என் மலர்
இந்தியா
- பிரதமரின் அலுவலகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் ஆளுநர்களுக்கு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது
- தங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வருவதாக அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு, காங்கிரஸ் மற்றும் அக்கட்சி ஆளாத மாநில அரசுகளுக்கு முட்டுக்கட்டை போடவும், தொந்தரவு அளிக்கவும் ஆளுநர்களை "கைப்பாவைகளாக" பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே சனிக்கிழமை குற்றம் சாட்டினார்.
கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கார்கே, பிரதமரின் அலுவலகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் ஆளுநர்களுக்கு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பிப்பதாகவும், குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் தயாரித்துக் கொடுக்கும் உரைகளை வாசிக்க வேண்டாம் என்று அவர்களைத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
"இது கர்நாடகாவோடு மட்டும் நின்றுவிடவில்லை. தமிழ்நாடு, கேரளா மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியில் உள்ள மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது," என்று அவர் கூறினார். தொடர்ந்து கர்நாடக அரசுக்கும், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிற்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலைக் குறிப்பிட்ட கார்கே, ஆளுநர்கள் வேண்டுமென்றே மசோதாக்களைத் தாமதப்படுத்துவதாகவும், திருப்பி அனுப்புவதாகவும், மேலும் ஆட்சி நிர்வாகத்தை முடக்குவதற்காக ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பதாகவும் கூறினார்.
"தங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வருவதாக அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த அரசு நாட்டை தவறான பாதையில் அழைத்துச் செல்கிறது," என்று அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மாற்றம் குறித்து பேசிய கார்கே, மக்களின் நலன் சார்ந்த சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் எந்தவொரு முயற்சியையும் காங்கிரஸ் எதிர்க்கும் என்று கூறினார்.
"எந்தவொரு கட்சியும் எப்போதும் ஆட்சியில் இருப்பதில்லை, ஆனால் நாடு நிலையானது," என்று கூறிய அவர், பாஜக அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் விட ஆர்எஸ்எஸ் மற்றும் தனது கட்சிக்கே முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
- தமிழ்ப் பாடம் கற்பிப்பதுடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன.
- கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு சங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியப் பண்டிகைகள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகின்றன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகள், அனைத்து வகையான கலாச்சாரத்தையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
மலேசியாவில் உள்ள நமது இந்தியச் சமூகமும் இது தொடர்பாக பாராட்டத்தக்க பணியைச் செய்து வருகிறது. மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. தமிழ்ப் பாடம் கற்பிப்பதுடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன.
மேலும், தெலுங்கு, பஞ்சாபி மொழிகளுடன் மற்ற இந்திய மொழிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு சங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதன் பெயர் 'மலேசியா இந்திய பாரம்பரிய சங்கம்'. கடந்த மாதம், மலேசியாவில் 'லால் பாட் சேலை'அணிவகுப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சேலைக்கு நமது வங்காளக் கலாச்சாரத்துடன் ஒரு சிறப்புத் தொடர்பு உண்டு.
இந்த நிகழ்வு, இந்தச் சேலையை அதிக எண்ணிக்கையிலான மக்கள் அணிந்ததற்காக ஒரு சாதனையை நிகழ்த்தியது, இது மலேசிய சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியப் பொருள் என்றாலே 'உயர்தரம்' என்ற அர்த்தம் ஏற்பட வேண்டும்.
- நாம் உற்பத்தி செய்யும் எந்தப்பொருளாக இருந்தாலும், அதன் தரத்தை மேம்படுத்துவோம் என்று உறுதி ஏற்போம்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
தனது 130-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தேசிய வாக்காளர் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு இளைஞர் முதல் முறையாக வாக்காளராகும்போது நாம் பிறந்த நாளை விரும்பி கொண்டாடுவது போலவே அவருக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்க வேண்டும். இது வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, வாக்காளராக இருப்பது எவ்வளவு முக்கியம் என்ற உணர்வை ஏற்படுத்தும்.
செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து, பசுமை ஹைட்ரஜன், உயிரிதொழில்நுட்பம் என நீங்கள் எதை குறிப்பிட்டாலும், அந்தத் துறையில் ஏதேனும் ஒரு இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனம் செயல்படுவதை காண்பீர்கள்.
ஏதேனும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்துடன் தொடர்புடைய அல்லது சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க விரும்பும் இளம் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் உற்பத்தி செய்யும் எந்தப்பொருளாக இருந்தாலும், அதன் தரத்தை மேம்படுத்துவோம் என்று உறுதி ஏற்போம். ஜவுளி, தொழில் நுட்பம், மின்னணு வியல் அல்லது பேக்கேஜிங் என எதுவாக இருந்தாலும், ஒரு இந்தியப் பொருள் என்றாலே 'உயர்தரம்' என்ற அர்த்தம் ஏற்பட வேண்டும். சிறப்பையே நமது அளவு கோலாக கொள்வோம்.
இந்தியப் பொருட்கள் உயர்தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும். இன்று இந்தியா உலகின் 3-வது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியுள்ளது. இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறானவை.
10 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத துறைகளில் அவை செயல்படுகின்றன. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
இந்தியாவில் உள்ள குடும்ப அமைப்பு நமது பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இது உலகின் பல நாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது.
பல நாடுகளில், இத்தகைய குடும்ப அமைப்புகள் மிகவும் மதிக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு, எனது சகோதரரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரு மான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். ஐக்கிய அரபு அமீரகம் 2026-ம் ஆண்டை 'குடும்ப ஆண்டு' ஆக கொண்டாடுகிறது என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- பிற நாடுகளால் தேடப்படும் 203 குற்றவாளிகள் இந்தியாவில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
- 2024-25 ஆண்டுகளுக்கு இடையில் வெளிநாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் பட்டியலில் உள்ள 70 இந்தியக் குற்றவாளிகள் 2024-25 ஆண்டுகளுக்கு இடையில் வெளிநாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பல கோடி மோசடி செய்து தப்பிய விஜய் மல்லையா, லலித் மோடி உள்ளிட்டோரும் இதில் அடங்குவர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தேடப்படும் பட்டியலில் இருந்தவர்களில் 27 பேர் கடந்த ஓராண்டில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும் விசாரணைக்கு ஒத்துழைப்புக் கோரியும் இந்தியப் புலனாய்வு அமைப்புகள் வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கு 74 கடிதங்களை அனுப்பியுள்ளன.
இதில் 54 கடிதங்கள் சிபிஐ சார்பிலும், 20 கடிதங்கள் மாநிலப் புலனாய்வு அமைப்புகள் சார்பிலும் அனுப்பப்பட்டுள்ளன.
அதே வேளையில், பிற நாடுகளால் தேடப்படும் 203 குற்றவாளிகள் இந்தியாவில் இருப்பதாகவும் மத்திய அரசின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
- பல வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்துக் குழு கவலை தெரிவித்துள்ளது.
- போலீசார் மக்கள் மீது அளவுக்கு அதிகமான பலத்தைப் பிரயோகிப்பது மற்றும் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளது.
முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா தலைமையில் பாஜக ஆளும் அசாமில் வாழும் வங்காள மொழி பேசும் முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்டப்படும் கடுமையான பாகுபாடுகள் குறித்து ஐநா சபை கவலை தெரிவித்து கடிதம் எழுதி உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு (CERD) இந்தியாவுக்கு அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் அசாமில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், அசாமில் அமலில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) நடைமுறையில் நிலவும் பாகுபாடுகள் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பல வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்துக் குழு கவலை தெரிவித்துள்ளது.
மாற்று இடம் அல்லது இழப்பீடு வழங்காமல் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம், வங்க மொழி பேசும் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் செயல்கள், போலீசார் மக்கள் மீது அளவுக்கு அதிகமான பலத்தைப் பிரயோகிப்பது மற்றும் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் குறித்துக் கடிதத்தில் CERD சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்கனவே இது தொடர்பாக இந்தியா அளித்த பதிலில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முறையான விவரங்கள் இல்லை என்று CERD அதிருப்தி தெரிவித்துள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு உடனடியாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அடுத்த முறை இந்தியா சமர்ப்பிக்கும் அறிக்கையில் தீர்வுகள் குறித்து விரிவாக விளக்க வேண்டும் என்றும் ஐநா குழு கேட்டுக் கொண்டுள்ளது.
- மறுநாள் காலை மக்கள் பார்த்தபோது பாலம் இருந்த இடமே தெரியாமல் மறைந்திருந்தது.
- 2022-ல் பீகாரில் இதே பாணியில் ஒரு பாலம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மாநிலம் கோர்வா நகரில், சுமார் 40 ஆண்டுகள் பழமையான 10 டன் எடையுள்ள இரும்புப் பாலம் ஒன்றை மர்ம நபர்கள் ஒரே இரவில் துண்டு துண்டாக வெட்டித் திருடிச் சென்றுள்ளனர்.
40 ஆண்டு பழமையான பாலம் ஜனவரி 16 இரவு 11 மணி வரை அங்கு தான் இருந்தது. ஆனால் மறுநாள் காலை மக்கள் பார்த்தபோது பாலம் இருந்த இடமே தெரியாமல் மறைந்திருந்தது.
இதுதொடர்பாக நடந்த விசாரணையில், சுமார் 15 பேர் கொண்ட திருட்டு கும்பல், Gas cutter- உபகரணங்களை பயன்படுத்திப் இரவோடு இரவாக பாலத்தை சிறு துண்டுகளாக வெட்டி, லாரிகளில் ஏற்றிச் சென்றது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட பாலின் சில இரும்புத் துண்டுகளையும் போலீசார் ர் மீட்டுள்ளனர்.
முன்னதாக 2022-ல் பீகாரில் இதே பாணியில் ஒரு பாலம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றும் காங்கிரஸ் ஆதரவு வாக்குச் சாவடிகளின் வாக்குகள் தேடித் தேடி நீக்கப்பட்டுள்ளன.
- இதன் மூலம் மக்கள் அல்ல, மாறாக யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதை பாஜகவே தீர்மானிக்கிறது.
பீகாரை தொடர்ந்து தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், குஜராத் உட்பட 10 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) நடைபெற்று வருகிறது.
இதில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையானது திட்டமிட்டு வாக்குகளைத் திருடும் கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "எங்கெல்லாம் SIR நடக்கிறதோ, அங்கெல்லாம் வாக்குத் திருட்டு நடக்கிறது.
குறிப்பாக குஜராத்தில் SIR என்ற பெயரில் செய்யப்படுபவை எவ்விதமான நிர்வாக நடைமுறையும் அல்ல. இது திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் வியூகத்துடன் செய்யப்படும் வாக்குத் திருட்டு.
மிகவும் அதிர்ச்சிகரமான மற்றும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், ஒரே ஒரு பெயரில் ஆயிரக்கணக்கான ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றும் காங்கிரஸ் ஆதரவு வாக்குச் சாவடிகளின் வாக்குகள் தேடித் தேடி நீக்கப்பட்டுள்ளன.
எங்கெல்லாம் பாஜகவிற்குத் தோல்வி பயம் தெரிகிறதோ, அங்கெல்லாம் வாக்காளர்களையே அமைப்பிலிருந்து மறைந்து போகச் செய்கிறார்கள்.
இதே போன்ற ஒரு முறைதான் ஆலந்திலும், ராஜூராவிலும் நடந்தது. இப்போது அதே Blueprint குஜராத், ராஜஸ்தான் மற்றும் SIR திணிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அமல்படுத்தப்படுகிறது.
ஒரு நபர், ஒரு வாக்கு என்ற அரசியலமைப்பு உரிமையை அழிப்பதற்கான ஆயுதமாக SIR மாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் அல்ல, மாறாக யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதை பாஜகவே தீர்மானிக்கிறது.
மற்றும் மிகக் கசப்பான உண்மை என்னவென்றால், தேர்தல் ஆணையம் இப்போது ஜனநாயகத்தின் காவலனாக இல்லை, மாறாக இந்த வாக்குத் திருட்டுச் சதியின் முக்கியப் பங்காளியாக மாறிவிட்டது." என்று சாடியுள்ளார்.
- இந்தியாவின் குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.
- இன்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் குடியரசு தினம் நாளை (26-ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த உரை ஆகாசவாணியில் நாடு முழுவதும் மாலை 7 மணி முதல் ஒலிபரப்பப்படும். மேலும் தூர்தர்ஷனின் அனைத்துச் சேனல்களிலும் இந்தியில் ஒளிபரப்பப்பட்டு, தொடர்ந்து ஆங்கில பதிப்பு ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்களில் பிராந்திய மொழிகளில் ஜனாதிபதியின் உரை ஒளிபரப்பு செய்யப்படும்.
- பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம்.
- பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
புதுடெல்லி:
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
- பெண் ஒருவரை காதலித்து வந்ததால் நீட் தேர்வில் வென்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் மட்டுமே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும்
- சூரஜ்க்கு சிகிச்சை முடிந்ததும் அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
உத்தரப் மாநிலம் ஜான்பூரை சேர்ந்த 20 வயதான சூரஜ் பாஸ்கர் என்ற மாணவர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்காக படித்து வந்தார்.
ஏற்கனவே 2 முறை நீட் தேர்வில் தோற்ற அவர் அடுத்த முறை எப்படியும் வென்று விட வேண்டும் என தீவிரமாக இருந்துள்ளார்.
சூரஜ், பெண் ஒருவரை காதலித்து வந்ததால் நீட் தேர்வில் வென்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் மட்டுமே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிர்பந்தத்திலும் இருந்துள்ளார்.
எனவே நீட் தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண் குறைவாக இருந்தாலும், மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு இருந்தால் எளிதாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்று அவர் நினைத்துள்ளார்.
எனவே அவர் தனது ஒரு காலில் உள்ள 4 விரகலை அவரே துண்டித்துள்ளார். வலிக்காமல் இருக்க அனஸ்தீசியா மருந்து செலுத்திக்கொண்டு இந்த காரியத்தை அவர் செய்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரவு தன்னை யாரோ தாக்கியதில் அவ்வாறு ஆனதாக கூறியுள்ளார். இந்த விஷயம் காவல்துறை கவனத்துக்கு செல்லவே, அவர்கள் சூரஜ் உடைய போனை ஆராய்ந்ததில் அவருக்கு காதலி இருப்பதை அறிந்து அவரை தொடர்பு கொண்டுள்ளனர். இறுதியில் விசாரணையில் உண்மை வெளிவந்தது.
சூரஜ்க்கு சிகிச்சை முடிந்ததும் அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும் டிசம்பர் 21 முதல் ஜனவரி 30 வரையிலான 40 நாட்கள் 'சில்லாய் காலன்' என்று அழைக்கப்படுகிறது.
- வீடுகள், சாலைகள் அனைத்தும் பனியால் மூடப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும் டிசம்பர் 21 முதல் ஜனவரி 30 வரையிலான 40 நாட்கள் 'சில்லாய் காலன்' என்று அழைக்கப்படுகிறது.
இது மிகவும் கடுமையான குளிர் நிலவும் காலமாகும். தற்போது அந்த உச்சக்கட்ட குளிர் நிலவி வருகிறது.
பள்ளத்தாக்கு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாகக் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
எங்குப் பார்த்தாலும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போலப் பனி படர்ந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் இதனை ரசித்தாலும், போக்குவரத்து பாதிப்பால் உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வீடுகள், சாலைகள் அனைத்தும் பனியால் மூடப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
காந்தர்பால், ரஜௌரி, வைஷ்ணோ தேவி கோயில் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
சாலைகளில் பல அடி உயரத்திற்குப் பனி தேங்கியுள்ளதால், முக்கியச் சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் ரெயில் சேவை மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இயந்திரங்களின் உதவியுடன் பனியை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
- பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் கொடி மற்றும் பதாகைகளை அமைத்திருந்தனர்.
- பா.ஜ.க. நகர, மாவட்ட தலைவர்களுக்கு அபராத அறிவிப்பும் அனுப்பப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து, புதிய ரெயில் இயக்கத்தை தொடங்கி வைத்ததோடு, பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதையொட்டி அவரை வரவேற்று பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் கொடி மற்றும் பதாகைகளை அமைத்திருந்தனர். இது தற்போது பிரச்சினைக்குரியதாக மாறி உள்ளது.
கொடி மற்றும் பதாகைகள் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் தம்பானூர், கண்டோன்மென்ட் மற்றும் அருங்காட்சியக போலீசில் மாநகராட்சி இது தொடர்பாக புகாரும் அளித்துள்ளது. அதன்பேரில் கண்டடோன்மென்ட் போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
கேரளாவில் முதல்முறையாக உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதிய ஜனதா கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு அந்தக் கட்சியை சேர்ந்தவர் மேயராக உள்ள சூழலில், இந்த புகார் கொடுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அனுமதியின்றி பொது இடங்களில் நெகிழ்வு பலகைகள், கொடிகள் மற்றும் பதாகைகளை வைத்ததற்காக, பா.ஜ.க. நகர மாவட்டக் குழுவிற்கு திருவனந்தபுரம் மாநகராட்சி ரூ.19.7 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
இது பற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகளை 2 மணி நேரத்திற்குள் அகற்றுமாறு பாரதிய ஜனதா நிர்வாகிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டது. இருப்பினும், நடைபாதைகளின் குறுக்கே அமைக்கப்பட்ட பலகைகளை அகற்றுவதைத் தவிர, கட்சியிடமிருந்து குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் தான் தற்போது அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. பதாகைகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை பின்பற்றத் தவறியதால், பா.ஜ.க. நகர, மாவட்ட தலைவர்களுக்கு அபராத அறிவிப்பும் அனுப்பப்பட்டது என்றார்.
இதற்கிடையில் பதாகைகள் வைக்கப்பட்டது தொடர்பாக கேரள ஐகோர்ட்டும் அதிருப்தி தெரிவித்து இருந்தது. தெளிவான நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் பொது இடங்களில் அங்கீகரிக்கப்படாத பலகைகள் மற்றும் கொடிகள் தொடர்ந்து நிறுவப்படுவது குறித்து வேதனை தெரிவித்ததது.
இது தொடர்பாக மாநகராட்சி வக்கீல் கூறுகையில், புகார்கள் வந்தவுடன், பொறுப்பான நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது உட்பட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இருப்பினும், வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது. தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் பொது இடங்களை அபகரிக்கும் வளர்ந்து வரும் கலாச்சாரம் மாற வேண்டும் என்றும் ஐகோர்ட்டு குறிப்பிட்டது.






