என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி.
    • ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.

    பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் டீசரரை படக்குழு அண்மையில் வெளியிட்டது.

    போலீஸ் கதாபாத்திரத்தில் நானியை இதில் பார்க்க முடிகிறது. ஆனால் இடையில் அவர் உண்மையில் போலீஸ் தானா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் காட்சிகள் டீசரில் இடம் பெற்றதால் படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

    இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ப்ரேம வெல்லுவா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் ஒரு காதல் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலை கிருஷ்ண காந்த் வரிகளில் சித் ஸ்ரீராம் மற்றும் நுடானா மோகன் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

    • சென்செக்ஸ் 1,078.87 புள்ளிகள் உயர்ந்தது.
    • நிஃப்டி 307.95 புள்ளிகள் உயர்ந்தது.

    இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை அதிக அளவிலான உயர்வைச் சந்தித்தன.

    இன்றைய நாள் முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,078.87 புள்ளிகள் உயர்ந்து 77,984.38 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 307.95 புள்ளிகள் உயர்ந்து 23,658.95 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 42 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் சென்செக்ஸ் 1.4 சதவீதமும் நிஃப்டி 1.32 சதவீதமும் உயர்ந்து வர்த்தகம் ஆனது.

    • அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும் என பதில் அளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவு.
    • 10 நாள் அவகாசம் கொடுத்த நீதிமன்றம் இதற்கு மேல் வழங்கப்படாது என கண்டிப்பு.

    பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என கேள்வி எழுப்பியிருந்தது. இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்யக்கோரி முறையாக நோட்டீஸ் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. மேலும் அவகாசம் தேவை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிப்பட்டது.

    இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததது. இந்த வழக்கு பல நாட்களாக நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும்.

    அவகாசம் கேட்பது நியாயமற்ற முறையாக இருந்தாலும் கூட, இன்னும் 10 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

    போக்குவரத்துத்துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது.

    இந்த ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

    கடந்த 12-ந்தேதி நடந்த விசாரணையின்போது, அமைச்சராக தொடர விருப்பமா? என செந்தில் பாலாஜியிடம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும் என அவர் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 44 பயணிகளும் விமானத்தில் இருந்தனர்.
    • அலையன்ஸ் ஏர் விமானம் தரையிறங்கும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

    டெல்லியிலிருந்து இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்குச் இன்று காலை சென்ற அலையன்ஸ் ஏர் விமானம் தரையிறங்கும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 44 பயணிகளும் விமானத்தில் இருந்தனர்.

    தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தரையிறங்கும் விமானத்தின் வேகத்தை குறைக்க முடியவில்லை. இதனால் விமானம் ஓடுபாதையில் வளைந்து வெகு தூரம் சென்றது. விமானி உடனடியாக அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி விரைவாக செயல்பட்டதால் பெரிய அளவிலான விபத்து தவிர்கப்பட்டது.

    விமானத்தில் இருந்த துணை முதல்வர் உட்பட 44 பயணிகளும் பாத்திரமாக இருப்பதாக சிம்லா விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தர்மசாலாவுக்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம் ரத்து செய்யப்பட்டது

    • கடந்த 5 ஆண்டுகளாக கேரள பாஜக மாநிலத் தலைவராக இருந்த கே. சுரேந்திரன் பதவிக் காலம் நிறைவடைந்தது.
    • சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

    பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா், அக்கட்சியின் கேரள மாநிலத் தலைவராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 5 ஆண்டுகளாக கேரள பாஜக மாநிலத் தலைவராக இருந்த கே.சுரேந்திரன் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.

    இதன்படி நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் ராஜீவ் சந்திரசேகா் வேட்புமனுத் தாக்கல் செய்தாா்.

    இப்பதவிக்கு ராஜீவ் சந்திரசேகா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று காலை திருவனந்தபுரத்தில் கட்சியின் கவுன்சில் கூட்ட நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பங்கேற்ற கேரள பாஜகவின் மேலிடப் பாா்வையாளர் மற்றும் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, கேரள மாநில பாஜக தலைவராக ராஜீவ் சந்திரசேகரன் ஒருமனதாகத் தேர்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    கா்நாடகத்தில் இருந்து மூன்று முறை மாநிலங்களவைக்குத் தோ்வான ராஜீவ் சந்திரசேகா், மத்திய பாஜக கூட்டணி அரசில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா், நீா் வளம் ஆகிய துறைகளின் இணை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளாா்.

    பாஜகவின் தேசிய செய்தித் தொடா்பாளராகவும் பணியாற்றியுள்ள ராஜீவ் சந்திரசேகா் பணியாற்றி உள்ளார். கடந்த மக்களவைத் தோ்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. 

     

    • மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சுங்கச் சாவடியில் நின்று கொண்டிருந்த கார் மீது கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து லாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சிவசேனா முதலில் பா.ஜ.க.வில் இருந்து வெளியே வந்தது. பின்னர் சிவசேனா, சிவசேனாவில் இருந்து வெளியே வந்தது.
    • தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளிவந்தது.

    நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை காடர் (துரோகி) என்று நகைச்சுவையாக விமர்சனம் செய்தார்.

    தில் தோ பாகல் ஹை படத்தின் பிரபலமான இந்தி பாடலை பாடி சிவசனோ மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுகள் குறித்தும் மற்றும் மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிகழ்வுகளையும் நகைச்சுவையாக நிகழ்த்தினார் நடிகர் குணால் கம்ரா (stand-up comedian).

    சிவசேனா முதலில் பா.ஜ.க.வில் இருந்து வெளியே வந்தது. பின்னர் சிவசேனா, சிவசேனாவில் இருந்து வெளியே வந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளிவந்தது.

    அவர்கள் ஒரு வாக்காளருக்கு 9 பொத்தான்களை கொடுத்தார்கள். இதனால் எல்லோரும் குழப்பம் அடைந்தார்கள் என்று அவர் மேலும் நிகழ்ச்சியின்போது நகைச்சுவையாக குறிப்பிட்டு உள்ளார். அத்துடன் ரிக்ஷா ஒட்டுபவர், ஒருவரின் தந்தையை திருடிய துரோகி என்றார்.

    இந்த நிகழ்ச்சியை கேட்டு ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் மும்பை கார் பகுதியில் உள்ள ஓட்டலில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா நிகழ்ச்சி நடத்திய பகுதியை சூறையாடி சேதப்படுத்தினர். மேலும் ஷிண்டேவை சாடி அவர் பேசிய வீடியோவை வெளியிட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.

    மேலும் 2 நாட்களில் நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரை சிவசேனா தொண்டர்கள் மகாராஷ்டிராவில் சுதந்திரமாக வெளியே நடமாட விடமாட்டார்கள் என்று சிவசேனா கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் தாக்குதல் நடத்திய சிவசேனா கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுதி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியதில் தவறு ஏதும் இல்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    குணால் கம்ரா வெறுமன தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் உண்மைகளைக் கூறி பொது மக்களின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    கம்ரா எதுவும் தவறாக செய்யவில்லை. இந்த துரோகிகள் சத்ரபதி சிவாஜி மகாராஜாவை இழிவுப்படுத்திய பிரஷாந்த் கோரட்கார், நடிகரை ராகுல் சோலாபூர்கார் ஆகியோரை பார்க்கவில்லை.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    நாக்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாஷந்த் கோரட்கார், நடிகரை ராகுல் சோலாபூர்கார் சத்ரபதி சம்பாஜி மகாராஜா மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜா ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனை கருத்து தெரிவித்ததாக, இருவரையும் கைது செய்ய வேண்டும் போராட்டம் நடைபெற்றது சுட்டிக்காட்டி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    • இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'.
    • 'டிராகன்' திரைப்படம் கடந்த 21-ந்தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியானது.

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.திரைப்படம் வெளியாகி உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்தது.

    'டிராகன்' திரைப்படம் கடந்த  21-ந்தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற Rise Of Dragon வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலில் கவுதம் மேனன் மற்றும் பிரதீப் இணைந்து ஆடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    • ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐ.பி.எல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கடந்த 22ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக விளையாடிய ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், விராட் கோலி குறித்து எம்.எஸ்.தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி அணியின் வெற்றிக்கு எப்போதும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். 50-60 ரன்கள் அவருக்கு போதாது.

    எப்போதும் சதம் அடிக்க வேண்டும். அணியின் வெற்றிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றே இருப்பார்.

    இறுதி வரை விக்கெட் இழக்காமல் நிலைத்து ஆட வேண்டும் என்று நினைப்பார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.
    • எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.

    கர்நாடகாவில் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசு டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை கிழித்து சபாநாயகர் மீது வீசி பாஜக எம்எல்ஏக்கள் வீசி அமளியில் ஈடுபட்டனர். இதனால் 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று பாராளுமன்றக் கூட்டத்தொடரில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத ரீதியான இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்தார்.

    முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.

    குறிப்பாக இந்த இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், தேவைப்பட்டால் அரசியலமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று பேசியிருந்தார்.

    இந்த பாயிண்டை பிடித்த ஜேபி நட்டா, காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கிறது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று பாபாசாகேப் அம்பேத்கர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் தெற்கில் முஸ்லிம்களுக்கு ஒப்பந்தங்களில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது.

    கர்நாடக துணை முதல்வர் அங்குள்ள சபையில், தேவைப்பட்டால், அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறினார். அங்கு அரசியலமைப்பை துண்டு துண்டாக கிழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்ல வேண்டும் என்று சீறினார்.

    மேலும் இதுதொடர்பாக அவையில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்திய அரசியலமைப்பில் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் அமர்ந்து, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும் என்று கூறும்போது, அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் தனது கருத்துக்கு டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 'நான் அரசியலமைப்பை மாற்றுவேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளின்படி திருத்தங்கள் இருக்கும் என்று பொருள்படவே கூறினேன்.

    இயல்பாக பேசியதை வைத்துக்கொண்டு பாஜக பொய்ப் பிரசாரம் செய்கிறது. எனது வார்த்தைகளை தவறாக சித்தரித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். நான் 36 வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். எனக்கும் பொது அறிவு இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களில், நான் நட்டாவை விட விவேகமான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. எங்கள் கட்சி ஒரு தேசிய கட்சி. எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.  

    • திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பல கோவில்களில் கால்நடைகளை பலியிடுதல் வழக்கம் உள்ளது
    • அனைத்து மதத்தினரிடையே ஒற்றுமையை பேணவே தமிழக அரசு விரும்புகிறது.

    மதுரையை சேர்ந்த கண்ணன், முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில், "திருப்பரங்குன்றம் கோவில் பாண்டிய மன்னனின் காலகட்டத்தில் கட்டப்பட்டது. திருப்பரங்குன்றம் கோவிலின் தென் பகுதியில் உமையாண்டாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பகுதியில் எந்த உயிர் பலியிடுதல் கூடாது. திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் தர்கா உள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடப்பட்டு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இது சுப்ரமணிய சுவாமி கோவில் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

    ஆகவே திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும் சமைத்து பரிமாறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசன் தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் திருப்பரங்குன்றனம் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடை விதிக்கவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதேபோல் திருப்பரங்குன்றம் மலை தொடடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை இன்று நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் அமர்வு விசாரித்தது.

    மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பல கோவில்களில் கால்நடைகளை பலியிடுதல் வழக்கம் உள்ளது. அனைத்து மதத்தினரிடையே ஒற்றுமையை பேணவே தமிழக அரசு விரும்புகிறது. அதன் அடிப்படையில் ஜனவரி 30 ஆம் தேதி இரு சமூகத்தினரிடையே கூட்டம் நடைபெற்றது. அதில், ஏற்கனவே இருக்கும் வழிபாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, "கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியாக இல்லை. திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது. தொல்லியல் துறைக்கு சொந்தம் என்ற வாதத்தை ஏற்க முடியாது" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

    • சென்னைக்கு எதிராக 3 விக்கெட்டுகளை விக்னேஷ் வீழ்த்தினார்.
    • SA20 லீக்கில் மும்பை கேப்டவுண் அணியின் நெட் பவுலராக மும்பை அணி நிர்வாகம் சேர்த்தது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் என்னத்தான் மும்பை அணி தோற்று இருந்தாலும் அந்த அணியின் இளம் பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். போட்டி முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் கைக்குலுக்கி செல்லும் போது எம்.எஸ் தோனி விக்னேஷ் புத்தூரை அழைத்து பாராட்டும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.

    இந்த போட்டியில், மும்பை அணியின் இடதுகை பந்து வீச்சாளராக பிற்பாதியில் மட்டும் (மாற்று வீரர்) களம் இறங்கிய விக்னேஷ் புத்தூர் துருதுருவென மைதானத்தில் வலம் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 23 வயதே ஆன இவர், 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்து ருதுராஜ், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.

    U-14 மற்றும் U-19 போட்டிகளில் மட்டுமே கேரளா அணிக்காக விளையாடியுள்ள அவரின் திறமையை கண்ட மும்பை அணி நிர்வாகம், SA20 லீக்கில் மும்பை கேப்டவுண் அணியின் நெட் பவுலராக சேர்த்தது. கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு எடுக்கப்பட்டார்.

    கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம் பெரிந்தல்மண்ணாவை சேர்ந்தவர் விக்னேஷ் புத்தூர். 23 வயதே ஆன அவர், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது விடாமுயற்சியால் கிரிக்கெட்டில் ஐ.பி.எல். வரை முன்னேறி வந்துள்ளார். வலது கை பேட்ஸ்மேனாகவும், இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் மும்பை அணிக்கு கிடைத்துள்ளார்.

    தற்போது பெரிந்தல்மண்ணாவில் உள்ள பி.டி.எம். அரசு கல்லூரியில் இலக்கியத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது தந்தை சுனில் குமார் ஒரு ஆட்டோ டிரைவர். தாயார் கே.பி.பிந்து வீட்டு வேலை செய்பவர். குடும்பத்தை வறுமை வாட்டியபோதும், விக்னேஷ் புத்தூரின் கிரிக்கெட் கனவுக்கு பெற்றோர் தடைபோடவில்லை.

    ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் ஏலம் நடந்த அன்று, விக்னேஷ் வீட்டில் இருந்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது ஆச்சரியத்தில் துள்ளிக்குதித்தார். ஐ.பி.எல். கனவு பலித்துவிட்டதை எண்ணி ஆனந்தப்பட்டுக்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி.

    "ரோஹித்தும், ஹார்திக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் எனக்கு பிடித்த வீரர்கள். இந்த சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து விளையாடுவதை மகிழ்ச்சியாக எண்ணுகிறேன்" என்று அவர் உணர்ச்சி பொங்க கூறியிருந்தார்.

    முதலில், விக்னேஷ் புத்தூர் கேரள கிரிக்கெட் லீக்கில் ஆலப்பி ரிப்பிள்ஸ் அணிக்காக விளையாடினார். 3 போட்டிகளில் விளையாடிய அவர் 2 விக்கெட்டுகளே வீழ்த்தினாலும், ஆல்-ரவுண்டர் என்ற அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கவனத்தை ஈர்த்தார்.

    சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து கிரிக்கெட்டில் முன்னணிக்கு வந்த விக்னேஷ் புத்தூரின் விடாமுயற்சி அவருக்கு ஐ.பி.எல். மூலம் விஸ்வரூப வெற்றியை கொடுத்துள்ளது.

    ×