search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian PM Modi"

    • மோடிக்கு லூவர் அருங்காட்சியகத்தில் பெரிய விருந்து அளிக்கப்பட்டது
    • ஜெய்பூரில் பிரான்ஸ் அதிபருக்கு பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    கடந்த வருடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு 2-நாள் அரசியல் சுற்று பயணம் மேற்கொண்டார். "இந்தியா, உலக சரித்திரத்தில் ஒரு பெரிய நாடு" என அப்போது பிரான்ஸ் அதிபர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் (Louvre Museum) பிரதமர் மோடிக்கு மிக பெரிய விருந்து அளிக்கப்பட்டது. இதையொட்டி, அந்த அருங்காட்சியகத்திற்கு பார்வையாளர்கள் வருவது தடை செய்யப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் வருகை தடை செய்யப்படுவது அதன் சரித்திரத்தில், 60 வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம்தான் முதல் முறையாக நடைபெற்றது.

    இந்நிலையில், வரும் ஜனவரி 26 அன்று இந்தியாவின் 75-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

    இதில் பிரதம விருந்தினராக பங்கேற்கும் வகையில் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான் (Emmanuel Macron) இந்தியாவிற்கு வர உள்ளார்.

    முன்னதாக ஜனவரி 25 அன்று பிரான்ஸ் அதிபருக்கு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில், மிக பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட உள்ளது.

    தற்போது இந்தியா வரும் மேக்ரானின் சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ராணுவ மற்றும் தொழில்துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

    இரு துறைகளுக்கும் தேவைப்படும் உபகரண உற்பத்தியில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என தெரிகிறது. குறிப்பாக, கனரக விமான எஞ்சின்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய பிரான்ஸின் உதவி பெறப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேக்ரானின் வருகை சம்பந்தமான முன்னேற்பாடுகள் குறித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரான்ஸ் அரசாங்க ஆலோசகர் எம்மானுவல் பான் (Emmanuel Bonne) ஆகியோர் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.

    • ஸ்வநிதி யோஜனாவில் கடன் தொகையில் 7 சதவீதம் மானியமாக வழங்கப்படும்
    • ஆத்மநிர்பார் பாரத் 140 கோடி இந்தியர்களுக்கான திட்டம் என்றார் அமித் ஷா

    கடந்த 2020 ஜூன் மாதம், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வரை வட்டியில்லாமல் கடனாக வழங்கும் "ஸ்வநிதி யோஜனா" (SVANidhi Yojana) எனும் திட்டம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான அமைச்சரவையால் தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்தின்படி, முதல் முறை பெறும் கடனை அடைத்ததும், வியாபாரிகளுக்கு தொடர்ந்து ரூ. 20 ஆயிரமும், அந்த கடன் அடைந்ததும், ரூ. 50 ஆயிரமும் கடனாக வழங்கப்படும்.

    கடன் பெறும் தொகையில் 7 சதவீதம் மானியமாக அரசு வழங்கும்.

    குஜராத் மாநில அகமதாபாத் நகரில், அகமதாபாத் முனிசிபல் கார்பரேஷன் ஏற்பாடு செய்திருந்த இத்திட்டத்தின் பயனாளிகளின் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    ஆத்மநிர்பார் பாரத் (Atmanirbhar Bharat) எனும் சுயசார்புள்ள பாரதத்திற்கான திட்டத்தை பிரதமர் மோடி விளக்கி உள்ளார். இது ஒரு தொலைநோக்குள்ள திட்டம்.

    விண்வெளித்துறை மற்றும் ராணுவம் உட்பட அனைத்திலும் சுயசார்பு நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதன் மூலம் நமது வர்த்தகம், தொழில்துறை மட்டுமின்றி 140 கோடி இந்தியர்களும் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும்.

    வறுமைகோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் நிலையை மேலே கொண்டு வர பிரதமர் மிகவும் கவனம் செலுத்தி திட்டங்களை வகுக்கிறார். தற்போது வரை வறுமையிலிருந்து 60 கோடி மக்களை மீட்டுள்ளார். உலகிலேயே கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக ஒரு உள்நாட்டு தடுப்பூசி இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறு அமித் ஷா கூறினார்.

    இக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் பங்கு பெற்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் அலுவலகத்திற்கு குழந்தைகள் வந்திருந்தனர்
    • மறக்க முடியாத தருணங்கள் என குறுஞ்செய்தியையும் பதிவிட்டுள்ளார் பிரதமர்

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

    இன்று அவரை காண சில குழந்தைகள் அவரது அலுவலகத்திற்கு வந்தார்கள்.

    அவர்களுடன் பிரதமர் மோடி மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டார். அப்போது அவர்களை மகிழ்விக்கும் வகையில் சில 'மேஜிக்' செய்து காட்டினார். இதில் ஒரு நாணயத்தை குழந்தைகளின் நெற்றியில் ஒட்டி அதனை மறைய செய்தார். அதை குழந்தைகள் ரசித்தனர்.

    இந்த சம்பவத்தின் வீடியோவை தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் பிரதமர் பதிவிட்டார். அது இணையத்தில் பரவி வருகிறது. அதில் "எனது இளைய நண்பர்களுடன் சில மறக்க முடியாத தருணங்கள்" என ஒர் குறுஞ்செய்தியையும் பதிவிட்டுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட "ரக்ஷாபந்தன்" பண்டிகையின் போது சில குழந்தைகள் அவரை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • பொதுத்துறை வங்கிகள் விடுமுறை இன்றி இயங்கும் என மோடி அறிவித்தும் அவை இயங்கவில்லை
    • புதிய நோட்டுக்கள் வேறு நீள, அகல பரிமாணங்களுடன் வெளிவந்தன

    கடந்த 2016 நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அன்று, இரவு சுமார் 08:15 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் ஒரு திட்டமிடப்பட்டாத அவசர உரையாற்றினார்.

    அந்த உரையில், அப்போது வரை புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அப்போதிலிருந்து செல்லாது என்றும் மக்கள் தங்கள் வசமுள்ள நோட்டுக்களை 2016 டிசம்பர் 30 வரை வங்கிகளில் கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களாக மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.


    இதற்காக டிசம்பர் மாதம் வரை அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும் என பிரதமர் அறிவித்திருந்தார். ஆனால், ஒரே ஒரு வாரம் மட்டும் அவ்வாறு செயல்பட்ட பொதுத்துறை வங்கிகள், மக்கள் சிரமத்தில் இருந்தும் தங்கள் விடுமுறையை விட்டுக்கொடுக்காமல் பிரதமரின் அறிவிப்புக்கு எதிராக செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    சட்டத்திற்கு புறம்பான வழியில் நடக்கும் "ஹவாலா" பணபரிமாற்றம், கள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள், வருமானவரி கட்டாமல் பெரும் செல்வந்தர்கள் பதுக்கி வைத்த கருப்பு பணம் ஆகியவற்றின் மூலம் நடக்கும் பரிமாற்றம் "கருப்பு பொருளாதாரம்" என அழைக்கப்படும். இதற்கு எதிராக எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு முக்கிய அம்சமாகவும், இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணத்தில் சம்மட்டி அடியை கொடுக்கவும், இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அப்போதைய இந்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அதிகளவில் வைத்திருப்பவர்கள் வங்கியில் தங்கள் பணத்தை செலுத்தி விகிதாசார முறையில் தினமும் புதிய நோட்டுக்களை பெற்று கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.

    ஆனால், கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் இதன் மூலம் தாங்கள் எதிர்காலத்தில் வருமான வரி துறையிடம் சிக்கி கொள்ள நேரிடும் என்பதால் இதற்கு முன்வரவில்லை. ஒரு சில வங்கி அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் உதவியுடன் வங்கியில் இருந்து புதிய நோட்டுக்களை ரகசியமாக பெற்று கொண்டு, கணக்கில் காட்டாமல் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.

    2016 நவம்பர் 8லிருந்து டிசம்பர் 30 வரை, சுமார் 50 நாட்கள் மக்கள் வங்கிகளில் தங்கள் வசம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ள மிக நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் பணம் இல்லாமல் தங்கள் தேவைகள் தடைபட்டு சிலர் இறந்ததாகவும் தகவல் வெளியாகியது. மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், பெறவும் மக்கள் பெரிதும் சிரமப்பட வேண்டியிருந்தது.

    மத்திய ரிசர்வ் வங்கி அவசர அவசரமாக அச்சடித்து வெளியிட்ட புதிய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் புது நீள, அகல பரிமாணங்களை கொண்டிருந்ததால் பணம் வழங்கும் இயந்திரங்களையே (ATM) புதுப்பிக்க வேண்டியிருந்தது. இது குழப்பத்தை மேலும் அதிகரித்தது.


    இந்தியாவின் சில்லறை வர்த்தகத்திலும், மொத்த விற்பனையிலும் பெரும் பங்கு வகிக்கும் இந்த நோட்டுக்கள் திடீர் என செல்லாததாக அறிவிக்கப்பட்டதால், மக்கள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்தனர்.

    அன்றிலிருந்து இந்திய பொருளாதாரம் சுமார் 1 வருடத்திற்கு ஸ்தம்பித்தது.

    அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 2023 ஜனவரி மாதம், "அரசின் நடவடிக்கையில் தவறு ஏதும் இல்லை" என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    ஆனால், அப்போது மக்களிடம் அறிமுகம் பெற தொடங்கிய டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை, தற்போது வரை மிகவும் பிரபலமாக உள்ளது. உலகிலேயே வல்லரசு நாடுகளை காட்டிலும் அதிகமாக டிஜிட்டல் பணப்புழக்கம் இந்தியாவில்தான் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டிஜிட்டல் பணப்பரிமாற்ற வழிமுறையில் யாரிடமிருந்து, எவருக்கு, எப்போது, எவ்வளவு பணம் செலுத்தப்பட்டது என்பதை துல்லியமாக அறிந்து கொண்டு பண வழித்தடத்தை (money trail) கண்டறிவது அரசுக்கு சுலபம் என்பதால் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றங்களில் ஈடுபடுபவர்கள் எதிர்காலத்தில் அரசிடம் சிக்கி கொள்வார்கள் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



    2016, நவம்பர் 8 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களும் சமீபத்தில் மத்திய ரிசர்வ் வங்கியால் திரும்ப பெற்று கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அரசின் நோக்கங்கள் திட்டமிட்டபடி நிறைவேறியதா அல்லது தோல்வியுற்றதா என்பது குறித்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தற்போது வரை நிலவுகின்றன.

    இன்று நவம்பர் 8, பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட தினம். அரசின் முடிவை விமர்சித்தாலும், இந்தியர்கள் எங்கும் போராடாமல் அமைதி காத்து மத்திய ரிசர்வ் வங்கியுடன் ஒத்துழைத்தனர்.

    7 வருடங்கள் கடந்தும் மக்கள் அந்த காலகட்டத்தில் தாங்கள் பட்ட இன்னல்களை மறக்கவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2020, ஆகஸ்ட் 5 அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
    • இது ஒன்றும் ஒரு தனி நபர் நிகழ்ச்சி அல்ல என்றார் குர்ஷித்

    உலகெங்கும் உள்ள இந்துக்களின் தெய்வமான ஸ்ரீஇராமபிரான் அவதரித்த தலமான அயோத்தியில் அவருக்கு ஒரு மிக பிரமாண்ட ஆலயத்தை கட்ட முடிவு செய்து 2.77 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்ரீ ராம்ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா" (Shri Ramjanmabhoomi Teerth Kshetra) எனும் ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டு அவர்கள் மேற்பார்வையில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது அவை முடியும் தறுவாயில் உள்ளன.

    2020, ஆகஸ்ட் 5 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதற்கான அடிக்கல்லை நாட்டி, கட்டிட திருப்பணிகளை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "பகவான் ஸ்ரீஇராமரின் விக்கிரகம் அடுத்த வருடம் ஜனவரி 22 அன்று இத்திருக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்படும். 'பிரான் பிரதிஷ்டா' எனப்படும் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு டிரஸ்டின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அழைத்துள்ளோம். அவரும் வருவதாக ஒப்பு கொண்டுள்ளார்", என கடந்த அக்டோபர் 22 அன்று இந்த டிரஸ்டின் பொது செயலாளர் சம்பத் ராய் (Champat Rai) தெரிவித்தார்.

    "சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை எனது பாக்கியமாக கருதுகிறேன்" என இந்த அழைப்பு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த அழைப்பு குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் தெரிவித்திருப்பதாவது:

    ஒரு கட்சிக்கு (பா.ஜ.க.) மட்டும் தான் அழைப்பிதழா? யார் வருவார்கள், வர மாட்டார்கள் என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது. ஆனால், 'கடவுள்' ஒரே ஒரு கட்சிக்கு மட்டும் உரியவராகி விட்டாரா என்ன? அனைத்து கட்சியினரையும் பாகுபாடு இன்றி அழைக்க வேண்டாமா?. இந்த முக்கிய விழா ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமான நிகழ்வாக மாறி விட்டது. இது ஒரு கட்சி நிகழ்வோ, தனி நபர் நிகழ்ச்சியோ அல்ல. அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட வேண்டும்.

    இவ்வாறு குர்ஷித் கூறினார்.

    குடும்பங்களில் முக்கிய நிகழ்வுகளுக்கு அழைக்கப்படாத உறவினர்கள் "எனக்கு ஏன் அழைப்பு வைக்கவில்லை?" என குற்றம் சாட்டுவதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பயனர்கள் குர்ஷித்தின் கருத்து குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இஸ்ரேலில் பிரதமர் மோடி மிகவும் விரும்பப்படும் தலைவர்
    • பிரதமர் மோடி உடனடியாக கண்டனம் தெரிவித்தார்

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போர் 11-வது நாளாக தொடர்கிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலன் (Naor Gilon) இந்தியாவின் நிலைப்பாட்டை குறித்து கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் சிக்கலை தீர்க்க இஸ்ரேல் தற்போது முயலவில்லை. இப்பொழுது புதியதாக எழுந்திருக்கும் தீவிர பிரச்சனையை தீர்க்க போராடுகிறோம். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்தால்தான் மீண்டும் இது போன்ற தாக்குதல்கள் நடக்காது.

    இந்தியா மீது இஸ்ரேல் நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலில் மிகவும் விரும்பப்படும் தலைவர். பிற நாடுகளை விட இந்தியாவின் மீதுதான் இஸ்ரேலியர்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

    அக்டோபர் 7 அன்று நடைபெற்ற பயங்கர தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவும் எங்கள் பக்கம் நின்றது. மோடி உடனடியாக கண்டனம் செய்தார். பிற நாட்டினர் உடனடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை; பிறகுதான் தெரிவித்தனர்.

    அமெரிக்கர்கள் எங்களுக்கு துணை நிற்கின்றனர். மேலும் அமெரிக்கர்களுக்கு இந்தியாவுடன் தற்போது வலுவான உறவு உள்ளது. நாங்கள் இந்தியாவை நம்புவதால், அவர்கள் எங்கள் பிரச்சனையில் தலையிடுவதை நாங்கள் வரவேற்கிறோம்.

    சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் இஸ்ரேலில் வசிக்கின்றனர். அதில் சுமார் 1000 இந்தியர்கள் மட்டுமே இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பினார்கள்; அவர்களையும் நாங்கள் பத்திரமாக அனுப்பி வைத்தோம்.

    இவ்வாறு நவோர் கிலான் தெரிவித்தார்.

    • இஸ்ரேல்-ஹமாஸ் போர் 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது
    • இந்தியா இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளது

    கடந்த சனிக்கிழமை, பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர் தொடர்ந்திருக்கிறது.

    தற்போது 5-வது நாளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஹமாஸ் அமைப்பை கத்தார், ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் ஆதரிக்கின்றன.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என தெரிவித்தார். ஆனால், இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்திருக்கிறது.

    இந்நிலையில், சீனா இப்போரில் யாரை ஆதரிக்கிறது என இதுவரை தெளிவாக கூறவில்லை.

    "இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும். பகைமையை கைவிட்டு பொது மக்களை காக்கவும், தற்போதைய சூழ்நிலை மேலும் மோசமடையாமல் கண்காணிக்கவும் இரு தரப்பையும் கேட்டு கொள்கிறோம். அனைத்து விதமான வன்முறையையும் பொதுமக்களின் மீதான தாக்குதலையும் கண்டிக்கிறோம்" என சீனா அறிக்கை வெளியிட்டு நிறுத்தி கொண்டது.

    ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினரின் பெயரையும் குறிப்பிடாமல் ஒரு தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டதன் மூலம் சீனா நடுநிலை வகிக்க முயல்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • டெல்லி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்
    • இந்தியாவிற்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் கடமைப்பட்டிருப்பதாக கிர்பி தெரிவித்தார்

    ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் இம்மாதம் 9, 10 தேதிகளில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உட்பட பல உறுப்பினர் நாட்டு அதிபர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் ராஜாங்க பேச்சுவார்த்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் பொது சபைக்கான 78-வது அமர்வில் உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவில் ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு உலகம் பயணிக்க வேண்டிய திசை குறித்து தன்னம்பிக்கையுடனும், நேர்மறையான எண்ணங்களுடனும் செயல்பட்டு வருகிறார். பெரும் செயல்கள் ஜி20 மாநாட்டில் செய்து முடிக்கப்பட்டன. இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தலைமையேற்ற இந்தியாவிற்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். திட்டமிடுதல் மட்டுமல்லாது செயல்படுத்தலிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. இந்தியாவில் இருந்த 2 நாட்களும் மிக மிக ஆக்கபூர்வமான நாட்களாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜி20 உச்சி மாநாட்டிற்கு வருகை தந்த போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்திய பிரதமரும் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இத்திட்டம் 8.9 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகிறது
    • கட்டிட பரப்புளவு மட்டுமே 1.8 லட்சம் சதுர மீட்டர் ஆகும்

    இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் உலகிலேயே மிகப்பெரிய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (International Convention And Expo Centre) ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.

    "யஷோபூமி" என பெயரிடப்பட்டுள்ள இம்மையம் "மைஸ்" எனப்படும் சந்திப்புகள், ஊக்கங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (Meetings, Incentives, Conferences, and Exhibitions) ஆகிய நோக்கங்களுக்கான மையமாக 8.9 லட்சம் சதுர மீட்டர் திட்ட மதிப்பீட்டில், 1.8 லட்சம் சதுர மீட்டர் கட்டிடப்பரப்பில் அமையவுள்ளது.

    இதில் அமையவுள்ள மாநாட்டு மையம் 15 மாநாட்டு மையங்களை உள்ளடக்கி மொத்தமாக 73,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும். இதில் ஒரு முக்கிய கருத்தரங்க மண்டபமும், கலைநிகழ்ச்சிகளுக்கான மிகப்பெரிய அரங்கமும், 13 சந்திப்பு அறைகளும் என சுமார் 11 ஆயிரம் பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் வகையில் அமையவுள்ளது.

    மைய கருத்தரங்க மண்டபம் சுமார் 6 ஆயிரம் விருந்தினர்கள் ஒன்றாக அமரும் வகையில் உள்ளது.

    கலைக்கூட அரங்கில் 2500 விருந்தினர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்த சந்திப்புக்களை நடத்தும் வகையில் 8 தளங்களில் 13 சந்திப்பு கூடங்கள் அமைக்கப்படுகிறது.

    1.07 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உலகிலேயே பெரிய கண்காட்சிக்கூடமும் அமையவுள்ளது. மழைநீர் சேகரிப்புக்கான வசதி, மறுசுழற்சி மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு, சோலார் மின்சார வசதி என பசுமைவழி சார்ந்த முறைகளில் இயற்கையோடு இணைந்தவழியில் திட்டம் முழுவதும் கையாளப்பட்டுள்ளது.

    புதுடெல்லியின் துவாரகா செக்டார் 21-ல் உள்ள டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ விரைவு ரெயில் நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட இணைப்பு வசதியை துவாரகா செக்டார் 25-ல் உருவாக்கப்பட்டுள்ள புது மெட்ரோ ரெயில் நிலையத்தையும் நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த புதுரெயில் நிலையம் வழியாக யஷோபூமி, டெல்லி விமான நிலைய மெட்ரோவுடன் இணைக்கப்படவுள்ளது.

    மெட்ரோ வழியாக புதுடெல்லியிலிருந்து யஷோபூமிக்கு செல்ல 21 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.

    • உறுப்பினர் நாட்டு பிரதிநிதிகளுக்கு ஒரு கையேடு வழங்கப்பட்டது
    • தீன் இலாஹி எனும் புதிய கோட்பாட்டை உருவாக்கினார்

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி மக்களை பாதிக்கும் அன்றாட பிரச்னைகள் குறித்தும், மக்களிடமிருந்து அரசாங்கத்திற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை பெறுவதற்கும் இந்திய வானொலியில் மாதா மாதம் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று "மன் கி பாத்" எனும் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார்.

    இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்து இருப்பதால், இதன் 100வது நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் நடந்த போது பா.ஜ.க.வினர் பெருமையுடன் கொண்டாடினர்.

    சமீபத்தில் ஜி20 கூட்டமைப்பின் 2-நாள் உச்சி மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு "பாரத்: ஜனநாயகத்தின் தாய்" எனும் ஒரு சிறு கையேடு வினியோகிக்கப்பட்டது. இதன் 38-வது பக்கத்தில் மொகலாய பேரரசர் அக்பர் குறித்து பிரசுரமாகியுள்ளது.

    அதில், "காலங்காலமாக இந்தியாவில் மக்களின் உணர்வு, ஆட்சி அமைப்பவர்களுக்கு முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. மொகலாய பேரரசர் அக்பர் ஆட்சியின் போது மதங்களை பற்றி எண்ணாமல் பொது நலனுக்காக அனைவரையும் அரவணைத்து செல்லும் ஜனநாயகம் கடைபிடிக்கப்பட்டது. தீன்-இ-லாஹி எனும் ஒருங்கிணைந்த மத கோட்பாட்டை அக்பர் உருவாக்கினார். தனது காலத்தையும் தாண்டி எதிர்கால தலைமுறைகளின் நல்வாழ்வு குறித்து சிந்தித்தவர் அக்பர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் துணையுடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பிரதமரின் "மன் கி பாத்" நிகழ்ச்சியை இந்த கையேட்டுடன் தொடர்புபடுத்தி பா.ஜ.க.வை கிண்டல் செய்யும்விதமாக தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.

    அதில் அவர், "ஜி20 பதிவேடு: முகலாய பேரரசர் அக்பரை அமைதி மற்றும் ஜனநாயகத்தின் முன்னோடியாக புகழ்கிறது. உலகத்திற்கு ஒரு முகம்; பாரத் எனும் இந்தியாவிற்கு மற்றொரு முகம். உண்மையான இதயத்தின் குரல் எது என தெரிவியுங்கள்," என்று பதிவிட்டிருக்கிறார்.

    • 2014-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது
    • 90-களில் அயல்நாடுகளிலிருந்து கார்களை வாங்கி குவித்தோம்

    இந்திய தொழில் துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும், புதுமைகளை வளர்க்கவும், திறனை மேம்படுத்தவும், அறிவுசார் உடைமைகளை பாதுகாக்கவும் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், அதனை கொண்டு இந்தியாவிலேயே அனைத்து பொருட்களும் தயாரிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு இறக்குமதியை குறைக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 2014-ல் கொண்டு வரப்பட்டது "மேக் இன் இந்தியா" திட்டம்.

    இந்நிலையில் கிழக்கு பொருளாதார மன்றத்தின் 8-வது அமர்வில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    ஒரு காலத்தில் நாங்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே கார்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். ஆனால், பிறகு நாங்கள் உள்நாட்டில் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கினோம். நாங்கள் 90-களில் இறக்குமதி செய்து குவித்து வந்த அயல்நாட்டு மெர்சிடிஸ் மற்றும் ஆடி கார்களை போல் இவை மிக பிரமாண்டமானவை அல்ல என்றாலும் அது ஒரு குறை அல்ல.

    எங்கள் கூட்டாளிகளின் வழிமுறைகளை நாங்களும் கடைபிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்தியாவின் "மேக் இன் இந்தியா" (இந்தியாவிலேயே தயாரியுங்கள்) திட்டம் போன்றவற்றை நாங்களும் கையாள விரும்புகிறேன். உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலமும் அந்தந்த நகரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்.

    இத்தகைய பொருளாதார வளர்ச்சிக்கான வெற்றி பெறும் வழிமுறைகளை ரஷியா இந்தியாவை போல கையாள வேண்டும். இந்தியர்கள் இந்தியாவிலேயே அதிகளவில் வாகனங்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மிக சரியான வழிமுறை. மோடி மிக சரியானதைத்தான் செய்கிறார்.

    இவ்வாறு புதின் தெரிவித்தார்.

    கடந்த 9, 10 தேதிகளில் இந்தியா ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை உலக நாடுகள் பாராட்டி வரும் பின்னணியில் ரஷிய அதிபரின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது.

    • மழை காரணமாக அப்பகுதியில் புல்வெளி, தரை ஆகியவை ஈரமாக இருந்தன.
    • ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா அதிபர்கள் வெறும் கால்களுடன் நடந்து வந்தனர்.

    ஜி20 கூட்டமைப்பின் 18-வது தலைமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்ததால், கடந்த ஒரு வருடமாக அதன் உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல சந்திப்புகள் இந்தியாவெங்கும் நடைபெற்றது.

    இறுதியாக, நேற்றும் இன்றும் (செப்டம்பர் 9, 10) இந்திய தலைநகர் புது டெல்லியில், பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபம் எனும் சர்வதேச மாநாட்டு மையத்தில் ஜி20 அமைப்பின் 2-நாள் உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று நிறைவடைந்தது.

    இதில் இங்கிலாந்து பிரதமரும், அமெரிக்க அதிபரும் பங்கேற்ற போதும் உறுப்பினர் நாடுகளில் சீனா, ரஷியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் தலைவர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவை ஆண்டு வந்த வெள்ளையர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒன்று திரட்டி அகிம்சை வழியில் பல வருடங்கள் போராட்டம் நடத்தி 1947ல் இந்தியா சுதந்திரம் பெற காரணமாக இருந்த முன்னணி சுதந்திர போராட்ட தலைவர் மகாத்மா காந்தி. போர், ரத்தம் சிந்துதல் மற்றும் வன்முறை ஆகியவற்றை வெறுத்து அகிம்சை வழியிலேயே தனது போராட்டங்களை முன்னெடுத்தவர் காந்தி.

    காந்தி நினைவிடம் மத்திய புது டெல்லி ராஜ் காட் பகுதியில் உள்ளது. ஜி20 உச்சி மாநாட்டின் இரண்டாவது மற்றும் இறுதி நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களை இங்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று அங்கு தலைவர்கள் வருகை தந்தனர்.

    அவர்களை மோடி வரவேற்றார். ராஜ் காட் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்திருந்தாலும் உலக தலைவர்களை மோடி வரவேற்கும் போது மழைபொழிவு நின்றிருந்தது.

    உலக தலைவர்கள் அங்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அங்கு சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்திய பின் அவர்கள் புறப்பட்ட போது பாரம்பரிய இந்திய இசை முழங்கியது.

    இந்த நிகழ்வின் போது ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ், பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான் மற்றும் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் காலணிகள் ஏதும் அணியாமல் வெறும் கால்களுடன் அங்கிருந்த ஈர தரையில் நடந்து சென்றனர்.

    ரஷிய உக்ரைன் போர் குறித்த வார்த்தைகளை தவிர்த்து அனைத்து உலக தலைவர்களும் ஒப்புதல் அளிக்கும் விதமாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டதும், பருவகால மாற்றங்களின் விளைவுகள் குறித்து ஆக்கபூர்வ நடவடிக்கை எடுப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தியதும் மற்றும் ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக்க நடவடிக்கை எடுத்ததும் இந்திய ஜி20 தலைமையின் முக்கிய வெற்றியாக இருந்தாலும், உலக தலைவர்களை ஒருங்கிணைத்து அமைதி வழியில் சிக்கல்களுக்கு தீர்வு காண வலியுறுத்திய காந்தி நினைவிடத்திற்கு அவர்களை அழைத்த மோடியின் ராஜதந்திரம் அரசியல் விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது.

    ×