search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirupparamkunram"

    திருப்பரங்குன்றம் கோவிலில் மொட்டையரசு உற்சவத்தையொட்டி தெய்வானையுடன் முருகப் பெருமான் தங்கக் குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக மொட்டையரசு உற்சவம் நேற்று காலையில் நடைபெற்றது. கோவிலில் இருந்து சன்னதி தெருவில் உள்ள கல்யாண விநாயகர் கோவில் வரை மேள, தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப் பெருமான் சட்டத்தேரில் எழுந்தருளி பவனி வந்தார்.

    இதனையடுத்து தங்கக்குதிரையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து மொட்டையரசு திடல் வரை சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண்கள் அமைத்து சாமி தரிசனம் செய்தனர். மொட்டையரசு திடல் சார்ந்த ஒரே இடத்தில் 75-க்கும் மேற்பட்ட பாரம்பரிய திருக்கண்களில் சாமி எழுந்தருளினார்.

    ஒவ்வொரு திருக்கண்களிலும் சாமிக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. அங்கு கூடி இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்கள் எழுப்பி பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். காலையிலிருந்து மாலை வரை மொட்டையரசு திடலில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான் இரவு 9 மணி அளவில் பூப்பல்லக்கில் எழுந்தருளி இருப்பிடம் நோக்கி சென்றார்.வழிநெடுகிலும் பக்தர்கள் குவிந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    முருகப்பெருமான் அருளும் ஆலயங்களில் ‘திருப்பரங்குன்றம்’ திருத்தலம், அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக அமைந்துள்ளது.
    முருகப்பெருமான் அருளும் ஆலயங்களில் ‘திருப்பரங்குன்றம்’ திருத்தலம், அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக அமைந்துள்ளது. திருச்செந்தூர் சூரபதுமனை சம்ஹாரம் செய்த முருகப்பெருமானுக்கு, தேவேந்திரனின் மகளான தெய்வானையை மணம் முடித்துக் கொடுக்க முடிவானது.

    அந்த விருப்பத்தை தேவேந்திரன், முருகப்பெருமானிடம் கூறினார். அதற்கு முருகப்பெருமான், “திருமணத்தை திருப்பரங்குன்றத்தில் வைத்துக்கொள்ளலாம்” என்று கூறியதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் முருகன்-தெய்வானை திருமணம் நடந்தது. சிவபெருமான், முருகனுக்கு முதன்மை ஸ்தானத்தை திருப்பரங்குன்றத்தில் வைத்து கொடுத்தார். இதனால் திருப்பரங்குன்றம் முதல் படைவீடாக திகழ்கிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தெப்பத்தை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 8-ந்தேதி தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் இரவு சாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் தெப்ப முட்டு தள்ளுதல், தேரோட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தெப்ப உற்சவம் கோலாகலமாக நடை பெற்றது.

    திருவிழாவையொட்டி காலை 9.30 மணிக்கு கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமிக்கு தங்கம், பவளம், வைடூரியம் போன்ற நகைகளாலும், வாசனை கமழும் வண்ண மலர்களாலும், பட்டு வஸ்திரங்களாலும் சர்வ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து சாமி புறப்பட்டு ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளம் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    பின்னர் தெப்பக்குளத்தில் தயாராக இருந்த தெப்பத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உடனே அங்கு கூடி இருந்த பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா“ என்று பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தெப்ப மிதவையில் இணைக்கப்பட்டிருந்த வடத்தினை பிடித்து இழுத்து, தரிசனம் செய்தனர்.

    தெப்பக்குளத்திற்குள் நிரம்பிய தண்ணீரில் 3 முறை தெப்ப மிதவை வலம் வந்தது. பின்னர் மீண்டும் இரவு 7 மணி அளவில் மின்னொளியில் தெப்ப திருவிழா நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் கோவிலில் தெப்பத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தை கார்த்திகை தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தெப்பத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை தங்க சப்பரத்திலும், இரவில் வெவ்வேறு வாகனங்களிலும் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்தநிலையில் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலை தெப்ப முட்டு தள்ளுதல் மற்றும் தை கார்த்திகை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப மிதவை தயார்படுத்தும் பணி நடந்தது. பின்னர் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக தெப்பக்குளத்திற்கு வந்தார். அப்போது தெப்ப முட்டு தள்ளுதல் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து சாமி புறப்பட்டு பதினாறு கால் மண்டபம் அருகே தயாராக இருந்த தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பின்பு தேரோட்டம் நடைபெற்றது. நிலையில் இருந்த தேரை, பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா“ என்று பக்தி கோஷங்கள் எழுப்பி வடம் பிடித்து இழுத்தனர்.

    கீழ ரத வீதி, பெரிய ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக தேர் ஆனது, தென்றலாய் மெல்ல, மெல்ல ஆடி அசைந்து வலம் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (வியாழக் கிழமை) காலை தெப்ப உற்சவம் நடக்கிறது. இரவு 7 மணி அளவில் மீண்டும் மின்னொளியில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தெப்பத்திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சாமிக்கு சர்வ அலங்காரமும், விசேஷ பூஜையும் நடந்தது.

    இதனையடுத்து மேளதாளம் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு முருகப்பெருமானின் அருள் பார்வையில் தங்க முலாம் பூசப்பட்ட கம்பத்திற்கு புனித நீர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து பகல் 11.30 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவையொட்டி வருகிற 17-ந் தேதி வரை தினந்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16-ந் தேதி தை கார்த்திகை தேரோட்டமும், தெப்ப முட்டு தள்ளுதலும் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக 17-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. அன்றைய தினம் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் காலை தெப்ப மிதவையில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி அமர்ந்து 3 முறை வலம் வருதல் நடக்கிறது. மேலும் அன்று இரவு 7 மணி அளவில் மின்னொளியில் தெப்பத்திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. 
    திருப்பரங்குன்றம் மற்றும் சோலைமலை முருகன் கோவில்களில் வருகிற 8-ந்தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கி 7 நாட்கள் நடைபெற உள்ளது.
    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 8-ந்தேதி(வியாழக்கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது.

    திருவிழாவையொட்டி 8-ந்தேதி உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமிக்கும், சண்முகர் சன்னதியில் தெய்வானை மற்றும் வள்ளி சமேத சண்முகருக்கும் காப்பு கட்டுதல் நடக்கிறது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது கரங்களில் காப்பு கட்டி கடும் விரதம் தொடங்குவார்கள். திருவிழாவையொட்டி தினமும் 2 வேளை சண்முகார்ச்சனையும், ஒரு வேளை யாகசாலையும், தினமும் இரவு 7 மணி அளவில் கோவிலுக்குள் திருவாட்சி மண்டபத்தை 6 முறை சாமி வலம் வருதலும் நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி இரவு 7 மணி அளவில் கோவிலுக்குள் பணியாளர் திருக்கண்ணில் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சக்திவேல் பெற்று கம்பத்தடி மண்டபத்தில் உள்ள நந்தியை வலம் வந்து பணியாளர் திருக்கண்ணில் எழுந்தருளும் சத்திய கீரிசுவரர் முன்னிலையில் சுப்பிரமணியசாமியின் திருக்கரத்தில் சக்திவேல் சமர்ப்பிக்கப்படும். திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 13-ந்தேதி மாலை 6 மணி அளவில் சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்ஹார லீலை நடக்கிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 14-ந்தேதி காலை கிரிவல பாதையில் சட்டத்தேர் பவனியும், மாலை பாவாடை தரிசனமாக தங்க கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தங்கமயில் வாகனத்துடன் சட்டத்தேரில் எழுந்தருளும் சுப்பிரமணியசாமி கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சட்டத்தேரின் வடம் பிடித்து 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலத்தை வலம் வந்து தேரினை நிலைநிறுத்துவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    இதேபோன்று அழகர்மலை உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலையிலும் 8-ந்தேதி கந்த சஷ்டி திருவிழா விக்னேசுவரர் பூஜையுடன் தொடங்குகிறது. 13-ந்தேதி சூரசம்ஹார நிகழ்ச்சியும், 14-ந்தேதி திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெறுகிறது. முன்னதாக திருவிழாவின் ஒவ்வொரு நாளும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் தீபாவளி பண்டிகை முடிந்து 2 நாட்கள் கழித்து 8-ந்தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கி 14-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ள நிலையில், 15-ந்தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 24-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. முருகன் கோவிலில் 2 திருவிழாக்கள் 17 நாட்கள் தொடர் திருவிழாவாக நடப்பது விசேஷத்திலும் விசேஷமாக கருதப்படுகிறது.

    கந்த சஷ்டி திருவிழாவில் விரதமிருக்கும் பக்தர்கள் அனைவரிடமும் காப்பு கட்டுதல், மாவிளக்கு எடுத்தல் மற்றும் தங்குதல் கட்டணமாக தலா ரூ.45 வசூலிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் கோவில் நிர்வாகம் உபயதாரர்கள் மூலமாக பால், வாழை பழம் பெற்று அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதில் சர்க்கரை கலந்த எலுமிச்சை பழச்சாறும், சுக்கு கலந்த தினை மாவும் வழங்கப்படுகிறது. 
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அகல் விளக்குகள் விற்பனை தடை செய்யப்பட்டு, கோவிலில் அணையா விளக்கு வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக அகல் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தனர். இதனையொட்டி கோவில் நிர்வாகம் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக அகல் (நெய், எண்ணெய்) விளக்கினை விற்பனை செய்து வந்தனர். இதன் மூலம் கோவிலுக்கு வருமானம் கிடைத்து வந்தது.

    இந்தநிலையில் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அகல் விளக்கு விற்பனையை முழுமையாக தவிர்ப்பது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்து, அதன்படி சிறிது சிறிதாக அகல் விளக்கு விற்பனையை குறைத்து வந்தனர்.

    இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவின்படி நடப்பு பசலி ஆண்டான வருகிற (ஜூலை) 1-ந்தேதி முதல் அகல் விளக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்காக பாதுகாப்பான முறையில் விளக்கேற்ற அணையா (வாடா) விளக்கு ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கண்ணாடி குவளையில் முக்கோண வடிவில் சுமார் 3 அடி உயரத்தில் விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

    அணையா விளக்கின் மேல் பகுதியில் நெய் ஊற்றுவதற்காக குவளை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விளக்கு 24 மணி நேரமும் (கோவில் நடை சாத்திய பின்பும்) அணையாமல் தீபம் பிரகாசிப்பதற்காக விளக்கின் மைய பகுதியில் 15 லிட்டர் கொள்ளவு கொண்ட பாத்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

    விளக்கின் அடிப்பகுதியில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட வடிக்கட்டிய நெய்யை சேமிக்க கூடிய பாத்திரமும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் தாங்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வரும் நெய்யை ஊற்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த அணையா விளக்கு கோவிலுக்குள் 6 இடங்களில் வைக்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலின் துணை கோவிலான சொக்கநாதர் கோவிலிலும் ஒரு அணையா விளக்கும் வைக்கப்பட உள்ளது.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக அகல் விளக்குகள் விற்று கோவிலுக்கு வருமானத்தை பெற்று தந்த கோவில் நிர்வாகம், அணையா விளக்கில் தீபம் ஏற்றுவதற்காக, 50, 100 கிராம் நெய் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்து சமய அறநிலைய துறை கமிஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகப்பொருமானுக்கு முக்கனி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் ஆனி மாதத்தில் நடைபெறும் ஊஞ்சல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான ஆனி ஊஞ்சல் திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது.

    திருவிழா நடைபெற்ற 10 நாட்கள் தினமும் இரவில் உற்சவர் சன்னதியில் இருந்து திருவாட்சி மண்டபத்திற்கு மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் வலம் வருதலும், திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் முருகப்பெருமான் அமர்ந்து ஊஞ்சலாடல் உற்சவம் நடைபெற்றது

    இந்தநிலையில் நேற்று திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக முக்கனிபூஜை நடைபெற்றது. இதனையொட்டி கோவிலின் கருவறையில் உள்ள முருகப்பெருமான், துர்க்கை அம்மன், கற்பக விநாயகர், சத்தியகீரிஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் படைக்கப்பட்டு மகா பூஜைகள் நடைபெற்றது.

    இதேபோல கோவிலுக்குள் உள்ள அனைத்து சன்னதியிலும், சாமிகளுக்கு முன்பாக முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. 
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு 900 கிராம் எடையுள்ள ரத்ன கீரிடம், 450 கிராம் எடையுள்ள தங்க சிம்மாசனம், 200 கிராம் அளவிலான தங்கரேக்கில் திருவாட்சி ஆகியவை காணிக்கையாக வழங்கப்பட்டன.
    திருப்பரங்குன்றம் ஸ்கந்தகுரு வித்யாலய வேதசிவகாம பாடசாலையின் 25-வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவில் 2-வது ஸ்தானிக பட்டரும், பாடசாலையின் முதல்வருமான ராஜா பட்டர் தலைமையில், பாடசாலை முன்னாள் மாணவர்கள் சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு 900 கிராம் எடையுள்ள ரத்ன கீரிடம், 450 கிராம் எடையுள்ள தங்க சிம்மாசனம், 200 கிராம் அளவிலான தங்கரேக்கில் திருவாட்சி ஆகியவை காணிக்கையாக வழங்கப்பட்டன.

    இதனை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து. கண்ணன் பெற்றுக்கொண்டு, அதனை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் நடராஜனிடம் வழங்கினார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன்கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) மாரிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் தெய்வானையுடனான முருகப்பெருமானுக்கு புதிய ரத்தின கீரிடம் சூட்டப்பட்டு, தங்க திருவாட்சி, தங்கசிம்மாசனத்தில் சாமி எழுந்தருளியது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

    தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பாடசாலை முன்னாள் மாணவர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றுவதை தவிர்க்கும் வகையில் 7 இடங்களில் அணையா விளக்குகள் வைக்கப்பட உள்ளது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வருகிறார்கள். நெய் விளக்கு விற்பனை உரிம ஏலத்தை தனியார் ஏற்றிருந்த நிலையில் 2013-ம் ஆண்டில் இருந்து கோவில் நிர்வாகம நேரடியாக மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நெய் விளக்கு விற்பனையை செய்து வந்தது. இதன் மூலம் கோவிலுக்கு பல மடங்கு வருமானம் கிடைத்ததோடு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்தது.

    இந்த நிலையில் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து திருப்பரங்குன்றம் கோவிலில் நெய் விளக்கு விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவுப்படி கோவிவில் அணையா விளக்கு அமைக்கப்பட்டு அதில் பக்தர்கள் நெய் விட்டு வழிபட ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) மாரிமுத்து கூறுகையில், சராசரியாக 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட அணையா (வாடா) விளக்குகள் 7 இடங்களில் வைக்கப்பட உள்ளது. இதற்காக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் வாடா விளக்குகள் வைக்கப்படும் இதே போல சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவிலிலும் வைக்கப்படும் என்றார்.

    அணையா விளக்குகள் பயன்படுத்தும் பட்சத்தில் அகல் விளக்கில் நெய் விளக்கு ஏற்றுவது முழுமையாக தவிர்க்கப்படும் என்று தெரிகிறது. 
    ×