • தற்போது 400 பக்கத்துக்கும் அதிகமான ஆவணங்களை முழுமையாக மொழி பெயர்த்து கொடுக்குமாறு கேட்கின்றார்- தமிழக அரசு

    அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருவதாகவும், இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ரவீந்திரன் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு கடந்த ஜனவரி 6-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனிடையே, தனக்கு எதிரான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, 'ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு நியாயமானதாக இல்லை. கவர்னரிடமிருந்து ஒப்புதல் ஆணை பெறுவதில் சிக்கல் உள்ளது' என தெரிவித்தார்.

    ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.கிரி சி.பி.ஐ. விசாரிக்க கோரிய ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யவேண்டும் என வாதிட்டார்.

    பின்னர் கடந்த 7-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, 'இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சூசகமான உத்தரவு பிறப்பிக்கவில்லையென்றால் ஒப்புதல் ஆணை பெறுவதில் மேலும் தாமதம் ஏற்படும்' என வாதிட்டார்.

    ராஜேந்திர பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் வி.கிரி வாதிட முற்பட்டபோது, மனுதாரருக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால் என்ன? லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் என்ன? என நீதிபதிகள் கேட்டனர்.

    இதற்கு மூத்த வக்கீல் வி.கிரி, மனுதாரருக்கான எதிரான புலன்விசாரணை நிறைவடைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையின் மனுதாரர் ராஜேந்திர பாலாஜி கடந்த 5 ஆண்டுகளாக ஆஜராகியுள்ளார். சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், நேரடியாக புலன் விசாரணையை தொடங்க முடியும் என வாதிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் ஆணை கோரி தமிழ்நாடு அரசு எழுதிய கடிதங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்கும் பிரமாண பத்திரத்தை தமிழ்நாடு கவர்னரின் முதன்மைச் செயலாளர் அடுத்த விசாரணை நடைபெறும் வருகிற மார்ச் 17-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    அதன்படி இன்று வழக்கு விசாரணைக் வந்தது. 

    அப்போது தமிழக அரசு தரப்பில் "முதலில் வழக்கு தொடர்பான முக்கிய விஷயங்களை மட்டும் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தால் போதும் என ஆளுநர் சொன்னார். ஆனால் தற்போது 400 பக்கத்துக்கும் அதிகமான ஆவணங்களை முழுமையாக மொழி பெயர்த்து கொடுக்குமாறு கேட்கின்றார்" எனக் கூறப்பட்டது.

    அப்போது, ஆளுநர் வேண்டுமென்றே தாமதம் செய்கிறாரா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர். இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை ஆவணங்களை மொழி பெயர்த்து தமிழக அசு ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.

    மொழி பெயர்த்து தந்ததும், ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கான அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடைவிதிக்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    • இரயில்வே தேர்வுக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 1500 கிமீ அப்பால் தேர்வு மையம்.
    • தேர்வுக்கு மையங்களை கண்டறிய வழியற்ற மத்திய அரசு மும்மொழி திட்டத்துக்கு மூச்சு முட்ட கத்துகிறது.

    இந்தியாவிலேயே அதிக கல்லூரிகள் இருக்கும் தமிழ்நாட்டில் 6000 பேருக்கு தேர்வு மையம் அமைக்க முடியவில்லை என இரயில்வே வாரியம் சொல்லியுள்ள பதில் ஏற்புடையதல்ல என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "ரயில்வே தேர்வு வாரியத்தின் தலைவர் திருமிகு பிரதிபா யாதவ் அவர்கள், நான் CBT 2 தேர்வு மையங்கள் வெளி மாநிலத்தில் போடப்பட்டு இருப்பது பற்றிய எனது கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார்.

    ஒரே அமர்வில் எல்லா தேர்வர்களுக்கும் தேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளதாலும், அதே தேதியில் ரயில்வே தேர்வு வாரியத்தின் வேறு ஒரு தேர்வை நடத்தி வேண்டி இருப்பதாலும் CBT 2 தேர்வர்கள் அனைவரையும் தமிழ்நாட்டு மையங்களில் மட்டும் பொருத்த முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

    இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதோ, ஒரு தேதி சரிப்பட்டு வராவிட்டால் இன்னொரு தேதியை தேட முடியாது என்பதோ சமாதானம் செய்யும் பதில்களா?

    இப்படி தமிழ்நாடு தேர்வர்கள் வெளி மாநிலங்களுக்கு பந்தாடப்படுவதை ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் தொடர்ந்து செய்து வருவதை நானே எத்தனையோ முறை எழுப்பியுள்ளேன்!

    உண்மையான அக்கறை இருந்தால் எளிதில் தீர்வுகாணப்பட வேண்டிய ஒரு செயலை அக்கறை இன்றி அணுகி ஆயிரக்கணக்கான மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு அலைக்கழிப்பது ஏற்புடையதல்ல.

    தேர்வுக்கு மையங்களை கண்டறிய வழியற்ற ஒன்றிய அரசு மும்மொழி திட்டத்துக்கு மூச்சு முட்ட கத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
    • மகாராஷ்டிர மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்பதற்காக இந்து அமைப்புகள் கலவரத்தை தூண்டுகின்றன.

     மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் நகரில் ஔரங்கசீப் கல்லறை உள்ளது. அந்தக் கல்லறையை அகற்றாவிட்டால் மாநிலம் முழுவது இன்று போராட்டம் நடத்தவிருப்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் ஔரங்கசீப்பின் கல்லறை அகற்றப்படாவிட்டால், பாபர் மசூதியைப் போல கரசேவை செய்து கல்லறையை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பஜ்ரங் தளம் மகாராஷ்டிரா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஔரங்கசீப் கல்லறையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் அங்கு 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையில், மகாராஷ்டிராவின் புனேவில், ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.

    விஹெச்பி மாநிலத் தலைவர் கோவிந்த்ஜி ஷிண்டே பேசுகையில், "ஔரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கான முடிவுவை முன்னெடுப்பகள் மூலம் நிறைவேற்ற உள்ளோம். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மனு வழங்குதல், கோரிக்கைகள், உருவ பொம்மை எரிப்பு, பொதுக் கூட்டங்கள் மூலம் இதுபற்றி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இறுதியாக சம்பாஜி நகர் நோக்கி ஊர்வலம் செல்வோம்" என்று தெரிவித்தார்.

     

    மகாராஷ்டிராவில் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அவுரங்கசீப் பற்றி புகழ்ந்ததை அடுத்து அவர் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    அம்மாநில அரசியலில் ஒளரங்கசீப் பிரச்சனை பெரும்பிரச்னையாக மாறியது. முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், எல்லோரும் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க விரும்புகிறார்கள், சட்டப்படி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.

    துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில் "நாங்கள் மராத்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். உண்மையான தேசபக்தன் ஔரங்கசீப்பை போற்றமாட்டான். யாரும் ஔரங்கசீப்பை ஆதரிக்கமாட்டார்கள். மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும்?" என்று பேசினார்.

    இதற்கிடையில் ஆளும் பாஜக கூட்டணி, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க தீவிரம் காட்டி வருவதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜய் வடேட்டிவார் பேசுகையில், "மகாராஷ்டிர மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்பதற்காக இந்து அமைப்புகள் இவ்வாறு கலவரம் ஏற்படுத்த நினைக்கின்றன. மாநிலத்தின் அமைதியைக் குலைக்க இவர்கள் விரும்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.

     

    முன்னதாக 1992 இல் இந்து அமைப்புகளால் உத்தரப் பிரதேசம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2019 இல் ரூ.1800 கோடி செலவில்  ராமர் கோவில் கட்டியது குறிப்பிடத்தக்கது.

    • திமுக அரசு, தமிழகம் முழுவதும் பாஜகவினர் மீது வன்முறையை ஏவி வருகிறது.
    • பாஜக தொண்டர்கள் மீது காவல் துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

    டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக இன்று நடத்திய போராட்டத்தில் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், போலீசாரின் கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எல். முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில், திமுக ஆட்சியில் டாஸ்மாக் துறையில் நடைபெற்றுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    அமலாக்கத்துறையின் அறிக்கையால் ஆடிப்போயுள்ள திமுக அரசு, இது தொடர்பான தகவல்கள் மக்களைச் சென்றடையாமல் தடுப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஊழலை தமிழக மக்களிடத்தில் எடுத்துச் சென்று, உண்மையை அம்பலப்படுத்தி வருகிறது நமது தமிழக பாரதிய ஜனதா கட்சி.

    இதனால் ஆத்திரமடைந்துள்ள திமுக அரசு, தமிழகம் முழுவதும் பாஜகவினர் மீது வன்முறையை ஏவி வருகிறது. டாஸ்மாக் துறையில் நடைபெற்றுள்ள 1000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட முயன்ற பாஜக தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    பாஜக தொண்டர்கள் மீது காவல் துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

    தமிழக பாஜக மாநிலத் தலைவர் சகோதரர் அண்ணாலை, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.ஆர்.சரஸ்வதி, மாநில துணைத் தலைவர் @KaruNagarajan

    அவர்கள், மாநிலச் செயலாளர் @VinojBJP

    உள்ளிட்ட, தமிழக பாஜக-வின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறார். அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை.

    வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

    தமிழக பாஜக மாநிலத் தலைவர் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் மீதும், முக்கிய நிர்வாகிகள் மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் இந்த அதிகார துஷ்பிரயோகச் செயலை, உடனடியாக தமிழக காவல்துறை கைவிட வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.1700 முதல் ரூ.7500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • ஒரு நபரால் 2 டிக்கெட் மட்டுமே வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

    கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    அடுத்த நாளில் ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 23-ந் தேதி நடக்கிறது.

    இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 19-ந் தேதி தொடங்க உள்ளது. அதன்படி காலை 10.15 மணிக்கு ஆன்லைன் மூலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    இந்த போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.1700 முதல் ரூ.7500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நபரால் 2 டிக்கெட் மட்டுமே வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இணையதளம் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • உக்ரைன்- ரஷியா இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
    • புதின் உடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் உடனான போர் முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக வலியுறுத்த உள்ளார்.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி வழங்கியன. இதனால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷியா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரைன் பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது.

    இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    30 நாட்கள் கொண்ட போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏறக்குறைய இரு நாடுகளும் சம்மதிக்கும் நிலையில்தான் உள்ளது.

    இந்த நிலையில் நாளை ரஷிய அதிபர் புதின் உடன் பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    நேற்று புளோரிடாவில் இருந்து வாஷிங்டனுக்கு செல்லும் வழியில் பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். அப்போது "செவ்வாய்க்கிழமை சில அறிவிப்புகள் வெளியாகுவதை நாம் பார்க்கலாம். நான் புதின் உடன் செவ்வாய்க்கிழமை பேச இருக்கிறேன். கடந்த வாரத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு பணிகள் நடைபெற்றன. நாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? எனப் பார்க்கிறோம்.

    போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒரு பகுதியாக நிலம் மற்றும் மின் நிலையங்கள் ஒரு பகுதியாக இருக்கும். நாங்கள் நிலங்கள் குறித்து பேச இருக்கிறோம். மின் நிலையங்கள் குறித்து பேச இருக்கிறோம்" என டிரம்ப் தெரிவித்தார்.

    கடந்த வாரம் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. அந்த தடையை திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து டொனால்டு டிரம்ப்- புதின் இடையில் விரைவில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வோம் என ரஷியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • புதிய ஷைன் 100 மாடல் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
    • புதிய ஷைன் 100 மாடலில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் OBD 2 விதிகளுக்கு பொருந்தும் மேம்படுத்தப்பட்ட ஷைன் 100 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த புதிய ஹோண்டா ஷைன் OBD 2 வெர்ஷனின் விலை ரூ.68,767 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஹோண்டா ஷைன் 100 மாடலில் 98.98 சிசி, சிங்கில் சிலின்டர், ஏர் கூல்டு என்ஜின் மற்றும் ஃபியூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7.38PS பவரையும், 8.04Nm டார்க் சக்தியையும் வெளிப்படுத்தும். இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய ஷைன் 100 மாடல் பிளாக் - ரெட் , பிளாக் - ப்ளூ , பிளாக் - ஆரஞ்சு, பிளாக் - க்ரே , மற்றும் பிளாக் - கிரீன் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    ஹீரோ ஸ்பிளெண்டர்+ மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 போன்றவற்றுக்கு இந்த புதிய ஹோண்டா ஷைன் 100 போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • 7 மாதங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.23,8653 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது.
    • முந்தைய ஆண்டை விட அதிகமாக ரூ.9192.25 இழப்பைத் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் எதிர்கொண்டது.

    51 சதவீதம் கட்டண உயர்வு, 96 சதவீத வருவாய் உயர்வு, ஆனாலும் மின்வாரியம் ரூ.6,920 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    51% கட்டண உயர்வு, 96% வருவாய் உயர்வு,

    ஆனாலும் மின்வாரியம் ரூ.6920 கோடி இழப்பு:

    இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா?

    தமிழ்நாட்டில் 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மின்வாரியத்தின் வருவாய் 96% அதிகரித்திருக்கும் போதிலும் இழப்பு தொடர்வதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    51% அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியவில்லை என்பது தான் அரசும் மின்வாரியமும் எந்த அளவுக்கு ஊழலில் திளைக்கின்றன என்பதற்கு சான்றாகும்.

    தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்துள்ள 2023-24ம் ஆண்டிற்கான வரவு & செலவு கணக்குகளில் இருந்து பல புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

    திமுக ஆட்சியில் முதன் முதலாக 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் மூலம் 7 மாதங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.23,8653 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது.

    இதில் சுமார் 20% மின் வணிகம் அதிகரித்ததன் காரணமாக கிடைத்தது என்று வைத்துக் கொண்டாலும், மீதமுள்ள சுமார் ரூ. 18,400 கோடி கூடுதல் வருவாய் கட்டண உயர்வின் மூலம் கிடைத்தது. 2021&22ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் இழப்பு ரூ.9130 கோடி தான் என்பதால், கிடைத்த கூடுதல் வருவாயைக் கொண்டு மின்வாரியம் குறைந்தது ரூ.10,000 கோடி லாபம் ஈட்டியிருக்க வேண்டும். ஆனால், முந்தைய ஆண்டை விட அதிகமாக ரூ.9192.25 இழப்பைத் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் எதிர்கொண்டது.

    2023- 24ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கு 2.18% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கும் அதே அளவு கட்டணம் உயர்த்தப்பட்டது. அது நேரடியாக மக்கள் மீது திணிக்கப்படவில்லை என்றாலும், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு அரசால் நேரடியாக செலுத்தப்பட்டதால் மின்வாரியத்தின் வருவாய் குறையவில்லை.

    அதனால், 2023- 24ஆம் ஆண்டிலாவது மின்சாரவாரியம் லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஆண்டிலும் மின்சாரவாரியம் தொடர்ந்து இழப்பைத் தான் சந்தித்திருக்கிறது.

    2023- 24ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் மொத்த வருவாய் ரூ.97,757 கோடி ஆகும். இது 2021-22ஆம் ஆண்டின் வருவாயான ரூ.49,872 கோடியை விட 96%, அதாவது ரூ.47,885 கோடி அதிகமாகும்.

    இடைப்பட்ட காலத்தில் மின் வணிகம் 1137.8 கோடி அதிகரித்துள்ளது. 2022&ஆம் ஆண்டில் ஒரு யூனிட்டின் சராசரி கட்டணம் ரூ.5.60 என்பதால், அதன் மூலம் கிடைத்த ரூ.6371 கோடியை கழித்தாலும் கூட, கட்டண உயர்வின் மூலம் மட்டும் இரு ஆண்டுகளில் மின்சார வாரியத்திற்கு ரூ.41,514 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

    அதன் காரணமாக மின்சார வாரியம் குறைந்தது ரூ.32 ஆயிரம் கோடி லாபம் ஈட்டி இருக்க வேண்டும். ஆனால், ரூ.6920 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இரு ஆண்டுகளில் வருவாய் ரூ.41,514 கோடி அதிகரித்திருந்தாலும் கூட, இழப்பு ரூ.2210 கோடி மட்டும் தான் குறைந்திருக்கிறது என்றால், கட்டண உயர்வால் கூடுதலாக கிடைத்த மீதமுள்ள ரூ.39,304 கோடி எங்கே சென்று மாயமானது?

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு தொடர்வதற்குக் காரணம் அங்கு நடைபெறும் ஊழல்கள் தான். தமிழ்நாடு மின்வாரியம் நிலுவையில் உள்ள மின்திட்டங்களை செயல்படுத்தி, மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்றால் ஆண்டுக்கு ரூ.40,000 கோடிக்கும் மேலாக லாபம் ஈட்ட முடியும்.

    ஆனால், அவ்வாறு நடந்தால் ஆட்சியாளர்களால் கமிஷன் வாங்கி கோடிகளை குவிக்க முடியாது என்பதற்காகவே மின்திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.

    மின்சாரத்தை வாங்குவதில் எந்த அளவுக்கு கொள்ளை நடந்திருக்கிறது என்பதை மின்வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களே தெளிவாக நிரூபிக்கின்றன.

    2021- 22ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் மொத்த மின் வணிகம் 8200.20 கோடி யூனிட் ஆகும். இதில் தனியாரிடமிருந்து வாங்கப்பட்டது 7262.90 கோடி யூனிட். அதாவது மின்வாரியத்தின் மொத்த வணிகத்தில் 12.91% மட்டும் தான் மின்வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 87.09% மின்சாரம் தனியாரிடமிருந்தும், மத்தியத் தொகுப்பிலிருந்தும் தான் வாங்கப்படுகிறது. 2023- 24ஆம் ஆண்டில் மொத்த வணிகமான 9338 கோடி யூனிட்டுகளில் 8290.60 கோடி யூனிட்டுகள், அதாவது 88.79% வெளியாரிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது.

    ஒரு மாநிலத்தின் மின்வாரியம் அதன் மொத்த வணிகத்தில் சுமார் 90% மின்சாரத்தை வெளியிலிருந்து அதிக விலைக்கு வாங்கினால் எவ்வாறு லாபம் ஈட்ட முடியும்?

    வெளியிலிருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு இரு ஆண்டுகளில் 14% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், செலவு 70% அதிகரித்திருக்கிறது. 2021&22ஆம் ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.4.50க்கு வாங்கப்பட்ட நிலையில், 2023&24ஆம் ஆண்டில் இது ரூ.6.72 ஆக அதிகரித்திருக்கிறது. இது 49.33% உயர்வு ஆகும். மின்சாரத்தின் விலை இந்த அளவுக்கு உயருவதற்கு வாய்ப்பே இல்லை.

    ஆட்சியாளர்களுக்கு தங்களுக்குத் தேவையானவற்றை பெறுவதற்காகவே இந்த அளவுக்கு அதிகவிலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியிருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் சிலரே கூறுகின்றனர்.

    ஒரு மின்வாரியம் ஆண்டுக்கு ரூ.55,754 கோடிக்கு வெளியில் மின்சாரம் வாங்கினால், அதில் எந்த அளவுக்கு ஊழல் செய்திருக்கக் கூடும் என்பதை பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

    அதேபோல், தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலம் சொந்தமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு இந்தக் காலத்தில் வெறும் 21% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், அதற்கான ஆன செலவு மட்டும் 77% உயர்ந்திருக்கிறது.

    இதுவும் எங்கேயும் நடக்காத அதிசயம். 2021&22ஆம் ஆண்டில் 2552 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.14,061 கோடி, அதாவது ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 செலவாகியுள்ளது.

    ஆனால், 2023&24ஆம் ஆண்டில் 3110.60 கோடி யூனிட் உற்பத்தி செய்ய ரூ.24,920 கோடி செலவாகியுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.8.01 செலவாகியுள்ளது.

    இது 46% உயர்வு ஆகும். சந்தனக் கட்டைகளை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்தால் கூட இந்த அளவு செலவாகாது எனும் நிலையில், நிலக்கரி அதிக விலை கொடுத்து வாங்கியதால் தான் இவ்வளவு அதிக செலவாகியிருக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    மின்வாரியத்தின் வருவாய் 96% அதிகரித்த பிறகும் ரூ.6920 கோடி இழப்பில் இயங்குவது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா? என்பதை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.

    வெளியாரிடம் வாங்கும் மின்சாரத்தின் விலை 49.33% அளவுக்கும், மின்வாரியத்தின் உற்பத்திச் செலவு 46% அளவுக்கு உயர்ந்ததன் காரணம் என்ன? என்பது குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.
    • பரீட்சையில் நல்ல கிரேட் தருவது, வேலை வாங்கி தருவது ஆகிய ஆசைகளை காட்டி பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் இந்த செயல்களில் 20 வருடமாக ஈடுபட்டு வந்தார்.

    உத்தரப் பிரதேசத்தில் 59 வயதான கல்லூரி அரசுக்கல்லூரி பேராசிரியர் பல மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக (HOD) ஆக உள்ளவர் ரஜ்னீஷ் குமார் (59 வயது).

    இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக  அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை வீடியோ எடுத்தும் வந்துள்ளார்.  இதுதொடர்பாக நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்படாத பின், உள்விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் அவர் குற்றமற்றவர் என்று கூறிவிட்டது.

    இதனையடுத்து கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் (NCW), உயர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் ரஜ்னீஷ் குமார் மீது பாதிக்கப்பட்டவர் பெயர் குறிப்பிடப்படாமல் பாலியல் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

    அந்தப் புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் ஆபாசமான நிலையில் இருப்பதைக் காட்டும் பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.

     

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் 13 அன்று தான் அவர் மீது எப்ஐஆர் பதவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 68 (அதிகாரத்தில் உள்ள ஒருவரால் பாலியல் வல்லுறவு), மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 (சைபர் குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் ரஜ்னீஸ் குமார் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை அறிந்ததும், ரஜ்னீஷ் குமார் தலைமறைவாகியுள்ளார்.

     மாணவிகளுக்கு பரீட்சையில் நல்ல கிரேட் தருவது, வேலை  வாங்கி தருவது ஆகிய ஆசைகளை காட்டி பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் இந்த செயல்களில் 20 வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வந்ததாக ஹத்ராஸ் மாவட்ட எஸ்பி சிரஞ்சீவி நாத் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் மகளிர் ஆணையத்தில் சமர்ப்பித்த படங்களில் 12, ரஜ்னீஷ் சின்ஹா, காலேஜின் டீன் ஆபீசில் வைத்தே மாணவிகளிடம் அத்துமீறுவதைக் காட்டுகிறது.

    அதில் உள்ள மாணவிகளை அடையாளம் காண போலீசார் முயன்றனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையே தலைமறைவான பேராசிரியர் ரஜ்னீஷ் சின்ஹாவை தேடும் பணியில் ஹத்ராஸ் போலீஸ் ஈடுபட்டுள்ளது. 

     

    • பாஜக தலைவர் எச்.ராஜாவை போலீஸ் வாகனத்தில் ஏறுமாறு காவலர்கள் கூறினர்
    • காவல் துறையினரை நோக்கி எச்.ராஜா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

    தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    இந்த நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் தமிழ்நாடு முழுக்க இன்று (மார்ச் 17) முற்றுகை போராட்டம் நடத்த தமிழக பா.ஜ.க. சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்துக்கு வராமல் தடுக்கும் வகையில் அவர்களின் வீடுகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு வெளியே வராமல் தடுத்து நிறுத்தினார்கள். இதனையடுத்து, பாஜக தலைவர்களான அண்ணாமலை, தமிழிசையை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடைய தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் எச்.ராஜாவை போலீஸ் வாகனத்தில் ஏறுமாறு காவலர்கள் கூறினர். அப்போது, நாய் ஏத்துற வண்டியில நான் ஏற மாட்டேன்"... நான் என்ன குற்றவாளியா? என்று கூறி காவல் வாகனத்தில் ஏற அவர் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து எச்.ராஜாவை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

    • அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம்.
    • எங்களை உடைக்க முயற்சி செய்பவர்களுக்கு மூக்கு உடைந்து போகும்.

    சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம்.

    * 8 வருடமாக கட்சியை உடைக்க திட்டமிடுகின்றனர்.

    * அ.தி.மு.க.வை யாராலும் உடைக்க முடியாது.

    * அனைத்து திட்டங்களையும் தவிடு பொடியாக்கி கொண்டு தான் இருக்கிறோம்.

    * எங்களை உடைக்க முயற்சி செய்பவர்களுக்கு மூக்கு உடைந்து போகும்.

    * மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனதில் இருந்து திட்டத்தை போட்டுக்கொண்டு இருக்கிறார். அதனை முறியடித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4.5 லட்சம் கோடி கடன் வாங்கியும் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
    • இவர்கள் தொடுத்தால் சரியான வழக்கு, மற்றவர்கள் தொடுத்தால் பொய்யா?

    சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 4.5 லட்சம் கோடி கடன் வாங்கியும் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

    * தங்கள் ஆட்சியின் மீதுள்ள குறைகளை மறைக்க அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் என பேசுகிறார் முதலமைச்சர்.

    * டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    * டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் உங்கள் மீது தவறில்லை என்றால் அமலாக்கத்துறை வழக்கை எதிர்க்கொள்ளுங்கள்.

    * இவர்கள் தொடுத்தால் சரியான வழக்கு, மற்றவர்கள் தொடுத்தால் பொய்யா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×